Tuesday, June 30, 2015

ஐ ஹேட் யூ, பட்.. - அத்தியாயம் - 19

ஆபீஸில் அன்று முழுவதும் ப்ரியா ஒரு விரக்தி மனநிலையுடனே இருந்தாள். அவளுடைய அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள். ஈடுபாடு இல்லாமலே கீ போர்ட் தட்டி கோட் அடித்தாள். அவ்வப்போது அவளையும் மீறி கண்ணோரமாய் கண்ணீர் வழியும். உடனே புறங்கையால் துடைத்துக்கொண்டு, மூக்கை விசும்பிக்கொள்வாள். தலையை உயர்த்தி, தூரமாய் அமர்ந்து தீவிரமாய் வேலை பார்த்துக் கொண்டிருக்கிற அசோக்கை ஏக்கமாய் பார்ப்பாள். அன்று மதிய உணவுக்கு கூட டீமோடு சேர்ந்து செல்லவில்லை அவள்..!! சென்றிருப்பாள்.. அவளை அழைக்க வந்தது வேறு ஆளாய் இருந்திருந்தால்..!!

"நாங்கலாம் லஞ்ச்க்கு போறோம்க்கா.. வர்றீங்களா..??" என்று புன்னகையுடன் வந்து கேட்ட செண்பகத்தை எரிச்சலாகத்தான் அவளால் ஏறிட்டு பார்க்க முடிந்தது.

"இ..இல்ல.. எனக்கு பசியில்ல.. நீங்க போங்க.. நான் அப்புறமா சாப்பிட்டுக்குறேன்..!!" என்றுதான் அவளால் சொல்ல முடிந்தது.



மாலையில்தான் அலுவல் சம்பந்தமாக அசோக்கிடம் ஏதோ கேட்க வேண்டி இருந்தது. எழுந்து செல்ல மனசில்லை. கம்யூனிகேடர் திறந்து பார்த்தாள். 'ASHOK AWAY' என்று காட்டியது. சில வினாடிகள் அந்த கம்யூனிகேடரையே கடுப்புடன் முறைத்தவள், அப்புறம் சேரில் இருந்து எழுந்து கொண்டாள். அறையை விட்டு வெளியேறி அசோக்கின் இடத்திற்கு சென்றாள். மானிட்டருக்கு தலையை கொடுத்தவாறு அமர்ந்திருந்த ஹரியிடம் இறுக்கமான குரலில் கேட்டாள்.

"எங்க போயிட்டான்..??"

"ஸ்குவாஷ் ஆட போறேன்னுட்டு போனான் ப்ரியா..!!" ஹரி மானிட்டரில் இருந்து பார்வையை நகரத்தாமலே சொன்னான்.

'ஸ்குவாஷா..?? யார் கூட..??' என்று கேட்க வாயெடுத்த ப்ரியா, பிறகு கேட்காமலேயே நிறுத்தினாள். தலையை சுழற்றி ஒரு பார்வை பார்த்தாள். டீமில் அனைவரும் அவரவர் இடத்தில் இருந்தார்கள்.. அசோக்கையும் செண்பகத்தையும் தவிர..!! அவர்கள் இரண்டு பேருந்தான் ஜோடியாக சென்றிருக்கிறார்கள் என்பது எளிதாக அவளுக்கு புரிந்து போனது. உடனே.. என்னவென்று சொல்ல முடியாத ஒரு எரிச்சலில் அவளுடைய உடல் திகுதிகுவென எரிய ஆரம்பித்தது..!! காலியாக இருந்த அசோக்கின் இருக்கையையே கொஞ்ச நேரம் வெறித்து பார்த்தாள். அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவளாய், அவளுடைய அறைக்கு விடுவிடுவென நடந்தாள்.

அறைக்குள் நுழைந்தவள், கப்போர்ட் திறந்து அந்த பேகை எடுத்துக் கொண்டாள். வெளியே வந்து.. மீண்டும் 'டக்.. டக்.. டக்..' என வேகமாய் நடந்து அந்த தளத்தின் அடுத்த மூலைக்கு சென்றாள். அங்கிருந்த ட்ரஸிங் ரூம் புகுந்து தாழிட்டுக்கொண்டாள். அணிந்திருந்த புடவையை பரபரவென அவிழ்த்து எறிந்தாள். பேக் திறந்து அந்த கருப்பு நிற டி-ஷர்ட்டையும், வெள்ளை நிற ஷார்ட்சையும் எடுத்து அவசரமாய் உடுத்திக் கொண்டாள். கால்களுக்கு ஷூ அணிந்து, லேஸை பிடித்து சரக்கென இழுத்தாள். ஹேர்பாண்ட் எடுத்து கூந்தலுக்கு மாட்டி.. முடிக்கற்றையை 'பட் பட்' என்று கீழே பிடித்து இழுத்து.. டைட் ஆக்கிக் கொண்டாள். தனது இறுக்கமான முகத்தை கண்ணாடியில் ஒருமுறை பார்த்துக் கொண்டாள். ஸ்குவாஷ் ராக்கெட்டை கையில் எடுத்து.. வலது காலை சற்றே பின்னுக்கு உயர்த்தி.. அந்தக்கால் ஷூவை ராக்கெட்டால் ரெண்டு தட்டு தட்டிவிட்டு.. புயலாய் கிளம்பினாள்..!!

அதே நேரம்.. ஸ்குவாஷ் கோர்ட்டில்.. அசோக் செண்பகத்திற்கு அந்த விளையாட்டை கற்றுத் தருகின்ற பேரில்.. அவளைப்போட்டு பாடாய் படுத்திக் கொண்டிருந்தான்..!!

"ஏண்டி.. பால் வர்றப்போ அதை திரும்ப அடிக்கனும்னு சொன்னா.. விட்டுட்டு பப்பரக்கான்னு பாத்துக்கிட்டு நிக்கிற..??" அசோக் பற்களை கடித்தவாறு கேட்டான்.

"ட்ரை பண்ணேன் மாமா.. முடியலை..!!" செண்பகம் பரிதாபமாக சொன்னாள்.

"ஓடிப்போய் எடுக்கணும்.. நீ அசைஞ்சு அசைஞ்சு போறதுக்குள்ள.. அது அஞ்சு தடவை பவுன்ஸ் ஆயிடுது..!!"

"ஓடத்தான் செஞ்சேன்.. அது அப்டீக்கா போகுது.. நான் என்ன பண்ணுவேன்..??"

"அப்டீக்கா போகாம.. 'என்னை அடிங்க ப்ளீஸ்..'னு உன்னை தேடியா வரும்..??"

"போங்க மாமா.. எனக்கு இந்த கேம் பிடிக்கல.. வேற ஏதாவது உக்காந்துட்டு வெளையாடுற கேம் ஆடலாம்..!!"

"உக்காந்துக்கிட்டா..?? ஏன்.. படுத்து கொட்டாவி விட்டுக்கிட்டே வெளையாடுற மாதிரி ஏதாவது கேம் ஆடலாமே..??"

"அப்படியுமா கேம் இருக்கு..??"

"அப்படியே அறைஞ்சன்னா பாத்துக்கோ..!! பால் எடுத்து போடுடி.. சர்வீஸ் போடுறேன்.. உன் எடத்துக்கு போ..!!"

"வேணாம் மாமா.. வெளையாண்டது போதும்..!!"

"என்னது.. போதுமா..?? ஆரம்பிச்சு அஞ்சு நிமிஷம் கூட ஆகல.. அதுக்குள்ளே போதும்னு சொல்ற..??"

"அஞ்சு நிமிஷம் கூட ஆகல.. ஆனா அதுக்குள்ள எனக்கு எப்படி வேர்த்து ஊத்துது பாருங்க..!! டயர்டாயிடுச்சு மாமா.. முடியல..!!"

"இங்க பாரு செம்பு.. உன் உடம்பு எளைக்கிறதுக்கு இதை விட நல்ல வழி.. வேற எதுவும் இல்ல..!! சொல்றதை கேளு.. டெயிலி ஒரு மணி நேரம் என்கூட ஸ்குவாஷ் ஆடு.. ஹன்சிகா மாதிரி பொதுபொதுன்னு இருக்குறவ, அனுஷ்கா மாதிரி சிக்குன்னு மாறிடுவ..!! போ.. இன்னும் கொஞ்ச நேரம்..!!"

"ஹன்சிகாக்கு என்ன கொறைச்சலு..??" செண்பகம் அவளுடைய இடத்துக்கு நகர்ந்துகொண்டே மெல்லிய குரலில் கேட்டாள்.

"எதுவும் கொறைச்சலுன்னு சொல்லல.. எல்லாம் நெறைச்சலுன்னுதான் சொல்றேன்.. போ போ..!!" அசோக் கேலியாக சொல்லிக்கொண்டே சர்வீஸ் போட தயாரானான்.

அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு இருவரும் தீவிரமாக, மன ஈடுபாட்டுடன் ஸ்குவாஷ் ஆடிக்கொண்டிருந்தார்கள். செண்பகம்தான் தனது கனத்த தேகத்தை தூக்கிக்கொண்டு ஓடி விளையாட மிகவும் கஷ்டப்பட்டாள். அசோக் அவளை ஐந்து நொடிக்கொரு முறை திட்டிக்கொண்டும், கேலி செய்துகொண்டுமே லாவகமாக பந்தடித்துக் கொண்டிருந்தான். வேண்டும் என்றே, அவள் அங்கும் ஓடி சென்று பந்தை அடிக்கும் வகையில் அவளை அலையவிட்டான்.

ஆட்ட சுவாரசியத்தில் அவர்கள் இருவரும் மூழ்கிப் போயியிருந்த நேரத்தில்தான், ப்ரியா அங்கு வந்து சேர்ந்தாள். கண்ணாடி கதவுக்கு வெளியே நின்றவாறு, அவர்கள் இருவரும் விளையாடுவதையே சிறிது நேரம் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். முன்பு இதே கோர்ட்டில்.. அவளும் அசோக்கும்.. வளர்ந்துவிட்ட குழந்தைகளாய்.. சிரிப்பும் கேலியுமாய்.. நேரம் போவதே தெரியாமல் விளையாடிய நினைவுகள் எல்லாம் இப்போது அவளுக்கு வந்தது..!! இன்று அவள் இடத்தில் இன்னொருத்தி அவனுடன் சேர்ந்து விளையாடுவதை பார்த்து.. அவளுடைய காதல் மனம் பொறுமியது..!! ஒருவித பொறாமை உணர்வுதான்.. தவறென்று அவளுடைய மூளை கண்டித்தாலும்.. அவளது மனம் அந்த கட்டளைக்கு கட்டுப்பட மறுத்தது..!!

கைவிரல்களை மடக்கி அந்த கண்ணாடி கதவை 'லொட்.. லொட்..' என்று தட்டினாள். செண்பகம்தான் முதலில் அந்த சப்தம் கேட்டு திரும்பி பார்த்தாள். ப்ரியாவை பார்த்து லேசாக ஆச்சரியமுற்றவள், அப்புறம் கதவை நோக்கி நடந்து வந்தாள். இப்போது அசோக்கும் திரும்பி பார்த்தான். ப்ரியா வந்திருப்பதை உணர்ந்ததும் சற்றே குழப்பமாய் நெற்றி சுருக்கினான். செண்பகம் கதவை திறந்துவிட ப்ரியா உள்ளே நுழைந்தாள். நுழைந்தவள் அசோக்கை திரும்பி கூட பார்க்காமல், செண்பகத்திடம் இறுக்கமான குரலில் கேட்டாள்.

"உன்கிட்ட ஒரு பி.ஓ.ஸி பண்ணிக்காட்ட சொல்லி கேட்டிருந்தனே.. என்னாச்சு..??" ப்ரியாவின் இந்த திடீர் கேள்வியை எதிர்பாராத செண்பகம்,

"அ..அது.. அது பண்ணிட்டு இருக்கேன்க்கா..!!" தடுமாற்றமாய் சொன்னாள்.

"குடுத்த வேலையை முடிக்காம இங்க வந்து ஜாலியா வெளையாடிட்டு இருக்கியா..?? இங்க பாரு செண்பகம்.. நீ இன்னும் ப்ரோபேஷன் பீரியட்லதான் இருக்குற.. நீ வொர்க் பண்ற விதம் சாடிஸ்ஃபாக்ட்ரியா இருக்குன்னு நான் ரிப்போர்ட் குடுத்தாத்தான்.. உன் வேலையை கன்ஃபார்ம் பண்ணுவாங்க.. ஞாபகம் இருக்குல..??" ப்ரியாவின் குரல் மிரட்டலாய் ஒலிக்க,

"இ..இருக்குக்கா.. நா..நாளைக்கு முடிச்சுர்றேன்..!!" செண்பகம் நிஜமாகவே மிரண்டு போய் சொன்னாள்.

"நாளைக்கா..?? எனக்கு இன்னைக்கு வேணும்..!!"

"இ..இன்னைக்கேவா..??"

"ஆமாம்.. கெளம்பு.. போ.. போய் வேலையை பாரு..!!"

செண்பகம் ப்ரியாவின் முகத்தையே மருட்சியாக ஒரு பார்வை பார்த்தாள். ஏமாற்றம் அப்பிய முகத்துடன் அசோக்கை ஒருமுறை திரும்பி பார்த்துக் கொண்டாள். பிறகு பிரியாவை ஏறிட்டு,

"ச..சரிக்கா..!!" என்று மெல்ல தலையாட்டினாள்.

கதவு திறந்து செண்பகம் தயங்கி தயங்கி வெளியேற, கண்களை இடுக்கியவாறு அவள் முதுகையே ப்ரியா வெறித்துக் கொண்டிருந்தாள். அவள் சென்றதும்தான் தலையை சுழற்றி அசோக்கின் முகத்தை கூர்மையாக ஒரு பார்வை பார்த்தாள். அவனோ இவளை எரித்துவிடுவது போல முறைத்துக் கொண்டிருந்தான். இவள் பார்த்ததும் அவனும் 'ச்ச..' வெறுப்பை உமிழ்ந்துவிட்டு, கோர்ட்டை விட்டு வெளியேறும் எண்ணத்துடன் கதவு நோக்கி நடக்கலானான். அவன் ப்ரியாவை கடக்கிற சமயத்தில், அவள் எள்ளலான குரலில் கேட்டாள்.

"நீ எங்க கெளம்பிட்ட..??"

"எனக்கும் வேலை இருக்குது.. நான் போறேன்..!!" அசோக் சற்றே வெறுப்பாக சொன்னான்.

"உன் வேலைய நாளைக்கு முடிச்சா போதும்.. வா.. ஒரு கேம் ஆடலாம்..!!"

"எ..எனக்கு மூட் இல்ல..!!" அசோக் சலிப்பாக சொல்ல.

"இவ்வளவு நேரம் அவ கூட வெளையாட மட்டும் மூட் இருந்ததோ..??" ப்ரியா சூடாக கேட்டாள்.

"ஆமாம்.. அப்படியே வச்சுக்கோ..!! உன்கூட வெளையாட எனக்கு புடிக்கலை.. போதுமா..??"

"ஹாஹா.. என்கூட வெளையாண்டா தோத்துடுவ.. பயம்..!! அப்படித்தான..??" ப்ரியா அவனுடைய தன்மானத்தை சீண்டி வலை விரித்தாள்.

"ஏய்.. யா..யாருக்கு பயம்..?? எனக்கு எவளை பாத்தும் பயம் இல்ல..!!" அசோக்கும் வீறாப்புடன் அந்த வலையில் சிக்கிக்கொண்டான்.

"அப்போ வா.. வெளையாடலாம்..!!" சொல்லிவிட்டு ப்ரியா அசோக்கின் கண்களையே கூர்மையாக பார்த்தாள். அவளையே முறைத்துக்கொண்டிருந்த அசோக்கும் கொஞ்சம் கூட தயங்கவில்லை.

"ஓகே.. வெளையடாலாம்..!!" என்றான்.

ப்ரியா அசோக்கைப் பார்த்து ஒரு கேலிப்புன்னகையை உதிர்த்தவாறே, அவளுடைய வலது கையை நீட்டி, திறந்திருந்த கண்ணாடி கதவை அடைத்து தாழிட்டாள். கையிலிருந்த ராக்கெட்டால் கீழே கிடந்த பந்தை ஸ்கூப் செய்து அசோக்கின் பக்கமாய் வீச, அவன் அதை கேட்ச் பிடித்துக் கொண்டான்.

"சர்வீஸ் போடு..!!"

சொன்ன ப்ரியா நகர்ந்து சென்று கோர்ட்டின் மையப்பகுதியில் நின்றுகொண்டாள். முதுகை வளைத்து.. சற்றே முன்புறமாக குனிந்து.. இரண்டு கையாலும் ராக்கெட்டை வலுவாக பிடித்தவாறு.. கண்களை இடுக்கி சுவற்றை கூர்மையாக வெறித்தாள்..!!

அசோக் அவனுடைய இடத்திற்கு நகர்ந்தான். பந்தை தூக்கி போட்டு சர்வீஸ் செய்தான். பந்து சுவற்றில் மோதி திரும்ப வந்தது. ப்ரியாவை நோக்கி சென்றது. அவள் அதற்காகத்தான் காத்திருந்தாள். உடம்பில் இருக்கும் மொத்த வலுவையும் தன்னுடைய வலது கையில் திரட்டி, பற்களை கடித்துக்கொண்டு, சரெக்கென்று ஓங்கி ஒரு அடி அடித்தாள். பந்து மின்னல் வேகத்தில் சுவரை நோக்கி பறந்தது. அதே வேகத்தில் அசோக்கை நோக்கி திரும்ப வந்தது. அவன் சுதாரித்துக் கொள்வதற்கு கொஞ்சமும் அவகாசம் கொடுக்காமல், அவனுடைய அடிவயிற்றில் சென்று 'தொம்..!!!' என அடித்தது.

"ஆஹ்ஹ்க்க்க்க்...!!!!!!"

அசோக் வலியில் முனகியவாறே அடிவயிறை பிடித்துக் கொண்டான். கண்களுக்கு முன் நட்சத்திரங்கள் பறப்பது மாதிரி அவனுக்கு ஒரு உணர்வு. அவன் முகம் சுருக்கி வலியில் துடிக்க, ப்ரியா உணர்ச்சியற்ற முகத்துடன் அவனை வெறித்து பார்த்தாள். அவளுடைய கண்களில் மட்டும் ஒருவித குரூர திருப்தி. உதட்டில் மெலிதான புன்னகையுடன் கேலியாக கேட்டாள்.





"பால் வர்றப்போ அதை திரும்ப அடிக்கனும்னு தெரியாது.. காட்டிட்டு நிக்கிற..??"

"ஏ..ஏய்.. எ..என்னடி இவ்ளோ ஸ்பீடா அடிக்கிற..??" அசோக் அடிவயிற்றில் வேதனையுடன் திக்கி திணறி கேட்டான்.

"வேற எப்படி அடிக்கிறது.. அதான கேம்..?? நோகாம வெளையாடனும்னா.. செண்பகம் மாதிரி ஏதாவது சின்னப்புள்ளைங்க கூடதான் போய் விளையாடனும்..!!"

ப்ரியா கிண்டலாக சொல்ல, அசோக் இப்போது அவளை ஏறிட்டு முறைத்தான். அவளுடைய வார்த்தைகள் அவனுடைய ரோஷத்தை கிளப்பி விடுவதாக இருந்தன. கீழே கிடந்த பந்தை எடுத்து அவளிடம் தூக்கி போட்டான்.

"சர்வ் பண்ணு..!!"

என்று கெத்தாக சொல்லிவிட்டு, அடிவயிற்றில் ஒரு அவஸ்தையுடனே நடந்து சென்று, அவளுடைய சர்வீசை எதிர்கொள்ள தயாராக போய் நின்றான். ப்ரியா ஓரக்கண்ணால் அசோக்கை ஒரு கேலிப்பார்வை பார்த்தபடியே சர்வீஸ் போட்டாள். அசோக் திரும்ப அடித்தான். ப்ரியா இப்போது மீண்டும் மின்னல் போல பந்துக்கு ஒரு அடி போட, அது அசோக்கின் முகத்தை நோக்கி 'விரர்ர்ர்ர்....' என்று விரைந்து வந்தது. பந்தின் வேகத்துக்கு தன்னால் எதிர்நிற்க முடியாது என்பதை அசோக் தாமதமாகவே உணர்ந்து கொண்டான். காற்றைக் கிழித்துக்கொண்டு பறந்து வருகிற பந்தின் பாதையில் இருந்து விலகிக்கொள்ள நினைத்தவன், முகத்தை திருப்பினான். பந்து அவனுடைய தலையில் 'நச்ச்..!!' என்று அடித்து மேல்நோக்கி ராக்கெட் மாதிரி கிளம்பியது. அவனுக்கு தலையை சுற்றி மின்மினிகள் பறந்தன.

"ஆஆஆஆஹ்...!!" என்று அலறினான்.

அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு அவன் அவ்வாறு அலறிக்கொண்டே இருக்க வேண்டி இருந்தது. ப்ரியாவின் கைகள் ப்ளாஷ் அடிப்பது போல பளிச் பளிச்சென்று வெட்டிக்கொண்டே இருந்தன. பந்து புல்லட் வேகத்தில் சுவரை நோக்கி பறப்பதும், திரும்ப அசுர வேகத்தில் விரைந்து வந்து அசோக்குடைய உடலின் ஏதாவது ஒரு பகுதியை வன்மையாக தாக்குவதுமாக இருந்தது. 'ஐயோ.. அம்மா..' என்று முக்கலும், முனகலுமாகவே அசோக் அந்த அடிகளை வாங்கிக்கொண்டான்.

"ஏ..ஏண்டி இப்படி வெறி புடிச்ச மாதிரி ஆடுற..??" அசோக் பரிதாபமாக கேட்க,

"எல்லாம் ஒழுங்காத்தான் ஆடுறாங்க.. போடு போடு..!!" ப்ரியா அலட்சியமாக சொன்னாள்.

ப்ரியாவின் மின்னல் வேக ஆட்டத்திற்கு தன்னால் ஈடுகொடுக்க முடியவில்லை என்று அசோக்கிற்கு தெளிவாக புரிந்தது. ஆனால் போட்டியில் இருந்து விலகிக்கொள்ளவும் அவனுடைய ஈகோ இடம் தரவில்லை. எப்படியாவது சமாளித்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆட்டத்தை தொடர்ந்தான். ஆனால் அவளை சமாளிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. பந்தாலேயே உடம்பெல்லாம் 'சொத்..சொத்..' என்று அடி வாங்கி முனகத்தான் அவனால் முடிந்தது.

அசோக் சொன்ன மாதிரி ப்ரியா ஒரு வெறியுடன்தான் இருந்தாள். அவன் மீதான அவளுடைய ஏக்கம்.. அந்த ஏக்கம் நிறைவேறாத ஏமாற்றம்.. அந்த ஏமாற்றம் அவளுக்களித்த அழுகை.. அந்த அழுகை அவளுக்குள் கிளப்பிவிட்ட ஆத்திரம்..!! எல்லாமுமாய் சேர்ந்து வெறியாக உருமாறி.. அவளுடைய ஸ்குவாஷ் ராக்கெட் மூலமாக வெளிப்பட்டது..!! பாயிண்டுகள் எடுக்கவேண்டும் என்பதெல்லாம் அவளுடைய நோக்கமாக இருக்கவில்லை. அசோக்கிற்கு அடிவிழுவது மாதிரி குறிபார்த்து பந்தடிப்பதுதான் அவளது குறிக்கோளாக இருந்தது..!!

அந்த மாதிரி விளையாட்டு என்கிற போர்வையில்.. ப்ரியா அசோக்கின் உடம்பை பதம் பார்த்துக் கொண்டிருக்கையில்தான்.. ஒருமுறை ப்ரியா சுவற்றில் அடித்த பந்து ஏவுகணை மாதிரி அசோக்கின் முகத்தை குறிவைத்து சீறிக்கொண்டு வந்தது. பந்தை அடித்துவிடவேண்டும் என்று அசோக் தனது ராக்கெட்டை வீசினான். ஆனால் படுவேகத்தில் பறந்து வந்த பந்து அவனுடைய ராக்கெட் வீச்சுக்கு தப்பி, அவனுடைய வலது கண்ணிலேயே வந்து 'டமார்..' என அறைந்தது. அவ்வளவுதான்..!!

"அம்மாஆஆஆ..!!"

என்று கத்திக்கொண்டே அசோக் கையிலிருந்த ராக்கெட்டை நழுவவிட்டான். இரண்டு கைகளாலும் கண்ணை பொத்திக்கொண்டு, அப்படியே கால்கள் மடங்க தரையில் சரிந்தான். 'ஆ... ஆ... ஆ...' என வேதனையாக முனகினான். நெளிந்தான்.

ப்ரியா எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக நின்றிருந்தாள். வேகவேகமாய் மூச்சு விட்டதில், அவளுடைய மார்புகள் மட்டும் குபுக் குபுக்கென ஏறி இறங்கிக்கொண்டிருந்தன. அவளுடய கண்கள், அவளது காலடியில் சுருண்டு விழுந்து கிடக்கும் காதலனை ஒருவித வெறித்த பார்வை பார்த்தன. அவள் மனதில் இப்போது ஒரு திருப்தி.. அசோக்கை அடித்து வீழ்த்திவிட்ட திருப்தி.. காலையில் இருந்து நெஞ்சுக்குள் சேமித்து வைத்திருந்த அழுத்தத்தையும், ஆத்திரத்தையும் வெளிப்படுத்திவிட்ட திருப்தி..!! அவளுடைய உதடுகளில் மீண்டும் அந்த குரூர புன்னகை..!!

ஆனால்.. ஒருசில விநாடிகள்தான் அந்த புன்னகை அவளிடம் நீடித்திருந்தது..!! அடுத்த கணமே அவளுடைய காதல் மனது விழித்துக் கொண்டது.. அசோக்கை பார்க்க பாவமாக இருந்தது..!! உடனே கையிலிருந்த ராக்கெட்டை கீழே போட்டுவிட்டு, மண்டியிட்டு அமர்ந்தாள். குப்புற கிடந்த அசோக்கிடம் குனிந்து அவனுடைய தலையை இதமாக தடவி, அவனுடைய முகத்தை தனது கைகளால் மென்மையாக தாங்கியவாறே சொன்னாள்.

"எங்க காட்டு.. பாக்கலாம்..!!"

"ப்ச்.. போடீ..!!" அசோக் கடுப்புடன் அவளுடைய கைகளை தட்டிவிட்டான். "ஷ்ஷ்ஷ்.. ஆஆஆ..!!" என வலியில் முனகினான்.

"ஏய்.. காட்டுன்றன்ல.. காட்டுடா..!!"

ப்ரியா அவனுடைய கைகளை வலுக்கட்டாயமாக பற்றி விலக்கினாள். அசோக்கிற்கு அடிபட்ட கண்ணை திறக்க முடியவில்லை. அந்த கண்ணில் இருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது. ஒரு கண் மூடியிருக்க, ஒரு கண்ணை மட்டும் திறந்து ப்ரியாவை பரிதாபமாக பார்த்தான். அவனை அந்த போஸில் பார்க்க ப்ரியாவிற்கு சிரிப்பு வந்தது. ஆனால் அந்த சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு,

"அபப்டியே.. கண்ணை தெறக்க ட்ரை பண்ணு..!!" என்றாள்.

"முடியலைடி.. வலிக்குது.. ம்மாஆஆ..!!"

"ஹ்ம்ம்.. சரி.. மொதல்ல நீ எந்திரி.. வா...!!"

ப்ரியா அசோக்கின் ஒரு கையை எடுத்து தன் தோளில் போட்டுக்கொண்டாள். அவனுடைய இடுப்பை வளைத்து பிடித்து, அவன் எழுந்துகொள்வதற்கு உதவினாள். கைத்தாங்கலாக கூட்டிச்சென்று கோர்ட்டுக்கு வெளியே கிடந்த ஒரு சேரில் அமரவைத்தாள். அவனை அங்கேயே அமர சொல்லிவிட்டு அவசரமாக நடந்து சென்றாள். ஓரிரு நிமிடங்களிலேயே கையில் ஒரு துணிப்பந்தோடு திரும்பவந்தாள். ஐஸ்கட்டிகளை உள்ளடக்கி சுற்றப்பட்ட துணிப்பந்து..!!



அசோக் 'ஆஹ்.. ஆஹ்..' என்று அவஸ்தையாக முனகிக்கொண்டிருக்க.. ப்ரியா அவனது வீங்கிய கண்ணை சுற்றி ஐஸ் ஒத்தடம் கொடுத்துக்கொண்டே சொன்னாள்.

"ஹ்ஹ்ம்ம்ம்.. ஓவரா ஆட்டம் போட்டா.. இப்படித்தான் அடி கெடைக்கும்..!!" அவள் சொன்னதும் அசோக்குக்கு சுருக்கென்று கோவம் வந்தது.

"நான் எங்கடி ஓவரா ஆட்டம் போட்டேன்.."

என்று கத்தியவன், தொடர்ந்து 'லூஸு' என்றும் கத்த நினைத்திருந்தான். ஆனால் காலையில் அவள் சீறியது ஞாபகம் வர, அப்படியே வாய்க்குள்ளேயே அந்த வார்த்தையை போட்டு மென்றான். ஆனால்.. ப்ரியா புரிந்து கொண்டாள்.. அடுத்து என்ன சொல்ல நினைத்திருப்பான் என்று.. அவன் கத்தியது பாதியிலேயே தடைப்பட்டுவிட்டது மாதிரி ஒரு உணர்வு அவளுக்கு..!! அவனுடய கண்ணோரமாய் துணிப்பந்தை வைத்து அழுத்தியவாறே..

"பரவால.. சொல்லிக்கோ..!!" என்றாள் மெல்லிய குரலில். அதற்கு மேலும் அசோக்கால் அடக்கிக்கொள்ள முடியவில்லை.

"லூஸு..!!!!" என்று வாய்விட்டு கத்தின பிறகுதான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

அவன் கத்தியதற்கு ப்ரியா மெலிதாக புன்னகைத்துக் கொண்டாள். கவனமாக அவனுடய கண்ணுக்கு கொஞ்ச நேரம் ஒத்தடம் கொடுத்தாள். ஒத்தடம் கொடுத்தது அசோக்கின் கண்ணில் ஏற்பட்டிருந்த வேதனையை வெகுவாக குறைத்தது. ஓரிரு நிமிடங்களுக்கு அப்புறம் மெல்ல கண்ணை திறந்து பார்த்தான். இமைகளை ஒருமாதிரி சுருக்கி சுருக்கி விழித்தான்.

"ப்ச்.. ஒன்னும் இல்லடா.. ஓவரா ஸீன் போடாத..!!" ப்ரியா நக்கலாக சொன்னாள்.

"அடிங்.. பண்றதையும் பண்ணிட்டு.. நான் ஓவர் ஸீன் போடுறனா..??"

"நான் என்ன பண்ணினேன்.. வெளையாட்டுனா அடிபடுறது சகஜம்தான்.. அதுக்கு நான் என்ன பண்ணுவேன்..??"

"வெளையாட்டுலாம் இல்ல.. நீ வேணும்னே பண்ணுன.. எனக்கு நல்லா தெரியும்..!! வெறியாட்டம் ஆடிட்டு.. வெளையாட்டாம்ல வெளையாட்டு..!!" அசோக் கடுப்புடன் சொல்ல, ப்ரியா அதை கண்டுகொள்ளாமல் கூலாக சொன்னாள்.

"சரி விடு.. வா.. இன்னொரு கேம் ஆடலாம்..!!"

"எதுக்கு..?? இன்னொரு கண்ணையும் நொள்ளையாக்குறதுக்கா..??"

"ஹாஹா.. நான்தான் வேணுன்னு பண்ணலைன்னு சொல்றேன்ல..??"

"நீ வேணுன்னு பண்ணுனியோ.. வேணாம்னு பண்ணுனியோ..!! எனக்கு ஸ்குவாஷ் மேல இருந்த ஆசையே போச்சு..!!"

"ஓ..!! அப்போ இனி நீ ஸ்குவாஷ் ஆட மாட்ட..??" ப்ரியா அசோக்கை கூர்மையாக பார்த்தவாறு கேட்டாள்.

"ஏழேழு ஜென்மத்துக்கும் ஆட மாட்டேன்.. யப்பா..!!" அசோக் தலையை உதறியவாறே சொன்னான்.



"ஹ்ம்ம்.. ஓகே.. நல்ல முடிவு..!! நாளைப்பின்ன.. வேற யார் கூடவாவது வெளையாடுனேன்னு தெரிஞ்சது..??"

"என்ன பண்ணுவ..??"

"ஒண்ணுல்ல.. 'நாம ரெண்டு பேரும் ஒரு கேம் ஆடலாம் வா..'னு கூப்பிடுவேன்..!!"

ப்ரியா குறும்பாக சொல்லிவிட்டு சிரிக்க, அசோக் அவளையே முறைத்து பார்த்தான்.




No comments:

Post a Comment