கார் பானட்டில் அசோக் சாய்ந்து படுத்திருந்தான். இடதுகால் மேல் படர்ந்திருந்த அவனது வலதுகால், அனிச்சையாக ஆடிக்கொண்டிருந்தது. அவனுடைய பார்வை, சற்று தூரத்தில் நெருக்க நெருக்கமாய் வளர்ந்திருந்த சவுக்கு மரங்களையும், அதன் பின்னணியில் தெரிந்த கடலலைகளிலும் நிலைத்திருந்து. கையில் இருந்த க்ளாஸில் உயர் ரக விஸ்கி..!! அவ்வப்போது அதை உறிஞ்சிக்கொள்வதும், பிறகு கடலை வெறிப்பதுமாக இருந்தான்..!!
அவனுடைய மனதும் அந்த கடலை போலவே அமைதியிழந்து தவித்தது. அன்று முழுதும் நடந்த நிகழ்வுகள், அவனது மனத்திரையில் திரும்ப திரும்ப படமாக ஓடிக்கொண்டிருந்தன. அன்று காலையில் நந்தினியை வளைத்து, தன்னோடு இழுத்து பிடித்து வைத்திருந்த தருணம், அவனுக்கு நினைவு வந்தது. அதை நினைக்கும்போதே அவனுடைய இதயத்தில் சில்லென ஒரு சுகம் பரவுவதை அவனால் உணர முடிந்தது.
காலையில் இருந்த அந்த மகிழ்ச்சி, மதியமே கலைந்து போனதை நினைக்கையில் வேதனையாக இருந்தது.
அந்த டெய்ஸி செய்த காரியத்தால் அவனுக்கு ஏற்பட்ட அவமானத்தை அவனால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அலுவலகத்தில் எல்லோரும் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ என்றொரு கவலை.
கற்பகம் உட்பட யாருமே தன்னை நம்பவில்லையே என்றொரு ஆதங்கம். இனி தன் தந்தையின் முகத்தில் தான் எப்படி விழிக்கப் போகிறேன் என்றொரு தவிப்பு. எல்லாவற்றிற்கும் மேலாக.. அவள்.. நந்தினி.. நெருங்க நினைக்கையில் இப்படி விலகிகும்படி ஆயிற்றே என்றொரு ஏக்கம்..!! விஸ்கியை கொஞ்சம் சிப்பிக் கொண்டான்.
தலை விண்விண்ணென்று தெறிக்க, கண்களை இறுக்கி மூடிக்கொண்டான். கார்க்கண்ணாடியில் முதுகை சாய்த்து படுத்துக்கொண்டு, கொஞ்ச நேரம் அப்படியே கிடந்தான். ஆல்கஹால் மட்டுமல்லாமல், பலவித குழப்ப எண்ணங்களும் இப்போது அவனது மூளையை ஆக்கிரமித்திருந்தன. 'ஏன் அப்படி செய்தாய்..? அத்தகைய அமில வார்த்தைகளை ஏன் அவள் மீது வீசினாய்..? அவள் எவ்வளவு துடித்துப் போயிருப்பாள்..?' 'அவள் செய்தது மட்டும் சரியா..? இரண்டு வாரங்களாக என்னை எப்படி உதாசீனம் செய்தாள்..?
நான் எவ்வளவு துடித்துப் போயிருப்பேன்..?' 'ஏன் உதாசீனம் செய்ய மாட்டாள்..? வேறொரு பெண் மீதிருந்த ஆசையை உன்னிடம் தீர்த்துக் கொண்டேன் என்றால் எந்த மனைவிக்குத்தான் கோவம் வராது..?' 'சரி அது போகட்டும்.. அவளிடம் எப்படி கெஞ்சினேன்..?
ஏன் என்னை அவள் நம்பவில்லை..? மேலும் மேலும் நெருப்பை கொட்டினால் நானுந்தான் என்ன செய்வேன்..?' 'அவளுந்தான் வேறென்ன செய்வாள்..?அவள் கண்ணெதிரே கண்ட காட்சி அத்தகையது அல்லவா..? அவளுடைய கோவத்தில் ஒளிந்து கிடப்பது உன் மீதான காதல் அல்லவா..?'
'ஹாஹா.. காதலாம்.. பொடலங்கா காதல்..? யாருக்கு வேண்டும்..? வலியை தருகிற இந்த காதல் எனக்கு வேண்டாம்..!! நான் இப்படியே இருந்து கொள்கிறேன்..!! யாரும் என்னை காதலிக்கவும் வேண்டாம்.. நானும் யாரையும் காதலிப்பதாக இல்லை..!!'
'காதல் வேண்டாம்.. காதல் வேண்டாம்..' என்று மனதுக்குள்ளேயே மந்திரம் போல சொல்லிக்கொண்டு கிடந்தான்..!! எவ்வளவு நேரம் அந்த மாதிரி கிடந்தானோ..?? அவ்வப்போது அவனது காது கிழித்து விரைந்து செல்லும் வாகனங்கள் கூட அவனிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை..!! நெடுநேரம் கழித்து விழிகளை மெல்ல திறந்தவன், சற்றே அதிர்ந்து போனான்..!!
அவனுக்கு எதிரே அந்த ஆள் நின்றிருந்தான்..!! பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துபவன் என்று, அவனை பார்த்ததுமே புரிந்து கொள்ள முடிந்தது..!! எழும்பும், தோலுமாய் தேகமும்.. அழுக்கும், கந்தலுமாய் உடையும்..!! நெடுநாளாய் எண்ணெய் காணாது சிக்குப்பிடித்துப் போன தலை..
நீண்டநாளாய் சவரம் செய்யாமல் நீளமாய் வளர்ந்துவிட்ட தாடி..!! கன்னங்கள் ஒடுங்கிப் போயிருந்தன.. கண்கள் குழிவிழுந்து கிடந்தன..!! அவனுடைய கையில் ஒரு தேங்காய் மூடி.. காலுக்கருகே நாய் மாதிரியே காட்சியளிக்கும் ஒரு மிருகம்..!!
அசோக் அந்த விஸ்கி பாட்டிலையும், அந்த ஆளையும் ஒரு இரண்டு முறை மாறி மாறி பார்த்தான். அப்புறம் போதையால் குழறிப்போன குரலில் அவனிடம் கேட்டான்.
"ஸ்..ஸ்காட்ச் விஸ்கி.. சாப்பிடுவீங்களா..??"
"ம்ம்ம்.. ம்ம்ம்.."
"மி..மிக்ஸிங்க்கு தண்ணிதான் இருக்கு.. ஓகேவா..?"
"தண்ணி வேணாம்.. அது மட்டும்..!!"
"சிக்கன்லாம் இல்ல.. சிப்ஸ்தான்..!!"
"சிப்ஸ் என் சிறுத்தைக்கும் புடிக்கும்..!!" அந்த ஆள் இளித்தவாறு சொல்ல, அசோக் இப்போது அவன் காலுக்கருகே படுத்திருந்த நாயை ஒருமுறை பார்த்தான். நின்றிருந்த அந்த ஆளுக்கு நாய் வேஷம் போட்டால் எப்படி இருப்பானோ அதே மாதிரி இருந்தது. சோமாலியாவில் இருந்து நடந்தே இந்தியாவிற்கு வந்து சேர்ந்த நாய் மாதிரி இருந்தது.
'இதுக்கு பேரு சிறுத்தையா..??' என்று எண்ணிக்கொண்டான்.
விஸ்கி பாட்டில் திறந்து அந்த ஆள் கையிலிருந்த தேங்காய் மூடியில் ஊற்றினான். அவன் ஊற்றி முடித்ததுமே, அந்த ஆள் அதை அப்படியே தன் தொண்டைக்குள் ஊற்றிக் கொண்டான்.
குடித்து முடித்ததும் 'க்க்க்க்காகாஹாஹாஹ்ஹ்..' என்று கண்கள் மூடி கனைத்துக் கொண்டான்.
"எப்புடி..??" அசோக் கேட்க,
"பட்டை சரக்கு மாதிரி சுர்ருன்னு இல்ல..!! இருந்தாலும் பரவால.. தாகத்துக்கு தேவல..!!" அந்த ஆள் எகத்தாளமாகவே பதில் சொன்னான்.
அசோக்கும் இப்போது தன் க்ளாஸில் மிச்சமிருந்த விஸ்கியை மொத்தமாய் கவிழ்த்துக் கொண்டான். கையில் கொஞ்சம் சிப்ஸ் அள்ளி அந்த ஆளின் கையில் கொடுத்துவிட்டு, தானும் ஒரு சிப்ஸை கடித்தான். அந்த ஆள் பாதி சிப்ஸை தின்றுவிட்டு, மீதி சிப்ஸை நாய்க்கு கொடுத்தான். அசோக் மீண்டும் கொஞ்சம் விஸ்கியால் தனது க்ளாஸை நிரப்பிக்கொண்டு, எதிரே நின்றவனின் தேங்காய் மூடியிலும் ஊற்றினான். இருவரும் இப்போது சற்று நிதானமாக விஸ்கியை பருகினார்கள்.
அசோக்தான் மெல்லிய குரலில் ஆரம்பித்தான். "பிச்சை எடுக்குறீங்களோ..??"
"ம்ம்.."
"எத்தனை வருஷமா எடுக்குறீங்க..??" அசோக் கேட்க, அந்த ஆள் தலையை பரபரவென சொறிந்தான். ரொம்ப வருஷமாக எடுக்கிறான் போல என்று எண்ணிக்கொண்ட அசோக், அடுத்த கேள்வியை கேட்டான்.
"கல்யாணம் ஆயிடுச்சா..??"
"ம்ம்ம்.." என்ற அந்த ஆள் ஒற்றை விரலை காட்டினான்.
"அப்படின்னா..??" அசோக் புரியாமல் கேட்டான்.
"ஒரே ஒரு தடவை ஆச்சு..!!"
"என்ன நக்கலா.. அப்போ எங்களுக்குலாம் எத்தனை தடவை ஆயிருக்கு..??" அசோக் முறைக்க,
"ஹிஹி.." அந்த ஆள் இளித்தான்.
"பொண்டாட்டி கூட இல்லையா இப்போ..?"
"அவ போயி பல வருஷம் ஆச்சு..!!"
"ம்ம்.. புள்ளைங்க..??"
"எல்லாம் தறுதலைங்க..!!" அந்த ஆள் சலிப்பாக சொல்லிக்கொண்டிருக்கும்போதுதான், அசோக்குடைய செல்போன் சிணுங்கியது.
எடுத்து யார் அழைப்பது என்று பார்த்தான். நந்தினி என்று தெரிந்ததும், அவனுக்கு சற்றே ஆச்சரியமாக இருந்தது. நெற்றியை கீறிக்கொண்டான். 'இவ எதுக்கு இப்போ கால் பண்ணுறா..? வாங்கி கட்டிக்கிட்டது பத்தலையா..?' என்று நினைத்துக் கொண்டான். அப்புறம் அந்த கடுப்புடனே காலை பிக்கப் செய்து, "என்ன..??" என்று எரிந்து விழுந்தான்.
"எங்க இருக்குறீங்க..?" மறுமுனையில் நந்தினி இயல்பான குரலில் கேட்டாள்.
"எதுக்கு கேக்குற..?"
"இல்ல.. ஆபீசுக்கு ஃபோன் பண்ணினேன்.. நீங்க அப்போவே கெளம்பிட்டதா சொன்னாங்க.. அதான் எங்க இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாம்னு..?"
"கெ..கெஸ்ட் ஹவுஸ்ல இருக்குறேன்..!!" பொய் சொன்னான்.
"கெஸ்ட் ஹவுஸ்லயா..???"
"ஆமாம்.."
"அங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க இந்த நேரத்துல..?" நந்தினி துருவி துருவி கேட்க அசோக் கடுப்பானான்.
"ஆங்.. ஒரு ஐட்டத்தோட ஜல்சா பண்ணிட்டு இருக்கேன்.. போதுமா..??" என்று அசோக் எரிச்சலும், கேலியுமாய் சொல்ல..
நந்தினி சற்றும் சளைக்காமல்.. "சரி சரி.. மேட்டரை முடிச்சுட்டு.. சீக்கிரம் வீட்டுக்கு வந்து சேருங்க..!!" என்றாள் கூலாக.
"என்னது..???" அசோக் அவளுடைய பதிலில் ஆடிப்போனான்.
"ப்ச்.. அந்த ஐட்டத்தை மேட்டரை முடிச்சுட்டு சீக்கிரம் வீட்டுக்கு வாங்கப்பா.. இன்னைக்கு உங்களுக்கு ரொம்ப பிடிச்ச தக்காளி மிளகு ரசமும், வஞ்சிர மீன் ஃப்ரையும் பண்ணப்போறேன்..!! வெளில சாப்ட்றாதீங்க.. அதை சொல்லத்தான் கால் பண்ணினேன்.. சரியா..??" சொல்லிவிட்டு நந்தினி காலை கட் செய்தாள்.
கட் செய்யும் முன் அவள் 'களுக்' என்று ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்த மாதிரி அசோக்கிற்கு தோன்றியது. அவனுக்கு கொஞ்ச நேரம் எதுவும் புரியவில்லை. தனது செல்போனையே குழப்பமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
'என்னாயிற்று இவளுக்கு..? கன்னாபின்னாவென்று திட்டு வாங்கியதில், மண்டையில் எதுவும் கழண்டு கொண்டதா..?' என்று தலையை சொறிந்து கொண்டான். அவன் அவ்வாறு தலையை சொறிந்து கொண்டிருந்த நேரத்தில் நந்தினி கெஸ்ட் ஹவுசில்தான் இருந்தால் என்பதும்.. இவன் பொய் சொல்கிறான் என்பதை அவள் அறிந்து கொண்டாள் என்பதும்.. அவன் அறியாத உண்மை..!!
"யாரு..??"அந்தப் பிச்சைக்காரன் கேட்டான்.
"ம்ம்..?? என் பொண்டாட்டி..!!"
"பொண்டாட்டியா..??"
"அட ஆமாம்யா..!!"
"பொண்டாட்டிட்ட போய் இப்படிலாம் பேசுறியே..?? ரொம்ப தப்பு.. கன்னத்துல போட்டுக்கோ.. சம்சாரமும் சாமியும் ஒன்னு..!!" அந்த ஆள் பயபக்தியுடன் சொல்ல,
"ம்ம்ம்.. நீயுமா..??" அசோக் சலிப்பாக கேட்டான்.
"ஏன்..??" "இல்ல.. இந்த தத்துவத்தை எனக்கு பலபேர் பலவிதமா சொல்லிட்டாங்க..!!"
"நல்லதுதான சொல்லிருக்காங்க..?? பொண்டாட்டியை மதிச்சு நடந்துக்கப்பா.. உன் வாழ்க்கை நல்லா இருக்கும்..!!"
"ரொம்ப பேசுறீங்க ஸார் நீங்க.. உங்க பேர் என்ன.. புருஷோத்தமனா..??"
"இல்ல.. புண்ணியகோடி..!!"
"ம்ம்ம்.. பேர்ல கோடி இருந்து என்ன புண்ணியம்.. புண்ணியகோடி ஸார்..?? இப்படி செரட்டைல ஸ்காட்ச் குடிக்கிற நெலமைக்கு ஆயிட்டீங்களே..?? இதுல பொண்டாட்டி பத்தி தத்துவம் வேற..??"
"அட போப்பா.. உனக்கு நான் சொல்றது புரியலை.. நீலாம் பட்டாத்தான் திருந்துவ.. நான் கெளம்பறேன்.." என்று அசோக்கிடம் சலிப்பாக சொன்ன அந்த ஆள், காலுக்கடியில் படுத்திருந்த நாயிடம் திரும்பி, "வாடா சிறுத்தைக்குட்டி.. நாம போலாம்.." என்றான். நாய் எழுந்து கொண்டது. குடி போதையுடன் அந்த ஆள் கால்கள் தள்ளாடியபடியே நடக்க, அவனை அமைதியாக பின்தொடர்ந்தது. இருவரும் செல்வதை அசோக் திரும்பி பார்த்துக் கொண்டிருந்தான். அந்த ஆள் நடந்து செல்கையிலேயே, கைகள் இரண்டையும் ஆட்டிக்கொண்டு உச்சஸ்தாயில் பாடிக்கொண்டே சென்றான்.
"பொம்பளையை மதிக்க வேணும் முறைப்படி..!! நீ போகாத இடம் போனா செருப்படி..!!"
'யோவ்.. கொழுப்புயா உனக்கு..!!' என்று அசோக் அந்த ஆளை மனதுக்குள் திட்டினான். அதன்பிறகும் அங்கேயே கார் பானட்டில் நீண்ட நேரம் படுத்துக் கிடந்தான். மீண்டும் அன்று நடந்த சம்பவங்களை எல்லாம் மனதில் போட்டுக் குழப்பிக்கொண்டே, பாட்டிலில் மிச்சம் இருந்த விஸ்கியை கொஞ்சம் கொஞ்சமாய் காலி செய்தான்.
நேரம் சென்றது. நன்றாக இருட்டி விட்டது. அசோக் செல்போன் அமுக்கி மணி பார்த்தான். ஏழரை ஆகியிருந்தது. வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தது. உடனே அவன் மனதில் இப்போது புதிதாக ஒரு அழுத்தம்..!!
'வீட்டில் இருப்பவர்களுக்கு எல்லாம் இப்போது விஷயம் தெரிந்திருக்கும்.. என் மீது தவறு இல்லை என்று யாருமே நம்பப் போவது இல்லை.. எல்லோரும் என்னை ஒரு கேவலமான பார்வை பார்க்க போகிறார்கள்.. நான் அந்த பார்வையை எப்படி தாங்கிக்கொள்ள போகிறேன்..??' கவலை கொண்ட அசோக்கிற்கு வேறு வழியும் தெரியவில்லை. வீட்டுக்கு சென்றுதான் ஆக வேண்டும். 'நன்றாக மூக்கு முட்ட குடித்தாயிற்று.. கண்கள் வேறு சுழல ஆரம்பித்து விட்டன..
இப்படியே சென்று படுத்துக் கொள்ள வேண்டியதுதான்..' என்று முடிவு செய்தான். எழுந்து கொண்டான். காருக்குள் நுழைந்து, இன்ஜினை ஸ்டார்ட் செய்தான். அசோக் வீட்டை சென்றடைந்த போது மணி எட்டை தாண்டியிருந்தது.
வீட்டில் அவனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. காரை நிறுத்திவிட்டு கீழிறங்கியதுமே, ராமண்ணா எதிர்ப்பட்டார். அவரை பார்த்ததும் அசோக் தலைகுனிய, அவரோ வெகு இயல்பாக.. "நீ உள்ள போ தம்பி.. பேகை நான் எடுத்துட்டு வர்றேன்..!!" என்று பின்பக்க கதவை திறக்க சென்றார்.
அசோக் சில வினாடிகள் அங்கேயே நின்று அவரையே திகைப்பாக பார்த்தான். அப்புறமே வீட்டுக்குள் நுழைந்தான். அசோக் காரில் வந்து இறங்கியதுமே கௌரம்மா கவனித்திருப்பாள் போலிருக்கிறது. அவன் வீட்டுக்குள் நுழையும்போதே கையில் ஜூஸ் தம்ளரோடு வந்தாள்.
"டயர்டா வந்திருப்ப.. மொதல்ல இந்த ஜூஸை குடி.. கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடலாம்..!!" என்ற கௌரம்மா, அசோக் தயங்க தயங்க அவன் கையில் அந்த தம்ளரை திணித்தாள். இயல்பாக நடந்து சென்று திரும்பவும் கிச்சனுக்குள் புகுந்து கொண்டாள். அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை. அமைதியாக சோபாவில் அமர்ந்து, திருதிருவென விழித்தவாறே ஜூஸை குடித்தான்.
அவன் குடித்துக் கொண்டிருக்கையிலேயே மஹாதேவன் ஹாலுக்குள் நுழைந்தார். அவரை பார்த்து அசோக் மிரண்டு போய் எழ எத்தனிக்க, அவரோ புன்னகையுடன்.. "வந்துட்டியாப்பா.. அந்த மணலி ப்ராஜக்ட் கொட்டேஷன் வெரிஃபை பண்ணலாம்னுதான்.. மதியம் ஆபீஸுக்கு வந்தேன்.. அப்புறம் அங்க நடந்த பிரச்னையால.. அதை பாக்க முடியாம போயிடுச்சு..!! லேப்டாப்ல அந்த டீட்டெயில்ஸ் இருக்கா..?" என்று கேட்க,
"ஆங்.. இ..இருக்கு டாட்..!!" என்று அசோக் திணறலாக சொன்னான்.
"சரி விடு.. நான் பாத்துக்குறேன்..!!" சொன்ன மஹாதேவன், நடந்து வந்து அவனுக்கு அருகே சோபாவில் அமர்ந்துகொண்டார்.
சற்று முன் ராமண்ணா வந்து வைத்து விட்டு சென்ற லேப்டாப்பை எடுத்து ஆன் செய்தார். அசோக் ஓரக்கண்ணால் அவரை பார்த்தான். அவர் முகத்தில் எந்த சலனமோ, குழப்பமோ இல்லாமல் இருக்க, இவன் கிடந்து குழம்பினான்.
'என்ன ஆயிற்று எல்லாருக்கும்..?? யாருக்கும் என் மீது வெறுப்பு இல்லையா..?? நான் ஒன்று நினைத்து வந்தால்.. இங்கு வேறெதுவோ நடக்கிறதே..??' ஜூஸை அவசரமாக குடித்து முடித்து விட்டு எழுந்தான்.
மெல்ல நடந்து அவர்கள் அறைக்கு சென்றான். உள்ளே நந்தினி கட்டிலில் அமர்ந்திருந்தாள். சலவை செய்து உலர்த்தப்பட்டிருந்த ஆடைகள் எல்லாம் மெத்தையில் பரவிக்கிடக்க, அதை அழகாக மடித்து வைத்துக் கொண்டிருந்தாள்.
இவன் உள்ளே நுழைந்ததும் ஒருகணம் நிமிர்ந்து பார்த்தாள். அப்புறம் மீண்டும் துணி மடிக்கும் வேலையில் கவனத்தை செலுத்திக்கொண்டே, கேஷுவலான குரலில் கேட்டாள்.
"என்னப்பா.. இன்னைக்கு ரொம்ப சீக்கிரமே வந்துட்டீங்க..??"
"ஏன்.. வரக் கூடாதா..??" அசோக்கின் குரலில் ஒருவித எரிச்சல்.
"இல்ல.. கெஸ்ட் ஹவுஸ் பக்கம்லாம் போனா.. வர்றதுக்கு பன்னெண்டு மணி ஆயிடுமே.. இன்னைக்கு எட்டு மணிக்குலாம் வந்து நிக்குறீங்களேன்னு கேட்டேன்..?? வேஸ்டா அது..??"
"எது..??"
"அதான்.. இன்னைக்கு வந்த ஐட்டம்..!!"
"அடச்சை.. ஒரு பொண்டாட்டி புருஷன்ட்ட பேசுற மாதிரியா பேசுற..??"
"பார்டா.. இவர் மட்டும் பொண்டாட்டிக்கிட்ட 'ஒரு ஐட்டத்தோட ஜல்சா பண்ணிட்டு இருக்கேன்'னு சொல்வாராம்.. நான் இப்படி பேசக் கூடாதுக்கும்..??"
"ஏய்.. என்ன ஆச்சு உங்க எல்லாருக்கும் இப்போ..??" அசோக் இப்போது பொறுக்க முடியாதவனாய் கேட்டான்.
"என்ன ஆச்சு.. ஒன்னும் ஆகலையே..??" நந்தினியோ கிண்டலாக சொன்னாள்.
"இல்ல.. என்னமோ நடந்திருக்கு..!!"
"அதான் ஒன்னுல்லன்னு சொல்றேன்ல..?"
"அப்புறம் ஏன்.. எங்கிட்ட எல்லாம் இப்படி பேசுறீங்க..??"
"எப்படி பேசுறோம்..??"
"ந..நல்லா பே..பேசுறீங்க.." சொல்லும்போதே ஏதோ உளறுகிறோமோ என்று அசோக்கிற்கு ஒரு சந்தேகம்.
நந்தினி பிடித்துக் கொண்டாள். "ஐயா ராசா.. உங்ககிட்ட நல்லா பேசுறது ஒரு குத்தமா..??"
"ப்ச்.. அதுக்கில்ல.. ஆபீஸ்ல நடந்த அந்த மேட்டர்.. யாருக்கும் என் மேல கோவம் இல்லையா..??"
"அதான் உங்க மேல எந்த தப்பும் இல்லைன்னு சொன்னீங்கள்ல..?? அப்புறம் என்ன..??"
"இல்ல.. நான் அப்போ சொன்னதைத்தான் நீங்க நம்பலையே..?? அதுக்கப்புறம் என்னமோ நடந்திருக்கு.. அதான் எல்லாம் இப்படி பிஹேவ் பண்றீங்க..!! என்னாச்சு..?? என்ன வச்சு ஏதாவது காமடி கீமடி பண்றீங்களா..??"
"ச்சேச்சே.. அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க..!!"
"அப்போ.. என்ன நடந்ததுன்னு சொல்லு..!!"
"கண்டிப்பா தெரிஞ்சுக்கனுமா..??"
"ஆமாம்..!!" நந்தினி இப்போது சற்று நிதானித்தாள்.
ஒரு சில வினாடிகள் அசோக்கின் கண்களையே கூர்மையாக பார்த்தாள். அப்புறம் அடுக்கி முடித்த துணிகளை எல்லாம் கைகளில் அள்ளிக்கொண்டு கட்டிலை விட்டு எழுந்தாள். கேஷுவலாக சொன்னாள்.
"எல்லா உண்மையும் அவங்ககிட்ட சொல்லிட்டேன்..!!"
"எல்லா உண்மையும்னா..??"
"அதான்.. நம்ம காலேஜ் மேட்டர்.. நீங்க போட்ட அக்ரீமன்ட் மேட்டர்.. எல்லாம்..!!" நந்தினி சொல்ல, அசோக்குக்கு சுர்ரென்று கோவம் வந்தது.
"ஏய்.. உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்காடி..?? எதுக்கு அதெல்லாம் போய் அவங்ககிட்ட சொன்ன..??"
"பின்ன என்னங்க..?? ஆளாளுக்கு என் புருஷனை போட்டு திட்டிட்டு இருந்தா..?? எனக்கு கோவம் வந்துடுச்சு.. அதான் உண்மையை சொல்லிட்டேன்..!! அப்புறந்தான் எல்லாம் இப்போ சும்மா இருக்குறாங்க..!!" நந்தினி கூலாக சொல்ல, அசோக் பற்களை கடித்தான்.
"உன்னை..????? அதெல்லாம் அவங்கட்ட சொல்லக் கூடாதுன்னு உன்கிட்ட சொல்லிருக்கனா இல்லையா..??" அசோக் கோவமாக கேட்க,
"எப்போ சொன்னீங்க..??" நந்தினியோ அப்பாவி மாதிரி திருப்பி கேட்டாள்.
"அதான்டி.. கல்யாணத்துக்கு முன்னாடி கண்டிஷன் போட்டப்போ..!!"
"அப்டிலாமா சொன்னீங்க..?? எனக்கு சுத்தமா ஞாபகமே இல்ல.. மறந்து போச்சு..!!" கேஷுவலாக சொல்லிவிட்டு நந்தினி அந்த அறையை விட்டு வெளியேற,
அசோக் கடுப்புடன் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். 'கொழுப்பை பாரு இவளுக்கு..' என்று அவளுடைய பின்புறத்தையே வெறித்துக் கொண்டிருந்தான்.
No comments:
Post a Comment