Monday, June 29, 2015

ஐ ஹேட் யூ, பட்.. - அத்தியாயம் - 16

எப்போது எவரிடம் எவ்வாறு காதல் வரும் என்று எவர் அறியக்கூடும்..?? நேத்ராவுக்கும் அதுதான் நேர்ந்தது..!! அலுவலகத்தில் தனித்துவிடப்பட்ட கோவிந்த் மீது ஒரு பச்சாதாபம் கொண்டுதான் அவனுடன் பேச ஆரம்பித்தாள். அவனுடன் பேச ஆரம்பிக்கையில் அவனைப்பற்றி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை அவளுக்கு..!! ஆனால் அவனிடம் பேசியபிறகு.. அமைதியாக சுற்றித்திரியும் அவனுக்குள் இருக்கும் நல்ல குணங்களை அறிந்தபிறகு.. அவன் தன்மீது கொண்டிருப்பது தூய்மையான அன்பென உணர்ந்தபிறகு.. அவளுடய இதயம் காதல்க்கடலில் அமிழ்வதை அவளால் தடுக்க முடியவில்லை.. தடுக்கவும் அவள் விரும்பவில்லை..!!

கோவிந்த் நேத்ரா மீது காட்டிய அன்பிற்கும் காரணம் இருக்கிறது..!! நொந்து போயிருக்கிற மனதுக்கு ஆறுதலாய் இரண்டு வார்த்தைகள் கிடைத்தால் அதன் மதிப்பே தனி..!! யாரும் அண்டாமல் ஒருவித விரக்தியுடன் தனித்து திரிந்த கோவிந்திற்கு, முதன்முதலாய் வலிய வந்து தன்னை அணுகிய நேத்ராவை உடனே பிடித்துப் போனதில் ஆச்சரியம் இல்லை..!! அவள் பேசிய ஆறுதல் மொழிகளே, அவள் மீதான அன்பாய் உருமாறி, அவனிடமிருந்து பதிலுக்கு வெளிப்பட்டன.. அவள் மேல் அக்கறை எடுத்துக்கொள்ள தூண்டின..!! நேத்ராவின் பக்கமாய் தனது மனம் சாய்வதை அவனும் உணர்ந்தே வைத்திருந்தான்..!! அதனால்தான்.. தனது அறை தேடிவந்து கண்களில் நீருடன் காதலை சொன்ன நேத்ராவிடம், பதிலுக்கு கண்ணீர் உகுத்து தன் காதலையும் அவனால் அறிவிக்க முடிந்தது..!!

நேத்ரா அன்று பகல் முழுக்க கோவிந்தின் அறையிலேயே தங்கி இருந்து அவனை கவனித்துக் கொண்டாள். மருத்துவரிடம் அழைத்து சென்றாள்.. மதிய உணவு தயார் செய்து கொடுத்தாள்.. மாத்திரைகளை விழுங்க செய்தாள்..!! சாப்பிட்டுவிட்டு களைத்துப்போய் அவன் உறங்க, அருகில் அமர்ந்து கண்கொட்டாமல் இவள் பார்த்துக் கொண்டிருந்தாள். உறங்கி எழுகையில் அவனுடைய உடல்நிலையும் ஓரளவு தேறியிருந்தது.

அசோக்கும் ப்ரியாவும் அன்று மாலை சீக்கிரமே ஆபீசில் இருந்து கிளம்பினார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒன்றாக ஒரே பைக்கில் பயணம்..!! கோவிந்தை பார்த்து நலம் விசாரித்துவிட்டு.. நேத்ரா எடுத்து சென்ற ப்ரியாவின் வண்டியை திரும்ப பெற்றுக்கொண்டு.. அப்படியே நேத்ராவின் காதல் கனிந்ததா என்று அறிந்துகொள்வதும்.. அவர்களது திட்டம்..!! காலிங்பெல் அடித்த அவர்களுக்கு நேத்ராதான் வந்து கதவு திறந்து விட்டாள். அவர்களை பார்த்ததும் முகம் மலர்ந்து போய், ஒரு வெட்கப் புன்னகையை நேத்ரா வீச, அதிலிருந்தே நடந்ததை அறிந்து கொண்டார்கள் அசோக்கும், ப்ரியாவும்..!!



கோவிந்தும் நேத்ராவும் காதலில் இணைந்தது.. அசோக்கிற்கு பெருமகிழ்ச்சியை கொடுத்தது.. ப்ரியாவிற்கோ பெருமகிழ்ச்சியுடன் சேர்த்து, ஒரு சிறுஏக்கத்தையும் கொடுத்தது..!! 'இப்போத்தான் லவ் பண்ண ஆரம்பிச்சா.. இவளுக்கு அதுக்குள்ள செட் ஆயிடுச்சு.. நானும் இத்தனை நாளா லவ் பண்றேன்.. எனக்கு என்னைக்கோ..??' என்பதுபோல..!! 'லவ்வை சொல்றதுக்கு இவளுக்கு இருந்த தைரியம்.. ஏன் எனக்கு இல்ல..??' என்று தன் மீதே ஒரு எரிச்சல்..!! அப்புறம் உடனே 'ஆமாம்.. அன்னைக்கு ஒரு வார்த்தை சொல்லிட்டன்னு.. அண்ணனுக்கு ஃபோன் போட்டு.. உடனே எனக்கு ஒரு பொண்ணு பாருன்னு சொல்றான்.. இந்த லூசுப்பயலை நம்பி எந்த நம்பிக்கைல லவ்வை சொல்றது..??' என்று அசோக் மீது ஒரு கடுப்பு..!! சற்று யோசித்தபிறகு 'துணிஞ்சு சொல்லிடலாமா.. பதிலுக்கு அவன் என்ன சொன்னாலும் பரவால்லன்னு..' என்று மனதில் ஒரு குறுகுறுப்பு..!!

அசோக்கும் ப்ரியாவும் கொஞ்ச நேரம் கோவிந்திடம் பேசிக்கொண்டிருந்தார்கள். 'நான் இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு கெளம்புறேன்..' என்று நேத்ரா சொல்ல, இவர்கள் மட்டும் அங்கிருந்து கிளம்பினார்கள். வெளியில் வந்து அவரவர் வாகனங்களை நெருங்கையில்..

"காஃபி டே போயிட்டு போலாமா அசோக்.. ரொம்ப நாள் ஆச்சு.. நாம சேர்ந்து போய்..!!"

என்று ப்ரியா ஆசையாக கேட்டாள். காஃபி அருந்திக்கொண்டே காதலை சொன்னால் நன்றாக இருக்குமே என்று நினைத்தாளோ என்னவோ..?? ஆனால்.. அசோக்கோ ப்ரியாவின் மனதை அறியாதவனாய்..

"ஹேய்.. ஸாரி ப்ரியா.. செண்பகம் நாளைக்கு ஜாயின் பண்றால.. இன்னைக்கு ஊர்ல இருந்து வர்றா.. அவளை போய் ரிசீவ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்..!! அண்ணி மதியமே கால் பண்ணினாங்க.. உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்..!! அல்ரெடி இப்போவே லேட் ஆயிடுச்சு.. நாம இன்னொரு நாள் போகலாம்.. சரியா..??" என்று வருத்தமான குரலில் சொன்னான்.

"ம்ம்.. ஓகே.. நோ ப்ராப்ளம்..!!"

என்றாள் ப்ரியா ஏமாற்றத்தையும், எரிச்சலையும் மறைத்துக்கொண்டு. மனதில் எழுந்த ஆசையை அவன் மறுதலித்துவிட்டானே என்பதால் வந்த ஏமாற்றம்..!! செண்பகத்தின் பேரை அவன் உச்சரிக்க கேட்டதால் வந்த எரிச்சல்..!! இருவரும் ஹெல்மட் மாட்டிக்கொண்டு வண்டியில் ஏறி அமர்ந்தார்கள். வண்டியை கிளப்பி எதிரெதிர் திசையில் பறந்தார்கள்.


அசோக் கலாசிப்பாளையத்தை அடைந்தபோது, செண்பகம் வந்து சேர்ந்திருந்தாள். தோளில் ஒரு பேக்.. அதை விட பெரிய சைஸில் காலடியில் ஒன்று..!! தனக்கருகே வந்து ப்ரேக் அடித்து நிற்கும் பைக்கை அவள் கவனிக்கவில்லை. பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு, பக்கவாட்டில் இருந்த ஒரு பானிபூரி கடையை ஏக்கமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். அசோக் அவளுக்கு பின்பக்கமாக சென்று அவளுடைய தலையில் 'சத்..' என்று ஒரு அடிபோட, உடனே ஷாக்காகி திரும்பி பார்த்தாள். அசோக் என்று தெரிந்ததும் முகம் மலர்ந்து புன்னகைத்தாள்.

"ஹாய் மாமா..!!"

"வந்து ரொம்ப நேரமாச்சா..??"

"இ..இல்ல.. இப்போத்தான்.. ஃபைவ் மினிட்ஸ் ஆச்சு..!!"

"நான் வந்தது கூட தெரியாம.. எங்க பராக்கு பாத்துட்டு இருக்குற..??"

"ஒ..ஒண்ணுல்ல.. சு..சும்மா.. அப்படியே.." செண்பகம் அசடு வழிந்தாள். அசோக் புன்னகைத்தான். அப்புறம் அவளை சீண்டும் எண்ணத்துடன்..

"ஹ்ம்ம்.. பானிபூரி சாப்பிடலாமா செம்பு..??" என்று கேஷுவலாக கேட்டான்.

"ஓகே மாமா.. சாப்பிடலாம்..!!" என்று செண்பகம் முகமெல்லாம் பிரகாசமாகவும், வாயெல்லாம் பல்லாகவும் சொன்னாள். அசோக் உடனே தனது நெற்றியை கீறிக்கொண்டு ஏதோ யோசிப்பது மாதிரி நடித்தபடியே,

"இல்ல செம்பு.. இவன்ட்ட பானிபூரி நல்லா இருக்காதுன்னு நெனைக்கிறேன்.. நாம போற வழில ஒரு கடை இருக்கு.. சூப்பரா போட்டு தருவான்.. அங்க போய் சாப்பிடுவோம்.. சரியா..??" என்று கேட்க,

"ஹ்ம்ம்.. சரி மாமா..!!" முகம் வாடிப்போய்.. குரலில் உற்சாகம் குறைந்து போய்.. தலையாட்டினாள் செண்பகம்.

இருவரும் பைக்கில் கிளம்பினார்கள். மார்பில் ஒன்றும் மடியில் ஒன்றுமாய் இரண்டு பேகையும், தவறி விழுந்துவிடாமல் கவனமாக பிடித்துக்கொண்டே, பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு, பைக் ப்ரேக் அடித்து நிற்கும் தருணத்திற்காக ஆர்வமாக காத்திருந்தாள் செண்பகம். பைக் நிற்கவே இல்லை.. சென்றது.. சென்றது.. சென்று கொண்டே இருந்தது..!! ஒரு கட்டத்தில் செண்பகம் பொறுமை இழந்து போய்..

"இன்னும் ரொம்ப தூரம் போகனுமா மாமா..??" என்று சலிப்பாக கேட்டாள்.

"இல்ல இல்ல.. இதோ வந்துருச்சு.. நம்ம வீடு..!!" என்று வீட்டுக்கு முன்பாக பைக்கை ப்ரேக் அடித்து நிறுத்தினான் அசோக். செண்பகம் ஷாக்காகி போனாள்.

"வீடா..???? வீட்டுக்கே வந்துட்டமா..????" அதிர்ச்சியும் ஏமாற்றமுமாம் கேட்டாள்.

"ஆமாம்.. ஏன்..??"

"போற வழில பானிபூரி சாப்பிடலாம்னு சொன்னீங்க..??"

"ஷ்ஷ்ஷ்.. ஐயோ.. மறந்தே போச்சு செம்பு..!! நீயாவது ஞாபகப் படுத்திருக்கலாம்ல..??" அசோக் நல்லவன் மாதிரி நடித்தான்.

"நான் சொல்லலாம்னுதான் நெனச்சேன்.. நீங்க திட்டுவீங்களோன்னு பயமா இருந்தது.. அதான் சொல்லல..!!"

"ப்ச்.. இதுக்குலாம் எதுக்கு திட்டப்போறேன்..?? ஹையோ.. போடி.. எல்லாத்தையும் ஸ்பாயில் பண்ணிட்ட நீ..!!" பழியை தூக்கி அவள் மீதே போட்டான் அசோக்.

"ப..பரவால மாமா.. விடுங்க..!!"

பரிதாபமாக சொன்ன செண்பகத்தை பார்க்க அசோக்கிற்கு பாவமாக இருந்தது. மனதிற்குள் சிரித்துக் கொண்டான். அவள் கையிலிருந்த பேக் ஒன்றை தான் வாங்கிக்கொண்டு, மெல்லிய குரலில் சொன்னான்.

"சரி.. நாளைக்கு கண்டிப்பா பானிபூரி சாப்பிடலாம்.. ஓகேவா..??"

"ஹ்ம்ம்.. ஓகே மாமா..!!" செண்பகம் ஓரளவு சந்தோஷம் திரும்பியவளாய் சொன்னாள்.

அடுத்த நாள்.. அவர்கள் கம்பனியில்.. அசோக்கின் டீமில்.. செண்பகமும் சேர்ந்து கொண்டாள்..!! அவள் தங்கிக்கொள்வதற்கு மடிவாலா ஏரியாவில் ஏதாவது லேடீஸ் ஹாஸ்டல் கிடைக்குமா என அசோக்கே தினமும் அட்வர்டைஸ்மன்ட் பார்த்து தேடுதல் வேட்டை நடத்தினான். ஹாஸ்டலில் இடம் கிடைக்கும்வரை தனது வீட்டில் அவளை தங்கிக்கொள்ள அனுமதித்தான். செண்பகமோ நிரந்தரமாக அவன் வீட்டில் டேரா போடலாம் என்று எண்ணினாள்.

"நான் இங்கயே தங்கிக்கிறேனே மாமா..??" என்று கெஞ்சலாக கேட்டாள்.

"ஏன்.. என்னாச்சு..??" அசோக் புருவத்தை சுருக்கியவாறு கேட்டான்.

"எனக்கு பி.ஜி.ல தங்க புடிக்கல..!!"

"ஒன்னும் கவலைப்படாத செம்பு.. மாமா உனக்காகத்தான் நல்ல சாப்பாடு போடுற பி.ஜி.யா.. மைக்ரோஸ்கோப் வச்சு தேடிட்டு இருக்குறேன்.. உனக்கு ஒரு பிரச்னையும் இருக்காது..!!"

"ஐயோ.. அதுக்காக சொல்லல மாமா..!!"

"ம்ம்.. அப்புறம்..??"

"எல்லாம் நாலாயிரம் ஐயாயிரம்னு கேக்குறாங்க.. தேவை இல்லாத தெண்ட செலவுதான..?? வேணுன்னா.. ஒன்னு செய்யலாமா..??"

"என்ன..??"

"நான் வேணா.. தங்குறதுக்கு தவுசண்ட் ருபீஸ்.. திங்கிறதுக்கு தவுசண்ட் ருபீஸ்.. உங்ககிட்ட குடுத்துடுறேன்..!!"

"எந்த தவுசண்ட் ருபீஸ்..?? எப்போவும் உன் பர்ஸ்ல இருக்குமே.. அந்த தவுசண்ட் ருபீஸா..??" அசோக் கிண்டலாக கேட்டான்.

"ஐயோ.. அது இல்ல மாமா.. ரியல் தவுசண்ட் ருபீஸ்.. ஒரிஜினல் தவுசண்ட் ருபீஸ்..!! ஓகேவா..??"

"அதுலாம் சரிப்பட்டு வராது செம்பு.. நீ பி.ஜி.ல தங்கிக்கோ.. அதுதான் எல்லாருக்கும் நல்லது..!! புரியுதா..??" அசோக் பிடிவாதமாக மறுக்க,

"ம்ம்.. சரி மாமா..!!" செண்பகம் எரிச்சலுடன் ஒத்துக்கொண்டாள்.

அசோக்கின் பிடிவாதம் செண்பகத்துக்கு எரிச்சலை ஏற்படுத்தியது என்றால், ஆபீசில் ப்ரியாவுக்கோ வேறுவிதமான எரிச்சல்..!! செண்பகம் ஜாயின் செய்த முதல் மூன்று நாட்கள் அசோக்குடன் பைக்கிலேயே ஆபீசுக்கு வந்தாள். அவளுக்கு இது புது இடம், புது டீம் என்பதால் அசோக் எப்போதும் அவள் அருகிலேயே இருந்து அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்தான். அடிக்கடி அவர்களை சேர்ந்து பார்க்க நேரிட்ட ப்ரியாவுக்கோ, ஏனோ அது ஒருவித எரிச்சலை கிளப்பிவிட்டது. அதில்லாமல் நேத்ராவும், கோவிந்தும் வேறு உரிமையாக விரல்கள் கோர்த்து சுற்றி திரிந்து, அவள் மனதில் ஒருவித ஏக்கத்தை கிளறிவிட்டார்கள்.

செண்பகம் ஜாயின் செய்த மூன்றாம் நாள் இரவு.. அவர்கள் ஆபீசின் டூவீலர் பார்க்கிங் பகுதியில்.. ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் செய்ய.. ப்ரியா அதனுடன் போராடிக் கொண்டிருந்தாள்..!! 'ம்ம்க்குக்குக்குக்கும்.. ம்ம்க்குக்குக்குக்கும்..' என்று கனைத்ததே ஒழிய, ஸ்டார்ட் ஆவது மாதிரி தெரியவில்லை. அப்போதுதான் ஏதோ ஜோக்குக்கு சிரித்தவாறே அசோக்கும், செண்பகமும் லிஃப்டில் இருந்து வெளிப்பட்டார்கள். ப்ரியா ஓரக்கண்ணால் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரும் பைக்கில் ஏறினார்கள். சர்ரென இவள் இருந்த திசை நோக்கி வந்த பைக், வழியில் இவளை கண்டதும் ப்ரேக்கிட்டு நின்றது.

"என்னக்கா.. என்னாச்சு..??" செண்பகம் கவலையாக கேட்டாள்.

"ஸ்டார்ட் ஆகல.." ப்ரியா சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

"யூ.எஸ் டாலர்ஸ்ல வாங்குன.. யூஸ்லஸ் வண்டில..?? அப்டித்தான் இருக்கும்..!!"

தன் மனதில் அந்த ஸ்கூட்டி மீதிருந்த ஒருவித கடுப்பை, அசோக் கேலியாக உதிர்த்தவாறே, அவனுடைய பைக்கை சீறவிட்டான். வண்டியில் பறந்துகொண்டே 'ஹேவ் ஃபன் ப்ரியா.. வித் யுவர் ஓட்டை வண்டி..!!!!' என்று கத்தினான். செண்பகம் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்துவிட்டாள். அதே நேரம் பேலன்ஸ்க்காக அசோக்கின் தோளை பற்றினாள்.

அவர்கள் போவதையே ப்ரியா வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அசோக்கின் பின்னால் அமர்ந்து இதேமாதிரி அவள் பறந்ததெல்லாம் இப்போது அவளுக்கு ஞாபகம் வந்தது. 'ச்ச.. தம்பி சொன்னான்னு இவளுக்கு வேலை கெடைக்க ஹெல்ப் பண்ணினேன்.. இவ என் எடத்தையே புடிங்கிக்கிட்டாளே..' என்பது மாதிரி செண்பகம் மீது ஒரு எரிச்சல் வந்தது. அந்த எரிச்சலுடனே, ஸ்டார்ட் ஆகாத ஸ்கூட்டியை ஆத்திரமாக உதைத்தாள்.

அப்புறம் ஒருவழியாக அந்த மாதிரி உதைத்து உதைத்தே ஸ்கூட்டியை கிளப்பி கடுப்புடனே வீடு வந்து சேர்ந்தாள். ஆனால்.. மூன்று நாட்களாக அவள் மனதில் ஏற்பட்டிருந்த எரிச்சலை ஒரே நொடியில் போக்குமாறு, ஒரு இனிய செய்தி அவள் வீட்டில் அன்று இரவு காத்திருந்தது.

சோபாவில் அமர்ந்திருந்த ப்ரியா கால்களை கட்டிக்கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டே இருந்தாள். அவளுக்கு அருகே அமர்ந்திருந்த வரதராஜன் அவளுக்கு சாதத்தை பிசைந்து ஊட்டிவிட்டுக்கொண்டே ஆரம்பித்தார்.

"உன்கிட்ட கொஞ்சம் பேசனும்மா ப்ரியா..!!"

"என்ன விஷயம் டாடி..??"

"எல்லாம் உன் கல்யாண விஷயமாத்தான்மா..!!"

"ஹையோ.. மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்களா..?? நான்தான் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு சொன்னேன்ல டாடி..!!" ப்ரியா சலிப்பாக சொன்னாள்.

“ஒரு நல்ல வரன் வந்திருக்கும்மா.. மதுரைக்கார பையன்.. பெங்களூர்லதான் வேலை பாக்குறாரு..!!"

"ப்ச்.. இந்த மதுரைக்கார பசங்களே ரொம்ப திமிர் புடிச்சவனுகளா இருப்பானுக டாடி.. என் ஆபீஸ்ல கூட ஒன்னு இருக்குது.. அராத்து புடிச்சது..!! எனக்கு சுத்தமா புடிக்காது.. ப்ளீஸ் டாடி.. வேணாம்..!!"

"அடடடடா.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளும்மா..!!"

"என்ன சொல்லப்போறீங்க..?? வயசு ஏறிக்கிட்டே போகுது.. பவுன் வெலை கூடிக்கிட்டே போகுது.. கூட்ஸ் வண்டிலாம் கூவிக்கிட்டே போகுது.. அதான..??"

"ஐயோ.. அது இல்லம்மா..!!"



"அப்புறம்..??"

"என்னை கொஞ்சம் பேச விடுறியா..??" வரதராஜன் பொறுமை இழக்கவும்,

"சரி.. பேசுங்க..!!" பிரியா மனம் இறங்கினாள்.

'இந்தா..' என்று வரதராஜன் சாதத்தை பிசைந்து நீட்ட, அவள் 'ஆ'வென வாய் திறந்து வாங்கிக் கொண்டாள். மகளுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டுக்கொண்டே வரதராஜன் ஆர்வமாக சொல்ல ஆரம்பித்தார். ப்ரியாவும் வாயை அசை போட்டுக்கொண்டே அசுவாரசியமாய் கேட்க ஆரம்பித்தாள்.

"ப்ரோக்கர்ட்ட உன் ஃபோட்டோ குடுத்திருந்தேன்னு சொன்னேன்ல..??" 

"ஆமாம்.." 

"நாலு மாசம் முன்னாடி இந்த பையனோட அண்ணன் உன் ஃபோட்டோவும், என் ஃபோன் நம்பரும் வாங்கிருக்காரு..!! 'கூடிய சீக்கிரம் அவங்க உங்களுக்கு ஃபோன் பண்ணி பேசுவாங்க'ன்னு ப்ரோக்கர் எங்கிட்ட சொல்லிருந்தாரு.. நானும் கொஞ்ச நாள் பாத்தேன்.. அவங்கட்ட இருந்து எந்த தகவலும் வரல.. அப்புறம் நானே அவருக்கு ரெண்டு தடவை கால் பண்ணி பாத்தேன்.. பதில் ஒன்னும் சரியா வரலை.. நானும் அவ்வளவுதான்னு நெனச்சு அதை அப்படியே விட்டுட்டேன்..!!"

"ஹையோ.. பயங்கர ப்ளேடு போடுறீங்க டாடி.. சீக்கிரம் சொல்லி முடிங்க..!!"

"இரும்மா..!! ம்ம்ம்.. அவ்வளவுதான்னு நெனச்சு விட்டுட்டனா..?? இப்போ.. ரெண்டு வாரம் முன்னாடி.. திடீர்னு அவரே எனக்கு கால் பண்ணினாரு.. 'உங்க பொண்ணை எங்களுக்கு புடிச்சிருக்கு.. ஜாதகம் அனுப்பி வைங்க.. பாத்துட்டு சொல்றோம்'னு சொன்னாரு.. நானும் அனுப்பி வச்சேன்..!! அவங்களும் ஒன்னுக்கு ரெண்டு ஜோசியரா உன் ஜாதகத்தை எடுத்துட்டு போய் பாத்திருக்காங்க.. ரெண்டு ஜோசியருமே 'அருமையான வரன்.. எல்லா பொருத்தமும் பிரம்மாதமா இருக்கு.. இந்த இடத்தை முடிங்க.. அமோகமா இருக்கும்'னு சொல்லிருக்காங்க..!!"

"ஐயோ..!! இந்த ஜோசியம்லாம் பயங்கர ஃப்ராடு டாடி.. அதைலாம் நம்பக்கூடாது.. இந்தியால இருக்குற இந்த மாதிரி மூட பழக்கத்தை பத்தி.. இத்தாலில இருக்குற ஒரு பெரிய ரைட்டர் ஒரு பெரிய புக் எழுதிருக்காரு.. அந்த புக் எவ்ளோ ஸேல் ஆகி இருக்கு தெரியுமா..?? உங்களுக்கு எங்க அதுலாம் தெரிய போகுது..??"

"ஹாஹா.. இத்தாலி பத்தி எனக்கு என்னம்மா கவலை..?? என் பொண்ணு கழுத்துல ஏறப்போற தாலி பத்திதான் எனக்கு கவலை..!! நான் சொல்றதை கொஞ்சம் முழுசா கேளும்மா..!!"

"ம்ம்.. சொல்லுங்க..!!"

"பையனோட அண்ணன் நேத்து கால் பண்ணினாரு.. அவங்க குடும்பத்துல எல்லாருக்கும் ரொம்ப திருப்தின்னு சொன்னாரு.. பையனோட ஃபோட்டோ அனுப்பி வைக்கிறோம்.. உங்க பொண்ணுக்கு புடிக்குதான்னு கேட்டுட்டு சொல்லுங்கன்னு சொன்னாரு..!!"

"நீங்க என்ன சொன்னீங்க..??"

"கேளு.. இன்னைக்கு அந்த பையனோட ஃபோட்டோ கூரியர்ல வந்தது.. கவரை பிரிச்சு பாத்தா.. எனக்கு ஒரே ஷாக்கு..!!"

"ஏன்.. பையனுக்கு பொக்கை வாயா..??"

"ஐயயே.. ஏன்மா இப்படி இருக்குற நீ..??"

"ஓகே ஓகே.. கண்டின்யூ..!!"

"பையன் யார் தெரியுமா.. அன்னைக்கு நான் ஒரு தம்பியை பத்தி சொல்லிட்டு இருந்தன்ல..??"

"எந்தத் தொம்பி..??"

"அதான்மா.. உன் அம்மாவோட தாலிச்சரடு தொலஞ்சு போய்.. எடுத்துக்குடுத்தார்னு..!!"

"ஆ..ஆமாம்..!!" ப்ரியாவிடம் இப்போதுதான் மெலிதாக ஒரு ஆர்வம் பிறந்தது.

"அதே தம்பிதான்மா..!! எனக்கு அந்த தம்பிதான் மாப்ளைன்னு தெரிஞ்சப்போ.. எவ்ளோ சந்தோஷமா இருந்தது தெரியுமா..??"

"ஓ..!!"

"ரொம்ப நல்ல இடம்மா.. நம்மவிட ரொம்ப வசதியான குடும்பம்.. அன்னைக்கு ஒரு அஞ்சு நிமிஷம் பேசுனதுல இருந்தே மாப்பிள்ளை தங்கமானவர்னு எனக்கு தெரிஞ்சு போச்சு.. இந்த இடம் அமைஞ்சா டாடி ரொம்ப நிம்மதியா இருப்பேன்மா..!! மாப்ளையும் ரொம்ப அழகா லட்சணமா இருக்காரு.. ஃபோட்டோ பாரு.. உனக்கு கண்டிப்பா புடிக்கும்..!!"

வரதராஜன் சொல்லிக்கொண்டே டீப்பாய் மீது இருந்த அந்த கவரை எடுத்து ப்ரியாவிடம் நீட்டினார். ப்ரியா ஒருவித ஆர்வத்தின் பிடியில் இருந்தாள். அசோக்தான் தன் கணவன் என்று அவளுடைய மனதில் பதிந்து போயிருந்தாலும், தன்னை சந்திக்காமலே தன்னிடம், 'க்ரேட் கேரக்டர்..' என்று பாராட்டுப்பெற்ற அந்த மூஞ்சியை பார்க்கவேண்டும் போலிருந்தது அவளுக்கு. எனவே கவரை பிரித்து ஃபோட்டோவை வெளியே எடுத்தாள். பார்த்தாள்..!!

ஃபோட்டோவை பார்த்த ப்ரியா எந்த மாதிரி உணர்ச்சிக்கு உள்ளாகியிருப்பாள் என்று நான் உங்களுக்கு சொல்லத்தேவை இல்லை..!! அந்த மாதிரி ஒரு இன்ப அதிர்ச்சியை ப்ரியா தன் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை. தனது மனதில் இருந்த உருவத்தையே.. தந்தை மாப்பிள்ளை என கையில் கொடுக்க.. அவளுடைய உடல் முழுவதிலும் ஒரு சிலிர்ப்பு.. உள்ளம் முழுவதிலும் ஒரு பரவசம்.. முகம் முழுவதிலும் ஒரு பிரகாசம்..!! மனதுக்குள் ஒரு சந்தோஷ ஊற்று பீறிட்டு கிளம்ப.. வார்த்தைகள் கூட சரியாக வந்து விழவில்லை அவளுக்கு.. திணறலாய் சொன்னாள்..!!

"டாடி.. இ..இது.. இவன்.."

"என்னம்மா.. என்னாச்சு..??"

"இ..இவனை எனக்கு தெரியும் டாடி.. இவன் பேர் அசோக்..!! என் கூட வொர்க் பண்றவன்தான்.. ஆறு வருஷமா இவனை எனக்கு தெரியும்..!!"

"ஆஹா..!! இதைப் பார்டா.... நான் உனக்கு ஷாக் குடுத்தா.. நீ எனக்கு அதைவிட பெரிய ஷாக் குடுக்குற.. ஹாஹா...!! ம்ம்ம்ம்.. ஆறு வருஷம்னா.. அப்போ என்னை விட உனக்கு மாப்பிள்ளையை பத்தி நல்லா தெரியும்னு சொல்லு..!!"

"ஹ்ம்ம்.. நல்லா தெரியும் டாடி..!!"

"எப்படி.. நல்ல பையன்தான..??"

"ந..நல்ல பையன்தான்..!!"

"பிடிச்சிருக்கா..??" வரதராஜன் பேச்சுவாக்கில் இயல்பாய் கேட்க,

"பிடிச்.." ப்ரியா அவசரமாய் சொல்லிவிட்டு அப்புறம் பாதியில் நிறுத்தினாள். அவள் மனதில் இப்போது லேசாக ஒரு குழப்பம். சில விடை தெரியாத கேள்விகள்.

"ஹாஹா.. ஏன்மா பாதில நிறுத்திட்ட.. பிடிச்சிருக்குன்னுதான் முழுசா சொல்லேன்..!!"

"நான் சொல்றது இருக்கட்டும் டாடி..!! பையனுக்கு என்னை புடிச்சிருக்கான்னு அவங்ககிட்ட கேட்டீங்களா..??"

"அதை பத்தி நீ ஒன்னும் கவலைப்பட வேணாம்மா.. உன் சம்மதம் மட்டுந்தான் இப்போ பாக்கி.. மாப்ளையோட சம்மதம் உன்னை பாக்குறதுக்கு முன்னாடியே கெடைச்சிடுச்சு.. ஹாஹாஹாஹா..!!" வரதராஜன் சொல்லிவிட்டு சிரிக்க,

"எ..என்ன டாடி சொல்றீங்க..??" ப்ரியா தலையை சொறிந்தவாறு கேட்டாள்.

"ஆமாம்மா..!! அவங்க அண்ணன் சொன்னாரு.. பையன் அப்படியே குடும்பத்துக்கு அடங்கி நடக்குறவராம்.. பெரியவங்க வார்த்தையை தட்டவே மாட்டாராம்.. அண்ணன், அண்ணி மேல அம்புட்டு மரியாதையாம்.. அவங்களா பாத்து எந்த பொண்ணை செலக்ட் பண்ணாலும் அவருக்கு சம்மதம்தானாம்.. இந்தக்காலத்துல இப்படி ஒரு அடக்கமான புள்ளையை.."

வரதராஜன் சொல்லிக்கொண்டே போக, 'ம்க்கும்.. கிழிஞ்சது கிருஷ்ணகிரி..' என்று ப்ரியா மனதுக்குள்ளேயே தந்தையின் அறியாமையை எண்ணி தலையில் அடித்துக் கொண்டாள். 'அவனா அடக்கமான புள்ளை.. அவனை மாதிரி ஒரு அடங்காத தடிமாட்டை நான் பாத்ததே இல்ல..' என்று நினைத்துக்கொண்டாள்.

"இங்க பாருங்க டாடி.. இந்தக்கதைலாம் வேணாம்.. நாளைக்கு அவங்களுக்கு ஃபோன் பண்ணி.. 'மாப்ளை பொண்ணோட ஃபோட்டோவை பாத்தாரா.. இந்த கல்யாணத்துல அவருக்கு சம்மதமா'ன்னு தெளிவா கேட்டுடுங்க..!! என்ன.. புரியுதா..??"

"அது சரிம்மா.. நாளைக்கு நான் ஃபோன் பண்ணினா.. 'உங்க பொண்ணு என்ன சொல்றா'ன்னு அவங்க என்னை திருப்பி கேட்பாங்களே.. அதுக்கு நான் என்ன பதில் சொல்றது..??"

வரதராஜன் கிடுக்கிப்பிடியாய் ஒரு கேள்வி கேட்கவும், ப்ரியா பட்டென அமைதியானாள். முகத்தில் சற்றே வெட்கம் படர, தலையை லேசாக கவிழ்த்துக்கொண்டாள். மகளுடைய வெட்கத்தைப் பார்த்து வரதராஜன் மெலிதாக புன்னகைத்தார். அப்புறம் அவரே மெல்லிய குறுகுறுப்பான குரலில் கேட்டார்.

"அப்போ.. அவங்ககிட்ட… என் பொண்ணுக்கு சம்மதம்னு சொல்லிடவா..??"

"ம்ம்..!!" ப்ரியா வெட்கத்துடன் தலையாட்ட, வரதராஜனின் புன்னகை மிகவும் பெரிதானது.

"அப்படி சொல்லுடி என் ராஜாத்தி..!!" என்று சந்தோஷ மிகுதியில் சோற்றுக்கையுடனே மகளின் கன்னத்தை பிடித்து கொஞ்சினார்.



ப்ரியாவுக்கு அன்று இரவு தூக்கமே இல்லை. மனம் முழுக்க நிறைய சந்தோஷமும், சிறு சிறு குழப்பங்களும்..!! நடப்பதெல்லாம் நனவா இல்லை கனவா என தன்னைத்தானே அடிக்கடி கிள்ளிப் பார்த்துக் கொண்டாள். அசோக்கின் ஃபோட்டோவை தந்தைக்கு தெரியாமல் தன் அறைக்கு எடுத்து சென்று, இரவு விளக்கின் வெளிச்சத்தில் இமைக்காமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். மனதுக்குள்ளேயே கொஞ்சலாக பேசி அவனிடம் உரையாடினாள்.

அதேநேரம் அவளுடைய மனதுக்குள் ஒருவித குழப்ப விவாதமும் நடந்து கொண்டிருந்தது. 'நான்கு மாதங்கள் முன்பே எனது ஃபோட்டோ அங்கே போயிருக்கிறது என்றால்.. அசோக் என் ஃபோட்டோவை பார்த்தானா இல்லையா..?? இல்லை.. பார்த்திருக்க மாட்டான்.. பார்த்திருந்தால் அந்த செய்தி எப்போதோ என்னிடம் வந்து சேர்ந்திருக்குமே..?? அதுசரி.. நான்கு மாதங்களாக அவர்கள் ஏன் அப்பாவை தொடர்பு கொள்ளவில்லை..?? திடீரென ஏன் தொடர்பு கொண்டார்கள்..??'

அந்த கடைசி கேள்வி மனதில் எழுந்ததும், அன்று அவளுக்கும் அசோக்கிற்கும் நடந்த சண்டையும், அதன்பிறகு அவன் ஃபோனில் அண்ணனை அழைத்து பேசியதும் அவளுடைய நினைவுக்கு வந்தது..!! உடனே படபடவென பாதி கேள்விகளுக்கு விடை தெரிந்து போனமாதிரி இருந்தது..!! 'ஆமாம்.. அப்படித்தான் இருக்கவேண்டும்.. முன்பு ஏதோ ஒரு காரணத்துக்காக என் ஃபோட்டோவை பார்க்காமலே, அசோக் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறான்.. அப்புறம் அன்று அவன் பேசியதும், அவனுடைய அண்ணன் அப்பாவை திரும்ப தொடர்பு கொண்டிருக்கிறார்.. அசோக் அன்று சொன்னதை வைத்து 'மாப்பிள்ளைக்கு சம்மதம்' என்று அவரும் இவரிடம் சொல்லியிருக்கிறார்.. கூட்டி கழித்து பார்த்தால், அசோக்கிற்கு இன்னும் விஷயமே தெரியாது போலிருக்கிறது..!!'



ப்ரியா நெற்றியை கீறிக்கொண்டு தீவிர சிந்தனையில் ஆழ்ந்தாள். சடசடவென சில முடிவுகள் எடுத்தாள். 'அசோக்கின் சம்மதம் தெரிந்து கொள்ள அப்பாவை எதிர்பார்க்க தேவை இல்லை.. நாமே நாளை அவனிடம் மனம் விட்டு பேசி விட வேண்டியதுதான்.. அவனுக்கு என் மீது கோபம் இருக்கலாம்.. இத்தனை நாளாய் அவனிடம் நடந்து கொண்ட முறைக்காக தயக்கமில்லாமல் மன்னிப்பு கேட்டுவிட வேண்டும்.. அவன் மீது எவ்வளவு காதல் வைத்திருக்கிறேன் என்று வெட்கமில்லாமல் சொல்லிவிட வேண்டும்.. என்னை மனைவியாக ஏற்றுக்கொள்ளடா என்று மனம் விட்டு பேசிவிட வேண்டும்..!!’

அந்த மாதிரி தெளிவாக ஒரு முடிவெடுத்ததும், ப்ரியாவின் மனம் குழப்பம் நீங்கி அமைதியானது. மீண்டும் அசோக்கை பற்றிய காதல் நினைவுகள் மனதை நிறைக்க ஆரம்பித்தன. அவனுடைய புகைப்படத்தை மார்பின் மீது போட்டுக்கொண்டு, கண்கள் மூடி கல்யாணக்கனவு காண ஆரம்பித்தாள்.




No comments:

Post a Comment