Friday, October 10, 2014

ஆண்மை தவறேல் - பாகம் 23


அடுத்து வந்த சில நாட்களில்.. நந்தினியும் சந்தோஷமாக இல்லை.. அசோக்கும் நிம்மதியாக இல்லை..!! ஒவ்வொரு நாள் பொழுதும் அவர்களுக்கு ஒரு போராட்டமாகவே கழிந்தது..!!

 நந்தினி ஒரு மாதிரி விரக்தியின் உச்சத்தில் இருந்தாள். எதிலுமே பிடித்தம் இல்லாமல் எந்திரம் போலவே நடந்து கொண்டாள். அசோக்குடைய செயலை எண்ணி எண்ணி தினமும் அகத்துக்குள் குமைந்தாள்.

அவனை மாற்றிவிடலாம் என தான் நம்பியதை நினைத்து, 'பைத்தியக்காரி..' என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டாள். அவனுக்கு தன் மீது காதல் வந்துவிட்டது என்ற எண்ணத்தில், தன் கால்கள் தரையில் நில்லாமல் மிதந்ததை நினைத்து, 'வெக்கங்கெட்டவ' என்று தன்னை தானே திட்டிக் கொண்டாள்.

 அவளுடைய பார்வைக்கு, அவளது எதிர்காலமே இப்போது ஒரு சூனியமாக காட்சியளித்தது. 'இவனுடனான என் வாழ்க்கை, என்னை எங்கே கொண்டு சேர்க்கும்..?' என்று அவள் அடிக்கடி எழுப்பிய கேள்விக்கு, அவளுடைய புத்தியால் தெளிவான பதில் சொல்லவே முடியவில்லை. 'காதலித்து வேறு தொலைத்து விட்டேன்.. இனி கண்ணீர் மட்டுந்தான் மிச்சம் போலிருக்கிறது..' என்றே அவளுக்கு தோன்றியது.


விரக்தியில் இருந்தாலும் அசோக்கிற்காக அன்றாடம் செய்கிற வேலைகளில் இருந்து அவள் விலகிவிடவில்லை.

எப்போதும் போலவே.. காலையில் அவனை துயில் எழுப்புவாள்..

ஆனால் அவள் பார்வையில் காதல் இருக்காது..!! காபி கலந்து அவனிடம் நீட்டுவாள்.. அதில் ஒரு கனிவு இருக்காது..!!

உணவு சமைப்பாள்.. அள்ளிக்கொண்டு ஆபீசுக்கு செல்வாள்.. உடனிருந்து பரிமாறுவாள்.. ஆனால் அவள் உள்ளத்தில் பரிவு இருக்காது..!!

அசோக் மீது அவளுக்கிருந்த அன்பும் அக்கறையும் இப்போது நமத்துப் போயிருந்தன..!! சிலநேரங்களில் 'இப்படியே இருந்துவிட்டு போய் விடலாமே..' என்று கூட அவளுக்கு தோன்றும். விரக்தியில் உழன்றவள் அதிலேயே ஒரு சுகம் காண ஆரம்பித்திருந்தாள்.

'இவனுடன் திருமணம் என்றதும்.. ஆரம்பத்தில் இந்த மாதிரியான ஒரு வாழ்க்கையைத்தானே நான் எதிர்பார்த்திருந்தேன்..?

இடையில் வந்ததுதானே இவன் மீதான காதல், இனிமையான வாழ்க்கை என்ற நம்பிக்கை எல்லாம்..?

அந்த காதலையும் நம்பிக்கையையும் கனவென எண்ணி மறந்தால் என்ன..?

எப்படியோ போய் தொலைகிறான் எனக்கென்ன என்றே இருந்தால் என்ன..?'

 இந்த மாதிரி ஒரு விரக்தியான, விட்டேத்தியான மனோபாவத்துடன்தான் அந்த சில நாட்களில் அசோக்கை அவள் அணுக முயன்றாள்.

 அசோக்கோ வேறு மாதிரியான மனநிலையில் சிக்கி தவித்தான். நந்தினியின் சோகம் அவனையும் சேர்த்து வாட்டியது. அவளுடைய வாடிப்போன முகத்தை கண்டபோதெல்லாம் அவனும் மனம் வாடினான். அவனை எப்போதும் ஒருவித குறும்புடனே பார்க்கும் அவளுடைய கண்கள், இப்போது வெறுப்பை வீசியதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கனிவும் கலகலப்புமான அவளுடைய பேச்சு, மீண்டும் ஒலிக்காதா என அவன் காதுகள் ஏக்கம் கொண்டன. எல்லாவற்றிற்கும் காரணம் தனது அவசர புத்திதான் என்று முதலில் அவனுக்கு தோன்றியது.

 'அவள் என்னை காதலிக்கிறாள் என்ற சந்தேகம் ஏற்கனவே எனக்கு இருந்தது. அப்படி இருக்க.. அந்த முத்தம் அவளுக்குள் எந்த மாதிரியான கனவுகளை கொடுத்திருக்கும் என்று நான் எண்ணியிருக்க வேண்டாமா..?

அது காதல் இல்லை வெறும் காமம் என்று வெடுக்கென சொன்னால்.. அவள் எந்த மாதிரியான வேதனையில் வெந்து போவாள் என்று ஏன் நான் சிந்திக்கவில்லை..? அவசரப்பட்டிருக்க வேண்டாமோ..?

பொறுமையாக அவளுக்கு எடுத்துரைத்திருக்க வேண்டுமோ..?' 'ஆமாம்.. அதை எப்படி பொறுமையாக எடுத்துரைப்பது..?

பொறுமையாக சொன்னால் மட்டும் அவளுக்கு என்ன குளுகுளுவென்றா இருக்கப் போகிறது..? செருப்பால் அறைவது மாதிரியான சேதி அது.. வலது கால் செருப்பாய் இருந்தால் என்ன.. இடது கால் செருப்பாய் இருந்தால் என்ன.. வலியில் ஏதும் வித்தியாசம் இருக்கப் போவதில்லை..!!

முதலில் அந்த விஷயத்தையே ஏன் அவளிடம் சொன்னாய்..? ஏன் அவளுடைய கனவுகளை பொசுக்கி கண்ணீர் சிந்தவிட்டாய்..?' 'சொல்லாமல் என்ன செய்வது..?

உண்மையை சொல்லாமல் காலம் தாழ்த்துவது தவறில்லையா..?

ஏதோ ஒரு விபத்து மாதிரி.. என்னையும் அறியாமல் அப்படி ஒரு காரியம் செய்துவிட்டேன்.. நான் செய்த அந்த காரியத்தால் அவளும் சந்தோஷத்தில் மிதக்க ஆரம்பித்து விட்டாள்.. ஆனால் அவள் அனுபவித்தது போலி சந்தோஷம் அல்லவா..?

அந்த சந்தோஷம் போலி என்று சுட்டிக் காட்டுவதை தவிர வேறென்ன செய்வது..? காதல் என்று அவள் தவறாக எண்ணியிருப்பதை காமம் என்று தெளிவு படுத்துவது எனது கடமை அல்லவா..?'

 'இரு இரு.. முதலில் உனக்கு அந்த தெளிவு இருக்கிறதா..?? நீ அவளை முத்தமிட்டதன் காரணம் வெறும் காமம் மட்டுந்தானா..?? அதில் காதல் ஒளிந்திருப்பதாக உனக்கு தோன்றவில்லையா..??

உன்னுடைய அந்த முத்தத்தில் காதலை உணர்ந்ததாக அவள் சொன்னாளே.. அது ஏன் நிஜமாக இருக்க கூடாது..?? நீயும் கூட அவளை முத்தமிடும் தருணத்தில் தெளிந்த மனநிலையுடன்தானே இருந்தாய்..?? அந்த முத்தத்தின் பின்னணியில் இருப்பது.. நீண்ட நாளாய் உள்ளுக்குள் புதைந்திருந்த காதலா.. இல்லை.. அன்றொரு நாள் திடீரென பூத்த காமமா..??' அசோக்கின் மனசாட்சி அப்படி ஒரு கேள்வி கேட்டதுமே, அவனது சிந்தனை ஓட்டம் சீராக இருக்காது. குழப்பத்துக்குள் ஆழ்ந்துவிடுவான்.

 'நந்தினிக்கு ஏற்படுத்திய வலி எனக்கும் வேதனை அளிக்கிறது.. அவளுடைய கள்ளம் கபடமற்ற சிரிப்பு, மீண்டும் அவள் முகம் ஏறாதா என நானும் ஏங்குகிறேன்.. அவள் எப்போதும் போல என்னை பார்க்க மாட்டாளா.. பேச மாட்டாளா.. பழக மாட்டாளா.. என என் மனம் தவியாய் தவிக்கிறது..

அப்படியானால் அவள் மீது எனக்கு இருப்பது காதல்தானோ..??' 'இல்லை.. என் வாழ்வில் இனி காதலே கிடையாது என்று.. என் மனதை சுற்றி ஒரு கோட்டை எழுப்பி வைத்திருக்கிறேனே..

அதையும் மீறி காதல் எப்படி உட்புகும்..?? அவள் மீது காதலிருந்தால் 'நான் உனக்கு நல்ல மனைவியாக இருக்கிறேன்.. நீ எனக்கு நல்ல கணவனாக இருக்கிறாயா..?' என்று அவள் உருக்கமாக கேட்டபோது, என் மனம் ஏன் மகிழ்ந்து போகவில்லை..??

முத்தமிட்டதை கூட காதல் என்று கொள்ளலாம்.. அதன்பிறகு செய்த இன்னொரு காரியத்தை எந்த கணக்கில் எடுத்துக் கொள்வது..?? அப்படியானால் அவள் மீது எனக்கு இருப்பது காதல் இல்லையோ..??'

 இப்படி குறுக்கும் மறுக்குமாய் சிந்திக்க சிந்திக்க, அசோக்கிற்கு ஒரு குழப்ப குவியல்தான் மிஞ்சும். அவன் மனதில் தெளிவில்லை என்பது அவனுக்கே புரிந்து போனது. நந்தினியிடம் மனம் விட்டு பேசி, தனது குழப்பத்தை எடுத்துரைக்கலாமா என்று யோசித்தான்.

அவள் இதற்கு எதுவும் தீர்வு வைத்திருக்கிறாளா பார்க்கலாம் என்று தோன்றியது. ஒருநாள் இரவு.. அவர்கள் அறையில்.. தூங்க செல்லும் வேளையில்.. அவள் தரையில் படுத்துக் கொண்டு அந்தப் பக்கமாக திரும்பிக் கொள்கையில்.. அவளுடைய முதுகை பார்த்தபடியே.. மெல்ல ஆரம்பித்தான்..!!

 "ந..நந்தினி.."
 "ம்ம்ம்.." அவள் திரும்பாமலே சப்தம் எழுப்பினாள்.

 "உ..உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.."

 "எதைப் பத்தி..?"

 "அ..அதான்.. அன்னைக்கு மொட்டை மாடில.." அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,

 "ஏன்.. இன்னும் என்னை ஏதாவது குத்தி கிழிக்க வேண்டியது பாக்கி இருக்கா..??" நந்தினி வெடுக்கென கேட்டாள். 

"ச்சேச்சே.. அப்டி இல்ல.."

 "அப்புறம்..?? அந்த அசிங்கத்தை மறக்க நெனைக்கிறேன்.. விட மாட்டீங்களா..??"




அவள் அந்த மாதிரி சூடாக கேட்கவும், அசோக்கிற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.

இப்படி முகம் கொடுத்து கூட பேச மாட்டேன் என்கிறாளே..? வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதையே சொல்லிக்காட்டி என்னை நோகடிக்கிறாளே..?

இவளுக்கு எப்படி பேசி புரிய வைப்பது..?' அசோக் தலையை பிடித்துக் கொண்டான். கொஞ்ச நேரம் அவளுடைய முதுகையே வெறித்துப் பார்த்துவிட்டு, அப்புறம் அவனும் அமைதியாக அவளுக்கு முதுகு காட்டி, திரும்பி படுத்துக் கொண்டான்.

 "சரி.. சொல்லுங்க.. என்ன..?" என்றாள் நந்தினி,

ஒரு இரண்டு நிமிடங்கள் கழித்து வெறுப்பாக. "ஒண்ணுல்ல விடு.." என்றான் அசோக்கும் வீராப்பாக.

 அவர்களுக்கு இடையில் விழுந்த இந்த விரிசலை வீட்டில் இருந்த மற்றவர்களும் கவனிக்க தவறவில்லை.

இறுகிப்போன முகத்துடன் அவர்கள் திரிந்தது, கௌரம்மாவையும், மஹாதேவனையும் கவலை கொள்ள செய்தது. ஓரிரு நாட்கள் பொறுத்துப் பார்த்த மஹாதேவன் மகனிடமே கேட்டுவிட்டார்.

 "என்னடா ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும்..?"

 "யாரு ரெண்டு பேருக்கும்..?" அசோக் புரியாத மாதிரி நடித்தான்.

 "உனக்கும் உன் பொண்டாட்டிக்கும்.."

 "எ..எங்களுக்கு என்னாச்சு.. ஒன்னுல்லையே..?"

 "இல்ல.. ஏதோ சரியில்ல.. உங்களுக்குள்ள எதுவும் பிரச்னையா..?"

 "அதெல்லாம் ஒண்ணுல்ல டாட்.." "பொய் சொல்லாத அசோக்..

உங்களுக்குள்ள ஏதோ பிரச்னைன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது.. என்ன விஷயம்னு மறைக்காம என்கிட்டே சொல்லு.." அவர் துருவி துருவி கேட்கவும், அசோக் எரிச்சலானான்.

 "புருஷன் பொண்டாட்டின்னா ஏதாவது பிரச்னை வந்துட்டுத்தான் இருக்கும்.. எல்லாம் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்க முடியுமா..? இதுக்குத்தான் எனக்கு கல்யாணமே வேணாம்னு சொன்னேன்.. நீங்கதான் கட்டாயப்படுத்தி பண்ணி வச்சீங்க.. இப்போ நான் கெடந்து கஷ்டப்படுறேன்..!!" என்று தந்தை மீது பாய்ந்தான்.

நந்தினி மீதிருந்த எரிச்சலையும், கோபத்தையும் மஹாதேவனிடம் காட்டினான். அவனுடைய சீற்றத்தில் மஹாதேவன் வாயடைத்து போனார்.

அப்புறம்.. கணவன், மனைவிக்கு இடையிலான உள்விவகாரத்தில், தான் தலையிடாமல் சற்று ஒதுங்கி இருப்பதே நல்லது என்று தோன்றவும், மேற்கொண்டு அவனை கேள்வி கேளாமல் அமைதியாக திரும்பி நடந்தார்.

 மஹாதேவன் அசோக்கிடம் சூடு பட்டுக்கொண்டார் என்றால், கௌரம்மா நந்தினியிடம் வாங்கி கட்டிக்கொண்டாள்.

வாயை வைத்துக்கொண்டு சும்மா இராமல், மனதில் இருந்த கேள்வியை தயங்கி தயங்கி நந்தினியிடம் கேட்டுவிட்டாள்.

 "ஏன் நந்தினிம்மா.. அ..அசோக் தம்பிக்கும், உ..உனக்கும் ஏதாவது பிரச்னையா..??"

 "அ..அதுலாம் ஒண்ணுல்ல.. ஏன் கேக்குறீங்க..?"

 "இல்ல.. எந்த நேரமும் நல்லா சிரிச்சு பேசிட்டு இருப்பீங்க.. இப்போ சுத்தமா பேசிக்கிறதே இல்லையே.. அதான்.. என்ன பிரச்னைன்னு.."

 "ப்ச்.. அதான் ஒன்னுல்லன்னு சொல்றேன்ல..? நான் எப்போவும் போலதான் இருக்கேன்..!! அவர்தான் சும்மா மொறைச்சுட்டு திரியிறாரு..!!"

 "ஏன்..??"

 "அதை அவர்ட்டயே போய் கேளுங்க ..!!"

 "ஐயையோ.. அதுகிட்ட கேட்டா.. என்னை கடிச்சு குதறிடும்.."

 "அப்போ.. வாயை மூடிட்டு சும்மா இருங்க.."

 அப்புறம் என்ன..?? கௌரம்மாவும் கப்சிப் ஆனாள்.

மஹாதேவனும், கௌரம்மாவும் இவர்களிடம் அமைதியாகிப் போனாலும், அவர்களுக்குள் தனியாக இவர்களுடைய விஷயத்தை பற்றி பேசிக்கொண்டார்கள்.

என்ன பிரச்னை என்பதைப் பற்றி கொஞ்சம் கூட அவர்களால் ஊகிக்க முடியாததால், எதுவும் செய்ய முடியாத நிலைக்கு உள்ளானார்கள். 'கொஞ்ச நாள் விட்டு பிடிக்கலாம்..' என்பது மாதிரி ஒரு முடிவு எடுத்தார்கள்.

 நந்தினிக்கு அசோக் மீது கோவம் இருந்தது. இன்னொரு பெண் ஏற்றிவிட்ட உடல் சூட்டை தணிக்க, தன்னை உபயோகப்படுத்திக் கொண்டானே என்று அவன் மீது ஆத்திரம் இருந்தது.

தன் மீது அவனுக்கு காதல் பூக்கும் என்ற நம்பிக்கை கானல் நீர் ஆகிவிடுமோ என்ற கவலை அதிகரித்திருந்தது. ஆனால் அவள் ஒரு விஷயத்தில் மிக தெளிவாக இருந்தாள். அது என்னவென்று தெரிந்து கொள்ள மேலே படியுங்கள்.

 அவர்கள் சண்டையிட்டுக் கொண்ட அந்த வாரத்தின் இறுதியில், அம்மாவை பார்த்துவர அவள் பெருங்குடிக்கு சென்றிருந்தாள். அன்று இரவு அந்த வீட்டிலேயேதான் தங்கினாள். ஒற்றை படுக்கை அறை கொண்ட வீடுதான் அது. அமுதா எப்போதும் உள்ளறைக்குள் இருக்கும் கட்டிலில்தான் படுத்துக் கொள்வாள்.

அந்த அறைக்கு வெளியே இருக்கும் சிறிய ஹாலில் நந்தினியும் வந்தனாவும் டேபிள் ஃபேன் காற்றில் படுத்து தூங்குவார்கள்.
நந்தினி அன்று அமுதாவிடம் பேசி இருந்து விட்டு, பிறகு அவள் தூங்கியதும் போர்வையை போர்த்தி விட்டு, விளக்கை அணைத்துவிட்டு, ஹாலுக்கு வந்தாள்.

ஹாலில் விரிக்கப்பட்டிருந்த படுக்கையில், வந்தனா இன்னும் தூங்காமல் விழித்திருப்பது, இரவு விளக்கின் வெளிச்சத்திலேயே தெளிவாக தெரிந்தது. நந்தினியும் வந்து தங்கைக்கு அருகில் அமைதியாக படுத்துக் கொண்டாள்.

போர்வையை இழுத்து தன் உடலை மூடிக்கொண்டே, மெல்லிய குரலில் கேட்டாள்.

 "என்னடி.. தூக்கம் வரலியா இன்னும்..?" 

"இ..இல்லக்கா.. வரலை.."

 "காலேஜுக்கு போகணும்ல காலைல..? சீக்கிரம் தூங்கி எந்திரி.." 

"ம்ம்.." அதன்பிறகு இருவரும் அமைதியாகிப் போனார்கள்.


தரையில் நின்றிருந்த டேபிள் ஃபேன் மட்டும் 'விர்ர்ர்ர்ர்....' என்று சப்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. ஒரு இரண்டு நிமிடங்கள் இருக்கும். வந்தனா நந்தினியை சன்னமான குரலில் தயக்கமாக அழைத்தாள்.

 "அ..அக்கா.." "ம்ம்.." "உ..உன்கிட்ட ஒன்னு சொல்லணும்.." 

"என்ன..?"

 "அ..அம்மாகிட்ட கூட இதை சொல்லலை.. அவங்க இருக்குற நெலமைல இதை எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியலை..!! உன்கிட்டயும் எப்படி சொல்றதுன்னே.. நாலஞ்சு நாளா மண்டையை போட்டு கொழப்பிட்டு இருக்கேன்..!!" வந்தனா அவ்வாறு சொன்னதும், நந்தினிக்கு உடனடியாய் ஒரு சீரியஸ்னஸ் வந்தது.

அவ்வளவு நேரம் தங்கைக்கு முதுகு காட்டி படுத்திருந்தவள், இப்போது புரண்டு படுத்தாள். மங்கலான வெளிச்சத்திலும் பிரகாசமாக தெரிந்த தங்கையின் முகத்தை கூர்மையாக பார்த்தவாறு கேட்டாள். 

"என்னடி விஷயம்.. சொல்லு.."

 "நா..நாலஞ்சு நாள் முன்னாடி.. " வந்தனா இன்னும் தயங்கவே செய்தாள்.

 "ம்ம்ம்..??"

 "அ..அத்தானை நான் வேற ஒரு பொண்ணோட பாத்தேன்க்கா.. கா..காருக்குள்ள உக்காந்திருந்தாங்க.. நந்தனம் சிக்னல்ல..!! ரெண்டு பேரும்.. ரொ..ரொம்ப நெருக்கமா இருந்தாங்க..!!" சொல்லிவிட்டு வந்தனா தன் அக்காவையே மிரட்சியாக பார்க்க, நந்தினியோ பேச்சிழந்து போனவளாய் தன் தங்கையையே ஒரு சலனமற்ற பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.

இப்படியான வார்த்தைகளை தங்கையிடம் இருந்து கேட்கக் கூடும் என்று நந்தினி சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த சூழ்நிலைக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று கூட அவளுக்கு தெரியவில்லை.

அவள் சொன்ன நாள்க்கணக்கை வைத்து பார்க்கும்போது.. அசோக் அவளை முத்தமிட்டானே.. மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று பொய் சொன்னானே.. அன்றுதான் இவள் பார்த்திருப்பாள் என்று நந்தினியால் புரிந்து கொள்ள முடிந்தது.

நந்தினியின் அமைதியை பார்த்ததும், வந்தனாவே கேட்டாள்.

 "எ..என்னக்கா.. ஒண்ணுமே சொல்ல மாட்டேன்ற..?"

 "எ..என்ன சொல்ல சொல்ற..?"

 "உனக்கு ஷாக்கா இல்லையா..?? உன் புருஷன் உனக்கு துரோகம் பண்றாருக்கா.. வேற ஒரு பொண்ணோட தொடர்பு வச்சிருக்காரு..!!"

 "ஹாஹாஹாஹா.." தங்கையின் அறியாமையை நினைத்து நந்தினிக்கு சிரிப்பு வந்தது. அந்த சிரிப்பும் விரக்தியாகவே வெளிப்பட்டது.

 "ஏ..ஏன் சிரிக்கிற..?"

 "ம்ம்ம்.. எப்படி சொல்றது..?? அவருக்கு ஒரு பொண்ணு மட்டும் இல்ல வந்தனா.. அது மாதிரி நெறைய பொண்ணுங்க இருக்காங்க.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தி..!!" நந்தினி விரக்தியாக சொல்ல, வந்தனா அதிர்ந்து போனாள்.

 "எ..என்னக்கா இவ்வளவு சாதாரணமா சொல்ற..?"

 "வேற எப்படி சொல்றது..?" நந்தினி விட்டேத்தியாக சொல்ல, வந்தனாவை பட்டென ஒரு ஆத்திரம் வந்து பற்றிக் கொண்டது.

 "என்னக்கா நீ.. இப்படி அசால்ட்டா இருக்குற..? இரு.. நான் இப்போவே போய் அம்மாட்ட சொல்றேன்..!!

இதை நான் சும்மா விட போறது இல்ல.. அந்த ஆளை என்ன பண்றேன் பாரு..!!" சீற்றமாய் சொல்லிவிட்டு எழ முயன்ற வந்தனாவை நந்தினி தடுத்தாள்.

 "ப்ச்.. இரு வந்தனா.. அம்மாக்கு எல்லாம் தெரியும்.."

 "எ..என்னக்கா சொல்ற..?" வந்தனாவின் முகம் வெளிறிப்போனது அந்த இருட்டிலும் தெளிவாக தெரிந்தது.

 "ஆமாம்.. அவருக்கு பொண்ணுக சகவாசம் இருக்குறது எனக்கும், அம்மாவுக்கும் முன்னாடியே தெரியும்.. அது தெரிஞ்சுதான் நான் இந்த கல்யாணத்துக்கே சம்மதிச்சேன்..!!" நந்தினி சொல்ல, வந்தனா இப்போது உச்சபட்ச அதிர்ச்சியை உள்வாங்கினாள்.

 'அக்காவுக்கு நடந்த பணக்கார வீட்டு திருமணம் இவ்வளவு கொடுமையானதா..?' என திகைத்துப் போனாள்.

அதிர்ச்சியில் அவள் பேச்சிழந்து போயிருந்தாலும், அவளுடைய மூளை சுறுசுறுப்பாக பல விஷயங்களை யோசித்தது.

என்ன நடந்திருக்கும் என்று அவளால் எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. அவளுடைய மூளை உரைத்த விஷயங்கள் வந்தனாவை ஆத்திரம் கொள்ள செய்தன. அக்காவுக்கு அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது என்று அவளுக்கு தோன்றியது.

நந்தினியிடம் சீற்றமாக கேட்டாள்.

 "ஓ.. இப்படிப்பட்ட ஒரு புள்ளையை தலைல கட்டத்தான்.. நமக்கு விழுந்து விழுந்து உதவி செய்ற மாதிரி நடிச்சாரா அந்த பெரிய மனுஷன்..??"

 "வார்த்தையை அளந்து பேசு வந்தனா.. இன்னைக்கு நீ படிச்சுக்கிட்டு இருக்குற படிப்பு.. நம்ம குடும்பம் இருக்குற நெலமை.. எல்லாம் அவர் போட்ட பிச்சை..!!"

 மஹாதேவனை தவறாக பேசிய கோபத்தில் நந்தினி கடுமையாக சொன்னாள். வந்தனா இப்போது அமைதியானாள்.

அவளுடைய கோவமும் பட்டென தணிந்து போனது. அக்காவின் முகத்தையே பாவமாக பார்த்தவள், அப்புறம் இரக்கம் நிறைந்த குரலில் கேட்டாள்

"ஏன்க்கா.. ஏன் இப்படி பண்ணுன..? எதுக்காக இப்படி ஒரு கல்யாணத்துக்கு சம்மதிச்ச..?"

 "அக்காவுக்கு வேற வழி தெரியலை வந்தனா.." நந்தினி தங்கையின் கவலை தோய்ந்த முகத்தை தடவிக்கொண்டே, கனிவாக சொன்னாள்.

வந்தனா இப்போது மீண்டும் சில வினாடிகள் அமைதியாக இருந்தாள். அவளுடைய புத்தி எதையோ தீவிரமாக யோசித்தது.

ஒரு தெளிவு பிறந்ததும், அவசரமாய் தன் அக்காவிடம் கேட்டாள்.

 "எங்களுக்காகவா அக்கா..?? எங்களுக்காகத்தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சியா..?"

 "ம்ம்ம்.." நந்தினி சொன்னதும், இப்போது வந்தனா பட்டென சொன்னாள்.

 "அப்போ வந்திருக்கா.. அந்த ஆளை விட்டு வந்துரு..!!"

 "ஏ..ஏய்.. வந்தனா.." தங்கை சொன்னதை கேட்டு நந்தினி திகைத்தாள்.

 "ஆமாம்க்கா.. அம்மாகிட்ட நான் பேசுறேன்.. எதுக்கு உனக்கு இப்படி ஒரு கொடுமையான வாழ்க்கை..? எப்படியோ போறார்னு வந்துடு..!!"

 "ப்ச்.. அது அவ்வளவு ஈஸி இல்லை வந்தனா.. உனக்கு புரியலை..!!"

 "உனக்குத்தான்க்கா புரியலை..!! நாம ஏன் அவங்ககிட்ட கையேந்தி நிக்கணும்..? எனக்கு காலேஜும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம்.. கல்யாணம் கூட வேணாம் எனக்கு..!! நான் வேலைக்கு போறேன்.. கெடைச்ச வேலையை பாக்குறேன்.. நீயும் வேலைக்கு போ.. அம்மாவை நாம பாத்துக்கலாம்க்கா.. கொஞ்சமா சம்பாதிச்சாலும், நாம உழைச்ச காசுல கௌரவமா வாழலாம்..!!"

 "ஐயோ.. அதுக்காக இல்லடி.."

 "அப்புறம் என்ன..? ஊருல நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கன்னு சொல்ல போறியா..? அடுத்தவங்களுக்காகலாம் நாம வாழ முடியாதுக்கா..!!"

 "புரியாம பேசாத வந்தனா.. அப்படிலாம் என்னால வர முடியாது.." 

"ஏன்..?"

 "முடியாதுடி.."

 "அதான் ஏன்னு கேக்குறேன்..?" வந்தனா விடாப்பிடியாக கேட்கவும், நந்தினி எரிச்சலும் கோவமுமாக சொன்னாள்.

 "ஏன்னா நான் என் புருஷனை லவ் பண்றேன்.. போதுமா..??" 

"அ..அக்கா.." வந்தனா அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போனாள்.


அப்புறம் சில வினாடிகள் அங்கே ஒரு பலத்த மௌனம் நிலவியது. நந்தினியின் கண்கள் இப்போது மெல்ல கலங்க ஆரம்பித்தன. வந்தனா காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாமல், அக்காவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிறகு நந்தினி மூக்கை விசும்பிக்கொண்டே, சற்றே தழதழத்த குரலில் பேச ஆரம்பித்தாள்.

 "அவருக்கு பொம்பளைங்க சகவாசம் இருக்கலாம் வந்தனா.. ஆனா மனசால ரொம்ப நல்லவரு..!!" ".........................................."

 "என்னை ரொம்ப பிடிக்கும் அவருக்கு.. எனக்கு புடிச்சதெல்லாம் பாத்து பாத்து பண்ணுவாரு.." ".........................................."

 "நான் கஷ்டப்பட்டா அவரால தாங்கிக்க முடியாது..!! இப்போக்கூட.. உன்கிட்ட சொல்ல முடியாத ஒரு வேதனைல நான் இருக்கேன்.. ஆனா இதே அளவு வேதனையை அவரும் அனுபவிச்சுட்டு இருப்பார்னு எனக்கு நல்லா தெரியும்..!!"

 ".........................................."

 "என் புருஷனை விட்டு என்னால வரமுடியாது வந்தனா.. நான் அவர்கூடதான் இருப்பேன்..

என்னைக்காவது அவர் முழுமனசோட என்னை மனைவியா ஏத்துப்பாரு.. அதுவரை நான் வெயிட் பண்ணுவேன்..!!" சொல்லிவிட்டு கண்களை துடைத்துக்கொண்ட நந்தினியையே, வந்தனா கொஞ்ச நேரம் கண்ணிமைக்காமல் பார்த்தாள்.

 அப்புறம் கனிவான குரலில் கேட்டாள்.

 "என்ன மாதிரியான லவ்-க்கா இது..?? எ..எனக்கு புரியலை..!!"

 "உனக்கு புரியாது வந்தனா.. யாருக்கும் புரியாது..!! நீ இதெல்லாம் நெனச்சு கவலைப்படாத.. அக்கா பிரச்னையை அக்காவே பாத்துக்குறேன்..!! நீ எதை பத்தியும் நெனைக்காம.. நல்லா படி.. லைஃப்ல என்ன சாதிக்கணும்னு நெனச்சியோ அதை பண்ணு.. அம்மாவை பாத்துக்கோ.. அது போதும்..!! சரியா..?"

 
"ம்ம்.. சரிக்கா..!!"

 "சரி டைமாச்சு.. தூங்கு.."

 "ம்ம்.."

 அப்புறம் நந்தினியும், வந்தனாவும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. இருவரும் புரண்டு படுத்துக்கொண்டு, இமைகளால் விழிகளை மூடிக்கொண்டார்கள்.

ஆனால் இருவருக்கும்.. நித்திரை வந்து சேரத்தான் நீண்ட நேரமாகிப் போனது..!!




No comments:

Post a Comment