Wednesday, September 24, 2014

ஆண்மை தவறேல் - பாகம் 15



அதன் பிறகு ஒரு வாரம் கழித்து.. ஒரு நாள் காலை..!! அசோக் ஆபீஸ் கிளம்பி சென்றிருந்தான். மஹாதேவனும் ராமண்ணாவை கூட்டிக்கொண்டு வெளியில் எங்கோ சென்றிருந்தார். நந்தினி குளித்துவிட்டு பாத்ரூமில் இருந்து வெளிப்பட்டாள். வெளியே வந்து வேறு உடை மாற்றிக்கொண்டு இருக்கும்போதே, ஹாலில் இருந்து அந்த சப்தம்..!! "தட்.. தட்.. தட்.. தட்.." எதுவோ எதனுடனோ சீரான நேர இடைவெளியில் மோதிக்கொள்ளும் சத்தம். நந்தினிக்கு அது என்ன சப்தம் என்று புரியவில்லை. புடவையை அணிந்து கொண்டபின், அது என்ன சத்தம் என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன், ஈரத்தலையுடனே ஹாலுக்கு நடந்து சென்றாள். ஹாலில் கிடந்த சோபாக்களில் ஒன்றில் கௌரம்மா அமர்ந்திருந்தாள். அவளுடைய மடியில் பெரிய சைஸிலான அந்த புகைப்படம்..!! அந்த புகைப்படத்தில் அசோக்கின் அம்மா அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள்..!! சுவற்றில் பெரிதாக மாட்டப்பட்டிருந்த படத்தை எடுத்து இப்போது மடியில் கிடத்தியிருந்தாள் கௌரம்மா. அவளுடய ஒரு கையில் ஆணி, மற்றொரு கையில் சின்னதாய் ஒரு சுத்தியல். புகைப்படத்தை சூழ்ந்திருந்த மரச்சட்டத்தை ஒன்றாக இணைத்து வைத்து, அது நகராமல் இருக்க, சுத்தியால் தட்டி தட்டி ஆணியை உள்ளிறக்கிக் கொண்டிருந்தாள்.
"என்னாச்சுங்க..?" நந்தினி கேட்க, "ப்ரேம் லூஸு வுட்டு போச்சும்மா.. கீழ வுழுற மாதிரி இருந்தது.. அதான் ஆணி வச்சு அடிச்சு டைட் பண்ணிட்டு இருக்கேன்.." கௌரம்மா அந்த ஃப்ரேமை சரி செய்ய மேலும் ஒரு நிமிடம் முழுதாக எடுத்துக் கொண்டாள். அதுவரை அருகில் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நந்தினியிடம், சோபாவில் இருந்து எழுந்து கொண்டே சொன்னாள். "இந்த சேரை கொஞ்சம் புடிச்சுக்குறியாம்மா.. போட்டோவை மாட்டிர்றேன்.." "ம்ம்.. சரிங்க.." நந்தினி சேரை அசையாமல் பிடித்துக்கொள்ள, கௌரம்மா அந்த சேரில் ஏறினாள். கையிலிருந்த ஃபோட்டோவை கொஞ்சம் கஷ்டப்பட்டு சுவற்றில் உயரமாக அடிக்கப்பட்டிருந்த ஆணியில் மாட்டினாள். சுவற்றில் சீராக பொருந்தியிருக்கிறதா என்று ஒருமுறை சரி பார்த்துக் கொண்டு சேரை விட்டு கீழே இறங்கினாள். அவள் இறங்கிக்கொண்டதும் இருவரும் தலையை நிமிர்த்தி, சில வினாடிகள் அந்த படத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்புறம் நந்தினிதான் மெல்ல கேட்டாள். "அவரு அப்படியே அவங்க அம்மா சாயல்ல..?" "ம்ம்.. ஆமாம்மா..!!" "அந்த நெத்தி, கண்ணு, மூக்கு, உதடு.. எல்லாம் அப்படியே அவங்க அம்மாதான்..!!" "ம்ம்.. சின்ன வயசுல அசோக்.. ஜடை போட்டு.. பொட்டு வச்சு.. அப்படியே பொட்டை புள்ள மாதிரியே இருக்கும்..!!" "ஹாஹா.. இப்போ கூட என்னவாம்..? அந்த மீசையும் தாடியும் எடுத்துட்டா.. இப்போவும் அப்படித்தான்..!!" நந்தினி கணவனை கேலி செய்ய, "ஹஹாஹஹாஹஹா..!!" கௌரம்மா கலகலவென சிரித்தாள். "ம்ம்.. சிரிப்பு கூட அப்படியே அவர் மாதிரி.. இல்ல..? ரொம்ப அழகா சிரிக்கிறாங்க..!!" "அந்த சிரிப்பை பாத்தா வேற சோறு தண்ணி வேணாம்மா.. பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கும்..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்.. எந்த நேரமும் சிரிச்ச மொகமாவே இருக்கும் மகராசி..!! மஞ்சளும், குங்குமமும், கொஞ்சம் மல்லியப்பூவும் வச்சுட்டு வந்து நின்னா.. அப்படியே மகாலச்சுமியே தரை எறங்கி வந்துட்ட மாதிரி இருக்கும்.. கையெடுத்து கும்புட தோணும்..!! இப்படி மஞ்சக்காமாலை வந்து அல்ப ஆயுசுல கொண்டு போவும்னு கனவுல கூட நாங்க நெனைக்கலை தாயி..!!" கௌரம்மா சொல்லும்போதே அவளுடைய கண்கள் மெல்ல கலங்கின. பழைய நினைவுகள் அவளுடைய கண்களை கண்ணீர் கசிய செய்திருந்தன. புடவைத்தலைப்பால் கண்களை லேசாக ஒற்றி எடுத்துக் கொண்டாள். கௌரம்மாவையே சில வினாடிகள் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்த நந்தினி, அப்புறம் பேச்சை மாற்றும் விதமாக கேட்டாள். "அவருக்கு அப்போ எத்தனை வயசு இருக்கும்..?" "அஞ்சு முடிஞ்சு ஆறு நடந்துட்டு இருந்துச்சு..!! நாங்க இந்த வீட்டுக்கு வந்து அஞ்சு மாசமோ ஆறு மாசமோ ஆகி இருந்துச்சு..!!" "ஓ..!! ஆமாம்.. உங்ககிட்ட ஒன்னு கேக்கனும்னு நெனச்சிருந்தேன்.." "என்னம்மா.. கேளு.." "உங்க சொந்த ஊர் ஆந்த்ராதான..?” "ஆமாம்.. பலமனேரு..." “நீங்க எப்படி இங்க வந்து…." "ஹ்ஹ.. அது ஒரு பெரிய கதைம்மா.. ரொம்ப பழைய கதை.." "பரவால.. சொல்லுங்க.. நான் கேக்குறேன்..!! ஆனா.. சொல்றதுல உங்களுக்கு ஏதும் கஷ்டம்னா வேணாம்..!!" "சொல்றேன்மா.. இதுல என்ன இருக்கு..?" சொன்ன கௌரம்மா கொஞ்ச நேரம் அமைதியாகவே இருந்தாள். தலையை குனிந்தவாறு தரையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். பழைய நினைவுகளை ஒன்றன்பின் ஒன்றாக மனதுக்குள் மாலை மாதிரி கோர்த்துக் கொண்டிருக்கிறாளோ என்று எண்ண தோன்றியது. அப்புறம் லேசாக தொண்டையை செருமிக்கொண்டு ஆரம்பித்தாள். "எங்க அப்பாருக்கு கூலி வேலைதான்மா.. அன்னன்னிக்கு ஒழைச்சாத்தான் குடிக்க கஞ்சி.. இல்லன்னா பட்டினிதான்.. அம்மா ஒரு பண்ணை வூட்டுல எடுபுடி வேலைலாம் பாத்துட்டு இருந்துச்சு.. அது நல்ல பெரிய வூடு.. பெருத்த பணக்காரவுக அவுக..!! எங்க அப்பன் ஆத்தாவுக்கு நான் ஒத்தை புள்ளை.. நானும் சின்ன வயசுல இருந்து அந்த வூட்டுலதான் அம்மாவோட வேலை பாக்குறது..!! வீட்டை பெருக்கி சுத்தம் பண்றது.. தண்ணி சொமக்குறது.. ஆடு மாடுக்கு தீனி வைக்கிறது.. அதுக போடுற சாணத்தை அள்ளி போடுறது..!! எங்க மொதலாளிக்கு நாலு புள்ளைக.. எல்லாத்துக்கும் எளய புள்ளைதான் என் வூட்டுக்காரரு.. சின்ன வயசுல இருந்தே எனக்கும் அவருக்கும் சிநேஹிதம்.. ஒண்ணாதான் வெளையாடுவோம்.. காட்டுக்குள்ள சுத்தி திரிவோம்.. மலை மேல ஏறி யானை பாப்போம்..!! சின்ன வயசு சிநேஹிதம்.. நாங்க வளர வளர.. எங்களை விட வேகமா வளந்துச்சு.. சின்ன வயசுல அதை கண்டுக்காம விட்ட எங்க மொதலாளி, நாங்க பெரியாளானப்புறம் என்னை கண்டதுண்டமாக்குறேன்னு கெளம்பிட்டாரு..!!" பழைய நினைவுகளில் சுத்தமாக மூழ்கிப் போயிருந்த கௌரம்மா.. நிறுத்தி, நிதானமாக, தெளிவாக சொன்னதை எல்லாம் நந்தினி எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள். "அவரை வூட்டுல அடைச்சு போட்டுட்டாங்க.. அவரு அப்பாவும், அண்ணனுகளும் என்னை தீத்து கட்ட திட்டம் போட்டுருக்காங்க.. அதை கேட்டு இவரு பதறி போய்.. அங்க இருந்து தப்பிச்சு எங்க வூட்டுக்கு ஓடி வந்துட்டாரு..!! 'இங்க இருந்தா உன்னை கொன்னு போட்ருவாங்க.. என்னோட வந்ததுடு கௌரம்மா..'ன்னாரு..!! எனக்கும் வேற வழி தெரியலை.. என்னை பெத்தவங்களுக்கும் வேற வழி தெரியலை.. கட்டுன பொடவையோட, கழுத்துல ஒரு நகை நட்டு கூட இல்லாம அவரோட கெளம்பிட்டேன்..!! சித்தூர் போனோம்.. அங்க இருந்து ரயிலேறி திருப்பதி போயிட்டோம்.. மடத்துல தங்கிக்கிட்டோம்..!! கைல இருந்த காசுலாம் நாலு நாளைக்கு ரொட்டி வாங்கத்தான் சரியா இருந்தது.. அவரும் நானும் வெறுங்கையோட நின்னோம்.. வேலையும் எதுவும் கெடைக்கலை.. வேலை தர்றேன்னு சொன்னவனுக என்னை பார்த்த பார்வையே சரியில்ல.. ஊருக்கும் திரும்ப போக முடியாது.. எங்களை கண்டுபுடிச்சு காவு குடுக்குறதுக்கு ஒரு கூட்டமே காத்துக்கிட்டு இருக்குது.. என்ன பண்றதுன்னு எங்களுக்கு எதுவும் புரியலை நந்தினிம்மா..!!" கௌரம்மா தன் விழிகளை விரித்து வைத்தவாறு.. ஒருவித பிரம்மை பிடித்தவள் மாதிரி.. ஏதோ மொத்த சம்பவமும் இப்போது மீண்டும் தன் கண்முன் நடப்பது போல பாவித்துக்கொண்டு.. நெஞ்சு குமுற சொல்லிக் கொண்டிருந்தாள்..!! நந்தினியும் இப்போது அவளுடைய கதையில் மிகவும் ஒன்றிப் போய் கேட்டுக் கொண்டிருந்தாள். "உயிரை விட்ரலாம்னு முடிவு பண்ணினோம்..!! மலை மேல ஏறி ஏழுமலையானை பாத்துட்டு.. 'ஏண்டா எங்களுக்கு இந்த நெலமையை கொடுத்த.. நாங்க என்ன பாவம் செஞ்சோம்..?'னு அவனை நாலு கேள்வி கேட்டு அழுதுட்டு.. அந்த மலைல இருந்தே குதிச்சு உயிரை விட போனோம்..!! சாவுறதுக்கு முன்னாடி கடைசியா ஒருதடவை கட்டி புடிச்சு அழுதுட்டு இருந்தோம்.. அப்போத்தான் எங்களோட சேர்ந்து அழுத அந்த பிஞ்சுக்கொரலும் எங்க காதுல வுழுந்துச்சு..!! திரும்பி பாத்தா.. ஒரு அஞ்சு வயசு புள்ளை தனியா நின்னு 'அம்மா அம்மா'ன்னு அழுதுட்டு இருந்தது..!! நம்ம அசோக்கு.. எங்க உசுரை காப்பாத்த அந்த ஏழுமலையான் அனுப்பி வச்ச அசோக்கு..!!"
அவ்வளவு நேரம் கண்ணீர் விட்டவாறு தன் கதையை சொல்லிக்கொண்டிருந்த கௌரம்மாவின் முகத்தில் இப்போது பட்டென ஒரு பிரகாசம்..!! 'அசோக்கு..!!' என்று சொல்லும்போது அவளுடைய உடலில் ஒரு சிலிர்ப்பு..!! அவளுடைய பரவச உணர்ச்சி நந்தினியையும் தொற்றிக் கொண்டது. "எங்களுக்கு கொஞ்ச நேரம் ஒன்னும் புரியலை.. பெத்தவுகளை பிரிஞ்சு கொழந்தை தனியா வந்துடுச்சுன்னு தெரிஞ்சது.. செத்துப்போக நெனச்ச எங்களுக்கு, அந்த பச்சை கொழந்தையை அப்படியே வுட்டுட்டு கீழ குதிக்க மனசு வரலை..!! புள்ளைய தூக்கிட்டு ஓடுனோம்.. அதுக்குள்ளே அம்மாவும், ஐயாவும் அழுதுட்டே எதுக்க வந்தாக.. புள்ளையை எங்ககிட்ட வாங்கி முத்தமா கொடுத்து கொஞ்சுனாக.. புள்ளை உசுரை காப்பாத்துன எங்களை கையெடுத்து கும்பிட்டாக..!! அப்புறம் எங்க கதையை பத்தி கேட்டவுக.. எங்களையும் அவுக கூட கூப்டுக்குட்டு மெட்ராசுக்கு வந்துட்டாக.. அப்போருந்து நானும் என் வூட்டுக்காரரும் இங்கதான்.. எங்க குடும்பத்தை மறந்து.. இதுதான் எங்க குடும்பம்னு நெனச்சு வாழ்ந்துட்டு இருக்கோம்..!! அன்னைக்கு மட்டும் அசோக்கு அந்த எடத்துக்கு வரலைன்னா.. நாங்க செத்து இப்போ இருபத்திரண்டு வருஷம் ஆயிருக்கும்மா..!!" நந்தினிக்கு இப்போது எல்லாம் புரிந்தது. கௌரம்மா, ராமண்ணா, மஹாதேவன், அசோக்.. அவர்களுக்கு இடையிலான அந்த அன்பும், புரிதலும், விசுவாசமும்.. அதற்கு அடிப்படையான பழைய உண்மைகளும்..!! எல்லாம் நந்தினிக்கு தெளிவாக புரிந்தது..!! ஆனால்.. கௌரம்மாவுக்கும், ராமண்ணாவுக்கும் இப்படிப்பட்ட ஒரு பின்னணி இருக்கும் என்றுதான் நந்தினி சுத்தமாக எதிர்பார்த்திரவில்லை..!! அவள் அதை எண்ணி வியந்து கொண்டிருக்கும்போதே, கௌரம்மா திடீரென எதையோ நினைத்தவளாய் மீண்டும் சோகமான குரலில் ஆரம்பித்தாள். "இருபத்தி ரெண்டு வருஷம்..!! எப்படி போச்சுன்னே தெரியலை..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்.. என் வூட்டுக்காரருக்கு படிப்பு இல்லாட்டாலும்.. வீடு, பால்ப்பண்ணை, காடு கழனின்னு.. நல்ல சொத்துபத்து.. ஏவுன வேலையை கேக்குறதுக்கு எரநூறு ஆளுக இருப்பாக அங்க..!! எப்படி இருக்க வேண்டியவரு தெரியுமா..?? எந்த கொறையும் இல்லாம ராசா மாதிரி காலாட்டிட்டு வாழ்ந்திருக்க வேண்டியவரு.. இந்த அதிர்ஷ்டம் கெட்ட சிறுக்கியை காதலிச்ச பாவத்துக்கு.. காலம் பூரா அவரை காரோட்ட விட்டுட்டேன்..!!" சொல்லும்போதே கௌரம்மாவின் கண்களில் நீர் தாரை தாரையாய் ஓட ஆரம்பித்தது. நந்தினி பதறிப்போனாள். "ஐயோ.. என்னம்மா நீங்க..? அழாதிங்க.. கண்ணை தொடைச்சுக்காங்க..!! காரு ஓட்டுனா என்ன.. கலெக்டரு உத்தியோகமா இருந்தா என்ன..? நீங்க ரெண்டு பேரும் சேந்து இருக்கீங்களே.. அந்த சந்தோஷத்தை விட வேற என்ன வேணும்..??" நந்தினி அவ்வாறு சொன்னதும் கௌரம்மா பட்டென்று தன் கண்களை துடைத்துக் கொண்டாள். மீண்டும் உதட்டில் புன்னகையுடன் சொன்னாள். "ஆமாம்மா..!! அவரும் அடிக்கடி அதைத்தான் சொல்வாரு..!! சொத்து பத்தெல்லாம் உன் ஒத்தை சொல்லுக்கு ஈடாகுமான்பாரு.. ‘உன் மூஞ்சை பாத்தா எனக்கு போதும்மா.. உன் கையால ஒருவாய் சோறு சாப்பிட்டா எனக்கு போதும்மா’ன்னு சொல்வாரு..!! என் மேல அவருக்கு கொள்ளை பிரியம்..!!" கௌரம்மா பரவசமாக சொல்ல, "ம்ம்.. எனக்கு தெரியும்..!!" என்றாள் நந்தினியும். "அந்த ஏழுமலையான் கருணையால இந்த குடும்பத்துல வந்து சேர்ந்தோம்.. ரொம்ப சந்தோஷமா, ஒரு திருப்தியான வாழ்க்கை வாழ்ந்துட்டோம்.. எங்களுக்கு ஒரு புள்ள இல்லைன்ற கவலை கூட எங்களுக்கு கெடயாது.. அசோக்கை எங்க புள்ளையாத்தான் நெனச்சுக்குவோம்..!! அதுவும்.. அம்மா போன அந்த கொஞ்ச நாளு.. ஒரு ரெண்டு வருஷம்.. ஐயா அப்படியே உடைஞ்சு போயிட்டாரு.. பித்து புடிச்ச மாதிரித்தான் இருந்தாரு.. அப்போலாம் அசோக்கை நானும், என் வூட்டுக்காரரும்தான் கவனிச்சுக்குவோம்.. அசோக்கு என் வூட்டுக்காரரு நெஞ்சுல படுத்துத்தான் தூங்கும்.. அம்மா அம்மான்னு என் காலையே சுத்தி சுத்தி வரும்..!!" "ம்ம்.. அசோக் ரொம்ப கொடுத்து வச்சவரு.. ஒரு அம்மா இல்லாம போனாலும், உங்க மூலமா அவருக்கு இன்னொரு அம்மா கெடைச்சிருக்காங்க..!!" "ஹாஹா.. ஆமாம்.. அசோக்கும் அதையேதான் சொல்லும்..!!" "என்ன சொல்வாரு..?" "எனக்கு ரெண்டு அம்மான்னு சொல்லும்..!! இப்போவும் ரொம்ப குஷியாயிட்டா.. அம்மா அம்மான்னு என்னை கொஞ்சும்..!!" சொல்லும்போதே கௌரம்மாவின் முகத்தில் ஒரு சந்தோஷம் கலந்த வெட்கம். "ம்ம்.. அம்மான்னு யாராவது நம்மளை கூப்பிடுறதே கூட ஒரு பெரிய சந்தோஷம்தான் இல்ல..? அந்த ஃபீலிங்கே தனி இல்ல..??" "ஆமாம்மா.. அசோக் அப்படி என்னை கூப்பிடுறப்போலாம்.. எனக்கு மனசு அப்படியே பூரிச்சு போயிடும்..!! தாயில்லா புள்ளைக்கு நாம தாயா இருக்கோமேன்னு பெருமையா நெனச்சுப்பேன்..!! ஆனா அந்த அம்மா விஷயத்துல.. கொஞ்சநாள் அசோக்கு என்னையே பொறாமைப்பட வச்சுடுச்சு தெரியுமா..?" "அப்படியா..? என்னாச்சு..?" நந்தினி அந்த மாதிரி ஆர்வமாக கேட்டதுந்தான், கௌரம்மா தான் அவசரப்பட்டு அவ்வாறு சொல்லிவிட்டதை உணர்ந்தாள். உடனே தடுமாற்றமாய் சமாளிக்க முயன்றாள். "அ..அது எதுக்கு இப்போ.. வேணாம் விடு.." "பரவால.. சொல்லுங்க.." "ஐயோ.. அந்த விஷயம் பெரிய ஐயாவுக்கு கூட தெரியாது.. யார்கிட்டயும் சொல்ல கூடாதுன்னு அசோக்கு என்கிட்டே சொல்லி வச்சிருக்கு.." "ஓஹோ..?? அப்படியா..?? அப்போ கண்டிப்பா எனக்கு தெரிஞ்சே ஆகணும்.. சொல்லுங்க..!!" "வே..வேணாம் நந்தினிம்மா.." "ம்ஹூம்.. நான் விடமாட்டேன்.." "அசோக்குக்கு தெரிஞ்சா வம்பு.." "பயப்படாதீங்க.. நான் அவர்கிட்ட சொல்ல மாட்டேன்.. தைரியமா சொல்லுங்க..!!" கௌரம்மா சொல்லப்போவது தனக்கே ஆப்படிக்கிற விஷயம் என்பதை அறியாத நந்தினி, அவளை கட்டாயப் படுத்தினாள். கொஞ்சம் தயங்கிய கௌரம்மாவும், நந்தினி கட்டாயப்படுத்தவும் அசோக்கிடம் சொல்ல மாட்டேன் என்று உறுதி கொடுக்கவும், பிறகு மெல்ல சொல்ல ஆரம்பித்தாள். "ஸ்கூல் படிக்கிறப்போலாம் 'எனக்கு ரெண்டு அம்மா.. எனக்கு ரெண்டு அம்மா..' ன்னு சொல்லிட்டு இருந்த அசோக்கு.. காலேஜ் போனப்புறம் ஒருநாளு.. திடீர்னு எனக்கு ஃபோன் பண்ணி.. 'உனக்கு போட்டிக்கு ஆள் வந்தாச்சு கௌரம்மா.. இனிமே எனக்கு மூணு அம்மா..'ன்னு சந்தோஷமா சொல்லுச்சு..!!" "ஹாஹா..அது யாரு அந்த மூணாவது அம்மா..??" சிரிப்புடனே கேட்டாள் நந்தினியும், இன்னும் விஷயம் விளங்காதவளாய். "யாரோ கூடப் படிச்ச பொண்ணு நந்தினிம்மா.. அசோக்குகிட்ட நல்லா பிரியமா பேசிருக்குது.. இல்ல இல்ல.. அப்படி கூட சொல்ல கூடாது.. பிரியமா இருக்குற மாதிரி நடிச்சிருக்குது.. அசோக்கும் அந்த நடிப்பை நம்பி ஏமாந்து.. அந்தப் பொண்ணை விரும்ப ஆரம்பிச்சுடுச்சு.. அவதான் நம்ம பொண்டாட்டின்னு மனசுக்குள்ள ஆசையை வளத்துக்க ஆரம்பிச்சுடுச்சு.." கௌரம்மா சொல்ல சொல்ல, நந்தினிக்கு இப்போது சுரீர் என்று இருந்தது. 'இவள் சொல்லும் அந்தப்பெண் நானா..??' அவளுடைய உள்மனம் கேட்ட கேள்விக்கு, அவளுடைய மூளை ஆமாம் என்று தலையாட்ட, அவளுக்கு இப்போது அந்த சூழ்நிலை அவஸ்தையாக மாறிப் போனது. ஏண்டா இவளிடம் கேட்டோம் என்பது மாதிரி திருதிருவென விழித்தாள். கௌரம்மாவோ நந்தினியின் முகமாற்றத்தை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பேசினாள். "அப்போ கொஞ்ச நாள்.. அசோக்கு ஃபோன்ல எங்கிட்ட பேசுறப்போலாம்.. அந்தப்பொண்ணை பத்தியே பேசிட்டு இருக்கும்.. அவ அப்படி அவ இப்படின்னு.. 'செத்துப்போன அம்மா உயிரோட வந்துட்ட மாதிரி இருக்கு கௌரம்மா..'ன்னு சொல்லும்.. அப்படின்னா எந்த அளவுக்கு அந்த பொண்ணு மேல உயிரையே வச்சிருந்துருக்கும்னு பாத்துக்கோ..!!" நந்தினிக்கு இப்போது அவளுடைய இதயத்தை ஏதோ ஒன்று துளைத்து, ஒருவித வேதனையை ஒவ்வொரு அணுவிலும் செலுத்துகிற மாதிரியான ஒரு உணர்வு. அசோக் ஒருகாலத்தில் தன்னை காதலித்தான் என்பது அவளுக்கு தெரிந்த சேதிதான். ஆனால் எந்த அளவுக்கு காதலித்தான் என்பது இப்போது அவளது புத்தியில் பலமாக உறைக்க, அவளுடைய உடல் ஒருமாதிரி சிலிர்த்துக் கொண்டது. கைவிரல்கள் லேசாக நடுக்கம் கொள்ள ஆரம்பித்தன. "அந்தப்பொண்ணை பத்தி அசோக்கு பேசுறப்போலாம் எனக்கே கொஞ்சம் கடுப்பா இருக்கும்.. யாரோ ஒருத்தி நம்ம அம்மா பொசிஷனுக்கு போட்டியா வர்றாளேன்னு ஒரு பொறாமை.. மாமியார், மருமக நடுவுல ஒரு போட்டி இருக்குமே.. அந்த மாதிரி..!! ஹாஹாஹாஹா.. இப்போ நெனச்சா எனக்கு சிரிப்பாத்தான் இருக்கு..!! கொஞ்ச நாள் அசோக்கு என்னை பொறாமை பட வச்சுடுச்சுன்னு அதைத்தான் சொன்னேன்..!!" "ம்ம்ம்..!! அப்புறம் அந்த பொண்ணு என்ன ஆனா..?" நந்தினி குறுகுறுப்புடன் கேட்டாள். "அசோக்குக்கு காலேஜு கடைசி நாளு.. அந்தப்பொண்ணோட வேஷம் கலைஞ்சு போயிடுச்சு..!! அசோக்கு அதுக்கு மொத நாளு என்கிட்டே ஃபோன்ல பேசுறப்போ கூட.. 'நாளைக்கு அந்த பொண்ணு முடிவு சொல்றேன்னு சொல்லிருக்கு.. கண்டிப்பா ஒத்துப்பான்னு நெனக்கிறேன்..'னு ரொம்ப நம்பிக்கையா சொல்லுச்சு..!! ஆனா.. அந்தப்பொண்ணு அந்த நம்பிக்கையை உடைச்சுடுச்சு.. அசோக்கை வேணாம்னு சொல்லிடுச்சு..!! அசோக்குக்கு வெவரம் தெரிஞ்சு அது அழுது நான் பாத்ததே இல்ல நந்தினிம்மா.. காலேஜ்ல இருந்து திரும்பி வந்த அன்னைக்கு அசோக்கு என் மடில படுத்து அழுதுச்சு பாரு.. அப்படி ஒரு அழுகை.. தேம்பி தேம்பி..!! அதை பாத்த எனக்கு ஈரக்கொலை அப்படி துடிச்சுச்சு..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்.. அப்புறந்தான் அப்பாவிப் புள்ளையா இருந்த அசோக்கு நெறைய மாறிப்போச்சு..!!" கௌரம்மா கவலையுடன் சொல்லிமுடிக்க, நந்தினி என்னவென்று சொல்லமுடியாத ஒரு உணர்ச்சி கொந்தளிப்புக்கு உள்ளானாள். அவளை பற்றி நினைக்க அவளுக்கே வெறுப்பாக இருந்தது. ஒரு அன்புள்ளத்தை புரிந்துகொள்ளாது.. அறிவில்லாமல் நான் அள்ளி வீசிய அமில வார்த்தைகள்.. ஒரு ஆண்மகனை எந்த அளவிற்கு மாற்றியிருக்கிறது..?? அவனுடைய வாழ்க்கையை எந்த அளவிற்கு புரட்டிப் போட்டிருக்கிறது..?? ச்சே.. அனைத்திற்கும் நானே அடிப்படை காரணமாகி விட்டேனே..?? நந்தினி அவ்வாறு தன்னைத்தானே திட்டிக் கொண்டிருக்கும்போதுதான், கௌரம்மா திடீரென ஞாபகம் வந்தவளாய் உற்சாகமான குரலில் நந்தினியிடம் கேட்டாள். "ஏம்மா.. நீயும் அசோக்கும் ஒரே காலேஜுல படிச்சவங்கதான..?" "ஆ..ஆமாம்.." சொல்லும்போதே நந்தினியிடம் ஒரு உதறல். "அடச்சே.. இத்தனை நாளா இதை கேக்கனும்னு எனக்கு தோணலை பாரு.." "எ..எதை..??" "உனக்கு அந்தப்பொண்ணு யார்னு தெரியுமா..??" "இ..இல்லைங்க.. எ..எனக்கு தெரியாது.." நந்தினி திணறலாக சொன்னாள். "ஃபோட்டோ பாத்தா கண்டு புடிச்சுடுவியா..??" "ஃபோட்டோவா..????" நந்தினி இப்போது விழிகள் விரித்து அதிர்ந்தாள். "ஆமாம்மா.. அசோக்கு அந்த பொண்ணோட காலேஜுல எடுத்த ஃபோட்டோவை இன்னும் வச்சிருக்கு.. அப்பப்போ எப்போவாவது அதை எடுத்து எடுத்து பாத்துட்டு உக்காந்திருக்கும்..!! அந்த போட்டோவை பாத்தா.. அந்தப்பொண்ணு யாருன்னு உன்னால கண்டு பிடிக்க முடியுமா..??" கௌரம்மா கேட்க, நந்தினிக்கு மயக்கம் வராத குறைதான். "ஃபோட்டோலாமா வ..ச்சிருக்காரு..?" "அட நெஜமாத்தான்..!! வா.. நான் உனக்கு அந்த பொண்ணு ஃபோட்டோவை காட்டுறேன்.." "ஐயோ.. இ..இல்லைங்க.. வேணாம்.." நந்தினி இப்போது பேக் அடித்தாள். கௌரம்மா அவளை விடவில்லை. "அட வாம்மா.. பரவால.. இவ்வளவு சொல்லிட்டேன்.. இனிமே அந்த ஃபோட்டோவையும் காட்டுறதுல எனக்கு என்ன இருக்கு..??" சொன்ன கௌரம்மா நந்தினியின் கையைப் பற்றி உள்ளறைக்குள் அழைத்து சென்றாள். நந்தினியின் இதயமோ 'படக்.. படக்..' என்று அடித்துக்கொள்ள அவளை பின்தொடர்ந்தாள். 'இது என்னடா வம்பா போச்சு..?? இவள் அப்போதே வேணாம் என்றாள்.. அத்துடன் விட்டிருக்கலாமோ..?? தேவையில்லாமல் இவளை கட்டாயப்படுத்தி.. இப்போது பார்..!! ஆமாம்.. இவள் அந்த போட்டோவை ஏற்கனவே பார்த்திருப்பாளா..?? பார்த்திருந்தால் அப்புறம் எப்படி என்னை இவளுக்கு அடையாளம் தெரியவில்லை..?? அடையாளம் காட்ட என்னை ஏன் அழைத்து செல்கிறாள்..?? ஒருவேளை சில வருடங்களுக்கு முன்பு இவள் பார்த்து.. இப்போது என் முகம் மறந்து போயிருக்குமோ..?? ஐயையோ..!! அப்படி மட்டும் இருந்தால்.. இப்போது இவள் அந்த ஃபோட்டோவை பார்த்ததும் பளிச்சென்று கண்டுகொள்வாளே..?? நான்தான் அந்த அடங்காப்பிடாரி என்று எல்லோருக்கும் தெரிந்துவிடுமே..?? 'ஐயோ.. கடன்காரா.. ஏண்டா என் ஃபோட்டோவை எல்லாம் இன்னும் வைத்துக்கொண்டு திரிகிறாய்..?' என கணவனை திட்டினாள். அந்த அறை.. வீட்டிற்குள்ளேயே அமைந்திருக்கும் குட்டி நூலகம். அசோக் ஏதாவது படிக்கவேண்டும் என்றாலோ, அலுவலக சம்பந்தமாக வேலை என்றாலோ அங்கே வந்து அமர்ந்து கொள்வான். அங்குதான் இப்போது கௌரம்மா நந்தினியை அழைத்து சென்றாள். உள்ளே நுழைந்ததும் நந்தினியின் கையை விடுவித்து, அறையின் மூலையில் வைக்கப்பட்டிருந்த அந்த அலமாரியை நெருங்கினாள். அலமாரி திறந்து, ஒரு சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு மேலே ஏறினாள். அலமாரியின் மேல் அடுக்கில் உயரமாய் செருகப்பட்டிருந்த அந்த ஆல்பத்தை உருவி எடுத்தபின் கீழே இறங்கினாள்.
நந்தினியை நெருங்கியவள் அந்த ஆல்பத்தை புரட்ட ஆரம்பித்தாள். நந்தினியோ படபடக்கும் இதயத்துடன் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றிருந்தாள். 'வேணாம்மா.. வேணாம்மா..' என்று நந்தினி மிரட்சியாய் சொல்லிக்கொண்டிருக்க, கௌரம்மா அதை கண்டுகொள்ளாமல் ஆல்பத்தை புரட்டிக் கொண்டிருந்தாள். அது அசோக்கின் காலேஜ் ஆல்பம். காலேஜில் அவன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு. அதற்குள் இருந்து தன் முகம் எந்த நேரமும் இப்போது வெளிப்படப் போகிறது என்பதை உணர்ந்த நந்தினிக்கு தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது. "ஆங்.. இதுதான் அந்தப்பொண்ணு ஃபோட்டோ.." கௌரம்மா திறந்த ஆல்பத்தின் அந்த புகைப்படத்தை சுட்டிக்காட்ட, நந்தினி உச்சபட்ச பதற்றத்துடன் அந்த புகைப்படத்தின் மீது பார்வையை வீசினாள். அந்த புகைப்படம் அவளுடைய கண்ணில் பட்ட பின்பும் சில வினாடிகளுக்கு அந்த பதற்றம் அவளுடைய உடலுக்குள்ளேயேதான் குடியிருந்தது. அப்புறம் மெல்ல மெல்ல அவளுக்கு அந்த பதற்றம் குறைந்தது. உச்சபட்ச வேகத்தில் துடித்துக்கொண்டிருந்த அவளது இதயமும் கொஞ்சம் கொஞ்சமாய் தன் வேகத்தை குறைத்தது. அத்தனை நேரம் அவஸ்தையாய் வெளிப்பட்ட அவளது சுவாசமும் அப்புறந்தான் சீரானது. அந்தப்புகைப்படம் பேப்பர் ப்ரசண்டேஷனுக்காக அவர்கள் பெங்களூர் சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்க வேண்டும். பட்டையும், கொட்டையும், சோடாபுட்டி கண்ணாடியுமாய்.. பற்களை இளித்தவாறு அசோக் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருக்க.. அவனுக்கு இரண்டடி இடைவெளி விட்டு நின்றிருந்த நந்தினியோ, கேமிராவை பாராமல் வேறு பக்கமாக திரும்பியிருந்தாள். அலை அலையாய் அவளுடைய கூந்தலே பிரதானமாக தெரிய, அவளது முகம் கொஞ்சமே கொஞ்சூண்டு தெரிந்தது. அதை வைத்து அவள் நந்தினிதான் என்று இந்த கௌரம்மா அல்ல.. யாராலுமே கண்டுபிடிக்க முடியாது..!! எந்த மாதிரி சூழ்நிலையில் அந்த புகைபப்டம் எடுக்கப்பட்டது என்று நந்தினிக்கு இப்போது ஞாபகம் வரவில்லை. 'எனக்கு தெரியாமலேயே இது எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.. யாரிடமோ கேமராவை கொடுத்து அசோக் அந்த புகைப்படத்தை எடுக்க சொல்லியிருக்க வேண்டும்.. அதுதான்.. அவன் தெளிவாக போஸ் கொடுக்க, நான் எங்கேயோ பார்த்துக்கொண்டு நிற்கிறேன்..!! எஸ்.. அப்படித்தான் இருக்க வேண்டும்..!!' "என்னம்மா நந்தினி.. இந்தப்பொண்ணு யார்னு தெரியுதா..??" கௌரம்மா கேட்டதும் நந்தினி கவனம் கலைந்தாள். "இ..இல்லைங்க.. தெரியலை.." "நல்லா பாத்து சொல்லும்மா.. உன் கூட படிச்ச பொண்ணுதான்.." "இதுல என்னத்த பாத்து சொல்றது.. அந்தப்பொண்ணோட தலை முடிதான் தெரியுது.." "இல்லம்மா.. இங்க சைடுல பாரு.. மூஞ்சி தெரியுது பாரு.." "ஐயோ.. அதை வச்சுலாம் என்னால கண்டுபிடிக்க முடியலை.. காலேஜ் முடிச்சு ஆறு வருஷம் ஆகி போச்சுல.. எல்லா மூஞ்சியும் மறந்து போச்சு.." "ம்ம்ஹ்ஹ்ம்ம்.. அப்போ உனக்கும் தெரியலையா..?" "தெரியலை.." கௌரம்மா ஏமாந்து போனாள். அவள் அப்புறம் நந்தினியை எதுவும் கேட்கவில்லை. ஃபோட்டோவில் தெரிந்த அந்த நந்தினியின் அரைக்கால்வாசி முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். நந்தினிக்கு 'அப்பாடா..!!' என்று இருந்தது. 'ச்சே.. என்ன கொடுமைடா சாமி இது..?? இவள் வேணாம் என்று மறுத்தபோதே சும்மா இருந்திருக்கலாம்.. கொஞ்ச நேரத்தில் எவ்வளவு டென்ஷன் படுத்தி விட்டாள்..?? ஷ்ஷ்ஷ்ஷஷ்.. ப்ப்ப்பாபாஆஆ...!!' நந்தினி அவ்வாறு நிம்மதி பெருமூச்சு விட்டபோதுதான் கௌரம்மா மீண்டும் ஆரம்பித்தாள். "கொரங்கு..!!" என்றாள் வெறுப்பாக. "யா..யாரை சொல்றீங்க..?" நந்தினி உதறலாக கேட்டாள். "ஃபோட்டோல ஸாரி கட்டிக்கிட்டு நிக்குதே.. அந்த சனியனைத்தான் சொல்றேன்.." "ச..சனியனா..????" நந்தினி இஞ்சி தின்ற குரங்கை போல விழித்தாள். "பின்ன என்ன பனியனா..?? ஆளும் அது மூஞ்சியும்..!!" "போட்டோலதான் அந்த பொண்ணு மூஞ்சியே முழுசா தெரியலையே..?" "நல்லவேளை முழுசா தெரியலை..!! கொஞ்சூண்டு மூஞ்சியே கோரமா இருக்குது.. முழுசும் பாத்தா அவ்வளவுதான்.. மூச்சே எனக்கு நின்னு போயிருக்கும்..!! செய்றதையும் செஞ்சுட்டு.. எப்படி நிக்கிது பாரு.. எனக்கென்னேன்னு எருமைக்கடா மாதிரி.." "ஐயோ.. ஏங்க ஒரு பொண்ணை போய் தேவையில்லாம திட்டுறீங்க..?" "பொண்ணா..?? இதுவா..?? த்தூ.. இதுலாம் பெண்ஜென்மமே கெடயாது நந்தினிம்மா.. பெஸாசு..!!" "அச்சச்சோ வேணாங்க.. பாவம்.. அவ எந்த நெலமைல அவரை வேணாம்னு சொன்னாளோ..??" "வேணான்னு சொல்லட்டும்மா.. அதை ஒரு முறையா சொல்லணும்.. அதைவிட்டுட்டு.. அதென்ன தேவையில்லாம கேவலமான வார்த்தை எல்லாம் பேசுறது...?? ம்ம்..??" "தப்புதான்.. விட்டுடுங்க..!!" "நான் விட மாட்டேன்.. இந்த ஃபோட்டோவை பாக்குறப்போலாம் எனக்கு அப்படி ஒரு வெறுப்பு வரும்.. என்ன ஒரு நெஞ்சழுத்தம் இருந்தா.. இந்த கொழுப்பெடுத்த சிறுக்கி.. என் புள்ளையை பாத்து அந்த மாதிரி கேள்வி கேட்டிருக்கும்..?? இவ மட்டும் இப்போ என் முன்னாடி வந்து நின்னான்னு வச்சுக்கோ.." "வந்து நின்னா..??" நந்தினி கிளி கிளம்பிய குரலில் கேட்டாள். "அவ கொரவளையை அப்படியே கடிச்சு துப்பிப்புடுவேன் நானு.. அவ்வளவு ஆத்திரத்துல இருக்கேன் இவ மேல..!!" கௌரம்மா பற்களை நறநறவென கடித்தவாறு பத்திரகாளி மாதிரி சொல்ல, நந்தினி மிரண்டு போனாள். திருடனுக்கு தேள் கொட்டிய நிலை என்றால் என்னவென்று அன்றுதான் நந்தினிக்கு முழுமையாக புரிந்தது. எப்படியாவது அந்த பேச்சை மாற்றும் எண்ணத்துடன், "ஐயோ.. பாவம்மா.. அப்படிலாம் சொல்லாதீங்க.." என்றாள். "பாவமா..??? இவளா பாவம்..??? இவ பண்ணுன அக்குரமத்துக்கு.. இவளுக்கு இப்போ சாபம் வுட போறேன் நந்தினிம்மா..!!" "சாபமா..?? அதெல்லாம் வேணாம்மா.. விட்ருங்க.. அவ தாங்க மாட்டா..!!" "அவ தாங்க கூடாதுன்னுதான் இந்த சாபமே..!! இவளுக்குலாம்.." "அவளுக்குலாம்..??" "எவனாவது கேடுகெட்ட.. அயோக்கிய.. பொம்பளை பொறுக்கி பயதான் புருஷனா கெடைப்பான்.. நீ வேணா பாரு.. என் சாபம் பலிக்குதா இல்லையான்னு..!!" கௌரம்மா தன் கண்களை உருட்டி ஆக்ரோஷமாக சொன்னாள். "ஹாஹாஹாஹாஹாஹா..!!!"
அவ்வளவு நேரம் கௌரம்மா தன்னை திட்டியபோது அவஸ்தையாக நெளிந்த நந்தினி, இப்போது அவளுடைய திட்டு அசோக்கிற்கு என்று தெரிந்ததும் கலகலவென சிரித்தாள். 'இந்தப்பெண் ஏன் திடீரென சிரிக்கிறது..?' என்று கௌரம்மாவும் எதுவும் புரியாமல் பார்த்தாள். அப்புறம் ஒரு பத்து நிமிடங்கள் கழித்து.. நந்தினி தன் அறைக்கு வந்தாள். அவளுடைய கையில் அந்த ஆல்பம். ஒரு நாற்காலியை இழுத்து, ஜன்னலுக்கு அருகே போட்டுக்கொண்டு அமர்ந்தாள். ஜன்னல் கதவுகள் திறந்திருக்க, அதன் வழியாக உள்ளே வீசிய தென்றல் காற்று, நந்தினியின் மேனியை இதமாக தடவி, அவளுடைய உடலுக்குள் ஒரு இன்ப சிலிர்ப்பை ஏற்படுத்தின. நந்தினி அந்த ஆல்பத்தை திறந்தாள். அந்த புகைப்படத்தை பார்த்தாள். தனது வலது கை விரல்களால் அசோக்கின் முகத்தை மென்மையாக வருடிக் கொடுத்தாள். இப்போது அவளுடைய மனதுக்குள் என்னவென்று விவரிக்க முடியாத ஒரு வகை ஒரு படபடப்பு..!! மின்சாரம் பாய்வது கணக்காக உடலும் மனதும் விர்ர்ர்... விர்ர்ர்ர்.. என்று துடித்துக் கொண்டு கிடந்தன..!! அவளுக்கு அந்த உணர்ச்சி மிகவும் பிடித்திருந்தது.. முதன்முறையாக அனுபவிக்கிறாள்..!! ஃபோட்டோவில் ஈயென இளித்துக்கொண்டிருந்த அசோக்கின் முகத்தையே வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். ரோமமில்லாமல் மொழுமொழுவென்று இருந்த அவன் முகத்தை பார்த்து, 'பழ மூஞ்சி..!!!!' என்று அவனை மனதுக்குள் செல்லமாக திட்டினாள். ஆறு வருடங்களுக்கு முன்பு பார்க்கவே சகிக்காத அந்த பழ மூஞ்சியை.. இப்போது ஏனோ நந்தினிக்கு பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது..!!

No comments:

Post a Comment