Tuesday, June 23, 2015

ஐ ஹேட் யூ, பட்.. - அத்தியாயம் - 5

அப்புறம் வந்த சில நாட்கள்.. தினமும் மாலை அசோக்கும் ப்ரியாவும் கவிதாவை கழட்டிவிட்டு ஸ்குவாஷ் ஆடினார்கள். 'ஒரே ஒரு கேம் கவிதா..' என்று அவளிடம் சொல்வார்கள். ஒரு மணி நேரம் தாண்டியும் கெக்கபிக்க என கனைத்தபடியே விளையாடிக்கொண்டு இருப்பார்கள். இரண்டு நாட்கள் இவர்கள் கண்ணாடி அறைக்குள் விளையாடுவதையே வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருந்த கவிதா, மூன்றாம் நாள் 'இல்ல ப்ரியா.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நீங்க போயிட்டு வாங்க..' என்று டீசண்டாக ஒதுங்கிக் கொண்டாள்.

மேலும் இரண்டு வாரங்கள் ஓடின.. ஃப்ரேம்வோர்க் டெலிவர் செய்யும் நாள் நெருங்கி கொண்டே இருந்தது. அசோக் தனக்கு ஒப்படைக்கப்பட்டிருந்த காம்பனன்ட் டிசைனை இரண்டு நாட்கள் முன்னதாகவே முடித்துவிட்டான். உடல்நிலை சரியில்லாமல் இரண்டு நாட்கள் லீவ் போட்டுவிட்ட ஹரியின் வேலையை எடுத்து செய்து கொண்டிருந்தான். ப்ரியா தனது வேலையை முடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள். அவளுக்கு வந்து வாய்த்த காம்பனன்ட் காப்ளிகேட்டடாக அமைந்து போக, கஷ்டப்பட்டாள்.

அப்போது ஒரு நாள் மாலை.. அவர்கள் ஆபீஸ்.. நேத்ரா அவசரமும், பதட்டமுமாய் அசோக்கின் இடத்திற்கு வந்தாள். அவளுடைய குரலிலும் ஒருவித அவசரம்..!!

"ஹே அசோக்.. ஐ நீட் எ ஹெல்ப் ஃபரம் யூ..!!" என்றாள்.

"சொ..சொல்லு நேத்ரா..!!"

"உன் பைக்ல கொண்டு போய்.. என்னை ஹோசூர்ல ட்ராப் பண்ண முடியுமா..??"



"ஹோசுரா..?? ஹோசூர் எதுக்கு போற நீ..??"


"அது.. நாலு நாள் ஹாலிடே வருதுல..?? எங்க காலேஜ் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் ஒண்ணா சேர்ந்து கொடைக்கானல் ட்ரிப் போகலாம்னு ப்ளான் பண்ணிருந்தோம்.. இன்னைக்கு ஈவினிங் செவன் ஓ க்ளாக் ட்ரைன்..!! ஆக்சுவலா இன்னைக்கு சீக்கிரமே கெளம்பி மெஜஸ்டிக் போக நெனச்சிருந்தேன்.. லாஸ்ட் மொமன்ட்ல 'அதை முடிச்சுட்டு போ'ன்னு இந்த ரவி பயங்கர டார்ச்சர் பண்ணிட்டான்.. அல்ரெடி இங்கயே செவன் ஆயிடுச்சு.. அதான் ஹோசூர் ஸ்டேஷன் போய் ட்ரெயினை புடிச்சிடலாம்னு..!! ப்ளீஸ் அசோக்.. ஹெல்ப் பண்ணுடா..!!"

"சரி பண்றேன்.. பட் ஒன் கண்டிஷன்..!!"

"என்ன..??"

"உன் ஃப்ரண்ட்ஸ்லாம் எனக்கு இன்ரொட்யூஸ் பண்ணி வைக்கணும்..!!" சொல்லிவிட்டு அசோக் கண்சிமிட்ட,

"அடச்சை.. ஜொள்ளு..!!" நேத்ரா முகத்தை சுளித்தாள்.

"அப்போ போ.. என்னால முடியாது..!!"

"சரி.. சரி..!! இன்ரொட்யூஸ் பண்ணி வைக்கிறேன்.. வந்து தொலை..!!"

அடுத்த பத்து நிமிடங்களில் அசோக்கும், நேத்ராவும் ஆபீசில் இருந்து பைக்கில் கிளம்பினார்கள். ஹோசூர் ரயில்வே ஸ்டேஷனை அடைந்தபோது மணி 7.45. அவர்கள் சென்று அரை மணி நேரம் கழித்துத்தான் ட்ரெயின் வந்தது. நேத்ராவின் ஃப்ரண்ட்ஸ் என்றதும் பத்து பதினைந்து கன்னடக்கிளிகள் வரப் போகின்றன என்று கனவில் இருந்தான் அசோக். ஆனால் வந்தது என்னவோ தடி தடியாய் நான்கைந்து பையன்களும், இரண்டே இரண்டு அல்ட்டாப்பு ராணிகளும்..!! அந்த அல்ட்டாப்பு ராணிகள் இவனை கண்டுகொள்ளாமல் நேத்ராவுடன் கன்னடத்தில் பேசின. தடியர்கள் விரோதியை பார்ப்பது போல இவனை முறைத்தனர்..!! நொந்து போனான்..!!

ஒரு வழியாய் நேத்ராவை வழி அனுப்பி வைத்தான். பசியெடுக்க ஆரம்பிக்கவே, ஹோசூர் அவுட்டோரிலேயே ஒரு ரெஸ்டாரன்டில் வண்டியை நிறுத்தி, வாணியம்பாடி பிரியாணி வாங்கி வயிற்றுக்குள் தள்ளினான். 'ஆபீஸ் சென்று பேக் எடுத்துவிட்டு, வீட்டுக்கு கிளம்பிவிட வேண்டியதுதான்..' என்ற எண்ணத்துடன் பெங்களூர் நோக்கி பைக்கை சீற விட்டான்.

ஆபீசை அடைந்தபோது மணி பத்தை தாண்டியிருந்தது. அவர்கள் வேலை பார்க்கும் ஃப்ளோருக்குள் நுழைந்தான். அமைதியே எங்கும் நிறைந்து போய் இருந்தது அந்த தளம். ஏ.ஸி நிறுத்தப்பட்டிருந்தது. பெரும்பாலான விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே ஒரு சில விளக்குகள் மட்டும் வெள்ளை நிறத்தில் வெளிச்சத்தை சிந்திக் கொண்டிருந்தன. அந்த வெளிச்சத்தின் அடியில், தலையைப் பிடித்தவாறு மானிட்டரை வெறித்தனர் சிலர்.. அமெரிக்காவில் இருக்கும் க்ளயன்ட்டின் ஆங்கிலம் புரியாமல் தடுமாறினார் சிலர்.. பிஸ்ஸா கடித்தவாறு யூட்யூப் பார்த்தனர் சிலர்..!!

அசோக் தனது இடத்தை அடைந்து தன் பேகை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டான். ஓடிக்கொண்டிருந்த ப்ரோக்ராம்களை எல்லாம் கில் செய்து, சிஸ்டத்தை ஷட்டவுன் செய்தான். கிளம்ப போகையில்தான் எதேச்சையாய் கண்களை சுழற்றியவனின் பார்வையில் ப்ரியா பட்டாள். கம்ப்யூட்டர் திரையை வெறித்தவாறு ஏதோ டைப் செய்து கொண்டிருந்தாள். ப்ரியாவை கண்டதும் அசோக்கிற்கு லேசாக ஆச்சரியம். 'என்றும் ஏழு மணிக்கெல்லாம் கிளம்பி ஓடிவிடுவாளே.. இன்று இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறாள்..?' என்று குழப்பமுற்றான். மெல்ல நடந்து ப்ரியாவின் இடத்தை நெருங்கினான்.

"ஹேய் லூசு.. இன்னும் என்ன பண்ணிட்டு இருக்குற இங்க..?? வீட்டுக்கு கெளம்பலையா..??" என்று எப்போவும் போல ஒரு இயல்பான கேலிக்குரலிலேயே கேட்டான்.

"இல்ல அசோக்... கொஞ்சம் வேலை இருந்தது.. அதான்..!! அதுசரி.. நீ எங்க போய் சுத்திட்டு வர்ற..??" ப்ரியாவின் குரலில் ஒருவித களைப்பு தெரிந்தது

"சுத்தலாம் இல்ல.. நேத்ராவை ஹோசூர் வரை பைக்ல கொண்டுபோய் விட்டு வந்தேன்..!!"

"ஹோசூரா..?? அவ ஹோசூர் எதுக்கு போறா..??"

"ஃப்ரண்ட்சொட கொடைக்கானல் டூர் போறாளாம்.. ட்ரெயின் மிஸ் பண்ணிட்டா.. ஹோசூர் ஸ்டேஷன் போய் ட்ரெயினை புடிச்சோம்....!!"

"ஹ்ம்ம்.. எல்லாம் நல்லா என்ஜாய் பண்றீங்க போல..?? நான் மட்டும் இங்க கெடந்து முட்டிட்டு இருக்குறேன்.. எனக்கு மட்டும் ஏன்தான் இப்படி நடக்குதோ..??" ப்ரியா ஒருமாதிரி விரக்தியாக சொல்ல,

"ஹேய்.. என்னாச்சு இப்போ..?? ஏன் இப்படிலாம் பேசுற..??" அசோக்கும் இப்போது சற்றே சீரியஸானான்.

"ஆமாம்.. உங்க எல்லாருக்கும் நல்லா ஈசியான காம்பனன்ட்டா அமைஞ்சு போச்சு.. எல்லாம் சீக்கிரம் முடிச்சுட்டு ஊர் சுத்த கெளம்பிட்டீங்க..!! எனக்கு மட்டும் இப்படி காம்ப்ளிக்கேட்டடான காம்பனன்ட் வந்து மாட்டிக்கிச்சு.. எப்படி முடிக்கிறதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்கேன்..!! ச்சே.. வாழ்க்கையே வெறுத்துடும் போல இருக்கு..!!"

"ப்ச்.. சும்மா லூசு மாதிரி உளறாத..!! உனக்கு என்ன காம்பனன்ட்.. 'சிங்கிள் ஸைன் ஆன்'தான..?? அது ஒன்னும் காம்ப்ளிக்கேடட்லாம் இல்ல.. சிம்பிள்தான்..!!"

"ஆமாமாம்.. உனக்கு எல்லாம் சிம்பிள்தான்..!! எங்களுக்குத்தான் அதுல இருக்குற கஷ்டம் புரியும்..??"

"ஹ்ம்ம்.. சரி விடு.. காம்ப்ளிக்கேட்டட்தான்.. ஒத்துக்குறேன்.. சந்தோஷமா..?? இப்போ கெளம்பு.. வீட்டுக்கு போகலாம்..!!"

"இல்ல அசோக்.. நான் வரல.. நீ கெளம்பு..!!"

"வரலையா..?? அல்ரெடி டென் ஆகிடுச்சுடி.. வீட்ல தேட போறாங்க..!!"

"அப்பாட்ட சொல்லிட்டேன் அசோக்.. வர லேட் ஆகும்னு..!! இன்னைக்கு நான் கெளம்ப எப்படியும் ரெண்டு ஆயிடும்..!!"

"ப்ச்.. கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு..?? ரெண்டு மணி வரை இங்க தனியா உக்காந்திருக்க போறியா..?? சொல்றதை கேளு.. வேலை பாத்தது போதும்.. கெளம்பு..!!"

"இதை முடிக்கனுன்டா.. மண்டே டெலிவர் பண்ணனும்..!!"

"பாத்துக்கலாம் வா..!!"

"என்னத்த பாத்துக்க சொல்ற..?? இன்னைக்கு மட்டும் இல்ல.. நாலு நாள் ஹாலிடேஸும் எனக்கு ஆபீஸ்லதான் போகப்போகுது போல.. அப்படியும் முடிக்க முடியுமான்னு தெரியல..!!”

படபடவென சொன்ன ப்ரியா சட்டென நிறுத்தினாள். அசோக் அவளையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது ப்ரியா சற்றே வெறுப்பான பாவத்துடன், தன் தலையை அழுத்தி பிடித்துக் கொண்டாள். குரலில் ஒருவித சோகம் தொணிக்க தொடர்ந்தாள்.

"தம்பி நாளைக்கு சென்னைல இருந்து வர்றான் அசோக்.. அவன் ஃப்ரண்ட் யாரோ கூட கூட்டிட்டு வர்றான்.. எல்லாம் சேர்ந்து நாளைக்கு மைசூர் போறதா ப்ளான்..!! இப்போ என்னால எல்லாம் போச்சு.. வந்து என்னை கேவலமா திட்டப் போறான்..!! ச்ச.. எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா..??"

அசோக்கிற்கு ப்ரியாவின் மனநிலை புரிந்தது. குடும்பத்துடன் ஜாலியாக ஊர் சுற்றலாம் என்று திட்டமிட்டிருப்பாள். இப்போது அது இல்லை என்றதும் குழந்தை மாதிரி பரிதவிக்கிறாள். ப்ரியாவின் சோகம் அவனை வாட்டியது. அவளுக்கு உதவ வேண்டும் என்று தோன்றியது. ஒரு சில வினாடிகள், அவளையே சலனமில்லாமல் பார்த்துக்கொண்டிருந்த அசோக், அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவனாய் சொன்னான்.



"ஓகே.. நான் ஒன்னு சொல்றேன்.. செய்றியா..??"

"என்ன..??" ப்ரியா தலையை நிமிர்த்தி கேட்டாள்.

"உன் சிஸ்டம் ஐ.பி அட்ரசும், பாஸ்வேர்டும் எனக்கு மெயில் அனுப்பு..!!"

"எ..எதுக்கு..??"

"அனுப்பு.. சொல்றேன்..!!"

ப்ரியாவிற்கு அரைகுறையாய் ஏதோ புரிந்த மாதிரி இருந்தது. கொஞ்ச நேரம் அசோக்கின் முகத்தை மலங்க மலங்க பார்த்தவள், அப்புறம் படபடவென மெயில் டைப் செய்து, அவன் கேட்ட விவரங்களை அவனுடைய ஐடிக்கு அனுப்பினாள்.

"ம்ம்.. அனுப்பியாச்சு..!!" என்றாள் மெலிதாக.

"குட்..!! இப்போ என்ன பண்ற.. சிஸ்டத்தை அப்படியே லாக் பண்ணிட்டு.. உன் பேக் எடுத்துட்டு கெளம்பு.. வீட்டுக்கு போலாம்..!!"

"ஐயோ.. இதை முடிக்கணும் அசோக்..!!"

"எல்லாம் நான் பாத்துக்குறேன்.. நீ கெளம்பு..!! எதைப்பத்தியும் வொர்ரி பண்ணிக்காத.. நாளைக்கு மைசூர் போ.. அப்பா, தம்பியோட நல்லா ஜாலியா டைம் ஸ்பென்ட் பண்ணு.. நாலு நாள் நல்லா என்ஜாய் பண்ணு.. மண்டே வர்றப்போ உன் காம்பனன்ட் ரெடியா இருக்கும்..!!"

"அசோக்.. இது நீ நெனைக்கிற மாதிரி ஈசி இல்ல.. நான் ஒரு மாசமா உக்காந்து முட்டிட்டு இருக்கேன்.. ஒரு எழவும் புரியலை..!!"

"ப்ச்.. அதுதான் நான் பாத்துக்குறேன்னு சொல்றேன்ல..?? மண்டே நீ வர்றதுக்குள்ள.. உன் காம்பனன்ட்டை முடிச்சு வைக்க வேண்டியது என் பொறுப்பு.. போதுமா..??"

"நெஜமா..??"

"ப்ராமிஸ்..!!!" 

அசோக் அவனது வலது கையை விரித்து ப்ரியாவின் தலையில் வைத்தவாறு சொன்னான். உடனே ப்ரியாவின் முகத்தில் ஒரு புதுவித மலர்ச்சி. அவ்வளவு நேரம் அவளுடைய கண்களில் தெரிந்த கவலை நீங்கி ஒரு புதுவித பிரகாசம். தனது செவ்விதழ்களை விரித்து, அசோக்கை பார்த்து அழகாக புன்னகைத்தாள்.

"ஹ்ம்ம்.. இப்படி சிரிக்கிறப்போ முகம் எப்படி அழகா இருக்கு..? அதைவிட்டு சும்மா சாக்லேட்டை பறிகொடுத்த சின்னப்புள்ள மாதிரி உர்ருன்னு மூஞ்சியை வச்சுக்கிட்டு..!!"

"ஹாஹாஹாஹாஹாஹா..!!"

"சரி கெளம்பு.. டைமாச்சு..!! லேட்டாச்சுனா.. அப்புறம் அதுக்கு வேற என் அண்ணன்.. ஐ.டி இண்டஸ்ட்ரி பத்தி தமிழ் எம்.ஏ மாதிரி தாறுமாறா திட்ட ஆரம்பிச்சுடுவான்..!!"

"ஹாஹா..!! ஓகே ஓகே.. ஒன் செக்..!!"

ஒரு வினாடி நேரம் கேட்டவள், முழுதாக பத்து வினாடிகள் எடுத்துக் கொண்டாள். சிஸ்டம் லாக் செய்து, பேக் எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு, 'போலாமா..??' என்று புன்னகைத்தாள். இருவரும் கிளம்பினார்கள். போகிற வழியில் அசோக் தனது இடத்தில் நின்று, தனது சிஸ்டத்தையும் ஆன் செய்து வைத்தான்.

"உன் சிஸ்டம் எதுக்கு ஆன் பண்ணின..??"

"வீட்ல இருந்து கனெக்ட் பண்ணி வொர்க் பண்ண போறேன்.. ஏதாவது ரெஃபர் பண்ண என் சிஸ்டமும் தேவைப்படலாம்..!!

"ஓ.. அப்போ நீ ஆபீஸ் வரப் போறது இல்லையா..??"

"நான் ஏன் ஆபீஸ் வர்றேன்..?? நாலு நாளைக்கு இந்த ஏரியா பக்கமே ஒரு ஈ எறும்பு கூட இருக்காது..!! வீட்ல ஒன்னுக்கு ரெண்டு லேப்டாப் இருக்குது.. ஏர்ட்டெல் ப்ராட்பேண்ட் இருக்குது.. வீட்ல இருந்தே பாத்துப்பேன்..??"

"ஹ்ம்ம்.. என்னால உன் வீகென்ட் இப்படி ஸ்பாயில் ஆயிடுச்சு..!!"

"இட்ஸ் ஓகே ப்ரியா..!!"

இருவரும் ஐடி கார்டை ஸ்வைப் செய்துவிட்டு வெளியே வந்தார்கள். வெளியே இருந்த ரெஜிஸ்டரில் வேறு ஆளுக்கொரு என்ட்ரி போட்டார்கள். 'ஹேப்பி வீகென்ட் ஸார்.. ஹேப்பி வீகென்ட் மேடம்..' என்று சிரித்த செக்யூரிட்டியை பார்த்து புன்னகைத்தார்கள். லிப்ஃட் ஏறினார்கள். ஏழாவது தளத்தில் இருந்து லிஃப்ட் மெல்ல கீழிறங்கிக் கொண்டிருந்தது.

சில வினாடிகள் ஃப்ளோர் இன்டிகேட்டரையே கவனித்துக் கொண்டிருந்த அசோக், பிறகு இயல்பாக பார்வையை திருப்பினான். தனக்கு பக்கவாட்டில் நின்ற ப்ரியா, தன்னையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்ததை அறிந்ததும், புருவத்தை சுருக்கினான். அவன் அவ்வாறு தன்னை பார்த்த பின்னரும், ப்ரியா தன் விழிகளை அவன் மீதிருந்து விலக்கிக்கொள்ளவில்லை.

"ஹேய்.. ப்ரியா.. என்னாச்சு..??" அசோக் புன்னகையுடன் கேட்டான்.

"தேங்க்ஸ்டா..!!" ப்ரியா நன்றிப் பெருக்குடன் சொன்னாள்.

"ச்சீ.. லூசு.." அசோக் அவளுடைய தலைமுடியை கலைத்து விட்டான்.

அசோக்கின் பைக்கிலேயே அவனும் ப்ரியாவும் ஆபீசில் இருந்து கிளம்பினார்கள். ட்ராஃபிக் குறைந்து போன சாலையில் மிதமான வேகத்தில், பைக் சில்க்போர்ட் நோக்கி சீறிக் கொண்டிருந்தது. அசோக் ப்ரியாவின் மைசூர் திட்டம் பற்றி கேட்டுக்கொண்டு வந்தான். அவளும் 'அதை பாக்கப் போறோம்.. இதை பாக்கப்போறோம்..' என்று சிறு குழந்தை மாதிரியான ஒரு குதுகுலத்துடன் சொல்லிக்கொண்டு வந்தாள். உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தவள் திடீரென

"ரொம்ப நாளுக்கப்புறம் மைசூர் போறோம் அசோக்..!! நான் சின்னப்பொண்ணா இருக்குறப்போ.. அம்மா எங்க கூட இருக்குறப்போ.. போனது..!!"

என்று சொல்லிவிட்டு பட்டென அமைதியாகிப் போனாள். அப்புறம் எதுவும் பேசவே இல்லை அவள். அம்மாவின் நினைவில் மூழ்கிப் போயிருந்தாள். அவளுடைய மனநிலையை உடனே புரிந்து கொண்ட அசோக்கும், அதற்கு மேல் கேள்வி கேட்டு அவளை தொந்தரவு செய்யவில்லை. அமைதியாக வண்டியை செலுத்தினான்.

சில்க் போர்டை அடைந்தார்கள். 'வீட்டில் கொண்டு வந்து விடுகிறேன்..' என்று சொன்ன அசோக்கை, 'இல்ல அசோக்.. உனக்கு எதுக்கு சிரமம்.. அல்ரெடி ரொம்ப லேட் ஆயிடுச்சு.. நீ வீட்டுக்கு கெளம்பு.. நான் ஆட்டோ புடிச்சு போய்க்குறேன்..' என்று ப்ரியா தடுத்தாள். அசோக்கும் மேலும் வற்புறுத்தாமல், ஒரு ஆட்டோ பிடித்து அவளை வீட்டுக்கு அனுப்பி வைத்தான். ஹெல்மெட் மாட்டிக்கொண்டு கிக்கரை உதைத்தான். ஆட்டோ சென்ற திசைக்கு எதிர்த்திசையில் பறந்தான்.

அடுத்த நாள் காலையே அசோக் ப்ரியாவுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்த அந்த வேலையை ஆரம்பித்துவிட்டான். வி.பி.என் மூலமாக தனது லேப்டாப்பில் இருந்து ஆபீஸ் நெட்வொர்க் கனெக்ட் செய்தான். ப்ரியா தந்த பாஸ்வேர்டை உபயோகித்து அவளது சிஸ்டத்தில் லாகின் செய்தான். முதலில், ஒரு மாதமாக அவள் செய்திருந்த வேலைகளை கவனமாக மேற்பார்வையிட்டான். இடியாப்பத்தை பிழிந்து வைத்த மாதிரி அவள் எழுதியிருந்த கோட்-ஐ பார்த்து தலையலடித்துக் கொண்டான். மொத்த காம்பனன்ட்டையும் ரீ-டிசைன் செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.

நான்கு நாட்கள் அந்த வேலையில்தான் முழுநேரமும் மூழ்கியிருந்தான். கூகிளின் உதவியை நாடினான்.. நிறைய டெக்னிகல் கட்டுரைகளை வாசித்தான்.. தன்னுடைய சிஸ்டம் கனெக்ட் செய்து சில விஷயங்கள் ரெஃபர் செய்தான்.. செல்பில் அடுக்கப்பட்டிருந்த தனது பழைய டிசைன் கைடை தூசி தட்டினான்.. விழிகளை மூடி நெற்றியை கீறியவாறு நெடுநேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்..!! ப்ரியா தன் குடும்பத்துடன், மைசூரில் பிருந்தாவன் கார்டன், மகாராஜா அரண்மனை என்று.. முகத்தில் எப்போதும் சிரிப்புடன் சுற்றிக்கொண்டிருந்த நேரத்தில்.. இவன் இங்கே அவளுக்காக.. தனது மூளையை துன்புறுத்தி கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான்.

வியாழக்கிழமை ஆரம்பித்த வேலையை ஞாயிறு மாலைதான் முடித்தான். டிசைன், கோட் என்று பக்காவாக ரெடி செய்தான். டிசைனை எளிமையாக விளக்கக்கூடிய டாகுமன்ட்டும் ப்ரிப்பேர் செய்து முடித்தான். மொத்த வேலைகளையும் முடித்துவிட்டு நிமிர்ந்தபோது, 'அப்பாடா..!!!' என்று நிம்மதியாக இருந்தது. அண்ணி போட்டுத்தந்த காபியை கொஞ்சம் கொஞ்சமாய் உறிஞ்சி தன்னை ஆசுவாப்படுத்திக் கொண்டான். 

அப்போதுதான் அவனுக்கு திடீரென அந்த எண்ணம் தோன்றியது. ப்ரியாவுடைய சிஸ்டத்தின் கண்ட்ரோல் இப்போது தன்னிடம்..!! அவள் தனது கம்ப்யூட்டரில் ஏதாவது பர்சனல் ஃபைல்கள் வைத்திருக்கிறாளா என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் அவனை தொற்றிக் கொண்டது. உடனே அதை செயல்படுத்த முடிவு செய்தான். ஒவ்வொரு ஃபோல்டராக பொறுமையாக தேடிப்பார்த்தான்.



ஒரு ஃபோல்டர் சிக்கியது..!! அதற்குள் எக்கச்சக்கமாக சப்-ஃபோல்டர்கள்.. கொள்ளை கொள்ளையாய் ஃபோட்டோக்கள்..!! சிறு வயதில் இருந்து தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எல்லாம் ஒரே இடத்தில் போட்டு வைத்திருந்தாள் ப்ரியா. ஓரிரு புகைப்படங்களை பார்த்ததுமே அசோக்கிற்கு புரிந்து போனது. தங்கவேட்டையில் ஜெயித்தது போல குஷியாகிப் போனான். முதல் வேலையாக மொத்தத்தையும் தனது சிஸ்டத்திற்கு ஒரு காப்பி அனுப்பினான்.

அப்புறம் பொறுமையாக ஒவ்வொரு ஃபோல்டராக திறந்து, ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கிற ப்ரியாவை ரசித்தான். இரட்டை ஜடையுடன் ஸ்கூல் சிறுமியாய்.. இரண்டு கைகளிலும் ஸ்போர்ட்ஸில் ஜெயித்த கப்புகளுடன்.. கல்லூரி நண்பர்களுடன் வாயில் எதையோ போட்டு அரைத்துக்கொண்டு.. தனக்கு இருபக்கமும் நிற்கிற அப்பா, தம்பியின் தோள்களில் கைபோட்டவாறு, இதயத்தை கொள்ளை கொள்கிற சிரிப்புடன்..!! பொக்கிஷம்தான் அந்த ஃபோல்டர் அவனைப் பொறுத்தவரை..!!


ஒவ்வொரு படமாக பார்த்துக்கொண்டே வந்தவன், ஒரு படம் வந்ததும் அப்படியே அசையாமல் உறைந்து போனான். ப்ரியா கொள்ளை அழகாய் இருந்தாள் அந்தப்புகைப்படத்தில். எதோ ஒரு மலையடிவாரத்தின் பின்னணியில்.. மஞ்சள் நிற புடவையை சுற்றிக்கொண்டு.. மயக்குகிற மாதிரி ஒரு பார்வையை வீசியவாறு..!! ‘ஸ்டன்னிங்..!!’ என்று தோன்றியது அசோக்கிற்கு..!! அடுத்த படத்துக்கு கடந்து போக மனமில்லாதவனாய், விரித்த இமைகளை மூடவும் மறந்து போனவனாய் அந்த படத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"இது யாரு..??"

திடீரென தனக்கு அருகே அந்த சத்தம் கேட்கவும் பக்கென பதறிப் போனான் அசோக். அப்புறம் அது தம்புதான் என்று உணர்ந்ததும், சற்றே நிம்மதியாக பெருமூச்சு விட்டான். தம்பு அசோக்குக்கு பின்பக்கமாக வந்து, தனது கைகளை பின்னால் கட்டிக்கொண்டு, லேப்டாப் திரையையே பார்த்தவாறு அவ்வாறு கேட்டிருந்தான்.

"தம்பூ.. இங்க என்னடா பண்ணிட்டு இருக்குற..??" அசோக் கேட்க, தம்பு அதை மதியாமல்

"இது யாரு சித்தப்பா..??" என்று லேப்டாப்பை நோக்கி விரல் நீட்டினான்.

"இ..இதுவா..?? இ..இது.. இது.." என்று ஒருகணம் தடுமாறிய அசோக், பிறகு தைரியம் வந்தவனாய்,

"இதுதான் உன் சித்தி..!!" என்றான்.

"இவங்க பேரு..??"

"ப்ரியா..!! ப்ரியா சித்தி..!!"

"ஓ..!! ப்ரியா சித்தி சூப்பரா இருக்காங்க..!!"

தம்பு அப்படி சொன்னதும் அசோக் அப்படியே பூரித்துப் போனான். அவனுடய கன்னத்தை பிடித்து கொஞ்சி முத்தமிட்டான்.

"சித்தியை உனக்கு பிடிச்சிருக்கா தம்பூ..??"

"ம்ம்.. ரொம்ப பிடிச்சிருக்கு.. அழகா இருக்காங்க..!!"

"சித்தப்பா இவங்களை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரவா..??"

"ம்ம்.. கூட்டிட்டு வாங்க.. எனக்கு ஓகே..!!" தம்பூ தலையாட்டினான். அசோக் புன்னகைத்தான்.

"ஓகே .. சித்தப்பா கூடிய சீக்கிரம் கூட்டிட்டு வர்றேன்.. சரியா..?? ம்ம்ம்ம்.... சாப்டியா தம்பூ..??"

"ம்ம்.. சாப்டேன் சித்தப்பா.. பூரி..!!" என்றவன் அசோக் கேட்காமலேயே தனது சட்டையை தூக்கி, வீங்கிப் போயிருந்த வயிறை காட்டினான்.

"ஹாஹா.. சட்டையை கீழ போடுடா.. தொப்பைச்சாமி..!! போ.. ஹால்ல போய் விளையாடு போ..!!"

"ராஜேஷ் டாடி உங்களை அங்க வர சொன்னா..!!"

"ஓ..!! டாடிட்ட போய்.. சித்தப்பா ரொம்ப முக்கியமான வேலையா இருக்காங்களாம்.. இப்போ வர முடியாதாம்னு சொல்லு..!!"

"ஹ்ம்.. ஹ்ம்.. வாங்க சித்தப்பா.. டாடி வர சொன்னா..!!" தம்பு அடம்பிடித்தான்.

"ப்ச்.. தம்பூ..!! சித்தப்பா சொல்றேன்ல..??"

"ம்ஹூம்.. வாங்க.. வாங்க சித்தப்பா..!!"

தம்பு கையை பிடித்து இழுக்க, அசோக்கால் அதற்கு மேலும் மறுக்க முடியவில்லை. லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு, அவனுடன் நடந்தான். போகிற வழியில் கிச்சனுக்குள் பிஸியாக இருந்த செல்வி கண்ணில் பட்டாள். கிச்சனை கடந்து ஹாலுக்குள் நுழைய, சோபாவில் அமர்ந்ததுகொண்டு பனியனுக்குள் கைவிட்டு அக்குளை சொறிந்து கொண்டிருந்த ராஜேஷ் பார்வைக்கு கிடைத்தான். 

"என்னடா.. கூப்டியா..??"

அசோக் கேட்டதும் ராஜேஷ் நிமிர்ந்து அவனை பார்த்தான். கண்ணுக்கு அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி டீப்பாயில் வைத்தவன், அந்த டீப்பாயின் மீதே இருந்த பிரவுன் கவரை எடுத்து அசோக்கிடம் நீட்டினான்.

"என்ன இது..??" குழப்பத்துடனே அசோக் அந்த கவரை கையில் வாங்கினான்.

"பொண்ணு ஃபோட்டோ..!!"

"எந்த பொண்ணு..??"

"ஹ்ம்ம்.. வெளக்கமா சொல்லனுமா உனக்கு..?? மடிவாலால 'சங்காத்தி மேட்ரிமோனியல் சென்டர்னு' ஒரு ஏஜன்சி இருக்கு.. மேரேஜ் ப்ரோக்கர்ஸ்..!! போன வாரம் உன் ஃப்ரோபைல் அங்க ரெஜிஸ்டர் பண்ணினேன்.. இந்த வாரம் இந்த பொண்ணோட ஃபோட்டோ அனுப்பிருக்காங்க.. முதமுதலா உன் மூஞ்சிக்கு வந்திருக்குற வரன்..!! எனக்கு பொண்ணை புடிச்சிருக்கு.. நீ பாத்து எப்படி இருக்கான்னு சொல்லு..!!" 

ராஜேஷ் சொல்ல சொல்லவே அசோக்கின் முகத்தில் டென்ஷன் ஏறிக்கொண்டே சென்றது. கண்களை உருட்டி அண்ணனை முறைத்தவன், கோபமான குரலில் அவனிடம் சீறினான்.

"உன்னை யாரு இந்த வேலைலாம் பாக்க சொன்னது..??"

"ம்ம்ம்..?? மிஸ்டர் முத்துச்சாமி..!!" ராஜேஷின் குரலில் ஒரு கிண்டல்.

"அது யாரு..??" அசோக் ஒருவேகத்தில் படக்கென கேட்டுவிட,

"டேய்.. நம்ம அப்பாடா..!!" என்று ராஜேஷ் பதறினான்.

"ஷ்ஷ்.. ஸாரி..!! " என்று நாக்கை கடித்துக்கொண்ட அசோக், உடனே

"ம்ம்ம்ம்... யாரு சொன்னா என்ன..?? நான் சொல்றதை இப்போ நல்லா கேட்டுக்கோ..!! இன்னைக்கோட இந்த பொண்ணு பாக்குற வேலையைலாம் நிறுத்திடு..!!" என்றான்.

"ஆங்.. நிறுத்திட்டு..??? ஒரு வருஷத்துக்குள்ள உனக்கு ஒரு பொண்ணை பாத்து முடிக்கணும்னு.. அப்பா எங்கிட்ட வேலையை விட்டிருக்காரு..!! அவருக்கு யாரு பதில் சொல்றது..??" ராஜேஷ் எரிச்சலாக கேட்க, அசோக் இப்போது அடிக்குரலில் சொன்னான்.

"உனக்கு என்ன.. ஒரு வருஷத்துக்குள்ள உனக்கு ஒரு பொண்ணு வேணும்.. அவ்வளவுதான..?? நானே கொண்டுவந்து நிறுத்துறேன்.. போதுமா..??" 

"டேய்.. நீயா பொண்ணு பாக்குறேன்னு தெரிஞ்சா.. அ..அப்புறம்.. பிரச்னை ஆயிடும்டா.. அப்பா ஒத்துக்க மாட்டாரு..!!"

"அவருக்கு தெரிஞ்சாத்தான..?? பொண்ணு நான் பாக்குறேன்.. உன்கிட்ட கூட்டிட்டு வர்றேன்.. நீயே கஷ்டப்பட்டு தேடி கண்டுபுடிச்ச பொண்ணுன்னு அப்பாகிட்ட சொல்லி.. நீ பேர் வாங்கிக்கோ..!! டீல் ஓகேவா..??"



"ஏய்.. இதுலாம் ரொம்ப ஓவருடா..!! நாங்கல்லாம் இப்படியா தனியா பொண்ணு பாத்துட்டு திரிஞ்சோம்.. வீட்ல பாத்த பொண்ணை கட்டிக்கல..??"

"நீ ஒரு ஈனா கூனா.. எல்லாரும் அப்படியா இருப்பாங்க..??"

அசோக் சொன்னதைக்கேட்டு ராஜேஷ் டென்ஷனானான். ஹாலில் அந்தமாதிரி சத்தம் அதிகரித்துக்கொண்டே செல்லவும், இப்போது கிச்சனில் நின்றிருந்த செல்வி, அங்கிருந்து வெளிப்பட்டு ஹாலுக்குள் நுழைந்தாள். அண்ணனுக்கும், தம்பிக்கும் இடையில் என்ன நடக்கிறது என்று புரியாதவளாய்..

"என்னங்க.. என்னாச்சு..??" என்றாள்.

"ஒண்ணுல்ல அண்ணி..!!" என அசோக் உடனடியாய் சமாளித்தான்.

அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு அங்கு ஒரு அமைதி. யாரும் எதுவும் பேசாமல் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்தார்கள். தம்புச்சாமியோ எதுவும் புரியாமல், தலையை அண்ணாந்து திருதிருவென விழித்துக் கொண்டிருந்தான். ராஜேஷ்தான் அந்த அமைதியை குலைத்தவாறு, ஆத்திரமும் சற்றே குறைந்து போனவனாய் மெல்லிய குரலில் ஆரம்பித்தான்.

"இங்க பாரு அசோக்.. என்னதான் நீயா பொண்ணு பாத்தாலும்.. பெரியவங்களா பாக்குற மாதிரி வராது.. அவங்களுக்கு இருக்குற அனுபவம் உனக்கு இருக்காது..!!"

"நீங்க உங்களுக்குன்னு நெறைய கண்டிஷன்ஸ் வச்சுக்கிட்டு.. உங்க இஷ்டத்துக்கு ஏதோ ஒன்னை இழுத்துட்டு வந்து நிறுத்துவீங்க.. அதையெல்லாம் என்னால கட்டிக்க முடியாது..!! எனக்கு வரப்போறவ.. என் டேஸ்ட்படி இருக்கனும்..!!"

"நீ மொதல்ல அந்த கவரை பிரிச்சு பாரு.. என் டேஸ்ட் பத்தி உனக்கு நம்பிக்கை வரும்..!!"

"ம்க்கும்.. உன் டேஸ்ட் பத்தித்தான் ஆறு வருஷம் முன்னாடியே எனக்கு தெரிஞ்சு போச்சே..??" 

என்று அண்ணியை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே சொன்னவன், அந்த கவரை தூக்கி டீப்பாயில் விட்டெறிந்தான். அவன் சொன்னதன் அர்த்தம் புரியாமல் செல்வி விழித்தாள். ஆனால் ராஜேஷ் புரிந்துகொண்டு அசோக்கை கடுப்புடன் முறைத்தான். வேறொன்றும் புரிந்துபோன மாதிரி இருக்க, அவசரமாய் கேட்டான்.

"யாருடா அந்தப்பொண்ணு..??"

"எந்தப்பொண்ணு..??"

"அதான்.. நீ லவ் பண்ற பொண்ணு..!!"

"நா..நான் யாரை லவ் பண்றேன்.. அ..அப்டிலாம் யாரும் இல்ல..!!" அசோக் தடுமாற்றமாய் சொன்னான்.

"ஹே.. எல்லாம் எனக்கு தெரியும்.. ஐ.டில வேலை பாக்குறவனுகலாம் இப்படித்தானடா இருக்குறிங்க..??"

"இப்போ எதுக்கு தேவை இல்லாம ஐ.டியை இழுக்குற நீ..?? அப்படி என்ன பண்றோம் நாங்க..??"

"ஆங்.. எல்லாம் செட்டு செட்டாத்தானடா அலையுறீங்க..!! எவ, எப்படின்னு எதுவும் தெரியாம.. எவளையாவது புடிச்சுக்க வேண்டியது.. வீட்டுக்கு தெரியாம பார்க், ரெஸ்டாரன்ட், சினிமான்னு ஊர் சுத்த வேண்டியது..!! நீ யார் கூட அந்த மாதிரி ஊர் சுத்துறேன்னு சொல்லு..!!"

ராஜேஷ் அவ்வாறு கேட்கவும், அசோக் நிஜமாகவே பயங்கர கடுப்புக்கு உள்ளானான். அண்ணனின் முகத்தையே எரிச்சலும், கோபமுமாய் முறைத்தவன், அப்புறம் கண்களை இடுக்கி அவனை கூர்மையாக பார்த்தவாறு, குரலை சற்றே தாழ்த்திக்கொண்டு கேட்டான்.

"கொஞ்சம் நல்லா யோசிச்சு சொல்லு.. ஐ.டில வேலை பாக்குறவனுக மட்டுந்தான்.. வீட்டுக்கு தெரியாம பொண்ணோட ஊர் சுத்துறானுகளா..??"

அவ்வளவுதான்..!! அசோக்கின் பார்வையிலும், கேள்வியிலும் இருந்த கூர்மை.. ராஜேஷை சுருக்கென்று தாக்கி.. அவனை ஸ்தம்பித்துப் போக செய்தது..!! 'தேரே மேரே பீச் மே.. கேஸா ஹே யே பந்தன்.. அஞ்சானா..!!' என பின்னணியில் பாடல் ஒலிக்க, டெல்லியில் தன்னுடன் கைகோர்த்து சுற்றித் திரிந்த, ஒரு மைதா மாவின் முகம் படக்கென அவன் மூளையில் பளிச்சிட்டது..!! தடுமாறிப் போனான்..!! மனைவி வேறு அருகில் இருப்பதை உணர்ந்ததும்.. டரியல் ஆகிப் போனான்..!! அவசர அவசரமாய்..

"சரி சரி விடு.. உன் இஷ்டப்படி என்னவேணா பண்ணித்தொலை.. இனி உன்னை நான் எதுவும் சொல்ல மாட்டேன்..!!" என்று சமாளித்தான்.

"ம்ம்.. அந்த பயம் இருக்கணும்..!!" 

என்று தனது வழக்கமான பஞ்ச்சை உதிர்த்த அசோக், எதுவும் புரியாமல் திருதிருவென விழித்துக்கொண்டிருந்த செல்வியிடம் திரும்பி,

"நான் கொஞ்சம் வெளில போயிட்டு வர்றேன் அண்ணி.. நாலு நாளா வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கெடந்தது ஒரு மாதிரி இருக்கு..!! எனக்கு சாப்பாடு வேணாம்.. இன்னைக்கு நான் வெளிலயே சாப்பிட்டுக்குறேன்..!!"

என்று சொல்லிவிட்டு, சுவற்றில் தொங்கிய பைக் சாவியை எடுத்துக்கொண்டு, அதை சுழற்றியவாறே வீட்டை விட்டு வெளியேறினான். செல்வி அதற்குமேலும் தனது ஆர்வத்தை அடக்க முடியாதவளாய், அவசரமாய் வந்து தன் கணவனுக்கருகே சோபாவில் அமர்ந்தவாறே கேட்டாள்.

"ஏங்க.. அவன் என்னங்க சொல்லிட்டு போறான்.. எனக்கு ஒண்ணுமே புரியலை..!!"

"என்ன புரியலை உனக்கு..?? 'உன் சமையலை தின்னு தின்னு வெறுத்து போச்சு.. இன்னைக்கு ஒருநாளாவது வெளில சாப்பிட்டு பொழைச்சுக்குறேன்'னு.. நல்லா தெளிவாத்தான சொல்லிட்டு போறான்..??"

"ஐயோ அது இல்லைங்க..!!"

"அப்புறம்..??"

"அதுக்கு முன்னாடி சொன்னது.. ஏதோ ஐ.டில வேலை பாக்குறவங்க மட்டுந்தான்.. பொண்ணுகளோட.." செல்வி சொல்லிக்கொண்டு இருக்கும்போதே,

"ஆமாம்.. இப்போ ரொம்ப முக்கியம்..?? போடீ.. போய் பூரியை பொறிச்சு எடு.. போ..!!" என இவன் சட்டியில் போட்ட பூரி மாதிரி பொறிந்தான்.

"ஏங்க இப்படி கோவப்படுறீங்க..??" செல்வி பாவமாக கேட்டாள்.

"பின்ன என்ன..?? அவன் ஏதோ என் டேஸ்ட் சரியில்லன்னு நக்கல் அடிச்சுட்டு போறான்.. நீயும் அதை நோண்டி நோண்டி கேட்டுட்டு இருக்குற..?? என் டேஸ்ட்க்கு என்னடி குறைச்சல்..??"

"ஆமாம்.. அதான..?? உங்க டேஸ்ட்க்கு என்ன குறைச்சல்..?? இந்தா.. நம்ம தம்பூ போட்டுருக்குற பூப்போட்ட ஜட்டி கூட உங்க செலக்ஷன்தான்.. எவ்ளோ அழகா இருக்கு..??" செல்வி சீரியசாக சொல்ல, ராஜேஷ் அவளை உக்கிரமாக முறைத்தான்.

"அதை சொல்லலடி.. இதை சொன்னேன்.. இந்த பொண்ணுக்கு என்னடி குறைச்சல்..??" என்றவாறு ராஜேஷ் அந்த கவரை பிரித்து உள்ளே இருந்த போட்டோவை எடுத்து மனைவியிடம் காட்டினான்.

"ம்ம்ம்.. நல்லாத்தான் இருக்குறா..!! ஆனா.. நம்ம லக்ஷ்மியை விட கொஞ்சம் கலர் கம்மிதான்.. இல்லைங்க..??"

செல்வியின் ஆசை அவளையும் அறியாமல் அவளது வார்த்தைகளில் வெளிப்பட்டுவிட, ராஜேஷ் இப்போது தனது தலையை நாப்பத்தஞ்சு டிக்ரியில் டேப்பராக திருப்பி, முன்பை விட கடுமையாக மனைவியை முறைத்தான். அவனது பார்வையின் அர்த்தம் செல்விக்கு புரிந்து போக, உடனே சமாளிக்க முயன்றாள்.

"இ..இல்லைங்க.. நான் ஏதோ என் மனசுக்கு பட்டதை சொன்னேன்..!! நீங்களாச்சு.. உங்க தம்பியாச்சு.. அவருக்கு புடிச்சிருந்தா கட்டி வைங்க.. எனக்குலாம் ஒன்னும் இல்ல..!!" என்றவாறு சோபாவில் இருந்து எழுந்து கொண்டாள்.

"தம்பூ.. நீ வா.. ஹோம் வொர்க் பண்ணனும்.. டைம் ஆச்சு..!! நாளைக்கு ஸ்கூல்.. ஞாபகம் இருக்குல..??" 

என்று தம்புச்சாமியை இழுத்துக்கொண்டு, உள்ளறைக்குள் நடந்தாள். மனைவியின் முதுகையே எரிச்சலும், சலிப்புமாய் முறைத்த ராஜேஷ், பிறகு கையிலிருந்த புகைப்படத்தை தூக்கி டீப்பாயில் போட்டான். அந்த புகைப்படத்தில்.. எதோ ஒரு மலையடிவாரத்தின் பின்னணியில்.. மஞ்சள் நிற புடவையை சுற்றிக்கொண்டு.. மயக்குகிற மாதிரி ஒரு பார்வையை வீசியவாறு.. மந்தகாசமாக புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.. ப்ரியா..!!!





No comments:

Post a Comment