Tuesday, June 30, 2015

ஐ ஹேட் யூ, பட்.. - அத்தியாயம் - 18

காதல் வயப்படுதல் யாருக்கும் எளிதுதான்..!! 'எனக்கு சொந்தமான உயிர்' என்கிற மாதிரியான உணர்வு கிளம்புகிறார்போல.. எதிர்பாலர் ஒருவரை கண்டுவிட்டால்.. உள்ளம் காதலிக்க ஆரம்பித்து விடுகிறது..!! இனி மீதம் உள்ள வாழ்க்கையை இவருடன் கழித்தால்.. இன்பத்தில் தினம் திளைக்கலாமே என்று கனவு காண ஆரம்பித்து விடுகிறது..!! அவ்வாறு கனவு காணுதலை போல.. அந்த காதலை உரைத்தல் அவ்வளவு எளிதல்ல..!! மனதில் உள்ள காதலை உரியவரிடம் உரைக்கவே.. ஒரு முரட்டு தைரியமோ.. அல்லது ஒரு அசட்டு தைரியமோ வேண்டும்..!!

காதலை சொல்லும் தைரியம் மட்டுமே அந்த காதலின் வெற்றிக்கு போதாது.. அதை சொல்லுகிற விதமும் மிக மிக முக்கியம்..!! முறைப்படி உரைக்க தவறிய காதலர்களால்.. முறிந்து போன காதல்களும் நிறைய உண்டு..!!

தனது காதலை அசோக்கிடம் சொல்லிவிடவேண்டும் என்ற தைரியம் ப்ரியாவுக்கு வந்திருந்தது.. அதை சொல்கிற விதம் பற்றிதான் இப்போது அவளது கவலை இருந்தது..!!

ஆபீசுக்கு வந்து அசோக்கிற்காக காத்திருந்தவள்.. கைப்பை திறந்து கண்ணாடி எடுத்து.. அதில் தனது முகத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டாள்.. நெற்றியில் வந்து விழுந்திருந்த ஒற்றை கூந்தல் கற்றையை ஓரமாக ஒதுக்கி விட்டாள்..!! உபயோகிக்கப் போகிற வார்த்தைகளை சற்றே உற்று ஆராய்ந்தாள்.. 'மனசுன்னு சொல்லலாமா.. இதயம்னு சொல்லலாமா..?? எது எஃபக்டிவா இருக்கும்..??'
 

இது மட்டுமில்லாமல்.. தான் சொல்லப்போகும் செய்தி கேட்டு அசோக் எந்த மாதிரி எதிர்வினை புரிவானோ என்கிற பயமும் அவளுக்கு இருந்தது..!! 'அவனுக்கும் எனக்கும் ஆறு வருட அறிமுகமாய் இருக்கலாம்.. சண்டையிட்டிருந்தாலும் கூட 'சாப்பிட்டியா..??' என்று கேட்கிற கனிவை என் மீது அவன் காட்டியிருக்கலாம்.. எங்கள் குடும்பத்தினர் இப்போது எங்கள் இருவரையும் இணைத்துவைக்க எடுத்திருக்கும் முடிவறிந்து ஆச்சரியமுறலாம்..!! ஆனால்.. அதற்காகவெல்லாம் அவன் என் காதலை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அவசியம் இல்லையே.. அவனுக்கும் கொஞ்சமாவது அந்த எண்ணம் இருக்க வேண்டுமே.. தோழியாக பார்த்தவளை காதலியாக பார்க்க முடியாது என்று அவன் சொல்லிவிட்டால்..??'

இந்த மாதிரி இதயத்தில் ஒரு படபடப்புடனே ப்ரியா அசோக்கிற்காக காத்திருந்தாள்..!! தனது கண்ணாடி அறைக்குள் இருந்தவாறே.. அவன் வந்துவிட்டானா என்று அவ்வப்போது தலையை நீட்டி பார்த்துக் கொண்டிருந்தாள்..!!

ப்ரியாவின் இதயம் படபடப்பில் சிக்கியிருந்தது என்றால்.. அசோக்கின் இதயம் எதிர்பார்ப்பில் மூழ்கி கிடந்தது..!! 'எதை சொல்ல என்னை காலையிலேயே கைபேசியில் அழைத்தாள்..?? எப்போதும் போல் இல்லாமல்.. அவளுடைய குரலில் இன்று ஒரு மாற்றம் தெரிந்ததே.. என்ன அது..??' அந்த மாதிரி ஒரு சிந்தனையுடனே அசோக் ஆபீஸ் வந்து சேர்ந்தான்..!! அவன் ஆத்திரத்தில் இருக்கிறான் என்று எண்ணிக்கொண்ட செண்பகமும் அதிகம் பேசி அவனை தொந்தரவு செய்யவில்லை. அவள் அவ்வப்போது கேட்ட கேள்விகளுக்கும் அசோக் அசிரத்தையாகவே பதில் சொல்லிக்கொண்டு வந்தான்..!!

தாங்கள் பணி செய்யும் தளத்திற்குள் நுழைந்த அசோக்.. உடன் வருகிற செண்பகத்தை கண்டுகொள்ளாமலே.. அவசரமாக நடந்து தனது இடம் சென்று அமர்ந்தான்..!! கணினி திறந்தான்.. கம்யூனிகேட்டர் நுழைந்து முதல் வேலையாக ப்ரியாவிற்கு 'ஹாய் ப்ரியா..' என்று பிங்கினான்..!! அவளுடைய பதிலுக்காக காத்திருந்தான்.. உடனே பதில் வந்தது..!!

"ஹாய் அசோக்..!!"

பதில் வந்தது கம்யூனிகேட்டரில் இருந்து அல்ல.. அவன் காதுக்கருகே இருந்து..!! அவன் வந்ததை உள்ளிருந்தே கவனித்திருந்த ப்ரியா, தனது அறையை விட்டு எழுந்து வந்திருந்தாள்.. இவன் கம்யூனிகேடரில் ஹாய் சொல்ல.. அவள் இவனுக்கு பின்பக்கமாக அந்து ஹாய் சொன்னாள்..!! எழுத்தில் பதில் வரும் என்று எண்ணி.. திரையை வெறித்திருந்த அசோக்.. குரலில் பதில் வந்ததும்.. கூடவே ப்ரியாவின் மேனி நறுமணம் கலந்து வந்ததும்.. படக்கென தலையை திருப்பி பார்த்தான்..!!

திரும்பி பார்த்தவன் ஒருகணம் திகைத்துப் போனான்.. வியப்பில் அவனது விழிகள் விரிந்து கொண்டன..!! காதலில் மனம் விழுந்து விட்டால், காதலி முகம் கண்களுக்கு அழகாய் தெரிவது இயல்புதான்..!! ஆனால்.. அதையும் தாண்டி ப்ரியா இன்று தேவதை போல ஜொலிப்பதை அவனால் உணர முடிந்தது..!! அவளுடைய அசத்துகிற அழகு அவனது கண்களை வன்மையாக தாக்க.. அவன் தனது சுவாசத்தை இழுத்து பிடித்துக்கொள்ள வேண்டி இருந்தது..!!



"வா..வ்..!!" என்று திணறலாக வாய் பிளந்தான்.

"என்ன வாவ்..??" ப்ரியா குரலில் குறும்புடன் கண்களை சிமிட்டியவாறே கேட்டாள்.

"யூ.. யூ லுக் ஆவ்சம் டுடே..!!!"

"நெஜமா..???"

"சத்தியமா..!! என்னன்னு சொல்லத்தெரியல.. ஆ..ஆனா.. ரொம்ம்ம்ப அழகா இருக்குற இன்னைக்கு..!!"

"ஹ்ம்ம்.. தேங்க்ஸ்..!!"

"அப்புறம்.. இன்னைக்கு என்ன ஸ்பெஷல்..??"

"ஒ..ஒன்னும் இல்லையே.. ஏன் கேக்குற..??"

"இல்ல.. புதுசா.. புடவைலாம் கட்டிக்கிட்டு ஆபீஸ் வந்திருக்கியே.. அதான் ஏதாவது விஷேஷமான்னு.."

"அதெல்லாம் ஒண்ணுல்ல.. சும்மாதான்..!!"

"ஹ்ம்ம்.. காலைலேயே கால் பண்ணிருந்த போல..??" அசோக் இயல்பாக கேட்க, ப்ரியா இப்போது சற்றே தடுமாற்றமாய் சொன்னாள்.

"ஆ..ஆமாம்.. அதுக்குத்தான் இப்போ வந்தேன்..!! உ..உன்கிட்ட கொஞ்சம் பேசணும் அசோக்..!!"

"ம்ம்.. பேசு..!!" அசோக்கின் குறும்பான குரலில் சொன்னதற்கு, ப்ரியா உதடுகள் பிரித்து புன்னகைத்தாள்.

"ஹாஹா.. இங்க இல்ல..!!"

"அப்புறம்..??"

"தனியா..!!"

ப்ரியா அந்த 'தனியா..!!'விற்காக, குரலில் ஒரு கிறக்கத்தையும், கண்களில் ஒருவித மின்னலையும் தனியாக சேர்த்துக்கொண்டு சொல்ல.. அசோக்கின் இதயம் படக்கென்று சொடுக்கிவிடப்பட்டது..!! அவளுடைய முகத்தையே வியப்பாக பார்த்தான். ப்ரியா இப்போது அசோக்கின் புஜத்தில் மெலிதாக இரண்டு தட்டு தட்டியவாறே, 'வா..' என்றுவிட்டு முன்னால் நடந்தாள். அவள் அவ்வாறு அங்கிருந்து நகர்ந்த பின்னர்தான், அசோக் அதுவரை இழுத்துப் பிடித்து வைத்திருந்த சுவாசத்தை சுதந்திரமாக வெளியிட்டான். இமைகளை ஒருமுறை நிம்மதியாக மூடி திறந்தான். பிறகு சேரில் இருந்து எழுந்து அவசரமாய் அவளை பின்தொடர்ந்தான்.

ப்ரியாவின் அன்றைய மயக்கும் தோற்றத்திலும், அவள் பேச்சிலிருந்த ஒருவித போதையிலும், அசோக்கின் மூளை சற்றே குழம்பி போயிருந்தது. அவனுக்கு முன்னால் நளினமாக அசைந்து அசைந்து செல்கிற ப்ரியாவின் பின்னழகை தவறான எண்ணத்துடன் வெறிக்க தூண்டியது. ஒரு கணம் அந்த அழகை வாய் பிளந்து ரசித்தவன், அடுத்தகணமே தலையை உதறிக்கொண்டு எச்சில் கூட்டி விழுங்கினான்.

அவளுடைய பின்னால் சென்று கொண்டிருக்கும்போதே, 'எதற்காக இப்போது தனியாக அழைத்து போகிறாள்..?' என்ற கேள்வியும் அவன் மனதில் ஓடிக்கொண்டேதான் இருந்தது. 'இன்று இவளுடைய பார்வையும் பேச்சுமே சரி இல்லையே.. ஒருவேளை.. தனியாக கூட்டிச்சென்று என்னை காதலிக்கிறேன் என்று சொல்லப் போகிறாளோ..??' அசோக்கின் மனதில் அப்படி ஒரு எண்ணம் தோன்றியதற்கே, அவனுக்கு உடலும் உள்ளமும் ஜில்லென்று குளிர்ந்து போனது. அப்புறம் உடனே, 'ஹ்ம்ம்.. ரொம்பத்தான் கற்பனை உனக்கு..!!' என்று தன்னைத்தானே கேலி செய்து கொண்டான். பிறகு 'கற்பனையாக இருந்தால் என்ன.. அப்படி ஒரு நினைவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது..!!' என்றும் தனியாக நினைத்துக்கொண்டு மனதுக்குள் சிரித்தான்.

ஆறு பேர் அமரக்கூடிய வகையில் ஒரு டேபிள்.. அதன் மீது கான்ஃபரன்சில் யாரையும் அழைக்கும் வசதிக்காக ஒரு டெலிஃபோன்.. சுவற்றில் அறையப்பட்டு, டெக்னிக்கல் கிறுக்கல்களுடன் காணப்பட்ட ஒரு வொயிட் போர்ட்.. இவை மட்டுமே அடங்கிய ஒரு சின்ன மீட்டிங் ரூம் அது..!! டீமில் இருக்கும் மெம்பர்கள் அனைவரும் ஒன்றாக கூடி பேசவேண்டும் என்று எண்ணினால் உபயோகப்படுத்திக் கொள்கிற ரூம்..!! அந்த ரூமைத்தான் தனது காதலை சொல்ல தேர்ந்தெடுத்திருந்தாள் ப்ரியா..!!

அசோக் உள்ளே நுழைவதற்காக அறையின் கண்ணாடி கதவை திறந்து காத்திருந்தவள், அவன் நுழைந்ததும் அந்த கதவை மென்மையாக சாத்தி மூடினாள். கருவிழிகளை ஒரு ஓரமாக தள்ளி அசோக்கின் முகத்தை ஏக்கமாக ஒரு பார்வை பார்த்தாள். 'என் காதல் மனதை என்ன செய்ய காத்திருக்கிறான் இவன்..??' என்று அவள் மனதில் உச்சபட்சமாய் எழுந்த படபடப்பை அடக்கிக்கொண்டு,

"உக்காரு..!!" என்றாள் புன்னகையுடன்.

இன்னும் குழப்பம் நீங்காதவனாகவே அசோக் மெல்ல அமர்ந்துகொண்டான். ப்ரியா நடந்து சென்று அவனுக்கு எதிரே கிடந்த சேரில் அமர்ந்தாள். மீண்டும் இவன் முகத்தை ஏறிட்டு ஒரு ஏக்கப்பார்வையை வீசினாள். அர்த்தம் புரிந்து கொள்ள இயலாத அந்த மயக்கும் பார்வை அசோக்கை என்னவோ செய்தது. அந்த பார்வையை தாங்க இயலாதவனாய், அங்கு நிலவிய அமைதியை குலைத்தவாறு அசோக் கேட்டான்.

"சொ..சொல்லு ப்ரியா.. அப்படி என்ன எங்கிட்ட தனியா பேசணும்..??"

"அ..அது.. அது இருக்கட்டும்.. காலைல நான் உனக்கு கால் பண்றப்போ என்ன.. உங்க வீட்ல அப்படி ஒரு சவுண்டு..?? ஏதாவது சண்டையா..??" ப்ரியா உடனே பேச்சை ஆரம்பிக்க தயங்கியவளாய் இலகுவான குரலில் கேட்டாள்.

"ப்ச்.. அதுவா..??? அது எங்க வீட்டுல எப்போவும் நடக்குறதுதான்..!! சப்பை மேட்டருக்காகலாம் சண்டை போட்டுப்போம்.. சண்டை போடுறது எங்களுக்கு ஒரு ஹாபி மாதிரி..!!"

"ஹாஹா..!!"

"ஹ்ம்ம்.. என் அண்ணனும் அண்ணியும் இருக்காங்களே.. சுத்தமா என் மனசை புரிஞ்சுக்கவே மாட்டாங்க ப்ரியா..!! எனக்கு எதெதுலாம் புடிக்காதோ.. அதெல்லாம் தெளிவா பண்ணுவாங்க.. நானும் புடிச்சு கன்னாபின்னான்னு திட்டி விட்ருவேன்..!!"

"ஹாஹா.. ஹ்ம்ம்.. இன்னைக்கு என்ன பிரச்னை..??"

"ப்ச்.. அது ஒரு பெரிய கதை..!! நான் ஏதோ கோவத்துல ஒன்னு சொல்லப்போக.. அதை அவங்க சீரியஸா எடுத்துக்கிட்டு.. என்னன்னவோ பண்ணி... ச்ச.. செம டென்ஷன் ஆயிடுச்சு எனக்கு..!!"

"கோவத்துல அப்படி என்ன சொன்ன..??" ப்ரியா ஏதோ ஆர்வம் பிறந்தவளாய் கேட்க, அசோக் பொறுமை இழந்தவனாய் 

"ஹேய்.. அதுவா இப்போ முக்கியம்..?? நீ ஏதோ பேசனுன்னு சொன்னியே.. அதை மொதல்ல சொல்லு..!!" என்று விஷயத்திற்கு வந்தான்.

"அது.. அ..அது.." ப்ரியா எப்படி ஆரம்பிப்பது என்று தயங்கினாள்.

"ஹ்ம்ம்.. சொல்லு..!!"

அசோக் இப்போது இன்னும் ஆர்வமானான். ப்ரியா மேலும் சில வினாடிகள் தயங்கிவிட்டு அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவளாய்.. ஒரு பெருமூச்சை வெளிப்படுத்திவிட்டு.. நாவால் உதட்டை ஈரமாக்கிவிட்டு.. ஆரம்பித்தாள்..!!

"எ..என்னைப் பத்தி நீ என்ன நெனைக்கிற அசோக்..??"

"என்ன நெனைக்கிறேன்னா..?? புரியலை..!!"

"என் மேல உனக்கு எதுவும் கோவமா..??" ப்ரியாவின் கேள்வி அசோக்கிற்கு ஒரு புன்னகையை வரவழைத்தது.

"ஏன் கேக்குற..??" என்றான் லேசான குறும்புடன்.

ப்ரியா அவனுடைய கேள்விக்கு பதில் சொல்ல வாயெடுக்கும்போதுதான், அசோக்கின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் 'கிர்ர்ர்ர்... கிர்ர்ர்ர்...' என்று வைப்ரேட் ஆனது. அவன் அதை உடனே வெளியே எடுத்தான். டிஸ்ப்ளே பார்த்தவன், அப்புறம் பட்டன் அழுத்தி பிஸி டோன் அனுப்பிவிட்டு, ஃபோனை சட்டை பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். ப்ரியாவை ஏறிட்டு கேட்டான்.

"ம்ம்.. சொல்லு ப்ரியா..!! எதுக்கு கோவமான்னு கேக்குற..??"

"இல்ல அசோக்.. நாம முன்னாடி மாதிரி இல்ல.. இப்போலாம் அடிக்கடி சண்டை போட்டுக்குறோம்.. அதான்..!!"

"அ..அதனால..??"

அசோக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே அவனுடைய செல்போன் மீண்டும் பதறியது. அவன் மறுபடியும் அதை எடுத்து பார்த்தான். மீண்டும் அதே நம்பர். அசோக் இப்போது 'ப்ச்..' என்று சலிப்பை உதிர்த்தான். திரும்பவும் காலை கட் செய்ய அவன் முனைய..

"யார் ஃபோன்ல..??" ப்ரியா கேட்டாள்.

"தெரியல ப்ரியா.. ஏதோ அன்னோன் நம்பரு..!!"

"எடுத்து பேச வேண்டியதுதான..??"

"பரவால விடு.. அப்புறம் பேசிக்கலாம்.. நீ சொல்லு..!!"

"ப்ச்.. சொன்னா கேளு.. அதை மொதல்ல அட்டன்ட் பண்ணி பேசு.. இல்லனா.. திரும்ப திரும்ப கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிட்டு இருப்பாங்க..!!"

ப்ரியாவும் சலிப்பாகவே சொன்னாள். அசோக் ஓரிரு வினாடிகள் தயங்கினான். அப்புறம் கால் பிக்கப் செய்து காதில் வைத்துக் கொண்டான்.

"ஹலோ..!!" என்றான் சற்றே எரிச்சலுடன்.

"ஹலோ.. அசோக் தம்பிங்களா..??" என்றது அடுத்த முனை.

"ஆமாம்..!! நீங்.." அசோக் முடிப்பதற்கு முன்பே

"ஹலோ தம்பி.. எப்படி இருக்கீங்க.. நல்லா இருக்கீங்களா..??" அடுத்த முனை அவசரப்பட்டது.

"நான் நல்லாருக்குறது இருக்கட்டும் ஸார்.. மொதல்ல நீங்க யார்னு சொல்லுங்க..!!"

"ஹாஹா.. என்னை ஞாபகம் இல்லையா தம்பி..??"

"ப்ச்.. ஃபோன்ல உங்க வாய்ஸ் மட்டுந்தான் ஸார் வரும்.. மூஞ்சிலாம் வராது..!!"

"ஹாஹா.. நல்லா தமாஷா பேசுறீங்க..!! ரெண்டு வாரம் முன்னாடி நாம ரெண்டு பேரும் சந்திச்சுக்கிட்டோம்.. இப்போ ஞாபகம் வருதா..??"

"ச..சந்திச்சுக்கிட்டோமா..?? இ..இல்லைங்க.. எ..எனக்கு சரியா.." இப்போது அசோக் குழப்பத்தில் தடுமாற,

"ந.. ஞா..ப்ப்.. பா..க்க்..." அடுத்த முனையில் வாய்ஸ் ப்ரேக் ஆனது.

"ஸார்.. உங்க வாய்ஸ் ப்ரேக் ஆகுது.. !!"

"நா.. பா..க்க்... ஞா..ப்ப்."

"ஹலோ.. ஹலோ.. இங்க கொஞ்சம் சிக்னல் வீக்கா இருக்கு.. ஒரு நிமிஷம் இருங்க.. நான் வெளில வர்றேன்..!!"

அசோக் சேரில் இருந்து எழுந்து கொண்டான். வெளியில் சென்று பேசிவிட்டு வருவதாக ப்ரியாவிடம் சைகை செய்தான். அவளும் 'போய் பேசி விட்டு வா..!!' என்று அனுமதி அளிப்பது போல இமைகளை மெல்ல மூடி திறந்தாள். அசோக் அந்த அறையை விட்டு வெளியே வந்தான். அந்த அறையை ஒட்டியே இருந்த எக்ஸிட் கதவுக்கு ஐடி கார்டை காட்ட, அது பட்டென்று திறந்து கொண்டது. வெளிப்பட்டு பால்கனிக்குள் பிரவேசித்தான்.

"ஹ்ம்ம்.. இப்போ சொல்லுங்க ஸார்..!!"

"என் பேர் வரதராஜன் தம்பி.. ரெண்டு வாரம் முன்னாடி நாம சந்திச்சுக்கிட்டோம்.. நான் தவறவிட்ட தாலிச்சரடை திரும்ப எங்கிட்ட கொண்டு வந்து குடுத்தீங்களே.. இப்போ ஞாபகம் வருதா..??" அந்தப்பக்கம் வரதராஜன் சொல்ல, இங்கே அசோக்கிற்கோ பயங்கர ஆச்சரியம்.

"அட.. நீங்களா ஸார்..??? நான் யாரோன்னு நெனச்சு.. ஹாஹா..!! ஹ்ம்ம்.. நல்லா ஞாபகம் இருக்கு.. சொல்லுங்க ஸார்.. எப்படி இருக்கீங்க..??"



"நான் நல்லாருக்கேன் தம்பி.. நீங்க எப்படி இருக்கீங்க..??"

"நானும் நல்லா இருக்கேன் ஸார்..!! வாட் எ சர்ப்ரைஸ் திஸ் இஸ்..?? நீங்க எனக்கு கால் பண்ணுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல..!! அதுசரி.. என் நம்பர் எப்படி உங்களுக்கு கெடைச்சது..??"

"சொல்றேன் தம்பி.. அதுக்கு முன்னாடி உங்ககிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும்..!!"

"எ..என்ன..??"

"உ..உங்க அண்ணனும் அண்ணியும் உங்களுக்கு ஒரு பொண்ணு பாத்தாங்கல்ல..?? அ..அந்தப்பொண்ணு வேற யாரும் இல்ல தம்பி.. என் மகதான்..!!" வரதராஜன் தயங்கி தயங்கி சொல்ல, அசோக்கை ஒருவித ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஒரே நேரத்தில் தாக்கின.

"ஓ..!!"

"நேத்து உங்க அண்ணன் உங்களோட ஃபோட்டோ அனுப்பினதும்தான்.. நீங்கதான் பையன்னு எனக்கு தெரியவந்தது..!!"

வரதராஜன் சொல்லிமுடித்து அமைதியாக இருக்க, அசோக்கிற்கு இப்போது என்ன பேசுவதென்றே புரியவில்லை. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையை அவன் எதிர்பார்த்திரவே இல்லை. ஒருவித அவஸ்தை உணர்வுடன் தலையை சொறிந்தவன், அப்புறம் சற்றே வருத்தமான குரலில் சொன்னான்.

"ஸார்.. எனக்கு என்ன சொல்றதுன்னே புரியலை..!! நான் சும்மா வெளையாட்டுக்கு சொன்னதை.. என் அண்ணன் சீரியஸா எடுத்துக்கிட்டு.. எனக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சுட்டான்.. ஆனா நான்.."

"ம்ம்.. அண்ணன்ட்ட பேசினேன் தம்பி.. அவர் சொன்னாரு.. உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு..!! ஆனா.. எனக்கு அப்படியே விட்டுட மனசு இல்ல..!! நீங்க எனக்கு ஏற்கனவே அறிமுகம் ஆகி இருக்குறதால.. உங்ககிட்ட கொஞ்சம் பேசிப்பாக்கலாம்னு தோணுச்சு.. அதான் அண்ணன்கிட்ட உங்க நம்பர் வாங்கி.."

"எங்கிட்ட பேசுறதுக்கு என்ன ஸார் இருக்குது..??"

"இல்ல தம்பி.. நீங்கதான் பையன்னு தெரிஞ்சதும், நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.. என் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய போகுதுன்னு ரொம்ப நிம்மதியா இருந்தது..!! ஆனா இப்போ.."

"ஹ்ம்ம்..!!"

"சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க தம்பி.. உங்க மனசுல ஏதாவது எதிர்பார்ப்பு இருந்தா.. தயங்காம எங்கிட்ட சொல்லுங்க..!! எனக்கு என் பொண்ணு வாழ்க்கைதான் ரொம்ப முக்கியம்..!!"

"ஹையோ.. என்ன ஸார் நீங்க..?? அப்படிலாம் எதுவும் இல்ல..!! இந்த பிரச்னையே வேற..!!"

"வேற என்ன தம்பி பிரச்னை..?? எங்கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்க..!!" வரதராஜன் தயங்காமல் கேட்டுவிட, அசோக்தான் சற்று தடுமாறினான். அப்புறம் தயங்கி தயங்கியே சொன்னான்.

"நா..நான்.. நான் வேற ஒரு பொண்ணை ரொம்ப நாளா லவ் பண்றேன் ஸார்.. அதான் பிரச்னை..!!"

"ஓ..!!" வரதராஜனின் குரலில் ஒருவித ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது.

"டைம் எல்லாம் கரெக்டா செட் ஆறப்போ.. நானே வீட்ல சொல்லலாம்னு இருந்தேன்.. அதுக்குள்ளே அவங்க அவசரப்பட்டு.. பொண்ணு பாக்க ஆரம்பிச்சு.. அதான் இந்த தேவையில்லாத கன்ஃப்யூஷன்லாம்..!!"

"ஹ்ம்ம்.. புரியுது தம்பி.. இது நான் கொஞ்சம் எதிர்பார்த்ததுதான்..!!"

"எ..என்ன எதிர்பார்த்தீங்க..??"

"ஒருவேளை காதல் விவகாரமா இருக்குமோ.. அதான் கல்யாணம் வேணாம் சொல்றீங்களோன்னு..!!"

"ஹ்ம்ம்.. ஆமாம் சார்.. அதான் இந்தக் கல்யாணத்துல எனக்கு இஷ்டம் இல்லைன்னு சொன்னேன்..!! இந்த விஷயம் இன்னும் எங்க வீட்டுக்கு தெரியாது.. ப்ளீஸ் ஸார்.. நீங்க எதுவும் சொல்லிடாதீங்க..!!"

"இல்ல தம்பி.. நான் சொல்லல.. எனக்கெதுக்கு அந்த வேலை..!!"

"ஹ்ம்ம்... அப்புறம்.. நீ..நீங்க.. நீங்க எதுவும் கவலைப்படாதீங்க ஸார்.. உங்க பொண்ணுக்கு என்னை விட நல்ல மாப்ளையா கெடைப்பான்..!!" அசோக் அவருக்கு ஆறுதலாக சொன்னான்.

"ஹாஹா.. சரி தம்பி.. உங்க வாக்கு பலிக்கட்டும்..!!"

வரதராஜன் ஒரு மாதிரியான விரக்தி சிரிப்புடன் சொன்னார். அசோக் அதற்குமேல் என்ன பேசுவது என்று புரியாமல் அமைதியாக இருக்க, சில வினாடிகளில் வரதராஜனே ஆரம்பித்தார்.

"வீட்ல சீக்கிரம் சொல்லிடுங்க தம்பி.. லேட் பண்ணாதீங்க.. உங்களுக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுதுல..?? வீட்ல எல்லாரோட சம்மதத்தோடவும்.. அந்தப்பொண்ணு கூடவே உங்க கல்யாணம் நடக்கனும்னு.. நான் ஆண்டவனை வேண்டிக்கிறேன்..!!"

"தேங்க்ஸ் ஸார்.. சீக்கிரமே சொல்லிடுறேன்..!! கல்யாணத்துக்கு உங்கள கண்டிப்பா கூப்பிடுவேன்.. நீங்களும் மறக்காம வந்துடனும்..!!" அவர் மகளுடைய திருமணத்திற்கு அவருக்கே அழைப்பு விடுத்தான் அசோக்.

"ஹாஹா.. கண்டிப்பா தம்பி..!! நானும் என் பொண்ணு கல்யாணப் பத்திரிகை உங்களுக்கு அனுப்புறேன்.. நீங்களும் கட்டாயம் கலந்துக்கனும்..!!" வரதராஜனும் நடக்கப்போவது புரியாமல் பேசினார்.

"ஓகே ஸார்.. கண்டிப்பா வர்றேன்..!!"

"ஹ்ம்ம்.. பொண்ணு கொஞ்சம் குண்டா இருந்தாலும்.. நல்ல முக லட்சணம்தான் தம்பி.. உங்களுக்கு நல்ல பொருத்தமாதான் இருந்தது..!!" வரதராஜன் திடீரென சொன்னார்.

"யா..யாரை சொல்றீங்க..??" அசோக் குழப்பமாக கேட்டான்.

"அதான் தம்பி.. அன்னைக்கு உங்ககூட வந்த பொண்ணு.. அந்தப் பொண்ணைத்தான நீங்க விரும்புறீங்க..??"

வரதாராஜன் செண்பகத்தை மனதில் நினைத்துக்கொண்டு அந்தக்கேள்வியை கேட்டுக்கொண்டிருக்கும்போதே, அந்தக் கேள்வியை அசோக் சரியாக புரிந்துகொள்ள முடியாத வகையில், அவனுக்கு பின்பக்கமாக இருந்து வந்த அந்த 'லொட்.. லொட்..' சப்தம் அவனுடைய கவனத்தை சிதற செய்தது. அசோக் திரும்பி பார்த்தான். கண்ணாடி தடுப்புக்கு அந்தப்பக்கமாக ப்ரியா நின்றுகொண்டிருந்தாள். 'என்னாச்சு..?? சீக்கிரம் வா..!!' என்பது போல பொறுமையற்றவளாய் இவனைப்பார்த்து சைகை செய்தாள். இவனும் 'இரு.. இரு.. இதோ வந்துடறேன்..' என்பது மாதிரி சைகையாலே அவளுக்கு பதில் சொல்லிவிட்டு, சற்றே பரபரப்பு தொற்றிக்கொண்டவனாய் மீண்டும் ஃபோனுக்கு காது கொடுத்தான்.

"என்ன தம்பி.. நான் சொன்னது கரெக்ட்தான..??" வரதராஜன் கேட்க,

"ஆங்.. கரெக்ட்தான் ஸார்..!!" அசோக் அவனையும் அறியாமல் அவனுக்கே ஆப்பு வைத்துக் கொண்டான்.

"ஹாஹா.. கரெக்டா கண்டுபுடிச்சிட்டேன் பாத்தீங்களா..??" வரதராஜன் பேசியதை கவனிக்காமல், அசோக் இப்போது அவசரமாக..

"ஸார்.. எனக்கு இங்க கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு.. நாம இன்னொரு நாளைக்கு பொறுமையா பேசலாமா.. ப்ளீஸ்..??" என்றான்.

"தம்பி தம்பி.. ஒரே ஒரு நிமிஷம்.. உங்ககிட்ட இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும்.. என் பொண்ணு கூட உங்க கம்பனிலதான்.." வரதராஜன் ஆரம்பிக்க, அசோக் அவரை இடைமறித்தான்.

"ஸார்.. ப்ளீஸ் ஸார்.. என் பாஸ் என்னை இங்க கூப்பிட்டுட்டே இருக்குறா.. அவ சரியான லூஸு ஸார்.. என்னைக்காவதுதான் அவளுக்கு மூளைலாம் ஒழுங்கா வேலை செய்யும்..!! இன்னைக்குத்தான் கொஞ்சம் புத்தி சுவாதீனத்தோட பேசுறா.. இப்போ நான் போகலைன்னா.. அப்புறம் வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறுனாலும் ஏறிரும்..!! சரியா.. நாம இன்னொரு நாள் பேசலாம்.. பை..!!"

"ஹாஹா.. சரி தம்பி.. இன்னொரு நாள் பேசலாம்..!!"

அசோக் காலை கட் செய்தான். ஐடி கார்ட் ஸ்வைப் செய்து மீண்டும் உள்ளே சென்றான். ப்ரியா மீட்டிங் அறைக்குள் சென்று அமர்ந்திருந்தாள். அசோக்கும் அந்த அறைக்குள் நுழைந்தான். அவள் முகத்தில் எரிச்சல் கொப்பளிக்கும் என்று எண்ணியிருந்த அசோக் ஏமாந்து போனான். ப்ரியா இன்னும் அதே முக மலர்ச்சியுடனும், இதழ் புன்னகையுடனுமே அமர்ந்திருந்தாள். இவனை பார்த்ததும்..

"யார் ஃபோன்ல..??"

"அது ஒரு பெருசு.. செம ப்ளேட் போட்டுருச்சு..!!" சொல்லிக்கொண்டே அசோக் அவளுக்கு எதிரே அமர்ந்தான்.

"ஹ்ம்ம்.. ராங் நம்பர் மாதிரி ஆரம்பிச்ச..?? அப்புறம் பாத்தா சிரிச்சு சிரிச்சு ரொம்ப நேரம் பேசிட்டு இருக்குற..??"

"ஹாஹா.. ராங் நம்பர் இல்ல.. தெரிஞ்சவர்தான்..!! சரி அவரை விடு.. நம்ம மேட்டருக்கு வா..!! ஹ்ம்ம்ம்... எங்க விட்டோம்..?? ஆங்.. எதுக்கு உன் மேல எனக்கு கோவமான்னு கேட்ட..??"

"நான் கேட்டதுக்கு காரணம் இருக்கு அசோக்.. அதை அப்புறம் சொல்றேன்..!!"

"ஏன்.. இப்போ சொன்னா என்ன..??"

"ப்ச்.. அப்புறம் சொல்றேன்றன்ல.. கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு..!!"

ப்ரியா சொல்லவும், அசோக் சில வினாடிகள் அவளுடைய முகத்தையே அமைதியாக பார்த்தான். மெலிதாக புன்னகைத்தான். அப்புறம் நெற்றியை சுருக்கி யோசிப்பது மாதிரி பாவ்லா செய்துகொண்டே ஆரம்பித்தான்.

"ஹ்ம்ம்.. என்ன சொல்றது..?? கோவம் கொஞ்சம் இருக்கு.. ஆனா.."

அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவர்கள் பேச்சுக்கு மீண்டும் ஒரு இடையூறு..!! இந்தமுறை இவர்கள் அமர்ந்திருந்த அறைக்கதவு 'லொட்.. லொட்..' என்று தட்டப்பட்டது. இருவரும் தலையை திருப்பி பார்த்தார்கள். வெளியே கவிதா நின்றுகொண்டிருந்தாள். ப்ரியா 'உள்ள வா..' என்பது போல சைகை செய்ய, அவள் கைப்பிடி திருகி அந்த அறைக்குள் நுழைந்தாள்.

"என்ன கவிதா..??" ப்ரியா கேட்டாள்.

"உன் மொபைல் அங்க அடிச்சுட்டே கெடக்குது ப்ரியா.. அதான் சொல்லலாம்னு வந்தேன்..!!"

"ஓ.. மொபைலை ரூம்லேயே விட்டு வந்துட்டனா.. ச்ச..!!" ப்ரியா தலையில் தட்டிக்கொண்டாள். அப்புறம் அசோக்கிடம் திரும்பி,

"ஹேய்.. வெயிட் பண்ணு அசோக்.. இதோ வந்துடறேன்..!!" என்றுவிட்டு எழுந்து வெளியே சென்றாள்.

ஓட்டமும் நடையுமாக சென்று தனது அறைக்குள் நுழைந்தாள். டேபிள் மீது அலறிக்கொண்டிருந்த செல்போனை அவசரமாய் எடுத்து கால் பிக்கப் செய்தாள். காதில் வைத்துக் கொண்டதுமே,

"சொல்லுங்க டாடி..!!" என்றாள்.

"என்னம்மா.. வேலையா இருந்தியா..??" அடுத்த முனையில் வரதராஜனின் குரல் சோர்வாக ஒலித்தது.

"கொஞ்சம் வேலைதான்.. பரவால சொல்லுங்க..!! என்ன.. திடீர்னு கால் பண்ணிருக்கீங்க..??"

"அ..அது.. அது வந்து.." அவர் தயங்கினார்.



"ஹ்ம்ம்.. சொல்லுங்க டாடி..!!"

"எ..எப்படி அதை சொல்றதுன்னு எனக்கு தெரியலைம்மா.. சொல்றதுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு..!!" அப்பாவின் குரலில் ஒரு அதீத கவலை தொனிக்க,

"என்னாச்சு டாடி..??" ப்ரியா இப்போது சற்றே கலவரமாய் கேட்டாள்.

"நே..நேத்து சொல்லிட்டு இருந்தன்ல.. அ..அந்த எடம் நமக்கு அமையலம்மா..!!" வரதராஜன் தயங்கி தயங்கி சொன்னார்.

"எ..என்ன டாடி சொல்றீங்க..??"

"ஆமாம்மா.. பையன் வீட்டுக்கு நேராவே போயிட்டு வர்றேன்னு காலைல சொல்லிருந்தன்ல..?? கொஞ்ச நேரம் முன்னாடி.. வரலாமான்னு கேக்குறதுக்காக பையனோட அண்ணனுக்கு கால் பண்ணினேன்.. அவரு 'வரவேணாம்.. இந்த சம்பந்தம் அமைய நாங்க குடுத்து வைக்கலை..'ன்னு சொல்லிட்டாரு..!!"

"ஏ..ஏன் அப்டி சொன்னாரு..??" எகிறுகிற இதயத்துடிப்புடன் ப்ரியா கேட்டாள்.

"என் தம்பிக்கு உங்க பொண்ணை புடிக்கலைன்னு சொன்னாரு..!!" வரதராஜன் சொல்ல, ப்ரியாவின் இதயத்தை இப்போது பக்கென்று ஒரு பயம் வந்து கவ்வியது.

"அ..அவன்.. அவன் என் ஃபோட்டோ பாத்தானாமா..??" வார்த்தைகள் அவளிடம் இருந்து தடுமாற்றமாய் வெளிப்பட்டன.

"அது தெரியலைம்மா.. ஆனா.. அவர் ஏன் உன்னை புடிக்கலைன்னு சொன்னாருன்னு.. எனக்கு தெரிஞ்சு போச்சு..!!"

"ஏ..ஏன்..??" ப்ரியா குழப்பமும் கவலையுமாய் கேட்டாள்.

"அந்த தம்பி வேற ஒரு பொண்ணை விரும்புதும்மா.. அது அவங்க வீட்டுக்கு இன்னும் தெரியாது.. அதான் எல்லா கொழப்பமும்..!!"

"அ..அதெப்படி உங்களுக்கு தெரியும்..??"

"அந்த தம்பிதான்மா சொல்லுச்சு..!! அவங்க அண்ணன்ட்ட நம்பர் வாங்கி.. இப்போத்தான் அந்த தம்பிட்ட பேசினேன்..!!"

"இப்போவா..????"

"ஆமாம்மா.. பேசி முடிச்சுட்டு உடனே உனக்கு ஃபோன் அடிக்கிறேன்..!!"

வரதராஜன் சொல்ல, ப்ரியா கண்களை சுருக்கிக்கொண்டு, தனது நெற்றியை பற்றி பிசைந்தாள். 'அப்படியானால்.. சற்றுமுன் அசோக்கிற்கு வந்த கால் அப்பாவிடம் இருந்தா..?? அவன் ப்ளேடு, பெருசு என்று சொன்னதெல்லாம் அப்பாவைத்தானா..??'

"ந..நல்லா தெளிவா கேட்டீங்களா டாடி..?? வேற ஒரு பொண்ணை லவ் பண்றேன்னு சொன்னானா..??" ப்ரியா நெஞ்சில் வேதனையும் குரலில் நப்பாசையுமாய் கேட்டாள்.

"ஆமாம்மா.. தெளிவா கேட்டுட்டுத்தான் சொல்றேன்.. என்ன காரணம்னு தெரிஞ்சுக்கத்தான அந்த தம்பிக்கு நான் ஃபோனே பண்ணினேன்.. அதை தெளிவா கேக்காம இருப்பனா..?? அந்தப்பொண்ணை கூட நான் பாத்திருக்கேன்மா..!!"

"எ..எந்தப் பொண்ணை..??" ப்ரியா உதறலாக கேட்டாள்.

"அந்த தம்பி விரும்புற பொண்ணைம்மா..!! அன்னைக்கு அவர்கூட ஒரு பொண்ணு பைக்ல வந்தான்னு சொன்னேன்ல.. அந்தப் பொண்ணுதான்..!! அந்தப்பொண்ணைத்தான் அவர் ரொம்ப நாளா விரும்புறாராம்..!!"

வரதராஜன் சொல்லிக்கொண்டே போக.. ப்ரியா இப்போது அப்படியே நொறுங்கிப் போனாள்..!! அவளுடைய இதயத்தில் யாரோ ஈட்டியை பாய்ச்சியது மாதிரி இருந்தது அவளுக்கு..!! கால்கள் வலுவிழந்து போனவளாய் பொத்தென்று சேரில் அமர்ந்தாள்.

'அவ்வளவுதானா..?? அவன் எனக்கு இல்லையா..?? வேறொருத்திக்கு சொந்தமானவனா என் அசோக்..?? எல்லாம் முடிந்து போயிற்றா..?? என் காதலுக்கு நேர்ந்த கதி இதுதானா..?? இத்தனை நாளாய் கண்ட கனவெல்லாம் கானல் நீரா..??'

ப்ரியாவுக்கு கண்களில் பொசுக்கென்று கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. உதடுகளை கடித்து அவள் கட்டுப்படுத்த முயன்றும், உடைப்பெடுத்து கன்னம் வழியாக ஓடியது. அவள் அவசரமாய் அந்த கண்ணீரை தன் புஜத்தில் துடைத்துக் கொண்டாள். மூக்கை ஒருமுறை உறிஞ்சிக் கொண்டாள்.

அசோக்கின் மீது இப்போது அவளுக்கு வேறொரு விதமான கோவமும் திடீரென வந்தது. 'இத்தனை நாளாய் யாரையோ காதலித்துக் கொண்டு.. அந்த விஷயத்தை கூட என்னிடம் சொல்லவில்லையே அவன்..?? என்னை காதலியாக நினைக்கத்தான் அவனுக்கு மனதில்லை என்றால்.. நல்ல தோழியாக கூட அவன் என்னை கருதவில்லை போலிருக்கிறதே..?? அப்படி கருதியிருந்தால் அவனுடைய காதலை பற்றி என்னிடம் மறைத்திருப்பானா..?? எனக்கு தெரியாமல் எந்த பெண்ணை அப்படி ரகசியமாக காதலிக்கிறான்..?? ஒருவேளை.. ஒருவேளை..' ப்ரியாவின் மனதில் ஒரு குறுகுறுப்பு எழ,

"அ..அந்தப்பொண்ணு எப்படி இருந்தா டாடி..??" தன் அழுகையை மறைத்துக்கொண்டு மெல்லிய குரலில் கேட்டாள்.

"நல்லா குண்டா இருந்ததும்மா.. அவரை மாமா மாமான்னு கூப்பிட்டுச்சு..!!"

'சந்தேகமே இல்லை.. செண்பகமேதான்..!! காதலிக்கிறார்களா இருவரும்..?? மாமா மாமா என்று அவள் அவனிடம் குழையும்போதே எனக்கு புரிந்திருக்க வேண்டும்..!! ச்சே.. எவ்வளவு ஏமாளியாக இருந்து விட்டேன்..??' ப்ரியா அவ்வாறு வேதனையாக நினைத்துக் கொண்டிருக்கும்போதே, வரதராஜன் ஒரு பெருமூச்சுடன் சொன்னார்.

"ஹ்ஹ்ம்ம்ம்.. ஒருவேளை நீ அந்த தம்பியை சந்திச்சு பேச நெனச்சிருக்கியோன்னு தோணுச்சுமா ப்ரியா.. தேவை இல்லாம இன்னொரு கொழப்பம் வரவேணாம்னுதான் இப்போ அவசரமா உனக்கு ஃபோன் பண்ணுனேன்..!!"

'ஆமாம்.. அப்பா சொல்வதும் சரிதான்.. அவனுடைய மனதை அறிந்து கொள்ளாமல் என்னுடைய காதலை அவனிடம் சொல்ல துணிந்து விட்டேன்..!! நல்லவேளை.. அவனிடம் எதுவும் சொல்லவில்லை.. நான் வெட்கமில்லாமல் 'ஐ லவ் யூ..' என்று அவனிடம் வழியப்போய்.. அதைக்கேட்டு அவன் கைகொட்டி சிரித்திருந்தால்..?? என் நிலைமை எவ்வளவு அவமானகரமானதாக இருந்திருக்கும்.. கேவலம்தானே..?? இல்லை.. இந்த விஷயம் அசோக்கிற்கு தெரியவே கூடாது..!!'

"அவன் வேலை பாக்குற கம்பனிலதான் நானும் வேலை பாக்குறேன்னு அவன்கிட்ட சொல்லிட்டீங்களா டாடி..??"

"இல்லம்மா.. அதை சொல்றதுக்குள்ளதான்.. அவரோட லூஸு பாஸ் கூப்பிடுறான்னு ஓடிப் போயிட்டாரு.. ஒரே தமாஷ் போ.. ஹாஹா..!!" எரிகிற தீயில் எண்ணெய் வார்ப்பது போல, வரதராஜன் சொல்லிவிட்டு சிரித்தார்.

"என்னது..?? லூஸு பாஸா...??" ஏற்கனவே அசோக் மீது இருந்த கோவத்துடன், இப்போது உச்சபட்சத்தில் ஒரு கடுப்பும் சேர்ந்து கொள்ள, ப்ரியா கத்தினாள்.

"ஆமாம்மா.. அந்த தம்பியோட பாஸ் ஏதோ ஒரு லூஸாம்.. அந்த பொண்ணுக்கு எப்போவாவதுதான் மூளை ஒழுங்கா வேலை செய்யுமாம்..!! அவர் சொன்னதை கேட்டு.. அவ்வளவு கஷ்டத்திலயும் எனக்கு சிரிப்பு வந்துடுச்சுமா..!! ஹாஹா..!!"

மகளின் மனநிலை புரியாமல் வரதராஜன் சிரிக்க, ப்ரியாவால் அதற்கு மேலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. காலை ஆத்திரமாக கட் செய்தாள். செல்போனை தூக்கி ஓரமாய் விட்டெறிந்தாள். இரு கைகளையும் டேபிளில் பரப்பி, படக்கென அதிலேயே தன் தலையை கவிழ்த்து படுத்துக் கொண்டாள். அவளுடய நெஞ்சம் குமுற ஆரம்பிக்க, கண்களில் நீர் பொங்கிக்கொண்டு வந்தது. 'ஓ...!!' என வாய் விட்டு அலறி அழ வேண்டும் போலிருந்தது அவளுக்கு. ஆபீஸாக போயிற்றே என்று அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

'லூஸா நான்..?? ஆமாண்டா.. லூஸுதான்.. உன் மேல இவ்வளவு காதல் வச்சிருக்கேன்ல.. என்னைப்பாத்தா உனக்கு லூஸாத்தான் தெரியும்..!! ஏண்டா இப்படி செஞ்ச..?? என்னை விட அந்த பூசணிக்காயைத்தான் உனக்கு புடிச்சிருக்கா..?? புடிச்சிருந்தா வீட்டுல சொல்லி கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதான..?? ஏன் பொண்ணு பாக்க சொல்லி.. என் மனசுல ஆசையை கெளப்பி விட்ட..??'

நேற்றிலிருந்து மத்தாப்பாய் பூரித்துக்கொண்டிருந்த ப்ரியாவின் மனம், இப்போது புஸ்வானமாய் அணைந்து நமத்துப் போயிருந்தது. 'செண்பகம் அவனுடைய அண்ணியின் தங்கைதானே.. அவளை காதலித்தால் வீட்டில் சொல்லி திருமணம் செய்துகொள்ளாமல்.. ஏன் தயங்குகிறான்..?? அதில் என்ன பிரச்னை அவனுக்கு..??' என்று ஒரு கேள்வி எழுந்தது. உடனே 'எங்க வீட்டுக்கும் என் அண்ணி வீட்டுக்கும் பெரிய தகராறு..' என்று அசோக் எப்போதோ சொன்னதும், 'என் அண்ணனும் அண்ணியும் இருக்காங்களே.. சுத்தமா என் மனசை புரிஞ்சுக்கவே மாட்டாங்க' என்று அவன் சற்றுமுன் சொன்னதும் நினைவுக்கு வர, அந்தக் கேள்விக்கும் அவளுக்கு பதில் கிடைத்து போனது. 'இவனுடைய விளையாட்டு.. எனக்கு வேதனையாக முடிந்து போனது..' என்று நினைத்துக் கொண்டாள்.

தான் இத்தனை நாளாய் கண்ணும் கருத்துமாய்.. பார்த்து பார்த்து பயிர் செய்த காதல் தோட்டம்.. இப்போது புயலில் சிக்கி உருக்குலைந்து போனதாய் அவளுக்கு தோன்றியது..!! சிறு வலியை கூட தாங்காத அவளது இதயம்.. இப்போது திராவகம் வீசப்பட்டு பொசுங்குவது போல துடிதுடித்தது..!! 'அசோக் தனக்கில்லை..!!' என்று அவள் நினைக்க நினைக்க.. அழுகை பொத்துக்கொண்டு வந்தது..!!

கண்களில் வழிந்த நீரை புஜத்திலேயே துடைத்துவிட்டு நிமிர்ந்தபோதுதான், அசோக் அவளுடைய அறைக்குள் நுழைந்தான். இவள் முகத்தை சகஜமாக மாற்றிக்கொள்ள முயல, அவன் உதட்டில் புன்னகையும், குரலில் கேலியுமாய் கேட்டான்.

"ஹேய் லூஸு.. என்னை அங்க வெயிட் பண்ண சொல்லிட்டு.. நீ என்ன இங்க வந்து படுத்து தூங்கிட்டு இருக்குற..??"

அவ்வளவுதான்..!! அந்த ' லூஸு' என்ற வார்த்தை ப்ரியாவுக்கு சுர்ரென ஒரு ஆத்திரத்தை கிளப்பிவிட்டது. பட்டென சேரில் இருந்து எழுந்தாள். முகமெல்லாம் கோவத்தில் சிவந்து போக, அசோக்கை பார்த்து சீற்றமாய் சொன்னாள்.

"மைன்ட் யுவர் டங்..!!!! இனிமே என்னை லூஸுன்னு சொன்ன.. மரியாதை கெட்டுப் போயிடும்..!!"

ப்ரியாவின் சூடான வார்த்தைகளில்.. அவ்வளவு நேரம் புன்முறுவலுடன் இருந்த அசோக்கின் முகம்.. பட்டென சுருங்கிப் போனது..!! 'என்ன ஆயிற்று இவளுக்கு திடீரென..?' என்று குழப்பமுற்றவனாய், தடுமாற்றமாக கேட்டான்.

"ஹேய்.. என்னாச்சு உனக்கு.. ஏன் இப்போ டென்ஷன் ஆகுற..?? நான் எப்போவும் கூப்பிடுறதுதான..??"

"இனிமே கூப்பிடாத..!! இந்த லூஸு, ஸ்டுபிட்லாம் ஆபீசுக்கு வெளில வச்சுக்கோ..!! இங்க நான் உன் பாஸ்.. அதுக்கு உண்டான மரியாதையை குடுக்கணும்..!! இல்லனா உன்னைப்பத்தி நான் மேனேஜ்மன்ட்ல கம்ப்ளயின்ட் பண்ண வேண்டி இருக்கும்.. அண்டர்ஸ்டாண்ட்..??"

ப்ரியா ஆத்திரத்துடன் ஆட்காட்டி விரலை காட்டி.. அவனை எச்சரிப்பது போல சொல்ல சொல்லவே.. அசோக்கின் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் இறுக ஆரம்பித்தது..!! சற்றுமுன் ஆசையும் ஏக்கமுமாய் பார்த்த அதே ப்ரியாவின் முகத்தை, இப்போது வெறுப்பாக முறைத்தான். கண்களை இடுக்கி அவளை உஷ்ணமாக பார்த்தவன், பற்களை கடித்தவாறு சொன்னான்.

"ஓ..!! TL மேடத்துக்கு மரியாதை வேணுமா..?? குடுத்துட்டா போச்சு..!!" என்றவாறு கைகளை மார்புக்கு குறுக்காக பணிவுடன் கட்டிக்கொண்டான். குரலில் ஒரு போலி மரியாதையை கூட்டிக்கொண்டு..

"மன்னிச்சுடுங்க மேடம்.. இனி உங்களை நான் லூஸுன்னு கூப்பிட மாட்டேன்.. அப்படி கூப்பிட்டா நான்தான் இனிமே லூஸு..!! போதுமா..??" என்றான்.



அவனுடைய செய்கை ப்ரியாவுக்கு அழுகையை தூண்டுவதாய் இருந்தது. கட்டுப்படுத்திக் கொண்டாள். தலையை கவிழ்த்துக்கொண்டு அமைதியானாள். அவளுடைய அமைதியை பார்த்து, அசோக்கே தொடர்ந்து பேசினான்.

"எங்கிட்ட ஏதோ தனியா பேசணும்னு சொன்னீங்களே.. அது மட்டும் என்னன்னு சொல்லிடுங்க மேடம்..!! சொல்லிட்டா.. நான் என் எடத்துக்கு போய் என் வேலையை பார்ப்பேன்..!!"

அசோக் கேலியான குரலில் கேட்க, ப்ரியா இப்போது அப்படியே தளர்ந்து போனாள். ஒருவித தடுமாற்றத்துடன் சேரில் மெல்ல அமர்ந்து கொண்டாள். அசோக்கின் முகத்தை ஏறிட்டு பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தாள்.

'இதோ.. கேட்கிறான்.. என்ன சொல்வது இப்போது..?? நேற்றிலிருந்து எத்தனை எத்தனை வார்த்தைகளை புரட்டி புரட்டி போட்டு.. வாக்கியங்களை பார்த்து பார்த்து மாலை போல கோர்த்து கோர்த்து வைத்திருந்தேன்..?? அதிலிருந்து ஒற்றை வார்த்தையை இப்போது இவனிடம் கூற இயலுமா..?? இதோ.. கேட்கிறான்.. என்ன சொல்வது இப்போது..??' மனதில் புரண்ட உணர்ச்சி அலைகளை, ப்ரியா கட்டுப்படுத்திக் கொண்டவாறே..

"டைம் ஷீட் என்டர் பண்ணிட்டியா..??" என்றாள் உணர்ச்சி செத்துப்போன குரலில்.

"அதை கேட்கவா தனியா கூட்டிட்டு போன..??"

"ம்ம்.. ஆமாம்..!!"

"இல்ல.. நீ ஏதோ மறைக்கிற..??"

"ப்ச்.. நான்தான் சொல்றன்ல..?? அதை கேக்கத்தான் கூட்டிட்டு போனேன்..!! சொல்லு.. என்டர் பண்ணிட்டியா..??"

"இல்ல.. இன்னும் பண்ணல..!!"

"மொதல்ல அதைப்போய் பண்ணு.. பாலா உடனே பண்ண சொன்னாரு..!!"

"அதுக்கென்ன இப்போ அவசரம்.. ஃப்ரைடே பண்ணினா பத்தாது..??" அசோக்கின் கேள்வியில் ப்ரியா இப்போது பொறுமை இழந்தாள்.



"டூ வாட் ஐ ஸே..!!" என்று எரிச்சலாக கத்தினாள். இப்போது அசோக் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு ப்ரியாவையே சில வினாடிகள் முறைத்துப் பார்த்தான். அப்புறம்,

"திருந்தவே மாட்டேல நீ..?? ச்ச..!!"

என்று வெறுப்பாக கத்திவிட்டு திரும்பி விடுவிடுவென நடந்தான். ஆத்திரத்துடன் கதவை பிடித்து இழுத்து, அந்த அறையை விட்டு வெளியேறினான். அவன் செல்வதையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்த ப்ரியாவுக்கு, அழுகை முட்டிக்கொண்டு வந்தது. கண்களில் நீர் திரையிட.. கை நீட்டி.. டேபிள் மீதிருந்த அந்த வாட்சை எடுத்தாள்..!! பதிக்கப்பட்ட கற்களுடன் பளீரென்று பளிச்சிட்ட அந்த வாட்சை பரிதாபமாக பார்த்தாள்..!!




No comments:

Post a Comment