Thursday, October 30, 2014

ஆண்மை தவறேல் - பாகம் 32


அன்று காலை 10.30. அடையாறு ஆபீஸ். அசோக் சற்று முன்புதான் ஆபீஸ் வந்து சேர்ந்திருந்தான். இப்போது தனது அறைக்குள் அவனது சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவனுடைய கைகள் இரண்டையும் கோர்த்து, பின்னந்தலைக்கு கொடுத்து, நாற்காலியில் தலை சாய்த்து, சீலிங்கை வெறித்துக் கொண்டிருந்தான். சிணுங்கிய தொலைபேசியை கூட எடுக்க மனமின்றி, சிந்தனை வயப்பட்டவனாய் அமர்ந்திருந்தான்.

 ஆறு வருடங்களில் அவன் வாழ்க்கை எந்த அளவுக்கு மாறிப்போனது என்று, அதையே எண்ணி மருகிக் கொண்டிருந்தான். ஆறு வருடங்களுக்கு முன்பு, அமைதியாக சென்று கொண்டிருந்த அவனது வாழ்க்கை, ஒரு பெண் வீசிய வார்த்தைகளால் முற்றிலும் மாறிப்போனது. இன்று அதே பெண் அந்த வாழ்க்கையை வேறு திசைக்கு திருப்பிப்போட கடுமையாக முயலுகிறாள்..!! நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்க.. அவனுக்கு மனதுக்குள் போராட்டம்..!!
அப்போதுதான் கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டது.

 தலையை சாய்த்து அறை வாசலுக்கு பார்வையை வீசிய அசோக், இன்ஸ்டண்டாய் ஒரு அதிர்ச்சிக்கு உள்ளானான். வாசலில் கற்பகம்..!!! அவளுடைய கைபேசியில் தொடர்பு கொள்ள முடியாமல், அலுவலகத்திலும் ஆளைக் காணாமல், விடுப்பு எடுத்துக் கொண்டாள் என்று அசோக் நினைத்திருக்க, அவளோ திடீரென வந்து நிற்கிறாள்.

அதுவும் அவள் வந்திருந்த கோலம்... "அ..அசோக்.. அ..அசோக்.. " அவனை திணறலாக அழைத்துக்கொண்டே, கற்பகம் அவசரமாய் உள்ளே வந்து கொண்டிருந்தாள். பேயறைந்த மாதிரியாக, அவளுடைய முகத்தில் ஒரு உச்சபட்ச பயம் அப்பியிருந்தது.

அவளது கைவிரல்கள் நடுநடுங்கியதில் இருந்தே, மிகுந்த பதற்றத்தில் இருக்கிறாள் என்று புரிந்து கொள்ள முடிந்தது. கலைந்த கூந்தலும், கசங்கிப்போன புடவையும்..!!

அவளுடைய கோலத்தை பார்த்ததுமே அசோக்கிடமும் ஒரு பதற்றம் வந்து தொற்றிக் கொண்டது. படக்கென சேரை விட்டு எழுந்து, அவளிடம் சென்றான்.




"ஹேய்.. கற்பு.. என்னாச்சு..??" என்று பதட்டமாக கேட்டான். "அ..அசோக்.. அ..அசோக்.. " கற்பகம் அவனுடைய கைகளை பிடித்துக்கொண்டு, அவனது முகத்தை பரிதாபமாக ஏறிட்டாள். அவளுடைய கண்கள் அழுது அழுது சோர்ந்து போயிருந்த மாதிரி காட்சியளித்தன.

'புஸ்.. புஸ்..' என அவளுக்கு மூச்சிரைக்க, மார்புகள் வேகவேகமாய் மேலும் கீழும் ஏறி இறங்கின. "சொ..சொல்லு கற்பு.. என்னாச்சு..??" "ப..பணம்.. பணம்...!! ப..பணம்.. வேணும் அசோக்..!!" "ப..பணமா..??" "ம்ம்.. நெ..நெறைய வேணும்.. நெறைய பணம் வேணும் அசோக்..!!" கற்பகம் பிரம்மை பிடித்தவள் மாதிரி பேசினாள். அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை. "எ..எனக்கு புரியலை கற்பு..?? எதுக்கு பணம்..??" "அ..அங்க.. ஹாஸ்பிடல்ல.. அவரு..!! ப..பணம் வேணும் அசோக்... என் புருஷன் அங்க உசுருக்கு போராட்டிட்டு.." கற்பகம் அழுகையும், தவிப்புமாய் சொல்ல, அசோக் அதிர்ந்து போனான்.

 "க..கற்பு..!!!! எ..என்ன சொல்.. எ..என்னாச்சு அவருக்கு..???" அசோக்கிற்கும் வாய் குழறியது. "க..கத்தியால குத்திப் போட்டு போயிட்டாங்க..!!" சொல்லும்போதே அவளுடைய கண்களில் கண்ணீர் பொங்கியது. "யாரு..??" "தெரியலை..!!!!!" கற்பகம் கத்தினாள்.

 "சரி.. எ..எந்த ஹாஸ்பிட்டல்..??" "ம..மலர் ஹாஸ்பிட்டல்..!! உ..உடனே ஆபரேஷன் பண்ணனும்னு சொல்றாங்க.. லட்ச கணக்குல பணம் கேக்குறாங்க..!!" "ஓ..!!" அசோக் லேசாகத்தான் திகைத்தான். அதற்குள்ளாகவே கற்பகம், "ப்ளீஸ் அசோக்.. எ..எனக்கு ஹெல்ப் பண்ணுடா..!! பதிலுக்கு நான் என்ன வேணாலும் செய்றேன்..!!" என்றாள். "ஹேய்.. என்ன பேசுற நீ.." அசோக் திகைப்பாக சொன்னதை கற்பகம் கவனிக்கவே இல்லை. ஒருமாதிரி புத்தி பேதலித்த நிலையில் இருந்தாள் அவள்.

 தொடர்ந்து திணறலாக சொன்னாள். "உ..உனக்கு.. உனக்கு என்னை புடிக்கும்ல..?? நா..நான் வந்தா எவ்வளவு வேணா தருவேன்னு சொல்வேல..??" அவளுடய வார்த்தைகளை கேட்டு அசோக் மிரண்டு கொண்டிருக்கும்போதே, "எனக்கு இந்த ஹெல்ப் மட்டும் பண்ணு அசோக்.. நீ என்ன சொன்னாலும் நான் கேக்குறேன்..!!" கற்பகம் சொல்லியே விட்டாள்..!!!

ஒரு மாதிரி திக்பிரம்மையிலும், குழப்பத்திலும் இருந்த கற்பகம், சொல்லியே விட்டாள்..!! அதை கேட்ட அசோக் அதிர்ச்சியில் அப்படியே ஸ்தம்பித்து போனான்..!! அவள் சொன்ன வார்த்தைகள் காதுக்குள் அமிலத்தை ஊற்றிய மாதிரி இருக்க, துடித்துப் போனான். விழிகள் விரிய கற்பகத்தையே ஒரு நம்பமுடியாத பார்வை பார்த்தான். அடியில் பூமி விரிசல் விட்டாற்போல அவனது கால்கள் தடுமாறின. இரண்டு எட்டுகள் பின்னால் எடுத்து வைத்தவன், கீழே சரிந்து விடாமல் இருக்க, டேபிளை இறுக்கமாக பிடித்துக் கொண்டான். நிமிர்ந்து கற்பகத்தை பார்த்தான்.

அவள் இன்னும் பிரம்மை பிடித்தவள் மாதிரியே அசையாமல் நின்றிருந்தாள். அசோக்கின் முகத்தையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கைகள் ரெண்டும் உடலை விட்டு விரிந்திருக்க, அவளது மாராப்பு இப்போது கீழே நழுவியிருந்தது. மார்பை மூடிக்கொள்ள கூட தோன்றாமல் நின்றிருந்தாள். நாணப்படும் மனநிலையிலும் அவள் இருக்கவில்லை.

கற்பகம் அவன் முன் கையேந்தி நிற்கிற கோலமும், அவள் பேசிய வார்த்தைகளும், அசோக்கின் மூளையை யாரோ சம்மட்டியால் அடிப்பது போல வலிக்க, அவன் தலையை பிடித்துக் கொண்டான். சலனமற்று நின்று கொண்டிருந்த கற்பகம் இப்போது திடீரென கண்களை சுருக்கினாள். அவளுடைய தலை நிலை கொள்ளாமல் லேசாக சுழன்றது.

கால்கள் தடுமாறின. அசோக்கை நோக்கி அடியெடுத்து வைத்தவள், அப்படியே மயங்கி சரிந்தாள். அவளை பார்த்துக் கொண்டிருந்த அசோக் உடனடியாய் சுதாரித்துக் கொண்டான். அவள் தரையில் வீழ்வதற்கு முன்பாகவே ஓடிச்சென்று அவளை தாங்கிப் பிடித்துக் கொண்டான். "கற்பு.. கற்பு.." என்று மயக்கமுற்று மடியில் கிடந்த அவளுடைய கன்னத்தில் அறைந்தான்.

அவளிடம் எந்த அசைவும் இல்லாமலிருக்க, பிறகு அவளது மாராப்பை இழுத்து போர்த்திவிட்டு, "சண்முகம்.. சண்முகம்.." என்று அறைவாசலை நோக்கி கத்தி, ஆபீஸ் பியூனை அழைத்தான். அதன்பிறகு ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து.. அசோக்கின் கார் கிழக்கு கடற்கரை சாலையில் சீறிக்கொண்டு இருந்தது. அசோக் ஸ்டியரிங்கை வளைத்துக் கொண்டிருக்க, அவனுக்கு அருகே இருந்த இருக்கையில் கற்பகம் அமர்ந்திருந்தாள்.

அசோக் காரை செலுத்திக்கொண்டே பக்கவாட்டில் திரும்பி கற்பகத்தை பார்த்தான். அவளுடைய பார்வை ஒரு மாதிரி நிலைகுத்திப் போயிருக்க, சாலையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். சற்று முன்பு இருந்ததை போலில்லாமல் அவளுடைய முகம் இப்போது தெளிவாக காட்சியளித்தது.

அவளுக்கு மயக்கம் தெளிவித்து, அவள் கணவனின் உயிரை காப்பாற்றுவது தனது பொறுப்பு என்று அசோக் உறுதி அளித்து நம்பிக்கையூட்டிய பிறகே, அவளிடம் ஒரு தெளிவு பிறந்தது. "தெளிவா இருக்கியா கற்பு..?? உன்கிட்ட கொஞ்சம் பேசலாமா..??" அசோக் இறுக்கமான குரலில் கேட்டான். "ம்ம்.. சொல்லு..!!" கற்பகத்தின் பதிலிலும் ஒரு இறுக்கம்.
"ஏ..ஏன் அப்படி பண்ணுன கற்பு..??" "எப்படி பண்ணுனேன்..??" "எ..என்கிட்டயே உன் உடம்பை வெலை பேசுற மாதிரி.. எப்படி உன்னால அப்படி ஒரு வார்த்தையை சொல்ல முடிஞ்சது..??" அசோக் ஆதங்கமாக கேட்க, கற்பகம் சில வினாடிகள் எதுவும் பேசவில்லை.

அருகில் இருப்பவனையும் திரும்பி பார்க்கவில்லை. சாலையில் எதிரே வரும் வாகனங்களையே வெறித்துக் கொண்டிருந்தாள். பிறகு மெல்லிய குரலில் சொன்னாள். "எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை அசோக்.. பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்துச்சு.. எப்படியாவது பணத்தை அரேஞ் பண்ணனும்னு தோணுச்சு.. அதுக்காக என்னவேணா செய்யலாம்னு தோணுச்சு..!! உன்கிட்ட வந்து பேசுறப்போ.. ஒரு கன்ஃப்யூஷன்ல.. கண்ட்ரோல் இல்லாம.. அப்படி சொல்லிட்டேன்..!!" "கன்ஃப்யூஷன்ல சொல்றதா இருந்தாலும்.. என்னை பாத்து.. எப்படி நீ அப்படி சொல்லலாம்..??" அசோக் அந்த மாதிரி கோவமாக கேட்கவும், கற்பகம் இப்போது பக்கவாட்டில் திரும்பி அவனை பார்த்தாள்.

அவள் அசோக்கின் கண்களை கூர்மையாக பார்த்ததில் ஒருவித உஷ்ணம் தெரிந்தது. குரலில் இப்போது கொஞ்சம் கடுமையை கூட்டிக்கொண்டு சொன்னாள். "ஏன்..?? நான் சொன்னதுல என்ன தப்பு..?? நீ அந்த மாதிரி ஆள்தான..?? பொண்ணுக உடம்பை வெலை பேசுறவன்தான..?? இப்படித்தான் இருப்பேன், மாறவே மாட்டேன்னு உன் பொண்டாட்டிட்டயே சவால் விட்டவன்தான..??" கற்பகத்தின் கேள்விகள் அசோக்கை சுருக் சுருக்கென்று தைத்தன.

அவளுடைய முகத்தையே திகைப்பாக பார்த்தான். அவனுடைய குரல் அவனையும் அறியாமல் இப்போது தடுமாற ஆரம்பித்தது. "க..கற்பு ப்ளீஸ்.. எ..எனக்கு பொண்ணுக சகவாசம் இருக்கு.. ஆ..ஆனா நான் வெறி புடிச்சவன் இல்ல..!! யார் மேல ஆசைப்படனும்.. யார் மேல ஆசைப்படக் கூடாதுன்னு எனக்கு தெரியும்..!! பாலுக்கும், கள்ளுக்கும் எனக்கு நல்லாவே வித்தியாசம் தெரியும் கற்பு..!!" "பனை மரத்துக்கு கீழ நின்னு பாலை குடிச்சாலும்.. பாக்குறவங்க கண்ணுக்கு அது தப்பாத்தான் தெரியும் அசோக்..!!" அசோக்கிற்கு அடுத்த அடி..!! பதில் சொல்ல முடியாமல் திணறினான்.

ஓரிரு வினாடிகள் கற்பகத்தின் முகத்தையே திகைப்பாக பார்த்தவன், அப்புறம் முன்னால் சென்ற காரை ஓவர்டேக் செய்துகொண்டே, சூழ்நிலையை சமாளிக்கும் விதமாக சொன்னான். "நா..நான் ஒன்னும் அவ்வளவு கேவலமானவன் இல்ல கற்பு..!!" "ம்ம்.. தெரியும்..!!" "அப்புறம் ஏன் இப்படி எல்லாம் பேசுற..?? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..!!" சொல்லும்போதே அசோக்கிற்கு தொண்டை அடைத்தது.

கண்களில் லேசாக நீர் எட்டிப் பார்த்தது. "நீ பண்றது அந்த மாதிரிதான் இருக்கு அசோக்.. உன்னை நல்லவன்னு சேத்துக்குறதா, இல்ல கெட்டவன்னு ஒதுக்குறதா..?? எனக்கு புரியலை..!!" "நா..நான்.. நான் நல்லவன்தான் கற்பு.. ரொ..ரொம்ப நல்லவன்.. யாருக்கும் எந்த கெடுதலும் நான் நெனச்சது இல்ல..!! என்னை நீ புரிஞ்சுக்கவே இல்ல கற்பு..!!" வேகமாக சொன்னவன், கொஞ்ச நேரம் அமைதியானான். சாலையை பார்த்து காரை செலுத்தினான். ஆனால் அவனுடைய மூளை கற்பகம் சொன்னதையே யோசித்துக் கொண்டிருந்தது.

திடீரென மீண்டும் அவளிடம் திரும்பி, "ச்சே.. ஆறு வருஷத்துக்கு முன்னாடி நான் எப்படி இருந்தேன் தெரியுமா..?? எந்த கெட்ட பழக்கமும் இல்லாம.. எவ்வளவு நல்ல பையனா இருந்தேன் தெரியுமா..?? எல்லாம் இவளால வந்தது..!!" என்றான் சலிப்பும், வெறுப்புமாய். "யாரால..??" "நந்தினி..!!" "அவ என்ன செஞ்சா..??" கற்பகம் கேட்க அசோக் இப்போது சற்று நிதானித்தான். ஒரு சில வினாடிகள் மவுனமாய் இருந்துவிட்டு பிறகு மெல்லிய குரலில் ஆரம்பித்தான்.

 "காலேஜ்ல அவளை நான் லவ் பண்ணினேன் கற்பு.. ரொம்ப சின்சியரா லவ் பண்ணுனேன்..!! அவகிட்ட என் லவ்வை சொன்னப்போ.. அவ என்னை ரொம்ப கேவலமா ஹர்ட் பண்ணிட்டா..!!" "ஓ.. அப்படி என்ன சொன்னா..??" "நா..நான்.. நான் ஆம்பளையே இல்லைன்ற மாதிரி சொல்லி.. ஹர்ட் பண்ணிட்டா..!! அந்த வார்த்தையை தாங்க முடியாம.. அந்த கோவத்துலதான்.. நான் இப்படிலாம்..!! ச்சே.. எல்லாம்.." அசோக் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கற்பகம் இடையில் புகுந்து "அப்படினா நீ ஆம்பளையாள மாறிருக்கணும்..??" என்று உலர்ந்து போன குரலில் கேட்டாள்.

உடனே அசோக்கிற்கு அவன் மூளையில் சுருக்கென எதுவோ தைத்த மாதிரி இருந்தது. திகைத்துப் போய் கற்பகத்தை திரும்பி பார்த்தான். "க..கற்பு.. எ..என்ன சொல்ற நீ..????" "புரியலையா..?? அவ சொன்னதாலதான் மாறிட்டேன்னு சொல்றியே..?? அப்படினா ஆம்பளையால மாறிருக்கணும்.. ஏன் இப்படி மாறுன..??" "க..கற்பு.. நான்.. அப்போ நான்.." அசோக் வார்த்தைகளை சிந்த திணறினான். "ஆம்பளைன்னு நெனச்சுட்டு இருக்கியா..?? ஆம்பளைக்கும் பொம்பளை பொறுக்கிக்கும் நெறைய வித்தியாசம் இருக்கு அசோக்..!!" கற்பகம் ஒருமாதிரி அமைதியான குரலில்தான் சொன்னாள்.

 ஆனால் அசோக் அந்த வார்த்தைகளுக்கு அப்படியே ஆடிப்போனான். ஆறு வருடங்களுக்கு முன்பாக நந்தினி உதறித்த வார்த்தைகளைப் போல, இப்போது கற்பகம் வீசிய வார்த்தைகளும் அவனை வலிமையாக தாக்கின. விதிர்விதிர்த்து போய் கற்பகத்தையே பார்த்தான். கற்பகம் தொடர்ந்தாள். "பொண்ணுககிட்ட போறதுலாம் ஒரு ஆம்பளைத்தனமாடா..?? ஆம்பளைன்னா என்ன நெனச்சுட்டு இருக்குற நீ..?? உண்மையான ஆம்பளை யார்னு தெரியுமா உனக்கு..?? " அசோக் பேச்சிழந்து போய், பிரம்மை பிடித்தவன் மாதிரி காரை செலுத்திக் கொண்டிருக்க, அதன்பிறகு கொஞ்ச நேரம் கற்பகம் மட்டுமே பேசினாள்.

ஆனால் அவள் பேசிய அனைத்தும் அசோக்கின் செவியில் புகுந்து, மூளையை துளைத்தெடுத்தன.

 "உன் அப்பா ஆம்பளை..!! சின்ன வயசுலேயே பொண்டாட்டியை இழந்துட்டாலும்.. வேற ஒரு பொண்ணுக்கு மனசுல இடம் இல்லைன்னு முடிவு பண்ணிட்டு.. தான் பெத்த பையனுக்காகவே.. இந்த நிமிஷம் வரைக்கும் உழைச்சுக்கிட்டும், கவலைப்பட்டுக்கிட்டும் இருக்காரே..?? அவர் ஆம்பளை..!!"

 "................."

 "நந்தினியோட அப்பா.. நம்ம சதானந்தம் ஸார்..!! இருநூறு எம்ப்ளாயிஸ் வொர்க் பண்ணுன கம்பெனிக்கு மொதலாளி அவரு.. பாவம், பிசினஸ் நொடிச்சு போச்சு..!! ஆனா.. தான் பொண்டாட்டியும், புள்ளைகளும் கஷ்டப்படக் கூடாதுன்னு.. எந்த ஈகோவும் பார்க்காம.. அந்த வயசுலயும்.. உன்கிட்ட கைகட்டி நின்னு வேலை பாத்தாரே..?? அவர் ஆம்பளை..!!"

 "................."

 "ஹ்ஹ.. நீ மட்டும் இல்ல.. இங்க நெறைய பேர் ஆம்பளைன்றதுக்கு அர்த்தத்தை தப்பாத்தான் புரிஞ்சு வச்சிருக்காங்க..!! ஒரு பொண்ணை கட்டில்ல திருப்தி படுத்திட்டா போதும்.. உடனே அவன் ஆம்பளை..!!

அவளை கர்ப்பமாக்கிட்டா போதும்.. ஆஹா ஆம்பளை சிங்கம்..!! அடத்தூ..!! ராமண்ணாவுக்கு கொழந்தை இல்ல.. ஆனா, அவர் மாதிரி ஒரு ஆம்பளையை பார்க்க முடியுமா..?? காதலிச்ச பொண்ணுக்காக.. அவரோட சொந்த பந்தம், சொத்து பத்து எல்லாம் விட்டுட்டு வந்து.. இருபது வருஷமா உன் வீட்டுல கார் ஓட்டிட்டு இருக்காரே..?? அவர் ஆம்பளை..!!"

 "................."

 "ஆங்.. அந்த புருஷோத்தமன்.. அவனை மறந்துட்டனே.. என்ன கேரக்டர்டா அவன்..?? அவ்வளவு கெட்ட பழக்கம் இருந்தும்.. அவனை காதலிச்ச ஒரு பொண்ணுக்காக.. அவளோட ஊனத்தை கூட பொருட்படுத்தாம.. அவளையே கல்யாணம் செஞ்சுக்கிட்டு.. இப்போ அவளுக்காகவே வாழ்றானே..?? அவன் ஆம்பளைடா..!!" அசோக் இப்போது ஒருமுறை திரும்பி கற்பகத்தை பார்த்தான். அவனுடைய முகம் இப்போது வெலவெலத்துப் போய் பரிதாபமாக காட்சியளித்தது.

கற்பகம் உதிர்த்த வார்த்தைகள் அனைத்தும், அவனை சுளீர் சுளீர் என சவுக்கால் அடித்தது போல இருக்க, அந்த வார்த்தைகள் அவனது உள்ளத்தில் பொங்க செய்த உணர்ச்சிகளை, உதடுகள் கடித்து கட்டுப் படுத்திக் கொண்டான். கற்பகமும் இப்போது கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள். அவளுடைய ஆவேசம் சற்றே வடிந்து போன மாதிரி தெரிந்தது. அவளுக்கு திடீரென எதுவோ ஞாபகம் வந்திருக்க வேண்டும். அவளுடைய விழிகள் விரிந்து கொள்ள, ஒரு மாதிரி மிரட்சியாக, எங்கேயோ வெறித்த பார்வை ஒன்று பார்த்தாள்.

அவளுடைய கண்கள் மெல்ல கலங்க ஆரம்பிக்க, சற்றே தழதழத்த குரலில் சொன்னாள்.

 "நாலு பேர் சேர்ந்து ஒரு அப்பாவியை ரோட்டுல போட்டு அடிச்சுட்டா.. உடனே அவனுகளாம் ஆம்பளைகளாம்..?? அதெல்லாம் ஒரு வீரமாம்..?? இன்னைக்கு என் புருஷன் நாலு பேரை எதுத்து அடிக்க துப்பில்லாம ஹாஸ்பிட்டல்ல படுத்திருக்காரு அசோக்..!! நாலு பொறுக்கி பசங்ககிட்ட இருந்து ஒரு பொண்ணோட மானத்தை காப்பாத்துறதுக்காக.. அவனுககிட்ட கத்திக்குத்து வாங்கி.. இப்போ உசுரை கைல புடிச்சுட்டு படுத்திருக்காரு..!!" என்று அழுகுரலில் ஆரம்பித்தவள்,

திடீரென ஆவேசமாகி, "என் புருஷனை விட யார்டா இருக்கா இங்க ஆம்பளை..??"
என்று கத்த, அசோக் அவளையே ஸ்தம்பித்துப் போய் பார்த்தான். சுத்தமாய் வாயடைத்துப் போனான்.

அவனுக்கும் இப்போது கண்கள் கலங்க ஆரம்பித்தன. கற்பகம் மேலும் கொஞ்ச நேரம் அப்படியே ஆவேசத்துடன் இருந்தாள். அப்புறம் மெல்ல தனது உணர்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டு, கண்களில் வழிந்த நீரையும் துடைத்துக் கொண்டு, இதமான குரலில் பேச ஆரம்பித்தாள்.

 "ஆம்பளைகளும், அவதார புருஷனுகளும்.. கதைலயும் காவியத்துலயும் மட்டும் இல்ல அசோக்.. நம்மள சுத்தி இருக்காங்க.. நம்ம கூடவே இருக்காங்க..!! கட்டுன பொண்டாட்டிக்காகவும், பெத்த புள்ளைக்காகவும், பொறந்த குடும்பத்துக்காகவும் வாழற ஒவ்வொருத்தனும் ஆம்பளைதாண்டா..!!"

 "................."

 "நீ அழகனா இருக்கலாம்.. அறிவானவனா இருக்கலாம்.. தெறமைசாலியா, தைரியசாலியா இருக்கலாம்.. வீரமானவனா, விவேகமானவனா இருக்கலாம்..!! ஆனா பெண்மையை மதிக்க தெரியாத உன்னை.. உன் பொண்டாட்டியோட அன்பை புரிஞ்சுக்க முடியாத உன்னை.. என்னால ஆம்பளையா ஒத்துக்க முடியாது அசோக்..!!

நல்லா கண்ணை தொறந்து பாரு.. உன்னை சுத்தியே எத்தனை ஆம்பளைங்க இருக்காங்கன்னு பாரு..!! அந்த மாதிரி ஒரு ஆம்பளையா நீ மாறிக் காட்டிருக்கலாமே..??

இனிமேயும் சும்மா சும்மா.. 'அவளாலதான் நான் இப்படி ஆயிட்டேன்.. அவளாலதான் நான் இப்படி ஆயிட்டேன்..'னு சொல்லிட்டு இருக்காத அசோக்.. தப்பு அவ மேல இல்ல.. உன் மேலதான்..!!" கற்பகம் பேசி ஓய்ந்தாள்.

இடி, மின்னலுடன் மழை பெய்ந்து ஓய்ந்த மாதிரி இருந்தது அசோக்கிற்கு..!! அவளுடைய பேச்சில் இருந்த நியாயம் எல்லாம் அவனுடைய புத்தியில் உறைக்க, இத்தனை நாளாய் அவன் செய்திருந்த தவறு என்னவென்று தெளிவாக புரிந்தது. ஆனால் கற்பகம் தன்னை பற்றி இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறாள் என்பதையும் உணர்ந்து கொண்டான். அவளை தெளிவு படுத்தும் விதமாக மெல்லிய குரலில் ஆரம்பித்தான்.

 "நீ சொல்றதுலாம் சரிதான் கற்பு.. இத்தனை நாளா என் தப்பு என்னன்னே உணராம இருந்துட்டேன்.. இனி சத்தியமா அந்த தப்பை நான் திரும்ப பண்ண மாட்டேன்.. என்னால பண்ணவும் முடியாது கற்பு..!!

 நீ சொன்ன மாதிரி.. என் பொண்டாட்டியோட அன்பை புரிஞ்சுக்காத.. மடையன் இல்ல நான்.. எனக்கு நல்லாவே புரியும்..!!" "அப்புறம் ஏன் அன்னைக்கு ஆபீஸ்ல அப்படி நடந்துக்கிட்ட..??" "அது வேற.. அதை இப்போ சொன்னா உனக்கு புரியாது..!!

ஆனா அது கூட.. அவ மேல நான் வச்சிருந்த அன்போட வெளிப்பாடுதான் கற்பு.. அவ என்னை நம்பலையேன்னு வந்த கோவம் அது..!!" "என்னடா சொல்ற நீ..?? உனக்கும் அவ மேல அன்பு இருந்தா.. அப்புறம் அவளை ஏத்துக்குறதுல என்னதான் பிரச்னை உனக்கு..??"

 "ஏதோ ஒரு குழப்பம்.. ஒரு தயக்கம்.. ஒரு ஈகோ..!!" "ச்சே.. கட்டுன பொண்டாட்டிக்கிட என்னடா ஈகோ வேண்டிக் கெடக்கு..?? அதுவும் உன் மேல உயிரையே வச்சிருக்குற பொண்டாட்டிக்கிட்ட..??"

 "ம்ம்.. தப்புத்தான்..!!" "நான் சொல்றதை கேளு அசோக்.. நந்தினி ரொம்ப நல்ல பொண்ணு.. உன் ஈகோலாம் விட்டுட்டு.. நீதான் இனி எல்லாம்னு அவகிட்ட போய் சொல்லு..!!

 உனக்காகவே வாழறவ அவ.. அவளுக்காக நீ இனிமே வாழ்ந்து பாரு..!! பண்றியா..??" "ம்ம்..." அசோக் அமைதியாக சொன்னான். அவன் அப்படி சொன்னதற்கு அடுத்த ஐந்து நிமிடங்களில் மலர் ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தது.



No comments:

Post a Comment