Saturday, June 27, 2015

ஐ ஹேட் யூ, பட்.. - அத்தியாயம் - 12

அன்று மாலை ஐந்து மணி வாக்கில்.. அசோக்கின் மொபைலுக்கு செண்பகம் கால் செய்தாள்..!! ப்ரியா தந்திருந்த ஒரு வேலையை திருப்தி இல்லாமல் செய்துகொண்டிருந்த அசோக், ஏற்கனவே எரிச்சலில் இருந்தான்..!! அந்த எரிச்சலுடன்தான் கால் பிக் செய்து காதில் வைத்தான்..!!

"ம்ம்.. சொல்லு செம்பு..!!" என்றான் இறுக்கமாக.

"இன்டர்வ்யூ முடிஞ்சது மாமா..!!" செண்பகத்தின் குரலிலோ ஒரு உற்சாகம்.

"என்னாச்சு.. ஊத்திக்கிச்சா..??" அசோக் ஆசையாக கேட்டான்.

"இல்ல இல்ல.. வேலை கெடைச்சிடுச்சு..!!" அவள் இவன் ஆசைக்கு ஆப்பு வைத்தாள்.

"கிழிஞ்சது..!! இவனுகளுக்கு அறிவுன்றதே கெடயாது..!!" அசோக் இப்போது சலிப்பாக சொன்னான்.

"யாரை சொல்றீங்க..??"

"எங்க கம்பனிகாரனுகளுக்குத்தான்..!! ஏற்கனவே ஒரு தடவை.. அழகா இருக்குன்றதுக்காக ஒரு மக்கு பீஸுக்கு வேலைக்கு சேர்த்துத்தான்.. அது இப்போ அழிச்சாட்டியம் பண்ணிட்டு அலையுது..!! ஹ்ம்ம்.. திருந்தவே மாட்டேன்றானுக.. திரும்ப திரும்ப அதே தப்பு பண்றானுக..!!"

அசோக் செண்பகத்தை மக்கு என்று மறைமுகமாக கிண்டல் செய்தான். அது எல்லாம் அவள் மண்டைக்குள் ஏறவில்லை. ஆனால் அவன் சொன்னதில் இருந்த இன்னொரு விஷயத்தை மட்டும் ஷார்ப்பாக கவனித்தவளாய்..

"ஹை.. அப்போ நான் அழகா இருக்கேன்னு சொல்றீங்களா மாமா..??" என்றாள் அசட்டுத்தனமாய்.

"ம்க்கும்.. அதை மட்டும் கரெக்டா கவனி.. நீயும் திருந்தவே மாட்டடி..!! சரி.. எப்போ ஜாயின் பண்ண சொல்லிருக்காங்க..??"

"கரண்ட் கம்பனில ஒன் மன்த் நோட்டீஸ் பீரியட் இருக்குன்னு சொன்னேன்.. அதான்.. ஒன் மன்த் கழிச்சு ஜாயின் பண்ண சொல்லிருக்காங்க..!!"

"ஹ்ம்ம்..எவ்ளோ தந்தாங்க..??"

"ஃபோர் பாயின்ட் டூ..!!"

"நல்ல பேக்கஜ்தான்..!! ம்ம்ம்.. என்ன பண்ணிட்டு இருக்குற இப்போ..??"

"நீங்க சொன்ன இடத்துல நிக்கிறேன் மாமா..!! கெளம்பி வர்றீங்களா..?"

"இங்க பாரு செம்பு.. மாமாக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நான் கெளம்ப லேட் ஆகும்..!! நீ என்ன பண்ற.. அப்டியே ஒரு ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு ஓடிப் போயிடுற..!! ஓகேவா..??" அசோக் கூலாக சொல்ல,

"எ..என்ன மாமா.. இ..இப்படி சொல்றீங்க..??" அடுத்த முனையில் செண்பகம் பதறினாள்.

"ஏன்.. என்னாச்சு..??"

"நான் எப்படி ஆட்டோல போறது..??"

"ஏன்.. போனா என்ன..??"

"எனக்கு கன்னடா தெரியாதே..!!"

"ஓ.. தெலுங்கு மட்டும் தெரியுமாக்கும்..?? எனக்குந்தான் கன்னடாலாம் தெரியாது..!!"

"ப்ச்.. வெளையாடாதீங்க மாமா..!! எங்கிட்ட ஆட்டோக்கு குடுக்குறதுக்கு சேன்ச் கூட இல்லல.. தவுசண்ட் ருபீசா இருக்குது..!! ப்ளீஸ் மாமா.. நீங்களே வந்து வீட்டுல விட்டுடுங்க.. எனக்கு பயமா இருக்கு மாமா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!"

இன்னும் சிறிது நேரம் விட்டிருந்தால், செண்பகம் அழுதே இருப்பாள். அந்த அளவிற்கு உடைந்து போன குரலில் அசோக்கிடம் கெஞ்சினாள். அவளுடைய கெஞ்சலை அசோக் சிறிது நேரம் தலையை சொறிந்தவாறு கேட்டுக்கொண்டிருந்தான். அப்புறம்..

"ஏய்.. ஏய்.. ச்சீய்.. அழாத..!! நானே கொண்டுபோய் விட்டுத் தொலைக்கிறேன்.. அங்கேயே நில்லு.. இதோ வந்துடறேன்..!!" என்று வேண்டா வெறுப்பாக சொன்னான்.

"ஹ்ம்ம்.. தேங்க்ஸ் மாமா..!!"

செண்பகம் நிம்மதியாக சொன்னாள். காலை கட் செய்து பேகில் போட்டுக்கொண்டாள். தனியாக நின்றவாறு அங்கும் இங்கும் பராக்கு பார்த்துக் கொண்டிருந்தவள் முன்பு, ஒரு பத்து நிமிடத்திற்கெல்லாம் அந்த பைக் சரக்கென்று வந்து நின்றது. வந்ததுமே செண்பகத்தின் மீது எரிந்து விழுந்தான் அசோக்.

"அனகோண்டா சைசுக்கு இருக்குற.. ஆட்டோல போக பயமா இருக்குன்னு அழற..!! உனக்குலாம் வேலை குடுத்திருக்கானுக பாரு..?? எந்த மக்குப்பையன்டி உன்னை இன்டர்வ்யூ பண்ணினது..??"

"ஹாஹா.. பையன் இல்ல மாமா.. பொண்ணு..!!" செண்பகம் சொல்லிவிட்டு பற்களை காட்டி இளித்தாள்.

"சரி.. மக்குப்பொண்ணு..!!"

"ஐயோ.. பாவம் மாமா அவங்க.. திட்டாதிங்க..!!"

"ம்க்கும்.. உனக்குலாம் வேலை குடுத்திருக்காங்கன்னு சப்போர்ட்டா..?? அவங்க என்ன பாவம்.. உனக்கு சம்பளம் குடுக்கப்போற கம்பனிதான் பாவம்..!! ம்ம்ம்ம்.. அதுசரி.. எந்த டீம்ல ஜாயின் பண்ணப்போறேன்னு ஏதாச்சும் சொன்னாங்களா..??"

"ஆங்.. சொன்னாங்க.. ஏதோ.. யூ.பி.ஸி டீமாம்..!!"

செண்பகம் கேஷுவலாக சொல்ல.. அவள் சொன்ன வார்த்தைகள் தந்த அதிர்ச்சியில்.. அசோக் புரை ஏறியவன் மாதிரி 'ஹக்.. ஹக்.. ஹக்..' என்று இருமினான்..!! தலையை தட்டிக்கொண்டான்..!! மிரட்சியாய் செண்பகத்தை பார்த்தான்..!!



"என்னாச்சு மாமா..??" செண்பகம் பதறிப்போய் கேட்டாள்.

"ஹேய்.. அது எங்க டீம்டி..!!" அசோக் கத்தினான்.

"ஓ.. அப்படியா..?? அப்போ.. உங்களுக்கு ப்ரியா அக்காவை தெரியுமா..??" செண்பகம் அடுத்த குண்டை தூக்கி போட, அசோக் மேலும் அதிர்ந்தான்.

"என்னடி சொல்ற..?? ப்ரியா உனக்கு அக்காவா..??"

"ஹ்ம்ம்.. அவங்கதான் மாமா எனக்கு ரெஸ்யூம் ஃபார்வர்ட் பண்ணினாங்க.. இன்னைக்கு என்னை டெக்னிக்கல் இன்டர்வ்யூ பண்ணினதும் அவங்கதான்..!!"

"ப்பா.. முடியலை..!! ப்ரியா எப்படி உனக்கு பழக்கம்..??"

"ஹையோ.. அவங்க எனக்கு பழக்கம் இல்ல மாமா.. அவங்க தம்பி கோகுல், என் காலேஜ் ஜூனியர்.. அவன்தான் எனக்கு பழக்கம்.. அக்கா அக்கான்னு ரொம்ப ப்ரியமா இருப்பான்..!! அவன்தான் என் அக்கா இப்போ டெக்லீட் ஆயிட்டாங்க.. உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்கன்னு சொன்னான்..!! அவன் மூலமாத்தான் ப்ரியா அக்காக்கு ரெஸ்யூம் அனுப்பினேன்..!! அவங்களே என்னை இன்டர்வ்யூ பண்ணி.. அவங்க டீம்ல ஜாயின் பண்ணிக்க சொல்லிட்டாங்க..!! இப்போத்தான் தெரியுது.. அது உங்க டீம்னு..!!"

செண்பகம் சொல்லிக்கொண்டே இருக்க, அசோக்கிற்கு தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது. 'என்னடா நடக்குது இங்க..??' என்று தலையை சொறிந்து கொண்டான். 'ஒரு வெத்துவேட்டு இன்னொரு வெத்துவேட்டை இன்டர்வ்யூ பண்ணி.. வேலை வேற குடுத்திருக்கு.. வெளங்குன மாதிரிதான் இந்த கம்பனி..!!' என்று நினைத்துக் கொண்டான். கொஞ்ச நேரம் அந்த அதிர்ச்சியில் திளைத்திருந்த அசோக், அப்புறம் அதை சமாளித்துக்கொண்டு,

"சரி சரி.. வண்டில ஏறு.. கெளம்பலாம்..!!" என்றான்.

செண்பகம் ஏறி அமர்ந்து கொள்ள, அசோக் வண்டியை ஸ்டார்ட் செய்தான். சில்க் போர்ட் நோக்கி விரட்டினான். நடப்பதை எல்லாம் அவனால் நம்பவே முடியவில்லை. 'இப்படியும் கூட நடக்குமா..?' என்று ஒருவித ஆச்சரியத்தில் மூழ்கியவனாகவே பைக்கை மிதமான வேகத்தில் செலுத்திக்கொண்டிருந்தான். வரும்போது அவனை கேள்வி கேட்டு இம்சை செய்த மாதிரியே இப்போதும் செண்பகம் அவன் காதுக்கருகே குனிந்து ஏதேதோ கேட்டுக்கொண்டே வந்தாள். அசோக்கும் எரிச்சலுடனே எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டே வந்தான்.

"பேங்களூர்ல பேக்கரிலாம் நெறைய இருக்குதுல மாமா..??" என்றாள் திடீரென.

"ஹையோ.. பேங்களூர் பத்தி ஒரு பெரிய உண்மையை கண்டுபிடிச்சுட்டடி செம்பு.. புத்திசாலி..!! இவ்வளவு கடைல பேக்கரி மட்டும் கரெக்டா உன் கண்ணுல பட்டிருக்கு பாரு..!!"

"ப்ச்.. கிண்டல் பண்ணாதீங்க மாமா..!! நெறைய கண்ணுல பட்டது.. அதான் கேட்டேன்..!!"

"ஹ்ம்ம்.. நீ சொல்றது சரிதான்.. இங்க பேக்கரிலாம் ஜாஸ்தி.. பத்துக்கடைக்கு ஒரு பேக்கரி கண்டிப்பா இருக்கும்..!!"

அசோக் சொல்ல, செண்பகம் இப்போது அமைதியானாள். அப்புறம் ஓரிரு நிமிடங்களுக்கு அவள் எதுவும் பேசவில்லை. எதையோ தீவிரமாக யோசித்தாள். அசோக்கும் நிம்மதியாக பைக் ஓட்டிக்கொண்டிருந்தான். ஆனால் அவனுடைய நிம்மதி நீண்ட நேரத்திற்கு நீடிக்கவில்லை. செண்பகம் அவன் முதுகை மீண்டும் சொறிய, அசோக் திரும்பாமலே எரிச்சலாக கேட்டான்.

"என்னடி..??"

"எனக்கு முட்டை பப்ஸ் சாப்பிடனும் போல இருக்கு மாமா..!!" செண்பகம் குழைந்துகொண்டே சொன்னாள்.

"முட்டை பப்ஸா..??" அசோக் டென்ஷன் ஆனான்.

"ஹ்ம்ம்.. ரொம்ப பசிக்குது..!! ஏதாவது பேக்கரில வண்டியை நிறுத்துங்களேன்.. ப்ளீஸ்..!!"

அசோக் மனதிற்குள்ளேயே 'ஐயோ.. ஐயோ.. ஐயோ..' என்று தலையில் அடித்துக் கொண்டான். ரோட்டில் அடுத்ததாக எதிர்ப்பட்ட பேக்கரி முன்பாக வண்டியை நிறுத்தினான். செண்பகம் ஆசையாக குதித்து கீழே இறங்கினாள். அசோக் சலிப்புடன் வண்டியை சாய்த்து ஸ்டாண்ட் போட்டான். இருவரும் அந்த பேக்கரிக்குள் நுழைந்தார்கள்.

"பண்ணி.. பண்ணி..!!" பேக்கரிக்காரன் அன்பாக அவர்களை வரவேற்றான்.

"என்ன மாமா.. பன்னின்றாங்க..??" செண்பகம் அசோக்கின் காதோரமாய் கேட்டாள்.

"ம்ம்..?? உன்னைத்தான் சொல்றாங்க..!! கொஞ்சமா தின்னுனா.. கேட்டாத்தான..??" அசோக் நக்கலாய் சொல்லிவிட்டு முன்னால் நடந்தான்.

சற்றே பெரிய சைஸ் பேக்கரி அது..!! உள்ளே கண்ணாடி பெட்டிகளில் இனிப்புகளும், காரங்களும் பளபளக்க.. வெளியே ஒரு ஜூஸ் ஸ்டால் போட்டிருந்தார்கள்..!! கடைக்கு உள்ளேயே ஒரு பக்கம் நெட்டுக்க.. நான்கு பேர் அமர்கிற மாதிரி டேபிள்கள் நான்கைந்து வரிசையாக இடப்பட்டிருந்தன..!! எல்லா டேபிள்களையும் இப்போது ஆட்கள் ஆக்ரமித்திருக்க, கடைசி டேபிளில் மட்டும் ஒரே ஒருவர் தனியாக அமர்ந்திருந்தார். குனிந்து ந்யூஸ் பேப்பர் வாசித்தவாறு, டேபிள் மீதிருந்த டீயை அவ்வப்போது எடுத்து உறிஞ்சினார். வயதானவர்.. வரதராஜன் என்பது அவர் பேர்..!!

அசோக்கும் செண்பகமும் அவர் அமர்ந்திருந்த டேபிளில்தான் எதிரே சென்று அமர்ந்தார்கள். இவர்கள் சென்று அமர்ந்ததும் வரதாராஜன் ஒருமுறை நிமிர்ந்து இவர்களை பார்த்தார். அப்புறம் மீண்டும் ந்யூஸ் பேப்பரில் மூழ்கினார். இவர்கள் அவரை கண்டுகொள்ளவே இல்லை. அசோக் சுவர் ஓரமாக அமர, செண்பகம் அவனுக்கு பக்கவாட்டில், அவனை நெருக்கியடித்துக் கொண்டு அமர்ந்தாள். அவளுக்கும் சுவருக்கும் இடையில் சிக்கி நசுங்குவது மாதிரி ஒரு உணர்வு ஏற்பட, அசோக் கடுப்பானான். கிசுகிசுப்பான குரலில் அவளிடம் சொன்னான்.

"ஏய்.. கொஞ்சம் அந்தப்பக்கம் தள்ளி உக்காருடி.. குந்தானி..!!"

"இதுக்கு மேல எங்க தள்றது.. சீட்டு சின்னதா இருக்கு மாமா..!!"

செண்பகம் அசைய மறுத்தாள். அசோக் அவளை வெறுப்பாக முறைத்தான். வாய்க்குள் முணுமுணுத்தான்.

"அந்த சீட்டு சின்னதா இருக்கா..?? உன் சீட்டு பெருசா இருக்குன்னு சொல்லு..!!"

"என்னது.. என்ன சொன்னீங்க..??" அவன் சொன்னதன் அர்த்தம் புரியாமல் செண்பகம் கேட்க,

"ஒண்ணுல்ல விடு..!!" அசோக் சமாளித்தான்.

முட்டை பஃப்ஸ் என்று அழைத்து வந்திருந்தாலும்.. அதோடு சேர்த்து சமோசா, கேக், சான்ட்விச், பிஸ்கட் என்று இஷ்டத்திற்கு ஆர்டர் செய்தாள் செண்பகம்..!! அசோக் ஒற்றை சமோசா வாங்கி கடிக்க, செண்பகம் டேபிள் மீது கொண்டு வந்து வைக்கப்பட்ட அனைத்து ஐட்டங்களையும் ஒவ்வொன்றாக எடுத்து மேய்ந்து கொண்டிருந்தாள்.

வரதராஜன் டீயை முடித்துவிட்டு எழுந்தார். காசு கொடுத்துவிட்டு வெளியே நடந்தார். அவர் அந்தப்பக்கம் சென்றதுமே அசோக் இந்தப்பக்கம் செண்பகத்தின் புஜத்தை பற்றி திருகினான். அவள் வாயில் கேக்கோடு அலறினாள்.

"ஆஆஆஆ..!! என்ன மாமா..??"

"எதுக்க போய் உக்காருடி.. போ..!!"

"ஏன்..??"

"மூச்சு விட முடியல எனக்கு.. அப்டியே என்னை போட்டு அமுக்கிக்கிட்டு இருக்குற..!! போ அந்தப்பக்கம்..!!"

செண்பகம் கேக்கை கடித்துக்கொண்டே நகர்ந்து அந்தப்பக்கம் சென்றாள். வரதராஜன் அவ்வளவு நேரமாய் அமர்ந்திருந்த இருக்கையில் சென்று பொத்தென்று அமர்ந்தாள். அமர்ந்த வேகத்திலேயே.. அடியில் ஸ்ப்ரிங் வைத்திருந்த மாதிரி.. 'ஆஆஆஆ..' என்று அலறியவாறே துள்ளிக்கொண்டு எழுந்தாள்.

"ஏய்.. என்னாச்சு..??" அசோக் பதற்றமாய் கேட்டான்.

"குத்திடுச்சு மாமா..!!" செண்பகம் புட்டத்தை தடவிக்கொண்டே சொன்னாள்.

"எது குத்துச்சு..??"

அசோக் கேட்டுக்கொண்டிருக்க, செண்பகம் குனிந்து இருக்கையில் கிடந்த அந்த பேப்பர் பொட்டலத்தை கையில் எடுத்தாள். ஆர்வமாக பிரித்தாள்.

"என்னடி அது..??"

"ஏதோ தாலிச்சரடு மாமா..!!"

"எங்க.. குடு..!!"

அசோக் கையில் வாங்கிப் பார்த்தான். சற்றுமுன் தனக்கு எதிரே அமர்ந்திருந்தவர்தான் அதை தவறிப்போய் விட்டிருக்கவேண்டும் என்று நினைத்தான். உடனே படக்கென திரும்பிப் பார்த்தான். வாசலில் வரதராஜன் நின்றிருந்தார். அவருடைய முகத்தை சரியாக கவனிக்காவிட்டாலும், அவர் அணிந்திருந்த சட்டை நிறத்தை வைத்தே அசோக்கால் இங்கிருந்தே அவரை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.



"ஹேய் செம்பு.. அவர்தான் இதை விட்டுட்டு போயிருப்பார்னு நெனைக்கிறேன்..!!"

"ஹ்ம்ம்.. ஆமாம் மாமா.. எனக்கும் அப்படித்தான் தோணுது..!!"

"இரு.. நான் அவர்ட்டயே கேட்டு.. இதை குடுத்திட்டு வர்றேன்..!!" அசோக் எழுந்து கொள்ள,

"சரி மாமா..!!" சன்னமான குரலில் சொன்ன செண்பகம், சமோசாவை கடிக்க குனிந்தாள்.

அசோக் சற்று பொறுமையாகவே நடந்து வெளியே வந்தான். ஆனால் வெளியே வந்ததும்தான் அவனது பொறுமையான நடை எவ்வளவு பெரிய தவறு என்று புரிந்துகொண்டான். வரதராஜன் அதற்குள்ளாகவே தனது ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்திருந்தார். அசோக் உடனே பதற்றம் தொற்றிக்கொண்டவனாய்..

"ஹலோ.. ஸார்.." என்று கத்தினான்.

ஆனால் அந்த வார்த்தைகள் வந்து காதில் விழுவதற்கு முன்பே வரதராஜன் வண்டியை விரட்டியிருந்தார். 'இப்போது என்ன செய்வது..??' என்று அசோக் ஒரு சில வினாடிகள் எதுவும் புரியாமல் விழித்தான். 'இந்த பேக்கரி கடைக்காரனிடம் கொடுத்து.. உரியவரிடம் ஒப்படைக்க சொல்லலாமா..?' என்று யோசித்தான். அப்புறம் அந்த கடை முதலாளியின் முகத்தை பார்த்ததும், அவன் மீதிருந்த நம்பிக்கை போய் அந்த யோசனையை கைவிட்டான். திடீரென ஒரு யோசனை அவன் மனதில் உதித்தது. உடனே தன் பைக் மீது ஏறி அமர்ந்து கிக்கரை உதைத்தான்



வரதராஜன் மிதமான வேகத்திலேயே ஸ்கூட்டரை செலுத்திக் கொண்டிருந்தார். ஒரு இரண்டு கிலோ மீட்டர் தூரத்திலேயே அசோக்கால் அவரை விரட்டிப் பிடிக்க முடிந்தது. திடீரென குறுக்கே வண்டியை நிறுத்தி வழிமறித்த அசோக்கை வரதராஜன் சற்றே திகைப்பாக பார்த்தார். அசோக் பைக்குக்கு ஸ்டாண்ட் போட்டுவிட்டு அவரை நோக்கி நடந்து வந்தான்.

"எ..என்ன தம்பி..??" வரதராஜன் பதற்றமாக கேட்டார்.

"நீங்க.. அந்த பேக்கரில் டீ சாப்பிட்டீங்கல்ல..??"

"ம்ம்..ஆ..ஆமாம்..!! நீ..நீங்கதான எதுத்தாப்புல.. ஒரு பொண்ணோட..??"

"ஹ்ம்ம்.. நான்தான்..!!"

"எ..என்ன விஷயம் தம்பி..??"

"நீங்க அந்த பேக்கரில ஏதாவது பொருளை விட்டுட்டு வந்துட்டீங்களா..??"

"எ..என்ன சொல்றீங்க நீங்க..??" வரதராஜன் ஒருகணம் புரியாமல் விழிக்க,

"கொஞ்சம் காஸ்ட்லியான பொருள்.. அது என்னன்னு கரெக்டா சொல்லிட்டீங்கனா.. உங்கிட்ட குடுத்துடுவேன்..!!" அசோக் நிதானமாக சொன்னான்.

வரதராஜனுக்கு அப்புறமும் ஓரிரு வினாடிகள் எதுவும் புரியவில்லை. அப்புறந்தான் திடீரென ஞாபகம் வந்தவராய் தனது பேன்ட் பாக்கெட்டை அவசரமாக தடவிப் பார்த்தார். பார்த்தவர் பக்கென அதிர்ந்து போனவராய் அசோக்கை ஏறிட்டார்.

"தாலிச்சரடு.. என் சம்சாரத்தோட தாலிச்சரடு..!!"

என்றார் பதட்டமாக. அசோக் இப்போது அவரைப் பார்த்து அழகாக புன்னகைத்தான். தன் கைக்குள் மறைத்து வைத்திருந்த அந்த காகிதப் பொட்டலத்தை அவரிடம் நீட்டினான். வரதராஜன் படக்கென அதை வாங்கிக்கொண்டார். அவரசமாய் பிரித்து பார்த்தார். அந்த தாலிச்சரடை பார்த்ததும் அவருடைய கண்களில் ஓர் பிரகாசம். அந்த பொட்டலத்தை கைக்குள் வைத்து அழுத்திப் பற்றிக்கொண்டார். அப்படியே தனது மார்பின் இடது புறமாய் அதை வைத்துக் கொண்டார். விழிகளில் இப்போது நீர் அரும்ப அசோக்கை பார்த்து..

"ரொம்ப நன்றி தம்பி..!!!!" என்றார் நன்றிப்பெருக்குடன்.

"ஐயோ.. இதுக்கெதுக்குங்க நன்றிலாம்..?? உங்களுக்கு சொந்தமான பொருளை உங்ககிட்ட கொண்டு வந்து சேர்த்தேன்.. அவ்ளோதான..??"

"இல்ல தம்பி.. இந்தக்காலத்துல இதுக்கே ஒரு பெரிய நல்ல மனசு வேணும்..!! என் வாழ்நாள் முழுக்க உங்களை நான் மறக்க மாட்டேன்..!! ரொம்ப ரொம்ப நன்றி தம்பி..!!"

"பரவால ஸார்.. விடுங்க..!!"

வரதராஜன் இப்போது மீண்டும் தலையை குனிந்து அந்த தாலி சரடையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார். அவருடைய விழிகள் ரெண்டும் அகலமாய் விரிந்து போயிருக்க, ஒருமாதிரி உணர்ச்சிவசப்பட்டவராய் காணப்பட்டார். சில வினாடிகள் அந்த மாதிரி அந்த தாலி சரடை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவர், அப்புறம் அசோக்கை ஏறிட்டு சொன்னார்.

"என் கல்யாணத்தப்ப.. ஒரு மஞ்சக்கயித்தைத்தான் என் சம்சாரம் கழுத்துல தாலின்னு கட்டுனேன் தம்பி..!! அவளுக்குன்னு நான் வாங்குன மொத தங்கம் இதுதான்.. மொத தங்கம் மட்டும் இல்ல.. கடைசி தங்கமும் இதுதான்..!! அவ போய் இப்போ இருபது வருஷம் ஆச்சு.. இத்தனை நாளா அவ ஞாபகமா இதை பொட்டிக்குள்லையே பத்திரமா வச்சிருந்தேன்.. இன்னைக்குத்தான் வெளில எடுத்தேன்..!! எடுத்த அன்னைக்கே.. தவறிப்போய்..!! நல்லவேளை.. அந்த ஆண்டவனா பாத்து உங்களை அனுப்பி வச்சிருக்கான்..!!" தழதழத்த குரலில் அவர் பேசியதில் அசோக் நெகிழ்ந்து போனான்.

"ஹ்ம்ம்.. இத்தனை நாளா ஞாபாகார்த்தமா வச்சிருந்ததை.. இப்போ வெளில எடுக்குற சூழ்நிலைன்னா..?? ஏதாச்சும் கஷ்டமா உங்களுக்கு..??" அசோக் கவலையாக கேட்க, வரதராஜன் இப்போது புன்னகைத்தார்.

"ஹஹா.. கஷ்டம்லாம் ஒன்னும் இல்ல தம்பி..!! என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பாத்துட்டு இருக்கேன்.. இதை அழிச்சு அவளுக்கு ஏதாவது நகை செய்யலாம்னு வெளில எடுத்தேன்..!! ஏற்கனவே கொஞ்சம் சேத்து வச்சிருக்கேன்.. இருந்தாலும்.. இன்னும் ஒரு பத்து பவுன் இருந்தா நல்லதுன்னு தோணுச்சு.. அதான்..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்.. என்ன பண்றது தம்பி.. இந்தக்காலத்துல நல்ல மாப்பிள்ளை கெடைக்கனும்னா.. இந்த மாதிரி நெறைய நகை சேத்து வச்சுக்க வேண்டி இருக்கே..?? ஹாஹா..!!" வரதராஜன் சொல்லிவிட்டு சிரிக்க, அசோக் இப்போது புன்னகையுடன் அவரிடம் கேட்டான்.

"ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..??"

"ம்ம்.. சொல்லுங்க தம்பி..!!"

"நெறைய நகை கேக்குறவன் நல்ல மாப்பிள்ளை இல்லைங்க.. உங்ககிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்காதவன்தான் நல்ல மாப்பிளை..!!"

அசோக் சொன்ன வார்த்தைகளில் இருந்த கூர்மையில் வரதராஜன் ஒருகணம் திகைத்தார். அந்த வார்த்தைகளின் உள் அர்த்தத்தை முழுமையாக உணர்ந்து கொள்ள முனைந்தார். அப்புறம் சற்றே மனத் தெளிவடைந்தவராய் அசோக்கை ஏறிட்டு, புன்னகையும் பெருமிதமுமாக பார்த்தார். அவனுடைய முதுகை இதமாக தடவி..

"புரியுது தம்பி..!! உங்களை சந்திச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்..!!" என்றார்.

"சரி ஸார்..!! எனக்கு நேரம் ஆச்சு.. நான் கெளம்புறேன்..!! மொதல்ல இந்த தாலிச்சரடை கொண்டு போய் வீட்ல பத்திரமா வைங்க..!! கவலைப்படாதீங்க.. உங்க பொண்ணுக்கு.. உங்ககிட்ட இருந்து நெறைய எதிர்பார்க்காத.. நெஜமான நல்ல மாப்பிள்ளை கெடைப்பான்..!!"

சொல்லிவிட்டு அசோக் திரும்பி நடந்தான். தனது பைக்கில் ஏறி அமர்ந்தான். வண்டியை ஸ்டார்ட் செய்ய போகும்போதுதான், அவ்வளவு நேரமாய் தன் மனதில் குறுகுறுத்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தை வரதராஜனிடம் திரும்பி சொன்னான்.

"உங்களை எங்கயோ பாத்த மாதிரி இருக்கு ஸார் எனக்கு.. ஆனா.. எங்கன்னுதான் ஞாபகம் வரலை..!!"



"ஹாஹா.. அப்படியா..?? நான் உங்களை எங்கயும் பாத்த மாதிரி எனக்கு ஞாபகம் இல்லயே..!!"

"ஹ்ம்ம்.. உங்களுக்கு சொந்த ஊர் மதுரைப்பக்கமா..??"

"இல்ல தம்பி.. கிருஷ்ணகிரி.. இங்க வந்து ரொம்ப வருஷம் ஆச்சு..!!"

"ஓ.. ஓகே ஓகே..!! சரி ஸார்.. பாக்கலாம்..!!"

அசோக் வண்டியை கிளப்பினான். ஒரு யு டர்ன் அடித்து திருப்பினான். 'எங்கே பார்த்திருக்கிறோம் இவரை..??' என்று சில வினாடிகள் யோசனையுடனே வண்டியை செலுத்தினான். அப்புறந்தான் பேக்கரியில் தனியாக விட்டு வந்த செண்பகம் ஞாபகத்துக்கு வந்தாள். உடனே ஆக்சிலரேட்டரை முறுக்கி வண்டியை ஸ்பீடாக விரட்டினான்.

வரதராஜனை அசோக் பார்த்திருக்கிறான். ப்ரியாவின் பர்சனல் ஃபோட்டோக்களை பார்வையிடுகையில் அதில் ஒரு ஃபோட்டோவில் அவரை பார்த்திருக்கிறான். ஆனால் அது சில வருடங்களுக்கு முன்பு எடுத்த போட்டோ. அதில் கருகருவென நிறைய இருந்த அவரது தலைமுடி, இப்போது வெளுத்துப் போய் வெகுவாக குறைந்து போயிருந்தது. அதனால்தான் அவனுடைய மனதுக்கு சரியாக அவர் பிடிபடவில்லை.

அசோக் பேக்கரியை அடைந்தபோது.. செண்பகம் முகமெல்லாம் வியர்த்து வடிந்து போய் பதற்றமாக காணப்பட்டாள்..!! படபடக்கும் இதயத்துடன் இவனை காணாமல் தவித்துக் கொண்டிருந்தவள்.. இவனை பார்த்ததுமே 'அப்பாடா..!!!' என்று ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டாள்..!! ஆனால்.. அடுத்த நொடியே அவன் மீது ஒரு கோவம் வந்து மனதுக்குள் குடியேற.. கையை மடக்கி அவனுடைய புஜத்தில் ஓங்கி குத்தினாள்..!!

"ஆஆஆ..!!" அசோக் கத்தினான்.

"எங்க போயிட்டீங்க.. என்னை தனியா விட்டுட்டு..!! நான் எப்படி பயந்து போயிட்டேன் தெரியுமா..??"

"அவர் வண்டியை எடுத்துட்டு கெளம்பிட்டார்மா.. வெரட்டி புடிச்சு போய் குடுத்துட்டு வந்திருக்கேன்..!!"

"சொல்லிட்டு போறதுதான..??"

"சொல்றதுகுலாம் நேரம் இல்ல..!! ஒரு அஞ்சு நிமிஷந்தான.. அதுக்குள்ள இப்படி டர் ஆகிப்போய் உக்காந்திருக்குற..??"

"ஆமாம்.. நீங்க பாட்டுக்கு திடீர்னு காணாம போயிட்டீங்க.. பில்லுக்கு கூட பணம் குடுக்கலை..!!"

"அதான் தவுசண்ட் ருபீஸ் வச்சிருக்கேன்னு சொன்னியே.. அதை எடுத்து குடுக்குறதுதான..??" அசோக் கிண்டலாக கேட்க,

"அ..அது.. அது.. தவுசண்ட் ருபீஸ்க்கு இவன்கிட்ட சேன்ஜ் இருக்காதுல..??" செண்பகம் திக்கி திணறி சொன்னாள்.

"ப்ச்.. சேன்ஜ் இருக்காதுன்னு நீயா சொல்லிக்கிறதா..?? அவன்ட்ட குடுத்து பாத்தாத்தான தெரியும்..?? எடு அந்த தவுசண்ட் ருபீசை.. இவன்ட்ட சேன்ச் கேட்டுப் பாக்கலாம்..!!" சொல்லிக்கொண்டே அசோக் அவளுடைய கையில் இருந்த பர்ஸை பறிக்க,

"ஐயையோ.. இவன்ட்ட இருக்காது மாமா..!!" செண்பகம் பதறினாள்.

அசோக் அதற்குள்ளாகவே அவளுடைய பர்ஸை திறந்திருந்தான். பர்சுக்குள் பார்வையை வீசியவன் பலத்த அதிர்ச்சிக்கு உள்ளானான். உள்ளே ஒரு கசங்கிப்போன பத்து ரூபாய் நோட்டும், சில சில்லறை காசுகளும், நிறைய காற்றும் மட்டுமே இடத்தை அடைத்துக்கொண்டு இருந்தன. அதைப்பார்த்து நொந்துபோன அசோக், நிமிர்ந்து செண்பகத்தை ஏறிட்டு, அவளை கேவலமாய் ஒரு பார்வை பார்த்தான். அவளோ கட்டைவிரலை பற்களுக்கு இடையில் வைத்து கடித்தவாறே அசடு வழிந்தாள். அசோக் அந்த பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவள் முகத்திற்கு முன்பாக ஆட்டிக்காட்டியவாறே கடுப்புடன் கேட்டான்.

"இதுதான் உங்க ஊர்ல தவுசண்ட் ருபீசா செம்பு..??"

"இ..இல்ல மாமா.. அந்த தவுசண்ட் ருபீஸ் இங்க இல்ல..!!" செண்பகம் ஏதோ சமாளிக்க முயன்றாள்.

"வேற எங்க இருக்கு..?? ஏ டி எம் மெஷினுக்குள்ளயா..??" அசோக் பற்களை கடித்தவாறே கேட்டான்.

"ஐயோ.. இல்ல மாமா.. வீட்ல இருக்கு.. எடுத்துட்டு வரலாம்னு நெனச்சேன்..!! அக்காதான்.. செலவெல்லாம் அசோக் மாமா பாத்துப்பாரு.. நீ.." செண்பகம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

"வெறுங்கையை வீசிட்டு போன்னு சொன்னாங்களா..??"

"ஹ்ம்ம்..!!"

செண்பகம் சொல்லிவிட்டு கட்டைவிரலை கடிக்க, அசோக் நொந்து போனவனாய் தலையில் அடித்துக் கொண்டான்.


No comments:

Post a Comment