Monday, June 29, 2015

ஐ ஹேட் யூ, பட்.. - அத்தியாயம் - 14

அசோக்கிற்கு திகில் படங்கள் பார்ப்பதென்றால் அலாதி ப்ரியம்..!! அதுவும் நள்ளிரவில்.. கும்மிருட்டுக்குள்.. தனியாக அமர்ந்து பார்க்கவேண்டும்..!! தனது லேப்டாப்பில்.. ஆங்கில மொழியில் வெளியான பேய்ப்படம் ஒன்றை ஓட விட்டு.. காதுக்கு ஹெட்ஃபோன் கொடுத்து.. கண்களிலும் இதயத்திலும் பயம் நிரம்பி வழிய வழிய.. ஒருவித பதைபதைப்புடன் பார்க்கவேண்டும்.. பார்க்கும்போதே இதயம் படக் படக்கென பதறி துடிக்கவேண்டும்.. அதில் அவனுக்கு ஒரு ஆனந்தம்..!!

அன்றும் அந்த மாதிரிதான்.. நேரம் நள்ளிரவு 12 மணியை தாண்டியிருந்தது..!! அசோக் தனது படுக்கையில் கால்களை இறுக்க கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான். அவனுக்கு முன்பிருந்த லேப்டாப்பில் புதிதாக வெளியாயிருந்த ஒரு ஆங்கில பேய்ப்படம் ஓடிக்கொண்டிருந்தது. அறையின் இரவு விளக்கு கூட அணைக்கப்பட்டிருக்க, லேப்டாப் மட்டுமே செவ்வக வடிவத்தில் வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது. படம் முழுக்கவே அவ்வப்போது வந்த பயமுறுத்தும் காட்சிகளால் அசோக் திகிலடைந்து போயிருந்தான். இப்போது படத்தின் க்ளைமாக்ஸ் ஓடிக்கொண்டிருந்தது. பார்ப்பவர்களை உச்சபட்சமாய் பயமுறுத்தி பார்க்கிற படலம்..!!

இருண்டு போன பேய் பங்களா ஒன்றில் தனியாக மாட்டிக்கொண்ட கதாநாயகன், ஒரு அறைக்குள் இருந்து வினோத ஒலி கிளம்புவதை கேட்கிறான். சுற்றிலும் இருள் மண்டிக்கிடக்க, கையில் இருக்கும் ஒரு சிறிய விளக்குடன் அந்த அறையை நோக்கி மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாய் எடுத்து வைக்கிறான். சிறு ஓசை கூட இல்லாமல் ஒரே நிசப்தமாய் காட்சி நகர, அசோக் அந்த காட்சியுடன் மிகவும் ஒன்றிப்போய் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய விழிகள் விரிந்து போய் லேப்டாப்பை வெறித்துக் கொண்டிருக்க, அவனது இதயம் சுருங்கி விரியும் சப்தத்தை கூட அவனால் தெளிவாக கேட்க முடிந்தது. அப்போதுதான் திடீரென அவனுடைய முதுகுப்பக்கம் கிடந்த செல்போன் வீறிட்டது..!!


"நாக்ரதனா திரனனா தனனா.. தன நாக்ரதனா தன திரனனா திரனா..!!"

'எந்த நேரமும் பேய் தனது கோர முகத்தை காட்டப்போகிறது..' என்று திரையையே வெறித்துக் கொண்டிருந்த அசோக், அவனுக்கு பின்பக்கமாக இருந்து செல்போன் திடீரென அலறியதும் அப்படியே குலை நடுங்கிப் போனான். அவனுடைய கட்டுப்பாடின்றியே 'ஆஆவ்...!!' என்று கத்திவிட்டான். நாடி நரம்பெல்லாம் இன்ஸ்டண்டாய் ஒரு பய மின்சாரம் ஓட, உடல் உதறல் எடுத்துக் கொண்டது.. குப்பென வியர்த்துப் போனது..!! இருதயம் உச்ச பட்ச வேகத்தில் திடுக் திடுக் என அடித்துக் கொண்டது. மார்பு குபுக் குபுக்கென விரிந்து விரிந்து சுருங்க, மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கினான். 

செல்போன்தான் அடித்தது என்று அவன் புத்திக்கு புரிந்த பின்னும், மிரண்டு போன அவனது இதயம் தனது துடிப்பின் வேகத்தை குறைக்க நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது. அவனுடைய உடலில் எழுந்த பய அதிர்வும் அடங்க சில வினாடிகள் பிடித்தன. கண்களை மூடி சுவாசத்தை சீராக்க முயற்சி செய்தான்.

அவனுடைய மனதும் உடலும் ஓரளவு ஆசுவாசம் அடைந்ததும், 'இந்த நேரத்துல எந்த எழவெடுத்த நாயி..??' என்று உலகமாக ஆத்திரத்துடன், இன்னும் நடுங்கும் விரல்களாலேயே அவசரமாய் தன் செல்போனை எட்டி எடுத்தான். எடுத்து டிஸ்ப்ளே பார்த்தவன் இன்னும் அதிகமான ஆத்திரத்துக்கு உள்ளானான். ப்ரியா கால் செய்திருந்தாள்..!!

'ச்ச.. பகல்லதான் பத்திரகாளி மாதிரி அந்த ஆட்டம் ஆடுறான்னா.. ராத்திரிலயும் ரத்தக்காட்டேரி மாதிரி.. இப்படி ஃபோன் பண்ணி கிலியை கிளப்புறாளே..?? மனுஷனை நிம்மதியாவே இருக்க விடமாட்டாளா..??' என்று பற்களை நறநறவென கடித்தான். அந்த ஆத்திரத்துடனே கால் பிக்கப் செய்து காதில் வைத்தான். ப்ரியா ஹலோ சொல்வதற்கு முன்பே இவன் அவளை கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்தான்..!!



"பிசாசு.. பிசாசு.. பேய்.. காட்டேரி..!!"

"ப்ச்.. ஏண்டா திட்டுற..??" அடுத்த முனையில் ப்ரியா எரிச்சலாக கேட்டாள்.

"பின்ன என்ன.. ஃபோன் பண்றதுக்கு உனக்கு வேற நேரமே கெடைக்கலையா..?? நடுச்சாமத்துல ஜகன்மோகினி மாதிரி..!!"

"எ..எனக்கு உன்கிட்ட பேசணும் போல இருந்தது..!!"

"இந்த நேரத்துலயா..??"

"ஹ்ம்ம்..!!"

"ஏன்..??"

"எனக்கு தூக்கமே வரலை..!!"

"ஓ.. தாலாட்டு பாடணுமா நான்..??" அசோக் எரிச்சலும் கேலியுமாய் கேட்டான்.

"இ..இல்ல..!!"

"அப்புறம்..??"

"எ..என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லணும்..!!" ப்ரியா ஒருமாதிரி பரிதாபமான குரலில் சொல்ல, இப்போது அசோக் சற்றே ஆத்திரம் தணிந்தான்.

"எதுக்கு மன்னிப்பு..??" என்றான் கம்மலான குரலில்.



"நா..நான்.. சத்தியமா உன்னை ஹர்ட் பண்ணனும்னு இன்னைக்கு காலைல அப்படி சொல்லலடா.. எப்போவும் போலதான் வெளையாட்டுக்கு சொன்னேன்..!! நாம பேசிட்டு இருந்த சிச்சுவேஷன் சரி இல்லாததால.. உனக்கு தப்பா தோணிருச்சு..!! நீயே கொஞ்சம் நல்லா யோசிச்சு பாரு அசோக்.. உன்னைப்போய் நான் அப்படிலாம் நெனைப்பனா.. எவ கட்டிப்பான்லாம்.. ம்ம்ம்..?? உனக்கு என்னடா கொறைச்சல்..?? உன்னை கட்டிக்க பொண்ணுகலாம் நான் நீன்னு போட்டி போடுவாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்..!!"

"ம்ம்ஹ்ஹ்ம்ம்.. இதை சொல்லத்தான் இந்த நடுராத்திரில கால் பண்ணினியா..??"

"ஆமாம்..!! அப்புறம்.. உன் லீவ் கேன்சல் பண்ணினது கூட நான் வேணும்னு பண்ணல.. எனக்கு வேற வழி தெரியலை அசோக்.. கிரிட்டிக்கல் வொர்க்.. உன்னை விட்ட எனக்கு வேற யார் இருக்கா.. சொல்லு..!! உனக்கு கண்டிப்பா லீவ் வேணும்னா.. பாலாட்ட பேசு.. அவர் ஓகே சொன்னா.. நான் அப்ரூவ் பண்றேன்..!!"

"பரவால.. நான் அவனுக்கு ஃபோன் பண்ணி வர முடியாதுன்னு சொல்லிட்டேன்..!!"

"ஹ்ம்ம்.. எனக்கு இன்னிக்கு பூரா அதே நெனைப்பாவே இருந்தது அசோக்.. நான் சொன்னதை நீ தப்பா எடுத்துக்கிட்டியேன்னு நெனச்சு நெனச்சு.. எந்த வேலையுமே ஓடலை..!! இப்போ படுத்து இவ்வளவு நேரம் ஆகியும் தூக்கமே வரலை.. எவ்வளவு நேரந்தான் சும்மா கண்ணை மூடிட்டே கெடக்குறது..?? அதான்.. உன்கிட்டயே பேசிடலாம்னு தோணுச்சு..!!"

"ஹ்ம்ம்..!!"

"நான் உன்னை ஹர்ட் பண்ணனும்னு நெனச்சு சொல்லலடா..!! நீ அப்படி தப்பா நெனச்சிருந்தா.. அதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்..!! என்னை மன்னிச்சுடு அசோக்.. ப்ளீஸ்..!!"

ப்ரியாவின் குரல் மிகவும் கெஞ்சலாக ஒலித்தது. அவள் இந்த மாதிரி நள்ளிரவு கால் செய்து, தன் மனதில் இருந்ததை தெளிவு படுத்தி மன்னிப்பு கேட்டதில், அசோக் சற்றே நெகிழ்ந்து போனான். அவன் மனதில் இருந்த ஈகோமூட்டம் இப்போது கொஞ்சமாய் விலக, காதல்மதி மெல்ல எட்டிப் பார்த்தது. தானுந்தான் அவள் சாதாரணமாக சொன்னதை சீரியசாக எடுத்துக்கொண்டு, ஓவர் ரியாக்ட் செய்துவிட்டோமோ என்று தோன்றியது. ஆனால் மனதில் ஏற்பட்ட அந்த நெகிழ்ச்சியை குரலில் காட்டிக்கொள்ளாமல்,

"பரவால விடு..!!" என்றான் இறுக்கமாக.

"இல்ல.. என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லு..!!"

"ப்ச்.. அதான் விடுன்னு சொல்றேன்ல.. விடு..!!"

என்று அசோக் எரிச்சலாக சொல்ல, ப்ரியா அமைதியானாள். இப்போது அசோக் ஏதோ நினைவுக்கு வந்தவனாய், தன் குரலின் இறுக்கத்தை தளர்த்திக்கொண்டு இதமாக கேட்டான்.

"சாப்டியா..??"

"ம்ம்.. சாப்டேன்..!!"

"சரி.. ஃபோனை வச்சுட்டு போய் தூங்கு.. போ..!!"

"எனக்கு தூக்கம் வரலை..!!"

"ம்ம்.. என்ன பண்ணலாம்னு சொல்ற இப்போ..??"

"கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாமா..??"

"என்ன பேசுறது..??"

"சும்மா.. ஏதாச்சும்..!!"

"ஹ்ம்ம்ம்.. சரி.. பேசு..!!"

"நல்லா தூங்கிட்டு இருந்தியோ.. ஃபோன் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிட்டனா..??"

"இல்ல இல்ல.. இன்னும் தூங்கல.. மூவி பாத்துட்டு இருந்தேன்..!!"

"ஓ.. என்ன மூவி..??"

"வுமன் இன் ப்ளாக்னு ஒரு ஹாலிவுட் மூவி..!!"

"யார் நடிச்சது..??"

"ஆக்டர்ஸ் பேர்லாம் தெரியலை..!!"

"ஹ்ம்ம்.. அது ஏன் அப்படி டைட்டில் வச்சிருக்காங்க.. வுமன் இன் ப்ளாக்னு..??"

"ம்ம்ம்..?? படத்துல.. உன்னை மாதிரியே அழகான ஒரு பொண்ணு.. ப்ளாக் ட்ரஸ் போட்டுக்கிட்டு அப்பப்போ வந்துட்டு போவா..!!" சற்றுமுன் அவளை பேய் என்றதை இப்போது அசோக் வேறுவிதமாக சொன்னான்.

"ஓ..!! அதெதுக்கு அப்பப்போ வந்துட்டு போறா.. அடிக்கடி வர வேண்டியதுதான..??" அது புரியாமல் ப்ரியாவோ அப்பாவியாக கேட்டாள். 

"அவ அப்படித்தான்..!!" 

அசோக் சொல்லிவிட்டு மனதுக்குள் சிரித்தான். லூசு என்று திட்டினான்.. அதுவும் மனதுக்குள்தான்..!! அப்புறம் இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். வெறுப்பு அகன்று நட்பு திரும்பியவர்களாய்.. உறக்கம் மறந்து உள்ளம் மலர்ந்தவர்களாய்..!! 

இரவு நெடுநேரம் அந்த மாதிரி பேசிக்கொண்டிருந்ததால்.. அன்று நடந்த சண்டையின் காரணமாய் அவர்களுக்கிடையே ஏற்பட்டிருந்த இறுக்கம்.. அடுத்த நாள் அவர்கள் சந்திக்கையில் வெகுவாக குறைந்திருந்தது..!! இயல்பு நிலை ஓரளவிற்கு திரும்பியிருந்தது..!! 

அன்று காலை சில்க்போர்ட் சிக்னலில் இருவரும் எதிரெதிரே நின்றுகொண்டிருந்தார்கள்.. அசோக் தனது பைக்கிலும்.. ப்ரியா தனது ஸ்கூட்டியிலும்..!! தூரத்தில் இருந்தே ப்ரியா அசோக்கை கவனித்துவிட்டாள். ஆனால் அசோக் இவளை கவனிக்கவில்லை. முதலில் அசோக்கிற்கு க்ரீன் சிக்னல் விழுந்து, அவன் ரைட் டர்ன் எடுத்து எலக்ட்ரானிக் சிட்டி சாலையில் பைக்கை செலுத்தினான். விரைவிலேயே ப்ரியாவிற்கும் சிக்னல் விழ, அவள் அவசரமாய் லெஃப்ட் டர்ன் எடுத்து ஸ்கூட்டியை விரட்டினாள்.

மிதமான வேகத்தில் பைக்கை செலுத்திக் கொண்டிருந்த அசோக், திடீரென தனக்கு பக்கவாட்டில் 'கீங்.. கீங்..' என்று அந்த ஹார்ன் சத்தம் கேட்டதும் தலையை திருப்பி பார்த்தான். அசோக்கின் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஸ்கூட்டியை செலுத்திக்கொண்டிருந்த ப்ரியா, ஹெல்மட் கண்ணாடியை மேலே ஏற்றிவிட்டு இவனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள். ஆச்சரியமான அசோக்கும் இப்போது பதிலுக்கு அவளைப் பார்த்து புன்னகைத்தான். அவளிடம் ஏதோ பேசுவதற்காக வாயெடுத்தான். ஆனால் அதற்குள் ப்ரியா..

தனது ஸ்கூட்டியின் ஆக்சிலரேட்டரை சரக்கென முறுக்கி, வண்டியை சாலையில் சீறிப்பாய விட்டாள். அசோக்கை தாண்டி கொஞ்ச தூரம் சென்று, அவர்களுக்கிடையே சில மீட்டர்கள் இடைவெளி வந்ததும், தனது வலது கையை நீட்டி, அவளுடைய கட்டை விரலை கவிழ்த்து இவனுக்கு காட்டினாள். அசோக்கிற்கு சிரிப்பு வந்தது. உடனடியாய் அவனுக்குள்ளும் ஒருவித குழந்தைத்தனமான ஈகோ வந்தது. 'என்கிட்டயா உன் வேகத்தை காட்டுற.. இருடி.. இதோ வர்றேன்..' என்று மனதுக்குள் நினைத்தவனாய், தனது பைக்கின் ஆக்சிலரேட்டரை பற்றி திருகினான். ஸ்பீடா மீட்டர் முள் சர்ரென க்ளாக்வைஸில் வட்டம் அடித்து மேலே செல்ல, அவனுடைய பைக் ஜிவ்வென்று முன்னோக்கி பாய்ந்தது.. ப்ரியாவின் ஸ்கூட்டியை மெல்ல மெல்ல நெருங்கியது..!!

அசோக்கின் பாய்ச்சலை ரியர்வ்யூ மிரரில் கவனித்து புன்னகைத்தாள் ப்ரியா. அவளும் அந்த போட்டியை விட மனம் இல்லாதவளாய்.. உச்சபட்ச வேகத்தில் தனது வண்டியை செலுத்தினாள்..!! ஆனால்.. அசோக்கின் வேகம் சற்று கூடுதலாய் இருக்க.. இருவருக்கும் இடையிலான இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கொண்டே வந்தது..!! இப்போது இரண்டு வண்டிகளுமே ஒரே நேர்க்கோட்டில் வந்தன.. காற்றை கிழித்தவாறு விர்ரென சீறிப்பாய்ந்தன.. சாலையில் சென்ற வாகனங்களை புயல்வேகத்தில் கடந்து பறந்தன..!! ப்ரியாவை கொஞ்சம் கொஞ்சமாய் கடந்து சென்று முன்னேறிய அசோக், 'ஹேய்...!!!' என்று முஷ்டியை மடக்கி குழந்தைத்தனமாய் குதுகலித்தான்..!!

அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு.. அவர்கள் இருவரும் தங்களது சிறுபிள்ளைத்தனமான ஈகோவை தார்ச்சாலையில் ஓடவிட்டு போட்டியிட்டுக்கொண்டார்கள்..!! இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் முந்துவதும்.. முந்தியதுமே கூக்குரல் இடுவதும்.. அடுத்து வருகிற சிக்னலில் சிக்கி ஒன்றிணைவதும்.. பிறகு சிக்னல் விழுந்ததும் சீறிப் பாய்வதுமாக..!! அந்த மாதிரி ரேஸ் விட்டுக்கொண்டே ஆபீஸ் வந்தடைந்தார்கள்..!!

ஆபீஸ் வளாகத்தை நெருங்கியும் கூட இருவரும் வேகத்தை குறைக்கவில்லை..!! வண்டியில் பறந்து கொண்டே.. இருவரும் கழுத்தில் தொங்கிய ஐடி கார்டை உயர்த்தி காட்ட.. கேட் அவசரமாய் திறந்து கொண்டது..!! இருவருக்கும் பொதுவாய் செக்யூரிட்டி அடித்த சல்யூட்டை கண்டுகொள்ளாமலேயே.. வளாகத்துக்கு உட்புறமான சிமென்ட் சாலையில் ஒன்றாக சீறிப் பாய்ந்தார்கள்..!! பார்க்கிங் ஏரியாவை அடைந்து.. சடன் ப்ரேக் அடித்து.. சரக் சரக்கென.. அடுத்தடுத்து வண்டியை நிறுத்தினார்கள்.. ஹெல்மட் கழற்றி புன்னகைத்தார்கள்.. குறும்பு கொப்பளிக்கும் விழிகளால் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டார்கள்..!!

"இடியட்..!!" ப்ரியா இதழில் கசிந்த சிரிப்புடனே சொன்னாள்.

"ஸ்டுபிட்..!!" அசோக் உதட்டை பிதுக்கியவாறு கேலியாக சொன்னான்.

அதன்பிறகு ஒரு பத்து நிமிடங்கள் கழித்து.. அவர்கள் டீம் உறுப்பினர்கள் கேஃப்டீரியாவில் காலை உணவிற்காக ஒன்றாக குழுமியிருந்தார்கள். நேத்ரா மட்டும் மிஸ்ஸிங்..!! அனைவரும் ஆளுக்கொரு பண்டத்தை வாங்கி, அதை அவ்வப்போது ஸ்பூனால் விண்டு வாயில் போட்டுக்கொண்டே பேசிக்கொண்டிருந்தார்கள்..!! ப்ரியா வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவதால் எதுவும் தனியாக வாங்கிக்கொள்ளவில்லை.. அடுத்தவர்கள் தட்டில் இருப்பதை அவ்வப்போது எடுத்து கொறித்துக் கொண்டாள்.. அசோக் ஒரு ஜூஸ் மட்டும் வாங்கி உறிஞ்சிக் கொண்டிருந்தான்..!!

அவர்கள் கம்பனியில் ஆண்டுக்கு ஒரு முறை ஆனுவல் டே கொண்டாடுவார்கள்..!! ஆபீஸில் அன்று முழுவதும் யாரும் எந்த வேலையும் செய்யமாட்டார்கள்..!! ஆட்டம், பாட்டம், கூத்து, கும்மாளம் என்று கம்பனியே புதுச்சாயம் பூசிக்கொள்ளும்..!! வருடம் முழுதும் வேலை வேலை என்று திரிபவர்களுக்கு.. அந்த ஒருநாள் மிகவும் இளைப்பாறுதலாய் இருக்கும்..!! அந்த ஆனுவல் டே அடுத்த வாரம் வருகிறது.. அதைப்பற்றித்தான் அவர்கள் இப்போது பேசிக்கொண்டிருந்தார்கள்..!! அசோக் ஹரியிடம் கேட்டான்.

"ஏண்டா.. எப்போவும் சோனு நிகம், சாதனா சர்கம்னு செலப்ரிடி யாரையாவது கூட்டிட்டு வருவானுக.. இந்த வருஷம் நம்மளையே ஆடிப்பாட சொல்லிட்டானுக..??" அசோக்கின் கேள்விக்கு ஹரி கேலியான குரலில் பதில் சொன்னான்.

"எல்லாம் காஸ்ட் கட்டிங் மச்சி.. காஸ்ட் கட்டிங்..!!"

"ம்க்கும்.. இதுலயுமா காஸ்ட் கட்டிங்..??"

"என்ன மச்சி இப்படி கேக்குற..?? இப்போலாம் ஐடி கம்பனிஸ் காஸ்ட் கட்டிங் பண்றோம்ன்ற பேர்ல.. எதெதுன்னு வெவஸ்தையே இல்லாம எல்லாத்துலயும் கைவைக்க ஆரம்பிச்சுட்டானுக.. டாய்லட் பேப்பர் மொதக்கொண்டு இவ்ளோ காஸ்ட்லியான பேப்பர் வாங்கணுமான்னு யோசிக்கிறானுக மச்சி..!! இன்ஃப்லேஷன்றானுக.. ஸ்லோடவுன்றானுக.. மார்க்கெட் க்ராஷ்ன்றானுக.. எகனாமி க்ரைசிஸ்ன்றானுக.. என்ன சொல்றானுகன்னே ஒரு எழவும் புரியலை..!!"

"ஹ்ம்ம்...!!"

"பேன்ட்ரில இருந்த காபி கப்லாம் போன மாசம் மாத்தினானுக.. ஞாபகம் இருக்கா..??"

"ஆ..ஆமாம்.. ஞாபகம் இருக்கு..!!"

"பெருசா இருந்த கப்லாம் சின்னதா மாத்திட்டானுக..!! வொய்..??? காஸ்ட் கட்டிங்..!!!! பாலை மிச்சம் பண்றானுகளாம்.. பக்கோடா வாயனுக..!!"

"ஓ..!! இதுல இப்படி ஒரு சைக்காலஜி இருக்கோ..??"

"ம்ம்ஹ்ஹ்ம்ம்... இண்டஸ்ட்ரியே ஒன்னும் சரியில்ல மச்சி..!! போற போக்கை பாத்தா.. இன்னும் கொஞ்ச நாள்ல.. நாமள்லாம் கோவணத்தை கட்டிக்கிட்டு கோட் அடிக்கிற நெலமை வந்தா கூட ஆச்சரியப் படுறதுக்கு இல்ல..!!"

"ஹாஹாஹாஹா..!!"




அசோக் அவ்வாறு சிரித்துக் கொண்டிருக்கும்போதுதான் நேத்ரா கேஃப்டீரியாவுக்குள் நுழைந்தாள். ஓரிரு வினாடிகள் சுற்றும் முற்றும் பார்த்தவள், அப்புறம் இவர்கள் அமர்ந்திருந்த இடத்தை கண்டு கொண்டதும், நேராக இவர்களை நோக்கி விறுவிறுவென நடந்து வந்தாள். அவளுடைய முகம் கடுகடுவென இருந்தது. ஏதோ கோபத்தில் இருக்கிறாள் என்று தெளிவாக தெரிந்தது. வேகமாக நடந்து இவர்களை நெருங்கியவள், குனிந்து சான்ட்விச் கடித்துக்கொண்டிருந்த கோவிந்தின் தலையில் 'நங்..' என்று ஒரு குட்டு வைத்தாள்.

"ஆஆஆஆஆ...!!"

சான்ட்விச் நிரம்பிய வாயுடன் கோவிந்த் கத்தினான். அவன் கத்தவும், மற்ற எல்லோரும் குபுக்கென எழுந்த சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டார்கள். எல்லோரும் சிரித்து முடித்தபிறகும், ஹரி மட்டும் 'ஹாஹாஹாஹா..!!' என்று கூடக்கொஞ்ச நேரம் சிரித்தான். தலையை நிமிர்த்தி ஹரியை அப்படியே முறைத்து பார்த்த கோவிந்த், இப்போது நேத்ராவை ஏறிட்டு சற்று எரிச்சலாகவே கேட்டான்.

"ஹேய்.. வாட் ஹேப்பன்ட் டூ யூ..?? எதுக்கு இப்போ தேவை இல்லாம அடிச்ச..??"

நேத்ரா பதில் சொல்லாமல் காலியாக கிடந்த சேரில் அமர்ந்து கொண்டாள். அமர்ந்த பிறகும் எதுவும் பேசாமல் கோவிந்தையே முறைத்துப் பார்த்தாள். 'கேக்குறன்ல..?? சொல்லு..' என்று கோவிந்த் திரும்ப கேட்டும் புண்ணியம் இல்லை. இப்போது ப்ரியா பொறுக்க முடியாமல் நேத்ராவிடம் கேட்டாள்.

"ஹேய்.. என்னாச்சு நேத்ரா.. ஏன் இப்படி டென்ஷனா இருக்குற..??"

"பாரு ப்ரியா.. என்னை கேக்காம.. சிங்கிங் காம்படிஷனுக்கு என் பேரை குடுத்திருக்கான்..!!" நேத்ரா ஒருவழியாய் வாய் திறந்து பேசினாள்.

"ஓ.. அவ்ளோதான மேட்டர்..??" எல்லோருக்கும் சப்பென்று போனது.

"ப்ச்.. நான் எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன்.. அவ்ளோதானான்னு எல்லாம் கூலா கேக்குறீங்க..??"

"ஹேய் நேத்ரா.. இதுல என்னப்பா இருக்கு..??" கோவிந்த் இப்போது நேத்ராவிடம் பாவமாக கேட்டான்.

"என்ன இருக்கா..?? அறை வாங்கப்போற எங்கிட்ட..!! அதெப்படி நீ எங்கிட்ட கேக்காம என் பேரை குடுக்கலாம்..??" நேத்ரா அவனிடம் எரிந்து விழுந்தாள்.

"கேட்டா நீ குடுக்க விட மாட்ட.. அதான் நானா குடுத்தேன்..!!"

"நீ என் பேரை குடுத்தது எனக்கு புடிக்கல.. போய் என் பேரை வாபஸ் வாங்கு.. போ..!!"

"ப்ச்.. ஏன் இப்படி பேசுற..?? நீதான் நல்லா பாடுவல.. அப்புறம் என்ன..??"

"நான் ஏதோ சும்மா ஜாலியா பாடுறேன்..!! அதுக்காக.. ஸ்டேஜ்ல போய் பாடுறதுலாம்.. எனக்கு புடிக்கல.. எனக்கு ஒருமாதிரி இருக்கு..!! ப்ளீஸ் கோவிந்த்.. நீயே போய் என் பேரை அந்த லிஸ்ட்ல இருந்து ரிமூவ் பண்ண சொல்லிடு.. ப்ளீஸ்..!!"

"ம்ஹூம்.. அதுலாம் முடியாது.. நீ பாடனும்..!!"

"என்னால பாட முடியாது.. போதுமா..??"

நேத்ரா கோபமாக சொல்லிவிட்டு, பார்வையை வேறெங்கோ திருப்பிக் கொண்டாள். எல்லோரும் என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள். கோவிந்த் கொஞ்ச நேரம் நேத்ராவின் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் ஒரு பெருமூச்சை வெளிப்படுத்திவிட்டு மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான்.

"இங்க பாரு நேத்ரா.. நான் சும்மா உன்னை சீண்டுறதுக்காக உன் பேரை குடுக்கலை..!! உனக்கு ஸ்வீட்டான வாய்ஸ் இருக்கு.. ரொம்ப அழகா பாடுற..!! இந்த விஷயம் எங்களுக்கு மட்டும் தெரிஞ்சா போதுமா..?? இந்த கம்பனில இருக்குற எல்லாருக்கும் தெரிய வேணாமா..?? இது ஒரு ஆப்பர்ச்சூனிட்டி..!! உனக்கு இருக்குற டேலன்ட்டை உள்ளயே வச்சிருந்தா.. அதனால என்ன யூஸ்.. சொல்லு பார்ப்போம்..?? அதை வெளிச்சம் போட்டு காட்டுறதுதான்.. அந்த டேலன்ட்டுக்கு நீ தர்ற மரியாதை..!! எனக்கு ஆசையா இருந்தது நேத்ரா.. நீ அவ்ளோ பேர் முன்னாடி ஸ்டேஜ்ல பாடனும்.. எல்லாரும் உன் வாய்ஸ் கேட்டு என்ஜாய் பண்ணனும்.. நல்லாருக்குன்னு கை தட்டனும்.. உன்னை பாராட்டனும்.. இதெல்லாம் பாக்கனும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருந்தது..!! அதான் உன்னை கேக்காம.. நானா உன் பேரை குடுத்துட்டேன்.. நான் செஞ்சது தப்புனா.. ஐம் ரியல்லி வெரி ஸாரி..!! பட்.. பாட மாட்டேன்னு மட்டும் சொல்லாத நேத்ரா.. ப்ளீஸ்..!!"

நிதானமாக பேசிய கோவிந்த் கெஞ்சலாக முடித்தான். எல்லோரும் ஒருவித வியப்புடன் அவன் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தனர். நேத்ராவும் இப்போது கோவிந்தின் முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்குள் ஏதோ ஒரு உணர்ச்சி பொங்குவது போலிருக்க, உதடுகளை கடித்து கட்டுப்படுத்தியவாறே, அவனை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது அவளுக்கு அருகில் இருந்த கவிதா அவளுடைய தோளைப் பற்றி உலுக்கினாள்.

"ஹேய்.. கோவிந்த் சொல்றதுதான் கரெக்ட்..!! நீ இந்த காம்படிஷன்ல கலந்துக்கிட்டே ஆகணும் நேத்ரா..!!" என்றாள்.

"யெஸ்.. யு ஹேவ் டு பார்ட்டிஸிப்பேட்..!!!" மற்றவர்களும் இப்போது கோரஸாய் சொன்னார்கள். ஹரி மட்டும்..

"அதுசரி.. அப்படினா.. ஆனுவல் டே அன்னைக்கு ஆடிட்டோரியம் பக்கத்துல லோபர்மைட் டேப்லட் சில்லறைல வித்தா.. பெத்த லாபம் பாக்கலாம்னு சொல்லுங்க..!!" என்றான்.

"எ..என்ன சொல்றீங்க..??" கவிதா புரியாமல் கணவனை கேட்டாள்.

"ஆமாம்.. இவ பாடுறதை கேட்டு அன்னைக்கு எத்தனை பேருக்கு வாந்தி பேதி புடுங்கப் போகுதோ..??"

ஹரி கேலியாக சொல்ல, நேத்ரா இப்போது கடுப்புடன் அவனை ஏறிட்டு முறைத்தாள். டேபிளில் இருந்த உப்பு டப்பாவை எடுத்து அவன் மீது சரக்கென வீசினாள். அவன் அதை கேட்ச் பிடித்துக்கொள்ள, இவள் சீற்றமாக சொன்னாள்.

"யூ...!!! என் வாய்ஸ் என்ன அவ்வளவு கேவலமா..?? பாக்கலாம்.. நான் பாடத்தான் போறேன்.. ஆனா யாருக்கும் நீ சொன்ன டேப்லட் தேவைப்படாது..!! உனக்கு வேணும்னா.. நாலு ஜெலுசில் கொண்டு வா.. வயித்தெரிச்சலை கண்ட்ரோல் பண்ணிக்க தேவைப்படும்..!!"

"ஹாஹா.. பாத்தீங்களா.. நீங்கல்லாம் எவ்ளோ கெஞ்சுனீங்க..?? நான் ஒருத்தன் இப்படி கலாய்ச்சதும்.. எப்படி ரோஷமா ஒத்துக்கிட்டா பாத்தீங்களா..??"

ஹரி அப்படியே பிளேட்டை திருப்பி போட, இப்போது எல்லோரும் அவனை புன்னகையும் நட்புமாய் பார்த்தார்கள். நேத்ரா மட்டும் சற்றே வெட்கமுற்றவளாய் தலையை கவிழ்த்துக் கொண்டாள். பிறகு அப்படியே தன் கருவிழிகளை ஒரு சுழற்று சுழற்றி ஓரத்துக்கு தள்ளி.. கோவிந்தை பார்த்தாள்..!!

இப்போது கவிதா திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாய் சேரில் இருந்து எழுந்து கொண்டாள்.

"ஹையோ.. கட்லட் ஒன்னு ஆர்டர் பண்ணினேன்பா.. மறந்தே போயிட்டேன்.. பேசிட்டு இருங்க.. நான் போய் வாங்கிட்டு வந்துடுறேன்..!!"

என்றவாறு ஃபுட் கவுன்ட்டர் நோக்கி நடந்தாள். ஹரி அதற்காகத்தான் காத்திருந்தவன் மாதிரி, அசோக்கிடம் திரும்பி சன்னமான குரலில் சொன்னான்.

"மச்சி.. உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா..??"

"எனக்கு என்னடா தெரியுது..?? உலகத்துல நடக்குற எல்லா மேட்டரும் உன் ஒருத்தனுக்கு மட்டுந்தான் தெரியுது.. அது எப்படித்தான் நீ தெரிஞ்சுக்குறியோ.. எனக்கு ஒன்னும் புரியலை..!! ஹ்ம்ம்.. என்ன மேட்டர்.. சொல்லு..!!"

"நம்ம டீம்ல புதுசா ஒரு பொண்ணு ஜாயின் பண்ண போகுது மச்சி..!!"

"ஓ.. அப்படியா..??" அசோக் தெரிந்தும் தெரியாதவன் போல நடித்தான்.

"ஆமாண்டா.. தமிழ் பொண்ணுதான்..!! ப்ரியாதான் அந்தப்பொண்ணை இன்டர்வ்யூ பண்ணது.. ஏன் ப்ரியா.. அசோக்ட்ட சொல்லலை..??"

"இன்டர்வ்யூலாம் எடுக்க ஆரம்பிச்சுட்டியா ப்ரியா..?? சொல்லவே இல்லை..??" அசோக் ப்ரியாவிடம் சற்றே கேலியாக கேட்டான்.

"ப்ச்.. சொல்லக்கூடாதுன்னுலாம் ஒன்னும் இல்ல.. எனக்கு அது பெரிய விஷயமா தோணலை..!!" ப்ரியா கெத்தாக சொன்னாள்.

"ஓ..!!" அசோக் அவளை ஓரக்கண்ணால் ஏளனமாக பார்த்தான்.

"ஆனா.. சும்மா சொல்லக்கூடாதுடா..!!" ஹரி இடையில் புகுந்து சொன்னான்.

"எதை..??"

"அந்தப் பொண்ணை சொன்னேன் மச்சி..!! இன்டர்வ்யூ வந்த அன்னைக்கு அந்த பொண்ணை நான் பாத்தேன்.. எங்கிட்டதான் கேஃப்டீரியாவுக்கு வழி கேட்டுச்சு..!!"

"ஓ.. நீதானா அது..??" அசோக்கின் கிண்டலை ஹரி கவனிக்கவில்லை. தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.

"பொண்ணுன்னா அதுதாண்டா பொண்ணு..!! என்ன ஒரு அடக்கம்.. என்ன ஒரு அமைதி.. என்ன ஒரு டீசன்சி..!!" என்று பெருமிதமாக சொன்னவன், அப்புறம் ப்ரியாவை பார்த்து முகத்தை சுளித்துக்கொண்டே சொன்னான். 

“இதுங்களுந்தான் இருக்குதுங்களே..??"

"ஏய்.. என்ன கொழுப்பா..?? அடங்குடா..!!" ப்ரியா முஷ்டியை மடக்கி காட்டினாள்.

"பாரு.. இதுங்க அடங்காம திரிஞ்சுக்கிட்டு.. நம்மள அடங்க சொல்லுதுங்க.. பொண்ணுகளா இதுகல்லாம்..??"

ஹரி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, கவிதா கட்லட் வாங்கிகொண்டு அவனை நெருங்கியிருந்தாள். ஆனால் ஹரி அதை கவனிக்கவில்லை. அவனை மனைவியிடம் மாட்டிவிடும் எண்ணத்துடன் பிரியா வில்லத்தனமாக அந்தக் கேள்வியை கேட்டாள்.

"இதுகல்லாம்னா கவிதாவையும் சேர்த்துத்தான் சொல்றியா..??"

"ஹாஹா.. இதுல என்ன சந்தேகம்..?? அந்த அடங்காப்பிடாரி லிஸ்ட்ல நம்பர் ஒன்னே என் வொய்ஃப்தான..??"

அவன் சொல்லி முடிக்கும் முன்பே அவனுடைய நடு மண்டையில் நங்கென்று ஒரு குட்டு வைத்தாள் கவிதா. ஹரி 'ஆஆஆஆ...' என்று தலையை தேய்த்தவாறு வலியில் அலறி துடிக்க, எல்லோருமே வாய் விட்டு சிரித்தார்கள். கோவிந்த் மட்டும் கொஞ்ச நேரம் எக்ஸ்ட்ராவாய், ஹரியை நோக்கி கையை நீட்டி நீட்டி சிரித்தான். இப்போது ஹரி கோவிந்தை ஏறிட்டு கடுப்புடன் முறைத்தான்.

"அங்க என்ன பார்வை..?? இந்தப்பக்கம் திரும்புங்க.. என் மூஞ்சியை பாத்து சொல்லுங்க.. நான் அடங்காப்பிடாரியா..??" கவிதா கோவத்தில் சிவந்து போன முகத்துடன் கேட்டாள்.

"ஐயோ.. இல்லம்மா.. உன்னைப் போய் நான் அப்படிலாம் சொல்வனா..?? நீ பின்னாடி நின்னதை நான் முன்னாடியே கவனிச்சுட்டேன்.. சும்மா இதுங்களுக்காக அப்படி காமடி பண்ணினேன்..!!" ஹரி பரிதாபமாக சமாளிக்க முயன்றான்.

"இல்ல கவிதா.. பொய் சொல்றான்.. நாமள்லாம் அடங்கா பிடாரிங்கலாம்.. பொண்ணுன்னா அந்தப்பொண்ணு மட்டுந்தான் பொண்ணாம்..!!" ப்ரியா போட்டுக் கொடுத்தாள்.

"எ..எந்தப்பொண்ணு..??"

"நம்ம டீம்ல புதுசா ஜாயின் பண்ணப்போற பொண்ணு..!!"

"ஓ..!! யார் அவ..?? அவளை எப்படி உங்களுக்கு தெரியும்..??" கவிதா கணவனை பார்த்து சீற்றமாக கேட்டாள்.

"அட அவளைப்பத்தி எனக்கு ஒன்னும் தெரியாதுமா..!! இ..இன்டர்வ்யூ வந்த அன்னைக்கு வழி சொன்னேன்.. அவ்ளோதான்..!! அ..அவ பேர் கூட இப்போ எனக்கு சரியா ஞாபகம் இல்ல.. ஏதோ.. செந்தாமரையோ செங்கமலமோ..??" ஹரி தலையை தடவியவாறு தடுமாற்றமாய் சொல்ல..

"செண்பகம்.. செண்பக லக்ஷ்மி..!!"

அசோக் மெல்லிய குரலில் சொல்லிவிட்டு ஸ்ட்ராவில் ஜூஸை உறிஞ்ச ஆரம்பித்தான். இப்போது எல்லோரும் அவனை ஏறிட்டு வியப்பாக பார்த்தார்கள். ப்ரியாதான் ஆச்சரியத்தை அடக்க முடியாதவளாய் ஒருவித குறுகுறுப்புடன் கேட்டாள்.

"ஹேய்.. உனக்கு எப்படி அவ பேர் தெரியும்..??"

"ஹ்ஹ.. பேபியா இருக்குறப்போ இருந்தே அவளை எனக்கு தெரியும்.. பேர் தெரியாம இருக்குமா..??" அசோக் கூலாக சொல்ல, எல்லோருடைய முகத்திலுமே ஒருவித ஆச்சரியம் படர்ந்தது. பிரியாவுக்கும் அதே ஆச்சரியம்.

"எ..என்ன சொல்ற நீ..??"

"அவ என் சொந்தக்கார பொண்ணுதான் ப்ரியா.. கொஞ்சம் தூரத்து சொந்தம்..!!"

"ஓ..!! சொந்தக்கார பொண்ணுன்னு சொல்ற.. நம்ம கம்பனில ஜாயின் பண்ணப்போறா.. ஏன் எங்கிட்ட சொல்லவே இல்ல..??"

"ப்ச்.. சொல்லக்கூடாதுன்னுலாம் ஒன்னும் இல்ல.. எனக்கு அது பெரிய விஷயமா தோணலை..!!"

ப்ரியா சற்றுமுன் கெத்தாக சொன்ன வார்த்தைகளையே அசோக் இப்போது திருப்பிக் கொடுக்க, அவள் ஒருவித எரிச்சலுடன் அவனை பார்த்தாள். வாயை இறுக்க மூடிக்கொண்டாள். அப்புறம் எல்லோரும் சாப்பிட்டு முடித்து, கை கழுவிக்கொள்ளும்போதுதான் மீண்டும் ஆரம்பித்தாள்.

"என் தம்பிதான் அந்த பொண்ணோட ரெஸ்யூம் ஃபார்வர்ட் பண்ணினான் அசோக்..!!"

"அப்படியா..??"

"ஆமாம்.. அவனுக்கு இவ காலேஜ் சீனியராம்..!!"

"ஓஹோ..?? இந்த விஷயம் எனக்கு தெரியாம போச்சே.. சரி.. நான் அவகிட்ட கேக்குறேன்..!!"

"ஹ்ம்ம்.. அடுத்த மாசம் ஜாயின் பண்றால..??"

"இல்ல.. கொஞ்சம் எர்லியராவே ஜாயின் பண்ணிடுவா போல இருக்கு.. அவங்க கம்பனில சீக்கிரமே ரிலீவ் பண்றாங்களாம்.. காலைல பேசுறப்போ சொன்னா..!!"

"ஓ..!!"

மனதில் ஏதோ ஒரு உறுத்தல் எழ, ப்ரியா அமைதியாகிப் போனாள். கை கழுவிட்டு வெளியே வந்தார்கள். அவர்களுடைய தளத்துக்கு செல்ல, அனைவரும் லிஃப்ட் நோக்கி நடையை போட்டபோது, உள்ளுக்குள் இருந்த அந்த குறுகுறுப்பை அடக்க முடியாமல், அசோக்கிடம் மெல்லிய குரலில் கேட்டாள்.

"சொ..சொந்தக்கார பொண்ணுனா.. உனக்கு என்ன முறை வேணும் அசோக்..??"

"ஏன் கேக்குற..??'

"சு..சும்மாதான்.. தெரிஞ்சுக்கலாமேன்னு..!!"



"எனக்கு அக்கா பொண்ணு.. மாமா மாமான்னுதான் கூப்பிடுவா.. அவ அக்காவைத்தான் என் அண்ணனுக்கு முடிச்சிருக்கோம்..!!"

"ஓ..!!!!!"

ப்ரியாவுக்கு மனதில் இருந்த உறுத்தல் இப்போது இன்னும் பெரிதானது. செண்பகத்தின் மீது ஒரு இனம்புரியாத பொறாமை அவளுடைய உள்ளத்தில் உருவானது. 'அந்த செண்பகத்துக்கு பதிலாக நான் இவனுடைய முறைப்பெண்ணாக இருந்திருக்க கூடாதா..?' என்று ஏக்கம் வந்தது. 'மாமா மாமா என்று இவனை கொஞ்சி கொஞ்சி கூப்பிடலாமே..?' என்று ஆசை எழுந்தது. அந்த ஆசையுடனும் ஏக்கத்துடனுமே அசோக்கை ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்தாள்.



No comments:

Post a Comment