Friday, October 10, 2014

ஆண்மை தவறேல் - பாகம் 24



அசோக் செய்த காரியம் நந்தினிக்கு ஆத்திரத்தை மூட்டி விட்டிருந்ததே ஒழிய, அவனை விட்டு விலகும் எண்ணம் அவளுக்கு துளியளவும் வரவில்லை. அவன் மீது மையல் கொண்டிருந்த மனதை மாற்றிக் கொள்ளவும் அவளால் இயலவில்லை. அவன் மாறிவிடுவான் என்ற நம்பிக்கை இப்போது நமத்துப் போயிருந்தாலும், அந்த நம்பிக்கையை புதுப்பித்துக் கொள்வதை தவிர அவளுக்கு வேறு வழி புலப்படவில்லை. ஆனால் அதற்காக, தன் கோபத்தை எல்லாம் புதைத்துவிட்டு அவனிடம் கொஞ்சிப் பேசவும் அவளால் முடியவில்லை. ஒருவித நெருக்கடியான மன அழுத்தத்தில் நந்தினி சிக்கி தவித்தாள்.





அந்த மன அழுத்தம்தான் அவளை அசோக் மீது எரிந்து விழ செய்தது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவன் செய்த தவறை குத்திக் காட்ட சொல்லி அவளை தூண்டியது. அவளுடைய செய்கை அசோக்கிற்கு வேதனை தரும் என்பதையும் அவள் உணர்ந்தே வைத்திருந்தாள்.

ஆனால் அவளுடைய உள்ளக் கொதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் வார்த்தைகளை கொட்டி விடுவாள். இந்த மாதிரியான சூழ்நிலையில்தான் இன்னொரு சம்பவம் நடந்தது. அவர்களுக்கு இடையில் நிலவிய பிரச்னையை அது வேறு திசையில் திருப்பி போட்டது.

 நந்தினி பெருங்குடி சென்று திரும்பி ஒரு வாரம் கழித்து ஒரு நாள்.. இரவு ஒன்பது மணி இருக்கும். அசோக் ஆபீசில் இருந்து காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தான்.

அப்போதுதான் அவனுடைய செல்போனுக்கு அந்த கால் வந்தது. புது எண்ணாக இருக்கவும், 'யாராக இருக்கும்..?' என்று சற்றே குழப்பத்துடன் எடுத்து பேசியவன் அடுத்த முனையில் வந்தனா என்பதை அறிந்ததும் ஆச்சரியமுற்றான்.

 "ஹேய்.. வந்தனா.. எப்படி இருக்குற..?" என்றான் உற்சாகமாகவே.

 "ம்ம்.. நல்லாருக்கேன்.." வந்தனாவின் குரல் இறுக்கமாக ஒலித்தது.

 "அப்புறம்.. என்ன திடீர்னு கால் பண்ணிருக்குற..?"

 "உ..உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் அத்தான்.. இப்போ ஃப்ரீயா இருக்கீங்களா..?"

 "ம்ம்.. ஃப்ரீதான்.. சொல்லு.. என்ன விஷயம்..?" அசோக் காரின் வேகத்தை குறைத்து ரோட்டோரமாக நிறுத்திக்கொண்டே கேட்டான்.

 "அ..அதை.. எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியலை.."

 
"என்ன.. ஓவரா பில்டப்புலாம் கொடுக்குற.. அப்படி என்ன விஷயம்..?"

 "ஆக்சுவலா.. போன வாரம் அக்கா இங்க வந்திருக்குறப்போ நான் பாத்த ஒரு விஷயத்தை பத்தி அவகிட்ட சொன்னேன்.. அவ அத்தான்ட்ட இதைப்பத்திலாம் பேசாதடின்னு சொன்னா.. நானும் சரிக்கான்னு சொல்லிருந்தேன்..!! ஆனா எனக்கு மனசு கேக்கலை.. ஒரு வாரமா எனக்கு அதே நெனைப்பாவே இருக்கு..!! " என்ற வந்தனா திடீரென,

 "அக்காவை நெனச்சா எனக்கு ரொம்ப கவலையா இருக்குத்தான்..!!" என்று உடைந்து போன குரலில் சொல்ல, அசோக்கை ஒரு மெலிதான பதற்றம் வந்து தொற்றிக் கொண்டது. ஆனால் அவள் சொல்ல விழைந்த விஷயம் எதுவும் அவனுக்கு தெளிவாக புரியவில்லை.

அந்த குழப்பத்துடனே கேட்டான். "ஹேய்.. வந்தனா.. இப்போ என்னாச்சுன்னு இப்படிலாம் பேசுற..? நீ என்ன சொல்ல வர்றேன்னே எனக்கு சரியா புரியலை..!! ஆமாம்.. ஏதோ நீ பாத்த விஷயத்தை பத்தி அவகிட்ட சொன்னேன்னு சொன்னியே.. என்ன அது..??"

 "அ..அது.."

 "ம்ம்ம்... சொல்லு.."

 "ஒ..ஒரு பத்து நாள் முன்னாடி.. உ..உங்களை நான் பாத்தேன்..!!"

 "எ..என்னையா..??"

 "ம்ம்.. நந்தனம் சிக்னல்ல.. ஒரு காருக்குள்ள.. நீங்களும் இன்னொரு பொண்ணும்..!!"

 "ஓ..!!!" அசோக் இப்போது மெலிதாக அதிர்ந்தான்.

மஞ்சுவும் அவனுன் காருக்குள் இருந்ததை இவள் பார்த்திருக்கிறாள் என்று பட்டென அவனுக்கு புரிந்து போனது. கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. 'இவள் ஒருத்திக்குத்தான் தெரியாமல் இருந்தது. இவளுக்கும் தெரிந்து போனதா..? இப்போது இவள் என்ன சொல்லப் போகிறாளோ..?' நினைக்க நினைக்க, அசோக்கிற்கு தலை வலிப்பது மாதிரி இருந்தது.

தலையை பிடித்துக் கொண்டான். அடுத்த முனையில் வந்தனா தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.

 "நான் உங்களை விட ரொம்ப சின்னப்பொண்ணு.. இவள்லாம் நமக்கு அட்வைஸ் பண்றாளேன்னு நெனைக்காதீங்க.. ஏதோ என் மனசுல பட்டதை சொல்றேன்..!!"

 "ம்ம்.. சொல்லு.."

 "இந்த பொண்ணுக சகவாசத்தை விட்ருங்கத்தான்.. ப்ளீஸ்.. உங்களை நீங்க மாத்திக்கோங்க.." வந்தனா கெஞ்சலான குரலிலேயே சொன்னாள்.

 "இங்க பாரு வந்தனா.. நடந்தது தெரியாம நீ.."

 "இல்லைத்தான்.. எல்லாம் தெரிஞ்சுதான் பேசுறேன்..!! அந்த அக்ரீமன்ட் பத்திதான சொல்றீங்க..? அக்கா எல்லாம் சொன்னா..!! 'அதான் எல்லாம் தெரிஞ்சுதான கல்யாணத்துக்கு சம்மதிச்சா.. இப்போ என்ன..?' அப்டின்னு சொல்வீங்க.. அதான..?"

 "ம்ம்.." "மனுஷங்க மனசு எப்போ எந்த மாதிரி மாறும்னு யாரும் சொல்ல முடியாதுத்தான்..

அக்கா அந்த அக்ரீமன்ட்டுக்கு சம்மதிச்சப்போ.. அவ உங்களை லவ் பண்ணலை.. ஆனா இப்போ உங்களை லவ் பண்றா..!!

யெஸ்.. ஷீ லவ்ஸ் யூ.. ஷீ லவ்ஸ் யூ எ லாட்..!!" "...................................." வந்தனா சொன்ன வார்த்தைகளில் அசோக் திகைத்துப் போயிருக்க, அவள் தொடர்ந்து பேசினாள்.

 "அக்கா உங்க மேல உயிரையே வச்சிருக்கா அத்தான்.. அவளுக்குன்னு மட்டும் நீங்க இருக்க மாட்டீங்களான்னு ஏங்குறா..!!

உண்மையா காதலிக்கிற எந்தப்பொண்ணுமே அப்படித்தான நெனைப்பா..??

உங்களை உயிரா நெனைக்கிற ஒருத்திக்கு.. நீங்க தெனமும் வேற பொண்ணுககிட்ட போயிட்டு வர்றீங்கன்னு தெரியிறது.. எவ்வளவு வேதனையா இருக்கும்னு..

ஒரு பொண்ணா என்னால புரிஞ்சுக்க முடியுது..!! உங்களுக்கு அது புரியலையா அத்தான்..??"

 "...................................."

 "தயவு செஞ்சு.. அக்கா சொல்லித்தான் நான் உங்ககிட்ட இப்போ பேசிட்டு இருக்கேன்னு மட்டும் நெனச்சுடாதீங்க.. நான் பேசுறது சத்தியமா அவளுக்கு தெரியாது..!!"

 "...................................."

 "நான் உங்களுக்கு அட்வைஸ் பண்ணலைத்தான்.. உங்களை கெஞ்சிக் கேட்டுக்குறேன்..!! நீங்க மாறணும்.. உங்களுக்காகவே வாழ நெனைக்கிற ஒரு பொண்ணு உங்களுக்கு கெடைச்சிருக்கா.. எல்லாத்தையும் விட்டுட்டு அவளுக்காக நீங்க கொஞ்சநாள் வாழ்ந்து பாருங்கத்தான்..

உண்மையான சந்தோஷம் என்னன்னு அப்போ நீங்க புரிஞ்சுக்குவீங்க..!! ப்ளீஸ்த்தான்.. அக்காவை ஏத்துக்கோங்க.. அவளோட லவ்வை அக்ஸப்ட் பண்ணிக்கோங்க..

அக்கா ரொம்ப பாவம் அத்தான்.. உங்களை கெஞ்சிக் கேட்டுக்குறேன்..!!" பேசிக்கொண்டிருக்கும்போதே வந்தனா உடைந்து போய் அழ ஆரம்பித்தாள்.

அவளுடைய விசும்பல் ஒலியை கேட்டு அசோக் திகைத்துக் கொண்டிருக்கும்போதே, கால் பட்டென கட் ஆனது.

செயலிழந்து போனவனாய், இருண்டு போன செல்போன் திரையையே கொஞ்ச நேரம் வெறித்துக் கொண்டிருந்தான்.

வந்தனாவின் கெஞ்சல் அசோக்கின் காதுகளில் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது. அவனுடைய மூளை எதையோ தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்திருந்தது.

 'என்ன சொல்கிறாள் இவள்..?? இவள் ஏதோ புதிதாக உள்ளே புகுந்து குழப்புகிறாள்..?? சின்னப்பெண்.. இவளெல்லாம் எனக்கு யோசனை சொல்கிறாள்..??

எல்லாம் முன்கூட்டியே தெளிவு படுத்திவிட்டுத்தானே அவள் கழுத்தில் தாலியே கட்டினேன்..?? பெண்கள் சகவாசத்தை விட்டுவிட வேண்டுமாம்.. நான் ஏன் அப்படி மாற வேண்டும்..??

உணவு, உறக்கம் மாதிரி பெண்களும் என் வாழ்வில் ஒரு அங்கமாகிப் போனார்களே.. பெண்கள் இல்லாமல் எப்படி என்னால் இருக்க இயலும்..??

என்னால் முடியாது..!!' என்று அவனுடைய ஒருமனம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, இன்னொரு மனம் விழித்துக்கொண்டு, 'ஏன் இருக்க முடியாது..?? இப்போது இருக்கவில்லை..??

இந்த இரண்டு வாரங்களாக நீ இருக்கவில்லை..?' என்று கேள்வி எழுப்ப, அசோக்கின் மூளையை அந்த உண்மை பலமாக அறைந்தது..!! அவனுடைய மூளை கேட்ட அந்த கேள்வியால் அசோக் ஸ்தம்பித்து போனான்..!! 'ஆமாம்.. உண்மைதானே..??

இந்த இரண்டு வாரங்களாக வேறு எந்தப்பெண்ணை பற்றிய எண்ணமும் துளி கூட இல்லாமல்தானே நான் இருக்கிறேன்..?? எந்த நேரமும் இந்த நந்தினிதானே என் மனதையும் மூளையையும் அடைத்திருக்கிறாள்..??


அலுவலகத்தில் கூட பல நேரங்களில் எந்த வேலையும் ஓடாமல், அவளைப் பற்றிதானே சிந்தித்துக் கொண்டிருந்தேன்..?? அவளுடைய சந்தோஷத்தை எப்படி அவளிடம் மீட்டு கொடுப்பது என்றுதானே எண்ணிக்கொண்டிருந்தேன்..?'

'அப்படியானால்.. அப்படியானால்.. வேறு பெண்கள் இல்லாமல் என்னால் இருக்க முடியுமோ..?? ஒருத்தியின் இதயம் போதுமென்று.. என்னையும் அறியாமல் என் மனம் அவள் பக்கம் தன் வசமிழக்கிறதோ..??

இது காதலா..?? என்ன மாதிரியான உணர்வு இது..?? ஆறு வருடங்களுக்கு முன்பு.. எனக்கு அவள் மீதிருந்த காதல் உணர்வுக்கும்.. இந்த உணர்வுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றனவே..?? எது காதல்..?? இதுவா.. அதுவா..??' அசோக்கால் தெளிவான முடிவுக்கு வர இயலவில்லை.

ஆனால் நந்தினி தன் மனதில் ஆழமாக ஊடுருவி விட்டாள் என்று மட்டும் தெளிவாக புரிந்தது. அவளுடைய நினைவை சுமந்திருந்தால், வேறு பெண்கள் இல்லாமல் இருப்பது சாத்தியமே என்று அறிந்து கொண்டான். 'நந்தினி.. நந்தினி.. நந்தினி..' என்றே அவனுடைய மனம் கும்மாளமிட்டுக் கொண்டிருக்க, காரை ஸ்டார்ட் செய்து, வீட்டை நோக்கி மிதமான வேகத்தில் செலுத்தினான்.

அவனுடைய தலைக்கு மேலிருந்த மிரரை சற்றே திருப்பி தன் முகத்தை பார்த்தான். அவனுடைய முகம் முழுவதிலும் ஒரு வித குழப்பம் கொப்பளிப்பதை காண முடிந்தது. ஆனால் அந்த குழப்பத்தினூடே, ஒரு புதுவித சந்தோஷம் ஜிவ்வென்று ஓடுவதையும் அவனால் உணர முடிந்தது..!!

 அன்று வீட்டுக்குள் நுழைந்ததுமே, எதிர்ப்பட்ட தன் மனைவியை அவன் பார்த்த பார்வையில் நிறைய வித்தியாசமிருந்தது.

அத்தனை நாளைய இறுக்கம் தளர்ந்து ஒரு பரிவும், ஸ்னேஹமும் அந்த பார்வையில் நிறைந்திருந்தது.

ஆனால் அவன் மீது கோபம் இன்னும் குறையாமல் இருந்த நந்தினிக்குத்தான், அந்த பார்வையில் இருந்த மாறுதலை கவனிக்க நேரம் இல்லை.

கணவன் தன்னையே குறுகுறுவென பார்க்க, இவளோ முகத்தை வெடுக்கென வெட்டிக்கொண்டு நகர்ந்தாள்.

 அன்று இரவு.. அவர்களது படுக்கை அறையில்.. இரவு விளக்கின் மங்கலான வெளிச்சத்தில்.. கட்டிலின் விளிம்பில் குப்புறப்படுத்திருந்த அசோக்.. கீழே தரையில்.. களைத்துப் போய் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் தன் மனைவியையே.. கண்கொட்டாமல் நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தான்..!!


மந்தமான வெளிச்சத்திலும் பொன்னென ஜொலிக்கும் அவளுடைய அழகை இமைக்க மறந்து ரசித்துக் கொண்டிருந்தான்..!! மனதுக்குள்ளேயே அவளுடன் உரையாடினான்..!!

 'ஹேய்.. நந்தினி.. இன்னைக்கு நெறைய வேலையோ..?? இப்படி அடிச்சுப் போட்ட மாதிரி தூங்குற..??

எனக்கு தூக்கம் போயிடுச்சுடி..!! ரெண்டு வாரமா உன் நெனைப்பாவே இருக்கு..!!

நான் உன்னை அவ்வளவு காயப்படுத்தினப்புறமும்.. என் மேல உனக்கு அவ்வளவு காதலா..?? உன் தங்கச்சி அப்படி சொல்றா..?? நெஜமாவா..?? நீ நடந்துக்குறதுலாம் பாத்தா.. என்னால அதை நம்ப முடியலை..!!

இருந்தாலும்.. அவ சொன்னது என் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.. அது ஏன்னு எனக்கே புரியலை..!! உன்கிட்ட பேசணும் நந்தினி.. மனசு விட்டு நெறைய பேசணும்..!!' திடீரென விழிப்பு வந்து இமைகளை பிரித்த நந்தினி, கட்டிலின் மேலிருந்து தன் கணவன் கண்ணிமைக்காமல் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்ததும், சற்றே ஆச்சரியமுற்றாள்.

 'என்ன ஆயிற்று இந்த ஆளுக்கு..?' என்பது போல அசோக்கையே சில வினாடிகள் குழப்பமாக பார்த்தாள். மனைவி விழித்துக் கொண்டதை அறிந்ததும், அசோக் படக்கென அந்தப்பக்கமாய் புரண்டு படுத்துக் கொண்டான்.

கொஞ்ச நேரம் எதுவும் புரியாமல் திருதிருவென விழித்த நந்தினி, பின்னர் போர்வையையும் இமைகளையும் இழுத்து போர்த்தி விட்டு தூங்க ஆரம்பித்தாள்.

 அடுத்த நாள் காலை.. அசோக் ஆபீசுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். உடைகளை அணிந்து முடித்திருந்தவன், கண்ணாடி முன்பாக நின்றுகொண்டு, அந்தக்கண்ணாடி பிரதிபலித்த தனது பிம்பத்தையே பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

அப்போதுதான் நந்தினி அந்த அறைக்குள் நுழைந்தாள். அசோக்கின் குளிர் கண்ணாடியை கையில் எடுத்து வந்திருந்தவள், அதை டேபிள் மீது வைத்துவிட்டு, "உங்க சன் க்ளாஸ்.." என்று இறுக்கமான குரலில் சொன்னாள்.

 "தேங்க்ஸ் டியர்.." அசோக் திரும்பி குறும்பாக சொன்னான்.

நீண்ட நாளுக்கப்புறம் அவனுடைய குறும்பு நந்தினிக்கு வித்தியாசமாக தோன்ற, ஒருமுறை கணவனை ஏறிட்டு பார்த்தாள். அவனுடைய கண்களில் தெரிந்த குறும்பின் அர்த்தத்தை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அப்புறம் அவனுடைய உடை அலங்காரத்தை ஓரிரு வினாடிகள் நோட்டமிட்டவள், குறுகுறுப்புடன் கேட்டாள்.

 "என்ன.. இன்னைக்கு ஆபீஸுக்கே ஜீன்ஸ், டி-ஷர்ட்ல போறீங்க..?"

 "ஏன்.. போகக்கூடாதா..?"

 "புதுப்பழக்கமா இருக்கேன்னு கேட்டேன் சாமீ..!! நீங்க ஜீன்ஸ்ல போங்க.. இல்லனா ஒண்ணுமே போடாம கூட போங்க.. எனக்கு என்ன..?" வெடுக்கென சொல்லிவிட்டு நந்தினி நகர முயல, அசோக் எட்டி அவளுடைய வலது கையை, தனது இடதுகையால் பற்றினான்.

அதை எதிர்பாராத நந்தினி, 'ப்ச்.. கையை விடுங்க..' என்று வெறுப்பாக சொன்னவாறே, அவளுடைய கையை உதறி அவனுடைய பிடியில் இருந்து மீள முயன்றாள்.

ஆனால் அவனுடைய பிடியோ மிகவும் வலுவாக இருக்க, அவளால் விலகிக்கொள்ள முடியவில்லை. இயலாமையும் எரிச்சலுமாய் சொன்னாள்.

 

"ஐயோ.. விடுங்கப்பா.. ப்ளீஸ்.." அசோக் பிடித்த பிடியை விடவில்லை.

அவனுடைய வலுவான பிடியில் சிக்கியிருந்த, வாழைத்தண்டு போன்ற வழவழப்பான நந்தினியின் கையை, அப்படியே அவளுடைய பின்னுக்கு வளைத்து, அவளை தன்னை நோக்கி இழுத்தான்.

இப்போது நந்தினி அசோக்கிற்கு எதிரே, அவனுக்கு மிக நெருக்கமாக வந்து சேர்ந்தாள். அவளுடைய வலது கை பின்பக்கமாக வளைத்து பிடிக்கப்பட்டிருக்க, அவளது மார்புகள் ரெண்டும் அசோக்கின் நெஞ்சில் மெத்தென்று அழுந்தி, உரசிக்கொண்டிருந்தன.

 அசோக் நந்தினியின் முகத்தை குறும்பாக பார்த்துக்கொண்டிருக்க, அவளோ அசோக்கின் முகத்தை வெறுப்பாகவே பார்த்தாள்.

இருவருடைய பார்வைகளும் ஒன்றோடொன்று மோதி சண்டையிட, அவர்கள் விட்ட அனல் மூச்சு ஒன்றோடொன்று மோதி ஒன்று கலந்தன.

நந்தினியின் உதாசீனத்தால் வந்த கோபமும், அவள் மீதிருந்த ஆசையும் ஒன்று கலந்த மாதிரியாக அசோக் சொன்னான். 

"ரொம்ப திமிருடி உனக்கு..!!"

 "ம்ம்..?? உங்களை விடவா..??" நந்தினி படக்கென சொன்னாள்.

 "எனக்கு என்ன திமிரு.. நானா பேச வர்றப்போலாம் மூஞ்சை சிலுப்பிக்கிட்டு ஓடுறேன்..??

பாக்குறப்போலாம் ஏதோ அருவருப்பான பிராணியை பாக்குற மாதிரி பாக்குறேன்..??" அசோக் பற்களை கடித்தவாறு கேட்க,

 "நீங்க செஞ்ச காரியத்துக்கு வேற என்ன பண்ணுவாங்களாம்..??" நந்தினியும் சூடாக திருப்பிக் கொடுத்தாள்.

 "இங்க பாரு.. நான் வேணுன்னு அப்படி பண்ணல.. அது ஜஸ்ட் ஆக்சிடன்ட்… அதுக்கும் நீதான் காரணம்..!!"

 "நானா..?? நான் என்ன பண்ணுனேன்..??" நந்தினி புருவத்தை சுருக்கியவாறே கேட்க, அசோக் இப்போது அவளது உதடுகளை வெறித்தவாறே கேலியான குரலில் சொன்னான்.

 "ம்ம்ம்.. அழகான இந்த லிப்சை அவ்ளோ க்ளோசப்புல உன்னை யாரு காட்ட சொன்னா..?? அதுவும் ஜீராலாம் ஊத்தி..!! அதை பாத்து எனக்கு புத்தி பேதலிச்சு போச்சு.. கிஸ் பண்ணிட்டேன்..!!"

 "ம்க்கும்.. பண்றதையும் பண்ணிட்டு பழியை என் மேல தூக்கி போடுறீங்களா..??"

 "உன் மேலலாம் எதையும் தூக்கி போடலை.. உன்கிட்ட கொஞ்சம் அதை பத்தி பேசணும்னு சொல்றேன்..!!"

 "பேசுங்க.. யாரு வேணான்னா..? எது பேசுறதா இருந்தாலும்.. மொதல்ல என் கையை விட்டுட்டு பேசுங்க..!!"

 "நீதான் பேச வர்றப்போலாம்.. வெடுக்குனு கடிச்சு வச்சுட்டு ஓடுறியே..??

அதான்.. இன்னைக்கு உன்னை இப்படியே புடிச்சு வச்சுக்கிட்டு.. நான் சொல்ல நெனச்சதெல்லாம் சொல்லிட போறேன்..!!"

 "ப்ச்.. கை வலிக்குது அசோக்.. விடுங்க.. ப்ளீஸ்..!!"

 "ம்ஹூம்..!! நீ ஓடிடுவ..!!" 

"இல்ல.. ஓடலை.. கையை விடுங்க..!! ப்ளீஸ்..!!" நந்தினி கெஞ்சலாக சொல்ல, அசோக் மெல்ல தன் பிடியை தளர்த்தினான். அவளுடைய கையை விடுவித்துவிட்டு, அவளது கண்களையே கூர்மையாக பார்த்தான்.

அவ்வளவு நேரம் பின்புறமாக வளைக்கப்பட்டிருந்த அவளது கையை, நந்தினி முன்பக்கமாக கொண்டு வந்தாள். அவனுடைய வலுவான பிடியில் சிக்கி, வலியெடுக்க ஆரம்பித்திருந்த வலது கையை, இன்னொரு கையால் மெல்லமாய் மசாஜ் செய்து கொடுத்தாள்.

கணவனை ஏறிட்டு சற்றே இறுக்கம் தளர்ந்த குரலில் சொன்னாள்.

 "சொ..சொல்லுங்க.. என்ன விஷயம்..?"

 "நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கோவப்படாம கேக்கணும்.."

 "கேக்குறேன்.. சொல்லுங்க.." அசோக் இப்போது சற்று நிதானித்தான்.

நந்தினியின் முகத்தையே சில வினாடிகள் அமைதியாக பார்த்தவன், அப்புறம் ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தியவாறே ஆரம்பித்தான்.

 "அன்னைக்கு .. மொட்டை மாடில.. நான் ஏன் அப்படி பண்ணினேன்னு எனக்கே தெரியலை நந்தினி..!!"

 "அதான் தெள்ளத்தெளிவா அன்னைக்கு ஒரு காரணம் சொன்னீங்களே..?"

 "இல்ல.. அ..அது.. நான் ஒரு கப்ஃயூஷன்ல அப்படி சொல்லிட்டேன்..!!" 

"ஓ.."

 "ஆக்சுவலா.. ரெண்டு வாரமா.. அதையேதான் என் மனசுல போட்டு கொழப்பிட்டு இருக்கேன்..!!

உன்கிட்ட அதைப் பத்தி பேசணும்னு நெனச்சப்போலாம்.. நீ வீம்பு பண்ணிட்டு ஓடிட்ட..!!"

 "அதான் இப்போ கேக்குறேனே.. சொல்லுங்க..!!"

 "ம்ம்ம்.. நேத்து நைட்டு கார்ல வீட்டுக்கு வந்துட்டு இருக்குறப்போ.. உன்.." அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, பாக்கெட்டில் கிடந்த அவனுடைய செல்போன் 'விர்ர்ர்ர்... விர்ர்ர்ர்...' என்று பதறியது.

அவன் பேச்சை நிறுத்திவிட்டு பாக்கெட்டுக்குள் கைவிட்டு செல்போனை எடுத்துப் பார்த்தான்.

 'கற்பு காலிங்..!!' என்றது டிஸ்ப்ளே..!!

 "ஒரு நிமிஷம் நந்தினி.." என்று நந்தினியிடம் சொன்னவன், காலை பிக்கப் செய்து,

 "ஹாய் கற்பு.. குட்மார்னிங்..!!" என்றான் உற்சாகமாய்.

 "குட்மார்னிங் டா..!!" அடுத்த முனையில் கற்பகம் என்று தெரிந்ததுமே நந்தினியிடம் ஒரு வித எரிச்சல்.

'ப்ச்..' என்று சலிப்பாக சொன்னவாறு முகத்தை வேறுபக்கமாக திருப்பிக் கொண்டாள். அதைக் கவனியாத அசோக் செல்போனில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.

 "என்னாச்சு கற்பு.. காலங்காத்தால கால் பண்ணிருக்குற..?"

 "சொல்றேன்.. நீ இப்போ எங்க இருக்குற..? ஆபீஸுக்கு கெளம்பிட்டியா..??" "இன்னும் இல்ல.. ஏன்..?" "போற வழில என்னை கொஞ்சம் பிக்கப் பண்ணிக்க முடியுமா..?" கற்பகம் கெஞ்சலாக கேட்க,

 "ம்ஹூம்.. என்னால முடியாதுப்பா..!!" அசோக் குறும்பாக மறுத்தான்.

 "ஹேய்.. ப்ளீஸ்டா.. ரொம்ப லேட்டாகிப்போச்சு..!!"

 "ஏன்..?? என்னாச்சு..??" "ம்ம்.. இப்போத்தான் எந்திரிச்சேன்.. மூஞ்சில வெயில் அடிக்கிறது கூட தெரியாம இவ்வளவு நேரம் நல்லா தூங்கிருக்கேன்..!!"

 "ஹாஹா..!! அடிப்பாவி.. ஒரு கல்யாணம் ஆன குடும்பப்பொண்ணு பேசுற மாதிரியா பேசுற..??" அசோக் கற்பகத்திடம் சிரிப்பாக சொல்ல, நந்தினி இப்போது அசோக்கின் முகத்தை ஏறிட்டு வெறுப்பாக முறைத்தாள்.

அசோக் பேசியதை மட்டும் வைத்துக்கொண்டு, அடுத்த முனையில் கற்பகம் என்ன பேசியிருப்பாள் என்று இவளாகவே கற்பனை செய்துகொண்டாள்.

கற்பகத்தின் மீது ஏற்கனவே சந்தேகத்தில் இருக்கும் நந்தினியின் கற்பனை, எந்தமாதிரி இருந்திருக்கும் என்று நீங்களாகவே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

இவளுடைய கொதிப்பை அறியாத இருவரும், இயல்பாக தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

 "என்னடா பண்றது.?? என்னைக்கும் அவர்தான் எழுப்பி விடுவாரு.. இன்னைக்கு அவர் வேற இல்லையா.. நல்லா தூங்கிட்டேன்..!!"

 "ஓ.. உன் புருஷன் ஊர்ல இல்லையா..??" - நந்தினி இப்போது அசோக்கை எரித்துவிடுவது போல பார்த்தாள்.

 "இல்லடா.. வெளியூர் போயிருக்காரு..!!"

 "ம்ம்ம்.. ஓகே கற்பு.. நான் இப்போ இங்க இருந்து கெளம்பிடுவேன்..!!"

 "கொஞ்சம் பொறுமையாவே வாடா.. நான் இப்போதான் குளிக்கவே போறேன்..!!"

 "சரி சரி.. குளிச்சுட்டு ரெடியா இரு.. பிஃப்டீன் மினிட்ஸ்தான் உனக்கு டைம்..!!" அசோக் பேசிக்கொண்டிருக்க, நந்தினி இப்போது பொறுமை இழந்தாள்.

அவன் கற்பகத்திடம் பேசிய வார்த்தைகள் எல்லாம் நந்தினியின் சந்தேகத்துக்கு தூபம் போடுவதாகவே இருந்தன.

அவ்வளவு நேரம் அவனையே வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தவள், இப்போது 'ச்சை.. இது திருந்தாத கேஸு..!!' என்று மனதுக்குள்ளேயே அசோக்கை திட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

அசோக்கோ நந்தினி சென்றதை கவனியாது, மறுமுனையில் கற்பகம் பேசியதற்கு காது கொடுத்திருந்தான்.

 "ஹேய்.. கொஞ்சம் முன்னபின்ன ஆனாலும்.. பஸ் ஸ்டாப்லயே வெயிட் பண்ணுடா.. விட்டுட்டு போய் கழுத்தறுத்துடாத..!!"

 "ஹாஹா..!! ஓகே.. வெயிட் பண்ணுறேன்.. ஆனா ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சுடாத..!!"

 "இல்ல இல்ல.. சீக்கிரம் வந்துடுவேன்..!!"

 "சரி கற்பு.. வா.. வெயிட் பண்ணுறேன்..!!"

 "ரொம்ப தேங்க்ஸ்டா..!!"

 "இட்ஸ் ஓகே கற்பு.. நீ கெளம்பு.. பை..!!" காலை கட் செய்துவிட்டு திரும்பிய அசோக், நந்தினியை அங்கே காணாமல் ஒருகணம் திகைத்தான்.

அப்புறம் அந்த அறையை விட்டு வெளியே வந்தான். 'எங்கே போய் விட்டாள்..?' என்று மனதில் கேள்வியுடன், ஹால் கிச்சன் எல்லாம் சென்று தேடிப்பார்த்தான்.

நந்தினியை எங்கும் காணவில்லை. இப்போது அசோக்கிடம் ஒரு எரிச்சல் வந்து தொற்றிக் கொண்டது.

 'ச்சே.. என்ன இவள்..?? என்ன நினைத்திருக்கிறாள் இவள் மனதில்..?? இப்படி என்னை உதாசீனம் செய்கிறாளே..?? மனம் விட்டு பேச நினைப்பதை காது கொடுத்து கேட்க கூட மாட்டேன் என்றால் என்ன அர்த்தம்..?? இவளுடைய தங்கை இவளைப் பற்றி சொன்னது எல்லாம் உண்மைதானா..??

உள்ளத்தில் என்மீது காதலில் இருப்பவள் இப்படி எல்லாம் செய்வாளா..?? இல்லை இல்லை.. இவளுக்கு என் மீது காதலும் இல்லை.. ஒரு மண்ணும் இல்லை..!! நெஞ்சு நிறைய வெறுப்புத்தான் இருக்கிறது..!!

ச்சே..!!!'
அசோக் கடும் எரிச்சலுடன் ஆபீஸுக்கு கிளம்பி சென்றான். அவன் அவளை வீட்டுக்குள் தேடிக்கொண்டிருக்கிற நேரத்தில், நந்தினி பால்கனிக்கு சென்று, தனிமையில் நின்று, கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள் என்பது அவனுக்கு தெரியாது.

 அன்று மதியம் நந்தினி வழக்கம் போல அசோக்கிற்கு சாப்பாடு கொண்டு செல்ல ஆபீஸுக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். சமைத்த உணவை ஒரு ஹாட்பாக்ஸில் வைத்து மூடி, பிறகு அந்த ஹாட்பாக்ஸை ஒரு கூடையில் வைத்து எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள்.

ஹாலில் நின்றுகொண்டிருந்த ராமண்ணாவிடம், "ம்ம்.. கெளம்பலாம் ராமண்ணா.." என்றாள்.

 "இரும்மா.. ஐயாவும் வர்றேன்னு சொன்னாரு.." ராமண்ணா சொல்லவும் நந்தினி அங்கு கிடந்த சோபாக்களில் ஒன்றில் அமர்ந்து கொண்டாள்.

மஹாதேவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள். மஹாதேவன் வாரத்துக்கு இரண்டு நாட்கள்தான் ஆபீஸுக்கு செல்வார்.

பெரும்பாலும் காலையிலேயே சென்று விடுவார். மதியம் திரும்பி விடுவார். சில நேரங்களில்தான் இந்த மாதிரி மதியம் ஆபீஸுக்கு செல்வது. அவ்வாறு செல்கையில் நந்தினியுடன் சேர்ந்தே சென்று விடுவார்.

அசோக் சாப்பிட்டதும் நந்தினி காரில் திரும்பி விட, மஹாதேவன் இரவு அசோக்குடன் வீடு திரும்புவார். ஒரு இரண்டு நிமிடங்களிலேயே மஹாதேவன் வந்துவிட, மூவரும் காரில் கிளம்பினார்கள். ராமண்ணா காரை செலுத்திக் கொண்டிருந்தார்.

அவருக்கு அருகே மஹாதேவன் அமர்ந்திருந்தார். பின் சீட்டில் நந்தினி. கார் மிதமான வேகத்தில் அடையாறு நோக்கி சென்றுகொண்டிருக்க, மஹாதேவன் மெல்ல மருமகளிடம் பேச்சு கொடுத்தார்.

 "அம்மா, தங்கச்சிலாம் எப்படிம்மா இருக்காங்க..?"

 "ம்ம்.. நல்லாருக்காங்க மாமா.."

 "அம்மா செக்கப்புக்குலாம் ஒழுங்கா போறாங்களா..?" 

"போ..போறாங்க.."

 "ம்ஹ்ம்.. இங்க வந்து நம்ம கூடயே இருக்கலாம்.. கவனிச்சுக்க ஆளு இருக்கும்.. சொன்னா உங்க அம்மா கேக்க மாட்டேன்றாங்க.."

 "இல்ல மாமா.. அது அப்பா வாழ்ந்த வீடு.. அதை விட்டுட்டு வர அம்மாவுக்கு இஷ்டம் இல்ல..!!"

 "ம்ம்.. புரியுதும்மா.. அதுதான் நானும் ரொம்ப கட்டாயப் படுத்தலை..!! ம்ஹ்ம்.. அப்புறம்.. நம்ம அசோக் ஐயா என்ன சொல்றாரு..?" மஹாதேவனின் கேள்வி திடீரென வேறு பக்கமாக பாய, நந்தினி குழம்பினாள்.

 "எ..என்ன சொல்றார்னா..? பு..புரியலை மாமா.."

 "ஹாஹா.. அவனை மாதிரியே நீயும் நடிக்காதம்மா.. உங்களுக்குள்ள ஏதோ சண்டைனு எனக்கு புரியுது.. ஆனா எதுவுமே இல்லாத மாதிரி ரெண்டு பேரும் நல்லா நடிக்கிறீங்க..!! ஆனா நீங்க இப்படி இருக்குறதை பாத்து.. எங்களுக்குத்தான் தெனமும் ரொம்ப கவலையா இருக்கு..!!"

 "ஐயோ.. நீங்க கவலைப்படுற அளவுக்குலாம்.. எங்களுக்குள்ள ஒன்னும் பெரிய சண்டை இல்ல மாமா.. இது சும்மா.. சின்னதா ஒரு மனஸ்தாபம்..!!"

 "ம்ம்ம்.. புருஷன் பொண்டாட்டின்னா இந்த மாதிரி மனஸ்தாபம் வர்றது சகஜம்தான்..!! அது சின்னதோ பெருசோ.. அப்பப்போ அதை மனசு விட்டு பேசி தீத்துடனும்.. நீங்க ரெண்டு பேரும் இப்படி பேசாமலே இருந்தா.. அந்த விரிசல் பெருசாகிட்டேதான்மா போகும்..!! நான் சொல்றது புரியுதா..??"

 "ம்ம்.. புரியுது மாமா.." "அவனுக்கு கொஞ்சம் புடிவாதம் ஜாஸ்தி.. நீதான் அதை பேலன்ஸ் பண்ற மாதிரி நடந்துக்கனும்.. அவன்கிட்ட நீ பணிஞ்சு போகணும்னு அவசியம் இல்ல..

அதே நேரம் பிரச்னையை முத்த விடுறதும் ரொம்ப தப்பு..!!"

 "ம்ம்.."

 "எதை நெனச்சும் நீ கவலைப்பட வேணாம்மா.. என் சப்போர்ட் எப்போவும் உனக்குத்தான்..!! சரியா..??"

 "ம்ம்.. சரி மாமா.." அப்புறம் மஹாதேவன் ராமண்ணாவிடம் பேச ஆரம்பித்து விட்டார். நந்தினியோ மனதுக்குள் தன்னைத்தானே திட்டிக் கொண்டாள்.

தங்களுக்குள்ளான பிரச்னையால் சுற்றி இருப்பவர்களை கவலை கொள்ள செய்வது தவறு என்று புரிந்தது.

மஹாதேவன் சொல்வது மாதிரி பிரச்னையை முற்ற விடுவதும் தவறுதான். அசோக் மனம் விட்டு பேச முன்வரும்போதேல்லாம் அவனை காயப்படுத்தி அனுப்பியதை எண்ணி, அவளையே அவள் கடிந்து கொண்டாள்.

இன்று இரவு அவளாகவே சென்று அவனிடம் பேசி பிரச்சினை பெரிதாகாமல் தடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள். ஆபீஸை அடைந்தார்கள். காரை பார்க் செய்த ராமண்ணா காருக்குள்ளேயே அமர்ந்து கொள்ள, மஹாதேவனும் நந்தினியும் மட்டும் காரை விட்டு இறங்கி ஆபீஸுக்குள் நுழைந்தார்கள்.

அசோக் இருக்கும்போது கூட ஆபீஸில் அவ்வப்போது சிரிப்பொலியையும், வெட்டி அரட்டையையும் கேட்க இயலும். ஆனால் மஹாதேவன் வந்துவிட்டால் ஆபீஸே சைலன்ட் ஆகிவிடும்.

ஆபீஸ் வேலையை தவிர வேறெந்த வேலையை பார்க்கவும் யாரும் துணிய மாட்டார்கள். அன்றும் அப்படித்தான்.. அவரை கண்டதும் ஆபீஸே கப்சிப் ஆனது.. எழுந்து நின்று வணக்கம் சொன்னது..!!

 

குட் ஆஃப்டர்நூன் ஸார்.." எதிரே வந்த கற்பகமும் அவருக்கு வணக்கம் சொன்னாள்.

 "குட் ஆஃப்டர்நூன்..!! உங்க எம்.டி இருக்காராம்மா..??" 

"ஆங்.. இருக்காரு சார்.." முகம் முழுவதும் மலர்ச்சியாய் சொன்ன கற்பகத்தை, மஹாதேவன் ஒரு புன்னகையுடனே கடந்து செல்ல, அவருக்கு பின்னால் வந்த நந்தினி ஓரக்கண்ணால் முறைத்து பார்த்தவாறே கடந்து சென்றாள்.

கதவை உள்ளே தள்ளி, இருவரும் அசோக்கின் அறைக்குள் நுழைந்தார்கள். நுழைந்தவர்கள் உள்ளே கண்ட காட்சியில் உச்ச பட்ச அதிர்ச்சிக்கு உள்ளாகி, அப்படியே உறைந்து போய் நின்றார்கள்.



No comments:

Post a Comment