Wednesday, June 24, 2015

ஐ ஹேட் யூ, பட்.. - அத்தியாயம் - 8

ரிங் சென்று கொண்டே இருந்தது. 'ப்ரியா காலிங்.. ப்ரியா காலிங்..' என்று செல்போன் திரை பளிச்சிட்டுக்கொண்டே இருந்தது. அசோக்கின் கைகள் கீபோர்ட் மீது படிந்திருக்க, அவனது கருவிழிகளை மட்டும் ஓரமாய் நகர்த்தி அலறிய செல்போனை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

"ஏய்.. அட்டன்ட் பண்ணித் தொலையேண்டா.. அலறிட்டே கெடக்குது..!!" ஹரி திரும்பி அசோக்கை பார்த்து எரிச்சலாக சொன்னான்.

"எனக்கு தெரியும்.. நீ மூடிட்டு உன் வேலையை பாரு..!!" அசோக் கோவத்தை அவன் மீது காட்டினான்.

"இல்லடா.. திரும்ப திரும்ப பண்ணிட்டே இருக்காங்களேன்னு சொன்னேன்.. யாரு அது..??"

"ம்ம்ம்.. யாரோ அன்னோன் நம்பரு..!!"

அசோக் சொல்லிவிட்டு மீண்டும் செல்போன் மீது பார்வையை வீசினான். அது மேலும் ஐந்தாறு முறை அடித்துவிட்டு, அதன்பிறகுதான் அமைதியானது. அசோக்கோ எதுவும் செய்யத் தோன்றாமல் சலனமற்று அமர்ந்திருந்தான். சிறிது நேரத்திலேயே 'டிடிங்..!!' என்ற சப்தத்துடன் அந்த எஸ்.எம்.எஸ் வந்து விழுந்தது. அசோக் உடனே செல்போனை எடுத்து மெசேஜ் திறந்து பார்த்தான். ப்ரியாதான் அனுப்பியிருந்தாள்.



"எனக்கு டைமாச்சு அசோக்.. நான் கெளம்புறேன்.. அங்க போய் கால் பண்றேன்.. சரியா..?? மிஸ் யூ..!!"

அதை பார்த்ததும் அசோக்கிற்கு மனதின் ஓரமாய் ஒரு வலி..!! 'ச்சே.. என்ன ஆயிற்று எனக்கு..? நான் ஏன் இப்படி எல்லாம் செய்கிறேன்..? அவள் மீதிருந்த எரிச்சலில் வழியனுப்ப செல்லாமல் இருந்துவிட்டேன்..? இப்போது அவளே கால் செய்கையில் அதை அட்டன்ட் செய்து பேசக்கூட ஏன் எனக்கு மனம் வரவில்லை..? அவள்தான் குழந்தை மாதிரி நடந்துகொள்கிறாள் என்றால், நானும் ஏன் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறேன்..?'

அசோக்கிற்கு கஷ்டமாக இருந்தது. ப்ரியாவிடம் இப்போது பேசவேண்டும் போல் இருந்தது. கால் ஹிஸ்டரி எடுத்து திரும்ப அவளுடைய நம்பருக்கு கால் செய்தான். போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதாக ஒரு பெண்ணின் குரல் கேட்க, 'ஃபக்..!!' என்று எரிச்சலானான். செல்போனை தூக்கி ஓரமாய் போட்டான். இரண்டு கைகளாலும் தலையை பிடித்துக்கொண்டு அப்படியே அமர்ந்தான்.

கொஞ்ச நேரம் அந்த மாதிரி கண்களை மூடி, ப்ரியாவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான். அப்புறம் இமைகளை மெல்ல பிரித்தான். அதன்பிறகும் வேலை பார்க்க அவனுக்கு சுத்தமாக மூட் இல்லை. மனதெல்லாம் பலவித குழப்ப எண்ணங்கள்..!! சிஸ்டத்தை ஷட்டவுன் செய்துவிட்டு எழுந்தான். ஹரியின் இடத்துக்கு நகர்ந்து சென்றவன், அவனிடம் மெல்லிய குரலில் கேட்டான்.

"டேய்.. தண்ணியடிக்கனும் போல இருக்கு.. வர்றியா..??" அவன் அவ்வாறு கேட்டதுமே,

"மச்சீஈஈஈ..!!!"

என்று ஹரி சந்தோஷமாக இளித்தான். ஆனால் ஓரிரு விநாடிகள்தான் அந்த சந்தோஷம் அவன் முகத்தில் நிலைத்திருந்தது..!! அப்புறம் அவனுக்கு இப்போது திருமணமாகிப் போனதும், கவிதா என்றொரு பெண் அவனுடைய வாழ்வில் நுழைந்துவிட்டதும், அவள் சற்று முன்புதான் 'சீக்கிரம் வந்து சேருங்க..' முறைப்புடன் சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பி சென்றதும் ஞாபகம் வந்தது. இதுவரை குடித்துவிட்டு அவன் வீட்டுக்கு சென்றபோது நடந்த சில பல சம்பவங்கள் ஃப்ளாஷ்பேக்காக அவன் மனக்கண்ணில் வந்து போயின. உடனே எதையோ பறிகொடுத்தவன் போல முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டான்.

"என்னடா..??" அசோக் எரிச்சலாக கேட்டான்.

"எனக்கும் ஆசையாத்தான் இருக்கு...." ஹரி இழுத்தான்.

"உனக்கு ஆசையா இருக்கா, தோசையா இருக்காலாம் உன்கிட்ட கேக்கலை.. வர்றியா வரலையான்னுதான் கேட்டேன்..!!"

"வர்றேண்டா மச்சி.. பட் ஒன் கண்டிஷன்..!!"

"என்ன..??" அசோக் குழப்பமாய் கேட்க,

"இந்தா..!!" ஹரி அவனுடைய செல்போனை எடுத்து அசோக்கிடம் நீட்டினான்.

"இது எதுக்கு..??"

"தண்ணியடிக்கிறதுக்கு என் பொண்டாட்டிட்ட பெர்மிஷன் கேளுடா மச்சி.. ப்ளீஸ்டா..!!" ஹரி வெட்கமே இல்லாமல் சொன்னான்.

"த்தா.. என்ன வெளையாடுறியா..?? ஒவ்வொரு தடவை தண்ணியடிக்க போறப்போவும் இதுதான் எனக்கு வேலையா..?? என்னால முடியாது.. நீயே கேளு..!!" அசோக் டென்ஷனானான்.

"ஹேய்.. புரிஞ்சுக்கோடா மச்சி.. நீன்னா அவ கொஞ்சம் பொறுமையா சாஃப்டா பேசுவா.. அதான் உன்னை கேக்க சொல்றேன்..!!"

"பொறுமையா பேசுறாளா..?? இப்டியே நான் அடிக்கடி பர்மிஷன் கேட்டுக்கிட்டே இருந்தேன்னு வச்சுக்கோ.. ஒருநாளைக்கு என்னையும் வெளக்கமாத்தாலதான் அடிக்கப்போறா..!!"

"உன்னையுமா..?? அடப்பாவி.. அப்போ என்னை வெளக்கமாத்தால அடிக்கிறான்னு முடிவே பண்ணிட்டியா..??"

"ஆமாம்.. அதுல என்ன சந்தேகம்..??"

"டேய்.. அவளுக்கு நான் தண்ணியடிக்கிறது கொஞ்சம் புடிக்காதுடா.. அவ்ளோதான்..!! மூஞ்சை கொரங்கு மாதிரி தூக்கி வச்சுப்பா.. எனக்கு அதை பாக்க சகிக்காமத்தான்.. இதெல்லாம் அவாய்ட் பண்றது..!! மத்தபடி வீ ஆர் கூல்..!!"

"ஹ்ம்ம்.. நீங்க கூலா இருங்க.. இல்லனா ஹாட்டா இருங்க.. எனக்கு அதைப்பத்திலாம் கவலை இல்ல..!! சும்மா சும்மா இதுக்குலாம் என்னால பெர்மிஷன் கேட்க முடியாதுடா.. எனக்கு தேவையில்லாத பிரச்னை..!!"

"ஹேய் அப்டிலாம் சொல்லாதடா மச்சி..!! ஹ்ம்ம்.. இங்க பாரு.. நான் ஒரு சூப்பர் ஐடியா சொல்றேன்.. உனக்கு ஒரு பிரச்னையும் வராது.. கேக்குறியா..??"

"என்ன..??"

"உனக்கு இன்னைக்கு பர்த்டே.. எனக்கு ட்ரீட் குடுக்க ஆசைப்படுறேன்னு அவகிட்ட சொல்லு.. அவ ஒன்னும் சொல்ல மாட்டா..!! என்ன சொல்ற..??" ஹரி இளித்தவாறு சொல்ல அசோக் அவனை முறைத்தான்.

"மசுரு.. ரெண்டு மாசம் முன்னாடி அப்படி சொல்லிட்டு போய்த்தானடா.. எனிக்மால போய் மூக்கு முட்ட குடிச்சோம்..??" அசோக் சொல்ல, ஹரிக்கு முகம் சுருங்கிப் போனது.

"ஓ..!! ஆமால்ல..?? ஐடியா அல்ரெடி யூஸ்ட்-ஆ..?? ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்...!!"

ஹரி நெற்றியை கீறியவாறு யோசித்தான். வேறு என்ன சொல்லி தன் மனைவியை ஏமாற்றலாம் என்று தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான். ஒரு சில வினாடிகள்..!! வேறு எந்த யோசனையும் தோன்றாமல் போகவே வெறுப்பாக கத்தினான்.

"ச்ச.. என்ன உலகம்டா இது.. என்ன சொசைட்டிடா இது..?? கருமம்..!!"

"என்னடா அச்சு..??"

"பின்ன என்ன மச்சி.. பொறந்த நாள்லாம் வருஷம் வருஷம்தான் கொண்டாடனும்னு எந்த பொறம்போக்கு இவனுகளுக்கு சொல்லிக் குடுத்துட்டு போனான்..?? மாசமாசம் அந்த டேட்ல பொறந்த நாள் கொண்டாடினா, என்ன கொறைஞ்சா போயிடுவானுக..??" ஹரி சீரியஸாக சொல்லிக்கொண்டிருக்க, அசோக் அவனையே கடுப்புடன் பார்த்தான்.

"இங்க பாரு.. வெட்டித்தனமா பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்காத.. என்ன காரணம் சொல்லலாம்னு சீக்கிரம் யோசி..!!"

"ம்க்கும்.. எனக்கு தோணுச்சுனா சொல்ல மாட்டனா..??"

"சரி.. அப்போ நான் ஒன்னு சொல்லவா..??"

"என்ன..??"

"பர்மிஷனே கேக்க வேணாம்.. குடிச்சுட்டு நேரா வீட்டுக்கு போயிடு..!! எப்படியாவது அவகிட்ட அடியை உதையை வாங்கியாவது சமாளிச்சுக்கோ..!!" அசோக் கூலாக சொல்ல,

"டேய்.. ஒரேடியா என் ஜோலியை முடிச்சிறலாம்னு பாக்குறியா நீ..??" ஹரி பதறினான்.

"அப்போ என்னை ஆளை விடு.. டைம் ஆயிட்டே இருக்குது.. நான் கெளம்புறேன்..!!"

"டேய் மச்சி... இருடா.. டேய்..!!"

ஹரி கத்திக்கொண்டே இருக்க, அவனை கொண்டுகொள்ளாமல் அசோக் கிளம்பினான். தளத்தின் நுழைவாயில் நோக்கி விறுவிறுவென நடக்க ஆரம்பித்தான். ஒரு நான்கைந்து எட்டுகள் வைத்ததும் அப்படியே நின்றான். தனது தலையை திருப்பி பக்கவாட்டில் பார்வையை வீசினான். அவன் பார்வை சென்ற இடத்தில் கோவிந்த் அமர்ந்திருந்தான்.

தனது இருக்கையில் அமர்ந்தவாறு.. எதிரே இருந்த மானிட்டரை முறைத்தவாறு.. அருகில் இருந்த வேஃபர் பிஸ்கட்டை அவ்வப்போது எடுத்து கடித்தவாறு..!! அவனுடைய முகத்தில் ஒருவித சோகம் அப்பிக் கிடந்தது..!! விரக்தியுடன் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று தெளிவாக புரிந்தது..!! அசோக்கிற்கு ஏனோ இப்போது அவன் மீது புதிதாக ஒரு இரக்கம் பிறந்தது..!! 'தன்னைப் போலவே ஏமாற்றம் கொண்டிருக்கும் இன்னொரு ஜீவன்..' என்று தோன்றியது..!!

ஒருசில வினாடிகள் அவ்வாறு கோவிந்தை இரக்கத்துடன் பார்த்த அசோக்கிற்கு, மனதில் திடீரென ஒரு எண்ணம். அந்த எண்ணம் தோன்றியதுமே அவன் அதிகம் தயங்கவில்லை. நடந்து சென்று கோவிந்தை நெருங்கினான். இதமான குரலில் அவனை அழைத்தான்.

"கோவிந்த்..!!"

"ம்ம்..!!" கோவிந்த் அசோக்கை நிமிர்ந்து பார்த்தான்.

"ட்..ட்ரிங்க்ஸ் சாப்பிடுவியா நீ..??"

அசோக் சிறு தயக்கத்துடனே கேட்டான். கொஞ்ச நேரம் எதுவும் புரியாமல் விழித்த கோவிந்த், அப்புறம் தடுமாற்றமாய் சொன்னான்.

"ம்ம்.. சா..சாப்பிடுவேன்.. எ..எப்போவாச்சும்..!! எதுக்கு கேக்குறீங்க..??"

"இன்னைக்கு சாப்பிடலாமா..??"

இப்போது கோவிந்த் முகத்தில் மீண்டும் குழப்ப ரேகைகள். அசோக் அப்படி கேட்பான் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அத்தனை நாளாய் நேத்ராவை தவிர அந்த டீமில் இருப்பவர்கள் யாருமே கோவிந்திடம் முகம் கொடுத்து பேசியதில்லை. அசோக் திடீரென இவ்வாறு தன்னை அணுகவும், ஒருவித ஆச்சரியத்துக்கு உட்பட்டுப் போயிருந்தான். உடனே பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான். அவனுடைய தடுமாற்றத்தை பார்த்துவிட்டு அசோக்கே இப்போது புன்னகையுடன் சொன்னான்.

"ஹே.. கமான்..!! ஜஸ்ட்.. எனக்கு இன்னைக்கு ட்ரிங்க்ஸ் சாப்பிடனும் போல இருந்தது.. கம்பெனிக்கு ஆள் இல்ல.. அதான் உன்னை கூப்பிட்டேன்.. உனக்கு விருப்பம் இருந்தா என் கூட ஜாயின் பண்ணிக்கலாம்.. வாட் யு ஸே..??"

அசோக் மிகவும் ஸ்னேஹமான குரலில் கேட்டான். கோவிந்த் முகத்தில் இருந்த குழப்பம் இப்போது சற்று நீங்கியது. மெலிதாக புன்னகைத்தான். நீண்ட நேரம் எல்லாம் யோசிக்கவில்லை அவன். ஒரு சில வினாடிகளிலேயே,

"ம்ம்.. போலாம்..!!" என்று தலையாட்டினான்.

"ஓகே.. அப்போ ஷட்டவுன் பண்ணிட்டு கெளம்பு..!!"

கோவிந்த் ஷட்டவுன் எல்லாம் செய்யவில்லை. சிஸ்டத்தை அப்படியே லாக் செய்து மானிட்டரின் வெளிச்சத்தை மட்டும் நிறுத்தினான். சேரில் இருந்து எழுந்து கொண்டான். அத்தனை நேரம் அவர்களை கடுப்புடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஹரி, இப்போது பொறுக்கமாட்டாமல் எழுந்து ஓடிவந்தான். அசோக்கை பார்த்து கத்தினான்.

"டேய்.. டேய்.. என்னை விட்டுட்டு குடிக்க போறலடா.. நீ நல்லாவே இருக்க மாட்டடா.. நீ நல்லாவே இருக்க மாட்ட!!"

"ஏய்.. போடா..!! வொய்ஃப்புக்கு பயப்படுறவன்லாம் ஏன்டா லைஃபை என்ஜாய் பண்ணனும்னு ஆசைப்படுறீங்க..?? போ போ.. போய் வேலையை பாரு போ..!!" அசோக் ஏளனமாக சொன்னான்.

"போங்கடா போங்க.. என்னை இப்படி அம்போன்னு விட்டு போறீங்கல்ல.. நீங்க இன்னைக்கு குடிக்கிற சரக்குலாம் மட்டமான சரக்காதாண்டா இருக்கப் போகுது.. மப்பே ஏறாதுடா உங்களுக்கு.. அப்படியே ஏறுனாலும் அடுத்த செகண்டே வாந்தி எடுத்துடுவீங்கடா.. அப்படியே வாந்தி எடுக்காட்டாலும் போதையோட போய் போலீஸ்ட்ட மாட்டி, பர்ஸை பறிகொடுக்கப் போறீங்கடா..!! இது என் சாபம்டா.. வயிறு எரிஞ்சு சொல்றேண்டா.. பலிக்குதா இல்லையான்னு பாருங்க..!!"

ஹரி துக்கம் தாளாமல் புலம்ப, அவன் பேசிய வார்த்தைகள் அசோக்கிற்கு சிரிப்பை வரவழைத்தன. முகத்தை முறைப்பாக வைத்திருந்தவன் அவனையும் மீறி சிரித்து விட்டான். பிறகு கை நீட்டி ஹரியை அருகில் அழைத்தான்.

"ஏய்.. வாடா இங்க..!!"

"என்னடா..??"

கடுகடுப்பாக அருகில் வந்து நின்ற ஹரியின் பாக்கெட்டுக்குள் அசோக் கைவிட்டான். உள்ளே இருந்த செல்போனை எடுத்து கோவிந்த்திடம் நீட்டினான். என்னவென்று புரியாமல் விழித்த கோவிந்திடம் பொறுமையாக சொன்னான்.

"கவிதாவுக்கு ஒரு கால் பண்ணு கோவிந்த்.. இன்னைக்கு உனக்கு பர்த்டேன்னு சொல்லு.. ஹரியை ட்ரீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி.. அவகிட்ட பர்மிஷன் கேளு.. ப்ளீஸ்..!!"

கோவிந்த் ஓரிரு விநாடிகள்தான் திகைத்தான். அப்புறம் அசோக்கிடமிருந்து செல்போனை வாங்கி கவிதாவின் நம்பருக்கு கால் செய்தான். இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஹரிக்கோ முகமெல்லாம் பிரகாசம்.. வாயெல்லாம் பல்..!! அசோக்கின் கையை பிடித்துக்கொண்டு இளித்தவாறே சொன்னான்..!!

"மச்சி.. நண்பேண்டா மச்சி.. நண்பேண்டா..!!"

அசோக் எதுவும் ரியாக்ட் செய்யவில்லை. அவனது கவனம் கோவிந்திடம் இருந்தது. கோவிந்த் கவிதாவுக்கு கால் செய்து விஷயத்தை சொன்னான். அசோக்கும், ஹரியும் ரிசல்ட் தெரிந்து கொள்வதற்காக கோவிந்தின் முகத்தையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். விஷயத்தை சொல்லிவிட்டு ஒரு சில 'உம்..' கொட்டின கோவிந்த், அப்புறம் செல்போனை ஹரியிடம் நீட்டினான்.

"என்ன..??" ஹரி புரியாமல் கிசுகிசுப்பாக கேட்டான்.

"உங்ககிட்ட பே..பேசணும்னு சொல்றாங்க..!!"

ஹரியின் முகம் இப்போது பட்டென சீரியசானது. செல்போனை வாங்கி பவ்யமாக காதுக்கருகே வைத்துக் கொண்டான். பெரும் முயற்சி செய்து குரலை இயல்பாக மாற்றிக்கொண்டு,

"ஹலோ..!!" என்றான்.

"ம்ம்.. என்ன.. காரணம் கெடைச்சிடுச்சு போல..??" அடுத்த முனையில் கவிதாவின் கடுகடு குரல்.

"சேச்சே.. அப்டிலாம் இல்லம்மா..!! நம்ம கோவிந்த்க்கு இன்னைக்கு பர்த்டேயாம்.. ட்ரீட்க்கு நான் வந்தே ஆகணும்னு ரொம்ப பிரியப்படுறான்.. அதான்..!!"

"என்னது.. நம்ம கோவிந்தா..?? அவனைத்தான் உங்களுக்கு புடிக்காதுல்ல..??"

"அச்சச்சோ.. யார் சொன்னா..?? ரொம்ப புடிக்கும்மா..!!"

"தர்பூஸ் தலையன்.. தர்பூஸ் தலையன்..னு சொல்வீங்க..??"

"அ..அது சும்மா.. செல்லமா.. கூப்பிடுறது..!!"

"ஹ்ம்ம்..!! சொன்னா கேக்கவா போறீங்க.. என்னவோ பண்ணி தொலைங்க..!! அப்டியே வெளில சாப்பிட்டு வந்துடுங்க.. உங்களுக்காக சமைச்சு வச்சுட்டுலாம் என்னால உக்காந்திட்ருக்க முடியாது.. நான் ஓட்ஸ் ஏதாவது போட்டு சாப்பிட்டுக்குறேன்..!!"

"ஓகேம்மா.. ஓகேம்மா..!! ஓட்ஸ் சாப்பிட்டு நீ படுத்துக்கோ.. நான் வெளிலயே சாப்பிட்டு வந்துடுறேன்..!!"

"ஹ்ம்ம்..!!! அளவா குடிங்க.. புரியுதா..??"

"ஹ்ஹ.. என்னம்மா நீ.. என்னைப் பத்தி தெரியாதா உனக்கு..?? நமக்கு லிமிட்னா லிமிட்தான்..!! ஓகே..??"

"ஓகே ஓகே..!! பை..!!"

"பை..!!"

ஹரி சந்தோஷமாக காலை கட் செய்தான். கட் செய்ததுமே கோவிந்தை ஏறிட்டு கூலாக சொன்னேன்.

"ஓகே மிஸ்டர் கோவிந்த்.. உங்க டைம்லி ஹெல்ப்புக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..!! நீங்க இப்போ போய் உங்க வேலையை கண்டின்யூ பண்ணுங்க.. நானும் நண்பனும் பாருக்கு கெளம்புறோம்..!! சரியா.. நாளைக்கு பாக்கலாமா..??"

ஹரி அவ்வாறு சொன்னதும் கோவிந்தின் முகத்தில் பட்டென்று ஒரு ஏமாற்றம். அப்படியே முகத்தை பக்கவாட்டில் திருப்பி அசோக்கை பார்த்தான். அவன் அசோக் பக்கம் திரும்பியதும், இப்போது ஹரியும் கேஷுவலாக அசோக்கின் முகத்தை ஏறிட்டான். அசோக்கோ ஹரியை உஷ்ணமாக முறைத்துப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தான். அவனுடைய உக்கிரமான பார்வை ஹரியை சற்றே மிரள செய்தது. உடனே தடுமாற்றமாக சொன்னான்.

"இ..இல்ல மச்சி.. மூணு பேரா சேர்ந்து போனா.. எந்தக்காரியமும் வெளங்காதுன்னு.. மூத்தவங்க சொல்லிருக்காங்க.. அதான்..!!"

"அப்போ நீ போய் உன் வேலையை பாரு.. நானும் கோவிந்தும் மட்டும் போறோம்..!!"

"ஹேய்.. என்னடா இப்படி சொல்ற..??"

"பின்ன என்ன..?? இஷ்டம்னா எங்க கூட ஜாயின் பண்ணிக்கோ.. இல்லனா பொட்டியை சாத்திட்டு பொண்டாட்டியை பாக்க கெளம்பு..!! நீ வா கோவிந்த்..!!" அசோக் கோவிந்தை அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பிக்க,

"டேய்.. டேய்.. இருங்கடா.. ஷட்டவுன் பண்ணிட்டு வர்ரண்டா.. டேய்..!!" என்று பின்னால் இருந்து பதறிப்போய் அலறினான் ஹரி.

அதன்பிறகு இரண்டு மணி நேரம் கழித்து..

கோரமங்களாவில் இருக்கும் ஒரு செட்டிநாடு ரெஸ்டாரன்ட் கம் பார்..!! வார இறுதியாதலால் பாரில் கூட்டம் நிரம்பி வழிந்தது..!! நீல நிற நியான் வெளிச்சத்துடன், ஒருவித மசமசப்பான சூழல்..!! ஏ.ஸி காற்றில் மெலிதாக இளையராஜாவின் இன்ஸ்ட்ருமென்ட்டல் கசிந்துகொண்டிருந்தது. குடிக்க வந்திருந்தவர்கள் குடியரசு தலைவர் தேர்தல் பற்றியெல்லாம் வெட்டி விவாதத்தில் இறங்க ஆரம்பித்திருந்தார்கள்..!! பணியாளர்கள் எல்லாம் பம்பரமாய் சுழன்று பரபரப்பாக இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள்..!!

ஒரு மூலையில் நான்கு பேர் அமரக்கூடிய ஒரு டேபிளில் நமது ஆட்கள் மூவரும் அமர்ந்திருந்தனர். அசோக்கும், ஹரியும் ஒரு சோபாவை பகிர்ந்துகொண்டிருக்க, கோவிந்த் எதிரே தனியாக அமர்ந்திருந்தான். பீங்கான் பிளேட்டுகளில் வித விதமான பெயர்களுடன் வந்திருந்த கோழிகள் எல்லாம், அவர்களால் இரக்கமே இல்லாமல் விழுங்கப்பட்டிருந்தன. எவ்வளவு தின்றார்கள் என்பதற்கு சாட்சியாக எலும்புகள் மட்டுமே டேபிளில் இறைந்து கிடந்தன. எவ்வளவு குடித்தார்கள் என்பதற்கு சாட்சியாக அவர்களது தலைகள் எக்குத்தப்பாய் ஒரு நிலையில் நில்லாமல் சுழன்று கொண்டிருந்தன.

அருகே நின்றிருந்த பேரரிடம் கோவிந்த் ஆர்டர் செய்துகொண்டிருந்தான். எல்லோருக்கும் நான்காவது லார்ஜ் கொடுக்குமாறு நாக்கு குழற கேட்டுக்கொண்டான். வேறு சைடிஷ் ஏதாவது வேண்டுமா என்று தெரியாத்தனமாக கேட்டுவிட்ட பேரரை, கோவிந்த் வெறுப்பேற்ற ஆரம்பித்திருந்த சமயம்..!!

"ஐயோ.. நான் சொல்றதே உங்களுக்கு பு..புரியலை.. கோ..கோழி மாதிரியே இருக்குங்க.. ஆனா கோ..கோழி இல்ல.. அது ரெ..ரெண்டு ப்ளேட் கொண்டாங்க..!!" கோவிந்த் திக்கி திக்கி சொன்னதற்கு அந்த பேரர் தலையை சொறிந்தான்.

"ஸார்.. இப்படி சொன்னீங்கன்னா எப்படி ஸார்..?? அது என்னன்னு பேரை சொல்லுங்க ஸார்..!!"

"பேர் எனக்கு ஞா..ஞாபகம் இல்லையே..!!"

"வான்கோழியை சொல்றீங்களா..??"

"ப்ச்.. இல்ல..!!"

"புறாவா..??"

"ஹாஹா.. உங்க ஊர்ல பு..புறாலாம் கோழி மாதிரியா இருக்கும்..?? விட்டா கா..காக்காவான்னு கேட்பீங்க போல..??" என்று கோவிந்த் அந்த பேரரையே கலாய்க்க, அவன் இப்போது சற்றே எரிச்சலானான்.

"ஸார்.. எனக்கு தெரியலை ஸார்.. எதாருந்தாலும் மெனு பாத்து நீங்களே சொல்லுங்க..!!"

"டென்ஷன் ஆவாதீங்க பாஸ்.. அது பேர்ல ஒரு ந..நடிகை கூட இருக்காங்க..!! இருங்க.. யோசிக்கிறேன்..!!"

என்ற கோவிந்த், 'ஹ்ம்ம்.. ஹ்ம்ம்..' என்று நெற்றியை சொறிந்தவாறு தீவிரமாக அந்த உயிரினத்தின் பேரை யோசித்தான். அசோக்கும், ஹரியும் அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவன் இவ்வளவு பேசுவான் என்ற விஷயமே, சில பல ஆன்ட்டிகுட்டிகள் அவனுக்குள் இறங்கியதும்தான் இவர்களுக்கே தெரிகிறது. ஒரு சில வினாடிகளிலேயே கோவிந்துக்கு அந்தப்பேர் ஞாபகம் வந்து போனது. உற்சாகமாக சொன்னான்.

"ஹாங்.. கௌதாரி.. கௌதாரி..!! கௌதாரி ரெ..ரெண்டு ப்ளேட் கொண்டாங்க..!!"

"கௌதாரிலாம் எங்ககிட்ட இல்ல ஸார்..!!" பேரர் சலிப்பாக சொல்ல,

"ஓ..!!!! இல்லையா..??" கோவிந்தின் முகத்தில் ஒரு ஏமாற்றம்.

"ஹ்ம்ம்.. காடை இருக்கு.. அது வேணும்னா ட்ரை பண்ணி பாக்குறீங்களா..??"

"காடையா..??? அ..அது எப்படி இருக்கும்..??" கோவிந்த் வாய் குழற கேட்டான்.

"ம்ம்ம்..?? கோழி மாதிரியே இருக்கும்.. ஆனா கோழி இல்ல..!!" பேரரின் குரலில் அவனையும் அறியாமலே ஒரு நக்கல் கலந்திருந்தது.

"ஓ..!!!! அப்படின்னா.. அதையே குடுங்க..!!"

கோவிந்த் ஒருவழியாய் ஆர்டர் செய்து முடித்தான். அந்த பேரர் 'எங்க இருந்துடா கெளம்பி வர்றீங்க.. எங்க உசுரை வாங்குறதுக்குன்னே..!! ஷ்ஷ்ஷ்.. பாஆஆ..!!' என்று மனதுக்குள் நொந்துகொண்டவாறே அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான். அதற்காகவே காத்திருந்த மாதிரி ஹரி கோவிந்திடம் கேட்டான்.

"மிஸ்டர் கோவிந்த்.. எனக்கு ஒரு டவுட்..!!"

"என்ன..??"

"இந்த கௌதாரின்ற பேர்ல ஒரு நடிகை இருக்குறதா சொன்னீங்களே..?? அவங்க ஹாலிவுட் நடிகையா..??"



"இல்ல இல்ல.. நம்ம ஊர்தான்.. த..தமிழ்ல கூட நடிச்சிருக்காங்களே..??"

"தமிழ்லயா..?? தமிழ்ல யாரு.. எனக்கு தெரியாம..??" ஹரி தலையை சொறிந்தான்.

"ந..நடிச்சிருக்காங்க பாஸ்.. வாடா வாடா பையான்னு ஆடுவாங்களே.. அ..அவங்கதான்..!! அவங்க முழுப்பேரு நிஷா கௌ..கௌதாரி..!!"

கோவிந்த் சீரியசாக சொல்லிவிட்டு தட்டில் கிடந்த சிக்கனை எடுத்து கடிக்க ஆரம்பித்தான். ஹரி அவனையே கடுப்புடன் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனை அப்படியே அப்ப வேண்டும் போல ஹரிக்கு ஒரு ஆத்திரம். அசோக்தான் ஹரியை அடக்கினான்.

முதலில் விஸ்கி வந்தது. மூவரும் எடுத்து சிப்ப ஆரம்பித்தார்கள். அப்புறம் ஆவி பறக்கிற காடை ஃப்ரையை இரண்டு பிளேட்டுகளில் கொண்டு வந்து வைத்த பேரரிடம், மேலும் இரண்டு நாட்டுக்கோழி வறுவல் ஆர்டர் செய்தான் கோவிந்த். பேரர் சென்றதும் அசோக் கோவிந்திடம் சற்றே சலிப்பாக சொன்னான்.

"ஹேய் கோவிந்த்.. தேவை இல்லாம நெறைய ஆர்டர் பண்றன்னு நெனைக்கிறேன்..!!"

"ப..பரவால பாஸ்.. எல்லாம் நல்லா சாப்பிடுங்க..!! ட்ரிங்க்சும் இன்னும் எவ்வளவு வேணுமோ வாங்கி குடிங்க..!! செலவை பத்தி கவலைப்படாதீங்க.. இன்னைக்கு என்னோட ட்ரீட்..!!"

"ட்ரீட்டா..?? சேச்சே.. அதுலாம் ஒன்னும் வேணாம்பா.. மூணு பேரும் ஷேர் பண்ணிக்கலாம்..!!" அசோக் அவசரமாய் சொன்னான்.

"நோ வே..!! இன்னைக்கு நா..நான்தான் பே பண்ணுவேன் பாஸ்..!! ஐம் வெரி வெரி ஹேப்பி டுடே… ஸோ.. ஐ வில் பே..!!"

"ஹாஹா..!! ஹேப்பியா..?? ஏன்..??"

அசோக் மெலிதான சிரிப்புடன்தான் அவ்வாறு கேட்டான். ஆனால் கோவிந்தோ பட்டென சீரியசாகிப் போனான். முகத்தை ஒருமாதிரி சோகமாக மாற்றிக்கொண்டு சொன்னான்.

"ஏனா..?? என்ன பாஸ் இப்படி கேட்டுட்டீங்க..?? நான் இந்த க..கம்பெனிக்கு வர்றதுக்கு முன்னாடி அஞ்சு வருஷம் இன்னொரு கம்பெனில வேலை பாத்திருக்கேன்.. இப்போ இங்க வந்தும் ஒரு வருஷம் ஆவப் போகுது..!! இத்தனை வருஷத்துல என்னை யாருமே கூ..கூப்பிட்டது இல்ல பாஸ்..!!"

"எதுக்கு..??"

"தண்ணியடிக்கிறதுக்கு..!!"

"ஓ..!!"

"ம்ம்..!! தண்ணியடிக்க மட்டும் இல்ல.. எதுக்குமே யாரும் என்னை கூப்பிட மாட்டாங்க..!! எப்போவுமே நான் தனியாதான் போவேன்.. தனியாதான் வருவேன்..!! யாருக்குமே என்னை புடிக்காது பாஸ்.. என்னை பிரண்டுன்னு சொல்லிக்கிறதுக்கே யாரும் விரும்ப மாட்டாங்க..!!" கோவிந்த் பரிதாபமாக சொன்னவிதம் அசோக்கின் மனதை கஷ்டத்துக்கு உள்ளாக்கியது.

"ஹேய்.. கோவிந்த்.. என்னப்பா இது..? ஏன் இப்படிலாம் பேசுற..??"

"ஹையோ.. நான் சொன்னது உ..உண்மைதான் பாஸ்..!! பட் டுடே ஐம் வெரி ஹேப்பி..!! என்னையும் மதிச்சு.. தண்ணியடிக்க கூப்பிட்டீங்க பாத்தீங்களா.. என்னை உங்க பிரண்டா ஏத்துக்கிடீங்க பாத்திங்களா.. ஐம் வெரி ஹேப்பி.. வெரி வெரி ஹேப்பி..!! உங்க ரெண்டு பேரையும் என் லைஃப்ல என்னைக்கும் மறக்க மாட்டேன்..!!"

தழதழத்த குரலில் சொல்லி முடித்த கோவிந்த், உடனே அருகில் இருந்து விஸ்கியை எடுத்து கொஞ்சம் உறிஞ்சிக் கொண்டான். காடையை எடுத்து கடித்து குதறினான். அசோக் அவனையே பாவமாக பார்த்துக்கொண்டிருக்க, அவனுக்கு அருகே அமர்ந்திருந்த ஹரி இப்போது அசோக்கின் புஜத்தை சொறிந்தான். திரும்பி பார்த்த அசோக்கிடம், கிசுகிசுப்பான குரலில் சொன்னான்.

"என்னடா மச்சி இவன்.. சரக்கடிக்கிற நேரத்துல சந்தானம் மாதிரி சந்தோஷமா இருக்குறதை விட்டுட்டு.. சேரன் மாதிரி சென்ட்டியை போட்டுட்டு இருக்குறான்..!!"

"ப்ச்.. சும்மா இருடா..!!" அசோக்கும் கிசுகிசுத்தான்.

"முடியலைடா.. ரொம்ப சொறியுறான்டா..!!"

ஹரி கோவிந்த் மீது கடும் எரிச்சலில் இருந்தான். எந்த நேரமும் அவன் மீது பாய்ந்துவிடுபவன் மாதிரி கோபத்தில் இருந்தான். அசோக்தான் ஹரியை அவ்வப்போது அடக்கி வைத்தான். 

நான்காவது ரவுண்டும் முடிந்தது. மூவரும் தட்டில் மிச்சமிருந்த நாட்டுக்கோழி வறுவலை கொஞ்சம் கொஞ்சமாய் காலி செய்து கொண்டிருந்தார்கள். அப்போதுதான் கோவிந்த் சொன்னான். தனது தலை நிலைகொள்ளாமல் தடுமாற, பேச்சு குழற சொன்னான்.

"ரெண்டு மூணு நாளா மனசு ரொம்ப க..கஷ்டமா இருந்தது பாஸ்.. இன்னைக்குத்தான் நிம்மதியா இருக்கு..!!"

"ஓ.. அப்படி என்ன மனசு கஷ்டம் உனக்கு..??" அசோக் தெரிந்து கொண்டே கேட்டான்.

"என்ன பாஸ் தெரியாத மாதிரி கேக்குறீங்க..?? அதான்.. அந்த ஆ..ஆன்சைட்...!!!!
ஏமாத்திட்டாங்க பாஸ் என்னை.. மறுபடியும் ஏமாத்திட்டாங்க..!!"

"ஹேய்.. கோவிந்த்..!!"

"ஆன்சைட் குடுக்குறேன்.. ஆன்சைட் குடுக்குறேன்னு.. அந்த பாலா எனக்கு நல்லா அல்வா கிண்டி குடுத்துட்டாரு பாஸ்..!!"

"விடு கோவிந்த்.. அந்த ஆள் என்ன பண்ணுவாரு..?? ப்ரியாதான் வேணும்னு க்ளையன்ட்டே கேட்டிருக்காங்க.. இவங்க என்ன பண்ண முடியும்..??"

"ஹ்ம்ம்.. நீங்க சொல்றதும் சரிதான்..!! எனக்கு நேரம் சரியில்லை.. அதான் இப்படிலாம் நடக்குது..!! அப்படி நெனச்சுக்க வேண்டியதுதான்..!!"

சொல்லிவிட்டு கோவிந்த் சோகமாக தலையை கவிழ்த்துக் கொண்டான். அசோக் கொஞ்ச நேரம் அவனையே அமைதியாக பார்த்திருந்துவிட்டு, அப்புறம் மெலிதான குரலில் கேட்டான்.


"கோவிந்த்.. உன்கிட்ட ஒன்னு கேட்டா தப்பா நெனைக்க மாட்டியே..??"

"ஹ்ம்ம்.. கேளுங்க பாஸ்..!!"

"ஆன்சைட் போகணும்னு எல்லாருக்கும் ஆசை இருக்குறது சகஜம்தான்.. ஆனா நீ மட்டும் ஏன் இப்படி போயே ஆகணும்னு வெறியா இருக்குற..??"

அசோக் அந்த மாதிரி கேட்கவும், இப்போது கோவிந்த் பட்டென அமைதியாகிப் போனான். அந்தக்கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை என்பது அவனது திடீர் திகைப்பில் இருந்தே புரிந்தது. அசோக்கையும் ஹரியையும் மாறி மாறி ஒருவித பரிதாபப் பார்வை பார்த்தான். அப்புறம் கொஞ்சமாய் எச்சில் கூட்டி விழுங்கிக்கொண்டு கேட்டான்.

"உங்க ரெண்டு பேர்ல யாராவது ஆ..ஆன்சைட் போயிருக்கீங்களா..??"

கோவிந்தின் கேள்விக்கு ஹரி இப்போது பதில் சொன்னான்.

"ஹ்ஹ.. நாங்களும் உன்னை மாதிரிதான்.. ஆன்சைட்லாம் போனது இல்ல.. சேந்ததுல இருந்து இங்கதான் சேரை தேச்சுட்டு இருக்கோம்..!!" ஹரி இளித்தவாறே சொல்ல,

"நான் ஆன்சைட் போனது இல்லைன்னு உங்களுக்கு யார் சொன்னது..??"

கோவிந்த் பட்டென கேட்டான். அவன் அந்த மாதிரி கேட்கவும், ஹரியும் அசோக்கும் அதிர்ந்து போனார்கள். கோவிந்த்தின் முகத்தையே திகைப்பாக பார்த்தார்கள். அசோக்தான் முதலில் கேட்டான், அவன் கொண்டிருந்த ஆச்சரியம் விலகாமலே.

"ஹேய்.. அப்போ நீ ஏற்கனவே ஆன்சைட்லாம் போயிருக்கியா..??"

"ம்ம்.. போயிருக்கேன்.. ஒரே ஒரு தடவை..!!"

"எங்க..??"

"யூ.எஸ்.. மினியாபொலிஸ்..!!"

"ஓ..!! அப்புறம் என்ன... அதான் ஏற்கனவே போயிருக்கேல.. அதுக்கப்புறமும் ஏன் ஆன்சைட் மேல உனக்கு இப்படி ஒரு வெறி..??"

"ஹ்ம்ம்.. சொல்றேன்.. அதுக்கு முன்னாடி நான் ஆன்சைட் போன கதையை சொல்றேன்..!! கொஞ்ச நாள் முன்னாடி இந்த கம்பனில என்னை ஆ..ஆன்சைட் அனுப்புறேன் சொல்லிட்டு, மும்பையோட திரும்ப வர சொன்னாங்கல்ல..?? அந்த கதையை விட இந்தக்கதை காமடியா இருக்கும்..!! சொல்லவா..??"

"ஹ்ம்ம்.. சொல்லு..!!"

"ஆன்சைட் போக எல்லாருக்குமே ஆசை இருக்கும்னு கொஞ்ச நேரம் முன்னாடி சொன்னீங்கல்ல..?? ஒருவருஷம் முன்னாடி.. எனக்கு அந்த ஆசை கூட இல்ல பாஸ்..!! இங்க மாதிரிதான் என் பழைய கம்பனிலயும்.. பயங்கர ஹார்ட் வொர்க் பண்ணுவேன்.. ராத்திரி பகல்னு பாக்காம, ஆ..ஆபீசே கதின்னு கெடப்பேன்..!! என் ஹார்ட் வொர்க் பாத்து.. என் மேனேஜர் எனக்கு சப்போர்ட் பண்ணி.. என்னை ஆன்சைட் அனுப்ப சூஸ் பண்ணாங்க..!! எனக்கு அவ்வளவா இன்ட்ரஸ்ட் இல்ல.. ஆனா என் மேனேஜர் நீதான் சரியான ஆள்னு சொன்னாரு.. கம்பல் பண்ணாரு.. நானும் அக்சப்ட் பண்ணிக்கிட்டேன்…!! ஒரு டபுள் மைன்டோடவே மினியாபொலிஸ்ல போய் இறங்குனேன்..!!"

"எ..எப்போ..??"

"போன வருஷம் மார்ச்..!! புது ஊர்.. புது எடம்.. புது ஆளுங்க.. அங்க போனதுமே அவங்களோட நான் ஒ..ஒட்டாத மாதிரி ஒரு ஃபீல் எனக்கு வந்துடுச்சு..!! முதல் நாள் ஆபீஸ் போனேன்.. ஒரு பெரிய ஹால்ல ஒரு மீட்டிங்.. ஒரு இருபது இருபத்தஞ்சு பேரு இருந்தானுக.. எங்க அப்ளிகேஷன் பத்தி டெமோ கொடுக்கணும்..!!"

"ஹ்ம்ம்...!!"

"எனக்கு நேச்சராவே கொ..கொஞ்சம் இன்ஃபீரியாட்டி காம்ப்ளக்ஸ் பாஸ்.. நாம பேசுற இங்க்லீஷ் கரெக்டான்னு ஒரு பயம் எப்போவும் இருந்துக்கிட்டே இருக்கும்..!! அதில்லாம அந்த புது அட்மாஸ்பியர்.. தஸ்புஸ்னு புரியாம பேசுற அமெரிக்காகாரனுக சுத்தி உக்காந்துட்டு இருக்கானுக..!! எனக்கு வேற அப்போ ரொம்ப வா..வாய் திக்கும்..!! அன்னைக்கு எனக்கு என்ன ஆச்சுன்னே இப்போ வரைக்கும் சுத்தமா புரியலை பாஸ்.. பே..பேச்சே வரலை எனக்கு.. ஏதேதோ உளர்றேன்.. திக்கு திக்குன்னு திக்குறேன்..!! சிம்பிளா சொல்லனும்னா.. சொ..சொதப்பிட்டேன் பாஸ்.. சொதப்பு சொதப்புன்னு சொதப்பிட்டேன்!! ஒரு ரெண்டு நிமிஷம் பாத்துட்டு.. எல்லாமே எந்திரிச்சு போயிட்டானுக..!!"

"ஓ..!! ஷிட்..!!" அசோக் நிஜமான வருத்தத்துடன் சொன்னான்.

"எவ்வளவோ கெஞ்சுனேன் தெரியுமா.. இன்னொரு சான்ஸ் கொடுங்கன்னு..!! அவனுககிட்டையும் சரி.. இவனுககிட்டையும் சரி..!! யாருமே நான் கெஞ்சுனதை மதிக்கலை.. அடுத்த நாளே என்னை இன்டியா அனுப்பி வச்சுட்டாங்க.. எனக்கு பதிலா வேற ஒரு ஆளை திரும்ப ஆன்சைட் அனுப்பினாங்க..!!"

சொல்லிவிட்டு கோவிந்த் அமைதியானான். அவனுடைய பார்வை எங்கோ வெறித்துக் கொண்டிருந்தது. வலி மிகுந்த பழைய நினைவுகளில் அவன் மூழ்கிப் போயிருக்கிறான் என்று தெளிவாக தெரிந்தது. கேட்டுக்கொண்டிருந்த அசோக்கிற்கு மிகவும் கஷ்டமாகிப் போனது. இப்படியெல்லாம் கூட நடக்குமா என ஆச்சரியமுற்றான். கோவிந்துக்கு ஆறுதல் சொல்லும் விதமாக அவனுடைய கையை அழுத்தி பற்றிக் கொண்டான். கோவிந்த் மேலும் தொடர்ந்தான்

"என் பழைய கம்பெனில.. சும்மாவே என்னை யாரும் மதிக்க மாட்டாங்க பாஸ்.. அந்த பிரச்னைக்கு அப்புறம்.. எனக்கு இருந்த கொ..கொஞ்ச நஞ்ச மதிப்பும் சுத்தமா போயிடுச்சு..!! அந்த ப்ராஜக்ட்ல இருந்து என்னை தூக்கிட்டாங்க.. என்னை கம்பல் பண்ணி அனுப்பின மேனேஜரே 'என்னால எதுவும் செய்ய முடியலை கோவிந்த்..'னு கையை விரிச்சுட்டாரு..!! கூட வேலை பாக்குறவங்க எல்லாம் என்னை முன்னாடி விட்டு பின்னாடி கே..கேலி பண்ணுவாங்க..!! ரிஜக்டட் பீஸ்.. ரிட்டர்ன் ஸ்டேட்மன்ட்'ன்லாம்.. எனக்கு நிக்நேம் வச்சிருந்தாங்க..!!"

"ஹ்ம்ம்...!!"

"அவங்கதான் என்னை புரிஞ்சுக்கலைன்னா.. என் அ..அப்பா கூட என்னை புரிஞ்சுக்காம கேவலமா பேசிட்டாரு பாஸ்..!! சொந்தக்காரனுக இன்னொரு பக்கம்.. ஏதோ எழவு விழுந்த மாதிரி.. போன் பண்ணி போன் பண்ணி துக்கம் விசாரிச்சாங்க..!! அந்த கொஞ்ச நாள் நான் பட்ட கஷ்டம்.. ரொம்ப கொடுமை..!! என் அம்மாதான் அப்போலாம் எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருந்தாங்க..!!"

"ஹ்ம்ம்...!!"

"என்னை அவங்க திரும்ப அனுப்பின அன்னைக்கு முடிவு பண்ணினது பாஸ்.. மறுபடியும் ஆ..ஆன்சைட் போகணும்னு..!!! புரியுதா..??"

"பு..புரியுது..!!"

"ஹ்ம்ம்.. போகணும்.. இன்னும் ஒரே ஒரு தடவையாவது ஆன்சைட் போகணும்..!! நான் யார்னு ப்ரூவ் பண்ணனும்.. மத்தவங்களுக்காக மட்டும் இல்ல.. எனக்கே நான் யா..யார்னு ப்ரூவ் பண்ணி காட்டனும்..!!" அவ்வாறு சொல்லும்போது கோவிந்தின் குரலில் அபப்டி ஒரு உறுதி.

"கண்டிப்பா..!!" அசோக்கும் இப்போது உணர்ச்சிவசப்பட்டவனாய் சொன்னான்.

"இப்போ ஸ்பீச் தெரபிலாம் போய்.. திக்குறது ரொம்ப கம்மி ஆயிடுச்சு.. இங்க்லீஷ் கம்யூனிகேஷன் கூட நல்லா இம்ப்ரூவ் பண்ணிக்கிட்டேன்..!! என்னை ப்ரூவ் பண்றதுக்கு ஆ..ஆப்பர்ச்சூனிட்டிதான் இன்னும் கெடைக்கலை..!!"

"கவலைப்படாத கோவிந்த்.. கூடிய சீக்கிரம் உனக்கு சான்ஸ் கிடைக்கும்.. எல்லாருக்கும் நீ யார்னு ப்ரூவ் பண்ணத்தான் போற..!!"

அசோக் நம்பிக்கையூட்டும் விதமாக சொல்ல, கோவிந்தும் அவனை நன்றியுடன் பார்த்தான். மனதில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை கூர்ந்து கவனிக்கிற அளவுக்கு ஒரு புத்தி தெளிவு அசோக்கிற்கு அப்போது இல்லை. இரண்டு நாட்கள் முன்புவரை கோவிந்தை தனக்கு போட்டியாக எண்ணிக் கொண்டிருந்தான். ஆனால் இப்போது அவனே 'கோவிந்திற்கு ஆன்சைட் செல்லும் வாய்ப்பு சீக்கிரம் அமையாதா..?' என நினைக்கிற அளவுக்கு அவனது மனநிலை மாறி இருக்கிறது..!! இன்றைய மனித வாழ்க்கையே இப்படி புரிந்து கொள்ளாமல் போட்டி போட்டுக்கொண்டு மகிழ்ச்சியை இழக்கிற மடத்தனம் என்பதை அப்போது அவன் உணரவில்லை..!!

கோவிந்த் சொன்ன விஷயங்களின் தாக்கத்தில் மூழ்கிப் போயிருந்த அசோக், சற்று தாமதமாகத்தான் தனக்கருகே கேட்ட அந்த சத்தத்தை கவனித்தான். சீரியல் பாக்கிற பெண்கள் மூக்கை விசும்புகிற மாதிரியான 'ம்ஹ்.. ம்ஹ்..' என்று சத்தம். திரும்பிப் பார்த்தால், ஹரிதான் துக்கம் தொண்டையை அடைக்க விசும்பிக்கொண்டு அமர்ந்திருந்தான். அவனுடைய கண்கள் கோவிந்தையே 'பே..' என்று பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தன. அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை.

"டேய்.. என்னடா ஆச்சு..??" என்று ஹரியை உலுக்கினான்.

"வழி விடுடா மச்சான்..!!" என்றான் ஹரி சோபாவில் இருந்து எழுந்தவாறே

"எதுக்குடா..??"

"ஏய்.. வழி விடுன்னு சொல்றேன்ல..??"

அசோக் ஒதுங்கிக்கொள்ள, ஹரி தட்டு தடுமாறி நகர்ந்து சோபாவின் எதிர்ப்பக்கம் சென்றான். சென்றதுமே கோவிந்தை தோளோடு சேர்த்து கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தான். ஹரிக்கு போதை ஓவர் ஆகிவிட்டது என்று அசோக்கிற்கு புரிந்து போனது. ஆனால் கோவிந்திற்கு அது புரியவில்லை. ஏனென்றால் அவனுக்கும் ஓவராகி போயிருந்தது. இருவரும் போதையின் உச்சத்தில் வாய் குழறவே பேசிக்கொண்டார்கள். ஹரி புலம்பினான்.

"மச்சான்.. மச்சான்.. சாரிடா மச்சான்..!!"

ஹரி ஏன் திடீரென ஒப்பாரி வைக்கிறான் என்று அசோக்கிற்கும் புரியவில்லை. கோவிந்திற்கும் புரியவில்லை. அழுகிற ஹரியிடம் கோவிந்த் குழப்பமாய் கேட்டான்.

"பாஸ்.. எ..என்ன ஆச்சு பாஸ்..??"

"அடிடா மச்சான்.. என்னை அடிச்சுடுடா..!!" கெஞ்சினான்.

"ஹையோ.. எதுக்கு பாஸ் அடிக்க சொல்றீங்க..??"

"நீ எவ்வளவு நல்லவன்டா மச்சான்.. எப்படி ஒரு லட்சியத்தோட வாழ்ந்துட்டு இருக்குற.. உன்னைப்போய் நான் தப்பா நெனச்சுட்டண்டா..!! என்னை அடிச்சுடுடா மச்சான்..!!"

புலம்பிய ஹரி, கோவிந்தின் கையை பற்றி தன்னை தானே அறைந்து கொள்ள முயன்றான். கோவிந்த் பதறிப்போய் அவனிடமிருந்து தன் கையை பறித்துக் கொண்டான்.

"ஐயோ.. என்ன பாஸ் பண்றீங்க.. விடுங்க..!!"

"பரவாலடா மச்சான்.. அடிடா.. நீ என்னை அடிக்கிறதுல தப்பே இல்ல..!! ஆனா.. ஒன்னு மட்டும் சொல்றேண்டா.. நீ கண்டிப்பா ஆன்சைட் போறடா.. நான் போக வைக்கிறேண்டா..!! அந்த பாலா நாய் மட்டும் நெக்ஸ்ட் டைம் உன்னை ஏமாத்தட்டும்.. அவனை நான் போட்டுத்தள்ளுறனா இல்லையான்னு பாருடா..!!"

"அச்சசோ.. அப்டிலாம் பண்ணிடாதீங்க பாஸ்.. எனக்காக நீங்க எந்த கஷ்டமும் படக்கூடாது.. அதை என்னால தாங்கிக்க முடியாது..!!" கோவிந்தும் போதையில் பாசக்காரப்பயல் ஆகியிருந்தான்.

"ஐயோ.. ஐயோ.. நீ எவ்வளவு நல்லவனா இருக்குறடா கோவிந்து.. உன்னை போய் நான் என்னன்னமோ சொல்லிட்டனடா..??"

"அப்படி என்ன பாஸ் சொல்லிட்டீங்க..??" கோவிந்த் கேஷுவலாக கேட்க,

"தர்பூஸ் தலையன்லாம் சொல்லி உன்னை திட்டிருக்கண்டா மச்சான்..!!"

ஹரி போதையிலும், பாசத்திலும் உளறிவிட்டான். அவன் அடிக்கிற கூத்தில் நொந்து போய் அசோக் தன் தலையை பிடித்துக் கொண்டான். கோவிந்தோ முகமெல்லாம் அஷ்டகோணலாகிப் போய் கேட்டான்.

"தர்பூஸ் தலையனா..???? நானா..????"

கோவிந்த் முகத்தை சுளிக்கவும்தான், தான் உளறிக்கொட்டியதையே ஹரி உணர்ந்துகொண்டான். நாக்கை கடித்துக் கொண்டான். ஆனால் அந்த போதையிலும் உடனே சுதாரித்துக் கொண்டு, நிலைமையை சமாளிக்கும் விதமாக..

"மச்சான்.. இதுக்கெதுக்குடா நீ இவ்ளோ ஃபீல் பண்ணுற..?? இப்போ.. இந்த தர்பூஸ் இருக்கே.. அது எவ்வளவு நல்ல பழம் தெரியுமா..? வைட்டமின் ஏ, பி, ஸின்னு எல்லாமே இருக்குது மச்சான் அதுல..!! உடம்புக்கு குளிர்ச்சி.. ஹார்ட் ப்ராப்ளம், டயபடிஸ் ப்ராப்ளதுக்குலாம் ரொம்ப நல்லது..!! அதை வெட்டிப்பாத்தா செக்க செவேல்னு என்ன அழகா இருக்குது..?? உலகத்துல தர்பூஸ் மாதிரி ஒரு சூப்பரான பழம் வேற எதுவுமே இல்லைடா மச்சான்..!!"

"ம்ம்ம்.."

"ஆக்சுவலா உன் தலை தர்பூஸ் மாதிரி இருக்குறதுக்கு நீ ரொம்ப பெருமைப்பணும்டா மச்சான்.. ரொம்ப பெருமைப்படணும்..!!"

"ஓ..!!" ஹரியின் விளக்கத்தில் கோவிந்த் ஓரளவு திருப்தி அடைந்தவனாகவே காணப்பட்டான். ஆனால் ஹரி அதன்பிறகும் அவனை விடவில்லை.

"சொல்லுடா மச்சான்.. பெருமைப்படுறேன்னு சொல்லுடா.. ப்ளீஸ்டா..!!"

"ம்ம்.. பெருமைப்படுறேன் பாஸ்..!!"


"குட்.. வெரி குட்.. ஐ லைக் யூ..!! இது மட்டும் இல்லடா மச்சான்.. இன்னும் நீ நெறைய மேட்டருக்காக பெருமைப்படணும்..!!"



"இன்னுமா..??"

"ஹ்ம்ம்.. இந்த பனங்கொட்டை இருக்குலடா மச்சான்.. பனங்கொட்டை..??"

ஹரி சொல்லிக்கொண்டிருக்க, அதற்குள்ளாக பேரர் வந்து அசோக்கிடம் பில்புக்கை நீட்டியிருந்தான். அசோக் அதை வாங்கி ஹரியின் தலையிலேயே ஓங்கி அடித்தான். அவன் 'ஆஆஆ..' என்று கத்தியவாறு திரும்பி பார்க்க, அசோக் அவனிடம் முறைப்பாக சொன்னான்.

"த்தா.. விடுடா.. ஒருத்தன் சிக்கிட்டா போதுமே..!!"என்றவன், பிறகு கோவிந்தை ஏறிட்டு குரலை இதமாய் மாற்றிக்கொண்டு சொன்னான்.

"இங்க பாரு கோவிந்த்.. இனி உனக்கு யாரும் இல்லைன்னு நீ ஃபீல் பண்ணாத.. நாங்கல்லாம் இருக்கோம்.. ஓகேவா..?? இன்னைல இருந்து நீயும் எங்கள்ல ஒரு ஆள்..!! இந்தா.. உன் விருப்பப்படி.. நீயே இன்னைக்கு பில் பே பண்ணு..!!" என்று பில்புக்கை கோவிந்திடம் நீட்டினான்.



No comments:

Post a Comment