Thursday, October 30, 2014

ஆண்மை தவறேல் - பாகம் 31


அதன் பிறகு ஐந்து நிமிடங்கள் கழித்து.. அசோக் தனது தலையை சற்றே கவிழ்த்து, கைகள் இரண்டாலும் அவனுடைய கன்னங்கள் இரண்டையும் தாங்கிப் பிடித்தவாறு அமர்ந்திருந்தான். அவனது கண்கள் இரண்டும் எதையோ கூர்மையாக வெறித்துக்கொண்டிருந்தன. அவனுக்கு முன்பாக அவனது லேப்டாப் திறந்து வைக்கப் பட்டிருந்தது. லேப்டாப் திரையில், நந்தினி தனது வெண்பற்கள் தெரிய வெகுளித்தனமாய் சிரித்துக் கொண்டிருந்தாள்.

அசோக்கின் உள்ளமெல்லாம் இப்போது பலவித உணர்ச்சிகள் மொத்தமாய் சேர்ந்து அழுத்திக் கொண்டிருக்க, எந்தக் கவலையும் இல்லாமல் சிரித்துக் கொண்டிருக்கும் மனைவியையே, 'என்ன செய்வது இவளை..??' என்பது போல பார்த்துக் கொண்டிருந்தான்.

 கண்கள் கணினியில் நிலைத்திருந்தாலும், அவனது மூளை பின்னணியில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. நந்தினியின் அறிமுகம் கிட்டியதில் இருந்து.. இன்று வரை நடந்து முடிந்த சம்பவங்கள் எல்லாம்.. அவன் மனக்கண்ணில் வந்து போயின. யோசிக்க யோசிக்க.. அவனுக்கு நிறைய விஷயங்கள் புரிபட ஆரம்பித்தன..!! இந்தனை நாளாய் நந்தினி மீது தனக்கிருந்த உணர்வு, எந்த மாதிரியானது என்பது இப்போது அவனுக்கு தெளிவாக புரிந்து போனது.

அவளை மனதில் ஏற்றிய பிறகு இன்னொருத்தியை தொட கூசுகிறது என்றால்.. இது காதலை தவிர வேறென்ன..?? "நான் கெளம்புறேன் அசோக்.." சப்தம் கேட்டு அசோக் நிமிர்ந்து பார்த்தான். தோளில் பேகுடன்.. வீட்டுக்கு வருகையில் அணிந்திருந்த அதே உடையுடன்.. மாலினி நின்று கொண்டிருந்தாள். அவளுடைய முகத்தில் எந்த சலனமும் இருக்கவில்லை. அவளுடைய பார்வை லேப்டாப் திரையில் பதிந்திருந்தது. அசோக்கும் அவளை சில வினாடிகள் அமைதியாக பார்த்தான். அப்புறம் அருகில் இருந்த லேப்டாப் பேகின் பக்கவாட்டு ஜிப்பை திறந்து, ஏற்கனவே அவள் பெயருக்கு எழுதி வைத்திருந்த செக்கை எடுத்து அவளிடம் நீட்டினான்

. "இல்லை அசோக்.. வேணாம்..!!" மாலினி மறுக்க, அசோக் இப்போது திகைப்பாக அவளை ஏறிட்டான். "ஏன் மாலினி.. என்னாச்சு..??" அசோக் அவ்வாறு குழப்பமாக கேட்க, மாலினி இப்போது மெலிதான புன்னகையுடன் சொன்னாள். "நான் உடம்பை வித்து பொழைக்கிறவதான் அசோக்.. ஆனா.. உழைக்காத காசு உடம்புல ஒட்டாதுன்னு நெனைக்கிறவ..!!"
"ஹேய்.. கமான்..!! இட்ஸ் நாட் யுவர் ஃபால்ட்.. தப்பு என் மேலதான்..!!

மனசுக்குள்ள இன்னொருத்தி உக்காந்து குடைஞ்சுட்டு இருக்கான்னு தெரிஞ்சும்.. வீம்புக்கு உன்னை கூட்டிட்டு வந்தது.. என் தப்பு..!! அதுக்கு நீ என்ன பண்ணுவ..?? கமான்.. வாங்கிக்கோ..!!" அசோக் சோபாவில் இருந்து எழுந்து, அந்த செக்கை அவளது கையில் திணிக்க முயன்றான். மாலினி அதை வாங்க மறுத்தாள்.

 "ப்ளீஸ் அசோக்.. புரிஞ்சுக்கோங்க..!!

நான் கஸ்டமர்ட்ட கை நீட்டுறப்போ.. பணத்தை பாக்க மாட்டேன்.. அவங்க முகத்தைத்தான் பார்ப்பேன்..!! அந்த முகத்துல திருப்தி இல்லைன்னா.. அந்த பணத்தை வாங்கிக்க எனக்கு கூசும்..!! உங்க முகத்துல திருப்தியும் இல்ல.. நிம்மதியும் இல்ல.. இந்தப் பணத்தை வாங்கிக்க எனக்கு மனசும் இல்ல..!!"

 "அதுக்கு இல்ல மாலினி.. நீ வேற ஒரு கமிட்மன்ட்டுல இருந்த.. நான் அழைச்சுட்டு வரலைன்னா.. உனக்கு அந்த வருமானமாவது வந்திருக்கும்..!! அந்த நஷ்டத்துக்கு நாந்தான பொறுப்பு ஏத்துக்கணும்..??" "இதுல என்ன இருக்கு..?? உங்க மூலமா நான் எவ்வளவு லாபம் சம்பாதிச்சிருப்பேன்.. இந்த சின்ன நஷ்டம் என்ன பண்ணப் போகுது..?? காலேஜுக்கு ரெண்டு நாள் லீவ் போட்டா.. இந்த பணத்தை எடுத்துடுவேன்.. நீங்க அதெல்லாம் நெனச்சு கவலைப் படாதீங்க..!!"

 "ப்ளீஸ் மாலினி.. வாங்கிக்கோ..!!" "ப்ளீஸ் அசோக்.. என்னை கம்பெல் பண்ணாதீங்க..!!" மாலினி நிஜமாகவே கெஞ்சலாக சொல்ல, அசோக் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தான். மாலினியின் உறுதி அவளது கண்களில் தெளிவாக தெரிந்தது. சில வினாடிகள் அவளுடைய முகத்தையே இயலாமையுடன் பார்த்தவன், அப்புறம் தலையை குனிந்து கொண்டு, "ஓகே மாலினி.. தேங்க்ஸ்..!!" என்றான் அமைதியான குரலில்.

 "ஓகே அசோக்.. அப்போ நான் கெளம்புறேன்.." "ட்ராப் பண்ணவா..??" "இல்ல.. நான் போய்க்கிறேன்.. நீங்க ரெஸ்ட் எடுங்க..!!" சொன்ன மாலினி வாசலை நோக்கி நடந்தாள். ஒரு நான்கைந்து எட்டுகள்தான் எடுத்து வைத்திருப்பாள். உடனே நின்றாள். திரும்பி அசோக்கை நோக்கி நடந்து வந்தாள். ஆஷ்ட்ரேக்கு அருகே படுத்திருந்த அசோக்கின் செல்போனை குனிந்து எடுத்தாள். அசோக் எதுவும் புரியாமல் விழிக்க, மாலினி செல்போனின் பட்டன்களை படபடவென அழுத்தி ஏதோ செய்தாள்.

மீண்டும் செல்போனை அதனிடத்தில் வைத்தாள். "எ..என்ன பண்ணுன மாலினி..??" அசோக் குழப்பமாய் கேட்க, மாலினி நிமிர்ந்து புன்னகைத்தாள். "என்னோட காண்டாக்ட் நம்பர் டெலீட் பண்ணினேன்..!! நான் மட்டும் இல்ல.. என்னை மாதிரி எந்தப் பொண்ணும்.. இனிமே உங்களுக்கு தேவைப்பட மாட்டா..!!" புன்னகையுடன் சொல்லிவிட்டு அசோக்கின் பதிலை கூட எதிர்பாராமல், மாலினி விடுவிடுவென நடந்தாள். கதவு திறந்து வெளியேறினாள்.

கண்ணில் இருந்து அவள் மறையும்வரை, அசோக் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அன்று இரவு அசோக் வெகுநேரம் மது அருந்தினான். நந்தினியின் புகைப்படத்தை பார்ப்பதும், அவளை பற்றிய ஏதோ ஒரு நினைவை மனதில் அசை போட்டுக் கொள்வதும், ஆல்கஹாலை தொண்டைக்குள் ஊற்றுவதுமாய் இருந்தான். நந்தினி மீதான காதலை அவன் இப்போது உணர்ந்திருந்தாலும், அவள் மீது கோவமும் அவனுக்கு இருந்தது. அந்த டெய்ஸி விவகாரத்தில் அவள் தன்னை நம்பவில்லை எனும்போது ஆரம்பித்த கோவம் அது.

பின்பு அவள் இறங்கி வந்தபோது, அசோக்கின் கோவமும் குறைய ஆரம்பித்திருந்தது. ஆனால்.. நாயரை தனக்கெதிராக திருப்பியிருக்கிறாள் என்பதை நினைக்கையில், அவள் மீது ஒரு எரிச்சலே எழுந்தது. ஒருகணம் தன் மனைவியின் முகத்தை ஆசையாக பார்த்தவன், அடுத்த கணமே முறைத்தான். இந்த மாதிரி இருவித மனநிலையுடனே, அசோக் நள்ளிரவு தாண்டியும் குடித்துக் கொண்டிருந்தான். பின்னர் தலையும், விழிகளும் தானாக சுழல.. சோபாவிலேயே சரிந்தான். உறங்கிப் போனான். மூளைக்குள் பலவித குழப்பப் படங்கள் ஓட, ஒருவித அவஸ்தையுடனே அவனது தூக்கம் நீடித்தது. காலையில் எழுந்தபோது அவனுடைய கண்கள் எரிச்சல் கொடுத்தன. உடல் சோர்ந்து போயிருந்ததை உணர முடிந்தது.

முகத்தில் சுள்ளென்று அடித்த காலை வெயில், நீண்ட நேரம் தூங்கிவிட்டாய் என்றது. மணி பார்த்தான். ஒன்பதை தாண்டியிருந்தது. 'ப்ச்..' என்று சலிப்பை உதிர்த்தான். 'ஆபீஸுக்கு செல்ல வேண்டும்.. தாமதமாகிவிட்டது..!!' அசோக்கை உடனடியாய் ஒரு சுறுசுறுப்பு வந்து தொற்றிக் கொண்டது. பாத்ரூம் சென்று அவசர அவசரமாய் குளித்தான். வெளியே வந்தான். வார்ட்ரோப் திறந்து சலவை செய்து வைக்கப்பட்டிருந்த ஆடைகளை வெளியே எடுத்தான். பேன்ட் அணிந்து கொண்டான். உடலுக்கு ஸ்ப்ரே அடித்துக்கொண்டான். பனியனை தலை வழியாக மாட்டிக் கொள்ளும்போதுதான், எதைச்சையாக வாசல் பக்கம் பார்வையை வீசினான். வீசியவன் லேசாக அதிர்ந்தான்




வாசலில் நந்தினி நின்றிருந்தாள். கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, சுவற்றில் ஒருபக்கமாய் சாய்ந்தவாறு நின்றிருந்தாள். அவளுடைய உதட்டில் ஒருவித கேலிப்புன்னகை வழிந்தது. கண்கள் அசோக்கின் உடலை மேய்ந்து கொண்டிருந்தன. 'இவள் எப்போது வந்தாள்..?? எப்போதிருந்து இவ்வாறு தன்னை நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறாள்..??' அசோக் லேசாக துணுக்குற்றான். அப்புறம் உடனடியாய் சுதாரித்துக் கொண்டு, வாசலில் நின்றிருந்தவளை கண்டு கொள்ளாமல், மேல்சட்டையை எடுத்து அணிந்து கொள்ள ஆரம்பித்தான். இப்போது நந்தினி சற்றே கடுகடுப்புடன் ஆரம்பித்தாள்.

 "மொபைலை ஏன் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சீங்க..??" "பேட்டரி சார்ஜ் போய்டுச்சு..!!" அசோக் விட்டேத்தியாக சொல்ல, நந்தினி மேலும் சில வினாடிகள் அவனையே முறைத்தாள். அப்புறம் மெல்ல நகர்ந்து சென்று, கட்டிலுக்கு அருகே டீப்பாயில் இருந்த அவனது செல்போனை கையில் எடுத்தாள். உயிர்ப்பித்தாள். பேட்டரி இண்டிகேட்டர் பச்சை நிறத்துடன் வளமாக காட்சியளித்தது. உடனே மீண்டும் கணவனை ஏறிட்டு உஷ்ணமாக பார்த்தாள். "பொய்..!!" நந்தினி சீற, "சரி.. பொய்தான் சொன்னேன்.. அதுக்கு என்ன இப்போ..??" அசோக்கும் பதிலுக்கு சீறினான்.

 "எங்க இருக்கீங்கன்னு ஒரு ஃபோனாவது பண்ணி சொல்லிருக்கலாம்ல..?? நைட்டு பூரா எத்தனை தடவை உங்க நம்பருக்கு கால் பண்ணிருப்பேன் தெரியுமா..??" "ஏன்.. நான் எங்க போவேன்னு உனக்கு தெரியாதா..?? அதான் காலாங்காத்தாலேயே.. கரெக்டா மோப்பம் புடிச்சு வந்து சேந்துட்டியே..?? ஆமாம்.. என்ன இந்தப்பக்கம்..?? புருஷன் என்ன பண்றான்னு வேவு பாக்க வந்தியா..??" அசோக் சட்டை பட்டன்களை மாட்டிக்கொண்டே எள்ளலாக கேட்டான். "ஆமாம்.. வேதாளாம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிடுச்சா இல்லையான்னு.. வேவு பார்க்க வந்தேன்..!!" "பாத்தாச்சா..?? சந்தோஷமா..??" "ம்ம்..!! பாத்தாச்சு.. பாத்தாச்சு..!!" நந்தினி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அசோக்கின் செல்போன் 'டிங்.. டிங்.. டிங்..' என்று தொடர்ந்து சப்தம் எழுப்பியது. வரிசையாக மெசேஜ்கள் வந்து விழுந்தன. நந்தினி பட்டனை அமுக்கி என்னெவென்று பார்த்தாள்.

அதில் ஒரு மெசேஜை பார்த்ததும் புருவத்தை சுருக்கியவள், செல்போனை அசோக்கிடம் நீட்டியவாறே சொன்னாள். "நீங்க ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்குறப்போ.. உங்க ஆளு கால் பண்ணிருக்கா..!! கால் பண்ணி என்னன்னு கேளுங்க..!!" "என் ஆளா..?? அது யாரு என் ஆளு..??" "அவதான்.. கற்பகம்..!! நீங்க கூட ஆசையா 'கற்பு.. கற்பு..'ன்னு கூப்பிடுவீங்களே..??" நந்தினி கிண்டலாக சொல்ல, அசோக் சூடானான். "அறைஞ்சு பல்லை உடைக்கப் போறேன் உன்னை..!! அவளை பத்தி என்ன நெனச்சுட்டு இருக்குற உன் மனசுல..??" "நான் ஒன்னும் நெனைக்கலை சாமீ..!!" "அப்புறம் ஏன் அவளை என் ஆளுன்னு சொல்ற..??" "நானா சொன்னேன்.. எல்லாம் அவதான் சொன்னா..!!"

 "என்ன சொன்னா..??"

 "உங்களுக்கும் அவளுக்கும் ஏதோ ஸ்பெஷல் ரிலேஷன்ஷிப்புன்னு..!!" "இங்க பாரு.. அவ என்ன சொன்னா.. அதை நீ எந்த அர்த்ததுல மாத்தி சொல்றேன்னு எனக்கு தெரியும்..!! ஆமாம்.. எங்களுக்குள்ள ஸ்பெஷல் ரிலேஷன்ஷிப்தான்..!! ஆனா.. நீ நெனைக்கிற மாதிரி தப்பான ரிலேஷன்ஷிப் இல்ல..!! வீ ஆர் ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸ்.. ட்ரூ ஃப்ரண்ட்ஸ்..!! உன் புத்திக்குலாம் எங்க ஃப்ரண்ட்ஷிப் பத்தி புரியாது..!!" "சரி சரி..!! இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்படி டென்ஷன் ஆகுறீங்க..??

எனக்கு மனசுக்குள்ள ஒரு சின்ன டவுட்டு.. தப்பா இருந்தா மாத்திக்கிறேன்.. அவ்ளோதான..?? ம்ம்..??" கூலாக சொன்ன நந்தினியையே அசோக் ஓரிரு வினாடிகள் முறைத்துப் பார்த்தான். அப்புறம் கற்பகத்தின் நம்பருக்கு கால் செய்தான். ரிங் சென்றது. ஆனால் யாரும் எடுக்கவில்லை. மேலும் ஒரு முறை முயற்சி செய்து தோற்றுவிட்டு, செல்போனை பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். "என்னாச்சு..??" நந்தினி ஆர்வமாக கேட்டாள்.

 "ரிங் போகுது.. யாரும் பிக்கப் பண்ணலை..!!" "ஒருவேளை குளிக்க போயிருப்பாளா இருக்கும்.. உங்ககிட்ட சொல்லிட்டு போகலாமேன்னு கால் பண்ணிருப்பா.. நீங்க மிஸ் பண்ணிட்டீங்க..!!" குறும்பாக சொன்ன நந்தினியை, அசோக் எரிச்சலாக பார்த்தான். அவன் அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கும்போதே, நந்தினி திடீரென அப்படியே நின்றவாக்கிலேயே சரிந்தாள். அவளுக்கு பக்கவாட்டில் இருந்த மெத்தை மீது பொத்தென்று விழுந்தாள். விழுந்தவள் 'வாவ்...' என்று ஓசை எழுப்பிக்கொண்டே, இப்படியும் அப்படியுமாய் இரண்டு முறை உருண்டாள்.

அவள் செய்வதை எல்லாம் அசோக் வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருந்தான். உருண்டு முடித்த நந்தினி, இப்போது தனது தலையை கொஞ்சமாய் உயர்த்தி, தனது வலதுகையை மெத்தையில் ஊன்றி, அந்தக்கையால் தலையை தாங்கிப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையை நீட்டி மெத்தையை தடவியவாறே குறும்பான குரலில் கேட்டாள். "இதுதான் அந்த பொன்னான மெத்தையா..?? பல பொண்ணுகளை நீங்க பொரட்டி எடுத்த மெத்தையா..??" அவளுடைய கேலி அசோக்கை எரிச்சலாக்கியது. மனைவியையே முறைப்பாக பார்த்தவன், கடுப்பும் கேலியுமாய் சொன்னான்.

 "ஆமாம்.. நேத்து கூட ஒருத்தி..!! விடிய விடிய நல்லா பொரட்டி எடுத்தேன்..!!" அசோக் அவ்வாறு சொல்ல, நந்தினி இப்போது சிரித்தாள். "ஹாஹா.. பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருந்த சொல்லுங்கப்பா..!!" "ஏன்..??" "நான் விழுறதுக்கு முன்னாடி.. ஒரு கசங்கல் கூட இல்லாம பெட் செம நீட்டா இருந்துச்சு..!! நைட்டெல்லாம் ஒரு பொண்ணை பொரட்டி எடுத்துட்டு.. காலைல உக்காந்து பெட் மடிப்புலாம் சரி பண்ணிட்டு இருந்தாரா என் புருஷன்..??" "ஏன்.. பண்ணிருந்தா என்ன..??" "ம்ம்.. பண்ணிருக்கலாம்..!! ஆனா.. அப்படியே வாட்ச்மேனுக்கும் கொஞ்சம் பணத்தை கொடுத்து.. எங்கிட்ட பொய் சொல்ல சொல்லிருக்கலாம்..!!

 அவனுக்கு நான் பணம் கூட குடுக்கலைப்பா.. பாத்து சிரிச்சேன்.. அவ்வளவுதான்.. எல்லா உண்மையும் கொட்டிட்டான்..!!" நந்தினி கண்சிமிட்ட, "ஓ.. சொல்லிட்டானா..??" அசோக்கின் குரலில் ஒரு சோர்வு தெரிந்தது. "யெஸ்..!! எல்லாம் சொல்லிட்டான்..!!" "அவனுக்கு இன்னைக்கு இருக்குது..!! ராஸ்கல்..!!" "ஐயோ.. பாவங்க அவன்.. நல்ல பையன்.. திட்டாதீங்க..!! அவன் சொன்னதை கேக்குறதுக்கு.. எனக்கு எவ்வளவு ஹேப்பியா இருந்தது தெரியுமா..??" "ஓஹோ.. அப்படி என்ன சொன்னான்..??" ஷர்ட்டை டக்கின் செய்து, இடுப்பில் பெல்ட் அணிந்து கொண்டே அசோக் கேட்டான்.

 "நேத்து ஒரு குட்டியை கூட்டிட்டு வந்தீங்களாம்.. ஆனா.. கூட்டிட்டு வந்த வேகத்திலயே பொட்டியை கட்டி திரும்ப அனுப்பிச்சிட்டீங்களாமே..?? இவ்வளவுக்கும் அவ அடிக்கடி இங்க வருவாளாம்.. அவ எப்போ வந்தாலும் வீட்டுல ஆட்டம் தூள் பறக்குமாமே..??" நந்தினி உதட்டில் புன்னகையும், கேலியுமாக கேட்டாள். அசோக் அவளையே உர்ரென்று முறைத்துக் கொண்டிருந்தான். நந்தினி இப்போது எழுந்து, கட்டிலில் இருந்து கீழே இறங்கினாள். தன் கணவனை நெருங்கி அவனுடைய கண்களை குறுகுறுவென பார்த்தவாறு கேட்டாள்.

 "கூட்டிட்டு வந்தவளை ஏன் திரும்ப அனுப்பிச்சிட்டீங்க மிஸ்டர்..?? ம்ம்..??" "அதெதுக்கு உனக்கு..??" "சும்மா.. தெரிஞ்சுக்கணும்னு ஆசை..!! சொல்லுங்களேன்..!!" "எ..எனக்கு புடிக்கலை.. அனுப்பிச்சுட்டேன்..!!" "அதான்.. திடீர்னு ஏன் புடிக்காம போச்சுன்னு கேட்டேன்..??" நந்தினி துளைத்தெடுக்க, அசோக் கடுப்பானான். "ப்ச்.. அதெல்லாம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்கணும்னு எனக்கு அவசியம் இல்ல..!!" அசோக் சீற,

 "சரி.. சொல்லாட்டா போங்க..!! என்ன காரணம்னு எனக்கு நல்லா தெரியும்..!!" நந்தினி கூலாக சொன்னாள். "என்ன காரணம்..??" "அதெல்லாம் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கணும்னு எனக்கு அவசியம் இல்ல..!!" அசோக் சொன்னதையே அவனுக்கு திருப்பி கொடுத்துவிட்டு, நந்தினி புருவத்தை உயர்த்தி காட்டி புன்னகைத்தாள். அவளுடைய சீண்டலிலும் கிண்டலிலும் அசோக் இப்போது களைத்துப் போனான். இரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றி நந்தினியையே சில வினாடிகள் சலிப்பாக பார்த்தான்.

 அப்புறம் தலையை அசைத்து ஒரு பெருமூச்சை வெளிப்படுத்திவிட்டு, "உன்கிட்ட போராட எனக்கு நேரம் இல்ல.. வழியை விடு.. நான் கெளம்புறேன்..!!" என்று வாசலை நோக்கி நகரப் போனான். நந்தினி இப்போது அவசரமாக தன் இடது கையை அவனுக்கு குறுக்காக நீட்டி, சுவற்றில் ஊன்றி, அவன் செல்லும் வழியை மறித்தாள். கணவனை ஏறிட்டு கண்களிலும், உதட்டிலும் ஒரு ஒருவித ஏளனத்தை சிந்தினாள். "என்ன..??" என்றான் அசோக் முறைப்பாக. நந்தினி இப்போது அசோக்கையே விழுங்கி விடுவது போல பார்த்தாள்.

அவளுடைய முகமெல்லாம் ஒருவித குறும்பு கொப்பளித்துக் கொண்டிருந்தது. சில வினாடிகள் அவ்வாறு பார்த்தவள், அப்புறம் அவளுடைய வலது கையால் அசோக்கின் கன்னத்தை பிடித்து, குழந்தையை கொஞ்சுவது மாதிரி குழைவாக சொன்னாள். "அச்சோ.. பாவம் புள்ளை.. நைட்டு ரொம்ப ஏமாந்து போயிடுச்சா..??" "ப்ச்.." அசோக் சலிப்பாக அவளுடைய கையை தட்டிவிட்டான்.

 "சும்மா இருந்த புள்ளையை நான்தான் கெளப்பி விட்டுட்டேன்.. இல்ல..??" "ம்ம்.." "நானே இப்போ அதை சரி பண்ணிடவா..??" நந்தினி குழைவாக கேட்க,
"என்னது..??" அசோக் முகத்தை சுளித்தான். "புரியலையா..?? வாட் அபவுட் ஹேவிங் யுவர் பொண்டாட்டி இன் தேட் பெட்..??" நந்தினி ஓரக்கண்ணால் அந்த படுக்கையை பார்த்தவாறே குறும்பாக கண்சிமிட்ட, அசோக் இப்போது உச்சபட்ச எரிச்சலை எட்டினான். மனைவியை உஷ்ணமாக முறைத்தவன், சுவற்றில் ஊன்றியிருந்த அவளுடைய கையை வலுவாக பற்றி, அப்படியே வளைத்து, ஒரு முறுக்கு முறுக்கினான்.

 "ஆஆஆஆஆஆ...!!!" நந்தினி கத்திக்கொண்டே படக்கென அந்தப்பக்கமாய் சுழன்றாள். அவளுடைய இடது கை, அவளுக்கு பின்பக்கமாக, அசோக்கின் இரும்புப்பிடியில் சிக்கியிருந்தது. கை அதிகம் வலிக்காமல் இருப்பதற்காக அவள் சற்று பின்னோக்கி நகர வேண்டியிருந்தது. நந்தினி அவ்வாறு நகர, அவளது பின்புறம் அசோக்கின் இடுப்புக்கு கீழே வந்து மெத்தென்று அழுந்தியது.

அவளுடைய கூந்தல் வாசனை அசோக்கின் நாசிக்குள் புகுந்தது. அவளது காது மடலும், வழவழப்பான பின்கழுத்தும், செழுமையான தோளும்...!! அவளுடைய அழகு அசோக்கின் கண்களை பளிச்சென தாக்கியது. அவளோ வலி தாளாமல் அலறினாள். "ஆஆஆஆ... வலிக்குதுப்பா..!! உங்களுக்கு புடிக்கனும்னா.. வேற எதையாவது புடிச்சு தொலைங்க..!! கையை விடுங்க..!!" அந்த நிலையிலும் அவள் சீண்ட, அசோக் மேலும் டென்ஷனானான். முறுக்கியிருந்த அவளுடைய கைக்கு மேலும் சற்று அழுத்தம் கொடுத்தான். நந்தினி இப்போது வேதனையில் துடித்தாள்.

 "ஆஆஆஆஆஆ...!!!" "கொழுப்புடி உனக்குலாம்..!!" அசோக் பற்களை கடித்துக்கொண்டு சொன்னான். "ஆஆ.. எனக்கென்ன கொழுப்பு..??" "அந்த நாயர்ட்ட போய்.. நம்ம மேட்டர்லாம் சொல்லி பொலம்பிருக்குற..?? அவன் கெட்ட கேட்டுக்கு.. ஒரு பேக்கரியை ஆரம்பிச்சுட்டு.. அவன்லாம் எனக்கு அட்வைஸ் பண்ணுறான்..!!" "அவர்கிட்ட பொலம்பலாம் ஒன்னும் இல்ல..!! மேட்டரை சொன்னேன்.. அவ்வளவுதான்..!! அந்த ஆளுக்கு கொஞ்சமாவது புத்தி இருந்தது.. சொன்னதுமே திருந்திட்டாரு..!!" அவளுடைய பதிலில் இருந்த குத்தலை உடனே புரிந்து கொண்ட அசோக், மீண்டும் அவள் கைக்கு ஒரு அழுத்தம் கொடுத்தான்.

நந்தினி மீண்டும் துடித்தாள். "ஆஆஆஆஆஆ...!!!" "உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா.. இந்த வேலைலாம் பண்ணிருப்ப..??" "இதுல என்ன திமிரு இருக்கு..??" "இத்தனை நாளா நான் சொன்னதை கேட்டுட்டு இருந்தவனை.. எனக்கு எதிரா திருப்பி விட்டுருக்குற..!! அந்த தைரியத்துல எங்கிட்ட வந்து உன் உடம்பை காட்டி சீண்டி விளையாடுற..!! இதுலாம் திமிர் இல்லாம வேற என்ன..??" "நான் ஒன்னும் உங்களை சீண்டி விளையாடலை..!! ப்ச்.. கையை விடுங்கப்பா..!!" நந்தினி தன் உடலை படக்கென ஒரு சிலுப்பு சிலுப்பி, தனது கையை அசோக்கிடம் இருந்து விடுவித்துக் கொண்டாள். உடனே திரும்பி அசோக்கின் முகத்தை ஏறிட்டு முறைத்தாள். வலியெடுத்த கையை இன்னொரு கையால் அழுத்தி தடவிக்கொண்டே சீற்றமாக சொன்னாள்.


 "இப்போ என்னாயிடுச்சுன்னு சும்மா துள்ளுறீங்க..?? அப்படி என்ன நான் தப்பு பண்ணிட்டேன்..?? என் புருஷன் தப்பான வழிக்கு போறதை தடுக்குறது ஒரு குத்தமா..??" "என் விஷயத்துல தலையிட கூடாதுன்னு சொல்லிட்டுத்தான்.. உன்னை நான் கல்யாணமே செஞ்சுக்கிட்டேன்.. மறந்து போச்சா..??" "ஹ்ஹ.. உங்க கண்டிஷனும், அக்ரீமன்ட்டும்.. மொட்டை மாடில வச்சு நீங்க என்னை கிஸ் அடிச்ச அன்னைக்கே.. காலாவதி ஆகிப் போயிடுச்சு..!! இனிமேயும் அதெல்லாம் கட்டிக்கிட்டு என்னால அழ முடியாது..!!"

 "ஓ.. அந்த அளவுக்கு ஆயிடுச்சா..??"

 "ஆமாம்.. அப்படித்தான்.. நான் அப்படித்தான் செய்வேன்.. என்ன இப்போ..?? நல்லா கேட்டுக்கங்க.. நீங்க எனக்கு வேணும்.. எனக்கு மட்டுந்தான் வேணும்.. அப்படி நெனைக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு..!! உங்க பொண்டாட்டி நான்.. தொட்டு தாலி கட்டிருக்கீங்க எனக்கு..!! உங்களை எனக்கு சொந்தமாக்கிக்க.. என்னென்ன செய்யணுமோ.. எல்லாம் நான் செய்வேன்..!! என்ன பண்ண முடியும் உங்களால..??" நந்தினி ஆவேசமாக கேட்க, அசோக் அவளையே திகைப்பாக பார்த்தான். அவளுடைய கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், திக்கித்துப் போனான்.

எரிச்சலும், இயலாமையுமாய் மனைவியையே விழிகள் விரிய பார்த்தான். பார்க்க பார்க்க.. அவனுக்கு தலை வலிப்பது மாதிரி இருந்தது. கண்களை இறுக்க மூடி, தலையை சற்றே குனிந்து, இரண்டு கைகளாலும் அழுத்தி பிடித்துக் கொண்டான். அதை பார்த்த நந்தினிக்கு, அவ்வளவு நேரம் கணவன் மீது இருந்த ஆவேசம் உடனே வற்றிப் போனது.

 "என்னாச்சு..??" என்றாள் சற்றே கவலையாக. அவனுடைய கையை தொட்டாள். "ப்ச்.." அசோக் அவளுடைய கையை தட்டி விட்டான்.

 "என்னாச்சுன்னு கேக்குறேன்ல..?" நந்தினியின் குரலில் இப்போது கவலையுடன், கோபமும் கலந்திருந்தது. அசோக் பதில் எதுவும் சொல்லவில்லை. நந்தினி அவனுடைய மூளைக்குள் புகுந்து குடைச்சல் கொடுப்பது மாதிரி வலியெடுத்தது அவனுக்கு. அப்படியே தலையை பிடித்தவாறு கொஞ்ச நேரம் குனிந்திருந்தான். அப்புறம் படக்கென தன் மனைவியின் முகத்தை ஏறிட்டு, குரலை உயர்த்தி கத்தினான்.

 "ஏண்டி இப்படிலாம் பண்ற..?? உன்னால..." என்று அதிக டெசிபலில் ஆரம்பித்தவன், சற்று நிறுத்தி, நந்தினியின் முகத்தையே ஓரிரு வினாடிகள் பார்த்துவிட்டு, குரலை பட்டென தாழ்த்திக்கொண்டு.. "டார்ச்சரா இருக்குதுடி.. என்னால முடியலை..!!" என்று பரிதாபமாக சொல்லி முடித்தான். சோர்ந்து போனவனாய் அப்படியே பொத்தென்று கட்டிலில் அமர்ந்தான். அவனது ஆவேசத்தில் நந்தினி சற்றே மிரண்டு போனாள்.

நிலைகுலைந்து போய் அமர்ந்திருக்கும் கணவனையே, திகைப்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுடைய மனநிலையை இப்போது அவளால் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. 'இப்படித்தான் தன் வாழ்க்கை என்றொரு உறுதியுடன் வாழ்ந்திருந்தான்.. இன்று அந்த வாழ்க்கை தடம் மாற.. இவன் தடுமாறுகிறான்..!!

நந்தினி ஏற்படுத்திய காயத்தால்.. இதயத்தில் இனி யாருக்கும் இடமில்லை என்ற முடிவில் இருந்திருந்தான்.. இன்று அவனுடைய மனம் அவனது கட்டுப்பாட்டை மீற.. யாரால் அந்த முடிவு எடுத்தானோ அவள் மீதே சென்று சாய.. இவன் கிடந்து குழம்புகிறான்..!!' கணவனை பார்க்க பார்க்க.. நந்தினியின் மனதுக்குள்.. கனிவும், கருணையும் பொங்க ஆரம்பித்தது..!!

தரையில் முழங்கால் இட்டு.. அவன் முன்பாக அமர்ந்தாள்..!! கவிழ்ந்து போயிருந்த அவனுடைய முகத்தை நிமிர்த்தினாள்.

 "இங்க பாருங்க..!!"

 "...................."

 "ப்ச்.. பாருங்கன்றேன்ல..?" அசோக் இப்போது நிமிர்ந்து தன் முகத்துக்கு எதிரே இருந்த மனைவியின் முகத்தை பார்த்தான்.

அசோக்கின் முகம் ஒரு மாதிரி கலங்கி, வாடிப்போயிருக்க, நந்தினியின் முகம் மிக தெளிவாக, மலர்ச்சியாக இருந்தது. நந்தினி அசோக்கின் கன்னங்கள் இரண்டையும் தன் கைகளால் தாங்கி பிடித்து, தனது மெல்லிய உதடுகளை குவித்து, அவனுடைய நெற்றியில் ஈரமாய் ஒற்றி எடுத்தாள்.

 அசோக் எந்த சலனமுமின்றி அமைதியாக இருந்தான். நந்தினி இப்போது அவனது வலது கையை பற்றினாள். எடுத்து தன் கன்னத்தோடு வைத்து பிடித்துக் கொண்டாள். அவ்வப்போது அந்தக்கைக்கு 'இச்.. இச்..' என்று இதமாக முத்தம் கொடுத்தவாறே பேசினாள்.

 "இப்போ என்னாச்சுன்னு இப்படி ஃபீல் பண்றீங்க..?? ம்ம்..?? உங்களுக்கு நான் இருக்கேன்ப்பா.. உங்க நந்தினி இருக்கேன்..!! நான் பாத்துக்குறேன்.. என் கண்ணனுக்கு எந்த குறையும் இல்லாம.. கண்ணுக்குள்ள வச்சு நான் பாத்துக்குறேன்..!!" கனிவாக சொல்லிவிட்டு நந்தினி கணவனின் முகத்தையே காதலும் ஆசையுமாய் பார்த்தாள். அசோக்கும் அவளையே ஒரு சலனமற்ற பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

இப்போது அவனுடைய கண்கள் லேசாக கலங்க ஆரம்பித்தன. உதடுகள் மெலிதாக ஒரு விரக்தி புன்னகையை சிந்தின. நந்தினி என்னென்று புரியாமல் திகைக்க, அசோக் சற்றே தழதழத்து போன குரலில் சொன்னான். "ஆறு வருஷத்துக்கு முன்னாடியே இதெல்லாம் நீ சொல்லிருந்தா.. ரொம்ப நல்லா இருந்திருந்திருக்கும் நந்தினி..!!"
அவ்வளவுதான்..!! கண்களில் நீர் துளிர்க்க கணவன் சொன்னதை கேட்டு, நந்தினி அப்படியே உருகிப் போனாள்..!!

ஆறுவருடங்களுக்கு முன்பாக தான் அள்ளி வீசிய வார்த்தைகள், எந்த அளவுக்கு அவன் மனதை ரணமாக்கியிருக்கின்றன என்பதை, இப்போது முழுமையாக உணர்ந்து கொண்டாள்..!! அவனுடைய கலங்கிப்போன முகத்தை காண காண.. நந்தினிக்கு ஒரு வித துக்கம் வந்து தொண்டையை அடைத்தது..!! படபடத்த உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டாள்.

அசோக்கையே ஒரு இரக்கப் பார்வை பார்த்தவள், அவளுடைய ஒரு கையால் அவனது கன்னத்தை வருடியவாறே, பரிதாபமாக சொன்னாள். "ஸாரிப்பா.. ஸாரி..!!! உங்களை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.. ஸாரி..!!!" அதன்பிறகும் நந்தினியால் அவளுடைய கண்களுக்கு அணை போட முடியவில்லை.

கண்ணீரை கசிய ஆரம்பித்தன அவளது விழிகள்..!! அசோக் ஒரு சில வினாடிகள் அவளுடைய கண்ணீர் வழியும் முகத்தையே அமைதியாக பார்த்தான். அப்புறம் தனது விரல்களால் அவளுடைய விழி நீரை துடைத்தான். கட்டிலில் இருந்து எழுந்து கொண்டான்.

 "ஆபீஸுக்கு டைமாச்சு நந்தினி.. நான் கெளம்புறேன்.." என்றவன், அறை வாசலை நோக்கி நடந்தான். நந்தினியோ உறைந்து போன மாதிரி, அதே இடத்தில் அமர்ந்திருந்தாள்.



No comments:

Post a Comment