Friday, September 19, 2014

ஆண்மை தவறேல் - பாகம் 13


அசோக்கும் நந்தினியும் படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருந்தார்கள். அசோக் மீண்டும் ஐபாட் இயர் ஃபோனை காதுக்கு கொடுத்திருந்தான். ஆனால் இப்போது மிதமான வால்யூம் வைத்திருந்தான். காதுக்குள் ஒலித்த பாடலுக்கு லேசாக தலையசைத்தவாறே அவன் கீழிறங்க, கணவனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே நந்தினி உடன் நடந்தாள்.

 அவர்கள் இருவரும் ஹாலில் பிரவேசித்த போது, வந்தனா வாயில் எதையோ அரைத்துக்கொண்டே எதிர்ப்பட்டாள். இவர்களை பார்த்ததும், வாயிலிருப்பதை விழுங்கிவிட்டு புன்னகைத்தாள். அசோக்கிடம் உற்சாகமான குரலில் சொன்னாள்.

 "ஹாய் அத்தான்.. குட் மார்னிங்.." "குட் மார்னிங் வந்தனா..!! சாப்டாச்சா..??" "ஹாஹா.. இன்னும் இல்ல.. இது சும்மா.. ஒரே ஒரு பூரி மட்டும்.. குருமா இல்லாம..!!" "ஓஹோ..?? ம்ம்ம்ம்.. அப்புறம் உன்கிட்ட ஒன்னு கேக்கனும்னு நெனச்சேன்.." "என்ன..?"
"அது என்ன பேரு.. 'வந்தனா.. போனனா.. வழுக்கி வுழுந்தனா..'ன்னு..??" அசோக்கின் கிண்டலுக்கு வந்தனா சிரித்தாள்.


 "ஹாஹா.. தெரியாது..!!" "என்ன தெரியாது..?? நீ வந்தியா போனியான்னு உனக்கே தெரியாதா..??" "ஆஆஆஹ்ஹ்.. முடியலை..!! அது என்ன பேருன்னு எனக்கு தெரியாது.. மீனிங் கூட மீ-க்கு நஹி மாலும்..!! அப்பாதான் எனக்கு அந்த பேரு வச்சாரு.. அவரையே போய் கேளுங்க.. வந்தனா போனனான்னு..!!" "இனிமே எங்க அவரை போய் கேக்குறது.. அவர்தான் வர முடியாத எடத்துக்கு போயிட்டாரே..??" "ம்ம்ம்.. அப்புறம்.. டெயிலி மார்னிங் இந்த மாதிரிதானா.. எக்சர்சைஸா..??" "டெயிலின்னு சொல்ல முடியாது.. பட் மோஸ்ட்லி.." "ம்ம்.. குட் ஹேபிட்..!! அதான் உங்க உடம்பு இந்த மாதிரி நல்லா ட்ரிம்மா இருக்கு..!!" "ஹாஹா.. தேங்க்யூ..!!" அசோக் சிரிக்க, அவ்வளவு நேரம் அவர்கள் பேசும்போது இயல்பாக இருந்த நந்தினி, இப்போது லேசாக முகம் சுளித்தாள்.


ஏனோ அவளால் வந்தனாவின் பேச்சை ரசிக்க முடியவில்லை. வந்தனாவோ அக்காவின் முகமாற்றத்தை கவனியாது, தொடர்ந்து அசோக்கிடம் பேசினாள். "சாங் கேக்குறீங்களா..?" "ம்ம்.." "என்ன சாங் ஓடுது..?" வந்தனா அந்த மாதிரி கேட்கவும் அசோக் உற்சாகமானான். அவனுடைய கைகள் இரண்டையும் விரித்து, சினிமாக்களில் காதலன் காதலியை பார்த்து பாடுவது மாதிரி, ஒரு லவ் ஃபீலிங்கோடு வந்தனாவை பார்த்து அந்த நண்பன் பட பாடலை பாடினான்.

"லவ் இஷ்ட ப்ரேம ப்யாரோ ப்யாரோ.. ஒரு காதல் உந்தன் மேலே..!!" அந்த 'உந்தன் மேலே' சொன்னபோது அவனுடைய ஆட்காட்டி விரலை வந்தனாவின் முகத்தை நோக்கி நீட்ட, அவள் வாயை பொத்திக்கொண்டு சிரித்தாள். அந்த காட்சியை பார்த்த நந்தினிக்கோ காதில் புகை வராத குறைதான்.

தங்கையை பார்த்து காதல் கீதம் பாடிய கணவனை எரிச்சலுடன் பார்த்தாள். வந்தனாவோ வாயெல்லாம் பல்லாக அசோக்கிடம் சொன்னாள். "வாவ்..!! சூப்பர்ப் சாங்-த்தான்.. எனக்கு ரொம்ப பிடிக்கும்.. தெரியுமா..??" "ஓ.. அப்படியா..?? எனக்கும் ரொம்ப பிடிக்கும்..!!" "நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே டேஸ்ட்..!!" "ம்ம்.. யெஸ்..!! இந்தா.. நீ கேக்குறியா..?" அசோக் இயர்ஃபோன் கழட்டி, ஐபாடை வந்தனாவிடம் நீட்ட, "இ..இல்லைத்தான்.. வேணாம்.." என்றாள் அவள். "ப்ச்.. பரவால.. கேளு..!!" இப்போது வந்தனா இயர்ஃபோன் மாட்டிக்கொண்டு பாடல் கேட்க ஆரம்பித்தாள். கண்களை லேசாக மூடிக்கொண்டு, காதுக்குள் ஒலிக்கும் இசைக்கு ஏற்றவாறு மெல்ல தலையை ஆட்டி ரசித்தாள். அசோக் வந்தனாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, நந்தினி அசோக்கை முறைத்துக் கொண்டிருந்தாள்.

சில வினாடிகள் பாடல் கேட்டு ரசித்த வந்தனா, அப்புறம் இயர்ஃபோன் கழட்டியவாறே.. அதே பாடலின் வேறு வரிகளை இப்போது அசோக்கை பார்த்து பாடினாள். "ஏனோ தன்னாலே உன் மேலே.. காதல் கொண்டேனே..!! ஏதோ உன்னாலே என் வாழ்வில்.. அர்த்தம் கண்டேனே..!!" அவ்வளவுதான்..!! அவ்வளவு நேரம் அசோக்கை முறைத்துக்கொண்டிருந்த நந்தினி, இப்போது தலையை திருப்பி தங்கையை அதைவிட அதிகமாக முறைக்க ஆரம்பித்தாள். அசோக்கும், வந்தனாவுமோ நந்தினியின் முறைப்பை கவனிக்கவே இல்லை. தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அசோக்தான் கேட்டான்.

 "உனக்கு ம்யூசிக் கேக்குறது ரொம்ப பிடிக்குமா வந்தனா..?" "ஐயோ.. எனக்கு கொள்ளை ஆசைத்தான்.. உயிர்னு கூட சொல்லலாம்..!!" "குட்.. எந்த மாதிரி ம்யூசிக் கேட்ப..?" "மோஸ்ட்லி தமிழ் ஃபில்ம் ம்யூசிக்தான்..!!" "ஓ..!! சாங்க்ஸ்லாம் எதுல கேட்ப..?" "டிவிலதான்.. சன் ம்யூசிக்..!!" "அச்சச்சோ..!! அது பாட்டு பாக்குறது.. நான் பாட்டு கேக்குறது பத்தி கேட்டேன்..!!" "இல்லத்தான்.. டிவில கேக்குறதோட சரி..!!" வந்தனாவின் குரலில் ஒரு மெல்லிய சோகம். "ஓ..!! ம்ம்ம்.. ஓகே.. இந்தா.. இதை நீ வச்சுக்கோ.. இனிமே இதுல பாட்டு கேளு..!!" அசோக் தன் கையிலிருந்த ஐபாடை வந்தனாவின் கையில் திணிக்க, அவள் பதறினாள்.

 "ஐயோ.. வேணாத்தான்.." "பச்.. பரவால வந்தனா.. வச்சுக்கோ..!! திஸ் இஸ் மை கிஃப்ட்..!!" "இ..இல்லத்தான்.. வேணாம்..!!" வந்தனா சொல்லிக்கொண்டே அருகில் நின்ற அக்காவை மிரட்சியாக திரும்பி பார்த்தாள். அவள் தன்னையே முறைத்துக் கொண்டிருப்பதை அறிந்ததும், மேலும் கொஞ்சம் மிரண்டாள். அசோக்கோ எதையும் கண்டுகொள்ளாமல்.. "ப்ச்.. அவளை ஏன் பாக்குற..? அவ ஒன்னும் சொல்ல மாட்டா.. ம்ம்.. வாங்கிக்கோ..!!" அசோக் வலுக்கட்டாயமாக வந்தனாவின் கையில் திணிக்க, அவள் இருமனதாக தடுமாறினாள்.

 "கமான் வந்தனா.. இதுல என்ன இருக்கு.. சும்மா வாங்கிக்கோ.. இப்போ வாங்கிக்க போறியா.. இல்லையா..?" அசோக் சற்றே கடுமையாக சொல்ல, வந்தனா தயங்கி தயங்கி வாங்கிக் கொண்டாள். "தே..தேங்க்ஸ்-த்தான்.." என்றாள் தடுமாற்றமாக. அவள் சொல்லி முடிக்கும் முன்பே, நந்தினி அசோக்கிடம் எரிச்சலாக சொன்னாள்.

 "அவதான் வேணான்னு சொல்றால்ல.. ஏன் அவளை கம்பெல் பண்றீங்க..?" என்றவள் தங்கையின் கையிலிருந்த ஐபாடை வெடுக்கென்று பிடுங்கினாள். அவளுடைய முகத்தை ஏறிட்டு கடுமையான குரலில் சொன்னாள். இல்லை.. கத்தினாள் என்று கூட சொல்லலாம். "ஏய்.. படிக்கிற வேலையை போய் மொதல்ல பாருடி.. பாட்டு கேக்குற வேலைலாம் அப்புறம் பாக்கலாம்.. போ..!!" நந்தினி அந்த மாதிரி கத்த, வந்தனாவுக்கு சட்டென முகம் சுருங்கிப் போயிற்று.

ஓரிரு வினாடிகள் அக்காவையே மிரட்சியாக பார்த்தவள், அப்புறம் திரும்பி நடக்க ஆரம்பித்தாள். அசோக்கால் நந்தினியின் அந்த செய்கையை நம்பவே முடியவில்லை. ஓரிரு வினாடிகள் நந்தினியின் முகத்தையே ஆச்சரியமாய் பார்த்தவன், அப்புறம் விடுவிடுவென நடந்து தனது அறைக்குள் நுழைந்தான். நந்தினியும் அவன் பின்னாடியே ஓடினாள். அறைக்குள் நந்தினி நுழைந்ததுமே அசோக் சற்று கோபமாக கேட்டான்.

 "என்னை அவ்வளவு கேவலமானவனா நெனச்சுட்டல நந்தினி..??" "எ..என்ன சொல்றீங்க.. எனக்கு புரியலை..!!" "நடிக்காத.. எல்லாம் எனக்கு தெரியும்..!! நான் சும்மா ஜாலியா பேசுனதை.. உன் தங்கச்சிக்கு வலை விரிக்கிறதா தப்பா நெனச்சுட்டல..?" "ஐயோ.. எ..என்ன பேசுறீங்க நீங்க.. நான் அப்படிலாம் நெனைக்கலை.." "அப்புறம் ஏன் அப்படி பிஹேவ் பண்ணின..?" "அ..அது.." "ம்ம்.. சொல்லு.." "அவ படிக்கிற பொண்ணு.. அவளுக்கெதுக்கு இதுலாம்..? அவ மைன்ட் டைவர்ட் ஆகும்..!!" "ப்ச்.. பொய்..!! அது காரணம் இல்ல..!!" "இல்ல.. நெஜமாத்தான்..!!" நந்தினி உறுதியான குரலில் சொல்ல, அசோக் இப்போது அமைதியானான்.

கொஞ்ச நேரம் நந்தினியின் கண்களையே குறுகுறுவென பார்த்தான். நந்தினி அவனுடைய பார்வையின் வெப்பத்தை தாங்க முடியாமல் தடுமாறினாள். அப்புறம் அசோக் சற்றே நிதானமாக தெளிவாக சொன்னான். "இங்க பாரு நந்தினி.. நான் பொம்பளை பித்தன்தான்.. நெறைய பொண்ணுகளை தொட்டிருக்கேன்..!! ஆனா.. பாலுக்கும், கள்ளுக்கும் கூட வித்தியாசம் தெரியாத அளவுக்கு.. செக்ஸ் வெறி புடிச்சவன் இல்ல..!!" அசோக் சொல்லிவிட்டு திரும்பி நடந்தான்.

 கட்டிலில் கிடந்த டவலை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு, பாத்ரூமுக்குள் நுழைந்தான். அவன் உள்ளே நுழையும் வரை, தலையை குனிந்தவாறு அவனையே ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்த நந்தினி, அப்புறம் கையிலிருந்த ஐபாடை கட்டிலில் வீசிவிட்டு பொத்தென்று மெத்தையில் அமர்ந்தாள். அவளுடைய மூளை இப்போது தீவிரமாக எதையோ யோசிக்க ஆரம்பித்தது.

 'ஏன் இப்படி செய்தேன்..? அசோக் அந்த மாதிரி மோசமானவன் இல்லை என்று என் மனதிற்கு நன்றாகவே தெரியுமே..? என் தங்கையும் கூட அத்தானின் கேலிப்பேச்சுகளை சீரியஸாக எடுத்துக்கொண்டு மனம் கெட்டு போகக்கூடியவள் இல்லையே..?

அப்புறமும் ஏன் அப்படி நடந்து கொண்டேன்..?' யோசிக்க யோசிக்க அவளுக்கு ஒரு விஷயம் புரிய ஆரம்பித்தது. அசோக்கும், வந்தனாவும் அவ்வாறு கொஞ்சி பேசியது அவளுடைய மனதுக்கு ஏனோ பிடிக்கவில்லை. ஏன் பிடிக்கவில்லை..?? தன் கணவன் தன் கண்முன்பே இன்னொரு பெண்ணை கொஞ்சுகிறானே என்ற பொசஸிவ் உணர்வாக இருக்குமோ..?? நந்தினிக்கு புரியவில்லை..!!

திருமணமான ஒரே நாளிலேயே இப்படி ஒரு உரிமை உணர்வு வர வாய்ப்பிருக்கிறதா..?? எது எப்படியோ.. இந்த மாதிரி ஒரு உணர்வை வளர விடுவது நல்லதில்லை என்று அவளுக்கு தோன்றியது. அசோக் மாதிரி ஒருவனுடைய மனைவிக்கு, அந்த மாதிரி ஒரு உணர்வு, வலியையே கொண்டு வந்து சேர்க்கும் என்று தோன்றியது.

 நந்தினி அந்த மாதிரி சிந்தனையில் மூழ்கியிருக்கும்போதே, அசோக் குளித்து முடித்து பாத்ரூமில் இருந்து வெளிப்பட்டான். சப்தம் கேட்டு பார்வையை திருப்பிய நந்தினி ஒருகணம் திகைத்து போனாள். அசோக் இப்போது இடுப்பில் ஒரு டவலை மட்டும் சுற்றிக்கொண்டு, வெற்று மார்புடன் இருந்தான். ஒரு வளர்ந்த ஆண்மகனை அந்த மாதிரி ஒரு கோலத்தில் நந்தினி காண்பது அதுவே முதன்முறை. பார்த்ததுமே அவளுடைய நெஞ்சுக்கு பக்கென்று இருக்க, படாரென்று பார்வையை திருப்பிக் கொண்டாள். அசோக் அதையெல்லாம் கண்டுகொண்டான் இல்லை.

வெகு இயல்பாக வார்ட்ரோப் திறந்து அன்று அணிந்து கொள்ளப் போகும் ஆடையை தேர்வு செய்தான். நந்தினியால் வெகுநேரம் தன் மனதை கட்டுப்படுத்த முடியவில்லை. அவளுடைய கட்டுப்பாடின்றியே அவளது பார்வை அசோக்கின் பக்கம் நகர்ந்தது. அவனது திரண்ட தோள்களையும், பருத்த புஜங்களையும், அகன்ற மார்பினையும், அதில் வளர்ந்திருந்த சுருள் ரோமங்களையும் வெறித்தது. பார்க்க பார்க்க அவளுடைய உடலுக்குள் ஒருவித கிளர்ச்சி படர்வதை அவளால் உணர முடிந்தது. அவள் அங்கிருப்பதை பொருட்படுத்தாமலே, அசோக் வேறு உடைகள் அணிந்து கொண்டான். உடலுக்கு ஸ்ப்ரே அடித்துக்கொண்டான். சட்டையை டக்-இன் செய்துகொண்டு பெல்ட் மாட்டிக்கொண்டான்.

தலை வாரி ரெடியாகி அவன் கிளம்ப, அதுவரை அவனை ஓரக்கண்ணால் நோட்டமிட்டுக் கொண்டிருந்த நந்தினி, இப்போது கட்டிலில் இருந்து எழுந்தாள். அவளை அவன் கடக்க முற்பட்டபோது, மெல்லிய குரலில் சொன்னாள்.
"ஸாரி..!!" "ஸாரியா..?? எதுக்கு..??" அசோக் நின்று கேட்டான். "இல்ல.. நான் அந்த மாதிரி உங்களை நெனைக்கலை.. நீங்க ஒருவேளை அந்த மாதிரி நெனச்சிருந்தா.. ஸாரி..!!" அவள் அந்த மாதிரி தலையை குனிந்தவாறு பாவமாக சொல்ல, அசோக் இப்போது மெலிதாக புன்னகைத்தான். "பரவால விடு.. நான் அதை அப்போவே மறந்துட்டேன்.." என்றான்.

இப்போது நந்தினியும் அவனை ஏறிட்டு புன்னகைத்தாள். "சாப்பிட்டியா நீ..?" அசோக்கின் குரலில் ஒரு கனிவு. "இ..இல்ல.." "சரி வா.. சாப்பிட போலாம்.." என்றவாறு நகர முயன்ற அசோக்கை, "இ..இருங்க.. ஒரு நிமிஷம்.." என்று நந்தினி அவசரமாய் தடுத்தாள். "என்ன..?" "நீ..நீங்க.. இ..இன்னைக்கு எங்கயாச்சும் போவீங்களா..??" திக்கி திணறி கேட்டாள்.

 "ம்ம்ம்.. ஆபீசுக்கு போவேன்.." என்றான் அசோக் 'என்ன கேள்வி இது' என்பது மாதிரி. "அது இல்ல.. வே..வேற எங்கயாச்சும்..?"
"வேற எங்கயாச்சும்னா..?" "அதான்.. அந்த கா..கால்கேர்ல்ஸ்.. அந்த மாதிரி.. எங்கயாச்சும்.." நந்தினி கேட்டவிதம் அசோக்குக்கு சிரிப்பை வரவழைத்தது.

உதட்டில் புன்னகையுடனே, "இதுவரைக்கும் அப்படி எதுவும் ப்ளான் இல்ல..!! ஏன்.. போகனுமா..?" என்று அவன் குறும்பாக கேட்க, இப்போது நந்தினி சிரித்தாள். "ஆமாம்.. கல்யாணத்துக்கு அடுத்த நாளு.. கட்டுன புருஷனை அந்த மாதிரி எடத்துக்கு அனுப்பி வைக்கிறேன்னு.. நித்யானந்தருக்கு நேர்ந்திருக்குறேன்..!!" என்று அவளும் கிண்டலாக சொன்னாள்.

 "ஹாஹா..!! அப்புறம் எதுக்கு அப்படி கேட்ட..?" "இல்ல.. இன்னைக்குன்னு இல்ல.. நீங்க என்னைக்கு அந்த மாதிரி போனாலும்.. நைட்டு எவ்வளவு லேட் ஆனாலும்.. தூங்குறதுக்கு வீட்டுக்கு வந்துடுறீங்களா..? ப்ளீஸ்..!! கல்யாணத்துக்கு அப்புறமும் நீங்க வெளில தங்குனா.. பாக்குறவங்க தப்பா பேசுவாங்க..!!" கெஞ்சலான குரலில் பரிதாபமாக சொன்னாள் நந்தினி. அவள் அந்த மாதிரி கெஞ்சலாக கேட்டது, அசோக்கிற்கு ஏனோ கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. நந்தினியின் அழகு முகத்தையே, அந்த முகத்தில் தெரிந்த ஒரு ஏக்கத்தையே சில வினாடிகள் அமைதியாக பார்த்தான். அப்புறம் இதமான புன்னகை ஒன்றை அவளிடம் வீசியவாறு சொன்னான். "ஓகே.. ரெக்வஸ்ட் அக்ஸப்டட்..!!" "தேங்க்ஸ்..!!" நந்தினி நன்றிப் பெருக்குடன் சொன்னாள்.

 "வா.. ஹாலுக்கு போலாம்.." சொல்லிவிட்டு அசோக் முன்னால் நடக்க, நந்தினி அவனை பின்தொடர்ந்தாள். அறையை விட்டு அவர்கள் வெளியே வரவும், மஹாதேவன் எதிர்ப்படவும் சரியாக இருந்தது. டிப் டாப்பாக ட்ரஸ் அணிந்திருந்த மகனையும், ஈரத்தலையை கூட இன்னும் பின்னியிராத மருமகளையும் மஹாதேவன் ஓரிரு வினாடிகள் மாறி மாறி பார்த்தார். அப்புறம் அசோக்கிடம் சற்றே குழப்பமாக கேட்டார்.

 "எங்க கெளம்பிட்ட..?" "ஆபீஸுக்கு..!!" அசோக் இறுக்கமான குரலில் பதிலளித்தான். "ஆபீஸுக்கா..?? நேத்துதான் கல்யாணம் முடிஞ்சது.. இன்னைக்கு ஆபீஸ் போறேன்ற..?" "வேற எங்க போக சொல்றீங்க..?" "உன் பொண்டாட்டியை கூட்டிட்டு நாலு எடத்துக்கு போயிட்டு வாப்பா..!! ஒரு ரெண்டு வாரம்.. ஊட்டி, கூர்க்னு எங்கயாவது வெளியூருக்கு போ.. அது பிடிக்கலைன்னா.. தாய்லாந்து, மலேசியான்னு ஏதாவது வெளிநாட்டுக்கு போயிட்டு வா..!!"

 "ப்ச்.. ஆபீஸ்ல நெறைய வேலை இருக்கு டாட்.. ஊர் சுத்திட்டு இருக்கலாம் எனக்கு இப்போ நேரம் இல்ல.." "இங்க பாரு அசோக்..!! வேலைன்றது வருஷம் பூரா இருக்கத்தான் செய்யும்.. வேலை இல்லாம இருக்குறப்போதான் போவேன்னா.. உன்னால எப்போவும் போக முடியாது..!!

கொஞ்ச நாள் நீங்க ரெண்டுபேரும் தனியா இருந்தீங்கன்னா.. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க வசதியா இருக்கும்.. கல்யாணம் ஆன புதுசுல எல்லா புருஷன், பொண்டாட்டிக்கும் அது ரொம்ப அவசியம்.. அதான் சொல்றேன்..!!" "இல்ல டாட்.. எனக்கு இப்போ எங்கயும் வெளியூர் போற மூட் இல்ல.. இன்ரஸ்ட்டும் இல்ல..!!" "உன் இன்ரஸ்ட் மட்டுந்தான் உனக்கு பெருசா..? நீ இப்போ தனியாள் இல்லப்பா.. உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு..!!

உன் பொண்டாட்டியை கொஞ்சம் நெனச்சு பாரு.. அவளுக்கு மனசுக்குள்ள ஆசை இருக்கும்ல..?" மஹாதேவன் அந்த மாதிரி சொல்ல, அசோக் உச்சபட்ச எரிச்சலுக்கு உள்ளானான். "இங்க பாருங்க டாட்.. கல்யாணம் பண்ணிக்க சொன்னீங்க.. பண்ணிக்கிட்டாச்சு..!! இன்னமும் அது பண்ணு, இது பண்ணுன்னு.. ஒவ்வொன்னா எங்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்காதீங்க..!! இனிமே என்ன பண்ணனும்னு நான் பாத்துக்குறேன்..!!" சீற்றமாய் சொன்ன அசோக், திரும்பி வீட்டு வாசலை நோக்கி விறுவிறுவென நடந்தான்.


அவன் ஹாலை கடந்த போது, 'ஐயோ அசோக்கு.. எங்க கெளம்பிட்ட.. சாப்பிட்டு போப்பா..' என்று கௌரம்மா கத்தியதை, காதிலேயே அவன் வாங்கிக்கொள்ளவில்லை. கதவை திறந்து வெளியேறினான். அவன் கோவமாக செல்வதையே திகைப்பாக பார்த்துக் கொண்டிருந்த மஹாதேவன், அப்புறம் மருமகள் அருகில் நிற்பதை உணர்ந்ததும், சகஜ நிலைக்கு திரும்ப முயன்றார். முகத்தில் வரவழைத்துக் கொண்ட ஒரு புன்னகையுடன், நந்தினியிடம் தடுமாற்றமாக சொன்னார்.

 "இ..இப்போத்தான கல்யாணம் ஆயிருக்கு.. போக போக எல்லாம் சரியாயிடும்மா நந்தினி..!! இ..இதெல்லாம் நீ ஒன்னும் பெருசா எடுத்துக்காத..!!" மாமனாரின் தடுமாற்றத்தையும் அவருடைய மனநிலையையும் புரிந்து கொண்ட நந்தினி, இப்போது கனிவான குரலில் சொன்னாள்.

 "இல்ல மாமா.. நான் பெருசா எடுத்துக்கலை..!! நான் கஷ்டப்படுவேன்னு நெனச்சுக்கிட்டு.. நீங்க மனசு கவலைப்படாதீங்க..!!" வீட்டை விட்டு வெளியேறிய அசோக், தனது காரை ஸ்டார்ட் செய்து விருட்டென்று கிளம்பினான். அவன் மனதுக்குள் அப்பாவின் மீது லேசான எரிச்சல். நந்தினியின் கழுத்தில் தாலி கட்டி விட்டால் அவர் கம்மென்று இருப்பார் என்று எதிர்பார்த்திருந்தான்.

ஆனால் தன் இஷ்டப்படி இருக்க அவர் தன்னை விட மாட்டார் என்று இப்போது அவனுக்கு தோன்றியது. நந்தினியை விட தந்தையை சமாளிப்பதுதான் இனி பெரும்பாடாக இருக்குமோ என்று எண்ணிக்கொண்டான். கார் கொட்டிவாக்கத்தை கடந்தபோது, தூரத்திலேயே அந்த பஸ் ஸ்டாப்பையும் அங்கே நின்றிருந்த கற்பகத்தையும் அசோக் கவனித்துவிட்டான்.


உடனே காரின் வேகத்தை குறைத்து, சரியாக அந்த பஸ் ஸ்டாப் அருகிலேயே நிறுத்தினான். ஹார்ன் அடித்தான். சப்தம் கேட்டு திரும்பி பார்த்த கற்பகம், அசோக்கை பார்த்ததும் புன்னகைத்தாள். ஓடி வந்து கார்க்கதவை திறந்து அசோக்கிற்கு அருகே அமர்ந்து கொண்டாள். அசோக் காரை கிளப்பிக்கொண்டே கிண்டலான குரலில் கேட்டான். "எங்க போகணும் கற்பு..??" "எங்கயா..?? ஆபீசுக்குத்தாண்டா..!!"





"ஆபீசுக்கா..?? ஒன்பது மணி ஆபீசுக்கு பத்து மணிக்கு போயிட்டு இருக்குற.. இதான் நீ ஆபீஸ் வர்ற லட்சணமா..?? இந்த மாசம் உன் சம்பளத்துல கை வைக்கிறனா இல்லையான்னு பாரு..!!" "டேய்.. ஏதோ இன்னைக்கு ஒருநாள் லேட் ஆகி போச்சு.. அதுக்கு போய் ரொம்ப ஓவரா பேசுற..? நீயுந்தான் தெனமும் லேட்டா வர்ற.. நாங்க ஏதாவது கேக்குறமா..??"

 "ஹேஹே.. நீயும் நானும் ஒண்ணா..?? நான் மொதலாளிமா..!!" "ம்ம்ஹ்ஹ்ம்ம்.. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி..!! அதுசரி.. நீ என்ன கல்யாணம் ஆன அடுத்த நாளே ஆபீஸ் வந்துட்டு இருக்குற..??" "ஏன்.. வர கூடாதா..?? நான் இன்னைக்கு வர மாட்டேன்னு.. ஆபீஸ்ல எல்லாம் ஓப்பி அடிக்க ப்ளான் பண்ணிருக்கீங்களா..??"

 "ப்ச்.. அதெல்லாம் ஒண்ணுல்ல..!! ஹனிமூன்லாம் எங்கயும் போகலையான்னு கேட்டேன்..??" "ஹனிமூனா..?? உனக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான்..!! போலாமா..??" குறும்பாக கேட்டுவிட்டு அசோக் கண் சிமிட்ட, கற்பகம் டென்ஷனானாள். "செருப்பு பிஞ்சுடும்..!! நான் கேட்டது நீயும் உன் வொய்ஃபும் ஹனிமூன் போகலையான்னு..??"

 "இ..ல்லை கற்பு..!!" அசோக் இப்போது சலிப்பாக சொன்னான். "ஏன்..??" "என்ன ஏன்..? அவளை கூட்டிட்டு எங்க ஹனிமூன் போறது..??" "ஆமாமாம்.. கட்டுன பொண்டாட்டியோடலாம் நீங்க ஹனிமூன் போவீங்களா..? அதுக்குத்தான் உங்களுக்கு நெறைய பேர் இருக்காங்களே..??" கற்பகம் கிண்டலாக சொன்னாள்.

 "ப்ச்.. புரியாம பேசாத கற்பு.. பொண்டாட்டியா அவகிட்ட எதையும் எதிர்பார்க்க மாட்டேன்னு சொல்லிருக்குறேன்..!! ஹனிமூன்லாம் எங்களுக்குள்ள அவசியம் இல்லாத ஒன்னு..!!"

 "ஓஹோ..?? ம்ம்ஹ்ஹ்ம்ம்.. நேத்து கல்யாணத்தப்பதான் பார்த்தேன்.. ரொம்ப நல்ல பொண்ணா தெரியிறாடா உன் வொஃய்ப்..!! லட்சணமா இருக்குறா.. ஒரு மாதிரி அழகும், அடக்கமும் ஒண்ணா சேர்ந்த மாதிரி..!! பாத்ததுமே எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.. நீ என்னடான்னா.. அவளை போய் கேடி, கேப்மாறின்னு சொல்லிட்ட..!!"

 "இப்போ கொஞ்சம் மாறிட்டான்னு தோணுது கற்பு..!! காலேஜ்லலாம் நான் சொன்ன மாதிரிதான் இருந்தா..!!" "ம்ம்ம்.. அவ மாறிட்டா.. ஸார் எப்போ மாறுற மாதிரி ஐடியா..?" "ஸார்லாம் எப்போவும் மாற மாட்டாரு.. இப்படியேதான் இருப்பாரு..!!" "ஐயே.. இதுல என்ன உனக்கு பெருமை வேண்டி கெடக்கு..? கல்யாணத்துக்கு அப்புறமாவது அந்த கருமத்தைலாம் தொலைச்சு கட்டலாம்ல..?"

 "தயவு செஞ்சு உன் அட்வைஸ் மோட்டரை கொஞ்சம் ஆஃப் பண்றியா.. ஆரம்பிச்சேன்னா அப்புறம் லொடலொடன்னு ஓடிட்டு கெடக்கும்..!!" "ஹ்ம்.. நல்லது சொன்னா உடனே வாயை அடைச்சுடுவியே..? எக்கேடோ கேட்டு போ.. எனக்கென்ன..? ம்ம்ஹ்ஹ்ம்ம்.. அந்த பொண்ணை நெனச்சாத்தான் எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு.." "அவளே அதையெல்லாம் நெனச்சு கஷ்டப்படல.. நீ ஏன் கஷ்டப்படுற..??

அதுசரி.. நீ ஏன் இன்னிக்கு இவ்வளவு லேட்டு..??" அசோக் கேட்க, கற்பகத்தின் முகம் பட்டென மலர்ந்தது. "இன்னைக்கு என் வீட்டுக்காரருக்கு பர்த்டே அசோக்.. காலைல கோயிலுக்கு போய் அவர் பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வந்தேன்.. காலங்காத்தாலேயே கோயில்ல செம கூட்டமா.. லேட்டாகி போச்சு..!!"

 "ம்ம்.. புருஷன் மேல ரொம்பத்தான் பிரியமா இருக்குற நீ.." அசோக்கின் குரலில் ஏனோ ஒரு சலிப்பு.
"என் புருஷன்.. நான் பிரியமா இருக்குறேன்.. உனக்கு ஏன் எரியுது..??" "எரிச்சலா.. எனக்கா.. ஹேஹே.. அதெல்லாம் ஒண்ணுல்ல..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்.. அப்புறம்.. வேற என்ன ஸ்பெஷல்.. புருஷன் பர்த்டேக்கு..??"

 "வேற என்ன.. வீட்டுல காலைல ஒரு ஸ்வீட் பண்ணினேன்.. பேக்ல இருக்கு.. சாப்பிடுறியா..?" "வேணாம் வேணாம்.. நீயே வச்சுக்கோ உன் ஸ்வீட்டை..!! அதான் டெயிலி எனக்கு ஸ்வீட் தர்றியே..?" "ஹாஹா.. நான் டெயிலி ஸ்வீட் தர்றனா.. என்னது..?" "ம்ம்ம்..?? அல்வா...!!" "ஹாஹாஹாஹாஹாஹா..!!" கற்பகம் கலகலவென சிரிக்க, அசோக்கும் அந்த சிரிப்பில் கலந்து கொண்டான். அடையாறு நோக்கி அந்த கார் அதிவேகத்தில் சீறிக்கொண்டிருந்தது.



No comments:

Post a Comment