Wednesday, September 17, 2014

ஆண்மை தவறேல் - பாகம் 10


நந்தினி ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்தபோது, ரிசப்ஷனிலேயே சூசை தென்பட்டார். இவளை பார்த்ததும் ஸ்னேஹமாய் புன்னகைத்தார். நேற்று காலை அவரை பார்த்தபிறகு மாலை ஒருமுறை அவரை சென்று நந்தினி பார்த்தாள். அப்போது அவருடைய மனைவியின் உடல்நிலை ஓரளவு சீராகி நலமாயிருந்தாள். எந்த நேரமும் பிரசவ வலி வரலாம் என்ற நிலையில் மருத்துவர்களின் தீவிர கவனிப்பில் இருந்தாள். ஒரு மணி நேரம் நந்தினி சூசைக்காக செலவழித்திருப்பாள். மருந்து வாங்குவதற்காக பார்மசிக்கு அழைந்தாள். 'இவங்க கூட பொம்பளைங்க யாரும் வரலையா..?' என்று நர்ஸ் கேட்டபோது அவசரமாக உள்ளே ஓடினாள். மருத்துவமனையின் விதிகள், செயல்பாடுகள், வழக்கங்கள் பற்றி சூசைக்கு பொறுமையாக சொல்லிக் கொடுத்தாள். முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவருக்காக அவ்வளவு உதவியாகவும், ஆறுதலாகவும் இருந்த நந்தினியை, சூசைக்கு மிகவும் பிடித்துப் போனது. அதனால்தான் இப்போது அவளை பார்த்ததும், புன்னகையுடன் அவளை நெருங்கினார்.


 
"உன்னைத்தான் பாப்பா தேடிட்டு இருந்தேன்.. ஒருவேளை டிஸ்சார்ஜ் ஆகி போயிட்டீங்களோன்னு நெனச்சேன்.." "இல்லங்க.. மூணு மணிக்குத்தான் டிஸ்சார்ஜ் னு சொல்லிருக்காங்க..!! அப்புறம்.. உங்க வொய்ஃப் இப்போ எப்படி இருக்காங்க..?" "நல்லா இருக்கா பாப்பா..!! காலைல அஞ்சு மணிக்கு சுகப்பிரசவம் ஆகிடுச்சு..!!" அவர் சந்தோஷமாக சொல்ல, அவருடைய சந்தோஷம் இப்போது நந்தினியையும் தொற்றிக் கொண்டது. "வாவ்.. என்ன கொழந்தை..?" "பொண்ணு..!!" சொல்லும்போதே அவர் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு. "ஹையோ.. அப்போ உங்க வொய்ஃபுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.." "ஆமாம் பாப்பா..!! அவ.. என் சம்சாரம்.. உன்னை பாக்கனும்னு ரொம்ப பிரியப்படுறா.." "அப்படியா..? கண்டிப்பா.. எனக்கும் குட்டிப்பொண்ணை பாக்கணும் போல இருக்கு.. வாங்க.." இருவரும் லேபர் வார்ட் நோக்கி நடந்தார்கள். அதிகாலையில் குழந்தை பிறந்த அந்த தருணங்கள் பற்றி சூசை மிகவும் சந்தோஷமாக சொல்லிக் கொண்டு வந்தார். நந்தினியும் கண்களில் ஆவல் மின்ன, அந்த தருணங்களை ஆர்வமாக கேட்டுக்கொண்டாள். அறைக்குள் அவர்கள் நுழைந்ததுமே "வாம்மா.. உள்ள வா.." என்று மரியம் புன்னகையுடன் வரவேற்றாள். "இப்போ உங்களுக்கு எப்படி இருக்கு..?" "இப்போ தேவலாம்மா.. பட்ட கஷ்டம் எல்லாம் இந்த பிஞ்சு முகத்தை பாத்ததும் பறந்து போச்சும்மா.." சொல்லிக்கொண்டே மரியம் கையில் இருந்த குழந்தையை நந்தினியிடம் தூக்கி கொடுக்க அவளும் கவனமாக வாங்கி தன் மடியில் வைத்துக் கொண்டாள். கண்களை இறுக்கி மூடிக்கொண்டு, கை கால்களை மட்டும் ஆட்டிக்கொண்டு கிடக்கும் அந்த குழந்தையின் அழகை நந்தினி மிக ஆசையாக ரசித்தாள். பட்டு மாதிரி மிருதுவாக இருந்த அந்த பிஞ்சின் உள்ளங்கால்களுக்கு முத்தமிட்டாள். "நீங்க பேசிட்டு இருங்கம்மா.. நான் மருந்துக்கடை வரை போயிட்டு வர்றேன்.." சூசை சொல்லிவிட்டு திரும்பி அறைக்கதவை நோக்கி நடந்தார். அவர் போவதையே பார்த்துக் கொண்டிருந்த மரியம், இப்போது மிக இரக்கமான குரலில் சொன்னாள். "பாவம்.. என் புருஷனைத்தான் ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்.." "ஐயோ.. ஏன்மா அப்படி சொல்றீங்க.. உங்களுக்கு ஒரு கஷ்டம்னா அவர் எப்படி சும்மா இருக்க முடியும்..?" "ம்ம்.. ஆனா கொழந்தை பொறந்தது தெரிஞ்சதும் அவர் மொகத்துல சந்தோஷத்தை பாக்கணுமே..? பையன் வேணும் பையன் வேணும்னு சொல்லிட்டு கெடந்தார்..


இப்போ இந்த குட்டியை என் பொண்ணு என் பொண்ணுன்னு கொஞ்சுறாரு.." "ம்ம்ம்.." நந்தினி புன்னகைத்தாள். "ஆனா.. இந்தக்குட்டியும் அப்படியே அவ அப்பாவை உரிச்சு வச்ச மாதிரி பொறந்திருக்கு பாரேன்.." மரியம் முகத்தில் இப்போது அப்படி ஒரு பெருமிதம். "ம்ம்.. ஆமாம்.. கண்ணு, மூக்குலாம் அவர் மாதிரியேதான்.." நந்தினி சொல்லிக்கொண்டிருக்க, "உனக்கு எப்போமா கல்யாணம்..?" மரியம் திடீரென கேட்டாள். "பா..பாத்துட்டு இருக்காங்க.." "அப்படியா..?? அப்போ கூடிய சீக்கிரம் ஒரு கல்யாண சாப்பாடு இருக்கு..??" "ஆ..ஆமாம்.." "கல்யாணத்துக்கு எங்களை எல்லாம் கூப்பிடுவல..?" "கண்டிப்பா.." நந்தினி ஒருமாதிரி சுரத்தற்ற குரலில் சொன்னாள். "கவலைப்படாத தாயி.. உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லா நடக்கும்..!! என் புருஷன் மாதிரியே உனக்கும் ஒரு நல்ல புருஷன் அமைஞ்சு.. புள்ள குட்டின்னு நீ எந்த குறையும் இல்லாம சந்தோஷமா இருப்ப..!!" மரியம் மலர்ந்த முகத்துடன் மனதார வாழ்த்த, நந்தினி ஒருமாதிரி விரக்தியாக சிரித்தாள். நந்தினி அறைக்கு திரும்பியதும், அசோக்குடனான சந்திப்பு பற்றி அவள் அம்மா கேட்டாள். 'சும்மா.. சாதாரணமாத்தான் பேசிட்டு இருந்தோம்..' என்று நந்தினி சமாளித்தாள். வேறு எதுவும் சொல்லவில்லை. அன்று பிற்பகல் அமுதாவுக்கு ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தார்கள். அவர்களை வீட்டில் கொண்டு விட காருடன் ராமண்ணா ஹாஸ்பிட்டலுக்கே வந்திருந்தார். நந்தினியும் அவள் அம்மாவும் காரின் பின்பக்கம் ஏறிக்கொண்டார்கள். முன்பக்கம் ஏறிக்கொண்ட வந்தனாவோ, வாயை வைத்துக்கொண்டு சும்மா இராமல், ராமண்ணாவிடம் பேச்சுக்கொடுத்தாள். "நீங்க.. அந்த கௌரம்மாவோட ஹஸ்பன்ட்தான..?" "ஆமாம்மா.." "உங்களுக்கு சொந்த ஊர் சென்னைதானா..?" "இல்லம்மா.. எங்களுக்கு ஆந்த்ரா.. சித்தூர் பக்கத்துல பலமனேர்..!!"
"ஓ..!! எத்தனை வருஷமா அசோக் அத்தான்கிட்ட நீங்க வேலை பாக்குறீங்க..?" அதற்குள் வந்தனா அசோக்கை அத்தான் என்று உரிமையாக அழைத்தது நந்தினிக்கு சற்று ஆச்சரியத்தையும், சற்று எரிச்சலையும் வரவழைத்தது. அவள் பின்னால் இருந்து முறைத்தது வந்தனாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


ராமண்ணா வந்தனாவின் கேள்விக்கு பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டு வந்தார். "அசோக் தம்பிக்கு அஞ்சு வயசாறப்போல இருந்து ஐயா கூட இருக்கேன்மா.." "ஹையோ.. அப்போ இருபது வருஷத்துக்கு மேல இங்க வேலை பாக்குறீங்களா..?" "ஆமாம்மா.. இருபத்திரெண்டு வருஷமாச்சு..!! இந்த இருபத்திரெண்டு வருஷத்துல.. அவங்க அம்பாஸடர், காண்டஸா, ஆல்ட்டோ, இப்போ ஐ-டொன்ட்டின்னு நெறைய கார் மாத்திட்டாங்க.. ஆனா கார் ஓட்டுற ஆளு அதேதான்..!!" "ம்ம்ம்.. இப்படி இருபத்திரெண்டு வருஷமா.. இந்த வளையத்தை புடிச்சு இப்படியும் அப்படியும் ஆட்டிட்டு இருக்கீங்களே.. உங்களுக்கு போரடிக்கலையா..?" வந்தனா ஸ்டியரிங்கை கைகாட்டி சொல்ல, ராமண்ணா மெலிதாக சிரித்தார். "ஹாஹா.. போரடிக்கத்தான் செய்யுது.. என்ன பண்ணலாம்..?" "வேற எங்கயாவது போய்.. வேற ஏதாவது வேலை பாக்கலாம்ல..?" "உனக்கு போரடிச்சா.. உன் அம்மா, அக்காவை விட்டுட்டு வேற எங்கயாவது போயிடுவியாம்மா..?" "எ..என்ன சொல்றீங்க நீங்க..?" "இது என் குடும்பம்மா.. இதை விட்டுட்டு நான் எங்க போவேன்..?" "ம்ம்.. முதலாளிக்கு ரொம்ப விசுவாசமாத்தான் இருக்கீங்க.. உங்களை எனக்கு புடிச்சிருக்கு..!! அவங்களும் அந்த மாதிரி உங்ககிட்ட நடந்துக்கிட்டா சரிதான்..!!" "என்னம்மா இப்படி சொல்லிட்ட.. பெரிய ஐயாவும் சரி.. அசோக் தம்பியும் சரி.. என்னை ஒரு வேலைக்காரன் மாதிரி நடத்துறது இல்ல.. என்னையும் அவங்க குடும்பத்துல ஒருத்தராத்தான் நெனைப்பாங்க..!!" "நெஜமாவா..??" வந்தனாவின் குரலில் ஒருவித நம்பிக்கையின்மை. "ஆமாம்மா.. நான் சும்மா பேச்சுக்கு சொல்லலை..!! நான் ஒரு விஷயம் சொல்லட்டா..?" "என்ன..?" "உன் அப்பா இறந்த மூணாவது நாளு.. நானும் ஐயாவும் உங்க வீட்டுக்கு வந்திருந்தோமே..?" "ஆமாம்.." "உன் அக்காவை மருமகளா ஆக்கிக்கனும்னு ஐயா அன்னைக்குத்தான் முடிவு பண்ணுனாரு..!! 'இவதான் ராமு என் மருமக.. நீ என்ன நெனைக்கிற..?'ன்னு.. மொத மொதல்ல அந்த விஷயத்தை அவர் சொன்னதே என்கிட்டதான்..!! எந்த மொதலாளியாவது தன் குடும்ப விஷயம் பத்தி வேலைக்காரன்கிட்ட அபிப்ராயம் கேட்பாங்களா..?? இப்போ சொல்லு.. நான் சொன்னது சரிதான..?" ராமண்ணா சொன்ன விஷயம், வந்தனாவுக்கு மட்டுமில்லாமல் பின்னால் அமர்ந்திருந்த நந்தினிக்கும், அமுதாவுக்குமே சற்று ஆச்சரியமாக இருந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். வந்தனா தனது ஆச்சரியத்தை சமாளித்துக்கொண்டு ராமண்ணாவிடம் கேட்டாள்.


 "ம்ம்.. ஓகே.. பெரிய ஐயா பத்தி நீங்க சொன்னதை வேணா ஒத்துக்குறேன்.. உங்க சின்ன ஐயா எப்படி..??" வந்தனா கிண்டலாக கேட்க, ராமண்ணாவிடம் மீண்டும் ஒரு புன்முறுவல். "அந்த விஷயத்துல அசோக் தம்பியும் அப்பா மாதிரியேதான்.. என் மேல அசோக் தம்பிக்கும் ரொம்ப பிரியம்..!!" "இப்படி மொட்டையா சொன்னா..?? உங்க சின்ன ஐயா அப்படி என்ன பண்ணிருக்கார்னு.. சாம்பிளுக்கு ஒன்னு சொல்லுங்களேன்..?" "ம்ம்.. சரி.. சொல்றேன்..!! போன வருஷம் என் பொறந்த நாளுக்கு அசோக் தம்பி என்ன பண்ணுச்சு தெரியுமா..?" "என்ன பண்ணுனாரு..?" "அன்னைக்கு பூரா.. என்னை பின்னாடி மொதலாளி மாதிரி உக்கார வச்சுட்டு.. அசோக் தம்பியே எனக்கு காரோட்டுச்சு..!! 'இன்னைக்கு ஒருநாள்.. நான் உங்களுக்கு டிரைவரா இருக்கேன் ராமண்ணா'ன்னு..!! சின்ன ஐயா எப்படின்னு நீயே முடிவு பண்ணிக்கோ..!!" ராமண்ணா சொல்ல, வந்தனா வாய் பிளந்தாள். "வாவ்.. சூப்பர்..!! சும்மா சொல்லக்கூடாது.. அத்தான் கலக்கிட்டாரு..!!" "ஹாஹா.. இப்போ சொல்லு.. நான் இருபத்திரெண்டு வருஷமா.. இந்த வளையத்தை புடிச்சு இப்படியும் அப்படியும் ஆட்டிட்டு இருக்குறதுல என்ன தப்பு..??" "தப்பே இல்ல ஸார்..!! நான்தான் உங்க மொதலாளி, தொழிலாளி பாசப்பிணைப்பு தெரியாம தப்பு தப்பா கேள்வி கேட்டுட்டேன்.. என்னை மன்னிச்சுடுங்க..!!" "ஹாஹாஹாஹாஹாஹா..!!" ராமண்ணா மனம்விட்டு சிரிக்க, நந்தினிக்கு இப்போது மனதுக்குள் அசோக் பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் ஊற்றெடுக்க ஆரம்பித்தது. 'வேலைக்காரர்களிடமும், விலங்குகளிடமும் நடந்துகொள்ளும் முறையை வைத்தே ஒரு மனிதனின் குணத்தை எளிதில் கணிக்கலாம்' என்ற ஒரு பழமொழி அவளுக்கு ஏனோ திடீரென ஞாபகம் வந்தது. தான் நினைத்த அளவுக்கு அசோக் மோசமானவன் இல்லை என்று தோன்றியது. அதேபோல.. முதலாளி பற்றி பெருமையாக பேசுகிற ராமண்ணா மீதும் ஒரு நல்ல அபிப்ராயம் வந்தது. வீட்டை அடைந்ததும், 'ஒரு அஞ்சு நிமிஷத்துல ரெடி பண்ணிடுவேன்.. இருந்து சாப்பிட்டு போங்க..' என்று நந்தினி சொன்னதற்கு, 'இல்லம்மா.. வீட்டுல கௌரம்மா எனக்காக சாப்பிடாம காத்திருப்பா.. நான் போய் அவகூட சேர்ந்து சாப்பிட்டுக்குறேன்..' என்று இதமாக அவர் மறுத்தபோது, அந்த நல்ல அபிப்ராயம் இன்னும் அதிகமானது.


 வீட்டுக்குள் சென்றதும் அம்மாவை படுக்கையில் படுக்கவைத்து, 'நீ கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடும்மா..' என்றவாறு நந்தினி போர்வை போர்த்தி விடும்போது, அவள் சொன்னாள். "மாப்பிள்ளை நல்ல மாதிரியான ஆளாத்தான் தெரியிறாரு நந்தினி.. நீ என்ன நெனைக்கிற..?" "ம்ம்.." "என்ன.. இந்த தேவையில்லாத பொண்ணுக சகவாசம்.. நீ நெனச்சா அதையும் மாத்திடலாம்னு எனக்கு தோணுது.." 'ம்க்கும்.. எங்கே மாற்றுவது..? அதைத்தான் மாற்றக்கூடாது என்று கறாராக கண்டிஷன் போட்டிருக்கிறானே..?' மனதுக்குள் சலிப்பாக சொல்லிக்கொண்ட நந்தினி, அம்மாவிடம் "ம்ம்.. மாத்திரலாம்மா.." என்றாள். "எல்லாம் உன் கைலதான் இருக்கு நந்தினி.." கவலையாக சொன்ன அம்மாவிற்கு இப்போது புன்னகையை பதிலாக அளித்தாள். "எல்லாம் நான் பாத்துக்குறேன்மா.. நீ நிம்மதியா தூங்கு..!!" போர்வை போர்த்திவிட்டாள். மின் விசிறியை சுழல செய்தாள். கதவை சத்தம் வராமல் சாத்தியவாறே அறையை விட்டு வெளியேறினாள். அடுத்த நாள் வீட்டுக்கதவு தட்டப்பட்டபோது நந்தினி மட்டும் வீட்டில் தனியாகத்தான் இருந்தாள். கதவை சென்று திறந்தவள் வெளியே நின்றுகொண்டிருந்த அந்த பனிரெண்டு, பதிமூன்று வயது மதிக்கத்தக்க சிறுமியை பார்த்து ஆச்சரியமானாள். 'யார் இவள்..??' நந்தினி அவளை திகைப்பாக பார்த்துக்கொண்டிருக்க அந்த சிறுமியோ, "நீங்கதான் நந்தினியா..?" என்று அதிகாரமாக கேட்டாள். "ஆமாம்.. நீ..?" "ம்ம்.. பரவால.. நான் நெனச்ச மாதிரி இல்லாட்டாலும்.. ஓரளவு அழகாத்தான் இருக்கீங்க.. " "எ..என்னது..??" நந்தினி முகம் சுளித்தவாறு கேட்க, "கொஞ்சம் வழி விடுங்க.." அவளை விலக்கிக்கொண்டு அந்த சிறுமி வீட்டுக்குள் புகுந்தாள். எதுவும் புரியாத நந்தினி 'ஹேய்.. யார் நீ..?' என்று கேட்டவாறு அவளை பின்தொடர்ந்தாள். உள்ளே நுழைந்த சிறுமி, தலையை திருப்பி திருப்பி வீட்டை நோட்டமிட்டாள். சற்றே எகத்தாளமான குரலில் சொன்னாள். "ம்ம்.. வீடு சின்னதா இருந்தாலும், நீட்டா க்ளீனா வச்சிருக்கீங்க.. வெரி குட்..!!" "ப்ச்.. யார் நீன்னு கேக்குறேன்ல..?" கேட்ட நந்தினியை மதியாமல் அவள் உள்ளறைக்குள் நுழைந்தாள். கிச்சனை எட்டிப் பார்த்தாள். "ம்ம்.. கிச்சன் கூட ரொம்ப சுத்தமா இருக்கு..!! சமைக்க தெரியுமா.. இல்ல அதுவும் சுத்தமா..??" அவள் கேள்வியில் இருந்த கிண்டல் நந்தினிக்கு சிரிப்பை வரவழைத்தது.
"அதுலாம் எல்லாம் நல்லா சமைப்பேன்.. மொதல்ல நீ யார்னு சொல்லு.." "சிக்கன் ஐட்டம்லாம் நல்லா பண்ணுவீங்களா..? அதுதான் ரொம்ப முக்கியம்..!!" "என்னை பத்தியேதான் கேட்பியா..? உன்னை பத்தி எதுவும் சொல்ல மாட்டியா..?" "என்ன தெரியனும் என்னை பத்தி..?" "மொதல்ல உன் பேரை சொல்லு.." நந்தினி கேட்டுக்கொண்டிருக்கும்போதே அந்த சிறுமி திடீரென கத்தினாள்.

 "ஹை.. ஊஞ்சல்..!!" கத்திக்கொண்டே ஓடியவள், உத்தரத்திலிருந்து தொங்கிய ஊஞ்சலில் ஏறி அமர்ந்து கொண்டாள். கம்பியை பிடித்துக்கொண்டு காலை கீழே ஊன்றி உந்தித்தள்ளி, சர் சர்ரென ஊஞ்சலாட ஆரம்பித்தாள். 'ஹையா.. எத்தனை நாளாச்சு ஊஞ்சலாடி..' அவள் குதுகலிக்க, நந்தினிக்கு எதுவும் புரியவில்லை. 'யாரிவள்..? திடீரென வந்தாள்.. ஏதேதோ கேள்வி கேட்டாள்.. இப்போது நடுவீட்டில் ஹாயாக ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறாள் ..?' நந்தினிக்கு அந்த சிறுமியின் செய்கைகள் வேடிக்கையாகவும், ரசிக்க கூடியதாகவும் இருந்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் குரலில் இப்போது ஒரு போலிக்கோபத்தை கலந்துகொண்டு கேட்டாள். "ஹேய்.. உன் மனசுல என்ன நெனச்சுக்கிட்டு இருக்குற..? நான் கேக்குறதுலாம் உனக்கு காதுல விழலையா..?" "என்ன கேட்டீங்க..?" அந்த சிறுமி சொய்ங் சொய்ங் என்று இங்குமங்கும் ஆடிக்கொண்டே கேட்டாள். "உன் பேர் என்னன்னு கேட்டேன்.." "பேர் என்ன.. என்னை பத்தி எல்லாம் சொல்றேன்.. அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு காபி போட்டு எடுத்துட்டு வர்றீங்களா..? ப்ளீஸ்.. ரொம்ப டயர்டா இருக்கு..!!" "ஏய்.. என்ன திமிரா..? இப்போ நீ யார்னு சொல்ல போறியா இல்லையா..?" "அச்சச்சோ.. கோவமாயிட்டிங்களா..?? கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டனோ..?? சரி.. சொல்றேன்..!! என் பேர் தமிழரசி..!!" "ஓஹோ..? நல்ல பேர்தான்..!!" "தேங்க்ஸ்..!! ஆளானப்பட்ட தமிழுக்கே நீதான் அரசின்னு என் அப்பா அடிக்கடி சொல்லுவாரு.." "நைஸ்.. நல்ல அப்பா.." "தமிழுக்கு மட்டும் இல்ல.. இந்த தரணிக்கே நான்தான் அரசி..!! தெரியுமா..?" "ம்ம்.. இது யாரு சொன்னது.. உன் அம்மாவா..??" "இல்ல.. அசோக் அங்கிள்..!!" தமிழரசி கண்களில் மின்னல் மின்ன, கன்னத்தில் குழி விழ, பூரிப்பாக சொன்னாள். அசோக்குடைய பேர் காதில் விழுந்ததுமே என்னவென்று விளங்காத ஒரு உணர்ச்சி மனதுக்குள் ஓடுவதை நந்தினியால் தவிர்க்க முடியவில்லை. அவளுடைய முகமும் இப்போது மலர்ந்து போனது. ஊஞ்சலாடிக்கொண்டிருந்த தமிழரசியிடம், மெல்லிய குரலில் கேட்டாள். "அசோக்கா..? அவரை எப்படி உனக்கு தெரியும்..?" "எப்படியோ தெரியும்.. ஆனா எக்கச்சக்கமா தெரியும்.." அவர் உனக்கு என்ன வேணும்..?" "ஹீ இஸ் மை காட்ஃபாதர்..!!" "ஹாஹா.. காட்ஃபாதரா..?? எப்படி..??" "ரொம்ப ஈகரா இருக்கோ..? ஓகே.. எனக்கு காபி கெடைச்சா.. உங்களுக்கு காட்ஃபாதர் கதை கெடைக்கும்..!!" தமிழரசி சொல்லிவிட்டு கண்சிமிட்ட, நந்தினி புன்னகைத்தாள். எதுவும் பேசாமல் திரும்பி கிச்சனுக்கு நடந்தாள். இரண்டே நிமிடங்களில் இரண்டு கப்புகளில் ஆவி பறக்கும் காபியுடன் வந்தாள். ஒரு கப்பை தமிழரசியிடம் நீட்டினாள். ஊஞ்சலில் ஆடுவதை நிறுத்தியிருந்த தமிழரசி 'தேங்க்ஸ்..!!' என்றவாறு கப்பை வாங்கி உறிஞ்சினாள். ஊஞ்சலில் அமர்ந்திருந்த அவளுக்கு எதிரே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு நந்தினி அமர்ந்தாள்.


அவளும் காபியை ஒரு மிடறு விழுங்கிவிட்டு கேட்டாள். "ம்ம்.. சொல்லு.. அந்த காட்ஃபாதர் கதையை..!!" நந்தினி ஆர்வமாக கேட்க, தமிழரசி முகமெல்லாம் மலர்ச்சியும், குரலெல்லாம் உற்சாகமுமாக ஆரம்பித்தாள். "ம்ம்.. சொல்றேன்.. எனக்கு சொந்த ஊர் திருவாரூர் பக்கம்.. எங்க ஊர் எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா..? என் அப்பாவும், அம்மாவும் கூட ரொம்ப அழகா இருப்பாங்க..!! ஆனா ஒருநாள்.. களையெடுக்க போறப்போ எங்க அம்மா கரண்ட் வேலில காலை வச்சுட்டாங்க.. காப்பாத்த போன அப்பாவையும் கரண்ட்டு புடிச்சுக்கிச்சு.. அவ்வளவுதான்.. அழகா இருந்தவங்க அப்படியே கருகி போயிட்டாங்க.. ஒரே நாள்ல ரெண்டு பேரும் என்னை தனியா விட்டுட்டு போயிட்டாங்க..!! எங்க மாமா ஒருத்தர் இங்க சென்னைல இருந்தாரு.. 'வாம்மா.. நான் உன்னை வளக்குறேன்'னு கூட்டிட்டு வந்தாரு.. ஆனா கூட்டிட்டு வந்த ரெண்டாவது நாளே என்னை ஒரு பொம்பளைட்ட வித்துட்டாரு..!! அந்த பொம்பளை ரொம்ப மோசம்.. அங்க தடி தடியா எருமை மாடு மாதிரி நெறைய ஆளுக வருவாங்க.. அவங்க கூட அசிங்க அசிங்கமா ஏதேதோ என்னை பண்ண சொல்லுவாங்க.. ஒரு வாரம் நான் அழுதுட்டேதான் இருந்தேன்.. உடம்பெல்லாம் ஒரே வலியா இருக்கும்.. அப்போத்தான் அசோக் அங்கிள் அந்த வீட்டுக்கு வந்தாரா.. ...." தனது வாழ்வில் நடந்த சோகங்களையும், தான் அனுபவித்த வேதனைகளையும் சிரித்த முகத்துடன் தமிழரசி சொல்லிக்கொண்டே இருக்க, அதைக்கேட்ட நந்தினிக்கு மனதை பிசைந்தது. அவளையுமறியாமல் அவளுடைய இதயத்தில் ஈரமும், கண்களில் நீரும் கசிந்தன. 'இத்தனை நாளாய் என்னுடைய சோகத்தை பெரிதாக கருதினேனே.. இந்த சின்ன வயதில் எவ்வளவு கொடிய, கொடூரமான வலிகளை இந்தப்பெண் அனுபவித்திருக்கிறாள்..?' அப்புறம் அசோக் தன்னை மீட்டது.. தத்தடுத்துக் கொண்டது.. பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தது.. தன்னம்பிக்கை கற்றுக் கொடுத்தது.. எல்லாவற்றையும் தமிழரசி சொல்ல சொல்ல.. நந்தினியின் மனதுக்குள் அசோக் பற்றிய நன்மதிப்பு படிப்படியாய் மேலேருவதை உணர முடிந்தது. 'நல்லவன்தான்.. இரக்க குணம் இன்னும் மாறவில்லை அவனிடம்.. மனிதர்களை மதிக்க தெரிந்திருக்கிறது.. ஒரு அனாதை சிறுமிக்கு வாழ்க்கை தந்திருக்கிறான்..


அவள் மனதில் நம்பிக்கையை ஊட்டி புதுப்பெண்ணாக மாற்றியிருக்கிறான்..' நந்தினி அசோக் பற்றி அவ்வாறு சிந்தித்துக்கொண்டிருக்க, தமிழரசி தன் கதையை சொல்லி முடித்தாள். "ஸோ.. அசோக் அங்கிள்தான் எனக்கு எல்லாமே..!! காட்.. ஃபாதர்.. காட்ஃபாதர்.. எல்லாமே எனக்கு அவர்தான்..!!" சொல்லிவிட்டு தமிழரசி சிரிக்க, "ம்ம்.. குட்.. வெரி குட்.." நந்தினி புன்னகைத்தாள். "என் பக்கத்துல வாங்களேன்.. உங்களுக்கு ஒன்னு சொல்றேன்.." "எ..என்ன..?" "வாங்க சொல்றேன்.." "என்னன்னு சொல்லு.." "உங்களைப்பத்தி ஒரு ரகசியம்.. இந்த ரகசியத்தை யாருமே உங்ககிட்ட இதுவரை சொல்லிருக்க மாட்டாங்க.." "ஹாஹா.. அப்படி என்ன ரகசியம்.. அதுவும் என்னைப் பத்தி..??"
"காதை கொடுங்க.." நந்தினி தமிழரசியை நெருங்கி, தன் காதை அவள் பக்கமாக திருப்ப, தமிழரசி அவள் காதுக்குள் கிசிகிசுப்பான குரலில் சொன்னாள். "நீங்க ரொம்ப ரொம்ப லக்கி.. எங்க அசோக் அங்கிளை கட்டிக்க.. நீங்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்..!!" சொல்லிவிட்டு தமிழரசி கன்னத்தில் குழி விழ அழகாக சிரித்தாள். நந்தினி உதட்டில் ஒரு புன்னகையுடன் குழி விழுந்த அந்த கன்னங்கள் ரெண்டையும் பிடித்துக் கொண்டாள். தனது நெற்றியால் தமிழரசியின் நெற்றியில் இதமாக இடித்துக் கொண்டாள்.


No comments:

Post a Comment