Thursday, December 25, 2014

கண்ணாமூச்சி ரே ரே - தமிழில் ஒரு திரில் தொடர் - பாகம் - 26


"ஆதிரா.. ஆதிரா..!!" யாரோ கன்னத்தில் பட்பட்டென்று தட்ட, "ஹ்ஹ்ஹ்ஹா...!!" ஆதிரா படக்கென கண்விழித்தாள். கண்விழித்ததுமே.. கன்னத்தை தட்டியது யாரென்றுகூட கவனியாமல்.. விருட்டென எழுந்து அமர்ந்து.. இறுகிப்போயிருந்த தனது கைவிரல்களைத்தான் முதலில் பார்த்தாள்..!!

அவளது கைக்குள் அந்த சிவப்பு மலரை பார்த்ததும்தான் அவளிடம் ஒரு அமைதி.. கண்ணிமைகள் மூடி மெலிதாக ஒரு நிம்மதி மூச்சை வெளிப்படுத்தினாள்..!!

 உடனே தன் முகத்தை திருப்பி பக்கவாட்டில் பார்த்தாள்.. நிலவொளியில் தெரிந்த கணவனின் முகத்தை பார்த்ததும் அவளது மனதுக்குள் அப்படியொரு ஆனந்தம்.. கன்னத்தில் குழிவிழ சிரித்த சிபியை பார்த்து, கண்களில் கண்ணீர் முட்ட புன்னகைத்தாள்..!!
 "அத்தான்ன்னன்..!!" என்று அவனை ஆரத்தழுவிக் கொண்டாள்.

 "ஆதிராஆஆ..!!" அவனும் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்.

 "உ..உங்களுக்கு.. உங்களுக்கு ஒன்னும் இல்லையே..??" அவனது உடம்பை அன்பாக, கவலையாக தடவிப் பார்த்தாள் ஆதிரா.

 "எனக்கு ஒன்னுல்ல ஆதிரா.. ஐ'ம் ஆல்ரைட்..!!"

 
"தா..தாமிரா.. தாமிரா உங்களை.." பேச்சு வராமல் தடுமாறினாள் ஆதிரா.

 "தெரியும் ஆதிரா..!!"

 "நான் ரொம்ப பயந்துட்டேன் அத்தான்.. அப்படியே துடிச்சுப் போயிட்டேன்..!!"

 "ஹ்ம்ம்.. புரியுது..!! அவ உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திட்டாளா..??"

 "இ..இல்லத்தான்.. அப்படிலாம் இல்ல..!!" தடுமாற்றமாக சொன்ன ஆதிரா.. இப்போது அந்த இடத்தை சுற்றி முற்றி பார்த்தாள்..!! அத்தனை நேரம் நடந்த அமளி துமளிக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல்.. அமைதியாக உறைந்திருந்தது சிங்கமலை சிகரம்..!! மிருகங்களையோ பறவைகளையோ காணவில்லை.. தாமிராவின் ஆவியுருவும் பார்வைக்கு தென்படவில்லை..!!

குழலாற்றின் சப்தம் மட்டும் சன்னமாக 'ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்' என்று கேட்டுக்கொண்டிருந்தது..!! ஆதிரா இப்போது சிபியிடம் திரும்பினாள்.. அவனது முகத்தை ஏறிட்டு பரிதாபமான குரலில் சொன்னாள்..!!

 "எ..என் தங்கச்சி.. என் தங்கச்சியை.. நா..நான்.. நான்தான் கொன்னுருக்கேன் அத்தான்.."

 "ப்ச் ப்ச்.. ஆதிரா.. என்ன பேச்சு இது..??" 

"ஆ..ஆமாம் அத்தான்.. அது தெரியாம.."

 "அதுலாம் ஒன்னுல்ல.. இப்படிலாம் எப்போவும் பேசாத..!! தாமிரா இறந்தது ஒரு ஆக்சிடன்ட்.. அதுல உன் தப்பு எதுவும் இல்ல..!!"

 "இல்லத்தான்.. நான்தான் அவளை.."

 "சொல்றேன்ல.. இனிமே அந்தப்பேச்சு வேணாம்.. புரியுதா..??" ஆதிராவை இழுத்து அணைத்து.. அவளது நெற்றியில் இதமாக முத்தமிட்டான் சிபி..!!

அவளும் இப்போது கணவனை அப்படியே இறுக்கிக் கொண்டாள்.. அவனது அணைப்பு தந்த கதகதப்புக்குள் சுகமாக அடங்கிப்போனாள்..!! ஒரு சில வினாடிகளுக்கு அப்புறம்.. தயங்கி தயங்கி அவனை அழைத்தாள்..!!

 "அ..அத்தான்..!!"

 "ம்ம்..??"

 "நான் ஒன்னு கேக்கட்டுமா..??"

 "கேளுடா..!!"

 "நெ..நெஜமாவே.. நெஜமாவே என்னை நீங்க லவ் பண்றீங்களா..?? என் மேல உங்களுக்கு கோவமே இல்லையா..??" ஆதிரா பரிதாபமாக கேட்க, அவளது முகத்தை கூர்மையாக பார்த்தான் சிபி.

 "லூசு.. என்ன கேள்வி இது..?? உன்மேல எனக்கு எந்த வருத்தமும் இல்ல.. அப்படிலாம் இருந்திருந்தா உன்னை மேரேஜ் பண்ணிக்க சம்மதிச்சிருப்பனா..?? உன்னை நான் ரொம்ப ரொம்ப ரொம்ப லவ் பண்றேன் ஆதிரா.. என் லைஃப்ல இனிமே எனக்கு எல்லாமே நீதான்.. போதுமா..??"

 "ம்ம்ம்ம்..!!!!!!!!" ஆதிராவுக்கு அழுகை முட்டிக்கொண்டு வர, கணவனை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

 "நீ ரொம்ப நல்ல பொண்ணுடி.. நீ பொண்டாட்டியா கெடைக்க நான் குடுத்து வச்சிருக்கணும்..!! இனிமே இந்தமாதிரிலாம் உனக்கு எப்போவும் சந்தேகம் வரக்கூடாது.. சரியா..??

" "ம்ம்ம்.. சரித்தான்..!!" ஆதிரா அழுகையுடனே சொல்ல, "லூசு..!!" என்றவாறு மீண்டும் அவளது நெற்றியில் முத்தம் பதித்தான் சிபி. அடுத்தநாள் அதிகாலை.. ஆதிரா தங்கள் வீட்டின் மாடியறை ஜன்னலுக்கு முன்பாக நின்றிருந்தாள்.. தூரத்தில் தெரிந்த எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..!!

அவளுக்கு பின்புறமாக வந்த சிபி.. மனைவியின் தோள்மீது கைபோட்டு அவளை அன்பாக அணைத்துக்கொண்டான்..!! கவனம் சிதறிய ஆதிரா.. தன்னை அணுகியது கணவன்தான் என்று புரிந்ததும்.. மெலிதாக புன்னகைத்தாள்.. அவனது அணைப்புக்குள் வசதியாக அடங்கிப்போனாள்..!!

 சிபி இப்போது அவளது கன்னத்தில் முத்தமிட்டவாறே கேட்டான்..!!

 "ஹ்ம்ம்.. அப்படி என்னத்த இவ்வளவு சீரியஸா பாத்துட்டு இருக்குற..??"

 "என் தங்கச்சி வாழ்ற வீட்டை பாத்துட்டு இருக்கேன்..!!"

 "எது..?? அதுவா.. அந்த சிங்கமலையா..??" சிபி தூரத்தில் தெரிந்த சிங்கமலையை கைநீட்டி கேட்டான்.

 "ம்ம்.. ஆமாம் அத்தான்.. அங்கதான தாமிரா வாழ்றா..??"




"ஹ்ம்ம்..!! அதுசரி.. உன் தங்கச்சி வாழ்ற வீடு இருக்கட்டும்.. நாம வாழப்போற வீட்டுக்கு எப்போ கெளம்புறது..??"

 "ஹ்ஹ.. கெளம்ப வேண்டியதுதான்..!!"

 "அப்போ ரெடியா..??"

 "ட்ரஸ் சேன்ஜ் பண்ணிட்டா ரெடிதான்..!!"

 "ஹாஹா..!!" சிபி சிரித்துக்கொண்டே ஆதிராவை அணைக்க முற்பட.. அதேநேரம் அவனது முழங்கால் அவளது கால்க்காயத்தை இடிக்க.. "ஆஆஆஆ..!!" ஆதிரா வேதனையில் முனகினாள்.

 "என்னாச்சு..??" பதறினான் சிபி.

 "காலு.. இடிச்சுட்டிங்க.. வலிக்குது..!!" வேதனையை மறைத்துக்கொண்டு புன்னகைத்தாள் ஆதிரா.

 "ஓ.. ஸாரி ஸாரி..!!"

 "ச்ச.. பரவாலத்தான்..!!"

 "ம்ம்.. கால்வலின்னு சொன்னதும்தான் ஞாபகம் வருது..!! நான் இல்லாத இந்த ரெண்டுநாளும்.. டேப்ளட்ஸ்லாம் கரெக்டா சாப்டியா..??" கேட்டவன், உடனே நம்பிக்கை இல்லாமல், "சாப்பிட்டுருக்க மாட்டியே..??" என்று கேட்டான்.

 "ம்ஹூம்..!! அதுலாம் சாப்பிடுற நெலமைலயா நான் இருந்தேன்..??" "ஹ்ம்ம்ம்ம்.. ஓகே ஓகே..!! இனிமே எதை மறந்தாலும் மெடிசின்ஸ் மறக்கக்கூடாது.. சரியா..??"

 "சரித்தான்..!!" சிபியே அங்கிருந்து நகர்ந்து சென்று.. அலமாரியில் இருந்த பேக் திறந்து.. மாத்திரைப் பட்டைகளை கிழித்து.. ஆதிராவுக்கான அதிகாலை மருந்தினை எடுத்து வந்தான்.. கூடவே தண்ணீர் ஜாடியும்..!!

 "ம்ம்.. சாப்பிடு..!!" என்று உள்ளங்கையை விரித்தான்.. சின்ன சின்னதாய் ஏழெட்டு மாத்திரைகள்..!! 

"எனக்கு ரொம்பநாளா ஒரு சந்தேகம் அத்தான்..!!"

 "என்ன..??"

 "முன்னாடியே உங்ககிட்ட கேக்கனும்னு நெனைப்பேன்.. ஆனா கேக்கல..!! இப்போ என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கிட்டே கேக்குறேன்..!!"

 "எ..என்னன்னு சொல்லு..!!"

 "கால்ல இருக்குற அந்த சின்ன வெட்டுக்காயத்துக்கா இத்தனை மாத்திரை..??" ஆதிரா கேட்டுவிட்டு புன்னகைக்க, சிபி பட்டென்று அமைதியானான். அவனது அமைதியை பார்த்து அவளே மீண்டும்,

 "காயத்துக்கு எத்தனை மாத்திரை அத்தான்..??" என்று கேட்க,

 "ஒ..ஒன்னு..!!" பதில் சொன்னான் சிபி.

 "மிச்ச மாத்திரைலாம் அந்த மென்ட்டல் இன்ஸ்டிட்யூஷன்ல ப்ரிஸ்க்ரைப் பண்ணினதா..??"

 "ம்ம்..!!" அமைதியாக சொன்ன சிபி, இப்போது மனைவியை ஏறிட்டு பார்த்து, "உ..உனக்கு ஒன்னும் இல்லடா.. இது சும்மா.. டாக்டர்ஸ் சொல்றதுக்காக.. இதுவும் இன்னும் கொஞ்சநாளைக்குத்தான்..!!" என்று தடுமாறினான்.

 "ஹஹா.. பரவாலத்தான்.. எத்தனை வருஷம்னாலும் பரவால.. நீங்க என்கூட இருக்கிங்கல்ள்ல.. எனக்கு அது போதும்..!!" அமர்த்தலாக சொல்லிவிட்டு மாத்திரைகளை விழுங்க ஆரம்பித்தாள் ஆதிரா.. அவளை அன்பும், ஆதரவுமாக அணைத்துக் கொண்டான் சிபி..!!

 வேறு உடைக்கு மாறிய சிபியும் ஆதிராவும்.. ஆளுக்கொரு பேகை தூக்கிக்கொண்டு படியிறங்கி கீழே வந்தார்கள்..!! ஹாலில் அவர்களுக்காக நிறைய பேர் காத்திருந்தனர்.. திரவியம், வனக்கொடி, கதிர், தென்றல் ஒருபுறம்.. முகிலன், நிலவன், அங்கையற்கண்ணி, யாழினி மறுபுறம்..!! எல்லோரிடமும் நின்று சிறிதுநேரம் பேசிவிட்டு.. மேற்கொள்ளப்போகிற பயணத்துக்கு ஆசிவாங்கிவிட்டு.. வீட்டைவிட்டு வெளியே வந்தனர் இருவரும்..!!

 டிக்கியில் பேகை திணிப்பதற்கென சிபி காருக்கு பின்புறம் செல்ல.. ஆதிராதான் முதலில் சென்று கார்க்கதவை திறந்தாள்.. கதவை திறந்ததுமே நாசிக்கருகில் அந்த வாசனை மாற்றத்தை உணர்ந்தாள்.. காரின் உட்புறத்தை குப்பென நிறைந்திருந்தது மகிழம்பூ வாசனை..!!

உடனே ஆதிராவின் கண்களில் ஒரு பரவசம் பிறக்க.. "தாமிரா.." என்று மெலிதாக முனுமுனுத்தாள். கார் முன்சீட்டின் மையமாக வைக்கப்பட்டிருந்த அந்த மோதிரம் இப்போது அவளது பார்வையில் பட்டது.. மெலிதான ஒரு புன்னகையுடனும், சிறு தயக்கத்துடனும் அந்த மோதிரத்தை கையில் எடுத்தாள்..!!

 "என்னாச்சு ஆதிரா..??" அந்தப்பக்கம் காருக்குள் வந்தமர்ந்த சிபி ஆதிராவிடம் கேட்டான்.

 "தா..தாமிரா.. தாமிரா வந்துட்டு போயிருக்கா அத்தான்..!!"

 "என்னது..??"
"அ..அவ.. அவதான் அன்னைக்கு ஆத்துக்குள்ள.. இந்த மோதிரத்தை எங்கிட்ட இருந்து எடுத்துட்டு போனது.. இப்போ அவளே வந்து வச்சுட்டு போயிருக்கா..!!" சொல்லிக்கொண்டே ஆதிரா அந்த மோதிரத்தை கணவனிடம் நீட்ட.. அதைப்பார்த்த சிபிக்கு இப்போது பட்டென முகம் மாறியது..

என்னவென்று சொல்லமுடியாத ஒரு உணர்ச்சி அழுத்தத்துக்கு உட்பட்டவனாய் அந்த மோதிரத்தையே இமைக்காமல் பார்த்தான்..!!

 "என்னாச்சு அத்தான்..??" "ஒ..ஒன்னுல்ல ஆதிரா..!! இ..இது.. இந்த மோதிரம்.. தாமிராவை நான் ப்ரொபோஸ் பண்ணினப்போ அவகிட்ட கொடுத்தது.. அப்போ அதை வாங்கிக்காம விட்டெரிஞ்சுட்டு போய்ட்டா..!!"

 "ஓ..!!"

 "நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் இதை நீ போட்டுக்கணும்னு நான் ஆசைப்பட்டேன்..!!" சொல்லிவிட்டு ஆதிராவின் முகத்தை ஏக்கமாக பார்த்தான் சிபி.. அவனுடைய மனதை புரிந்துகொண்ட ஆதிரா, முகத்தில் ஒரு புன்னகையுடன் அவனுக்கு முன்பாக தனது விரல்களை நீட்டினாள்..!!

உடனடியாக உற்சாகமுற்ற சிபியும் ஆதிராவின் விரலில் அந்த மோதிரத்தை அணிவித்தான்..!! "லவ் யூ ஆதிரா..!!" என்றான் உணர்ச்சிப் பெருக்கோடு. எல்லோரும் வாசலில் நின்று கையசைக்க, கார் மெல்ல கிளம்பியது.. வீட்டை விட்டு வெளியேறி பிரதான சாலையை அடைந்ததும் வேகமெடுத்து விரைந்தது.. அடுத்த பத்து நிமிடங்களில் எல்லாம் அகழியைத்தாண்டி பறந்து கொண்டிருந்தது..!!

சலசலத்து ஓடுகிற குழலாற்றையே பார்த்துக்கொண்டு வந்த ஆதிரா, ஒருவித அயர்ச்சியுடன் காணப்பட்டாள்.. இரண்டு மூன்று நாட்களாக தூக்கமின்மை.. இப்போது சற்று நேரத்துக்கு முன்பாக உட்கொண்ட மாத்திரைகள்.. நீண்ட நாட்களுக்கு பிறகு நெஞ்சில் பரவியிருந்த நிம்மதி.. எல்லாமுமாக சேர்ந்து அவளது இமைகளை மெல்ல செருகச்செய்தன..!!

 "என்னாச்சு ஆதிரா.. ஒரு மாதிரி இருக்குற..??"

 "தூக்கம் வர்ற மாதிரி இருக்கு அத்தான்..!!"

 "ஹஹா.. அவ்ளோதானா.. தூக்கம் வந்தா தூங்க வேண்டியதான..?? தூங்கு ஆதிரா.. எந்தக்கவலையும் இல்லாம கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்கு..!!"

 "ம்ம்.. சரித்தான்..!!" புன்னகையுடன் சொன்ன ஆதிரா, சிபியின் பக்கமாக நகர்ந்தாள்.. அவன்மீது சாய்ந்து தோள்மீது முகத்தை பதித்துக்கொண்டாள்.. கணவன் காரோட்டுவதை பார்த்துக்கொண்டே, கொஞ்சம் கொஞ்சமாய் கண்ணுறங்கிப் போனாள்.. நிம்மதியாக..!!

 (இங்கதான் கதையை முடிக்கலாம்னு நெனச்சேன்.. ஆனா..)

 ஆதிராவுக்கு விழிப்பு வந்தபோது.. சிலவினாடிகள் அவளுக்கு எதுவுமே புரியவில்லை.. எங்கிருக்கிறோம் என்றுகூட அவளது புத்திக்கு விளங்கவில்லை..!!

இமைகளை மெல்ல பிரித்து விழிகளை கசக்கி பார்த்தாள்.. அவள் படுத்திருந்த இடத்தை சுற்றிலும் வெள்ளையாய் பனிமண்டலம்.. அருகில் இருக்கிற பொருட்கள் கூட கண்ணுக்கு புலப்படவில்லை..!! 

"விஷ்ஷ்ஷ்ஷ்க்க்க்..!!!" திடீரென அவளது காதுக்குள் அந்த சப்தம்.. அதைத்தொடர்ந்து அவளது முகத்தில் மிருதுவாய் எதுவோ அறைந்தது..

ஆதிரா திகைத்துப்போய் பார்க்க, அடர்பனிக்குள் அந்த சிவப்புத்துணி படபடத்து மறைந்தது..!!

 "ஹ்ஹக்க்க்..!!" விருட்டென எழுந்து அமர்ந்தாள் ஆதிரா.. மிரட்சியாக பார்த்துக்கொண்டே பனியை விலக்கி மெல்ல நடந்தாள்..!!

நெருக்கமாய் அடர்த்தியாய் வளர்ந்திருந்த மரங்களுக்குள் நடப்பது கொஞ்சம் கொஞ்சமாய் அவளது புத்திக்கு புலப்பட்டது..!! "அத்தான்.. அத்தான்..!!" சிபியை ஒருமுறை அழைத்து பார்த்தாள். சூழ்ந்திருந்த பனிமூட்டம் இப்போது மெல்ல விலக.. அவள் நின்றிருந்த இடத்தில் இருந்து நீளமாக ஓடிய அந்த குறுகலான பாதை தெளிவாக தெரிந்தது.. பாதையின் இருபுறமும் பழுப்புநிற மரங்கள், பச்சைநிற செடிகொடிகள்..!!

பாதை பார்வைக்கு புலப்பட்டதுமே.. ஆதிரா மெல்ல மெல்ல வேகமெடுத்தாள்.. அவளது நடை கொஞ்சம் கொஞ்சமாய் ஓட்டமாக மாறியது..!!
"அத்தான்.. அத்தான்..!!" அப்படியும் இப்படியுமாய் பார்வையை அலைபாயவிட்டு அலறிக்கொண்டே ஓடினாள்..!!

கொஞ்ச தூரம் ஓடியதும் அப்படியே ப்ரேக் போட்டது மாதிரி நின்றாள்.. கண்முன்னே அவள் கண்ட காட்சியை நம்பமுடியாமல் அப்படியே திகைத்துப்போய் பார்த்தாள்..!!

 அவளுக்கு முன்பாக நீளமாகவும், அகலமாகவும் விரிந்து கிடந்தது அந்த நீலக்கடல்.. கடற்கரை மணலை அதிக சப்தமில்லாமல் வந்து, கொஞ்சி கொஞ்சி சென்றுகொண்டிருந்தன கடலலைகள்.. கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்தவகை உயிரினமும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை..!!

ஆளில்லாத் தீவொன்றில் தனித்து விடப்பட்டிருந்தாள் ஆதிரா..!! என்ன நடக்கிறது என்று எதுவும் புரியாமல்.. நுரைநுரையாய் பொங்கி வந்த அலைகளையே ஆதிரா மிரட்சியாக பார்த்துக்கொண்டிருக்க..

அவளது காதோரமாய் அந்தக்குரல் ஒலித்தது.. சற்றே கிசுகிசுப்பாக.. அவளது தங்கை தாமிராவின் குரல்..!!


 "GGGGGame or SSSSShame..??"




கண்ணாமூச்சி ரே ரே - தமிழில் ஒரு திரில் தொடர் - பாகம் - 25


புயலடித்து ஓய்ந்த பூமியென ஆகிப்போயிருந்தது ஆதிராவின் பூப்போன்ற நெஞ்சம்.. சேதாரத்தின் சுவடுகள் ஏராளமாய் காணப்பட்டாலும், அதையும் தாண்டி ஒரு அமைதியையும் அவளால் உணர முடிந்தது..!! மனதில் இருந்த குழப்பங்கள் எல்லாம் இப்போது மறைந்து மங்கிப்போயிருக்க.. இனி செய்வதற்கென்று இருப்பது ஒன்றே ஒன்றுதான் என்பது தெளிவாக அவளுக்கு தெரிந்தது.. அந்த தெளிவுதான் அவளது மனதில் நிலவிய அந்த மயான அமைதிக்கும் காரணம்..!!

 இறந்துபோன தங்கையுடன் இறுதியாய் ஒரு விளையாட்டு விளையாடிப் பார்ப்பதைத் தவிர.. தொலைந்துபோன கணவனை உயிருடன் மீட்பதற்கு வேறேதும் வழியிருப்பதாக அவளுக்கு தோன்றவில்லை.. வேதனையுடன் தங்கையின் அந்த சவாலை ஏற்றிருந்தாள்..!!

என்ன மாதிரியான சவால் என்றெல்லாம் அவளுக்கு புரியவில்லை.. எதுவாயிருந்தாலும் அதை சந்தித்தே தீரவேண்டும் என்று மனதுக்கு மட்டும் வலுவேற்றிக் கொண்டிருந்தாள்..!!

 நிலைகுத்திப்போன பார்வையுடன்.. உயிரும் உணர்வுமற்ற ஜடம் போல.. அசைவேதுமின்றி படுக்கையில் அப்படியே உறைந்துபோய் அமர்ந்திருந்தாள் ஆதிரா..!! அவளது மூளை மட்டும் இன்னொருபக்கம் சுறுசுறுப்பாய் ஏதேதோ யோசித்துக்கொண்டிருக்க.. ஆவியென அலைந்து திரிகிற தாமிராவின் எண்ணத்தினையும், விருப்பத்தையும்.. அவளால் இப்போது ஓரளவுக்கு அனுமானிக்க முடிந்தது..!!




'தாமிராவுக்கு என்மீதும், என் கணவர்மீதும் நிச்சயமாக கோபமிருக்கிறது.. அது நியாயமான கோபம்தான் எனலாம்..!! தனது உயிரை பலிகொடுத்துவிட்டு.. இவர்கள் மட்டும் இன்பம் சுகிக்கிறார்களே என்பது மாதிரியான கோபமாக அது இருக்கலாம்..!!

எனக்கும் அவருக்கும் திருமணமாகி ஒருமாதம்வரை அமைதியாக இருந்தவள்.. அவருடன் நான் முதலுறவு கண்டு புதுவாழ்க்கை தொடங்கிய அன்றே.. கார் மீது காகத்தை ஏவிவிட்டு அந்த கோபத்தை வெளிப்படுத்தி இருக்கலாம்..!!' 'விபத்தை விளைவிப்பது அவளது நோக்கமாக இருந்திருக்காது.. அதேநேரம், விபத்தினால் எனது நினைவுகள் தொலைந்துபோனபோது, என்னுடன் விளையாடிப் பார்க்கலாம் என்றொரு விபரீத எண்ணம் அவளுக்குள் பிறந்திருக்கவேண்டும்..!!

என்னுடன் விளையாடுவதுதான் அவளுக்கு மிகவும் பிடிக்குமே..?? என்னை சீண்டி பார்ப்பதில் அவளுக்கு எப்போதும் ஒரு அலாதி ஆனந்தம்தானே..?? சிறுவயதில் இருந்தே அப்படிப்பட்ட ஒரு குறும்புக்காரத் தங்கைதானே என் தங்கை..?? ஆவியான பிறகும் அந்த விளையாட்டு புத்தி அவளைவிட்டு போகவில்லை போலிருக்கிறது..!!'

 'அந்த விளையாட்டு புத்தியால்தான், அகழி வந்த என்னுடன் இத்தனை நாளாய் கண்ணாமூச்சி ஆடியிருக்கிறாள்.. கண்டுபிடி பார்க்கலாம் என்றொரு கபடநாடக புதிர் விளையாட்டு..!! அந்த மெமரி சிப்பை என் கையில் சிக்கவைத்தது.. அந்த ஆட்டோக்ராஃப் புக்கை எனது கவனத்துக்கு கொண்டுவந்தது.. அவ்வப்போது அவள் நினைவுபடுத்திய அந்த 'கண்ணாமூச்சி ரே ரே'.. மகிழம்பூவின் மயக்கும் வாசனை, மர்மமான கைபேசி அழைப்பு, மாறாத தொலைக்காட்சி அலைவரிசை..!! எல்லாமுமே.. என்னையும், எனது தளர்ந்துபோன மூளையையும் சீண்டிப் பார்க்கிற வகையிலான புதிர் விளையாட்டுக்கள்..!!'

 'குறிஞ்சி பற்றிய ஆராய்ச்சி கட்டுரையை எனது கவனத்துக்கு கொண்டுவருவது கூட.. அவளது முக்கிய நோக்கமாக இருந்திருக்காது..!! அவளுக்கும் அவருக்குமான காதலை எனது நினைவுக்கு கொண்டுவருவதுதான்.. அவளது முழுமுதற் நோக்கமாக இருந்திருக்கும்..!! என் மனதை ஒருகணம் தடுமாற வைத்து, அவளது உயிரிழப்பிற்கு நான் காரணமாகிப்போக, அவளுடைய அந்தக் காதல்தானே மூல முகாந்தரம்..??' 'என்னுடன் இந்தமாதிரி விளையாடுவது அவளுக்கு மிகவும் பிடித்து போயிருக்க வேண்டும்..!!

அதனால்தான்.. அவளது எதிர்பார்ப்புக்கு புறம்பாக நான் அகழியில் இருந்து கிளம்ப எத்தனிக்கையில்.. எனது கணவரை அவள் தூக்கி சென்றிருக்கவேண்டும்..!! அதன்மூலமாக அகழியிலேயே என்னை தங்கிப்போக வைப்பதற்கு.. தனது விளையாட்டை இன்னும் என்னுடன் தொடர்வதற்கு வசதியாக..!!' ஆதிராவுக்கு இப்போது தங்கையின் மீது ஒரு சிறு எரிச்சலும் பிறந்தது.. தன்னை பழிவாங்க சிபியை ஒரு பகடைக்காயாக தாமிரா உபயோகப்படுத்தியதால் பிறந்திருந்த எரிச்சல் அது..!!

 'ஏன் இப்படி செய்தாள்..?? என் மீது கோபம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாமே.. என் உயிரை கூட பறித்திருக்கலாமே..?? என் கணவரை எதற்காக தூக்கி செல்லவேண்டும்..?? அவர் என்ன பாவம் செய்தார்.. என்மீது இரக்கமுற்று எனக்கொரு புதுவாழ்க்கை அமைத்து தந்ததை தவிர..?? என்னை மணந்த பாவத்திற்காக.. அவரது உடலுக்கோ உயிருக்கோ எந்த சேதாரமும் நேர்ந்துவிடக்கூடாது கடவுளே..!!' கணவனின் நிலையை பற்றி நினைக்க நினைக்க.. ஆதிராவுக்கு கண்களில் கண்ணீர் சுரந்து ஓட ஆரம்பித்தது..!!

 பிறகு.. மனதுக்குள் ஒரு தீர்க்கமான முடிவெடுத்தவள்.. கன்னத்தில் வழிந்த கண்ணீர் துளிகளை அழுந்த துடைத்துக் கொண்டாள்..!! 'எது எப்படியோ என் கணவரை இப்போது மீட்டாக வேண்டும்.. அந்த முயற்சியில் எனது உயிரை தொலைத்தாலும்கூட எனக்கு அணுவளவும் கவலையில்லை..!! விளையாடலாம் வாவென்று அழைக்கிறாள்.. என்ன திட்டம் வைத்திருக்கிறாளோ தெரியவில்லை..!!

அவளது திட்டம் எதுவாயினும்.. எனது கணவரை அவளுடைய பிடியில் இருந்து விடுவிப்பதில்தான்.. எனது கவனமும் தீவிரமும் முழுமையாக இருந்திடவேண்டும்..!!’ ‘நான் நினைப்பது நடக்குமா.. என் கணவரை மீட்க முடியுமா.. ஆவியுடன் போட்டியிட்டு வெல்ல முடியுமா என்னால்..?? ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் எனக்கு சாதகமென இருப்பதாக படுகிறது.. தாமிராவுக்கு என்னதான் என்மீது கோபம் இருந்தாலும், அவள் என்னிடம் வைத்திருந்த அன்பு என்னவோ இன்னும் முழுதாக வற்றிப் போகவில்லை என்றே தோன்றுகிறது..!!

தனது சாவுக்கு காரணமாக இருந்திருந்த போதிலும், அக்கா இன்னொரு மிருகத்திடம் சிக்கி சீரழிவதை தாமிரா விரும்பவில்லை.. அந்த மிருகத்திடம் இருந்து என் உயிரையும், மானத்தையும் காப்பாற்றி இருக்கிறாள்..!!’ ‘அப்படியானால்.. அவளுக்கு இன்னும் என்மீது அன்பிருக்கிறது என்றுதானே அர்த்தம்..?? என் கணவரை மீட்கிற முயற்சியில் அது பயன்படும்தானே..?? அவள் என் மீது வைத்திருக்கிற அந்த அன்புதான் எனது துருப்புச்சீட்டு..!!'

 அப்படி ஒரு எண்ணம் தோன்றியதுமே.. ஆதிராவின் மனதுக்குள் அவளையும் அறியாமல்.. தங்கைமீது ஒரு பெருமிதமும், தன்மீது ஒரு சுயவெறுப்பும் ஊற்றாக உருவாகி.. குபுகுபுவென பொங்கிப் பெருக ஆரம்பித்தது..!! 'கொல்ல நினைத்த அக்காவை, ஒரு கொடூர மிருகத்திடம் இருந்து காப்பாற்றி இருக்கிறாளே.. அவளைப்போல ஒரு தங்கை இங்கு யாருக்கேனும் கிடைப்பார்களா..??

அன்பே உருவான தங்கையை, அந்தரத்தில் நழுவவிட்டு ஆற்றுக்குள் வீழச்செய்தேனே.. என்னைப்போல ஒரு இழிபிறவி இவ்வுலகில் வேறாரும் இருப்பார்களா..??' 'சின்னவயதில் இருந்தே சுயநலம் பிடித்த ஒரு அற்பப்பதராய்த்தானே வாழ்ந்து வந்திருக்கிறேன்.. எதுவானாலும் எனக்கே எனக்கென்று பொசுக்கென ஆசைப்பட்டுவிடுவது..!!

உள்ளுக்குள் வளர்ந்துவந்த அந்த சுயநலக்கிருமி, ஒருநாள் விஸ்வரூபம் எடுத்து நின்று.. என்மீது அத்தனை பாசமாயிருந்த எனது தங்கையின் உயிரையே குடித்துவிட்டதே.?? என்னால்தானே.. என் சுயநல புத்தியால்தானே..??’ ‘தாமிரா மட்டுமல்ல.. என்னை சுற்றி இருப்பவர்கள் எல்லாருமே என்மீது அன்பை பொழிந்திருக்கிறார்கள்..!!

அம்மா, அப்பா, அத்தான், திரவியம் அங்கிள், வனக்கொடி அம்மா.. எல்லோருமே நான் செய்த பாவத்தை மன்னித்து, எனக்கொரு புதுவாழ்வை ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள்..!! அதுமட்டுமல்லாமல்.. அந்த விபத்தின் பிறகு.. எனது ஞாபகங்கள் தொலைந்துபோனபிறகு.. எல்லாமும் தெரிந்துகொண்டு இத்தனை நாளாய் எல்லோரும் என்னிடம் நாடகமாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.. என் மீதிருக்கிற அன்பினால், நான் மனம் வாடிப் போய்விடக் கூடாது என்பதற்காக, எல்லாவற்றையும் மறந்துவிட்டு இந்த புதுவாழ்வில் நான் மகிழ்ந்திருப்பதற்காக..!!

எல்லோரும் என்மீது இத்தனை அன்பாயிருந்திருக்க.. நான் மட்டும் ஏன் இப்படி இருந்திருக்கிறேன்..??' நினைக்க நினைக்க ஆதிராவுக்கு இதயம் குமுறி கொந்தளித்தது..!! தனது மனக்குமுறலை அன்றே தணிகைநம்பியிடமும், வனக்கொடியிடமும் கொட்டித் தீர்த்தாள்.. மறந்துபோனவை திரும்பவும் ஞாபகம் வந்துவிட்டதை அவர்களிடம் சென்று சொன்னாள்..!!

அவர்கள் முதலில் அதிர்ந்துதான் போனார்கள்.. ஆரம்பத்தில் ஏதோ பொய் சொல்லி அவளை சமாளிக்க முயன்றார்கள்.. பிறகு, அத்தகைய பொய்யால் எந்த பலனுமில்லை என்பதை புரிந்துகொண்டு, தடுமாற்றத்துடன் உண்மையை ஒப்புக் கொண்டார்கள்..!!
"ஏன்ப்பா இப்படி பண்ணுனிங்க.. ஏன் இத்தனை நாளா எங்கிட்ட இருந்து உண்மையை மறைச்சுட்டிங்க..??" ஆதிரா கண்ணீருடன் கேட்ட கேள்விக்கு.. தணிகைநம்பி தனது கண்ணாடியை கழற்றி கையில் எடுத்தவாறே நிதானமாக பதில் சொன்னார்..!!

 "எல்லாம் உன்னோட நல்லதுக்குத்தான்மா..!! தாமிரா போனதுல இருந்து ஆறுமாசம், ஒருவருஷம்.. நீ என்ன மாதிரி நெலமைல இருந்த, எவ்வளவு கஷ்டப்பட்டன்னு நாங்க கண்கூடா பாத்திருக்குறோம்..!! ஒருவருஷம் கழிச்சு ஓரளவுக்கு நீ பழைய ஆதிராவா மாறியிருந்தப்பதான்.. ஆக்சிடன்ட்ல உனக்கு நடந்ததுலாம் மறந்துபோச்சு..!! அதெல்லாம் திரும்ப உனக்கு ஞாபகப்படுத்தி.. மறுபடியும் ஒரு மோசமான நெலமைக்கு உன்னை தள்ள நாங்க விரும்பலை.. அதான்..!!”

 "ம்ம்..!!"

 “அந்த ஆக்சிடன்ட்ல உனக்கு பழசெல்லாம் மறந்துபோனது.. ஆரம்பத்துல எங்களுக்கு அதிர்ச்சியாத்தான் இருந்துச்சு.. அப்புறந்தான்.. அதுவும் ஒருவகைல நல்லதுக்குன்னு தோணுச்சு..!! அதேநேரம்.. அதெல்லாம் உனக்கு திரும்ப ஞாபகத்துக்கு வந்தா.. நீ எந்த மாதிரி நடந்துப்பியோன்ற பயமும் எங்களுக்கு இருந்துச்சு..!!"

 " பு..புரியுது..!!"

 "உன்னை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்ற அன்னைக்கு.. மைசூர்ல உனக்கு ட்ரீட்மன்ட் குடுத்த அந்த டாக்டர்ட்ட.. நானும், சிபியும் இதைப்பத்தி பேசினோம்மா..!! 'இந்த மாதிரி ஒரு விஷயத்தை மறந்துட்டா.. அதை திரும்ப ஞாபகப் படுத்தலாமா?'ன்னு கேட்டோம்.. அவர் வேணாம்னு சொல்லிட்டாரு..!! ‘அது உனக்கு தெரியாம இருக்குறதே நல்லது, திரும்ப ஞாபகம் வந்தா, பழைய மாதிரி ஆகக்கூட சான்ஸ் இருக்கு’ன்னு சொன்னாரு..!! எங்களுக்கும் வேற வழியில்ல.. மறைச்சுட்டோம்..!!"

"ம்ம்..!!" "

எல்லாம் நல்லபடியாத்தான்மா போயிட்டு இருந்துச்சு.. நீங்க அகழி வர்ற வரைக்கும் எந்த பிரச்சினையும் இல்ல..!! ஹ்ம்ம்ம்ம்ம்.. ஆரம்பத்துலயே சிபிட்ட நான் சொன்னேன்.. 'அகழிக்கு போகவேணாம், அது எனக்கு நல்லதா படல'ன்னு..!! அவன் கேக்கல.. 'அஞ்சுநாள்தான மாமா.. ரொம்ப அடம்புடிக்கிறா.. கூட்டிட்டு போகலன்னா சந்தேகம் வந்துடும்'னு சொல்லி என்னை சமாளிச்சுட்டான்..!!" பேச்சுவாக்கில் தணிகைநம்பி அவ்வாறு சொல்லிவிட, ஆதிரா இப்போது சற்றே அதிர்ந்துபோய் அப்பாவை ஏறிட்டு பார்த்தாள்..

'அப்படியானால், நாங்கள் அகழி வந்தது உங்களுக்கு முன்கூட்டியே தெரியுமா..?' என்பது மாதிரியான ஒரு அதிர்ச்சி பார்வை..!!

அவளது பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்ட தணிகைநம்பியோ, அலட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து பேசினார்..!!

 "ஆமாம்மா.. நீங்க இங்க வந்தது அன்னைக்கே எனக்கு தெரியும்.. சிபி சொல்லிட்டான்..!! நீங்க இங்க வந்ததுல இருந்து.. நான், சிபி, திரவியம், வனக்கொடி நாலு பேரும்.. உன்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு டெயிலி ஃபோன்ல பேசிப்போம்..!!" தணிகைநம்பி சொல்ல சொல்ல, அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஆதிராவிடம் இப்போது பட்டென ஒரு விரக்தி.

 "ஓ..!! எல்லாரும் எல்லாமும் தெரிஞ்சுக்கிட்டேதான் எங்கிட்ட நடிச்சிருக்கிங்க இல்ல..??" 

"சேச்சே.. அப்படி இல்லமா.. உன்கிட்ட நடிக்கனும்னு இல்ல..!!"

 "எனக்குத்தான் எதுவும் தெரியல..!! நானே என் தங்கச்சியை கொன்னுட்டு.. பைத்தியக்காரி மாதிரி.. யாரை யாரையோ சந்தேகப்பட்டுக்கிட்டு.." ஆதிரா சொல்லும்போதே அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வர, ஆதரவாக அவளது தோளை பற்றினாள் வனக்கொடி.

 "இப்படிலாம் பேசாத ஆதிராம்மா..!! நீ செஞ்சது தப்புதான்.. ஆனா.. தப்பு செய்யாத மனுஷங்க இங்க யாரு இருக்கா.. எல்லாருந்தான் தப்பு செய்றோம்..!! நீ வேணும்னே திட்டம் போட்டு எதையும் செய்யல.. ஒருநொடி உனக்கு புத்தி பிசகிப்போய் அப்படி செஞ்சிட்ட.. அது நம்ம தாமிரா உசுருக்கு வெனையா போய்ருச்சு.. அது அவ தலையெழுத்து.. அவ்வளவுதான்..!!”

 "ம்ம்..!!"

 “நீ செஞ்ச தப்பை நெனச்சு நெனச்சு.. உன் உசுரையும் உடம்பையும் உருக்கிக்கிட்டு, ஒருவருஷம் நீ பட்ட கஷ்டமே போதும்மா.. இனிமேலயும் அது வேணாம்.. இன்னொருமுறை அந்த மாதிரி ஒரு நெலமைல உன்னை பாக்குறதுக்கு.. எங்க யாருக்குமே திராணி இல்லம்மா..!!"

 "ம்ம்..!!"

 "ஹ்ம்ம்.. நாம நெனச்சது ஒன்னு, நடக்குறது ஒன்னா என்னன்னவோ ஆய்ப்போச்சு.. இனிமேயும் நீ இங்க இருக்குறது நல்லதில்ல ஆதிராம்மா.. அப்பாவோட ஊருக்கு கெளம்பு..!! சிபித்தம்பி எந்தக்குறையும் இல்லாம நம்மட்ட திரும்ப வரும்னு எல்லாருமா நம்புவோம்.. நீ இங்க இருக்கவேணாம்.. கெளம்பு..!!"

 "இல்லம்மா.. நான் இங்கதான் இருக்கனும்.. நான் மட்டுந்தான் இருக்கனும்.. அப்பத்தான் அவரை காப்பாத்த முடியும்..!!" ஆதிரா அவ்வாறு தீர்க்கமாக சொல்ல, மற்ற இருவரும் அவளை சற்றே திகைப்பாக பார்த்தனர்.

 "எ..என்னம்மா சொல்ற.. எனக்கு புரியல..!!" குழப்பமாய் கேட்டார் தணிகைநம்பி.

 "சொல்றேன்ப்பா..!!" தனக்கு வந்த மர்மமான தொலைபேசி அழைப்பு பற்றியும், அதில் ஒலித்த 'GGGGGame or SSSSShame..??' பற்றியும் அவர்களிடம் கூறினாள்.. அதைத்தொடர்ந்து தன் மனதில் எழுந்த திட்டத்தையும், இறுதியாக எடுத்த முடிவையும் விளக்கி சொன்னாள்.. ஆவியாகிப்போன தங்கையுடன் இறுதியாக ஒரு விளையாட்டு விளையாடிப் பார்க்கப்போகிறேன் என்றாள்..!!

அவள் சொன்னதை கேட்க கேட்க.. தணிகைநம்பியும், வனக்கொடியும் அப்படியே அவளை மிரண்டு போய் பார்த்தார்கள்..!!

 "இ..இல்லம்மா.. இது சரியா வரும்னு எனக்கு தோணல..!! சொல்றதை கேளு.. வா.. நாம இங்க இருந்து கெளம்பிடலாம்..!!" தணிகைநம்பி மகளின் மனதை மாற்ற முயன்றார்.. ஆனால், ஆதிராவோ அவளது முடிவில் மிக உறுதியாக இருந்தாள்..!!

 "நான் வரமாட்டேன்ப்பா.. அவர் இல்லாம இங்க இருந்து நான் கெளம்ப மாட்டேன்..!! நமக்கு வேற வழி இல்ல.. அவர் திரும்ப வேணும்னா இதை நான் செஞ்சுதான் ஆகணும்..!!" உரம் வாய்ந்த குரலில் திடமாக பேசிய ஆதிரா.. தணிகைநம்பியையும், வனக்கொடியையும் தனது திட்டத்துக்கு சம்மதிக்க வைத்தாள்..!!

அவளை எதிர்த்து பேசி சமாளிக்கவும் அவர்களுக்கு வேறு ஏதும் உபாயம் இருக்கவில்லை.. மனதில் ஒருவித கலக்கத்துடனே சம்மதித்து இருந்தார்கள்..!! அவர்களது கலக்கத்தை போக்கும் வகையில் ஆதிராவே அவர்களுக்கு நம்பிக்கையும் ஊட்டினாள்..!! அடுத்த நாள் மாலை.. அகழியின் வானத்தை அடர்ந்த மேகங்கள் சூழ்ந்திருந்தன..!!

எந்தநேரமும் மழை பொத்துக்கொள்ளலாம் என்பதுமாதிரியான ஏகாந்த வானிலை..!! வீசுகிற காற்றிலே ஈரப்பதமும் திசைவேகமும் ஏராளமாய் கூடியிருந்தன.. எதிர்ப்படுகிற மரங்களையும் மனிதர்களையும் சிலுசிலுவென வருடி, எங்கேயோ விரைந்துகொண்டிருந்தது அந்த குளிர்காற்று..!! தணிகைநம்பி அகழியில் இருந்து கிளம்பிக்கொண்டிருந்தார்..!! கதவை திறந்து காருக்குள் ஏறப்போனவர் ஒரு கணம் நின்று.. கவலை வழிகிற கண்களுடன் மகளை ஒருமுறை ஏறிட்டார்..!!

 "எனக்கு என்னவோ ரொம்ப பயமா இருக்கும்மா ஆதிரா.. எதுக்கும் இன்னொரு தடவை நல்லா யோசிம்மா..!!"

 "இனி யோசிக்கிறதுக்கு எதுவும் இல்லப்பா.. இது ஒன்னுதான் வழி..!! நீங்க எதுவும் கவலைப்படாதீங்க.. எல்லாம் நல்லபடியா நடக்கும்.. உங்க மாப்ளையோட நான் மைசூருக்கு திரும்ப வரத்தான் போறேன்..!! இப்போ தைரியமா கெளம்புங்க..!!"

 "ஹ்ஹ்ம்ம்ம்ம்...!!!!!!" நீளமாக ஒரு பெருமூச்சை உதிர்த்த தணிகைநம்பி, காரில் ஏறி கதவை சாத்திக்கொண்டார்.. இஞ்சின் ஒரு கனைப்புடன் ஸ்டார்ட் ஆகிக்கொள்ள, வண்டி மெல்ல நகர ஆரம்பித்தது..!! கையசைத்து அவரை வழி அனுப்பி வைத்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள் ஆதிரா..

சமையலறைக்குள் இருந்து வெளிப்பட்ட வனக்கொடியிடம்.. "நீங்களும் கெளம்புங்கம்மா..!!" என்றாள்.

 "நா..நான் மட்டுமாவது கூட இருக்கேனே ஆதிராம்மா.. ஒத்தைல உன்னை விட்டுட்டு போக எனக்கு 'திக்கு திக்கு'ன்னு இருக்குது..!!"

 "ப்ச்.. புரியாம பேசாதிங்கம்மா.. நான் மட்டும் இருந்தாத்தான் அவ வருவா.. நாம நெனச்சதும் நடக்கும்..!!"

 "பு..புரியுதும்மா.. ஆனா.."

 "என்ன ஆனா..??"

 "உனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்குது கண்ணு..!!" குரல்முழுக்க கவலையுடன் வனக்கொடி அவ்வாறு சொல்ல, ஆதிராவின் உதட்டில் ஒரு விரக்திப் புன்னகை..!!

 "ஹ்ஹ.. அவ என் தங்கச்சிம்மா.. என்மேல உயிரையே வச்சிருந்த என் குட்டித்தங்கச்சி..!! அவ என்னை என்ன பண்ணிடுவா..?? எனக்கு ஒன்னும் ஆகாது.. நீங்க கெளம்புங்க..!!" சொல்லும்போதே ஆதிராவுக்கு கண்களில் முணுக்கென்று கண்ணீர் பூத்தது.. வனக்கொடியும் புடவைத்தலைப்பால் வாயைப்பொத்தி, துக்கத்தை கட்டுப்படுத்திக்கொள்ள முயன்றாள்..!!

 வனக்கொடியும் சிறிது நேரத்தில் கிளம்பிவிட.. அத்தனை பெரிய, பிரம்மாண்டமான வீட்டில் ஆதிரா மட்டும் இப்போது தனித்து விடப்பட்டிருந்தாள்..!! இதுவரை தாமிராவுடன் அவள் விளையாடிய 'Game or Shame' விளையாட்டுக்கள் அனைத்துமே.. அவர்கள் இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட விளையாட்டுக்கள்.. அக்கா தங்கைக்கு இடையே அந்த மாதிரி ஒரு வழக்கம் இருப்பதே அவர்களது வீட்டில் யாருக்கும் தெரியாது..!!

நேற்று இரவு கைபேசியில் 'Game or Shame' என்று குரல் ஒலித்ததுமே.. ஆதிரா முதலில் முடிவு செய்தது இதுதான்.. தாமிராவை சந்திக்க இந்தமாதிரி தனித்திருப்பது மிக மிக அவசியம் என்று கருதினாள்.. அதனால்த்தான் இப்போது வனக்கொடியையும், தணிகைநம்பியையும் வலுக்கட்டாயாமாக அனுப்பிவைத்துவிட்டு அவள்மட்டும் தனித்திருக்கிறாள்..!! வனக்கொடி சென்றபிறகு குளியலறைக்குள் புகுந்துகொண்ட ஆதிரா.. கொட்டுகிற ஷவருக்கு அடியில், சிலைபோல நெடுநேரம் நின்றிருந்தாள்..!!

டைல்ஸ் பதிக்கப்பட்ட பக்கவாட்டு சுவற்றில் இரண்டு கைகளையும் அழுத்தமாக ஊன்றி.. கூந்தல் நனைத்து முகத்தில் வழிகிற நீர்க்கோடுகளுடன், தனது அடுத்தகட்ட நடவடிக்கைகளை பற்றிய தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்..!! குளித்துமுடித்து வெளியே வந்தபோது, மேற்குவானம் செந்நிறமாகிப் போயிருந்தது.. சூரிய வெளிச்சம் வற்றிப்போயிருக்க, இருள் கவிழ ஆரம்பித்திருந்தது..!!

 தனது அறைக்கு திரும்பி வேறு உடை மாற்றிக்கொண்டாள் ஆதிரா.. மிக மிருதுவான, உடலை உறுத்தாத ஒரு உடை..!! அவளது பார்வை எங்கோ நிலைகுத்திப் போயிருக்க.. அவளது புத்தி முழுதும் ஒரே விஷயத்தை பற்றி கூர்மையாக சிந்தித்துக் கொண்டிருக்க.. அவளது ஒரு கை மட்டும் அனிச்சையாக சீப்புகொண்டு கூந்தல் வாரியது, சிக்கெடுத்து முடிச்சிட்டது.. கழுத்து, காது, மூக்கு அணிந்திருந்த ஆபரணங்களை எல்லாம் கழற்றி எடுத்து, மேஜையில் வைத்தது..!!

 ஆதிராவின் மனநிலை ஒருவித அழுத்தத்துக்கு உட்பட்டிருக்க.. அவளுடைய பார்வைக்குள் ஒருசில மாயபிம்பங்கள் ஆங்காங்கே தோன்றின..!! மிக நிதானமாக அவள் படியிறங்கி கீழே வரும்போது.. பக்கவாட்டில் அவளுடன் நடந்துவந்தாள் அவளது கொள்ளுப்பாட்டி.. முகத்தை திருப்பி ஆதிராவை ஒரு அமானுஷ்யப் பார்வை பார்த்தவாறே சொன்னாள்..!! "நாம பயப்பட பயப்படத்தான்டி பேய்க்கு பலம்.. எதுத்து நின்னமுன்னா எந்த பேயா இருந்தாலும் பணிஞ்சுதான் ஆகணும்..!!

அப்படி எதுத்து நின்னுதான் உன் தாத்தனை நான் மீட்டுக் கொண்டாந்தேன்.. நீயும் அந்தமாதிரி புடிவாதமா நின்னு உன் புருஷனை மீட்டுக்க ஆதிரா..!! பயத்தை விடு.. பயந்தான் பேயை விட பெரிய சனியன்..!!" "ம்ம்.. சரி பாட்டி.. பயப்படல..!!" மாயபிம்பத்துக்கு பதில் சொல்லிக்கொண்டே படியிறங்கினாள் ஆதிரா. வீட்டுக்கு வெளியே இப்போது ச்சோவென்று மழைகொட்டிக் கொண்டிருந்தது.. பளிச் பளிச்சென்று அடிக்கடி மின்னல் கீற்றுகள்.. திடும் திடுமென்று அவ்வப்போது இடிமுழக்கங்கள்..!!

காற்றின் வேகமும் பலமாக இருக்க.. ஜன்னல் கதவுகள் சடார் சடாரென்று கம்பிகளை அறைந்துகொண்டு கிடந்தன..!! வீட்டின் நுழைவாயிலை மட்டும் விட்டுவிட்டு, மற்ற கதவுகளையும் ஜன்னல்களையும் ஒவ்வொன்றாக அடைத்து தாழிட்டாள் ஆதிரா..!! படக் படக்கென்று அடித்துக்கொண்ட ஒரு ஜன்னல் கதவை, இழுத்து அடைக்க அவளது கையை வெளியே நீட்டியபோது.. ஜன்னலுக்கு வெகுஅருகே, கொட்டுகிற மழையில் நனைந்தவாறு நின்றிருந்தார் அந்த மாந்திரிகவாதி.. முகம் முழுவதும் கொசகொசவென்று தாடி மீசையுடன்..!!

இவளது கண்களை அப்படியே கூர்மையாக உற்றுப்பார்த்தவாறு கேட்டார்..!! "ஆதிரா.. நல்ல பேர்.. கண்ணகிக்கு நிகரான கற்புக்கரசி.. புருஷன் உசுரை காப்பாத்த தீயில பாஞ்சவ.. சரியா..??" "ச..சரிதான் சாமி..!!" "காப்பாத்திடுவியா உன் புருஷனை..??" "காப்பாத்திடுவேன்.. என் உயிரை கொடுத்தாவது அவர் உயிரை காப்பாத்திடுவேன்..!!" "ஹாஹாஹாஹாஹா..!!!!" அமானுஷ்யமாக ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு, அவர் பட்டென மறைந்துபோனார்.. அந்த ஜன்னல்கதவை அறைந்து சாத்திவிட்டு, தீர்க்கமான ஒரு பார்வையுடன் திரும்பினாள் ஆதிரா..!!

 நடந்துசென்று.. வீட்டுக்கு மின்சாரம் பகிர்ந்தளிக்கிற மெயின் ஸ்விட்சை படக்கென கீழிழுத்தாள்..!! வீடே இப்போது சட்டென ஒரு அடர்இருளில் மூழ்கிப் போனது.. பிரதான நுழைவாயிலில் மட்டும் மசமசப்பாய் ஒரு வெளிச்சம்..!! குண்டூசி விழுந்தால்கூட அதன் ஓசை கேட்குமாறு அப்படியொரு நிசப்தம் இப்போது வீட்டுக்குள்..!!

அந்த நிசப்தத்தை கிழித்துக்கொண்டு.. "ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...!!!!!!!" என்று மேஜை இழுபடுகிற சப்தம்..!! ஓரமாய் கிடந்த ஒரு மரமேஜையை ஹாலின் மையத்துக்கு நகர்த்தினாள் ஆதிரா..!! மிகவும் கனமான மேஜை.. நகர்த்துவதற்கு கடினமாக இருந்தது.. பற்களால் உதட்டை அழுந்த கடித்துக்கொண்டு இழுத்தாள்..!! இப்போது மேஜையின் இன்னொரு பக்கம் செம்பியனின் மாய பிம்பம்.. அந்தப்பக்கம் இருந்து மேஜையை தள்ளி இவளுக்கு உதவுவது போலொரு தோற்றம்..!! அவ்வாறு தள்ளிக்கொண்டே மூச்சிரைப்பான குரலில் சொன்னார்..!!

 "ஆ..ஆவிகளை நாம தேடிப்போறது ரொம்ப கஷ்டம் ஆதிரா.. அ..அதுங்கள நம்மளத்தேடி வரவைக்கிறதுதான் ஈஸியான வழி..!!"

 "ஆமாம் அங்கிள்.. அதைத்தான் இப்போ பண்ணப்போறேன்..!!"

 "அவளை வர வை.. விளையாண்டு பாரு.. உன் புருஷன் உனக்கு கெடைக்கிறானான்னு பாக்கலாம்..!!"

 "கண்டிப்பா கெடைப்பாரு..!!"

 "கெடைச்சா நல்லதுதான்..!! ஹ்ஹ்ம்ம்ம்.. ஆ..ஆனா ஒன்னு மட்டும் நல்லா ஞாபகம் வச்சுக்க ஆதிரா.. மனுஷங்களோட மனநிலைமை, குணாதிசயம், நியாயதர்மம்லாம்.. ஆவிகளுக்கு பொருந்தாது..!! பேய்ங்க எந்த நேரத்துல எதை நெனைக்கும், என்ன பண்ணும்னு.. நம்மால உறுதியா சொல்ல முடியாது.. அவகிட்ட ஜாக்கிரதையா நடந்துக்க..!!"

 "ம்ம்.. புரியுது அங்கிள்.. பாத்துக்குறேன்..!!"

 "ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...!!!!!!!"
இல்லாத செம்பியனின் உதவியோடு, இழுத்துப் போட்டாள் மரமேஜையை..!! இருட்டாக இருந்த வீட்டுக்குள் ஆங்காங்கே மெழுகுவர்த்திகள் ஏற்றி வைத்தாள்..!! தாமிராவுக்கு சொந்தமான சில பொருட்களை மேஜைமீது பரப்பினாள்.. நாற்காலி இழுத்துப்போட்டு வசதியாக அமர்ந்துகொண்டாள்..!! சாம்பிராணி கொளுத்தி அதனை புகைய வைத்தாள்.. அதன்மீது அந்த க்ரிஸ்டல் பவ்லை கவிழ்த்து வைத்தாள்..!!

 கண்களை மெலிதாக மூடிக்கொண்டு.. அந்த க்ரிஸ்டல் பவ்லின் இருபுறமும் கைகளை வைத்துக் கொண்டாள்..!! சிலவினாடிகள் எடுத்துக்கொண்டு.. அலைபாய்கிற மனதை ஒருமுகப்படுத்தி ஒற்றைப்புள்ளியில் குவித்தாள்..!! தங்கையை சந்திக்கிற உத்வேகத்துடன்.. மனதுக்குள்ளேயே அவளது பெயரை திரும்ப திரும்ப சொல்லி அழைத்தாள்..!!

 'தாமிராஆஆ.. தாமிராஆஆ.. தாமிராஆஆ.. தாமிராஆஆ..!!!!' இப்போது இமைகளை மெல்ல பிரித்தாள்.. பவ்லுக்குள் கசிகிற புகையையே மிக உன்னிப்பாக உற்று நோக்கினாள்..!! வெளியே மழையின் சடசட சப்தம்.. அவ்வப்போது திடுமென்ற இடியோசை.. வீட்டுக்குள் மட்டும் ஒரு அசாத்திய அமைதி..!! அந்த அமைதியுடனே ஆதிரா சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள்..!!

நொடிகள் கரைந்தன.. நிமிடங்கள் ஆகின.. அந்த நிமிடங்களும் கொஞ்சம் கொஞ்சமாய் நழுவிச் சென்றுகொண்டிருக்க.. ஆதிராவிடம் மட்டும் எந்த அசைவுமில்லை.. அந்த பவ்லுக்குள் நிறைகிற புகையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்..!! வெளிப்புற குளிரையும் மீறி.. அவளது முகத்தில் இப்போது மெலிதாக வியர்வை முத்துக்கள் துளிர்க்க ஆரம்பித்திருந்தன..!!

 மிகவும் விஸ்தாரமான அந்த பழங்கால வீட்டின் மையத்தில்.. க்ரிஸ்டல் பவ்ல் கவிழ்க்கப்பட்ட மேஜைக்கு முன்பாக ஆதிரா மட்டும் தனியே அமர்ந்திருந்தாள்..!! அவளுக்கு நேர் எதிரே வீட்டின் நுழைவாயில் அகலமாக திறந்து கிடந்தது.. மற்ற கதவுகள் எல்லாம் அடைக்கப்பட்டு வீட்டுக்குள் ஒரு புழுக்கம்..!!

ஆங்காங்கே ஏற்றப்பட்டிருந்த மெழுகுவர்த்திகள் மெலிதான மஞ்சள் வெளிச்சத்தை கசிந்துகொண்டிருந்தன.. அவ்வப்போது வெளிவானத்தில் வெட்டிய மின்னலின் பளீர் வெளிச்சமும், அந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்துடன் சேர்ந்துகொண்டது..!! இப்போது வீட்டுக்குள் திடீரென்று சிலுசிலுவென குளிர்காற்று வீச ஆரம்பித்தது.. ஆதிராவின் தளிர்மேனியை அந்தக்காற்று ஜில்லென வருட, அவளது ஆடையும் கூந்தலும் மெலிதாக தடதடத்தன..!!

வீட்டுக்குள் வீசிய குளிர்காற்று அந்த வாசனையையும் அள்ளி வந்திருந்தது.. கமகமவென அந்த அறையை நிறைத்தது மகிழம்பூ வாசனை..!! வாசனை வந்தவுடனேயே தங்கையின் வருகையையையும் உணர்ந்துகொண்டாள் ஆதிரா.. அவளது இமைகள் அகலமாக விரிந்துகொன்டாலும், அவளது கவனம் முழுவதும் கசிகிற புகையிலேயே நிலைத்திருந்தது..!!

அதேநேரம் அந்த க்ரிஸ்டல் பவ்லிலும் சரேலென வெப்பம் ஏற ஆரம்பித்தது.. ஒரு சில வினாடிகளிலேயே சரசரவென சூடாகிப்போய் அனலடித்து கொதித்தது.. தாங்கமுடியாமல் தகித்தது..!!

ஆதிராவின் உள்ளங்கை பொசுங்க ஆரம்பிக்க.. அதை அவள் பொருட்படுத்தவில்லை.. அந்த பவ்லில் இருந்து கையை விலக்கிக் கொள்ளவில்லை..!! உதடுகளை மட்டும் அழுந்த கடித்தவாறு.. வேதனை பொறுத்துக் கொண்டாள்..!!

 "ச்ச்சிலீர்ர்ர்ர்ர்ர்..!!" வெப்பத்தை தாங்கமுடியாமல் வெடித்து சிதறியது அந்த க்ரிஸ்டல். "ஆஆஆஆஆஆஆஆ..!!" அதிர்ந்துபோய் அலறி விருட்டென எழுந்தாள் ஆதிரா.




அவள் அமர்ந்திருந்த நாற்காலி கீழே சரிந்து தடதடவென ஓசையெழுப்ப.. அதைத்தொடர்ந்து வீட்டுக்குள் மீண்டும் அந்த அடர்த்தியான நிசப்தம்..!! பதற்றத்தில் இருந்த ஆதிராவுக்கு மூச்சிரைத்துக் கொண்டது.. அவளது மார்புகள் சர்சர்ரென மேலும் கீழும் ஏறி இறங்கின..!!

அகலமாய் விரித்து வைத்த விழிகளுடன்.. அந்த அறைக்குள் பார்வையை மெலிதாக சுழற்றி.. "தா..தாமிரா.. தா..தாமிரா.." என்று தடுமாற்றமாக அழைத்தாள். அதேநொடியில்.. வெளியே திடுமென்று ஒரு இடியோசை.. அதைத்தொடர்ந்து நுழைவாயிலில் பளீரென்று ஒரு மின்னல் வெளிச்சம்..!!

அந்த வெளிச்சத்தின் பின்னணியில் ஒரு கருப்புநிற பிம்பம்.. சின்னதாக.. ஏதோ ஒரு பறவை.. இவளை நோக்கி பறந்து வருவது போல.. ஏதோ ஒரு பறவை அல்ல.. ஒரு காகம்.. தனது சிறகை படபடவென அசைத்து அசைத்து, இவளை நோக்கி விர்ர்ர்ரென விரைந்து வந்தது..

தனது கூரிய அலகுகளை விரித்து இவளது முகத்தை கொத்திக் குதறுவது போல.. "ஆஆஆஆஆ...!!!!!" கடைசி நொடியில் சுதாரித்துக்கொண்ட ஆதிரா தனது முகத்தையும், உடலையும் முறுக்கி ஒரு திருப்பு திருப்ப.. காகத்தின் ரெக்கை மட்டும் அவளது முகத்தை சத்தென்று அறைய.. கால்கள் பிண்ணிக்கொள்ள தடுமாறிப்போய் தரையில் வீழ்ந்தாள்..!!

பறந்து வந்த காகம், ஒரு வெண்கல சிலை மீது சென்று அமைதியாக அமர்ந்துகொண்டது.. ஆதிராவோ அதிர்ச்சி விலகாமல் அப்படியே கிடந்தாள்..!! "ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...!!!!!" சன்னமாக ஒரு சப்தம் இப்போது ஆதிராவின் காதில் விழுந்தது.. என்ன சப்தம் என்பது ஆரம்பத்தில் அவளுக்கு புரியவில்லை.. தரையில் கிடந்தவாறே தலையை திருப்பி திருப்பி பார்த்தாள்..

வீட்டுக்குள் எந்த சலனமும் இருக்கவில்லை.. வாசலுக்கு அருகில்தான் ஏதோ ஒரு சலனம்..!! "ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...!!!!!" அந்த சப்தம் கொஞ்சம் கொஞ்சமாய் பெரிதாகிக்கொண்டே போக.. வாசலில் இருந்து ஏதோ ஒன்று.. மிகவும் சின்னதாய்.. ஏதோ வளையம் போல.. இவளை நோக்கி சர்ரென உருண்டு வந்துகொண்டிருந்தது..!!

"ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...!!!!!"

 ஆதிராவின் முகத்துக்கு அருகே வந்ததும் நின்றது.. நின்ற இடத்திலேயே 'க்க்க்கிர்ர்ர்ர்' என்று சுழன்றது.. பிறகு, கொஞ்சம் கொஞ்சமாய் அமைதியாகி அடங்கியது..!!

 அது.. அந்த மோதிரம்.. கடந்த காதலர் தினத்தன்று.. கணவனுடன் அவள் புதுவாழ்க்கையை தொடங்கிய அன்று.. காகம் வந்து மோதி கார் விபத்து நேர்ந்த அன்று.. சிபி இவளுக்கு அன்பளிப்பாக அணிவித்த அந்த மோதிரம்.. அகழி வந்த பிறகு திடீரென ஒருநாள் காணாமல் போயிருந்த மோதிரம்..!! 'இ..இது.. இது எப்படி..??' ஆதிராவுக்கு ஓரிரு வினாடிகள் ஒன்றும் புரியவில்லை.. பிறகு அவளது மூளையில் ஒரு பளிச்..!!

அன்றொரு நாள்.. அந்த சிவப்பு அங்கி உருவம் அவளை ஆற்றுக்குள் இழுத்துப்போட்டு.. நீருக்குள் அவளை அழுத்தி நெருக்கி.. அவளது கைகளை பற்றி இழுத்து.. அவளுடைய கைவிரல்களையும் அழுந்தப்பற்றி நெரித்து..!! ஆதிராவுக்கு இப்போது புரிந்துபோனது..

தாமிராதான் அன்று தன்னை ஆற்றுக்குள் இழுத்திருக்க வேண்டும்.. இந்த மோதிரத்தை பறித்து சென்றிருக்க வேண்டும்..!! 'ஆனால் எதற்காக..?? அப்படி என்ன முக்கியத்துவம் இந்த மோதிரத்திற்கு..??' - அது மட்டும் புரியவில்லை. அந்த மோதிரத்தையே திகைப்பாக பார்த்துக்கொண்டிருந்த ஆதிரா.. தனது ஒருகையை மெல்ல நீட்டினாள்..

அந்த மோதிரத்தை கையில் பற்றிக்கொள்ள முயன்றபோது.. "விஷ்ஷ்ஷ்ஷ்க்க்க்க்..!!" என்ற சப்தத்துடன் அந்த மோதிரம் பட்டென காணாமல் போனது.. காற்று வந்து கொத்தாக அள்ளிச்சென்றது போல..!! "ஹ்ஹக்..!!" ஆதிரா திகைத்துப்போய் நிமிர, "ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!!!!!!" முதுகுத்தண்டு சில்லிட்டுப்போவது மாதிரி வீட்டுக்குள் அந்த சிரிப்பொலி. "தாமிராஆஆஆ..!!" தரையில் கிடந்தவாறு அலறினாள் ஆதிரா.

 வீட்டுக்குள் இப்போது மீண்டும் ஒரு பலத்த நிசப்தம்.. ஆதிரா தரையில் இருந்து மெல்ல எழுந்தாள்.. மிரட்சியான முகத்துடன் அறையை ஒருமுறை சுற்றிப் பார்த்தாள்..!! "க்க்காஆ.. க்க்காஆ.. க்க்காஆ..!!!" - காகம் கரைந்தது. அதன் சப்தத்தை கண்டுகொள்ளாமல் ஆதிரா இப்போது மெல்ல அடியெடுத்து வைத்தாள்.. அந்த சிரிப்பொலி சப்தம் வந்த திசையை நோக்கி மெல்ல நகர்ந்தாள்..!! 

"தாமிரா.. தாமிரா..!!" - தங்கையை ஒருமுறை அழைத்தாள். தயங்கி தயங்கி அடிமேல் அடி எடுத்து வைத்து.. ஒரு பத்து அடி தூரம் நகர்ந்திருப்பாள்..!! 

"க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்..... க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்..... க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்.....!!!!!!" அவளுடைய முதுகுப்புறமாக இருந்து திடீரென அந்த சப்தம்..!! ஆதிரா நின்றாள்.. தனது தலையை மெல்ல திருப்பி பார்த்தாள்..!!

ஊஞ்சல்.. உத்தரத்தில் இருந்து தொங்கிய இரட்டை ஊஞ்சல்களில், ஒன்று மட்டும் தனியாக ஆடிக்கொண்டிருந்தது.. ஆளில்லாமல்.. சற்றே வேகமாக.. சர்சர்ரென..!! ஆதிராவின் மனதுக்குள் பட்டென ஒரு ஃப்ளாஷ்பேக்..!! அவள் சிறுமியாக இருந்தபோது.. இதே இடத்தில் நின்று..

அவள் அம்மா பூவள்ளி, "ஊஞ்சல்தான் ஏற்கனவே ஒன்னு இருக்குல்ல.. அப்புறம் எதுக்கு அதேமாதிரி இன்னொன்னு வாங்கிட்டு மாட்டிக்கிட்டு இருக்கீங்க இப்போ..??" என தன் கணவரிடம் கேட்டாள்.

 "அது ஆதிராவுக்கு.. இது தாமிராவுக்கு.. ஆளுக்கொரு ஊஞ்சல்..!! என் பொண்ணுக ரெண்டு பேருக்கும் எந்த விஷயத்துலயும் போட்டின்றதே வரக்கூடாது.. அதான்.. ஹாஹா..!!" சிரிப்புடன் சொன்னார் தணிகைநம்பி. பழைய நினைவுகளில் இருந்து பட்டென மீண்ட ஆதிரா.. ஆளில்லாமல் ஆடுகிற அந்த ஊஞ்சலையே ஒருகணம் மிரட்சியாக பார்த்தாள்..!! பிறகு, மெல்ல அந்த ஊஞ்சலை நோக்கி நகர்ந்தாள்..!!

அவளது மனதுக்குள் ஏற்கனவே மெலிதாக ஒரு கிலி பரவ ஆரம்பித்திருந்தது.. வலுக்கட்டாயமாக ஒரு தைரியத்தை நெஞ்சுக்குள் ஊற்றிக்கொண்டே, ஊஞ்சலை நெருங்கினாள்..!! ஆடாமல் நின்றிருந்த இன்னொரு ஊஞ்சலில் மெல்ல அமர்ந்துகொண்டாள்.. இருகைகளாலும் இரும்புச்சங்கிலியைப் பற்றி, கால்களை உந்தித்தள்ளி தானும் ஊஞ்சலாட ஆரம்பித்தாள்.. பயத்தையும் மீறி அவளது முகத்தில் ஒரு தீர்க்கமும், கூர்மையும்..!!

 அந்த விஸ்தாரமான ஹாலின் மையத்தில் தொங்கிய இரண்டு ஊஞ்சல்களும்.. இப்போது 'சர்ர்ர்ர்.. சர்ர்ர்ர்..' என வேகவேகமாக ஆடிக்கொண்டிருந்தன.. ஒன்று ஆதிராவுடன்.. இன்னொன்று ஆளில்லாமல்..!! தானும் தாமிராவும் சிறுமிகளாக இருந்தபோது.. இதே ஊஞ்சலில் அமர்ந்து, அண்ணாந்து பார்த்து கலகலவென சிரித்தவாறே.. ஜோடியாக ஊஞ்சலாடிய நினைவு ஆதிராவுக்கு இப்போது வந்தது..!!

இருதயத்துக்குள் ஒரு இனம்புரியாத வலி பரவ, அவளது விழிகளில் ஒரு சொட்டு நீர் துளிர்த்தது..!! மனதில் இருந்த வேதனையை வெளியே காட்டிக்கொள்ளாமல்.. வேகமாக ஊஞ்சலாடிக்கொண்டே.. பக்கவாட்டில் திரும்பி அந்த ஆளில்லா ஊஞ்சலை பார்த்து.. இறுக்கமான குரலில் கேட்டாள்..!!

 "எங்கடி வச்சிருக்குற அவரை..??"

 "க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்..... க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்..... க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்.....!!!!!!"

 "சொல்லுடி.. அவரை என்ன பண்ணின..??"

 "க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்..... க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்..... க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்.....!!!!!!"

 "ப்ளீஸ் தாமிரா.. எங்கிட்ட அவரை குடுத்திடு..!!" ஆதிரா கெஞ்சலாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே.. ஆளில்லாமல் ஆடிய அந்த ஊஞ்சல் அப்படியே ப்ரேக் போட்டமாதிரி அந்தரத்தில் நின்றது.. ஆதிரா ஆடிய ஊஞ்சல் மட்டும் இப்போது 'க்க்க்கிர்ர்ர்ர்ர்ர். க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்..' என்று ஓசையெழுப்பிக் கொண்டிருந்தது..!! ஆதிராவும் இப்போது ஊஞ்சலில் இருந்து மெல்ல இறங்கினாள்.. அந்தரத்தில் நின்ற அந்த ஊஞ்சலையே சற்று மிரட்சியாக பார்த்தாள்..!!

 அவள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த ஊஞ்சல் சரசரவென சுழன்றது.. அப்படியே அந்தரத்திலேயே.. இரும்பு சங்கிலிகள் ஒன்றோடொன்று பின்னி முறுக்கிக்கொள்ள.. திடீரென்று அதன் அடிப்பக்க மரப்பலகை ஆதிராவின் முகத்தை நோக்கி சரேலென சுழன்றடித்தது..!!

 "ஆஆஆஆஆஆ..!!" பதறிப்போன ஆதிரா படாரென முகத்தை திருப்பிக்கொண்டாள்.. அரைநொடி தாமதித்திருந்தால் கூட அவளது முகம் பெயர்ந்து போயிருக்கும்..!! முகத்தை திருப்பி காயமுறாமல் தப்பித்த ஆதிரா.. தஸ்புஸ்சென மூச்சிரைத்தாள்..!! அவளது உடலில் ஒருவித வெடவெடப்பு.. அதேநேரம் மனதுக்குள் தங்கையின்மீது சுள்ளென்று ஒரு எரிச்சல்..!!

 "ஏய்.. என்னடி நெனைச்சுட்டு இருக்குற உன் மனசுல..??" என்று ஏதோ ஒரு வெற்றிடத்தை பார்த்து கத்தினாள்.

 "ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!!!!!!" வீட்டுக்குள் மீண்டும் அதே சிரிப்பொலி.. தூரத்தில் திடீரென ஒரு வெளிச்சம்.. சிவப்புத்துணியை போர்த்திக்கொண்டு தாமிரா ஓடுவது தெரிந்தது.. 'ஜல்.. ஜல்.. ஜல்..' என்ற கால்க்கொலுசின் ஓசையோடு..!!

 "நில்லுடி.. நீ எங்க போனாலும் விடமாட்டேன்..!!" ஆதிராவும் கத்திக்கொண்டு அந்த திசையில் ஓடினாள்.. ஐந்தாறு அடி எடுத்து வைப்பதற்குள்ளாகவே தூரத்தில் ஓடிய அந்த உருவம் பட்டென மறைந்துபோனது.. ஒரு பனிப்புகை மாதிரி..!! உடனே ஆதிரா சரக்கென ப்ரேக்கடித்து நின்றாள்.. உருவம் மறைந்துபோன இடத்தையே, மூச்சிரைக்கிற மார்புகளுடன் திகைப்பாக பார்த்தாள்..!!

 "அக்காஆஆஆஆ...!!!!!!!!!!" ஆதிராவுக்கு பின்புறம் இருந்து அந்த அமானுஷ்ய ஓலம்.. அதை கேட்கும்போதே அவளது ரத்த நாளங்களுக்குள் ஜிவ்வென்று ஒரு சிலிர்ப்பு..!!

 "ஹக்க்..!!" மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டு திரும்பி பார்த்தாள்..!! அந்த திசையில் யாரும் இல்லை.. வெண்கல சிலையில் அமர்ந்திருந்த காகம்தான், தனது அலகினால், சிறகின் அடிப்புறத்தை சுரண்டிக்கொண்டிருந்தது..!! தாமிராவின் குரல்மட்டும் இப்போது அந்த திசையில் இருந்து ஒலித்தது..

சற்றே அலறலாக.. ஒருவித ஏளன தொனியுடன்..!! "புடிச்சுடுவியாக்கா என்னை..?? எங்க புடி பாக்கலாம்.. வா வா.. புடி புடி புடி புடி..!! ஹாஹாஹாஹாஹாஹா...!!" பேச்சும் சிரிப்பும் கேட்டுக்கொண்டிருக்கையிலேயே.. இப்போது இன்னொரு திசையில், சற்று தூரமாக அந்த சிவப்பு அங்கி உருவம் தோன்றியது, திடுதிடுவென முதுகுகாட்டி ஓடியது..

 'ஜலீர்.. ஜலீர்.. ஜலீர்..' என்று அதே கொலுசு சப்தம்..!!

 ஆதிரா அந்த திசையில் அடியெடுத்து வைக்க நினைக்கையிலேயே.. உருவம் சட்டென மறைந்து போனது.. மீண்டும் அவளுக்கு பின்னால் இருந்து தாமிராவின் குரல்.. ச

ற்றே அலறலாக..!! "கண்ணாமூச்சி ரே ரே..!!!!!!!!!" 'ரே ரே.. ரே ரே.. ரே ரே..' என்று அந்த பிரம்மாண்ட வீட்டின் சுவர்கள் அனைத்தும், தாமிராவின் குரலை எதிரொலித்தன..!! ஆதிரா மிரண்டு போனாள்.. உடம்புக்குள் ஒரு பயசிலிர்ப்பு சொடுக்கி விடப்பட்டிருக்க.. சப்தம் எதிரொலித்த சுவர்களை எல்லாம் வெடுக் வெடுக்கென திரும்பி பார்த்தாள்..!!

 "கண்டுபுடி ரே ரே..!!!!!!!!!" "ரே ரே.. ரே ரே.. ரே ரே..!!" "ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!!!!!!" தாமிராவின் சிரிப்பு.. தண்டுவடத்தில் ஐஸ் கத்தியை இறக்குவது போலிருந்தது..!!

 "கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபுடி ரே ரே..!!" அவள் தொடர்ந்து பாட.. "ரே ரே.. ரே ரே.. ரே ரே..!!" வீட்டுக்குள் தொடர்ந்து எதிரொலி..!!

 காதுகளுக்குள் ரீங்காரமிட்டு, மூளைக்குள் குடைச்சலை ஏற்படுத்தியது வீட்டுக்குள் ஒலித்த அந்த சப்தம்.. இடையிடையே 'ஹாஹாஹாஹா'வென்று அவளது சிரிப்பொலி.. அதைத்தொடர்ந்து ஆங்காங்கே இருளுக்குள் தோன்றி 'ஜல் ஜல் ஜல்'லென்று கொலுசொலிக்க ஓடினாள்.. ஆதிரா பயந்துபோய் பார்த்துக்கொண்டிருக்கும்போதே படார் படாரென காற்றில் மறைந்து போனாள்..!!

 தங்கையை பிடிக்க அங்குமிங்கும் ஓடிக்களைத்த ஆதிரா.. இப்போது ஓய்ந்துபோய் ஓரிடத்தில் நிலைத்தாள்..!! விபத்தின்போது அவளுக்கு காலில் ஏற்பட்டிருந்த வெட்டுக்காயத்தில் இப்போது ஒரு அதீத வலி.. வின்வின்னென்று உயிர்போனது.. வேதனையுடன் முகத்தை சுருக்கிக்கொண்டாள்..!! தங்கையுடன் போட்டியிட்டு வெல்வது கடினம் என்று அவளுக்கு புரிந்து போனது.. கண்களில் நீர்துளிர்க்க, இருட்டை பார்த்து கெஞ்சலாக கத்தினாள்..!!

 "போதுண்டி.. வெளையாண்டது போதும்.. என்னால முடியல..!! ப்ளீஸ் தாமிரா.. என் முன்னாடி வா.. எனக்கு உன்கிட்ட பேசணும்..!!" ஆதிரா கத்திமுடிக்க, இப்போது வீட்டுக்குள் மீண்டும் ஒரு அடர்த்தியான நிசப்தம் நிலவியது.. தாமிராவின் சிரிப்பொலியும், ஜ்ஜிலீரென்ற கொலுசொலியும் பட்டென நின்று போயிருந்தன..!!

 ஆதிரா அந்த திடீர் அமைதியில் சற்றே குழம்பிப்போனவளாய்.. எதுவும் புரியாமல் வெற்றிடத்தை வெறிக்க வெறிக்க பார்த்தாள்..!! அவள் நின்றிருந்த இடம் கரியப்பியது போல இருட்டாயிருந்தது.. தூரத்தில்தான் மெழுகுவர்த்தியின் மசமச வெளிச்சம்..!! என்னவோ நடக்கப் போகிறது என்று படபடக்கிற இருதயத்துடன் அவள் காத்திருந்தபோதுதான்.. அடர்இருளுக்குள் இருந்து அந்த ஒற்றைக்கண் பார்வைக்கு வந்தது.. திரிதிரியாய் வழிகிற கூந்தல் மயிர்களுக்கு இடையில், ரத்தத்தில் முக்கியெடுத்தது போல செக்கச்சிவப்பாய் காட்சியளித்தது அந்தக்கண்..!!




"ஹ்ஹக்க்க்க்...!!!!" மூச்சை இழுத்துப்பிடித்த ஆதிரா சற்றே அதிர்ந்துபோய் பின்வாங்கினாள்..!!

 இப்போது தாமிராவின் முகம் மெல்ல மெல்ல இருட்டுக்குள் இருந்து வெளிவந்தது.. நீண்டநாளாய் குளிர்நீருக்குள் ஊறிப்போனது போல வெள்ளைவெளேரென வெளிறிப்போயிருந்தது அந்த முகம்..!! முட்டையோட்டின் விரிசல் மாதிரி முகமும் உதடுகளும் பாளம் பாளமாய் வெடித்திருந்தன.. ஆங்காங்கே ஆழமாய் வெட்டுக்காயங்கள்.. அந்த காயங்களில் உறைந்து நிறம் வெளிறியிருந்த ரத்தச்சுவடு.. நெற்றிக்கருகில் வட்டமாய் உட்சென்ற ஒரு ஆழ்துளை..!!

 கண்களின் கருவிழி தவிர்த்து மிச்சமெல்லாம் அடர்சிவப்பு.. அந்தக்கண்கள் பார்த்த பார்வையிலோ அப்படியொரு கோபமும், கோரமும்..!! தாமிராவின் உருவம் முழுத்தெளிவாக தோன்றவில்லை.. அவளைச்சுற்றி ஒரு புகைமண்டலம் சூழ்ந்தமாதிரி மங்கலாக.. கைகால்களும், கூந்தலும் காற்றில் மெலிதாக நெளிவது போல..!!

ஆவியான தங்கையின் முகத்தை ஆதிரா இப்போதுதான் முதன்முதலாக பார்க்கிறாள்.. தாமிராவின் உயிர்பிரிந்தபோது இந்தமாதிரித்தான் அவளது முகம் இருந்திருக்கவேண்டும் என்று தோன்றியது..!! அவளது முகத்தை பார்த்து ஆதிராவின் நெஞ்சுக்குள் பஹீரென்று ஒரு பயம் கிளம்பினாலும்.. அதையும் தாண்டி தங்கைமீது ஒரு பரிதாபமும், தன்மீது ஒரு சுயவெறுப்பும் பிறந்தன..!!

 "ம்ம்ம்ம்ம்... ஸ்ஸ்..சொல்லு..!!!" தாமிராவின் குரலில் ஒரு கரகரப்பு.. அவளது பேச்சை தொடர்ந்து ஒரு ஆவேசமூச்சு.. 'உஸ்ஸ்ஸ்.. உஸ்ஸ்ஸ்.. உஸ்ஸ்ஸ்..' என்று..!! ஆதிராவுக்கு உடலும் கைவிரல்களும் வெடவெடக்க.. உள்ளுக்குள் எழுந்த உணர்வுகளை எல்லாம் அடக்கிக்கொண்டு தைரியமான குரலில் தங்கையிடம் பேச ஆரம்பித்தாள்..!!

 "எ..என் புருஷனை.. என் புருஷனை எங்கிட்ட குடுத்திடு..!!" "ஹ்ஹ.. புருஷனா..?? நான் போட்ட பிச்சைன்னு சொல்லு..!!" தாமிரா கொக்கரித்தாள். "சரி.. பிச்சையாவே இருக்கட்டும்.. போட்ட பிச்சையை திரும்ப பிடுங்குறது பாவம் இல்லையா..??" "ஹாஹாஹா.. பாவம் புண்ணியம் பத்திலாம் பேசக்கூட உனக்கு அருகதை இல்ல..!!" "ஆமாம்.. அருகதை இல்லாதவதான்.. எனக்கே தெரியும்..!!

உன்கிட்ட நான் அதிகாரமா கேட்கல.. கெஞ்சி கேக்குறேன்.. என் புருஷனை விட்டுடு.. அவர் எந்த தப்பும் செய்யல..!! உன் ஆத்திரத்தை தீத்துக்குறதுக்கு என்னை என்னவேனா செஞ்சுக்கோ.. என் உயிரை கூட எடுத்துக்கோ..!! ப்ளீஸ் தாமிரா.. அவரை மட்டும் விட்ரு..!!" பேசப்பேசவே ஆதிராவின் கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் கொட்டியது.. அப்படியே தளர்ந்துபோய்.. கால்களும், உடலும் மடிந்துபோய்.. தரையில் அமர்ந்தாள்.. வாயைப் பொத்திக்கொண்டு விக்கி விக்கி அழுதாள்..!!

 ஒருசில வினாடிகள்.. தனக்குமுன் எந்த சலனமும், தங்கையிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் போக.. மெல்ல தலையை நிமிர்த்தி பார்த்தாள் ஆதிரா..!! தாமிராவின் உருவம் இப்போது மறைந்து போயிருந்தது..!! ஆதிரா உடனே அதிர்ந்துபோய் விருட்டென்று எழுந்து நின்றாள்.. அவளை சூழ்ந்திருந்த அடர் இருளைப் பார்த்து கத்தினாள்..!!

 "தாமிராஆஆஆ.. தாமிராஆஆஆ..!!!!" ஆதிரா கத்திக்கொண்டிருக்கும்போதே.. வீட்டுக்குள் இப்போது தாமிராவின் குரல் கணீரென்று ஒலித்தது.. ஒரு பாடலைப்போல.. ஏற்ற இறக்கத்துடன்..!!

 "ஈரேழு பதினாலு இறகு மயிலாட..."

 "ஆட.. ஆட.. ஆட.. ஆட.." - வீட்டுச்சுவர்கள் அவளது பாடலை அப்படியே உள்வாங்கி எதிரொலித்தன..!!

 "முந்நான்கு பனிரெண்டு முத்து மயிலாட.." - ஆதிரா மிரட்சியான விழிகளுடன் சுவர்களை சுற்றி சுற்றி பார்த்தாள்.

 "ஆட.. ஆட.. ஆட.. ஆட.." 
"வாராத பெண்களெல்லாம் வந்து விளையாட.."
 "ஆட.. ஆட.. ஆட.. ஆட.." "ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!" - நடுக்கம்கொள்ள வைக்கிற மாதிரி தாமிராவின் சிரிப்பொலி.

அதைத்தொடர்ந்து, "GGGGGame or SSSSShame..??" என்று அவளது கொக்கரிப்பு. ஆட்டம் தொடங்கியாயிற்று என்று ஆதிராவுக்கு இப்போது புரிந்துபோனது.. ஆட்டத்தில் வென்றுமுடிக்க வேண்டும் என்று அவசரமாய் தன்மனதை திடப்படுத்திக் கொண்டாள்..

குரல்வந்த திசையைப் பார்த்து பதிலுக்கு அலறினாள்..!!


 "Game...!!!!!!!!!" 

"ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!" ஒருபக்கம் தாமிரா சிரித்துக்கொண்டிருக்க, இன்னொருபக்கம் மூளையை கசக்கிய ஆதிரா ஓரிரு வினாடிகளிலேயே தங்கையின் விடுகதைக்கு விடையை கண்டுபிடித்தாள்.. உடனே பரபரப்பானாள்.. தங்கையும் தானும் முன்பு தங்கிக்கொள்கிற அறைக்கு ஓடினாள்..!!

அறைக்குள் அடுக்கியிருந்த பொருட்களை சரசரவென தரையில் இழுத்துப்போட்டாள்.. எதையோ தேடினாள்..!! அலமாரியின் கப்போர்டை திறக்க.. 'க்க்கீச்ச்ச்..' என்று கத்தியவாறு துள்ளிக்குதித்து வெளியே ஓடியது ஒரு வெள்ளை முயல்..!!

 "ஆஆஆஆஆஆஆஆ...!!" ஆதிராவின் அந்த பயமும் பதற்றமும் ஒற்றை வினாடிதான்.. அவசரமாய் சமாளித்துக்கொண்டு அந்த முயலை கண்டுகொள்ளாமல் கப்போர்டுக்குள் தேடினாள்.. அந்த பல்லாங்குழி பலகையை வெளியே எடுத்தாள்..!! மடித்து வைக்கப்பட்ட பலகையை விரிக்க.. உள்ளே இருந்து நழுவியது அந்த மஞ்சள் காகிதம்..!!

தாமிரா இறந்த அன்று, ஆதிரா காட்டுக்குள் கசக்கியெறிந்த அதே காகிதம்.. 'நீ எனக்கு வேணுண்டா' என்று தாமிரா கிறுக்கி வைத்திருந்த அந்த காகிதத்தில், இப்போது வேறேதோ கிறுக்கி வைக்கப்பட்டிருந்தது.. புதையல் வேட்டையில் அடுத்த பொருளை கண்டறிவதற்கான குறிப்பு..!!

 அவசரமாய் அதை வாசித்த ஆதிரா.. நெற்றியை சுருக்கி சிறிது யோசித்து.. பிறகு சற்றே முகம் பிரகாசமாகி.. "கண்ணாடி..!!" என்று முனுமுனுத்தாள்.. அந்த அறையில் இருந்து விர்ரென கிளம்பினாள்.. கிளம்பியவள் என்ன நினைத்தாளோ.. சட்டென நின்றாள்.. மேஜை ட்ராவை இழுத்து, அந்த டார்ச்லைட்டை கையில் எடுத்துக் கொண்டாள்..!!

அறையை விட்டு வெளிப்பட.. தாமிராவின் குரல் வீட்டுக்குள் எங்கெங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது..!! 

"கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபுடி ரே ரே..!!" "ரே ரே.. ரே ரே.. ரே ரே..!!" ஹாலுக்குள் பிரவேசித்தவள் பக்கென ஒருகணம் அதிர்ந்துபோனாள்..

'ஹக்க்க்' என்று திகைத்துப்போய் நெஞ்சை அழுத்தி பிடித்துக்கொண்டாள்..!! வீட்டுக்குள் இப்போது ஆங்காங்கே வீட்டு விலங்குகளும், காட்டு விலங்குகளும்..!! வெளியே ஓடிவந்த அந்த வெள்ளை முயல்.. அங்குமிங்கும் தவ்விக்கொண்டிருந்த சில அணில்கள்.. நாரைகள், கொக்குகள்.. கருப்புத் தோலும், சிவப்பு கண்களுமாய் பல்லிளித்த ஒரு பூனை.. சோபாவில் நின்று எச்சில் வடித்துக்கொண்டிருந்த ஒரு ஓநாய்.. உத்தரத்து சங்கிலியில் உடலை முறுக்கிக்கொண்டு, தலையை உயர்த்தி நாக்கு நீட்டிய மலைப்பாம்பு.. மேஜையில் படுத்து வாய்பிளந்து கொண்டிருந்த ஒரு காட்டுப்புலி..
இன்னும் இன்னும்..

 "ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!" - தாமிராவின் கேலிக் கெக்கலிப்பு. மிருகங்களை பார்த்து ஒருகணம் மிரண்டுபோன ஆதிரா.. மனதுக்குள் அந்த எண்ணம் தோன்றியதும், படக்கென ஒரு தைரியம் பெற்றாள்..!!

 'இவையெல்லாம் தாமிராவின் சீண்டலே தவிர பயப்பட எதுவுமில்லை.. அவளுக்கு என்னுடன் விளையாடவேண்டும்.. அத்தனை சீக்கிரமாய் என் உயிரை பறித்துவிடமாட்டாள்..!!'

 தைரியமுற்ற ஆதிரா தனது தேடுதலை தீவிரப்படுத்தினாள்.. அந்த வீட்டில் இருந்த அத்தனை கண்ணாடிகளிலும் டார்ச் அடித்து பார்த்தாள்.. எந்தக்குறிப்பும் கிடைக்கவில்லை.. மாடிப்படியேறி மேலே ஓடினாள்.. அவளது தலைக்குமேல் விர்ரென்று பறந்தன இரண்டு நாரைகள்..!!

பின்னணியில் தாமிராவின் கேலிக்குரல்..!!

 "கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபுடி ரே ரே..!!"
 "ரே ரே.. ரே ரே.. ரே ரே..!!" தங்கள் அறையின் முகம் பார்க்கும் கண்ணாடியை பார்த்து ஏமாந்துபோய் நின்றாள்.. பிறகு திடீரென ஒரு ஞாபகம் வர, அறையைவிட்டு வெளியே ஓடிவந்தாள்.. பரபரப்பாய் படியிறங்கினாள்..

பச்சோந்திகள் நெளிந்த ஒரு படியை தாவிக்குதித்து தரையில் விழுந்து புரண்டாள்..!! "ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!" வீட்டு தரையோடு அடங்கியிருந்த இருந்த நிலவறைக்கதவை திறந்தாள்..!!

 "ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....!!!!!" மரஏணியில் கால்பதித்து அவள் கீழிறங்க.. பக்கவாட்டில் இறங்கி, அவளை முந்திக்கொண்டு உள்ளே ஓடியது அந்த காட்டுப்புலி..!! யானைத் தந்தங்கள் பதிக்கப்பட்ட அந்த ஓவல் ஷேப் நிலைக்கண்ணாடியில் டார்ச் வெளிச்சத்தை தெளித்தாள்.. தனக்கு அருகே நின்று, 'க்க்கர்ர்ர்.. க்க்கர்ர்ர்..' என உறுமிக்கொண்டிருக்கிற காட்டுப்புலியை கண்டுகொள்ளாமல், தூசுபடிந்த கண்ணாடியின் பரப்பில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை வாசித்தாள்..!!

 "வெள்ளையாம் வெள்.." அவள் வாசித்துக் கொண்டிருக்கும்போதே, அறைக்குள அலறலாக ஒலித்தது தாமிராவின் பாடல்.

 "வெள்ளையாம் வெள்ளைக்கொடம்..
 தரையில விழுந்தா சல்லிக்கொடம்..!!!
ஹாஹாஹாஹா..!!" விடுகதையின் விடையை சட்டென கண்டுபிடித்த ஆதிரா.. மரஏணி நோக்கி ஓடினாள்..

நிலவறையில் இருந்து வெளிப்பட்டாள்.. கதவுக்கருகே நின்று 'ஊஊஊஊஊஊஊ'வென்று ஊளையிட்ட ஓநாய்க்கு.. "ஆஆஆஆஆஆஆ..!!" என ஒரு அலறலை மட்டும் உதிர்த்து உருண்டுவிட்டு, மீண்டும் எழுந்து ஓடினாள்..!!

 அப்புறம் சிறிதுநேரம் ஆதிரா அவ்வாறுதான் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தாள்.. அவ்வப்போது வழியில் குறுக்கிடுகிற மிருகங்களை அலட்சியம் செய்தவாறு.. அலறலாய் வீட்டுக்குள் ஒலிக்கிற தாமிராவின் குரலுக்கு மிரண்டுகொண்டே.. கால்க்காயத்தில் 'சுருக் சுருக்'கென்று கிளம்பிய வலியை கண்டுகொள்ளாமல்..!!

 தங்கையுடன் சிறுவயதில் சிரித்து விளையாடிய புதையல்வேட்டை விளையாட்டு.. இப்போது ஆவியான அவளுடன் அதே விளையாட்டை மீண்டும் மிரட்டலாக விளையாடிக் கொண்டிருந்தாள்.. கணவனை கண்டுபிடித்துவிடுகிற வேகத்துடனும், வெறியுடனும்..!!

 ரெஃப்ரிஜிரேட்டர் திறந்தாள்.. உள்ளே அலைஅலையாய் நெளிந்துகொண்டிருந்தன சில விஷப்பாம்புகள்.. உயிரை கையில் பிடித்துக்கொண்டு அந்த பாம்புகளுக்கு இடையே கையை நீட்டினாள்.. முட்டை அடுக்குகளுக்குள் செருகியிருந்த அந்த ஆட்டோஃக்ராப் புத்தகத்தை வெளியே உருவினாள்..!!

 "வ்வ்வ்வ்விஷ்ஷ்ஷ்க்க்க்க்...!!" சீறிய ஒரு கரியநிற பாம்பின் முகத்தில் கதவை அறைந்து சாத்தினாள்.. ஆட்டோஃக்ராப் புத்தகம் திறந்து அடுத்த குறிப்பை வாசித்தாள்.. வாசித்த அடுத்தநொடியே வீட்டுக்கு வெளியே ஓடினாள்..!!

 கேட்டில் தொங்கிய தபால்பெட்டியை திறந்தாள்.. சடசடவென சிறகடித்து பறந்தது ஒரு சிட்டுக்குருவி.. உள்ளே ஜம்மென்று வீற்றிருந்தது அந்த மாத்ரியோஷ்கா பொம்மை..!!

 பரபரவென அந்த பொம்மையை திருகி திறந்தாள்.. அதனுள்ளே அடுத்த பொருளுக்கான புதிர் நிரம்பிய துண்டுச்சீட்டு..!! விடையை ஓரளவுக்கு அனுமானித்தவாறே வீட்டுக்குள் விரைந்தாள் ஆதிரா..!!

 “மஞ்சத்தே படுத்துவாழ்ந்து மருவப்பார்பார்ப்பாள் தாசியல்ல..
வஞ்சியராய் மேல்புரண்டு வசியஞ்செய்வாள் வேசியல்ல..!!" - வீட்டுக்குள் தாமிராவின் குரல் எல்லா திசைகளிலும் எதிரொலித்துக் கொண்டிருந்தது..!!

 படிக்கட்டுகளில் படபடவென ஏறி தங்கள் அறையை அடைந்தாள்.. படுக்கையில் கிடந்த தலையைணையை எடுத்து வீச.. அந்த புத்தகம் கிடைத்தது.. சிவப்பு எழுத்துக்களில் அதன் தலைப்பு..!!

 "கண்ணாமூச்சி ரே ரே..!!" 

அதன் பின்அட்டையில் இன்னொரு விடுகதை..!!

"வேலியில படர்ந்திருக்கும்.. வெள்ளையா பூ பூக்கும்..
கனியும் செவந்திருக்கும்.. கவிஞருக்கும் கைகொடுக்கும்..!!" ஆதிரா சிலவினாடிகள் நெற்றியை தேய்த்தாள்..

அவளது தோள்ப்பட்டையில் வந்தமர்ந்து 'க்காஆஆ.. க்காஆஆ..'வென காதுக்குள் இரைந்த காகத்தை, வெறுப்புடன் ஒரு அறை அறைந்து விரட்டினாள்..!!

அதேநேரம் விடுகதைக்கு விடையும் அவளது மூளையில் பளிச்சிட.. படியிறங்கி ஹாலுக்கு ஓடினாள்.. அவளது பாதத்தை தொடர்ந்தே நெளிநெளியாய் நெளிந்து தாங்களும் கீழிறங்கின சில பாம்புகள்..!!

 "கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபுடி ரே ரே..!!"
 "ரே ரே.. ரே ரே.. ரே ரே..!!"

 ஹாலில் தாமிராவின் அகங்காரச் சிரிப்பும், அதன் எதிரொலிப்பும்..!!

 "ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....!!!!!" வீட்டுப் பின்புறக்கதவை திறந்தாள் ஆதிரா.. திறந்த வேகத்தில் கும்மிருட்டுக்குள் திடுதிடுவென ஓடினாள்.. வீட்டுக்குள்ளிருந்த விலங்குகளும், பறவைகளுமே இப்போது அவளை மொத்தமாய் பின்தொடர்ந்தன..!!

 வீட்டின் பின்புறத்தில் உயரமாய் வளர்ந்திருந்தது அந்த நாவல்மரம்.. அதனருகே வேலியில் படர்ந்திருந்தது அந்த கோவைப்பழக்கொடி..!! மரத்தை நெருங்கிய ஆதிரா.. அந்த புதருக்குள் கைவிட்டு கிளற..

 "ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..!!" புதருக்குள் இருந்து புற்றீசல் போல வெளிப்பட்டு, சரசரவென பறந்தோடின நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சிகள்.. பலவித வண்ணங்களுடனும், கண்ணைப்பறிக்கும் அழகுடனுமான பட்டாம்பூச்சிகள்.. ஆதிராவின் முகத்தை மோதி, இறகுகளால் வருடிக்கொடுத்து, ஜிவ்வென்று பறந்து சென்றன அத்தனை பட்டம்பூச்சிகளும்..!!

ஒருகணம் திகைத்துப்போன ஆதிரா.. அப்புறம் அந்தப் புதருக்குள் இருந்து கிளம்பிய ஒரு வெளிச்சக்கீற்றை கவனித்தாள்.. கஷ்டப்பட்டு கையை நீட்டி அந்தப்பொருளை வெளியே எடுத்தாள்..!!

 செல்ஃபோன்.. ஆதிராவின் பழைய செல்ஃபோன்.. தாமிராவுடன் குழலாற்றில் தவறிவிழுந்த செல்ஃபோன்..!! ஒளிர்ந்துகொண்டிருந்த அதன் திரையில் பளிச்சிட்ட வாசகம்.. ஆதிராவுக்கு தாமிரா நியமித்த அடுத்த இலக்கிற்கான குறிப்பை வழங்கியது..!!

அதை வாசித்து முடித்த ஆதிரா.. ஒரிருவினாடிகள் நெற்றியை சுருக்கியவாறு அப்படியே அமர்ந்திருந்தாள்.. விடையை தீவிரமாக யோசித்த அவளது மூளைக்குள் ஒரு பொறி தட்டுப்பட..

 "சி..சிங்கம்.. சிங்கம்.." என்று தடுமாற்றமாய் முனுமுனுத்தாள். உடனே தொடர்ந்து, "சிங்கமலை..!!" என்று தைரியமும், நம்பிக்கையுமாய் உரக்க கத்தினாள். ஆதிராவின் தேடுதல்வேட்டை மீண்டும் தீவிரமானது..

சிங்கமலைக்கு கொண்டுசெல்கிற அந்த குறுகலான மலைப்பாதையில் விர்ரென வேகமெடுத்து கிளம்பினாள்.. சுற்றிலும் அடரிருள் சூழ்ந்திருக்க, அதற்கிடையே டார்ச்லைட் வெளிச்சத்துடன் ஓடினாள்..!! அவளுடன் சேர்ந்தே விரைந்தன விலங்குப்படையும், பறவைக்கூட்டமும்..!! அவளது உச்சந்தலைக்கு மேலே காற்றில் மிதந்து மிதந்து நெளிந்து சென்றது தாமிராவின் ஆவியுருவம்..!!

மலைச்சரிவில் நிலவிய மயான அமைதியை கிழித்துக்கொண்டு ஒலித்தது தாமிராவின் சிரிப்பொலி..!!

 "ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!" செருப்பு அணியாத ஆதிராவின் பட்டுப்பாதத்தை குத்திக்கிழித்தன பாதையில் கிடந்த பாறைக்கற்கள்.. கண்ணீர் வழிந்த அவளது தளிர்முகத்தை தடவிக்கீறின வழியில் வளர்ந்திருந்த முட்செடிகள்..!! வெட்டுக்காயத்தின் சுருக் சுருக்கென்ற வலியை, பற்கள் கடித்து பொறுத்துக்கொண்டு.. வேகவேகமாய் மலைச்சாலையில் மேலேறிக் கொண்டிருந்தாள் ஆதிரா..!!

 மழை இப்போது நின்றிருந்தாலும்.. அது விட்டுச்சென்றிருந்த ஈரம் இன்னும் பாதையில் தேங்கியிருந்தது.. நடந்துசென்ற ஆதிராவின் கால்களை வழுக்கச் செய்தது..!!

 "ஆஆஆஆஆஆ..!!" அவ்வப்போது இடறி விழுந்து ஈனஸ்வரத்தில் கத்தினாள். ஒருவழியாக சிங்கமலையின் உச்சியை வந்தடைந்தாள்.. அவளுடன் வந்த மிருகங்களும், பறவைகளும் ஆங்காங்கே நகர்ந்து நின்றுகொண்டன.. தாமிராவின் உருவத்தை இப்போது காணவில்லை.. விலங்குகளுக்கு மத்தியில் தனியாளாய் தவிப்புடன் நின்றிருந்தாள் ஆதிரா..!!

அவளுக்கு மூச்சிரைத்து மார்புகள் ஏறியிறங்கின.. நெஞ்சுக்கூடு காற்றுக்காக ஏங்கி பதறியது..!! 'என்ன செய்வது இப்போது.. இங்கே எதற்கு என்னை அழைத்து வந்திருக்கிறாள்..??' எதுவும் புரியாமல்.. வெண்ணிலாவின் வெளிச்சம் மட்டுமே படர்ந்திருந்த அந்த பிரதேசத்தை வெறிக்க வெறிக்க பார்த்தவாறு நின்றிருந்தாள்..

சற்றே தைரியம் பெற்றவளாய் தங்கையின் பெயரை சொல்லி அழைத்தாள்..!! "தாமிராஆஆ.. தாமிராஆஆ..!!" - அவள் அவ்வாறு அழைத்துக் கொண்டிருக்கும்போதே, "அக்காஆஆஆஆஆ..!!!" - இதயத்தை பிசைவது மாதிரி ஒலித்தது தாமிராவின் ஓலம். பதறிப்போன ஆதிரா, சப்தம் வந்த திசைப்பக்கமாக சற்றே நகர்ந்தாள்.. மலைவிளிம்பை அடைந்து கீழே வெளிச்சத்தை தெளித்தாள்..!!

தாமிராவின் உருவம் இப்போது கண்ணுக்கு புலப்பட்டது.. மகிழம்பூ மரக்கிளைகளுக்குள் பின்னிக்கொண்டு கிடந்தாள் தாமிரா.. உயிர்துறக்கும் தருவாயில் உடன்பிறந்தவளை பார்த்து அழைத்தது போலவே, இப்போதும் இவளைநோக்கி கைநீட்டி பரிதாபமாக அழைத்தாள்..!! 

"அக்காஆஆஆஆஆ..!!!" தங்கையை அந்தநிலையில் பார்க்கவும், அவளது அந்த பரிதாபக்குரலை கேட்கவும்.. ஆதிராவுக்கு உடல் சில்லிட்டுப்போனது, அப்படியே அழுகை பீறிட்டு கிளம்பியது..!!

 கண்களில் இருந்து பொலபொலவென நீர்கொட்ட.. 'ஓ'வென்று அழுது அரற்றியவாறே.. தங்கையை பார்த்து ஏக்கமாக கைநீட்டினாள்..!! "தாமிராஆஆஆ..!!" என்று தவிப்புடன் அழைத்தாள்.

ஆனால் தாமிராவோ, "ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!" என்றொரு கேலிச்சிரிப்பை உதிர்த்துவிட்டு காற்றில் மாயமாய் மறைந்துபோனாள்..!!

கண்ணில் உறைந்துபோன கண்ணீருடன், ஆதிரா மட்டும் இப்போது அந்த மலையுச்சியில் தனித்து நின்றிருந்தாள்..!!

 "தாமிராஆஆ.. தாமிராஆஆ..!! எங்கடி இருக்குற..??" 

"...................................."

 "வெளையாண்டது போதுண்டி.. அவரை எங்க வச்சிருக்குற.. சொல்லு..!!"

 "...................................." ஆதிரா கெஞ்சினாள்..

தாமிராவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.. சுற்றிலும் அடர்த்தியான நிசப்தம்..!! பனி படர்ந்த உயரமான மலைச்சிகரம்.. நிலவு வெளிச்சத்தில் நனைந்திருந்த காட்டுமரங்கள்.. வீசும் காற்றின் 'விஷ்ஷ்ஷ்ஷ்' என்ற ஓசை.. மலையடிவாரத்தில் ஓடுகிற குழலாற்றின் 'சலசலசல' சப்தம்.. அவ்வப்போது வாய்திறந்து கர்ஜித்த காட்டுப்புலி..

கையில் டார்ச்சுடன் ஒற்றையில் நிற்கிற ஆதிரா..!!
 "கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபுடி ரே ரே..!!"

 "ரே ரே.. ரே ரே.. ரே ரே..!!" திடீரென காட்டுமரங்களுக்குள் எதிரொலித்தது தாமிராவின் குரல்.. உடனே ஆதிராவின் மூளைக்குள் ஒரு பளிச்..!!

முன்பொருமுறை அவள் கண்ட கனவில்.. தங்கையுடன் கண்ணாமூச்சி விளையாடி.. இதே சிங்கமலையை வந்தடைந்தது நினைவுக்கு வந்தது..!! 'அப்போது.. இங்கே.. அவளை.. அவளை மட்டுமல்ல அவரையும்..' மனதுக்குள் அந்த எண்ணம் தோன்றியதுமே, மறுபடியும் பரபரப்பானாள் ஆதிரா..

கண்ணில் வழிந்த நீரை துடைத்தவாறு, கையில் டார்ச்சுடன் ஓடினாள்..!! சிங்கமுக சிலையின் பக்கவாட்டு மலைக்கு சென்றாள்.. மலையை குடைந்து அமைக்கப்பட்டிருந்த அந்த குகையை அடைந்தாள்..!! சற்றே குனிந்து பார்த்து, குகைக்குள் டார்ச் அடித்தாள்..!!

 வட்டமாக குவிந்த டார்ச் வெளிச்சத்தில்.. குகைக்குள் படுத்திருந்த சிபி பார்வைக்கு வந்தான்..!! மகிழம்பூக்களால் ஆன மலர்ப்படுக்கையில் மகாராஜாவை போல அவனை கிடத்தியிருந்தாள் தாமிரா.. நீண்டதொரு மயக்கத்தில் அவனை ஆழ்த்தியிருந்தாள் என்று தோன்றியது..!!

கணவனின் முகத்தை பார்த்ததும் ஆதிராவின் மனதுக்குள் அப்படியொரு உன்னதமான சிலிர்ப்பு.. கண்களில் நீர் முட்டியது.. உடலும், உதடுகளும் படபடத்தன.. பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துவிட்டது என்ற திருப்தி பரவ, அப்படியே 'ஓ'வென்று அழவேண்டும் போலிருந்தது அவளுக்கு..!!

 "அத்தான்ன்ன்..!!!" - ஆதிரா அலறிக்கொண்டே சிபியை நோக்கி ஓட, "விஷ்ஷ்ஷ்ஷ்க்க்க்க்..!!!" என்று எங்கிருந்தோ வந்து அவளை இடைமறித்தாள் தாமிரா.

 "ஹாஹாஹாஹாஹாஹா..!!!" என்று கோரமாக ஒரு சிரிப்பு சிரித்தாள். "தாமிராஆஆ..!!" தவிப்பாக சொன்னாள் ஆதிரா.

 "அவ்வளவு ஈசியா அவரை எடுத்துட்டு போக விட்டுடுவனா..?? ஹாஹா..!!" தாமிரா அகங்காரமாக சிரித்தாள்..!!

கழுத்தை முறுக்கி நெளித்து, கண்களை விரித்து செவ்விழிகளை உருட்டி காட்டினாள்.. வாயை அகலமாக திறந்து, கூர்பற்களை கடித்து நெரித்து காட்டினாள்.. 'ஆஆஹ்.. ஆஆஹ்..' என்று ஆதிராவை கடித்துவிடுவது போல பாய்ந்தாள்..

அக்காவை பயமுறுத்தி பதறவைக்க முயன்றாள்..!! ஆதிராவோ முகத்தில் எந்த சலனமும் காட்டாமல் அசையாமல் நின்றிருந்தாள்..!! முன்பு இதே தாமிரா உயிரோடு இருந்தபோது.. தனது போர்வைக்குள் நுழைந்து முகத்தில் டார்ச் அடித்து தன்னை பயமுறுத்தியதெல்லாம்.. ஆதிராவுக்கு இப்போது ஞாபகம் வந்தது.. உடனே அவளது உதட்டில் ஒரு வறண்ட புன்னகை..!!

அப்போதெல்லாம் 'பேய்.. பிசாசு..' என்று பதறித்துடித்த ஆதிரா.. இப்போதோ கொஞ்சம்கூட பயமில்லாமல் விறைப்பாக நின்றிருந்தாள்..!!

 "போதுண்டி.. நிறுத்து.. உன்னை பார்த்து எனக்கு பயமில்ல..!!" என்று துணிச்சலாக சொன்னாள்.

 "பயப்பட மாட்டியா..?? பயப்பட மாட்ட..?? ம்ம்..??" தாமிரா தலையை அப்படியும் இப்படியும் விகாரமாய் அசைத்தவாறு கேட்டாள்.

 "பயப்படமாட்டேன்..!! உன்னை பார்த்து நான் ஏன் பயப்படனும்..?? நீ என் தங்கச்சி.. என்மேல உயிரையே வச்சிருந்த என் குட்டித்தங்கச்சி..!!" ஆதிரா கண்களில் நீர்பனிக்க சொன்னாள்.. அதைக்கேட்டு தாமிராவும் அப்படியே அடங்கிப்போனாள்.. அவளது சீற்றம் வெகுவாக குறைந்து போனது..

'உஷ்ஷ்ஷ்.. உஷ்ஷ்ஷ்..' என்ற பெருமூச்சு மட்டும் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தது..!!

 "வெளையாண்டது போதும் தாமிரா.. அவரை எங்கிட்ட ஒப்படைச்சிடு..!!" ஆதிரா கேட்க, "முடியாது..!!" தாமிரா மறுத்தாள்.

 சற்றே எரிச்சலான ஆதிரா தங்கையின் உருவத்தை மீறி குகைக்குள் செல்ல முயன்றாள்.. அவளால் முடியவில்லை.. பாறையில் மோதியதுபோல பின்புறமாக உந்தித்தள்ளப் பட்டாள்..!!

தாமிரா ஒருவித ஆவேசத்துடன் முன்னோக்கி நகர.. ஆதிரா பின்னோக்கி அடியெடுத்து வைத்தாள்.. இருவரும் இப்போது குகையை விட்டு வெளியே வந்திருந்தனர்..!!

 "ப்ச்.. எங்கிட்ட இருந்து இன்னும் என்னதான் எதிர்பாக்குற..?? நீ வச்ச கேம்லயும் நான் ஜெயிச்சுட்டேன்.. ப்ளீஸ்.. அவரை விட்ரு..!!"

 "கேம் வச்சது அவரை கண்டுபிடிக்கிறதுக்குத்தான்.. கொண்டுபோறதுக்கு இல்ல..!!"

 "எ..என்னது..??"

 "கொண்டுபோறதுக்கு இன்னொரு கேம்..!!"

 "இன்னொரு கேமா..??" தங்கை சொன்னதை கேட்டு ஆதிரா சற்றே கலங்கினாலும்,

 "சரி சொல்லு.. என்ன கேம்..??" என்று உடனடியாய் ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டுகேட்டாள். 

"அதை நீதான் கண்டுபிடிக்கணும்..!!"

 "எ..என்ன சொல்ற.. எனக்கு புரியல..!!"

 "என்ன கேம்ன்றதையே நீதான் கண்டுபிடிக்கணும்..!!" சொல்லிவிட்டு தாமிரா விகாரமாக சிரித்தாள். 

"ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!!!!"

 'என்னடா இது புது குழப்பம்?' என்று ஆதிரா திகைத்துப்போய் நிற்க.. அவளைப்பார்த்து கைகொட்டி கேலியாக சிரித்தாள் தாமிரா..!! கழுத்தை வளைத்து தலையை ஆட்டி.. கையை விரித்து விரல்களை அசைத்து.. பாட்டு பாடினாள்..!! 

"கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபுடி ரே ரே..!!" "ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!!!!" - பாடலுடன் சிரிப்பையும் சேர்த்துக்கொண்டாள். ஆதிராவுக்கு சிலவினாடிகள் எதுவும் புரியவில்லை.. அவஸ்தையாய் அங்குமிங்கும் பார்வையை அலைபாய விட்டாள்..!!

அப்போதுதான்.. பாறையிடுக்கில் நீட்டியிருந்த அந்த சிவப்புநிற மலர் அவளுடைய பார்வையில் பட்டது.. உடனே அவளது மூளைக்குள் பளீரென்று ஒரு மின்னல்.. தங்கை என்ன எதிர்பார்க்கிறாள் என்று இப்போது அவளுக்கு புரிந்து போயிருந்தது..!!

சிரித்துகொண்டிருந்த தாமிராவை பார்த்து பட்டென கேட்டாள்.. இருகைகளையும் முகத்திற்கு முன்பாக விரித்து வைத்தவாறு..!!

 "Game or Shame..??" தனது மேனரிசத்தை அக்காவிடம் பார்த்த தாமிராவுக்கு.. ரத்த விளாறுகளாய் வெடித்திருந்த அவளது உதட்டில் மெலிதாக ஒரு கேலிப்புன்னகை கசிந்தது..!!

 "என்ன கேம்..??" என்று உறுமினாள்.

 "அந்தப் பூ.. அந்தப் பூவை நான் பறிக்கிறேன்.. அப்படி பறிச்சுட்டா.. அவரை நீ விட்டுறணும்..!! சொல்லு.. Game or Shame..??" ஆதிரா கேட்டுவிட்டு காத்திருக்க.. தாமிரா இப்போது அக்காவை ஒரு பெருமிதப் பார்வை பார்த்தாள்..

புன்னகையும் கரகர குரலுமாக சொன்னாள்..!!

 "GGGame..!!!!"

 அடுத்த நிமிடம் ஆதிரா அந்த மலைச்சரிவில் மேலேறிக் கொண்டிருந்தாள்.. நிலவொளியின் மசமசப்பான வெளிச்சம்.. உத்தேசமாக ஆங்காங்கே பிடித்தவாறு மெல்ல மேலே நகர்ந்தாள்.. பிடிமானம் நழுவினால் கீழே சரிந்து உயிரை இழக்க நேரிடும்..!! பாசி படர்ந்திருந்த வழுக்குப் பாறைகள்.. மழைநீரில் வேறு நனைந்து அப்படியே வழவழத்தன.. கையையோ காலையோ உறுதியாக வைக்கமுடியவில்லை.. விழுக் விழுக்கென்று நழுவி ஓடியது..!!

 "ஆஆஆஆஆ..!!" கால் அப்படி நழுவும்போதேல்லாம் ஏதாவது பிடிமானத்தை பிடித்துக்கொண்டு ஆதிரா கத்தினாள்..!! அவளது காலின் வெட்டுக்காயம் வேறு பாறையில் உரசி திகுதிகுவென எரிந்தது.. உயிரே போவது மாதிரி வின்வின்னென வலித்தது..!!

வேதனையை பொறுத்துக்கொண்டு.. உடலை நகர்த்தி நகர்த்தி.. அந்த மலரை நோக்கி மெல்ல மெல்ல மேலேறிக் கொண்டிருந்தாள் ஆதிரா..!! கணவனை மீட்டு செல்வது மட்டுமே அவளது ஒற்றை நோக்கமாக இருந்து.. அவளை மேல்நோக்கி உந்தித் தள்ளியது..!!

 ஆதிரா தனது இலக்கை அடைய அத்தனை எளிதாக அனுமதிக்கவில்லை தாமிரா.. அவளும் அக்காவுடன் சேர்ந்தே மலைச்சரிவில் ஏறினாள்.. அக்காவின் காலுக்கடியில் ஊர்ந்து ஊர்ந்து சென்றாள்.. 'ஊஊ.. ஊஊ..' என்று ஊளையிட்டவாறு அவளை மிரட்ட முயன்றாள்..!!

 "பார்த்து பார்த்து... கீழ விழுந்துடப்போற..!!" என்று கெக்கலித்தவாறே, ஆதிராவின் காலை பிடித்து படக்கென கீழே இழுத்தாள்.

 "ஆஆஆஆஆ..!!!!" பிடிமானம் நழுவிய ஆதிரா, அலறிக்கொண்டே கீழே சரிந்தாள்.. சரசரவென நழுவி வந்தவள், பாறையிடுக்கில் முளைத்திருந்த ஒரு குற்றுச்செடியை பற்றிக்கொண்டாள்..

கால்கள் ரெண்டும் ஆதாரம் சிக்காமல் அலைபாய, அப்படியே அந்தரத்தில் ஊசலாடினாள்..!! இப்போது தாமிரா மெல்ல நகர்ந்து அக்காவின் அருகே சென்றாள்.. அவளது முகத்தை பார்த்து கோரமாக கனைத்தாள்..!!

 "ஹாஹாஹாஹாஹாஹா..!!!!"

 "தாமிராஆஆ.. தாமிராஆஆ ப்ளீஸ்டி..!!" ஆதிரா பதறிப்போய் கெஞ்சினாள்.

 "விழப்போற.. விழப்போற.. பார்த்து பார்த்து..!!

ஹாஹாஹாஹா..!!"

 "ஆஆஆஆஆஆ...!!"

 "விழுந்தா அவ்வளவுதான்.. என்னை மாதிரியே தலை உடைஞ்சு செத்து போயிருவ..!!"

 "ஆஆஆஆஆஆ...!! முடியலடி..!!"

 "அப்போ விழுந்துடு.. ஹாஹா..!! ரெண்டு பேரும் சேர்ந்து விழலாமா.. செத்து செத்து வெளையாடலாமா..?? ஹாஹாஹாஹா..!!"

 "தாமிராஆஆஆஆஆ...!!!!!!!!" வேதனையோடு அலறினாள் ஆதிரா.

 "ஹாஹாஹாஹாஹாஹா..!!!!" விடாமல் சிரித்துக் கொண்டிருந்தாள் தாமிரா.
ஒருவழியாக உடலை எக்கி.. கால்களை இன்னொரு பாறையில் அழுத்தமாக பதித்து.. ஆதிரா மீண்டும் மேல்நோக்கி முன்னேறினாள்..!! தாமிரா அவளை சீண்டிக்கொண்டே வந்தாள்..

அவளது கை,கால்களை இடறி விட்டாள்.. கூந்தல் மயிர்களை பற்றி இழுத்தாள்.. விகாரமாக இளித்து அவளை பயமுறுத்த முயன்றாள்..!!

 "ஆஆஆஆஆஆ...!!" அவளது சீண்டலை பொறுத்துக்கொண்டே ஆதிரா அந்த மலரை நெருங்கினாள்.. கையெட்டும் தூரத்திற்கு அந்த மலர் வந்திருந்தது..!! ஒருகையால் பாறையை பற்றிக்கொண்டு.. இன்னொரு கையை நீட்டினாள்.. கைவிரல்களை விரித்தாள்.. அந்த மலரை பற்றினாள்..!!

அதேநேரத்தில் அவளது கால் ஒன்று விழுக்கென்று வழுக்கிக்கொள்ள.. பிடிமானம் இழந்துபோய், அப்படியே கடகடவென கீழே உருண்டாள்.. அவளது தலை எதிலோ சென்று நச்சென்று மோத.. "ஆஆஆஆஆஆ...!!" வென்று அலறிக்கொண்டே சுயநினைவை இழந்தாள்.



Tuesday, December 23, 2014

கண்ணாமூச்சி ரே ரே - தமிழில் ஒரு திரில் தொடர் - பாகம் - 24


ஆதிராவின் மூளைக்குள் ஒரு அதகள பிரளயமே நடந்துகொண்டிருந்தது.. அதிர்ச்சியை தாங்கமுடியாமல் அவளது இதயம் அப்படியே ஸ்தம்பித்து போயிருந்தது..!! காலையிலிருந்து எதுவுமே சாப்பிடவில்லை அவள்.. அந்த பசிக்கு வராத மயக்கம், தலைச்சுற்றல் எல்லாம், இந்த படங்களைப் பார்த்தபோது அவளுக்கு வந்து சேர்ந்தது..

கண்கள் இருட்டிக்கொண்டு வருவது போலிருக்க, தலையை இரண்டு கைகளாலும் இறுக்கமாக பற்றிக் கொண்டாள்..!! அந்த ஃபோல்டர் முழுவதிலும் சிபியே நிறைந்து வழிந்திருந்தான்.. அவனோடு அருகில் இழைந்துகொண்டு பாதிப்படங்களில் தாமிராவும்..!! அத்தனை படங்களிலுமே அவர்களைத்தவிர இன்னொருவர் முகத்தை காணமுடியவில்லை..!! ஒன்று.. சிபி மட்டும் கன்னத்தில் குழிவிழ சிரிக்கிற தனிப்படங்களாக இருந்தன..

இல்லாவிட்டால்.. அவனும் தாமிராவும் அருகருகே நிற்கிறமாதிரி, க்ரூப் ஃபோட்டோக்களில் இருந்து கத்தரித்து எடுக்கப்பட்ட படங்களாக இருந்தன..!! குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும்போது.. மற்றவர்களுக்கு எந்த உறுத்தலும் வராத மாதிரி.. வெகுஇயல்பாக நகர்ந்து சிபியை அண்டிக்கொண்டு நின்றிருக்கிறாள் என்பது தெளிவாக புரிந்தது..!! அவற்றில் பெரும்பாலான படங்களை ஆதிரா ஏற்கனவே பார்த்திருக்கிறாள்..

ஆனால் இப்போது.. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில்.. பாஸ்வேர்டால் பாதுகாக்கப்பட்டிருக்கிற ஒரு ப்ரைவேட் ஃபோல்டருக்குள்.. அதுவும் மற்றவர்களை கத்தரித்து நீக்கப்பட்ட நிலையில் பார்க்கும்போது.. அந்தப்படங்கள் ஆதிராவுக்குள் ஏற்படுத்திய தாக்கம் வேறுமாதிரியாக இருந்தது.. சிபி மீது தாமிரா கொண்டிருந்த கண்மூடித்தனமான ரகசியக்காதலை, வெளிச்சம் போட்டு காட்டுகிற வகையில் அமைந்திருந்தது..!! அதிர்ச்சியில் விரிந்த விழிகளும், பதற்றத்தில் படபடக்கும் இருதயமுமாக.. ஆதிரா அந்தப்படங்களை பார்த்தாள்..!!

ஒவ்வொன்றாக அவற்றை பார்க்க பார்க்க.. அவளுக்குள் உச்சந்தலையில் யாரோ சுளீர்சுளீரென உளியடிப்பது போலொரு உணர்வு.. அவளது மூளை நரம்புகள் எல்லாம் அரவக்குஞ்சுகளாய் சரசரவென நெளிவது மாதிரியொரு தோற்றம்.. அவளுடைய சிந்தனையோட்டத்தில் அவ்வப்போது பளீர்பளீரென குழப்ப மின்னல்கள் வேறு..!!
மைசூர் அரண்மனைக்கு முன்பாக சிபியும், தாமிராவும் சிரிக்கிற அந்த புகைப்படத்தை பார்க்க நேர்ந்ததும்.. ஆதிராவின் மூளைக்குள் பரவியிருந்த உஷ்ணத்தின் வெப்பநிலை இன்னுமே அதிகரித்தது..!!

மறந்து போயிருந்த ஒரு சம்பவத்தை அவளது ஞாபகஅடுக்குகள் தூசுதட்டி புதுப்பிக்க.. அவளுடைய மண்டையோட்டுக்குள் குடைச்சல் எடுக்க ஆரம்பித்தது..!! அந்த உணர்வு உண்டாக்கிய வலியை தாங்கமுடியாமல்.. ஆதிரா அப்படியே இமைகளை சுருக்கிக் கொண்டாள்.. நெற்றியின் இருபுறமும் கைவிரல்களால் அழுத்திக் கொண்டாள்.. பற்களை கடித்து இறுக்கமாக நெரித்துக் கொண்டாள்..!!

 ஆதிராவின் மூளை அவளது கட்டுப்பாட்டுக்குள் இல்லை.. அவளுக்குள் உருவான வேதனையை பொருட்படுத்தாமல், அந்த மைசூர் புகைப்படத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவத்தை, மங்கிப்போயிருந்த ஞாபக செல்களில் இருந்து மன்றாடி மீட்டெடுத்தது..!! உடனே.. அந்த சம்பவத்துடன் தொடர்புடைய வேறு சில நிகழ்வுகளும், அடுக்கடுக்காய் அவளது நினைவடுக்குக்குகளின் இடுக்கிலிருந்து படக்படக்கென மேலெழுந்தன..!!

 "ஹாஹா.. ஒன்னும் பயப்படாத.. உன் புருஷனை ஒன்னும் நான் வளைச்சுப்போட்ற மாட்டேன்..!!" - கேலிச்சிரிப்புடன் தாமிரா.

 "ச்சீ.. நீயெல்லாம் ஒரு தங்கச்சியாடி..??" - ஆவேசமான குரலில் ஆதிரா.

 "அக்காஆஆஆ..!!!" - இதயத்தை பிசைவது மாதிரி தாமிராவின் பரிதாபக்குரல். ஒரு ஒழுங்கில்லாமல் அங்குமிங்குமாய் துண்டுதுண்டாய் தோன்றிய ஞாபகப்பிசிறுகள்.. பிறகு சரசரவென முழுவடிவம் எடுத்து.. அதனதன் வரிசையில் சென்று கச்சிதமாய் பொருந்திக்கொள்ள.. நடந்தவை மொத்தமும் இப்போது ஆதிராவின் மனதுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் விரிந்தன..!!

 ஒரு வருடத்திற்கு முன்பு..!! குறிஞ்சி பற்றிய ஆராய்ச்சி தொடர்பாக, சிபியின் முதலாளியை சந்தித்து உதவி கேட்பதற்கென, தாமிரா மைசூர் பயணிக்க இருந்ததற்கு முதல்நாள்..!! அகழிவீட்டில் ஆதிராவும் தாமிராவும் பகிர்ந்துகொண்டிருந்த, இரவில் ஒன்றாக படுத்துறங்குகிற அறை..!!

 "அக்காஆஆஆஆ..!!!!" உற்சாகமாக கத்திக்கொண்டே.. 'படார்ர்ர்ர்...' என்று கதவை தள்ளிக்கொண்டு புயலென அறைக்குள் நுழைந்தாள் தாமிரா..!! நழுவியிருந்த மாராப்புடன், இடுப்புப்பகுதி புடவைமடிப்பை இயல்பாக சரி செய்துகொண்டிருந்த ஆதிரா.. சப்தத்திற்கு பதறிப்போனவளாய் முந்தானையை அள்ளி அவசரமாக அவளது மார்புகளை மூடிக்கொண்டாள்..!!

 "ஏய்ய்ய்ய்ய்ய்..!!!!! லூசாடி நீ..?? கதவை தட்டிட்டு வரணும்னு அறிவில்ல..?? பிசாசு..!!" என்று தங்கையிடம் சீறினாள். "ம்க்கும்..!! போதும் போதும்.. நீ பொத்திப் பொத்தி வச்சதுலாம்..!! எல்லாத்தையும் தெறந்து காட்டுறதுக்கு நேரம் வந்துருச்சுடி யக்கோவ்..!!" தாமிராவின் குரலில் கேலி.

 "எ..என்னடி சொல்ற..??" "ம்ம்ம்..?? இந்த கூச்சத்தைலாம் கூடப் பொறந்தவளோட மட்டும் வச்சுக்க, கட்டுன புருஷன்கிட்ட வெக்கப்படாம வெவரமா நடந்துக்கன்னு சொல்றேன்..!!" அக்காவின் கன்னத்தைப் பிடித்தவாறு கொஞ்சலாக சொன்ன தாமிரா, "பொண்ணுக.. வெக்கப்படுற மாதிரி நடிக்க மட்டுந்தான் செய்யணும்.. வெக்கப்படக்கூடாது.. வேலைல கரெக்ட்ட்ட்டா இருக்கணும்..!!" என்றுவிட்டு கண்ணடித்தாள்.




"ஐய்யே.. ச்சீய்...!! வெவஸ்தையே கெடையாதுடி உனக்கு.. அசிங்க அசிங்கமா பேசிக்கிட்டு..!!"

 "ஓஹோ.. அசிங்கமா இது..?? இருக்கட்டும் இருக்கட்டும்.. இன்னும் அஞ்சாறு மாசத்துல வயித்தை தள்ளிக்கிட்டு வந்து நிப்பல.. அப்ப வச்சுக்குறேன் உன்னை..!!"

 "எ..என்னது அஞ்சாறு மாசத்துல..??"

 "ஆமாம்.. அடுத்த மாசம் கல்யாணம்னா.. அஞ்சு மாசத்துக்குள்ள இந்த ஏரியா உனக்கு பெருசாயிடாது..??" அக்காவின் வயிறை சுட்டிக்காட்டி தாமிரா சொல்ல, ஆதிராவிடம் இப்போது ஒருவித எரிச்சல்.

 "லூசு மாதிரி ஏதாவது உளறாதடி..!!"

 "நான் ஒன்னும் உளறல.. உனக்குத்தான் இன்னும் புரியல..!!"
 "எனக்கு என்ன புரியல..??"

 "காலைல நம்ம வீட்டுக்கு ஜோசியர் வந்தாரே.. எதுக்குன்னு நெனைக்கிற..??" "எதுக்கு..??"

 "உன் கல்யாணத்துக்கு நாள் குறிக்க..!!"

 "என்னடி சொல்ற..??"

 "ஆமாக்கா.. உண்மையைத்தான் சொல்லிட்டு இருக்குறேன்..!! நாம நெனச்ச மாதிரியேதான்.. அப்பா மனசுலயும் அத்தானைத்தான் முடிவு பண்ணிருந்திருக்காரு..!! அடுத்த மாசம் அத்தானுக்கும் உனக்கும் கல்யாணம்.. வந்த ஜோசியர் நாள்கூட குறிச்சு குடுத்துட்டு போயிட்டாரு..!!" அத்தனை நேரம் தாமிரா சொன்னதையெல்லாம் வழக்கமான கிண்டல் என்றே நினைத்திருந்த ஆதிராவுக்கு.. இப்போதுதான் அவளது வார்த்தைகளில் இருந்த தீவிரம் மெல்ல மெல்ல உறைத்தது..!!

உடனே அவளுடைய உள்ளத்துக்குள் ஒருவித ஆனந்த பூரிப்பு.. அவளது கட்டுப்பாடு இல்லாமலே அவளுடைய முகம் மெல்ல மெல்ல ஒரு மலர்ச்சிக்கு போனது..!! காதால் கேட்பதை நம்பமுடியாமல், ஒருவித இனிமையான அதிர்ச்சியில், அவளது வார்த்தைகளில் மட்டும் லேசான தடுமாற்றம்..!! "நெ..நெஜமா.. நெஜமாத்தான் சொல்றியா தாமிரா..??"

 "ஆமாண்டி ஆமாம்..!! அம்மா, அப்பா, திரவியம் அங்கிள்லாம் பேசிட்டு இருந்தாங்க.. அதை ஒட்டுக் கேட்டுட்டு வந்துதான் உன்கிட்ட சொல்றேன்..!!" "எ..என்னால.. எனக்கு நம்பவே முடியலடி..!!" "ப்ச்.. இன்னுமா நீ நம்பல.. இதைவிட நான் என்ன சொல்.." ஜன்னல் பக்கமாக எதேச்சையாக பார்த்த தாமிரா, பேசியதை முடிக்காமல் பாதியிலேயே நிறுத்திவிட்டு, "இரு.. வர்றேன்..!!" என்று அறைக்கு வெளியே ஓடினாள்..

ஐந்தாறு நொடிகளிலேயே மீண்டும் அறைக்குள் நுழைந்தாள்.. அவளுடன் இப்போது திரவியமும்..!! அந்தப்பக்கமாக கடந்து சென்றுகொண்டிருந்த அவரது கையை பிடித்து, அறைக்குள் இழுத்து வந்தாள்..!! "வாங்க அங்கிள்.. உள்ள வாங்க.." "ஹாஹா.. என்னம்மா இது..?? எங்க இழுத்துட்டுப்போற என்னை.??" "வாங்க அங்கிள்.. வந்து இவகிட்ட சொல்லுங்க.. நம்ப மாட்டேன்றா..!!"

 "என்ன சொல்லணும்..??"

 "உள்ள நீங்க அப்பாட்ட பேசிட்டு இருந்திங்கல்ல.. அதைப்பத்தி சொல்லுங்க..!!" "ஹாஹா.. ஆதிராவோட கல்யாண விஷயமா..??" "ஆமாம்..!! நான் சொன்னா நம்ப மாட்டேன்றா.. நீங்க சொல்லுங்க..!!" தாமிரா அவ்வாறு சொன்னதும், திரவியம் இப்போது ஆதிராவின் பக்கமாக திரும்பினார். "ஹ்ஹ்ம்ம்ம்..!! உன் தங்கச்சி சொல்றது உண்மைதான்மா.. உன் கல்யாணம் விஷயமாத்தான் பேசிட்டு இருந்தோம்..!! உனக்கும் சிபிக்கும் அடுத்த மாசமே முடிச்சிறலாம்னு முடிவு பண்ணிருக்கோம்..!!" என்றவர்,

 "என்னம்மா.. கரெக்டா சொல்லிட்டனா..??" என்று தாமிராவிடம் கேட்டார். "பெர்ஃபக்ட் அங்கிள்..!!" விரல்களை மடக்கி கண்களை சிமிட்டி சொன்னாள் தாமிரா. "ஹாஹாஹாஹா..!! ம்ம்ம்.. கல்யாணத்தை நாலு மாசம் கழிச்சு வச்சுக்கலாம்னுதான் இருந்தோம்..!! ஜோசியர்தான்.. 'அடுத்த மாசத்துலயே முடிச்சுட்டா நல்லது, இல்லைன்னா ஒரு வருஷம் தள்ளிப் போகும்'னு சொன்னாரு.. யோசிச்சு பாத்து நாங்களும் சரின்னுட்டோம்..!!"

 "ஓ..!!"

 "உனக்கு சம்மதந்தானம்மா ஆதிரா..??" அன்பும் அக்கறையுமாக திரவியம் கேட்ட கேள்விக்கு, ஆனந்த அதிர்ச்சியும், அடங்காத வெட்கமுமாக, ஆதிரா பதில் சொல்லமுடியாமல் உறைந்துபோய் நின்றிருந்தாள்.. தாமிராவே கேலியான குரலில் அவருக்கு பதில் சொன்னாள்..!!

 "ம்க்கும்.. நல்ல கேட்டிங்க போங்க..!! அவளே எப்போ எப்போன்னு இருக்குறா.. நீங்க வேற..!!"

 "ஹாஹாஹாஹாஹாஹா..!!!!" தாமிரா சொன்னதை கேட்டு, திரவியம் பெரிதாக சிரித்தார்.

 "ஏய்.. லூசு..!!!! சும்மா இருடி..!!!!" ஆதிரா தங்கையை முறைத்தாள். "ஹாஹாஹாஹாஹாஹா..!!!!" அவளது கோபம் திரவியத்தின் சிரிப்பை இன்னுமே அதிகமாக்கியது..!! இப்போது திரவியத்திடம் திரும்பிய ஆதிரா, திடீரென பூத்துக்கொண்ட ஒரு வெட்கத்துடன் தடுமாற்றமாக கேட்டாள்..!!

 "அ..அவரு.. அவர்ட்ட கேட்டாச்சா அங்கிள்..??"

 "சிபிட்டயா..??"

 "ம்ம்..!!"

 "அவன்ட்ட இன்னும் பேசலம்மா.. செல்ஃபோன் ரீச் ஆகல.. அவன் ஆபீஸ்க்குத்தான் ஃபோன் பண்ணி கேட்டோம்.. மடிக்கேரி ஃபாரஸ்ட்க்குள்ள இருக்கானாம்.. நாளைக்கு காலைலதான் மைசூர் வர்றதா சொன்னாங்க..!! உன் அப்பாவும் நாளைக்கே அவன்ட்ட பேசிடுறதா சொல்லிட்டு இருந்தான்..!!"

 "ஓ..!!"

 "ஹாஹா.. அதெல்லாம் நெனைச்சு ஏன்மா கவலைப்படுற..?? சிபி என்ன வேணாம்னா சொல்லப்போறன்..?? சின்ன வயசுல இருந்தே அவனை தூக்கி வளர்த்தது உன் அப்பன்.. மாமா மேல அவனுக்கும் அவ்வளவு மரியாதை.. மாமா பொண்ணு வேற நல்லா மகாலட்சுமி மாதிரி இருக்க.. கட்டிக்க கசக்குதா என்ன அவனுக்கு..?? ஹாஹாஹாஹா..!!" கேட்டுவிட்டு திரவியம் சிரிக்க, ஆதிரா நாணத்தில் முகம் சிவந்து போனாள்.

 "ஹையோ.. போங்க அங்கிள்..!!" "ஹாஹாஹாஹா..!!" "அப்படி சொல்லுங்க அங்கிள்.. என் அக்காவை கட்டிக்க அத்தான் ரொம்ப குடுத்து வச்சிருக்கணும்..!!" தாமிரா பெருமிதமாக சொல்லியவாறே ஆதிராவின் தோளில் கைபோட்டு அணைத்துக்கொள்ள, அவளோ தங்கையை இப்போது ஒரு ஸ்நேஹப் பார்வை பார்த்தாள். அதன்பிறகு தணிகைநம்பியும், பூவள்ளியும்.. ஆதிராவிடம் தங்களது முடிவைப்பற்றி முறைப்படி தெரிவித்தனர்..

அவளது சம்மதத்தை கேட்டனர்.. அவளும் திரவியத்திடம் சிந்திய அதே வெட்கப்புன்னகையுடன், தலையசைத்து தனது ஒப்புதலை உணர்த்தினாள்..!! அன்று முழுவதுமே.. ஆதிராவுக்கு நடக்கிற உணர்வென்பது சிறிதளவும் இல்லை.. அந்தரத்தில் மிதப்பது போலவே அங்குமிங்கும் அலைந்து திரிந்தாள்.. அப்படியொரு சந்தோஷ ஊற்று அவளது உள்ளத்துக்குள் சிதறியடித்துக் கொண்டிருந்தது..!!

சிறுவயதில் இருந்தே அவளது மனதுக்குள் வளர்த்துக்கொண்ட ஆசை அது.. அத்தானை மணந்து அவனுக்கு மனைவியாகிவிட வேண்டும் என்பது..!! எண்ணம்போலவே திருமணவாழ்வு அமையப்போவதில்.. எல்லையில்லா ஆனந்தக்கடலில் மூழ்கித்திளைத்தாள்..!!




அன்று இரவு.. அகழி ரயில் நிலையம்.. மைசூருக்கு செல்கிற அந்த ரயில் புறப்பட தயாரான நிலையில் இருந்தது.. யானையின் பிளிறல் போல ஒருமுறை சப்தம் எழுப்பி ஓய்ந்தது..!!

பாட்டிலில் தண்ணீர் நிரப்பிவிட்டு அவசரமாக திரும்பிய ஆதிரா.. எதிர்ப்பட்ட செம்பியன் மீது எதிர்பாராதவிதமாய் முட்டிக் கொண்டாள்..!!

 "ஸாரி அங்கிள்..!!" "ஹாஹா.. பரவாலம்மா..!! ஆமாம்.. என்ன இந்தப்பக்கம்.. ?? ஊருக்கு எங்கயும் போறியா..??" "நான் இல்ல அங்கிள்.. தாமிரா போறா.. நான் சும்மா வழியனுப்ப வந்தேன்..!!" "ஓ.. சரி சரி..!! அப்பா, அம்மால்லாம் நல்லா இருக்காங்களா..??" "ம்ம்.. நல்லா இருக்காங்க அங்கிள்..!!" "சரிம்மா.. சீக்கிரம் போய் தண்ணியைக் குடு.. வண்டி இப்போ கெளம்பிடும்..!!" சொல்லிவிட்டு செம்பியன் நகர, ஆதிரா ரயிலை நோக்கி ஓடினாள்.. ஜன்னலோரமாய் அமர்ந்திருந்த தங்கையிடம் தண்ணீர் பாட்டிலை நீட்டினாள்..!!

அதை வாங்கிக்கொண்ட தாமிரா, மூடி திறந்து தொண்டையை கொஞ்சம் நனைத்துக் கொண்டாள்.. பாட்டிலை மூடி பேகின் பக்கவாட்டில் செருகியவள், ஈரப்பட்ட உதடுகளை துப்பட்டாவால் துடைத்துக்கொள்ள.. ஆதிரா இப்போது அவளிடம் இயல்பாக கேட்டாள்..!! "காலைல எப்போடி ரீச் ஆகும்..??" "அஞ்சு அஞ்சரைக்குலாம் போயிருவான்னு நெனைக்கிறேன்..!!" "அத்தான் வெளியூர்ல இருக்குறதா சொன்னாங்க.. அதுக்குள்ள வந்துடுவாரா..??" 

"வந்துடுவேன்னாரு, ஸ்டேஷன் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்னு சொன்னாரு.. பாக்கலாம்..!!" "ஹ்ம்ம்.. எனக்கு இன்னுமே அவர் என்ன சொல்வாரோன்னு இருக்குடி..!!" "எதுக்கு..?? கல்யாணத்துக்கா..??" "ம்ம்ம்..!!!" ஆதிரா சற்று கவலையாக சொல்ல, அக்காவின் முகத்தையே சில வினாடிகள் கூர்மையாக பார்த்தாள் தாமிரா.. பிறகு, உதட்டில் ஒரு புன்னகையை தவழவிட்டவாறே சொன்னாள்..!!

 "ஒன்னு பண்ணலாமா..??" "என்ன..??" "காலைல நான் மைசூர் போனதும்.. உனக்கு கால் பண்றேன்.. நீயே டைரக்டா அத்தான்ட்ட பேசுறியா..??" "ஏய்ய்ய்..!!! எ..என்ன வெளையாடுறியா..?? ம்ஹூம்.. அ..அதுலாம் ஒன்னும் வேணாம்..!!" "ப்ச்.. ஏன்டி இப்படி வெக்கப்படுற..?? சும்மா பேசு.. 'நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம்னு பேசிக்கிறாங்க.. எனக்கு சம்மதம்.. என்னை கட்டிக்க உங்களுக்கு சம்மதமா..'ன்னு கேளு..!!

அப்படியே.. சின்ன வயசுல இருந்து அவர்ட்ட சொல்லணும் சொல்லணும்னு நெனச்சுட்டு இருக்கியே.. அதையும் சொல்லிடு..!!" "எதை..??" "ம்ம்..?? ஐ லவ் யூ அத்தா.........ன்..!!!" தாமிரா விழிகளை சுழற்றி, குரலை இழுத்து கிண்டலாக சொல்ல, ஆதிராவின் முகத்தில் இன்ஸ்டன்டாய் ஒரு வெட்கச்சிவப்பு.

 "ச்சீய்.. போடி லூசு..!!" "யாரு..?? நானா..?? ஹ்ம்ம்ம்.. இப்பவும் சொல்லலனா வேற எப்ப சொல்லப்போறியாம்..?? டைரக்டா ஃபர்ஸ்ட் நைட்ல போய், ஐ லவ் யூ சொல்லிக்கலாம்னு அம்மணிக்கு ஐடியாவோ..??"

 "ஹையோ.. போடி எனக்கு வெக்கமா இருக்கு.. அப்டிலாம் அவர்ட்ட சொல்ல முடியாது..!!"

 "சரி போ.. நான் சொல்லிக்கிறேன்..!!"

 "ஏய்ய்ய்ய்..!!"

 "ப்ச்.. ஐ லவ் யூ இல்லடி.. கல்யாண மேட்டரை சொல்றேன்னு சொன்னேன்..!! மேட்டரை சொல்லி.. அவர் மனசை தெரிஞ்சுக்கிட்டு.. உடனே உனக்கு கால் பண்ணி சொல்றேன்.. போதுமா..??"

 "இ..இல்ல தாமிரா.. வேணாம்..!! அப்பா சொன்னது ஞாபம் இல்லையா.. அப்பாவே அவர்ட்ட பேசட்டும்.. அதுதான் சரியா இருக்கும்.. நீ வாயை மூடிக்கிட்டு கம்முனு இரு..!! புரியுதா..??"

 "ம்ம்..!!" தாமிரா அமைதியாக அமோதித்துக் கொண்டிருக்கும்போதே, ரயில் பெரிதாக ஒரு அலறலை வெளிப்படுத்தியது.. அதைத்தொடர்ந்து தனது சக்கரக்கால்களால் தண்டவாளத்தில் மெல்ல ஊர்ந்தது..!! "பார்த்து பத்திரமா போடி..!!!" "சரிக்கா..!!" ரயில் கொஞ்சம் கொஞ்சமாய் வேகமெடுத்து.. அவ்வப்போது 'க்கீய்ங்ங்ங்க்.. க்கீய்ங்ங்ங்க்..' என்று கத்தியவாறே.. தண்டவாளத்தில் தடதடவென ஓட ஆரம்பித்தது..!! கண்ணிலிருந்து தங்கையின் முகம் மறையும்வரை.. கையசைத்தவாறே நின்றிருந்தாள் ஆதிரா..!!

 தாமிராவை வழியனுப்பி வைத்துவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தவள், தனது அறைக்குள் சென்று தனிமையில் அடைந்துகொண்டாள்.. கட்டிலில் விழுந்து கல்யாணக் கனவுகளில் மூழ்கிப் போனாள்..!! கண்களின் பார்வை மொத்தமும் அந்தரத்தில் சஞ்சரிக்க.. கைவிரல்களோ கழுத்துச் சங்கிலியை அனிச்சையாக பற்றியிழுக்க.. கவனம் முழுதையும் கற்பனைக்குள் தொலைத்துவிட்டு, காதல் நாயகனுடன் கல்யாணக் கனவு..!!

 செய்தி கேள்விப்பட்டு அகழி வந்திருந்த சிபி, மற்றவர்கள் அறியாமல் ஆதிராவை காதல் பார்வை பார்த்தான்.. இவளை சுவற்றோடு சாய்த்து பிடித்து வைத்திருந்தவன், 'நீ சொல்லலனா என்ன.. நான் சொல்றேன்..!! ஐ லவ் யூ ஆதிரா..!!' என்று இவளது காதோரமாய் கிசுகிசுத்தான்..!!

கழுத்தில் தாலியை கட்டிவிட்டு, இவளுடைய இடுப்புச்சதையை இழுத்தான்.. மணமேடை வலம் வருகையில் விரல்களை அழுத்தி நெரித்தான்.. ஆசீர்வாதத்திற்கென காலில் விழுகையில், அவன்மட்டும் பக்கவாட்டில் திரும்பி இவளைப்பார்த்து கண்சிமிட்டினான்..!!
கையிலிருந்த பாலை வாங்கிக்கொண்டு, கட்டிலில் அமர வைத்தான்.. பால் மீது ஆர்வமில்லாமல், பார்வையால் இவளது அழகை அருந்தினான்..!!

உதட்டோடு உதட்டினை வைத்து ஈரமாய் கொஞ்சம் உரசினான்.. உடையினை கையால் பற்றி மெல்லமாய் சற்று நெகிழ்த்தினான்.. கட்டிலில் சாய்த்து மேலே கவிழ்ந்தான்.. கழுத்துப்பகுதியில் அனல்மூச்சோடு மோதினான்..!! ஆதிரா அன்று இரவு முழுவதும் உறங்கவே இல்லை.. விடியும்வரை இதே ரீதியிலான கனவு.. விழிகளை விரித்து வைத்தவாறே கண்டிட்ட கனவு..!! அதேஇரவில்.. ரயிலில் பயணித்த தாமிராவும் அக்காவைப் போலவே உறக்கத்தை தொலைத்திருந்தாள்.. ஆதிரா கற்பனையில் திளைத்துக் கொண்டிருந்தாள் என்றால், தாமிரா கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தாள்..!!

ரயில் படுக்கையில் குப்புறப்படுதிருந்தவள், குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தாள்.. அவள் எழுப்பிய அழுகையோசை ரயிலின் தடதட சப்தத்துக்குள் காணாமல்போய், அடுத்தவர் காதுகளுக்கு எட்டாமலே காற்றில் கலந்திற்று..!! நள்ளிரவு தாண்டிய சமயத்தில் பாத்ரூம் சென்று.. முகத்தில் நீர் தெளித்து அலம்பிக்கொண்டு.. கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தை, தானே பரிதாபமாக பார்த்தவாறு நெடுநேரம் நின்றிருந்தாள் தாமிரா..!!

 அக்காவைப் போலவே அவளுக்கும் அத்தான் மீது சிறு வயதில் இருந்தே ஒரு ஈர்ப்பு.. அவள் வளர வளர அந்த ஈர்ப்பும் அவளுடன் வளர்ந்து, கன்னிப்பெண் ஆகையில் காதலென அசுர வடிவம் எடுத்து நின்றிருந்தது..!! உள்ளத்தில் இருந்த காதலை உடன்பிறப்புடன் பகிர்ந்துகொள்வதில் ஆதிரா சற்றே முந்திக்கொள்ள.. உணர்வுகளை உள்ளுக்குள்ளேயே போட்டு புதைத்துக் கொள்கிற ஒரு நிலைக்கு தாமிரா தள்ளப்பட்டிருந்தாள்..

அக்கா மீது அவள் வைத்திருந்த அளவிலா அன்புதான் அவளை அவ்வாறு செய்ய வைத்திருந்தது..!! ஆசைப்படுகிற ஒரு மனதைத்தான் ஆண்டவன் ஆதிராவுக்கு கொடுத்திருந்தான்.. தாமிராவின் மனதையோ அன்பையும், தியாகத்தையும் குழைத்து வார்த்தெடுத்திருந்தான்..!! குழந்தையாய் இருந்த சமயத்தில் இருந்தே.. அக்கா ஆசைப்பட்டதை எல்லாம் அவளது அறிவுக்கு எட்டாத வகையிலேயே விட்டுக் கொடுப்பதுதான் தாமிராவின் இயல்பு.. காதல் விஷயத்திலும் அவ்வாறே நடந்துகொள்ள நினைத்தாள்..!!

 தானும் சிபியை காதலிப்பதை அக்காவிடம் சொல்லி.. அவளது மனதில் சிறு சஞ்சலம் வருவதைக்கூட தாமிரா விரும்பவில்லை..!! அதுவுமல்லாமல்.. ஆதிராவுக்குத்தான் சிபியை மணமுடிக்க வேண்டும் என்று, அவளது பெற்றோர்களுடைய மனதில் இருந்த எண்ணமும் அவளுக்கு அரசல் புரசலாக தெரியவர.. ‘அக்கா நிஜமாகவே அதிர்ஷ்டக்காரி’ என்று நினைத்து, ஆதிராவுக்காக மிகவும் சந்தோஷப்பட்டாள்..

அதேநேரம், அவளது மனதிலும் ஒரு இனம்புரியாத விரக்தி..!! அக்காவின் மனம்போலவே மணவாழ்வு அமையப்போவதில்.. தாமிராவுக்கும் எல்லையில்லா ஆனந்தம்தான்..!! ஆனால்.. சிபி மீது தான் வைத்திருந்த ஆசையும், காதலும்.. தனது மனதுக்குள்ளேயே புதைந்து மரணிக்கப் போகிறதே என்பதை எண்ணும்போது.. அவளது கண்களில் பொங்கிய கண்ணீரையும் அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை..!!

எப்போதும்போலவே இப்போதும் தனிமையில் அழுது தீர்த்தாள்.. இந்தமுறை, தண்டவாளத்தில் தடதடக்கிற ரயிலுக்குள்..!! தங்கையின் மனதினைப் பற்றியோ, அந்த மனதுக்குள் உறைந்திருந்த காதலைப் பற்றியோ, ஆதிரா அப்போதெல்லாம் அறிந்ததில்லை.. அதேபோல தங்கையின் மைசூர் பயணத்தின்போது நடந்தவையும் ஆரம்பத்தில் அவளுக்கு தெரியாது..!! வாக்களித்தபடியே மைசூர் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்திருந்தான் சிபி.. அழுதசுவடு சிறிதளவும் வெளியே தெரியாதவண்ணம், அவனுடன் இயல்பாக சிரித்துப் பேசினாள் தாமிரா..!!

இருவரும் முதலில் சிபியின் வீட்டுக்கு சென்றார்கள்.. குளித்து முடித்துவிட்டு அவனது அலுவலகத்துக்கு சென்றார்கள்.. அவனுடைய முதலாளியை சந்தித்துப்பேசி உதவி கோரினார்கள்..!! தாமிராவின் பேச்சு அவருக்கு பிடித்துப்போக, உதவி செய்வதாய் அவரும் உறுதியளித்தார்.. அந்த சந்தோஷத்திலேயே, சிபியும் அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு, அலுவலகத்திலிருந்து தாமிராவுடனே கிளம்பினான்..!!

மீதியிருக்கிற நாளை ஊர் சுற்றி கழிப்பதாக திட்டம்..!! அக்காவின் அறிவுரைக்கு மதிப்பு கொடுத்து, கல்யாண விஷயத்தை பற்றி தாமிரா சிபியிடம் வாயைத் திறக்கவில்லை.. ஆனால், எந்த நேரமும் அப்பாவின் அழைப்பு அத்தானின் கைபேசிக்கு வரலாம் என்று எதிர்பார்த்துத்தான் காத்திருந்தாள்..!!

 சிபியோ இதைப்பற்றியெல்லாம் எதுவும் தெரியாமல்.. இயல்பாக தாமிராவுடன் எல்லா இடங்களுக்கும் சுற்றித் திரிந்தான்.. அவன் முகத்தில் மட்டும் எப்போதும் இருக்கிற அந்த கன்னத்துக்குழி புன்னகை..!! அலுவலகத்தில் இருந்து கிளம்பியவர்கள், முதலில் மைசூர் அரண்மனை சென்று சுற்றிப்பார்த்து, சிறிது நேரம் செலவிட்டார்கள்.. அந்த புகைப்படமும் அப்போதுதான் எடுத்துக் கொண்டார்கள்.. இருவரும் சற்றே நெருக்கமாக, ஒருவரது புஜம் அடுத்தவரது புஜத்தை அழுத்துகிற மாதிரி..!!

 மைசூர் அரண்மனைக்கு எதிரே இருக்கிற ஒரு அசைவ உணவகத்திலேயே, மதிய உணவை முடித்துக்கொள்ள நினைத்து உள்ளே புகுந்தனர்.. காலியாய் இருந்த டேபிளில் அமரச்சென்ற தாமிராவைத் தடுத்த சிபி, "இங்க வேணாம் தாமிரா.. உள்ள போயிறலாம்..!!" என்றவாறு உணவகத்துக்குள் இன்னும் உட்புறமாக அழைத்து சென்றான்..!!

சற்று தள்ளியிருந்த ஏ/ஸி அறைக்குள் இருவரும் நுழைந்தார்கள்.. உள்ளே மிகவும் சொற்பமானவர்களே அமர்ந்திருக்க, இவர்கள் ஓரமாக கிடந்த மேஜையொன்றில் எதிரெதிரே அமர்ந்துகொண்டார்கள்..!! தாமிராவின் அபிப்ராயத்தை தெரிந்துகொண்டு சில அசைவ உணவு வகைகளை ஆர்டர் செய்தான் சிபி.. அவையெல்லாம் டேபிளுக்கு வந்து சேர்கிற நேர இடைவெளியில், இயல்பாகத்தான் அந்தப்பேச்சை ஆரம்பித்தான்..!!

 "ஹேய் தாமிரா.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ்..!!" என்று புன்னகையுடன் சொன்னான்.

 "எ..என்ன..??"

 "I have a gift for you..!!"

 "Woww.. really..??" தாமிரா தனது முட்டைக்கண்களை முழுதாக திறந்தவாறு கேட்டாள்.
 "yesss..!!!"

 "என்ன கிஃப்ட்.. என்ன கிஃப்ட்..?? காட்டுங்க.. எனக்கு உடனே பாக்கணும்..!!" 
"ஹாஹா.. இரு.. அவசரப்படாத..!!" சிரிப்பை சிந்தியவாறே, அத்தனை நேரம் ஒளித்து வைத்திருந்த அந்த சிறிய பரிசுப்பெட்டியை வெளியே எடுத்தான் சிபி.. அதை தாமிராவிடம் நீட்ட முனையும்போதே, அவனுடைய செல்ஃபோன் சப்தம் எழுப்பியது.. பரிசுப்பெட்டியை கைக்குள் வைத்தவாறே, சட்டைப்பைக்குள் இருந்து செல்ஃபோனை வெளியே எடுத்து பார்த்தான்..!!

 "ஹேய் ஒரு நிமிஷம்.. மாமா கூப்பிடுறார்..!!" என்றவன் காலை பிக்கப் செய்து பேச ஆரம்பித்தான்..!! அப்பா எதற்காக அழைக்கிறார் என்கிற விஷயம் புரிந்த தாமிரா, அமைதியாக அத்தானின் முகத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்..!! செல்ஃபோனில் பேச ஆரம்பித்த சிபி நிறைய 'ம்ம்' கொட்டினான்..

பேசப்பேச அவனுடைய முகத்தில் அத்தனை நேரம் இருந்த உற்சாகம் மெல்ல மெல்ல குறைவதை தாமிராவால் உணர முடிந்தது.. எதுவும் புரியாமல் அவனையே குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்தாள்..!!

 "ஒ..ஒரு நிமிஷம் மாமா.. நா..நான் இப்போ கொஞ்சம் வேலையா இருக்கேன்.. கொஞ்ச நேரம் கழிச்சு திரும்ப கூப்பிடவா..??" தயக்கமாக சொன்ன சிபி, அழைப்பை பட்டென துண்டித்தான்.. எதிரே அமர்ந்திருந்த தாமிராவை, ஏறிட்டு வெறுமையாக பார்த்தான்..!!

அவன் முகத்தில் தெரிந்த திகைப்பும் தவிப்பும், தாமிராவை இன்னும் அதிகமாகவே குழம்பியது..!!

 "எ..என்னத்தான்.. என்னாச்சு..?? அப்பா என்ன சொன்னாரு..??"

 "ஒ..ஒன்னும்.. ஒன்னும் இல்ல தாமிரா..!!" சிபியின் குரலில் ஒரு புது தடுமாற்றம்.
 "அப்புறம் ஏன் ஒருமாதிரி ஆய்ட்டிங்க..??"

 "இ..இல்லையே..!!"

 "இல்ல.. உங்க முகமே சரியில்ல..!! அப்பா என்ன சொன்னார்ன்னு சொல்லுங்க..!!"
 "அ..அது.. அது வந்து.."

 "ம்ம்..??"

 "ஆ..ஆதிராவுக்கும்.. ஆதிராவுக்கும் எனக்கும் கல்யாணம் பண்றதா.."

 "வாவ்..!!! நல்ல விஷயம்தான.. அதுக்கு ஏன் ஷாக்காகிட்டிங்க..??" தாமிரா போலி சந்தோஷத்துடன் குதூகலித்தாள்.

 "அ..அதுக்கு இல்ல.. ஆனா.." "என்ன ஆனா..??"

 "ஒ..ஒன்னும் இல்ல..!!" தளர்வாக சொல்லிவிட்டு சிபி அமைதியாகிப் போனான்.. தாமிரா ஓரிரு வினாடிகள் அவனது முகத்தையே கூர்மையாக பார்த்தாள்.. அந்த முகத்தில் தெரிந்த உணர்வுகளில் இருந்து அவளால் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை..!! ஒரு சில வினாடிகள்.. பிறகு.. "ஹ்ம்ம்.. சரி விடுங்க..!! அது இருக்கட்டும்.. எனக்கு என்ன திடீர்னு கிஃப்ட்லாம்..??" என்று தாமிரா இயல்பாக கேட்டுக்கொண்டே, சிபியின் கையிலிருந்த அந்த பரிசுப்பெட்டியை பறித்தாள்..

உள்ளே என்ன இருக்கிறதென்று ஆர்வமாக பிரித்து பார்த்தாள்..!! உள்ளே.. அந்த தங்க மோதிரம்.. இரண்டு இதயங்கள் ஒன்றோடொன்று பிண்ணியிருப்பது மாதிரியான வேலைப்பாட்டுடன்..!! காதல் பரிசாக கொடுப்பதற்கு கச்சிதமான மோதிரம் என்பது.. பார்த்ததுமே பளிச்சென்று புரிந்தது..!! தாமிரா அதை சுத்தமாக எதிர்பார்த்திரவில்லை..!!

நெஞ்சுக்குள் ஒருவித அதிர்ச்சி அலைகள் 'விர்ர்ர்.. விர்ர்ர்ர்..' என்று வீறிட்டு கிளம்ப.. முகம் முழுவதிலும் பரவிப்படர்ந்த ஒரு திகைப்போடு.. சிபியை மெல்ல மெல்ல ஏறிட்டு பார்த்தாள்..!! அவனோ சோர்ந்து போனவனாய் தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.. இவள் அவனை பார்க்கவும், இப்போது உலர்ந்துபோன குரலில் சொன்னான்..!!
 " ஐ.. ஐ லவ் யூ தாமிரா..!!" காதில் வந்து விழுந்த வார்த்தைகளில் தாமிரா அப்படியே ஆடிப்போனாள்.. அவளது மனதுக்குள் அப்படியொரு உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது..!!

தனது மனதில் இருப்பவன் தன்னைத்தான் காதலிக்கிறான் என்பதற்காக சந்தோஷப்படுவதா.. அல்லது.. அக்காவுக்கு மட்டும் இது தெரியவந்தால், அவள் எப்படி துடித்துப்போவாள் என்றெண்ணி துக்கப்படுவதா..?? எந்தமாதிரியான உணர்வை வெளிப்படுத்துவது என்றுகூட புரியாமல் விக்கித்துப்போய் அமர்ந்திருந்தாள் தாமிரா..!!

 அழுகை வரும்போல் இருந்தது அவளுக்கு.. கண்களில் ஒருதுளி கண்ணீர் முணுக்கென்று எட்டிப் பார்த்தது.. அதை சிபி பார்ப்பதற்கு முன்பே அவசரமாக துடைத்துக்கொண்டவள், கையிலிருந்த பரிசுப்பெட்டியை டேபிளில் விசிறினாள்.. விருட்டென இருக்கையில் இருந்து எழுந்தாள்.. விடுவிடுவென அறைக்கதவை நோக்கி நடந்தாள்..!! 

"தாமிரா.. தாமிரா நில்லு..!!" பின்னாலிருந்து சிபி கத்துவதை அவள் பொருட்படுத்தவில்லை.. வேகமாய் நடந்து அந்த உணவகத்தை விட்டு வெளியேறினாள்.. சாலையில் வந்த ஒரு ஆட்டோவை கைநீட்டி நிறுத்தி ஏறிக்கொண்டாள்..!!

 "எல்லிம்மா..??" ஆட்டோ ட்ரைவர் கேட்டதற்கு, ஓரிரு வினாடிகள் திகைத்தாள்.. பிறகு.. "ஃபிலோமினா சர்ச்..!!" என்று மைசூரில் தனக்கு தெரிந்த ஒரு இடத்தை சொன்னாள்..!! சொல்லிவிட்டு.. ஆட்டோ பின்சீட்டில் தலைசாய்த்து, கண்ணீர் சிந்தி கன்னத்தை நனைக்க ஆரம்பித்தாள்..!! சர்ச் என்று சொன்னது நல்லதாய் போயிற்று.. தாமிராவால் உள்ளே சென்று மனம்விட்டு அழ முடிந்தது..!!

பார்ப்பவர்களில் சிலர் பாவமன்னிப்பு கேட்கிறாள் என்று நினைத்துக் கொண்டார்கள்.. 'உறவினர் எவருக்காவது உடல்நலம் சரியில்லையாய் இருக்கும்' என்று சிலர் உச்சுக்கொட்டினர்..!! அரைமணிநேரம்.. அழுது தீர்த்திருந்தாள் தாமிரா.. அதற்குள் இருபது மிஸ்ட் கால் அவளது செல்ஃபோனுக்கு வந்திருந்தது.. சிபியிடம் இருந்து..!! "வீட்டுக்கு வர்றேன் அத்தான்.. வந்து பேசிக்கலாம்..!!" சிபியை செல்ஃபோனில் அழைத்து பேசிவிட்டு, சர்ச்சில் இருந்து கிளம்பினாள் தாமிரா..!!

 மனதில் ஒரு முடிவுடன்தான் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.. தனது காதலால் அக்காவின் சந்தோஷத்துக்கு எந்த பங்கமும் வந்துவிடக் கூடாது என்பதுதான் அந்த முடிவு..!! 'தனக்கு சிபி மீது காதல் இல்லை.. தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை..' என்று உறுதியாக அவனிடம் தெரிவித்தாள்..!!

தணிகைநம்பிக்கு கால் செய்து, ஆதிராவுடனான திருமணத்துக்கு அவனது சம்மதத்தை தெரிவிக்குமாறு வற்புறுத்தினாள்..!! அவளது உறுதியான பேச்சில் சிபி சற்றே தளர்ந்து போயிருந்தான்..!! "ப்ளீஸ் தாமிரா.. நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்கோ..!! நா..நான்.. நான் என் லைஃபை உன் கூட வாழணும்னு ஆசைப்படுறேன்.. ஆதிராவை விட நீதான் எனக்கு பொருத்தமானவளா இருப்பேன்னு நெனைக்கிறேன்..!! உன்னை நான் நல்லா பாத்துப்பேன் தாமிரா.. உனக்கு ஒரு நல்ல புருஷனா நடந்துப்பேன்..!!"

 "ஹையோ.. அதுலலாம் எனக்கு சந்தேகம் இல்லத்தான்.. நீங்க நல்லவரு.. நல்லா பாத்துப்பிங்க.. எனக்கு தெரியும்..!!"

 "அப்புறம் என்ன.. வீட்ல என்ன சொல்லுவாங்களோன்னு நெனைக்கிறியா..?? நாம ரெண்டு பேரும் ஒண்ணாப்போய் நின்னு.. 'கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறோம்'ன்னு சொன்னா.. கண்டிப்பா அவங்க ஒத்துப்பாங்க தாமிரா.. சந்தோஷப்படத்தான் செய்வாங்க..!!"

 "தெரியும் அத்தான்..!! ஆனா.. அது நடக்காது..!!"

 "அதான் ஏன்னு கேக்குறேன்..??"

 "ஏன்னா என்ன சொல்றது.. எனக்கு உங்கள புடிக்கும், உங்கமேல அன்பு இருக்குது.. ஆனா.. உங்களை கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் எப்போவுமே நெனச்சது இல்ல..!!"

 "சரி.. இதுக்கு முன்னாடி நெனச்சது இல்லைன்னா பரவால.. இப்போ ஏன் நெனச்சு பாக்க கூடாது..??"

 "நான் நெனச்சு பாக்குறது இருக்கட்டும்.. நீங்க ஏன் அக்காவை பத்தி கொஞ்சம்கூட நெனைச்சு பாக்க மாட்டேன்றிங்க..?? அவ என்ன அத்தான் பாவம் பண்ணினா..?? அவகிட்ட என்ன குறை கண்டிங்க..??"

 "இங்க பாரு.. ஆதிரா மேல நான் எந்த குறையும் சொல்லல.. அவ நல்ல பொண்ணுதான்..!! ஆனா.. நான் விரும்புறது உன்னை.. என் மனசுல நீதான் இருக்குற..!! ஆதிராவை கட்டிக்கிட்டு நான் சந்தோஷமா இருக்க முடியாது தாமிரா..!!"

 "இல்லத்தான்.. தப்பா சொல்றீங்க.. அக்காவை கட்டிக்கிட்டா நீங்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருப்பிங்க..!! அவ உங்களை எவ்வளவு லவ் பண்றா தெரியுமா.. உங்க மேல உயிரையே வச்சிருக்கா அத்தான்..!! சின்ன வயசுல இருந்தே உங்க மேல அவளுக்கு அவ்வளவு ஆசை..!! உங்ககிட்ட எக்ஸ்ப்ரஸ் பண்றதுக்கு அவளுக்கு ஒரு தயக்கம், வெட்கம்.. அவ்வளவுதான்..!! மத்தபடி.. எங்கிட்ட எல்லாம் சொல்லிருக்கா..!! அந்த அளவுக்கு உங்கமேல உசுரா இருக்குற அக்காவை கட்டிக்க, நெஜமாவே நீங்க ரொம்ப குடுத்து வச்சிருக்கணும்..!!"

 ".........................." சிபி இப்போது சற்றே வாயடைத்துப்போய் நின்றிருந்தான்.

 "வீட்ல எல்லாம் சந்தோஷமா இருக்காங்க அத்தான்.. அக்கா, அப்பா, அம்மா, திரவியம் அங்கிள், வனக்கொடி அம்மா.. எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க.. அவங்க சந்தோஷத்தைலாம் கெடுக்கப் போறிங்களா..??"

 "நாம கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அந்த சந்தோஷம் அவங்களுக்கு கெடைக்கும் தாமிரா..!! ஆதிராவுக்கு வேணா வேற.."

 "இல்ல.. எனக்கோ அக்காவுக்கோ சத்தியமா அதுல சந்தோஷம் கெடைக்காது..!!"

 "தாமிரா..!!"

 "ப்ளீஸ்த்தான்..!! கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. உங்களை கல்யாணம் பண்ணிக்க சுத்தமா இன்ட்ரஸ்ட்டே இல்லாத நான் வேணுமா.. இல்ல.. உங்களையே நெனச்சு ஒவ்வொரு நிமிஷமும் உருகிக்கிட்டு இருக்குற அக்கா வேணுமா..?? யாரை கல்யாணம் செஞ்சுக்கிட்டா உங்க வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு யோசிச்சு பாருங்க..!! என் முடிவை நான் சொல்லிட்டேன்.. அப்புறம் உங்க இஷ்டம்..!!" படபடவென சொல்லிவிட்டு தாமிரா அமைதியானாள்.. சிபி சில வினாடிகள் அவளுடைய முகத்தையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான்..!!

தாமிரா தன்னை காதலிக்கவில்லை என்பது அவனுக்கு அதிர்ச்சியான, ஆச்சரியமான விஷயமாக இருந்தது.. அவளது பேச்சிலும், பார்வையிலும், செயல்பாட்டிலும் பலமுறை காதலை உணர்ந்திருக்கிறான்.. இப்போது அதெல்லாம் இல்லை என்று அவள் சொல்லும்போது, அவனால் நம்புவதற்கே மிக கடினமாக இருந்தது.. ஆனால் அதை நம்புவதைத் தவிர அவனுக்கு வேறு வழியும் இருக்கவில்லை..!!

 "நெஜமாவே உனக்கு என்மேல காதல் இல்லையா தாமிரா..??" என்று பரிதாபமாக ஒருமுறை கேட்டான். "இல்லத்தான்.. சத்தியமா இல்லை..!!" உணர்ச்சியற்ற குரலில் தெளிவாக சொன்ன தாமிரா, "ம்ம்.. அப்பாக்கு கால் பண்ணி பேசுங்க..!!" என்று சிபியின் செல்ஃபோனை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

 ".........................." செல்ஃபோனை வாங்கிக்கொண்ட சிபி, வெறுமையாக அவளை பார்த்தான்.

 "யோசிக்காதிங்கத்தான்.. பேசுங்க.. அக்காவை கட்டிக்க சம்மதம்னு சொல்லுங்க.. அப்பா அங்க டென்ஷனா உக்காந்துட்டு இருப்பாரு.. அவரு உங்களுக்கு எவ்வளவு நல்லது பண்ணிருக்காருன்னு நெனச்சு பாருங்க.. உங்க மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்காருன்னு நெனச்சு பாருங்க..!! இந்த கல்யாணம் நடந்தாத்தான் எல்லாருக்குமே சந்தோஷம் அத்தான்.. ப்ளீஸ்.. பேசுங்க..!!" சிபி சிறிதுநேரம் செய்வதறியாது தளர்ந்து போனவனாய் உறைந்திருந்தான்..!!

இவனது பதிலுக்காக அகழியில் தணிகைநம்பி காத்திருக்கிற நிலையில்.. இவன் மீது காதல் இல்லை என்று தாமிரா திட்டவட்டமாக சொல்லி முடித்தபிறகும்.. அவனுக்கு வேறு வழியிருக்கவில்லை..!! தணிகை நம்பியை தனது கைபேசியில் அழைத்து பேசினான்.. ஆதிராவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தான்.. அதுவும் சுரத்தற்ற குரலில், சுத்தமாக விருப்பமே இல்லாமல்..!!

 "பெரியவங்களா பாத்து என்ன செஞ்சாலும் எனக்கு சரிதான் மாமா..!!" என்று மட்டும் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான். "தேங்க்ஸ் அத்தான்..!!" தாமிரா சிபியை நன்றியுடன் பார்த்தாள்.. ஒரு பெரிய பிரச்சினையை ஒருவழியாக சமாளித்தாயிற்று என்று சற்றே நிம்மதியுற்றாள்.. ஆனால் அவளது நிம்மதி நீண்டநாள் நீடிக்கப்போவதில்லை என்பதை, அப்போது அவள் அறியவில்லை..!!

கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவித்தாயிற்று என்று, சிபி அத்துடன் தனது முயற்சியை கைவிட்டு விடவில்லை.. முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தாமிராவை தொடர்ந்து கெஞ்சிக்கொண்டுதான் இருந்தான்..!! காதலை புறக்கணிப்பது எப்போதுமே கடினமான காரியம்தான்.. தன்மீது அன்பு வைத்திருக்கும் இன்னொரு ஜீவனை எவ்வாறு எளிதில் உதறித்தள்ள முடியும்..??

அதுவும்.. மனதுக்குள் அவன்மீது அவளும் கொள்ளை கொள்ளையாய் காதலை வைத்துக்கொண்டு..?? தாமிரா அடுத்த நாளையும் மைசூரில்தான் கழித்தாள்.. இருவரும் அதிகமாக பேசிக்கொள்ளாவிட்டாலும், இருவருடைய இதயங்களும் ஒரு இனம்புரியாத அழுத்தத்துக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருந்தன..!! சிபியின் ஏக்கமான பார்வையும், உடைந்துபோன குரலும், பரிதாபமான கெஞ்சலும்.. தாமிராவின் காதல் மனதை கசக்கி பிழிவதாக இருந்தன..!!

அடிக்கடி அவன் தனது காதலை வலியுறுத்தி, கல்யாணக் கற்பனை சொல்வது.. அவளது மனஉறுதியை மிகவுமே அசைத்துப் பார்ப்பதாக அமைந்தது..!! அடுத்தநாள் இரவு.. தாமிரா மைசூரில் இருந்து அகழி கிளம்புகையிலும்.. ரயில் பெட்டிக்குள் அவள் காலடி எடுத்து வைக்கும்போதும்கூட.. சிபி அதையேதான் சொன்னான்..!!

 "இன்னும் எதும் கெட்டுப்போகல தாமிரா.. இப்போக்கூட உன் முடிவை நீ மாத்திக்கலாம்..!! மாமா, அத்தையை எப்படி கன்வின்ஸ் பண்றதுன்னு யோசிக்காத.. அதை நான் பாத்துக்குறேன்.. நான் பேசி அவங்கட்ட சம்மதம் வாங்குறேன்..!!

ஆதிராவுக்கு வேற ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணிவச்சுட்டு.. அப்புறம்கூட நம்ம கல்யாணத்தை வச்சுக்கலாம்..!! ஊருக்கு போய் கொஞ்சம் ரிலாக்ஸ்டா யோசி.. கல்யாணத்துக்கு இன்னும் ஒருமாசம் இருக்கு.. அதுக்கு முன்னாடி ஒரு நல்லமுடிவா எடு..!!"

 "எத்தனை நாள் ஆனாலும் என் முடிவு மாறாது அத்தான்..!!" - தாமிராவின் குரலில் இரண்டு நாட்க ளுக்கு முன்பாக இருந்த உறுதி இப்போது இல்லை என்பதை தெளிவாக உணரமுடிந்தது.

 "ஹ்ம்ம்.. பாக்கலாம்..!! பார்த்து பத்திரமா போ.. நான் நாளைக்கு கால் பண்றேன்..!!"

 "ப்ளீஸ்த்தான்.. வேணாம்.. இனிமே எனக்கு கால் பண்ணாதீங்க.. ப்ளீஸ்..!!" 

"பண்ணுவேன் தாமிரா.. கண்டிப்பா பண்ணுவேன்..!! என் காதலை அவ்வளவு சீக்கிரம் செத்துப்போக விடமாட்டேன்.. கல்யாணத்துக்கு மொதநாள் வரைகூட, உன் மனசை மாத்த ட்ரை பண்ணிட்டேதான் இருப்பேன்..!! 'என்மேல உனக்கு அக்கறை இல்ல.. எக்கேடோ நான் கெட்டாலும் பரவால்ல..'ன்னு நீ நெனச்சா.. என் காலை பிக்கப் பண்ணவேணாம்..!!" சிபி சிந்திய வார்த்தைகள் தாமிராவின் தளிர்மனதை வதைப்பதாக இருந்தன.. கண்களில் வழியமுனைந்த கண்ணீர்த்துளிகளை கட்டுப்படுத்தியவாறே, கம்பார்ட்மன்ட்டுக்குள் அவசரமாக புகுந்துகொண்டாள்..!!

 ஏ/ஸி கம்பார்ட்மன்ட்.. தோலை ஊடுருவும் ஈரப்பதமான காற்று.. அங்கொன்றும், இங்கொன்றுமாக அமர்ந்திருந்த பயணிகள்..!! தனது இருக்கையை தேடிப்பிடித்து அமர்ந்துகொண்டாள் தாமிரா.. கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே தெரிந்த சிபியை பார்த்தாள்..!! அவனது பார்வையில் தெறித்த அந்த ஏக்கமும், காதலும்.. இப்போது இவளை ஏதோ செய்தன.. இவள் மனதிலும் காதல் ஊற்றை மெலிதாக கசியச் செய்தன.. கண்ணில் துளிர்த்த நீருடன் காதலனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..!!

 நீண்ட ஒரு இரைச்சலுடன் ரயில் கிளம்பியது..!! இவளது கம்பார்ட்மன்ட் மெல்ல நகர ஆரம்பிக்க.. வெளியே நின்றிருந்த சிபி, இவளைப்பார்த்து மெலிதாக கையை அசைக்க.. இவளுக்கு திடீரென என்னானதோ.. என்ன நினைத்தாளோ.. "ஐ லவ் யூ அத்தான்.. ஐ லவ் யூ ஸோ மச்..!!" என்று சிபியை பார்த்து கத்தினாள். அவளது குரலை கண்ணாடி ஜன்னல் தடுத்து நிறுத்தியது. "எ..என்ன.. என்ன சொல்ற தாமிரா.. எனக்கு கேக்கல..!!" ரயில் பெட்டியின் பின்னாலேயே ஓடினான் சிபி.

 "நான்.. நான் உங்களைத்தான் லவ் பண்றேன் அத்தான்.. உங்க மேல உயிரையே வச்சிருக்கேன்..!!" "இ..இல்ல.. கேக்கல தாமிரா..!!" "என்னை மன்னிச்சிடுங்க அத்தான்.. எனக்கு வேற வழி இல்ல..!! என்னை மன்னிச்சிடுங்க.. ப்ளீஸ்..!!"

 "தாமிராஆஆ..!!" ரயில் தடதடவென வேகமெடுத்து ஓட ஆரம்பித்திருந்தது.. கம்பார்ட்மன்ட்டுக்குள் கண்ணீர் சிந்தியவாறு அமர்ந்திருந்தாள் தாமிரா..!! அவ்வாறு அவள் அழுது கொண்டிருக்கையிலேயே.. அவளது செல்ஃபோன் இப்போது கிணுகிணுத்தது.. சிபிதான் கால் செய்திருந்தான்.. ஒருவித தயக்கத்துடனே எடுத்து பேசினாள்..!!

 "எ..என்னாச்சு தாமிரா.. என்ன சொன்ன..?? எனக்கு ஒன்னும் கேக்கல..!!" சிபி பதற்றமாக கேட்டான். "ஒ..ஒன்னுல்லத்தான்..!! நீங்களும் கெளம்புங்க.. பார்த்து பத்திரமா போங்கன்னு சொன்னேன்..!! வேற ஒன்னும் இல்ல..!!" இறுக்கமாக சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தாள் தாமிரா.

 ஆதிராவுக்கு மைசூரில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் அப்போதெல்லாம் தெரியாது.. அகழி திரும்பிய தங்கையின் கண்களில் இருந்த கலக்கம் மட்டுமே அவளது கவனத்தில் சற்று உறுத்தியது..!! "என்னடி.. என்னாச்சு.. ஒரு மாதிரி இருக்குற..??" "அ..அப்டிலாம் ஒன்னும் இல்லையே.. ட்ராவல் பண்ணின டயர்டா இருக்கும்..!!"

 "கண்ணுலாம் செவந்து போயிருக்கு..??" "நைட்டு சரியா தூக்கம் இல்லக்கா.. வேற ஒன்னும் இல்ல..!!" "ஓ..!! போன வேலைலாம் நல்லபடியா முடிஞ்சுச்சா..??" "ம்ம்.. பெர்ஃபக்ட்..!!" சொல்லும்போதே தாமிராவின் குரலில் இருந்த ஒரு மென்சோகத்தை, ஆதிராவால் அப்போது உணர்ந்துகொள்ள முடியவில்லை. "ஹ்ம்ம்..!! அத்தான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாருடி.. தெரியும்ல..??" என்று பூரிப்பாகவே கேட்டாள். "ஹாஹா..!! அத்தான் ஃபோன் பண்றப்போ நான் பக்கத்துலதான்க்கா இருந்தேன்..!!"

புன்னகையுடன் சொன்ன தாமிரா, "என் அக்கா மாதிரி ஒரு அழகு தேவதையை.. எந்த முட்டாப்பயலாவது வேணான்னு சொல்வானா..?? ம்ம்..??" என்று ஆதிராவின் கன்னத்தை பிடித்து கொஞ்சினாள். "ச்ச்சீய் போடி..!!!" வெக்கப்பட்ட ஆதிரா, "அதுசரி.. மைசூர் நல்லா சுத்தி பாத்தியா.. எங்கல்லாம் உன்னை கூட்டிட்டு போனாரு..??" என்று பேச்சை வேறுபக்கம் திருப்பினாள். "ரொம்பலாம் சுத்தலக்கா.. ஃபர்ஸ்ட் டே மட்டும் வெளில போனோம்.. செகண்ட் டே செம டயர்ட்.. எங்கயும் போகல..!!" "ஓ..!! ம்ம்ம்ம்.. சரி உன் கேமரா குடு.. ஃபோட்டோஸ் பாக்கலாம்..!!" தாமிரா தனது டிஜிட்டல் கேமராவை எடுத்து அக்காவிடம் கொடுத்தாள்..

ஆதிராவும் ஆர்வமாக அந்த கேமராவில் சேகரிக்கப்பட்டிருந்த படங்களை ஒவ்வொன்றாக எடுத்து பார்த்தாள்..!! "என்னடி கொஞ்ச ஃபோட்டோதான் எடுத்திருக்கீங்க போல..??" "அ..அதான் சொன்னன்ல.. ரொம்பலாம் வெளில சுத்தல..!!"
கட்டைவிரலால் பட்டனை அழுத்தி, ஒவ்வொரு படமாக பார்த்துக்கொண்டே வந்த ஆதிரா.. அந்த மைசூர் அரண்மனை முன்பாக எடுத்திருந்த படத்தை பார்த்ததும், சற்றே முகம் மாறினாள்..

அடுத்த படத்தை மாற்றத் தோன்றாதவளாய், அந்தப் படத்தையே உன்னிப்பாக முறைத்துப் பார்த்தாள்..!! தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறவனும், தனது தங்கையும்.. நெருக்கமாக எடுத்துக்கொண்ட அந்த புகைப்படம்.. ஆதிராவின் நெஞ்சுக்குள் ஒரு பொறாமைத்தீயை கொளுத்திப் போட்டிருந்தது..!!

 "என்னாச்சு..??" தாமிரா கேட்க, "ஒ..ஒன்னுல்ல..!!" ஆதிரா தடுமாறினாள். ஆதிரா சொல்லாவிட்டால் என்ன.. அக்காவின் முகமாற்றத்தில் இருந்தே, அவளுடைய மனநிலையை கச்சிதமாக புரிந்துகொண்டாள் தாமிரா..!! "என்ன.. அத்தான்கூட உரசிட்டு நிக்கிறது உனக்கு எரிச்சலா இருக்கோ..??" என்று கேலியான குரலிலேயே கேட்டாள்.

 "இ..இல்ல.. அப்படிலாம் ஒன்னுல்ல..!!" ஆதிரா பலவீனமாகவே மறுத்தாள். "ஹாஹா.. ஒன்னும் பயப்படாத.. உன் புருஷனை ஒன்னும் நான் வளைச்சுப்போட்ற மாட்டேன்..!!" "ஏய் ச்சீய்.. லூஸு..!!" "குடு.. டெலிட் பண்ணிடலாம்..!!" "ஏய் வேணாண்டி.. பரவால..!!" பதறிய ஆதிராவை பொருட்படுத்தாது, அவளது கையிலிருந்த கேமராவை பிடுங்கி, அந்த ஃபோட்டோவை படக்கென டெலிட் செய்தாள் தாமிரா..!!

 "ஓகேவா இப்போ..?? ஹாஹா..!!" என்று அக்காவை பார்த்து போலியாக சிரித்தாள். "ப்ச்.. ஏன்டி டெலிட் பண்ணின..?? நான் ஒன்னும் அதுக்காக சொல்லல..!!" "அடடடடா..!! விடு விடு.. எல்லாம் எனக்கு தெரியும்..!! உனக்கு பிடிக்கலல.. அப்புறம் என்ன..?? அதான் டெலிட் பண்ணிட்டேன்.. அக்கா இப்போ ஹேப்பிதான..??" கண்சிமிட்டி அழகாக சிரித்தாள் தாமிரா. "ஹ்ம்ம்ம்ம்..!!! தேங்க்ஸ்டி..!!!" பூரிப்பான முகத்துடன் சொன்ன ஆதிராவின் மனது, அப்போதைக்கு அமைதிப்பட்டுப் போனது..

ஆனால், புகைப்படத்தை அழித்து நீக்கிய தாமிராவின் மனதோ, ஒருவித பதைபதைப்புக்கு உள்ளாகியிருந்தது..!! எப்படியாவது அந்த புகைப்படத்தை, மீண்டும் மீட்டெடுத்து விடவேண்டுமே என்கிற பதைபதைப்பு..!! அன்று மதியமே தாமிரா அந்தவேலையில் மூழ்கியிருந்தாள்.. கேமராவின் மெமரி ஸ்டிக்கில் இருந்து, டெலிட் செய்யப்பட்ட அந்த புகைப்படத்திற்கு, டேட்டா ரெகவரி டூல் மூலம் திரும்பவும் உயிர்கொடுக்கிற வேலை..!!

ஒருவழியாக அந்த புகைப்படத்தை அவள் ரெகவர் செய்து, அவளும் சிபியும் அருகருகே உரசி நிற்பதை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தபோதுதான்.. ஆதிரா அந்த அறைக்குள் நுழைந்தாள்..!! அக்காவின் வருகையை உணர்ந்ததுமே, புகைப்படத்தை படக்கென மூடி, ஏதோ கட்டுரை டைப் செய்வது போல பாவ்லா செய்தாள் தாமிரா..!!

கம்ப்யூட்டர் டேபிளில் வந்து படாரென விழுந்தது அந்த ஆட்டோக்ராஃப் புத்தகம்..!! "என்னடி இது..??" "எ..எது..??" "ம்ம்ம்ம்..??? இது..!!!" ஆட்டோக்ராஃப் புத்தகத்தில்.. ஆதிரா எடுத்துக்காட்டிய பக்கத்தில்.. அகல்விழியால் எழுதப்பட்ட அந்த வாசகம்..!! "தெளிவாக யோசி பெண்ணே.. துணிச்சலாக ஒரு முடிவெடு.. உனது காதல் கைகூட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..!! - அன்புத்தோழி அகல்விழி" சிபியை மேற்கோள் காட்டியே அகல்விழி அதை எழுதியிருந்தாள்..!!

ஆனால்.. அந்தமாதிரியான ஒரு நிலைமையில்.. அந்த உண்மையை.. அக்காவிடம் தாமிராவால் சொல்ல முடியாதே..?? காதலன் யார் என்று அவள் கேட்டதற்கு.. ஒரு சிறு திகைப்புக்கு அப்புறம், கதிர் மீது பழியை தூக்கிப் போட்டாள் தாமிரா..!! தன்னை காதலித்து தன்னால் நிராகரிக்கப்பட்ட கதிரின் பெயரை.. இப்படியொரு சூழ்நிலையில் சமயோஜிதமாக உபயோகப்படுத்திக் கொண்டாள்..!! அப்பாவிடம் பேசலாம் என்று கிளம்பிய ஆதிராவை.. "ஹையோ.. சும்மா இருக்கா நீ வேற.. காரியத்தையே கெடுத்துடாத..!!

இப்போத்தான் உனக்கும் அத்தானுக்கும் கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சிருக்காங்க.. இந்த நேரத்துல இதைப்போய் சொல்லி அவங்களை டென்ஷனாக்க வேணாம்..!! நீ மொதல்ல கல்யாணம் ஆகி இந்த வீட்டை விட்டு கெளம்பு.. என் பிரச்சினையை நான் பாத்துக்குறேன்..!! கொஞ்ச நாளைக்கு இந்த விஷயத்தை உனக்குள்ளேயே வச்சுக்கோக்கா.. யார்ட்டயும் சொல்லாத.. ப்ளீஸ்..!!" என்றுகூறி அப்போதைக்கு செயலிழக்க செய்துவிட்டாள். அக்காவின் விஷயத்தில்தான் அவ்வாறு வாயடைத்துப்போக வைக்க முடிந்தது தாமிராவால்.. சிபியின் விஷயத்தில் அவளால் அது இயலவில்லை..!!

அடுத்து வந்த ஒரு வாரம், பத்து நாட்கள்.. தீயின் மீது நிற்கிற உக்கிரமான தகிப்பை உணர்ந்தாள் தாமிரா..!! ஒருபக்கம் அக்காவின் மீதான அளவிலா அன்பு.. இன்னொருபக்கம் சிபியின் மீதான ரகசியக் காதல்.. இரண்டுக்கும் இடையில் சிக்கி சின்னாபின்னமாகிப் போனாள்..!! சிபி தினசரியும் அவளை கைபேசியில் அடிக்கடி அழைத்தான்.. தாமிரா ஆரம்பத்தில் அவனது அழைப்பை உதாசீனம் செய்து பார்த்தாள்.. அப்புறம்.. அவளாலேயே முடியாமல் அவனுடன் பேச ஆரம்பித்தாள்..!!

 அக்காவின் அருமை பெருமைகளை சொல்லி.. சிபியின் மனதை மாற்ற முயன்றாள் தாமிரா..!! அகத்துக்குள்ளிருந்த காதலின் தீவிரத்தை சொல்லி.. தாமிராவை தன்வழிக்கு கொண்டுவர முனைந்தான் சிபி..!! இரண்டு வெவ்வேறு விதமான முயற்சிகளில்.. சிபிதான் வெற்றியடைந்தான் என்று சொல்லவேண்டும்.. தாமிரா கொஞ்சம் கொஞ்சமாக தோற்றுக்கொண்டிருந்தாள்..!! மனித இயல்புதான் அது..!! நமக்கு பிடித்த சில விஷயங்களை.. பிடிக்காத மாதிரி மற்றவர்களுக்காக வெளிவேஷம் போட்டாலும்.. உள்ளுக்குள் அவைகளை ரகசியமாக ரசித்துக் கொண்டிருப்பது.. மிக மிக பொதுவான மனித இயல்புதான்..!!

தாமிராவும் மனுஷிதானே..?? சிபியின் காதலை தாமிரா புறக்கணித்தாலும்.. அந்தக்காதலை மதிக்காத மாதிரி அக்காவுக்காக வெளிவேஷம் போட்டாலும்.. அவன் இவ்வாறு தினசரி ஃபோன் செய்து கெஞ்சுவது அவளுக்கு ஒருவகையில் பிடித்திருந்தது..!! அக்காவுக்காக தனது காதலை விட்டுக்கொடுத்த திருப்தி ஒருபக்கம் இருந்தாலும்.. 'எனது மனதிலிருப்பவன் என்னை எந்த அளவுக்கு காதலிக்கிறான் பார்' என்பது மாதிரியான ஒரு சந்தோஷமும்.. இன்னொரு பக்கம் அவளது மனதை நிறைக்க தவறவில்லை..!!

 சிபியிடம் தனது உணர்வுகளை கொட்டாவிட்டாலும்.. தனிமையில் நிறைய அழுது தீர்த்தாள் தாமிரா..!! அடிக்கடி தாமிரா தொலைபேசி அழைப்பிலேயே இருப்பது.. ஆதிரவுக்கும் சற்றே உறுத்தலாக இருந்தது..!! "யாருடி ஃபோன்ல..??" "அத்தான் கூப்டாருக்கா.. சும்மா.. அந்த ஆராய்ச்சி கட்டுரை பத்தி கேக்குறதுக்கு..!!" தாமிரா கேஷுவலாக சமாளித்தாலும்.. 'என்ன இவன்.. என்னை திருமணம் செய்துகொள்ளப் போகிறவன், எனக்கு ஒருமுறை கூட அழைப்பு விடுக்காமல், எனது தங்கையுடனே எந்த நேரமும் பேசிக்கொண்டிருக்கிறானே..??' என்பது மாதிரியான ஒரு அதிருப்தியும், சலிப்பும்.. ஆதிராவின் மனதையும் மெல்ல மெல்ல சூழ ஆரம்பித்தன..!!

 திருமணத்திற்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கிற நிலையில்.. ஒருநாள் காலை..!! ஆதிரா தனது அறையைவிட்டு வெளியே வந்தபோது வீடே அமைதியாக இருந்தது.. பூவள்ளியைத் தவிர வீட்டில் வேறு யாரும் இல்லை.. அவளும் அலமாரியில் எதையோ தீவிரமாக தேடிக்கொண்டிருந்தாள்..!!

 "தாமிரா எங்கமா.. ஆளைக்காணோம்..??" ஆதிரா கேட்க, "எங்க போச்சோ பிசாசு.. 'சாப்டுட்டு போடி'ன்னு சொல்ல சொல்ல கேட்காம, அந்த சனியன் புடிச்ச கேமராவை தூக்கிட்டு எங்கயோ ஓடுறா.. காலங்காத்தாலேயே..!!" தேடுவதில் இருந்து கவனத்தை திருப்பாமல், பூவள்ளி அவ்வாறு சலிப்பாக சொல்லவும்தான்..

 "காலைல சிங்கமலை வர போலாம்னு இருக்கேன்க்கா.. ஆர்ட்டிக்கிள்க்கு இன்னும் கொஞ்சம் பிக்சர்ஸ் ஆட் பண்ணினா நல்லாருக்கும்னு நெனைக்கிறேன்..!!" நேற்றிரவு தூங்குகையில் தாமிரா சொன்னது ஆதிராவின் நினைவுக்கு வந்தது..!! தனக்கு வந்த ஞாபகத்தை ஆதிரா அம்மாவிடம் சொல்லாமல்.. "ஹ்ம்ம்.. ஒரு காபி போட்டுத் தர்றியாம்மா.. அப்டியே தலைவலிக்குது..!!" என்று இயல்பாக கேட்டாள். "போய் போட்டுக்கடி.. எல்லாத்தையும் யாராவது பண்ணனும் இவளுக்கு..!!

சின்னப்புள்ளையா நீ.. கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு வாரந்தான் இருக்கு..!!" "அதைத்தான் நானும் சொல்றேன்.. இன்னும் ரெண்டு வாரந்தான காலைல உன் கையால காபி குடிக்க முடியும்..?? அப்புறம் நானாத்தான போட்டுக்கப் போறேன்..??" "ம்ம்ம்..?? இப்ப இருந்தே அதுலாம் பழகிக்க.. போ..!!" "ப்ளீஸ்ம்மா.. போட்டுக் குடும்மா..!!" "கடுப்பை கெளப்பாம போயிரு ஆதிரா.. உன் அப்பாத்தான் அங்க உக்காந்துட்டு என் உசுரை வாங்கிக்கிட்டு இருக்காருன்னா.. நீ வேற..!!"

 "ஏன்.. அப்பாக்கு என்ன..??"

 "அந்த ப்ரஸ்க்காரன் நேத்து வந்து கல்யாண பத்திரிகை காப்பி குடுத்துட்டு போனான்.. தப்பு இருந்தா கரக்சன் பண்றதுக்கு..!!"

 "ஆமாம்.. நான்கூட பார்த்தேன்..!!"

 "அதை எங்க வச்சு தொலைச்சார்னு தெரியல.. வீடு பூரா தேடியாச்சு, எங்கயும் காணோம்..!! அது இப்ப உடனே வேணும்னு அங்கருந்து போனுக்கு மேல போனு..!!"

 "ஹாஹா..!! சரி சரி.. டென்ஷனாகாம தேடு.. காபி நானே போய் போட்டுக்குறேன்..!!" சமையலறை நோக்கி நடந்த ஆதிரா.. திரும்பிப் பார்க்காமலே அம்மாவிடம் இயல்பாக கேட்டாள்..!!

 "வனக்கொடிம்மா இன்னைக்கும் வரலையா..??"

 "வரலடி..!! கல்யாண வேலைலாம் அப்படி அப்படியே கெடக்குது.. இந்தநேரம் பாத்து அந்தப்புள்ளைக்கு உடம்புக்கு முடியாம போய்டுச்சு..!!"

 "ஹ்ம்ம்.. என்னாச்சாம் தென்றலுக்கு..??"

 "தலைல நீர் கோர்த்துக்குச்சு போல.. நாலு நாளாகியும் சரியாகல.. ஒரே இருமலு, தும்மலு..!! வனக்கொடி மட்டும் மதியமாவது வந்துர்றேன்னா.. பாப்போம்..!!"

 "ஓ..!! சரி சரி..!!" சமையலறை சென்று தானாகவே காபி தயாரித்து தனது அறைக்கு எடுத்து சென்றாள் ஆதிரா.. காபியை உறிஞ்சிக்கொண்டே ஒரு நாளிதழை புரட்டிக்கொண்டிருக்கையில்.. "ட்டிங் ட்டிங்..!!" என்றொரு சப்தம் அறைக்குள் சன்னமாக ஒலித்தது.. செல்ஃபோனுக்கு வருகிற மெசேஜ் அலர்ட்..!!

தனது செல்ஃபோனுக்கு எதுவும் மெசேஜ் வரவில்லை என்பதை உறுதி செய்துகொண்ட ஆதிராவுக்கு.. அருகில் கிடந்து ஒளிர்ந்த தாமிராவின் செல்ஃபோன் இப்போதுதான் பார்வையில் பட்டது..!! "ஃபோனை இங்கயே விட்டுட்டு போயிட்டாளா..??" என்று மனதுக்குள்ளேயே முனுமுனுத்தவாறு, வெகு இயல்பாக தங்கையின் செல்ஃபோனை கையில் எடுத்து பார்த்தாள்..!! கதிருடைய எண்ணிலிருந்து இருந்து மெசேஜ் வந்திருந்தது.. கவனத்தை செலுத்தி பார்ப்பதற்கு முன்பே, செல்ஃபோனின் மேற்புறம் மின்னிய மெசேஜ் வரிகள் அவளது கண்களை பளிச்சென்று தாக்கின..!!

 "என் காதலைத்தான் ஏத்துக்கல.. காலையாவது பிக்கப் பண்ணலாம்ல..?? ப்ளீஸ் தாமிரா..!!" என்கிற கெஞ்சல் வரிகள். அதைப்படித்ததும் ஆதிராவுடைய நெற்றியின் மையத்தில் பட்டென ஒரு சுருக்கம்..!!

 'கதிரிடம் தனது காதலை சொல்லிவிட்டதாகத்தானே தாமிரா சொன்னாள்..?? அப்புறமும் ஏன் இவன் இவ்வாறு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான்..??' என்று குழம்பிப்போனாள்..!! எதுவும் புரியாமல் தலையை திருப்பியவளின் பார்வையில் எதேச்சையாகத்தான் அது பட்டது..

அந்த புத்தகம்.. 'கண்ணாமூச்சி ரே ரே' என்கிற தலைப்பு வரிகள் மின்னுகிற அந்த புத்தகம்.. அந்த புத்தகத்துக்குள் இருந்து கொஞ்சமாய் வெளிநீட்டிக் கொண்டிருக்கிற அந்த மஞ்சள் நிற காகிதம்..!! ஆதிராவின் மனதுக்குள் இப்போது மெலிதான அதிர்வலைகள் கிளம்ப ஆரம்பிக்க.. எழுந்து சென்று அந்த புத்தகத்தை கையில் எடுத்தாள்.. நீட்டிக்கொண்டிருந்த அந்த காகிதத்தை வெளியே எடுத்தாள்..!!

அவள் சந்தேகப்பட்டது சரிதான்.. கீழே பூவள்ளி தேடிக்கொண்டிருக்கிற அதே காகிதம்தான்.. ஆதிராவுடைய திருமண அழைப்பிதழின் முதல் நகல்..!! அந்த காகிதத்தை பிரித்து பார்வையை வீசியவள்.. சுருக்கென்று ஒரு வலியை இதயத்துக்குள் உள்வாங்கினாள்..!! 'மணமகன்: சிபி' என்பது அவ்வாறே இருக்க.. 'மணமகள்: ஆதிரா' என்று அச்சடிக்கப்பட்டிருந்ததில்.. 'ஆதிரா'வை நீல மையால் அழித்து, 'தாமிரா'வென்று திருத்தப்பட்டிருந்தது..!! 'ஐ லவ் யூடா சிபி.. நீ எனக்கு வேணுண்டா..' என்று காகிதத்தின் குறுக்காக கிறுக்கப்பட்டிருந்தது..!! தாமிராவின் கையெழுத்து..!!

 அதை பார்க்க நேர்ந்த ஆதிராவின் மனநிலை, எப்படி மாறிப்போயிருக்கும் என்று விளக்கத் தேவையில்லை.. தங்கையின் மீது அவளுக்கு சுள்ளென்று ஒரு ஆத்திரம்.. 'எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும் அவளுக்கு..??' என்பது மாதிரியாக ஒரு ஆவேசம்..!! 'தான் காதலிப்பவன் என்று தெரிந்தும், இவள் எப்படி அவன்மீது காதலை வளர்த்துக்கொள்ளலாம்..?? அதுவும் இப்போது திருமணம் வரை வந்தபிறகும், இப்படி கிறுக்கி வைத்திருக்கிறாள் என்றால்.. கதிரைத்தான் காதலிக்கிறேன் என்று பொய் சொல்லி என்னை ஏமாற்றியிருக்கிறாள் என்றால்.. எவ்வளவு சின்னத்தனமான திருட்டு புத்தி அவளுக்கு..??' என்று தங்கையின் மீது பிறந்த கோவத்தின் வீரியம் அதிகமாகிக்கொண்டே சென்றது..!!

 ஆத்திரம் அதிகரிக்கும்போது மூளையின் செயல்பாடு மங்கிப் போகிறது..!! அந்த மைசூர் அரண்மனை புகைப்படம் ஆதிராவின் மனதுக்குள் இப்போது மீண்டும் வர.. அங்கிருந்து வந்ததிலிருந்தே தாமிரா அடிக்கடி சிபியுடன் கைபேசியில் பேசுவதும் ஞாபகத்துக்கு வர.. தங்கையை பற்றி ஒருவித குறுக்குப்புத்தியுடன் சிந்திக்க ஆரம்பித்தாள்..!! 'ஒருவேளை.. இவள் எனக்கு துரோகம் செய்கிறாளோ..??

வெளியே சிரித்தாலும், உள்ளுக்குள் இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்திட துடிக்கிறாளோ.. அதற்காகத்தான் அந்த மைசூர் பயணமோ..?? அத்தானின் மனதை மயக்க முயல்கிறாளோ.. அவருடன் எப்படி உரசிக்கொண்டு நின்றிருந்தாள்..?? இப்போது இங்குவந்தும் தினசரி அவரை தொல்லை செய்கிறாளோ.. அக்காவை கழற்றிவிட்டு தன்னை ஏற்றுக்கொள்ள கெஞ்சுகிறாளோ..??' ஆதிராவின் புத்தி அவ்வாறு தடம் மாறி சிந்திக்க.. தாமிராவின் மீது ஒரு தாங்கொணா வெறுப்பு கலந்த ஆத்திரம் பிறந்தது..!! தங்கையை உடனே சென்று பார்த்து, நாக்கை பிடுங்கிக்கொள்கிற மாதிரி, அவளை நான்கு கேள்விகள் கேட்கவேண்டும் போலிருந்தது..!!

ஆத்திரம் அவளது கண்ணை மறைக்க.. அவசரமாய் தனது அறையில் இருந்து கிளம்பினாள்..!! வீட்டின் பின்புற வாசலில் இருந்து வெளிப்பட்டு.. சிங்கமலை செல்கிற சாலையை அடைந்தாள்..!! ஒரு கையில் அவளது செல்ஃபோன்.. இன்னொரு கையில் அந்த மஞ்சள் காகிதம்.. கண்களில் ஒரு கோபக்கனல்.. உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் அப்படி ஒரு ஆவேசம்..!!

அந்த குறுகிய மலைப்பாதையில் விடுவிடுவென நடந்து.. சிங்கமலையின் உச்சி நோக்கி மேலேறிக் கொண்டிருந்தாள்..!! சிறிது தூரம் சென்றிருக்கையிலேயே.. சற்று தொலைவில்.. வேறொரு திசையில் இருந்து வனக்கொடி வருவது தெரிந்தது.. அவளது கைகள் நிறைய வெள்ளைநொச்சி இலைகள்..!!

ஆதிரா செல்வதை தூரத்தில் இருந்து பார்த்த வனக்கொடிக்கு.. அவளது நடையில் தெரிந்த வேகம் சற்றே உறுத்தலாக தோன்றியது..!! "ஆதிராஆஆ.. ஆதிராம்மா..!!" அங்கிருந்தே சப்தம் எழுப்பினாள்..!! வனக்கொடி அழைப்பதை கண்டுகொள்ளாமல், சரசரவென தொடர்ந்து மேல்நோக்கி நடந்துகொண்டிருந்தாள் ஆதிரா..!! வனக்கொடி இப்போது ஓட்டமும் நடையுமாக வந்து ஆதிராவை வழிமறித்தாள்..

அவளது கையை பிடித்துக்கொண்டு.. "எ..என்னம்மா.. என்னாச்சு.. எங்க போயிட்டு இருக்க..??" என்று பதற்றமாக கேட்டாள். "ஒன்னுல்லம்மா.. கையை விடுங்க..!!" "என்னன்னு சொல்லுமா.. ஏன் மூஞ்சி ஒரு மாதிரி இருக்கு..??" "ஐயோ.. ஒன்னுல்ல.. நீங்க வீட்டுக்கு போங்க.. எனக்கு இங்க ஒரு வேலை இருக்கு..!!" "என்ன வேலை..??" "வந்து சொல்றேன்.. மொதல்ல கையை விடுங்க..!!" "சொல்லும்மா.. எனக்கு அப்டியே நெஞ்சு அடிச்சுக்குது..!!" "ப்ச்.. சொல்றேன்ல.. விடுங்க கையை..!!" உடம்பை முறுக்கிக்கொண்டு வனக்கொடியின் கையை பலமாக உதறித் தள்ளினாள் ஆதிரா..

தடுமாறிப்போன வனக்கொடி கால்கள் பின்னிக்கொள்ள தரையில் சரிந்தாள்.. ஒரு சிறிய பள்ளத்தில் கடகடவென உருண்டாள்..!! வனக்கொடியை திரும்பிப்பார்க்கிற மனநிலையில் ஆதிரா அப்போது இல்லை.. விறுவிறுவென தனது நடையை தொடர்ந்தாள்..!! வனக்கொடி எழுந்து பார்ப்பதற்கு முன்பே.. அவளது கண்பார்வையில் இருந்து மறைந்து போயிருந்தாள்..!! "ஆதிராம்மா.. ஆதிராம்மா..!!" தனியே நின்றவாறு தலையை திருப்பி திருப்பி பார்த்து கத்திய வனக்கொடி.. ஆதிரா எந்தப்பக்கம் சென்றாள் என்பது தெரியாமல், திசைதப்பிப்போய் வேறொரு பாதையில் ஓட ஆரம்பித்தாள்..!!

 அதேநேரத்தில்.. தாமிரா சிங்கமலையில் தனியாக அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள்..!! சிபி தினசரி அவளிடம் பேசி தனது காதலை வலியுறுத்தியது, அவளது மனநிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.. அக்கா மீதான அன்பும், சிபி மீதான காதலும் அவளது மனதுக்குள் ஒன்றோடொன்று மோதி சண்டையிட்டுக் கொண்டிருந்தன..!!

இரண்டு வாரங்களுக்கு முன்பு தெளிவான ஒரு மனநிலையில் இருந்தவள்.. இப்போது என்ன முடிவு எடுப்பது என்றே அறியாதவளாய் குழம்பிப் போயிருந்தாள்..!! அதன்பிறகு ஒரு ஐந்தே நிமிடங்களில் ஆதிரா சிங்கமலையின் உச்சிக்கு வந்து சேர்ந்தாள்.. எங்கேயோ வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்த தாமிராவின் எதிரே படக்கென சென்று நின்றாள்.. என்னவென்று புரியாமல் அவள் திகைப்பாக பார்க்க, கையிலிருந்த அந்த மஞ்சள் காகிதத்தை, அவளுடைய முகத்தில் கசக்கி விட்டெறிந்தாள்..!! "ச்சீய்.. நீயெல்லாம் ஒரு தங்கச்சியாடி..??" என்று எடுத்ததுமே சீறினாள். என்ன நடந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ள, தாமிராவுக்கு அதிக அவகாசம் தேவைப்படவில்லை.. பட்டென புரிந்துகொண்டாள்..!!

அவ்வாறு புரிந்ததுமே.. தளர்ந்துபோய் மெல்ல எழுந்தவள், தடுமாற்றமாக அக்காவிடம் சொன்னாள்..!! "அ..அவசரப்படாதக்கா.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு..!!"

 "போதுண்டி.. நீ சிரிச்சு சிரிச்சு பசப்புனதுலாம் போதும்..!! இன்னும் என்ன சொல்லப்போற.. என்ன சொல்லி நம்பவச்சு, என் கழுத்தை அறுக்கப்போற..??" "என்ன பேசுற நீ..?? நான் என்ன நம்பவச்சு கழுத்தை அறுத்துட்டேன்..??" "பின்ன இதுக்கு என்னடி அர்த்தம்..??" கசக்கிப்போட்ட காகிதத்தை கைநீட்டி ஆதிரா கேட்க, "அ..அது.. நா..நானும் அத்தானை லவ் பண்றேன்னு அர்த்தம்..!!" தாமிரா திக்கித்திணறி சொன்னாள்.

 "நான் சின்ன வயசுலே இருந்தே அவரை லவ் பண்றேன்..!!" "நானுந்தான்க்கா.. நீ எங்கிட்ட சொல்லிட்ட.. நான் வெளில சொல்லல.. அவ்வளவுதான்..!! நீ அவர்மேல எவ்வளவு ஆசை வச்சிருக்கியோ.. நானும் அவர் மேல அதே அளவு ஆசை வச்சிருக்கேன்..!!" "ஓ..!! அந்த ஆசைலதான் அந்த மாதிரி வேலைலாம் பண்ணுனியா..??" குத்தலாக கேட்டாள் ஆதிரா.

 "எந்த மாதிரி வேலை..??" தாமிராவிடமும் இப்போது வேகம் கூடியிருந்தது. "நடிக்காதடி..!! ஃபோட்டோலயே அப்படி உரசிக்கிட்டு நிக்கிற.. நேர்ல என்ன பண்ணிருப்ப..?? கூடப்பொறந்த அக்காவுக்கே துரோகம் பண்ண துணிஞ்சிட்டல..?? நீ மைசூர் போனதே அவரை மயக்குறதுக்குத்தான..??" "ச்சீய்.. வாயை கழுவுக்கா.. அசிங்கமா பேசாத..!! மைசூர்ல என்ன நடந்துச்சுன்னு உனக்கு தெரியுமா..??"

 "என்ன நடந்திருக்கும்.. நான் சொன்னதுதான் நடந்திருக்கும்..!! அதான் இங்கவந்தும் இன்னமும் டெயிலி அவர் மனசை கரைக்க ட்ரை பண்ணிட்டு இருக்கியே..??" "அறிவில்லாம பேசாதக்கா..!! மொதல்ல மைசூர்ல என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுட்டு பேசு..!!" "சரி சொல்லு.. என்ன நடந்துச்சு..??" இப்போது தாமிரா மைசூரில் நடந்த சம்பவங்களை அக்காவுக்கு சுருக்கமாக எடுத்து கூறினாள்.. ஆரம்பத்தில் சாதாரணமாக கேட்டுக்கொண்ட ஆதிரா, பிறகு மெல்ல மெல்ல முகம் மாறினாள்..!!

தங்கையை பற்றி தான் நினைத்தது தவறோ என்கிற குழப்பம் ஒருபுறம்.. பொய்யை சொல்லி ஏமாற்றுகிறாளோ என்கிற குறுகுறுப்பு இன்னொருபுறம்..!! சிபி தாமிராவைத்தான் காதலிக்கிறான் என்ற செய்தியை ஆதிராவால் சுத்தமாக நம்பமுடியவில்லை.. நம்புவதற்கும் அவள் விரும்பவில்லை.. இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்றே நினைத்தாள்..!!




"அத்தான் என்னைத்தான்க்கா லவ் பண்றாரு..!! அன்னைக்கு அவரை கெஞ்சி.. கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லவச்சதே நான்தான்.. ஆனா அவர் முழுமனசா சரின்னு சொல்லல..!! இப்பவும் அவர் மனசு பூரா நான்தான் இருக்கேன்.. இந்தக் கல்யாணத்துல அவருக்கு இஷ்டம் இல்ல..!! என் மனசை மாத்திக்க சொல்லி, அவர்தான் தெனந்தெனம் என்னை கெஞ்சிக்கிட்டு இருக்காருக்கா..!!" தாமிரா சொல்லி முடிக்க,

 "இ..இல்ல.. நீ பொய் சொல்ற.. நான் நம்பமாட்டேன்..!!" ஆதிராவிடம் ஒரு பதற்றம். "நான் ஏன் பொய் சொல்லணும்..?? சரி.. கைலதான் ஃபோன் வச்சிருக்கல.. அப்படியே அத்தான் நம்பருக்கு அடிச்சு கேளு.. முழுமனசோடதான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னிங்களான்னு கேளு.. என்ன சொல்றார்னு பார்ப்போம்..!!"

 "....................." செல்ஃபோனை உயர்த்திய ஆதிராவின் கை, டயல் செய்யாமல் அப்படியே தயங்கி நின்றது.

 "ம்ம்ம்.. போடு.. பேசலாம்.. மூணு பேரும் பேசி இன்னைக்கு ஒரு முடிவு எடுத்துடலாம்..!!" தாமிரா அவ்வாறு துரிதப்படுத்த.. ஆதிராவுக்கு இப்போது தங்கையின் வார்த்தைகளில் ஒரு நம்பிக்கை வந்திருந்தது..!! அதேநேரம்.. 'சிறுவயது முதலே சிபியை திருமணம் செய்துகொள்ள நினைத்த தனது ஆசைக்கு ஆபத்து வந்துவிடுமோ' என்பது மாதிரியான ஒரு பதற்றமும் அதிக அளவில் வந்திருந்தது..!! அவளுடைய உடல் மெலிதாக வெடவெடக்க.. எச்சில் கூட்டி ஒருமுறை விழுங்கிக்கொண்டாள்..!!

 "என்ன யோசிக்கிற.. ஃபோன் பண்ணு..!!"

 "இ..இல்ல.. நான் பண்ணல.. நீ சொல்றதை நம்புறேன்..!!" ஆதிரா சொல்லிவிட்டு அமைதியாக தலையை குனிந்துகொண்டாள்.. அவள் மனதுக்குள் இப்போது ஒரு குற்ற உணர்வு..!!

தாமிரா அக்காவின் முகத்தையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளை நம்பவைத்துவிட்ட திருப்தி ஒருபுறம் இருந்தாலும், அத்தனை நேரம் அவள் அள்ளிவீசிய வார்த்தைகள் தந்த வேதனையும் இன்னொருபுறம் அதிகமாவே இருந்தது..!!

காயம்பட்டு நொந்துபோனவளாய் ஆதிராவிடம் சொன்னாள்..!!

 "என்னல்லாம் சொல்லிட்டக்கா என்னை பார்த்து.. என்னைப்பத்தி எப்படிலாம் நெனச்சுட்ட..?? பசப்புறவ.. துரோகம் பண்றவன்னு..!! எப்படிக்கா அப்படிலாம் உன்னால பேச முடிஞ்சது..??"

 "................................." ஆதிரா பதிலெதுவும் பேசவில்லை. குற்ற உணர்வில் குனிந்த தலை குனிந்ததாகவே இருந்தது.

 "நீயெல்லாம் ஒரு தங்கச்சியான்னு கேட்டுட்டல..?? சின்னவயசுல இருந்து நான் உனக்காக என்னல்லாம் பண்ணிருக்கேன்..??"

 "................................."

 "உன் கழுத்துல போட்ருக்குறியே அந்த முத்துமாலை.. அது உன்கிட்ட எப்படி வந்துச்சுன்னு ஞாபகம் இருக்கா..??"

 "................................."

 "நீ கட்டியிருக்குற சேலை.. கைல வச்சிருக்குற செல்ஃபோன்.. காதுல தொங்குற ஜிமிக்கி மொதக்கொண்டு நான் உனக்கு விட்டுக் குடுத்ததுடி..!! எல்லாம்.. உன் மனசுக்கே தெரியாம உனக்கு நான் விட்டுக் குடுத்தது..!!"

தாமிரா திடீரென சீற்றமாக சொல்ல, "................................." ஆதிரா அவளையே மிரட்சியாக பார்த்தாள். தாமிராவின் முகம் இப்போது பட்டென உணர்ச்சியை மாற்றிக் கொண்டது..

ஆவேசம் கொப்பளித்த அந்த முகத்தில் இப்போது ஒரு பரிதாபம் பொங்கி வழிந்தது.. கண்ணிரண்டிலும் கண்ணீர் தளும்ப சொன்னாள்..!!

 "அத்தானையும் அந்த மாதிரிதான் உனக்கே விட்டுக் குடுத்துடலாம்னு நெனைச்சேன்.. ஆனா என்னால முடியலக்கா..!! அவர் என்னை லவ் பண்றார்னு தெரியிறவரைக்கும் எனக்கும் ஒன்னும் தெரியல.. ஆனா அது தெரிஞ்சதுக்கப்புறம்.. ரொம்ப கஷ்டமா இருக்குதுக்கா..!! மனசுக்குள்ள ஆசையை வச்சுக்கிட்டு.. வெளில என்னால வேஷம் போட முடியல..!! 'என காதலை ஏத்துக்கோ'ன்னு அவர் கெஞ்சுறப்போ.. சத்தியமா என்னால முடியலக்கா..!! 'நானும் உங்களை லவ் பண்றேன் அத்தான்'னு ஃபோன்லயே கத்தனும் போல இருக்கும்..!! இப்ப வரைக்கும் நான் அதை செய்யல.. ஏன்...?? எல்லாம் உனக்காகத்தான்..!!"

 "................................."

 "இனிமேயும் என்னால நடிக்க முடியாதுக்கா.. தெனந்தெனம் இந்த வேதனையை என்னால தாங்க முடியல..!! எனக்கு அத்தான் வேணும்க்கா.. ப்ளீஸ்..!!" ஆதிராவை கையெடுத்து கும்பிட்டு கெஞ்சலாக சொல்லி முடித்தாள் தாமிரா..!! அதுவரை குற்ற உணர்வுடன் தலை கவிழ்ந்திருந்த ஆதிரா.. 'எனக்கு அத்தான் வேணும்க்கா' என்று தாமிரா சொன்னதுமே.. வெடுக்கென நிமிர்ந்து பார்த்தாள்..!!

சிறுவயதிலிருந்தே சிபி மீது அவள் கொண்டிருந்த கண்மூடித்தனமான காதல்.. உடன்பிறந்த தங்கையையே இப்போது எதிரியாக காட்டியது..!! உடம்பை விறைப்பாகவும், முகத்தை முறைப்பாகவும் வைத்துக்கொண்டு தாமிராவிடம் சொன்னாள்..!!

 "இங்க பாருடி.. நான் உன்னைப்பத்தி தப்பா பேசினதுக்கு மொதல்ல என் மனசார மன்னிப்பு கேட்டுக்குறேன்.. என்னை மன்னிச்சிடு.. ப்ளீஸ்..!! அதுமாதிரி.. இத்தனை நாளா எனக்கு என்னன்னவோ விட்டுக்குடுத்தேன்னு சொல்றியே.. அதுக்கும் ஒரு பெரிய தேங்க்ஸ் சொல்லிக்கிறேன்.. தேங்க்யூ ஸோ மச்..!!

ஆனா.. அதுக்குலாம் பரிகாரமா அத்தானை உனக்கு விட்டுக் குடுக்கனும்னு சொன்ன பாத்தியா.. அது மட்டும் என்னால முடியாது..!!"

 "அத்தான் எனக்கு வேணும்னுதான் சொன்னேன்.. அதுக்காக உன்னை விட்டுக்குடுக்க சொல்லல..!!"

 "அ..அப்புறம்..??" ஆதிரா குழப்பமாக கேட்க, தாமிரா சற்றே நிதானித்தாள்..!!

ஒரு சில வினாடிகளுக்கு அப்புறம்.. குரலை தாழ்த்திக்கொண்டு தடுமாற்றமாக சொன்னாள்..!!

 "நா..நாம.. நாம ரெண்டு பேருமே அவரை கல்யாணம் பண்ணிக்கலாம்.. ஓகே வா..??" கேட்டுவிட்டு தாமிரா அக்காவை ஏறிட, அவளுக்கோ தங்கை மீது சுள்ளென்று ஒரு கோபம்.

 "உனக்கென்ன பைத்தியமாடி..??" என்று எரிந்து விழுந்தாள்.

 "ஆமாம் பைத்தியந்தான்..!! அத்தான் மேல எனக்கு அவ்வளவு ஆசை..!! இப்படி ஒண்ணுமே இல்லாம இருக்குறதுக்கு.. ரெண்டாவது பொண்டாட்டியா இருக்கக்கூட எனக்கு சம்மதம்..!! நீயும் அவரை ரொம்ப லவ் பண்ற.. நானும் அவரை ரொம்ப லவ் பண்றேன்.. ரெண்டு பேரும் சேர்ந்து அவரை ரொம்ப நல்லா பாத்துக்கலாம்..!! ஒருத்தொருக்கொருத்தர் போட்டி பொறாமை இல்லாம.. அவங்கவங்க லவ்வை நல்லவிதமா ஷேர் பண்ணிக்கலாம்..!!"

தாமிராவின் நியாயத்தை ஆதிராவால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

  "ச்சீய்.. பேசுற பேச்சைப்பாரு.. வெக்கமா இல்ல..?? பைத்தியந்தான்டி புடிச்சிடுச்சு உனக்கு..!!"

 "ஐயோ.. இது ஒன்னும் நாட்டுல நடக்காதது இல்லக்கா.. எல்லாத்துக்கும் அவங்கவங்க மனசுதான் காரணம்.. எனக்கு இது ஓகேன்னு தோணுது..!! எல்லாரோட கைல கால்ல விழுந்தாவது இதுக்கு சம்மதம் வாங்க வேண்டியது என் பொறுப்பு.. என்ன சொல்ற..??"

 "என்னால முடியாது..!! நீ வேணா பெரிய புரட்சி பண்றவளா இருக்கலாம்.. நான் அப்படி இல்ல..!! நல்லா கேட்டுக்கா.. அவரு எனக்கு மட்டுந்தான்.. இன்னும் ரெண்டு வாரத்துல எங்களுக்கு கல்யாணம்.. அவரும் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லியாச்சு.. அவ்வளவுதான்..!! அவரும் நானும் புருஷன் பொண்டாட்டியா ஆகப்போறோம்.. அதை எவ நெனச்சாலும் தடுத்து நிறுத்தமுடியாது..!!" ஆதிராவின் சீற்றத்தில், தாமிராவும் சட்டென சூடானாள்.

 "ஏன்..?? நான் நெனச்சா.. அதை தடுத்து நிறுத்த முடியும்..!! ஓகேன்னு ஒரு வார்த்தை சொன்னா போதும்.. அடுத்த நிமிஷம் அத்தான் இந்தக் கல்யாணத்தை நிறுத்திடுவாரு..!! அப்பா, அம்மாவும் அதை பெருசா எதுக்கப் போறது இல்ல..!!" தாமிராவின் பதிலுக்கு, ஆதிரா சற்றும் சளைக்கவில்லை. 

"அப்படி நீ செஞ்சா.. அதுக்கப்புறம் என்னை நீ பொணமாத்தான் பார்ப்ப..!!" வெடுக்கென சொல்லிவிட்டு.. தங்கையின் பதிலுக்கு கூட காத்திராமல்.. அங்கிருந்து விடுவிடுவென கிளம்பினாள் ஆதிரா..!! அக்கா இத்தகைய அஸ்திரத்தை எறிவாள் என்று, தாமிரா சுத்தமாக எதிர்பார்த்திரவில்லை.. ஒரு சிலவினாடிகள் அப்படியே விக்கித்துப் போய் நின்றிருந்தாள்..!!

அப்புறம் திடீரென ஏதோ தோன்றியவளாய்.. ஆதிராவின் முதுகை பார்த்து கத்தினாள்..!!

 "Game or Shame..??" தாமிராவின் வார்த்தைகள் காதில் விழுந்ததும்.. அப்படியே சரக்கென ப்ரேக்கடித்து நின்றாள் ஆதிரா..!!

தலையை கொஞ்சம் கொஞ்சமாய் திருப்பி தங்கையை பார்த்தாள்..!! தாமிரா தனது இரண்டு கைகளையும் முகத்திற்கு முன்பாக விரித்து வைத்தவாறு நின்றிருந்தாள்.. அவளது ட்ரேட் மார்க் மேனரிசம்..!!

எப்போதும் அந்த கைகளின் இடைவெளியில் தெரிகிற அவளது ஒற்றைக்கண்.. குறும்பாக ஒரு சிமிட்டு சிமிட்டும்..!! இப்போதோ.. பொலபொலவென கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தது..!!

 "எ..என்னடி சொல்ற..??" ஆதிரா சற்று குழப்பமாகவே கேட்டாள். "ரெண்டு பேரும் ஒரு கேம் ஆடலாம்..!! யார் ஜெயிக்கிறாங்களோ, அவங்களுக்கு தோத்தவங்க அத்தானை விட்டுக் குடுத்துடணும்.. அத்தோட இந்த சேப்டரை க்ளோஸ் பண்ணிடனும்.. அவங்கவங்க வழில அவங்கவங்க வாழ்க்கையை பாத்துக்கிட்டு போயிட்டு இருக்கணும்..!! ஓகேவா..??"

 "லூசா உனக்கு..?? கேம் ஆடி டிஸைட் பண்ற மேட்டராடி இது..?? எதுலதான் வெளையாடுறதுன்னு உனக்கு வெவஸ்தை இல்ல..??"

 "இது வெளையாட்டு இல்லக்கா.. ஐ'ம் டாம் சீரியஸ்..!! நீ ஜெயிச்சிட்டா.. கடைசி வரைக்கும் என் காதலை பத்தி அத்தான்ட்ட நான் வாயே தெறக்க மாட்டேன்.. அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ சந்தோஷமா வாழலாம்..!!

சப்போஸ் நான் ஜெயிச்சிட்டா.. அத்தானை எனக்கு விட்டுக் குடுத்துட்டு நீ வேற கல்யாணம் பண்ணிக்கணும்.. அவ்வளவுதான்..!! சொல்லு.. Game or Shame..??" தங்கையின் வார்த்தைகளில் இருந்த தீவிரத்தன்மை.. ஆதிராவையும் சற்று நிதானிக்க வைத்தது.. அமைதியாக ஒருகணம் யோசித்தாள்..!!

 'எப்போதும் எனக்கு விட்டுக் கொடுப்பதற்காகவே இந்த மாதிரி விளையாட்டு வைப்பதாக இவள் சொல்கிறாளே.. இதுவும் அதுபோலொரு விளையாட்டாக இருக்குமோ..?? என்னுடைய மனது நோகாமலே சிபியை எனக்கு விட்டுக் கொடுப்பதற்காக இப்படி ஒரு ஆட்டத்தை முன்வைக்கிறாளோ..?? ஆட்டத்தில் கலந்துகொண்டால், இந்த பிரச்சினைக்கு எளிதாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியுமோ..??' என்பது மாதிரியாக ஒரு எண்ணம் ஆதிராவின் மனதுக்குள் ஓடவும்.. சிறிது தடுமாற்றத்துடனே சொன்னாள்..!!

 "Game..!!!!"

 "குட்..!!" கண்களில் கண்ணீருடன், உதட்டில் ஒரு புன்னகையையும் சிந்தினாள் தாமிரா.

 "என்ன கேம்..??" ஆதிரா கேட்கவும், தாமிரா இப்போது அந்த இடத்தை ஒருமுறை சுற்றிப் பார்த்தாள்.. ஒரு சில வினாடிகள்.. பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாய், அக்காவிடம் தெளிவான குரலில் சொன்னாள்..!!

 "அதோ.. அந்த பூவை யாரு மொதல்ல போய் பறிக்கிறாங்களோ.. அவங்கதான் வின்னர்..!!" தாமிரா கைநீட்டிய திசையில் ஆதிரா பார்வையை வீசினாள்..!!

 சிங்கமுக சிலை வடிக்கப்பட்டிருந்த மலைமுகட்டில்.. வழுக்குப்பாறைகள் நிறைந்த ஒரு பிரதேசத்தில்.. ஒரு பாறை இடுக்குக்குள் இருந்து ஒற்றையாக வெளியே நீட்டிக்கொண்டிருந்தது அந்த மலர்.. செக்கச்செவேல் என்று சிவந்துபோய், வித்தியாசமான இதழமைப்பு கொண்ட ஒரு அரியவகை மலர்..!!

அணிலால் தட்டிவிடப்பட்ட சிவப்பு மை, கண்ணாமூச்சி ரே ரே புத்தகத்தில் ஒரு ஓவியம் தீட்டியதே.. அதே மலர்..!! போட்டி என்னவென்று தெரிந்ததும் ஆதிரா சற்று மிரண்டுதான் போனாள்.. அந்த மலரை பறிப்பது அவ்வளவு கடினமானது மட்டுமல்ல, உயிருக்கே மிக ஆபத்தான காரியம் என்றும் அவளுக்கு தெளிவாக உறைத்தது..!!

 "ஏய்.. என்ன வெளையாடுறியா..?? அதுலாம் ரொம்ப கஷ்டம்டி..!!" என்று மறுத்து பார்த்தாள்.

 "கேம்னா கேம்தான்..!! லைஃப்ல கஷ்டப்படாம எதுவும் கெடைக்காது..!! அத்தான் வேணும்னா.. அந்த பூவை பறிக்கிறதை தவிர உனக்கு வேற வழியில்ல..!!"

 "ஏய்..!!"

 "ரெடி.. ஒன்.. டூ.. த்ரீ.. கோ..!!" தாமிரா தானாக சொல்லிவிட்டு, அந்த மலரை பறிக்கிற முனைப்புடன் மலையை நோக்கி ஓடினாள்.. ஓரிரு வினாடிகளுக்கு அப்புறமே ஆதிரா சுதாரித்துக் கொண்டாள்.. கையிலிருந்த செல்ஃபோனை ரவிக்கைக்குள் திணித்துவிட்டு, தானும் தங்கையின் பின்னால் ஓடினாள்..!!

 சிறுவயதில் இருந்து சின்ன சின்ன விஷயங்களுக்கென ஜாலியாக விளையாடிய ஒரு விளையாட்டை.. இப்போது வாழ்க்கையை தீர்மானிக்கப் போகிற ஒரு பெரிய விஷயத்துக்காக, அக்காவும் தங்கையும் ஆடத் துணிந்திருந்தார்கள்..!!

இருவரும் பரபரவென அந்த மலையில் ஏறினார்கள்..!! பாறைகளில் தங்கள் கைவிரல்களை அழுந்தப் பதித்து.. உடலை எக்கி எக்கி கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி.. அந்த மலரை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்தார்கள்..!! இருவரிலும் தாமிராதான் மிக வேகமாக இருந்தாள்.. அவளது வேகத்துக்கு ஆதிராவால் ஈடுகொடுக்க முடியவில்லை..!!

 தங்கையின் வேகத்தை பார்த்து ஆதிரா மிரண்டுபோனாள் என்றுதான் சொல்லவேண்டும்.. அவளது காலடியை தாண்டி இவளால் மேலே முன்னேற முடியவில்லை.. இருவருக்கும் இடையே அவ்வளவு பெரிய இடைவெளி.. இந்த வேகத்தில் சென்றால், சீக்கிரமே அந்த மலரை தாமிரா கைப்பற்றிவிடுவாள் என்று தோன்றியது..!!

 தாமிரா விட்டுக்கொடுப்பதைத்தான் இத்தனை நாளாய் ஆதிரா பார்த்திருக்கிறாள்.. முதன்முறையாக தனக்கு சரிக்கு சரி போட்டியிடுவதை, அப்படியே திகைத்துப்போய் பார்த்தாள்..!!

 அக்காவும், தங்கையும் இப்போது தளப்பரப்பில் இருந்து பதினைந்து, இருபது அடி உயரத்திற்கு சென்றிருந்தனர்.. அந்த மலர் நீண்டிருந்த பாறையிடுக்கின் வெகு அருகே நகர்ந்திருந்தனர்..!! தாமிராதான் அந்த மலருக்கு மிக நெருக்கமாக இருந்தாள்.. அவளது பாதத்துக்கு நெருக்கமாக ஆதிரா..!! தாமிரா கையை நீட்டி அந்த மலரை பறிக்க முனைகையில்தான் அது நடந்தது..

பாசி படர்ந்திருந்த ஒரு பாறைப்பரப்பில் தாமிராவின் வலதுகால் அழுத்தமாக அமர, அப்படியே விழுக்கென்று வழுக்கிக்கொண்டது..!! "ஆஆஆஆஆஆஆஆ..!!!!" வழுக்கிய வேகத்தில் அவளது கைகள் பிடிமானத்தை இழந்துபோக.. சர்ரென கீழே சரிந்தாள் தாமிரா..!! தன்னை பின்தொடர்ந்து மேல்வந்துகொண்டிருந்த அக்காவின் மீது சென்று தொம்மென மோதினாள்..!! தங்கை வந்து இடித்ததில் ஆதிராவும் நிலைகுலைந்தாள்.. பாறையை பற்றியிருந்த அவளது பிடியும் விட்டுப்போக, தாமிராவுடன் சேர்ந்து தானும் கீழே சரிந்தாள்..!!

 "ஆஆஆஆஆஆஆஆ..!!!!" இருவரும் அந்த இருபது அடி உயர சரிவில் இருந்து கடகடவென கீழே உருண்டார்கள்..!! அவர்களது முகம், கை, கால் எல்லாம் கரடுமுரடான பாறையில் உராய்ந்து சிராய்த்துக்கொள்ள.. சரசரவென உருண்டு உருண்டு தளப்பரப்பிற்கு வந்தார்கள்..!!

தளப்பரப்பின் அந்தப்பக்கம் ஆயிரத்து ஐநூறு அடி உயர சரேல் பள்ளத்தாக்கு.. பள்ளத்தாக்கின் அடியில் குழலாறு..!!

யாரும் கவனமில்லாமல் கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காக எழுப்பப்பட்டிருந்த.. இரும்புக்குழாய்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு தடுப்புச்சுவர்..!! உருண்டவேகத்தில் அந்த தடுப்புச்சுவரை சென்று டமாரென்று மோதினார்கள் இருவரும்..!!

 "ஆஆஆஆஆஆஆஆ..!!!!" இற்றுப்போன ஒரு இரும்புக்குழாய் படாரென்று உடைந்துகொள்ள.. அந்த இடைவெளியின் வழியே பள்ளத்தாக்குக்குள் சரிந்தாள் தாமிரா.. அவளை பின்தொடர்ந்து வந்த ஆதிராவின் கைக்குள் வலுவான ஒரு பிடிமானம் சிக்கிக்கொள்ள, இன்னொரு கையால் தங்கையின் கையை எட்டி பிடித்தாள்..!!

 "ஆஆஆஆஆஆஆஆ..!!!!" ஆதிரா இப்போது தளப்பரப்பில் ஓரளவுக்கு வசதியாக கிடந்தாள்.. அவளது ஒருகை தடியான ஒரு இரும்புக்குழாயை இறுகப் பற்றியிருந்தது.. இன்னொரு கை தாமிராவின் இடதுகையை இழுத்து பிடித்திருந்தது..!!

தாமிரா மட்டும் ஆயிரத்து ஐநூறு அடி மலைச்சரிவில் அப்படியும் இப்படியுமாக அந்தரத்தில் ஊசலாடிக் கொண்டிருந்தாள்.. அக்கா தனது கையை பற்றியிருக்க, இவளும் அவளது கையை அழுந்தப் பற்றியவாறு தொங்கிக்கொண்டிருந்தாள்.!!

 "அக்காஆஆ.. அக்காஆஆ..!!!!" பயத்தில் மிரண்டுபோய் அலறினாள்.

 "தாமிராஆஆஆ..!!!" தங்கையின் எடை தந்த வேதனையுடன் பற்களை கடித்து கத்தினாள் ஆதிரா.

 "மே..மேல தூக்குக்கா.. மேல தூக்கு..!!" 

"மு..முடியலடி.. கஷ்டமா இருக்கு..!!" 

"கொஞ்சம்க்கா.. ட்ரை பண்ணு...!!"

 "இ..இருடி..!!" "விழுந்துருவேன் போல இருக்குக்கா.. சீக்கிரம்..!!"

 "கொஞ்சம் இருடி..!!" ஆதிரா இப்போது தனது கால் ஒன்றை சற்றே மடக்கினாள்.. தனது நிலையை உறுதியாக்கிக்கொண்டு தங்கையை மேலே தூக்கிவிட வேண்டும் என்று நினைத்தாள்..!!

அப்போதுதான்.. அவளது மனநிலையில் அந்த மாற்றம்..!! கூட்டம் கூட்டமாய் நாட்டுக்குள் வாழ்கிற ஒரு மிருகம்தான் மனிதன் என்பவன்..!! சட்டதிட்டங்களோ, சொந்தபந்தங்களோ இல்லாமல் போய்விட்டால்.. எந்த மனிதனிடமும் மனிதகுணத்தை காண இயலாது..!!

ஒருவன் எவ்வளவுதான் நல்லவனாய் இருந்தாலும்.. அவனுக்குள்ளும் ஒரு மிருக குணம் ஒழிந்திருக்கும்..!! அக்குணம் எங்கே ஒளிந்திருக்கிறது என்று எவருக்கும் தெரியாது.. எப்போது வெளிப்படும் என்றும் யாருக்கும் புரியாது..!!

ஆதிராவுக்குள் ஒளிந்திருந்த ஒரு மிருககுணம் அப்போது வெளிப்பட்டது..!! சிறுவயதில் இருந்தே சிபி மீது அவள் வைத்திருந்த தீராக்காதல்.. அந்தக்காதல் கல்யாணத்தில் கனியப்போகிறதென்ற அவளது சந்தோஷம்..

அந்த சந்தோஷத்திற்கு சமாதி கட்டுவது மாதிரியான தங்கையின் காதல்.. 'நான் நெனச்சா இந்த கல்யாணத்தை நிறுத்த முடியும்' என்ற தாமிராவின் பேச்சு.. போட்டியில் வென்று சிபியை அடைய தாமிரா காட்டிய வேகம்.. எல்லாமுமாக சேர்ந்து ஆதிராவின் ஆழ்மனதுக்குள் புதைந்திருந்த அந்த மிருககுணத்தை படக்கென வெளிப்பட செய்தன..!!
 "ம்ம்ம்.. மேல இழுக்கா.. சீக்கிரம்..!!" தாமிரா அந்தரத்தில் துடித்துக் கொண்டிருந்தாள். ஆதிராவின் முகம் திடீரென ஒரு திருட்டுச்சாயம் பூசிக்கொள்ள, தாமிராவை இறுகப் பற்றியிருந்த பிடியை மெல்ல மெல்ல தளர்த்தினாள்..

தங்கையின் கையோடு அழுந்தியிருந்த அவளது ஐந்து விரல்களும், கொஞ்சம் கொஞ்சமாய் இளக்கம் கொடுத்தன..!! ஓரிரு விநாடிகள்தான்.. ஆதிராவின் மொத்த மனமாற்றமுமே ஓரிரு விநாடிகள்தான்.. காதலின் வெற்றியை பெரிதென கருதிய ஆதிரா, அதற்கென தங்கையையும் பலிகொடுக்க நினைத்துவிட்ட அந்த ஓரிரு விநாடிகள்.. இந்தக்கதைக்கு மிக மிக முக்கியமான அந்த ஓரிரு வினாடிகள்..!!

 ஆனால்.. அந்த ஓரிரு வினாடிகளே தாமிராவுக்கு போதுமானதாக இருந்தது.. அக்காவின் உள்நோக்கத்தை புரிந்துகொள்வதற்கு..!! அதிர்ச்சியில் அப்படியே ஸ்தம்பித்துப் போனாள் என்றுதான் சொல்லவேண்டும்.. ஆதிரா தன்மீது கோவத்தில் இருக்கிறாள் என்று தாமிராவுக்கு நன்றாக தெரியும்.. ஆனால், இப்படி தனது உயிரை தொலைத்தாவது அவளது காதலைப் பெற எண்ணுவாள் என்று சத்தியமாக தாமிரா நினைத்திருக்கவில்லை..!!

அக்காவின் முகத்தையே ஏக்கமும், பரிதாபமுமாக பார்த்தாள்..!! "அக்காஆஆஆஆ..!!" என்று இதயத்தை பிசைவது மாதிரியாக ஈனஸ்வரத்தில் ஓசை எழுப்பினாள். அவ்வளவுதான்..!! தங்கையின் பரிதாப முகத்தை பார்த்த ஆதிரா, இப்போது பட்டென சுதாரித்துக் கொண்டாள்.. இயல்பாகவே அவளுக்கு தங்கை மீதிருக்கிற அன்பு, திடீரென எழுந்த அந்த மிருக குணத்தை விரட்டியடித்திருந்தது..!!

'ச்சே. என்ன காரியம் செய்ய துணிந்துவிட்டோம்..' என்று தன்னைத்தானே கேவலமாக கடிந்துகொண்டவாறு.. "தாமிராஆஆஆ..!!!" என்று பதிலுக்கு பாசமாக அழைத்தபடியே, தாமிராவின் கையை மீண்டும் இறுகப் பற்றிக்கொள்ள முயன்றாள்.. ஆனால்.. அது தாமதமான முயற்சியாக அமைந்துபோனது..!!

ஆதிராவின் கணநேர செயல்பாடு தந்த அதிர்ச்சியில், வாழவேண்டும் என்கிற எண்ணமே தாமிராவுக்குள் இற்றுப்போயிருந்தது.. அக்கா தனது கையை மீண்டும் பற்றிக்கொள்ளும் முன்பே, இவள் அக்காவின் கையை பிடித்திருந்த பிடியை விடுவித்தாள்.. அப்படியே அந்தரத்தில் வீழ்ந்தாள்..!!

 "தாமிராஆஆஆஆஆஆ..!!!" பதறிப்போன ஆதிரா பெரிதாக அலறினாள். கீழே வீழ்ந்த தாமிரா நீண்டதூரம் செல்லவில்லை.. மலைச்சரிவின் பக்கவாட்டில் வளர்ந்திருந்த அந்த மகிழம்பூ மரத்தின் மேற்பரப்பில் சென்று விழுந்தாள்.. மரத்தின் கிளைகளுக்குள் அவளது கை,கால்கள் எசகுபிசகாக சிக்கிக்கொள்ள.. அப்படியே அந்தரத்தில் அசைந்து கொண்டிருந்தாள்..!!

 "தாமிராஆஆஆஆஆஆ..!!!" ஆவி துடித்து வீறிட்டாள் ஆதிரா. "அக்காஆஆஆஆ..!!" பரிதாபக்குரல் எழுப்பினாள் தாமிரா.

 "அக்காவை மன்னிச்சுடுடி.. அக்காவை மன்னிச்சுடு..!! ஏண்டி இப்படி பண்ணுன..??" ஆதிரா பதற்றத்தில் பிதற்றிக்கொண்டே அல்லாடினாள்..

அவளது கைக்கெட்டும் தூரத்தை தாண்டிப் போயிருந்தாள் அவளது தங்கை.. ஆனால் எப்படியாவது அவளை காப்பாற்றிவிடவேண்டும் என்ற ஒரு புதுவித வேகம் ஆதிராவுக்குள் பிறந்திருந்தது..!! சுற்றி முற்றி பார்த்தாள்..!!

 "இருடி வரேன்.. ஒருநிமிஷம்.. அந்த மரத்தை புடிச்சுக்க..!!" அழுதவாறே ஆதிரா எழுந்து ஓடினாள்.. சிங்கமுக சிலைக்கு முன்புறம் கற்பாளங்களால் எழுப்பப்பட்ட அந்த மேடையின் அடிப்பாகத்தில் சுற்றப்பட்டிருந்தது ஒரு சிவப்புத்துணி.. அதை சரசரவென அவிழ்த்து எடுத்தாள்..!! மலை விளிம்பை அடைந்து.. அந்த துணியை அப்படியே சுருட்டி.. தங்கையின் பக்கமாக வீசினாள்..!!

 "அந்த துணியை புடிச்சுட்டு மேல வாடி.. அக்கா டைட்டா புடிச்சுக்குறேன்..!!" கதறினாள் ஆதிரா.

 "அக்காஆஆஆஆ..!!" ஏமாற்றமும், சோகமும் நிறைந்த சப்தத்தை மட்டுமே தாமிரா எழுப்பினாள்..

'என்னை இந்த மாதிரி பலிகொடுக்க துணிந்து விட்டாயே அக்கா' என்பது போல இருந்தது அந்த குரலின் தொனி.. வெறுத்துப்போன விரக்தி மனநிலையில் அவள் அப்போது இருந்தாள்..!! ஆதிரா வீசிய அந்தத்துணியை பற்றிக்கொள்ள சிறுமுயற்சி கூட எடுத்துக் கொள்ளவில்லை..!! தங்கையின் செய்கையை பார்த்த ஆதிராவின் மனதை.. குற்ற உணர்ச்சி குத்தி குத்தி கிழித்துக் கொண்டிருந்தது..!!

 "ப்ளீஸ்டி.. அந்த துணியை புடிச்சுக்கடி.. எப்படியாவது மேல வந்துருடி.. அக்காவை மன்னிச்சுடுடி தாமிரா..!!" ஆதிரா அழுது புலம்பிக்கொண்டிருக்க, 

"அக்காஆஆஆஆ..!!" என்று தாமிரா பரிதாபமாக அழைத்துக்கொண்டே இருக்க, மகிழம்பூ மரத்தின் கிளை இப்போது சரக்கென முறிந்தது.. கொத்தாக வளர்ந்திருந்த வாசனைப் பூக்களின் குவியலோடு.. குழலாற்றை நோக்கி ஆகாயத்தில் பயணம் செய்தாள் தாமிரா..!!

 "தாமிராஆஆஆஆஆஆ..!!!" உயிரே பறிபோவது போல அலறி துடித்தாள் ஆதிரா.. அந்த சிவப்பு துணி அவளது கையில் இருந்து விடுபட்டு காற்றில் பறந்தது.. அதேநேரம் அவள் ரவிக்கைக்குள் செருகி வைத்திருந்த செல்போனும் வெளியே நழுவியது..!!

அந்த துணியும், செல்ஃபோனும் தாமிராவுடன் சேர்ந்து குழலாற்றுக்குள் வீழ்ந்தன..!! அங்குமிங்கும் பாறைகளில் முட்டி மோதி, செந்நிற குருதியை பீய்ச்சியடித்தவாறே.. இறுதியாக குழலாற்றில் சென்று நீரை கிழித்துக்கொண்டு வீழ்ந்தாள் தாமிரா..!! அவளைத் தொடர்ந்து சென்று வீழ்ந்தது அந்த செல்ஃபோன்..!! சிவப்புத்துணி மட்டும் காற்றில் அசைந்து அசைந்து மெல்ல மெல்ல கீழிறங்கிக் கொண்டிருந்தது..!!

 ஆதிராவுக்கு இதயத்துடிப்பே நின்று போனது மாதிரி இருந்தது.. சிறிது நேரம் எதுவும் செய்ய தோன்றாமல் அப்படியே தரையில் வீழ்ந்து கிடந்தாள்..!! அவளது இமைகள் விரிந்துபோய் அப்படியே உறைந்திருந்தன.. சுவாசம் விடக்கூட மறந்துபோனவளாய் அசைவில்லாமல் கிடந்தாள்..!! தனது சுயநலத்தால் தங்கையை பலி கொடுத்துவிட்டோமே என்கிற குற்றஉணர்வு.. அவளது இதயத்தை சல்லடையாக கிழித்துக் கொண்டிருந்தது..!!

 ஒருசில வினாடிகள்.. பிறகு என்ன நினைத்தாளோ.. பட்டென எழுந்து நின்றாள்..!! நடந்துமுடிந்த அமளிதுமளியில் அவளது கூந்தல் பிரிந்து முகமெல்லாம் வழிந்துகொண்டிருந்தது..!! தங்கையின் சாவுக்கு காரணமான தானும் இனிமேல் உயிருடன் இருக்கக்கூடாது என்பதுதான் அவளது எண்ணமாக இருக்கவேண்டும்..!!

அதே மலைச்சரிவில் வீழ்ந்து உயிர்துறக்க முடிவு செய்தாள்..!! அந்த அதலபாதாள பள்ளத்தாக்கை ஒருமுறை வெறித்து பார்த்தாள்..!!

 
"ஆதிராம்மா.. வேணாம்.. நில்லு..!!" சப்தம் கேட்டு திரும்பி பார்த்தாள்..!! கையிலிருந்த வெள்ளைநொச்சி இலைகளை தூக்கி எறிந்துவிட்டு.. இவளை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தாள் வனக்கொடி..!!

முகம் மறைக்கிற கூந்தல் கற்றைகளின் இடைவெளியில் அவளையே உற்றுப் பார்த்தாள் ஆதிரா.. 'உஸ்.. உஸ்..' என மூச்சிரைத்தாள்..!! அந்த பள்ளத்தாக்குக்குள் விழுந்துவிடமேண்டும் என்று ஆதிரா பாய.. அதே நேரத்தில் வனக்கொடி ஓடிவந்து இவள் மீது பாய்ந்து, இறுகப்பற்றிக்கொள்ள.. இருவரும் பாதுகாப்பான ஒரு சமவெளியில் உருண்டார்கள்..!!

தங்கை இறந்த அன்றே சாக இருந்த ஆதிராவை.. காப்பாற்றி உயிர்கொடுத்தது வனக்கொடிதான்..!! நடந்து முடிந்ததெல்லாம் முழுவதுமாக நினைவுக்கு வர.. ஆதிரா அப்படியே உறைந்துபோய் அமர்ந்திருந்தாள்.. லேப்டாப் திரையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்..!!

'தங்கையின் மறைவுக்கு யார் காரணம் யார் காரணம்' என்று தேடி களைத்துப்போனவள்.. இப்போது தான்தான் காரணம் என்கிற உண்மை உறைக்கவும்.. அப்படியே ஸ்தம்பித்துப்போய் உறைந்திருந்தாள்..!! அகழி வந்ததிலிருந்து அவளுக்கு வந்த அந்த இரண்டு கனவுகளுக்கான அர்த்தம் இப்போது அவளுக்கு நன்றாக புரிந்தது..!!

தனது ஆழ்மனதுக்குள் இருந்த உண்மையின் வெளிப்பாடாக அந்த கனவுகள் அவளுக்கு தோன்றிற்று..!! கனவில் தங்கைக்கு நெருக்கமாக இருந்த அந்த உருவத்தின் முகம் மெல்ல மெல்ல இப்போது அவளுக்கு தெளிவானது.. அது சிபியின் முகம்தான்..!!

தாமிராவை அணைத்துக்கொண்டு சிரித்தது கனவில் வந்த சிபியின் உருவம்..!! தாமிரா மட்டும், 'அக்காஆஆஆஆ..!! அக்காஆஆஆஆ..!!' என்று ஈனஸ்வரத்தில் அழைத்துக் கொண்டிருந்தாள்.. அன்று அந்தரத்தில் தொங்கியவாறு அழைத்ததைப் போலவே..!!

 தாமிரா இறந்துபோனதன் பிறகு நடந்த சில நிகழ்வுகளும்.. இப்போது சரசரவென ஆதிராவின் மனதுக்குள் ஃப்ளாஷ் அடித்தன..!!

 "தாமிராஆஆ.. தாமிராஆஆ..!! அக்காகிட்ட வாடி.. ப்ளீஸ்டி..!!" விட்டத்தை நோக்கி கையை நீட்டியவாறு பிதற்றினாள் மனநிலை பிறழ்ந்த ஆதிரா.

 "ஐயோ கடவுளே.. என்னை ஏன் இப்படி சோதிக்கிற..?? ஒரு பொண்ணை பறிச்சுக்கிட்ட.. இன்னொரு பொண்ணை இப்படி ஆக்கிட்டியே..??" தணிகைநம்பி அழுது புலம்பினார்.

 "குறிஞ்சி மேல பழியை போட்றலாம் ஐயா.. நானே கண்ணால பாத்ததா சாட்சி சொல்றேன்..!! நம்ம புள்ள பாவம்.. ஏதோ தெரியாம பண்ணிருச்சு.. ஒரு புள்ளையைத்தான் பறிகுடுத்துட்டோம், இன்னொரு புள்ளையையாவது காப்பாத்திக்குவோம்..!! இந்த விஷயம் என்னை விட்டு வெளில போகாது.. நான் பெத்த புள்ளைகளுக்கு கூட சொல்ல மாட்டேன்.. இது சத்தியம்..!!" உறுதியாக சொன்னாள் வனக்கொடி.

 "ஆதிராவை இங்க வச்சிருக்குறது நல்லது இல்ல தணிகா.. ஆளாளுக்கு ஏதாவது கேள்வி கேட்பாங்க..!! பேசாம மைசூர் கூட்டிட்டு போய்டு..!!" அறிவுரை சொன்னார் திரவியம். மைசூரில் ஒரு மனநல மருத்துவமனையில்.. தரையில் உருண்டு புரண்டு அழுது கொண்டிருந்தது அந்த குழந்தை..!!

 "என் பொம்மை.. என் பொம்மை..!!" என்று வீறிட்டது.

 "குடுத்துடும்மா.. பாவம்ல அந்த கொழந்தை..!!" கரடி பொம்மையை பிடுங்கி வைத்திருந்த ஆதிராவை கெஞ்சினாள் பூவள்ளி.

 "ம்ஹூம்.. குடுக்க மாட்டேன் போ..!! இது என் தாமிரா.. கீழ விழப்போனாளா.. நான் ஓடிப்போய் புடிச்சுக்கிட்டேன்.. என் தங்கச்சியை நான் காப்பாத்திட்டேன்மா..!! என் தங்கச்சியை யார்கிட்டயும் குடுக்கமாட்டேன் போ..!!" பச்சைஉடை அணிந்திருந்த ஆதிரா குழந்தையை போல பேசினாள்.

 "இப்போ நல்ல இம்ப்ரூவ்மன்ட் தெரியுது.. சீக்கிரமே முழுசா குணமாகிடுவாங்க.. ஒன்னும் ப்ராப்ளம் இல்ல..!! நீங்க மட்டும் கொஞ்சம் கவனமா பாத்துக்கங்க.. போதும்..!!" மனநல மருத்துவர் ஒருவர் ஆதிராவை வீட்டுக்கு அனுப்பிவைக்கயில் சொன்னது.

 "எதுக்கு உன்கிட்ட முகம் குடுத்து பேசணும்.. என் தாமிரா சாகுறதுக்கு காரணமா இருந்தவ நீ.. உன் மூஞ்சில முழிக்கிறதே பாவமா நெனைக்கிறேன்..!!" ஆதிராவிடம் வெறுப்பை உமிழ்ந்த சிபி, அன்றிரவே ஐந்தாவது முறையாக அவள் தற்கொலைக்கு முயற்சிக்க, அடுத்த நாள் ஹாஸ்பிட்டலில்,

 "ஸாரி ஆதிரா.. இனிமே அப்படி உன்னை ஹர்ட் பண்ண மாட்டேன்.. என்னை மன்னிச்சிடு ப்ளீஸ்..!! இந்தமாதிரிலாம் இனிமே பண்ணாத..!!" என்று அவளது கையை பிடித்துக்கொண்டு கெஞ்சினான்.

 "சிபியும் சம்மதம் சொல்லித்தான்மா இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிருக்கேன்.. நீ அவன்மேல வச்சிருக்குற பாசத்தை அவன் புரிஞ்சுக்கிட்டான்மா..!! நடந்ததை எல்லாம் மறந்துட்டு புதுசா ஒரு வாழ்க்கையை ஆரம்பி..!!"

ஆதிராவிடம் சொன்னார் தணிகைநம்பி. "இதுலாம் இப்போவே வேணாம் ஆதிரா.. கொஞ்ச நாள் ஆகட்டும்.. நம்ம மனசு இதுக்கு செட் ஆகட்டும்.. வெயிட் பண்ணுவோம்.. சரியா..??" முதலிரவன்று சொன்ன சிபி, உடனே முதுகு காட்டி படுத்துக்கொண்டான்.

 "யெஸ்..!! கல்யாணம் ஆகி ஒருமாசம் ஆகியும்.. இத்தனை நாளா இதை விட்டு வச்சுட்டோமேன்னு இப்போ ஃபீல் பண்றேன்..!!" ஒருமாதம் கழித்து கன்னத்தில் குழுவிழ சொன்னான்.

 "அப்போ.. இன்னொன்னு..??" கேட்டுக்கொண்டே சிபி ஆதிராவின் தோளில் கைபோட, அதே நேரத்தில் 'படீர்ர்ர்ர்' என கார்க்கண்ணாடியில் வந்து மோதியது அந்த காகம்..!! பழைய நினைவுகளில் மூழ்கி திளைத்தவாறு ஆதிரா அமர்ந்திருக்க.. அவளது செல்போன் இப்போது சப்தம் எழுப்பியது..!!

 "க்க்க்க்கிர்ர்ர்ர்... க்க்க்க்கிர்ர்ர்ர்...!!" ஆதிரா கவனம் சிதறி போனவளாய்.. அந்த செல்ஃபோன் மீது பார்வையை வீசினாள்..!! அழைப்பு வந்திருந்த மொபைல் நம்பரை பார்த்ததும்.. மீண்டும் ஒரு பதற்றத்துக்கு உள்ளானாள்..!! அகழி வந்ததிலிருந்து இரண்டுமுறை இவளுக்கு மர்மமான அழைப்பு வந்ததே.. அதே மொபைல் நம்பர்.. ஆதிராவின் பழைய மொபைல் நம்பர்..!! தாமிராவை காப்பாற்ற முனைகையில், அவளுடன் சேர்ந்து குழலாற்றில் வீழ்ந்ததே.. அந்த மொபைலின் நம்பர்தான்..!! பதற்றமாக காலை பிக்கப் செய்து பேசினாள்..!!

 "ஹலோ..!!" 

".................................." அடுத்த முனையில் ஒரு நிசப்தம்.


 "தா..தாமிராஆஆஆ...!!!" தடுமாற்றமாக அழைத்தாள் ஆதிரா.

 "க்க்க்க்ர்ர்ர்ர்ர்... க்க்க்க்ர்ர்ர்ர்ர்... க்க்க்க்ர்ர்ர்ர்ர்... க்க்க்க்ர்ர்ர்ர்ர்...!!!!" - அந்தப்பக்கம் இப்போது ஒரு இரைச்சல்.

 "தா..தாமிரா.. அக்காவை மன்னிச்சுடுடி..!!" ஆதிரா தழதழத்த குரலில் கெஞ்சினாள்.

 ".................................." மறுமுனையில் மீண்டும் ஒரு நிசப்தம்.

 "தாமிரா.. தாமிரா..!! தாமிரா.. தாமிரா..!!"
ஆதிரா திரும்ப திரும்ப அழைத்துக் கொண்டிருக்க.. அடுத்த பக்கத்தில் இருந்து இப்போது அந்த வார்த்தைகள் தெளிவாக அவளது காதில் வந்து விழுந்தன..!!

 "GGGGGame or SSSSShame..??" அதைக்கேட்ட ஆதிரா அப்படியே விக்கித்துப் போனாள்.. விழிகளை விரித்து வைத்தவாறு ஒரு சில வினாடிகள் அப்படியே திகைத்துப்போய் அமர்ந்திருந்தாள்..!!

இறந்துபோன தங்கையின் எண்ணம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆதிராவுக்கு தெளிவாக.. அவளது கண்களிலும் முணுக்கென்று கண்ணீர் பூத்துக்கொண்டு கன்னம் நனைத்து ஓட.. திக்கித்திணறி சொன்னாள்..!!

 "Game..!!!!!"