Thursday, September 25, 2014

ஆண்மை தவறேல் - பாகம் 16


அன்று மாலை ஆனதுமே நந்தினி பரபரப்பாக மாறினாள். கௌரம்மா வியப்பாக பார்க்க, ஆறு மணி வாக்கில் சென்று அன்று இரண்டாம் முறையாக குளித்து விட்டு வந்தாள். 'இந்தப்புடவை உனக்கு நல்லாருக்கு நந்தினி..' என்று அசோக் என்றோ சொன்ன அந்த அடர்சிவப்பு நிற புடவையை தேடிப்பிடித்து அணிந்து கொண்டாள். உற்சாகமாக கிச்சனுக்குள் நுழைந்தவள், உள்ளே காய்கறி நறுக்கிக்கொண்டிருந்த கௌரம்மாவிடம் சொன்னாள். "நீங்க ஹால்ல போய் டிவி பாருங்கம்மா.. இன்னைக்கு சமையல் எல்லாம் நான் பாத்துக்குறேன்..!!" "இல்லம்மா.. இந்த காய்கறி.." சொல்லிக்கொண்டிருந்த கௌரம்மாவை இடைமறித்து, "அப்படியே வச்சுடுங்க.. நான் பாத்துக்குறேன்.." என்று பட்டென சொன்னாள். கௌரம்மாவும் கையிலிருந்த கத்தியை காய்கறி தட்டிலேயே போட்டுவிட்டு, 'இன்று என்னாயிற்று இந்தப்பெண்ணுக்கு..?' என்பது போல நந்தினியை வித்தியாசமாக பார்த்தவாறே, ஹாலுக்கு நகர்ந்தாள். அவள் சென்ற பிறகு ஓரிரு நிமிடங்கள், நந்தினி இரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றியவாறு, கிச்சனையும் கிச்சனில் இருந்த சமைப்பதற்கு தேவையான மூலப் பொருட்களையும் வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தாள். அவற்றில் அசோக்கிற்கு என்னென்ன ஐட்டங்கள் பிடிக்கும் என்று மனதுக்குள் ஒருமுறை ஓட்டிப் பார்த்தாள். அந்த ஐட்டங்களை வைத்து என்னெல்லாம் அன்று இரவு உணவுக்கு தயார் செய்யலாம் என்று ஒரு முடிவுக்கு வந்தாள். முடிவுக்கு வந்ததுமே மீண்டும் அவளை ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது. பம்பரம் போல சுழன்று சமையல் வேலைகள் எல்லாவற்றையும் அவளே தனியாக முடித்தபோது, மணி எட்டை நெருங்கியது. 'ரெடியாயிடுச்சும்மா.. நீங்க மாமாவுக்கு சாப்பாடு எடுத்து வைங்க.. நான் இதோ வந்துர்றேன்..' என்று கௌரம்மாவிடம் சொல்லிவிட்டு நந்தினி மீண்டும் தன் அறைக்குள் நுழைந்தது கொண்டாள்.
பாத்ரூம் சென்று முகம் கழுவிக்கொண்டாள். கொஞ்சமாய் பவுடர் தீற்றிக் கொண்டாள். குட்டியாய் ஒரு ஸ்டிக்கர் பொட்டெடுத்து நடு நெற்றியில் ஒட்டிக் கொண்டாள். உறுத்தாத வண்ணத்தில் உதட்டுக்கு மெலிதாக சாயம் பூசிக்கொண்டாள். ஹேர் பின்னை பற்களால் கடித்தவாறே, மல்லிகைப்பூவை மொத்தமாய் எடுத்து தலையில் சூடிக் கொண்டாள். அழகாயிருக்கிறோமா என்று கண்ணாடியை ஒருமுறை பார்த்து திருப்தியடைந்தவள், அறையை விட்டு வெளியே வந்தாள். டைனிங் ரூமில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மாமனாரையும், அவருக்கு அருகில் இருந்து பரிமாறும் கௌரம்மாவையும், கடந்து ஹாலுக்கு சென்றாள். சோபாவில் அமர்ந்து கொண்டு கணவனின் வருகைக்காக கதவையே வெறிக்க ஆரம்பித்தாள். 'லேட் ஆக்கிடாதடா.. சீக்கிரம் வந்துடு..' என்று சத்தம் வெளிவராமல் முணுமுணுத்துக் கொண்டாள். அசோக்கும் அன்று சீக்கிரமே வீடு திரும்பி விட்டான். வந்த சிறிது நேரத்திலேயே நந்தினி அவனுக்கு உணவு பரிமாறினாள். அன்று எல்லாமே அவனுக்கு பிடித்த ஐட்டங்களாக இருக்க, நன்றாக சாப்பிட்டான். நந்தினி ஒரு சேரை இழுத்துப் போட்டு அவனுக்கு அருகே அமர்ந்து கொண்டு, அவன் சாப்பிடும் அழகையே ஓரக்கண்ணால் விழுங்கிக் கொண்டிருந்தாள். தனது உடை, முகம், தலை அலங்காரங்கள் பற்றி ஏதாவது அவன் கேட்பான் என்று எதிர்பார்த்திருந்தாள். அவனோ எதையும் கண்டுகொள்ளாமல் சாப்பாட்டில் குறியாக இருந்தது நந்தினிக்குள் ஒரு சிறிய ஏமாற்றத்தை விதைத்திருந்தது. இருந்தாலும்.. 'தன் கையால் சமைத்ததை.. வேறெந்த கவனமும் இல்லாமல்.. இவ்வளவு ஆசையாக உண்கிறானே..' என்ற நினைவு வேறொரு வகையான சந்தோஷத்தை அவளுக்கு தந்திருந்தது. அவளுடைய பார்வை மொத்தமும் அசோக்கின் முகத்தில் பதிந்திருக்க.. அவளுடைய மனம் முழுவதிலும் அவன் மீதான காதல் படிந்திருக்க.. மனதுக்குள்ளேயே செல்லமாக அவனிடம் உரையாடினாள்..!! 'ஒய்.. சாப்பாடு ரொம்ப பிடிச்சிருக்கோ.. இந்த மொக்கு மொக்குற..?? வந்ததுல இருந்து சாப்பாட்டுலயே கவனமா இருக்கியே.. சமைச்சவளை கொஞ்சம் திரும்பி பார்த்தா என்னவாம்..?? என்னை அவ்வளவு புடிக்குமா உனக்கு.. அம்மான்னு சொன்னியாம்.. ம்ம்..?? இப்பவும் அடிக்கடி அந்த ஃபோட்டோ எடுத்து பார்ப்பியாமே.. அன்னைக்கு நைட்டு நான் சாப்பிட மாட்டேன்னு சொன்னதும் உனக்கு எவ்வளவு கோவம் வருது..?? அப்போ.. என் மேல உனக்கு இன்னும் லவ்வு இருக்குதுதான..?? அப்புறமும் ஏன் இப்படி அமுக்குனி மாதிரி உம்முன்னு இருக்குற.. சொல்ல வேண்டியதுதான எங்கிட்ட..??' அவள் அந்த மாதிரி உள்ளத்துக்குள் ரகசியமாய் உரையாடிக் கொண்டிருக்கையிலேதான், திடீரென்று அவளுக்கு அந்த எண்ணம் தோன்றியது. 'இவன் தன் மனதில் இருக்கும் காதலை என்னிடம் சொல்வான் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்..? ஏற்கனவே ஒருமுறை சொன்னபோது, எவ்வளவு முடியுமோ அவ்வளவு காயப்படுத்தி விட்டேன்..!! மறுபடியும் காதலை சொல்லி சூடு பட்டுக்கொள்ள எந்த மடையனாவது நினைப்பானா..?? அப்போது போல என்னால் காயப்படுத்த முடியாவிட்டாலும், இப்போதும் அந்த காதலை என்னால் மறுதலிக்க முடியுமே..?? அதுவே அவனுக்கு அவமானம்தானே..?? அப்படி இருக்க.. அவன் எப்படி தன் மனதை திறந்து என்னிடம் காட்டுவான் என்று எதிர்பார்க்க முடியும்..??' 'ஆமாம்.. இதற்கு ஒரே வழி நான் முதல் அடி எடுத்து வைப்பதுதான்..!! நான்தான் இவனிடம் முதலில் சொல்ல வேண்டும்..!! என் மனம் எவ்வளவோ மாறியிருக்கிறதடா பார்.. அதை முழுதாய் நீயே அடைத்திருக்கிறாய்.. உன் காதலை நான் ஏற்றுக் கொள்கிறேன்.. என் கட்டளைகளை நீ ஏற்றுக் கொள்வாயா.. உன் கெட்ட வழக்கங்களை விட்டொழிக்கிறாயா.. உன்னை எனக்கே எனக்கென்று தந்து விடுகிறாயா.. உயிரும் உனக்கே உனக்கென்று சிந்தி விடுகிறேன்..' "ஏய்.. நீ இன்னும் சாப்பிடலையா..?" அசோக்கின் குரல் நந்தினியின் கவனத்தை கலைத்தது. "இ..இல்ல.. ஏ..ஏன் கேக்குறீங்க..?" தடுமாற்றமாய் சொன்னாள். "பசிச்சதுன்னா போட்டு சாப்பிடு.. அதை விட்டுட்டு சாப்பிடுற என் வாயையே மொறைச்சு மொறைச்சு பாத்துட்டு இருக்குற..?" "ஐயே.. நான் ஒன்னும் உங்களை பாக்கலை..!! நீங்க சாப்பிட்டு முடிங்க.. நான் அப்புறம் சாப்பிட்டுக்குறேன்..!!" முகத்தை சுளித்தவாறு சொன்ன நந்தினி வேண்டா வெறுப்பாக வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். திரும்பிக் கொண்டவளால் கொஞ்ச நேரம் கூட சும்மா இர முடியவில்லை. ஓரக்கண்ணால் மீண்டும் அவனையே பார்த்தாள். அசோக் அப்புறம் எதுவும் பேசவில்லை. அமைதியாக சாப்பிட்டு முடித்தான். கைகழுவி விட்டு அவர்களது பெட்ரூமுக்குள் சென்று புகுந்து கொண்டான். நந்தினியும் அவசர அவசரமாக சாப்பிட்டாள். பாத்திரங்களை எல்லாம் பரபரப்பாக கழுவி வைத்தாள். அவன் தூங்கியிருக்க கூடாதே என்று கவலையாக நினைத்துக்கொண்டே, அவளும் தங்கள் அறைக்குள் நுழைந்தாள். நல்ல வேளை.. அசோக் இன்னும் தூங்கி இருக்கவில்லை. விழித்துதான் இருந்தான். கட்டிலில் சாய்ந்து படுத்துக்கொண்டு, வயிற்றில் லேப்டாப்பை தாங்கி, கீ போர்டில் விரல்களை தடதடக்க விட்டிருந்தான். மேல் சட்டையை இப்போது துறந்திருந்தான். வொயிட் கலரில் ஒரு பனியனும், க்ரீம் கலரில் ஒரு ஷார்ட்சும் அணிந்திருந்தான். நந்தினி உள்ளே நுழைந்ததும் அவளை ஒருமுறை ஏறிட்டு பார்த்த அசோக், அப்புறம் மீண்டும் தன் பார்வையை லேப்டாப்பின் மீது வீசியிருந்தான். நந்தினிதான் ஒருமாதிரி இதயம் படபடக்க நின்றிருந்தாள். லேசாக வியர்ப்பது மாதிரி ஒரு உணர்வு அவளுக்கு. 'மனதில் இருப்பதை இப்போதே இவனிடம் சொல்லி விடலாமா..?? இல்லை.. இன்னும் கொஞ்ச நாள் இவனை ஆழம் பார்க்கலாமா..??' மனதில் குழப்பமான கேள்வியுடனே, நந்தினி கட்டில் மீது மடித்து வைக்கப்பட்டிருந்த பெட்ஷீட்டை எடுத்தாள். தரையில் விரித்தாள். தலையணை எடுத்து போட்டாள்.
படுக்கையில் வீழப் போனவள், ஒருகணம் தயங்கி நின்றாள். மீண்டும் தன் கணவனின் முகத்தையே ஆசையாக பார்த்தாள். 'ஏன் தாமதிக்கிறாய்.. சொல்லிவிடு.. சொல்லிவிடு.. இப்போதே சொல்லிவிடு..' உள்மனம் அவளை உந்தி தள்ளியது. நந்தினி அந்த மாதிரி தயங்கி நிற்பது, அசோக்கிற்கு தலையை திருப்பாமலே புரிந்து போனது. லேப்டாப்பில் இருந்து பார்வையை விலக்காமலே, மெல்லிய குரலில் கேட்டான். "என்னாச்சு..??" அசோக்கே அப்படி ஆரம்பித்ததும், நந்தினி இப்போது சற்றே தயக்கமாக சொன்னாள். "உ..உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்..!!" "சொல்லு.." இன்னும் அவனது பார்வை லேப்டாப்பின் மீதே படிந்திருந்தது. நந்தினி இப்போது சற்று நிதானித்தாள். எப்படி ஆரம்பிப்பது என்று அவளுக்கு புரியவில்லை. குழப்பமாக இருந்தது. அந்த குழப்பத்துடனே, "நீ..நீங்க குடிச்சிருக்கீங்களா..??" என்று சற்றும் சம்பந்தமில்லாமல் கேட்டாள். அசோக் இப்போது விழிகளை சுழற்றி தன் மனைவியை பார்த்தான். அவளுடைய கண்களை தனது கண்களால் மிக கூர்மையாக பார்த்து, சற்றே முறைப்பாக கேட்டான். "பாத்தா எப்படி தெரியுது..??" "கு..குடிக்காத மாதிரிதான் தெரியுது.." நந்தினி இப்போது அசடு வழிந்தாள். "அப்புறம் ஏன் அப்படி கேட்ட..?" "இ..இல்ல.. நீங்க தெளிவா இருக்கீங்களா.. இல்லையான்னு.." "நான் குடிச்சா கூட தெளிவாத்தான் இருப்பேன்.. என்ன மேட்டர்னு சொல்லு.." சொன்ன அசோக் மீண்டும் லேப்டாப்பை நோண்ட ஆரம்பித்தான். "அ..அது.. அது வந்து.." "ம்ம்.. எது வந்து..??" "அ..அதை எப்படி கேக்குறதுன்னு எனக்கு தெரியலை.." "உனக்கு இப்போ சொல்லனுமா.. கேக்கனுமா..??" அசோக்கின் கூர்மையான கேள்வி, நந்தினியை சற்று திகைக்க வைத்தது. திணறலாக சொன்னாள். "ரெ..ரெண்டுந்தான்.. மொ..மொதல்ல கேக்கணும்.. அ..அப்புறம் சொல்லணும்.." தான் உளறுகிறோமோ என்று நந்தினிக்கு அவள் மீதே இப்போது ஒரு சந்தேகம்.
"சரி.. அப்போ மொதல்ல கேளு.." அசோக் அமைதியாகசொல்ல, "ஒ..ஒரு நிமிஷம்.. இதோ வந்துர்றேன்.." என்று விட்டு நந்தினி அவசரமாக அந்த அறையை விட்டு வெளியேறினாள். வெளியேறியதுமே 'ஏண்டி இப்படி உளறி கொட்டுற..?' என்று தன் தலையில் தானே குட்டிக் கொண்டாள். அசோக் எதுவும் புரியாமல் அறை வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு அரை நிமிடத்திலேயே நந்தினி அந்த அறைக்குள் மீண்டும் நுழைந்தாள். அவள் கையில் இப்போது அந்த ஆல்பம் முளைத்திருந்தது. அசோக்கின் கல்லூரி ஆல்பம்..!! உள்ளே நுழைந்த நந்தினி கையிலிருந்த ஆல்பத்தை அசோக்கின் முன்பாக படக்கென்று நீட்டினாள். முகத்தில் ஒரு மலர்ச்சியும், உதட்டில் ஒரு குழந்தைத்தனமான சிரிப்பும், குரலில் ஒரு அதீத ஆர்வமுமாய் கேட்டாள். "இதுக்கு என்ன அர்த்தம்..?" அசோக் அவள் நீட்டிய ஆல்பத்தின் மீது ஒரு முறை பார்வையை வீசினான். அப்புறம்.. முகம் முழுதும் ஏக்கமும், எதிர்பார்ப்புமாய் இருந்த நந்தினியை ஏறிட்டு, எள்ளலான குரலில் கேட்டான். "இது என் காலேஜ் ஃபோட்டோ ஆல்பம்.. இதுல என்ன அர்த்தம் இருக்கு..?? ஏதோ ஷகீரா ம்யூசிக் ஆல்பத்தை நீட்டி என்ன அர்த்தம்னு கேட்டாலும்.. அதுல ஒரு அர்த்தம் இருக்கு..!!" அசோக்கின் கிண்டலால் பிரகாசமாய் இருந்த நந்தினியின் முகம் பட்டென்று சுருங்கிப் போனது. 'ஞே' என்று அசட்டுத்தனமாய் விழித்தாள். "அ..அதுக்கில்ல.. அடிக்கடி இதை நீங்க எடுத்து பாப்பீங்களாம்..??" "யார் சொன்னா.??" "கௌ..கௌரம்மா.." அசோக்கிடம் அவ்வாறு சொன்னவள், 'ஸாரி கௌரம்மா' என்று மனதுக்குள் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள். "சரி.. அதுக்கென்ன இப்போ..? ஃபோட்டோ ஆல்பம்தான பாத்தேன்.. ஏதோ போர்னாக்ராஃபி சைட்டை பாத்த மாதிரி கேள்விலாம் கேக்குற..??" "இ..இல்ல.. இதுல அந்த ஃபோட்டோ.. அதையும் நீங்க.." நந்தினி கட்டை விரல் நகத்தை டென்ஷனாக கடித்துக்கொண்டே சொன்னாள். "எந்த ஃபோட்டோ..?" நந்தினி இப்போது அவசரமாய் அந்த ஆல்பத்தை பிரித்து புரட்டினாள். கேமிரா பார்த்து சிரிக்கும் அசோக்கும், வேறெங்கோ முகம் திருப்பியிருந்த நந்தினியும் இருந்த அந்த ஃபோட்டோ வந்ததும் புரட்டுவதை நிறுத்தினாள். அசோக்கின் முகத்துக்கெதிராக ஆல்பத்தை காட்டி, சுட்டு விரலால் அந்த ஃபோட்டோவை தொட்டு காட்டியவாறே சொன்னாள். "ம்ம்ம்.. இந்த ஃபோட்டோ இந்த ஃபோட்டோ.. பேப்பர் ப்ரன்சன்டேஷனுக்கு பேங்களூர் போயிருந்தப்போ.. நாம எடுத்துக்கிட்டது.." "என்னது.. நாம எடுத்துக்கிட்டதா..??" அசோக் நந்தினியை ஏறிட்டு கேலியாக கேட்க, "இல்ல.. நீங்களே.. திருட்டுத்தனமா.." என்று உளறியவள், உடனே நாக்கை கடித்துக்கொண்டு "ஸாரி.." என்றாள். சொல்லிவிட்டு திருதிருவென விழித்த நந்தினியை பார்க்க அசோக்கிற்கு சிரிப்பு வந்தது. "பரவால விடு.. நீ சொன்னது கரெக்ட்தான்.. திருட்டுத்தனமாத்தான் அந்த ஃபோட்டோ எடுத்தேன்..!! அப்போ உன் மேல எனக்கு லவ்வோ லவ்வு.. கண்ணு மண்ணு தெரியாம ஒரு காதலு..!! அதான் இந்த அழகு பட்ட மூஞ்சியை கேப்சர் பண்ணி வைப்போமேன்னு, ஒரு அறிவு கெட்ட நாய்ட்ட கேமராவை கொடுத்து க்ளிக் பண்ண சொன்னேன்.. அந்த நாய் கரெக்டா நீ அந்தப்பக்கம் திரும்புற வரை வெயிட் பண்ணி.. அப்புறமா க்ளிக் பண்ணிருக்கான்..!! சரி.. அதுக்கென்ன இப்போ..??" "இ..இல்ல.. இ..இதை எதுக்கு இந்த ஆல்பத்துல வச்சிருக்கீங்க..?" "எடுத்து வீசிடலாம்னு சொல்றியா..? நான் காலேஜ்ல படிச்சேன்றதுக்கு இருக்குறதே அந்த பத்து பதினஞ்சு ஃபோட்டோதான்.. இதுவும் இருந்துட்டு போகட்டுமேன்னு சும்மா சொருகி வச்சிருக்கேன்.. உனக்கு புடிக்கலைன்னா தூக்கி கீழ போட்டுடு.." அசோக் அந்தமாதிரி கூலாக சொல்லவும், நந்தினிக்கு ஒருமாதிரி முகம் வாடிப் போயிற்று. இந்த மாதிரி ஒரு பதில் இவனிடம் இருந்து வருமென்று அவள் சற்றும் எதிர்பார்த்திரவில்லை. தேவையில்லாமல் இப்போது இந்தப்பேச்சை ஆரம்பித்து விட்டோமோ என்று தாமதமாக உணர்ந்தாள். அதே நேரம் அவளுடைய இன்னொரு மனது, 'ஒருவேளை இவன் தன்னை காய விடுகிறானோ..?' என்று சந்தேகப்பட்டது. மனதில் காதலை வைத்துக்கொண்டு, தான் எப்போதோ செய்த தவறுக்காக இப்போது பழி வாங்குகிறானோ..?? அவளுடைய குழப்பமும், ஏமாற்றமும் அவளது குரலிலும் ஒலித்தது. "இங்க பாருங்க.. நான் தப்பு பண்ணிருக்கேன்தான்.. இல்லைன்னு சொல்லல..!! உங்களுக்கு என் மேல ஏதாவது கோவம் இருந்தா.. ப்ளீஸ் என்னை மன்னிச்சுடுங்க..!! அதை மனசுல வச்சுக்கிட்டு இப்படிலாம் பண்ணாதீங்க..!!" "நீ என்ன பேசுறேன்னே எனக்கு எதுவும் புரியலை.. நீ என்ன தப்பு பண்ணிருக்குற..??" "அ..அதான்.. நீங்க காலேஜ்ல உங்க லவ்வை சொன்னப்போ.. நான் உங்களை ஹர்ட் பண்ணினது.." "அதுக்குத்தான் அன்னைக்கே மன்னிப்பு கேட்டுட்டியே..? அப்புறம்.. இப்போ என்ன புதுசா..?" "அ..அப்போ கேட்டது வேற.. இப்போ கேக்குறது வேற.." "என்ன வேற வேற..?" "நான் ஹர்ட் பண்ணினது உங்களை எந்த அளவுக்கு பாதிச்சிருக்கும்னு.. அப்போ எனக்கு தெரியாது..!! நீங்க என்னை எந்த அளவுக்கு லவ் பண்ணுனிங்கன்னு இன்னைக்குதான் எனக்கு புரிஞ்சது..!! எந்த கெட்ட பழக்கமும் இல்லாம இருந்தீங்க.. என்னாலதான இப்போ இப்படி மாறிட்டீங்க.. எல்லாத்துக்கும் காரணம் நாந்தான..?" "ஹ்ஹ.. யார் சொன்னாங்க அப்படி..?? எல்லாத்துக்கும் புள்ளையார் சுழி போட்டது வேணா நீயா இருக்கலாம்.. ஆனா.. எல்லாத்துக்கும் காரணம் நீதான்னு சொல்ல முடியாது.. இது நானா சூஸ் பண்ணிக்கிட்ட லைஃப்..!! எனக்கு இந்த லைஃப் பிடிச்சிருக்கு.. நான் பண்றது எதுவும் எனக்கு தப்பா தோணலை..!! அதே மாதிரி.. நீ என்னை ஹர்ட் பண்ணினதுக்காக உன் மேல எனக்கு எந்த கோவமும் இல்ல.. டு யு அண்டர்ஸ்டாண்ட்..??" அசோக் கூர்மையாகவும் தெள்ளத்தெளிவாகவும் சொல்ல, நந்தினிக்கு தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது. 'உண்மையாகத்தான் சொல்கிறானா..?? இவனுக்கு என் மீது கோபமும் இல்லை.. காதலும் இல்லையா..?? நானாகத்தான் தவறாக புரிந்து கொண்டேனா..?? காலையில் இருந்து கால்கள் தரையில் நில்லாமல் மிதந்தேனே.. இவன் மனதின் ஓரத்திலாவது என்மீது காதல் இருக்கும் என்று நம்பினேனே.. அப்படி இல்லையா..?? ' அவள் தலையை பிடித்துக் கொண்டு அமைதியாக இருக்க, அசோக்கே தொடர்ந்தான். "அதுசரி.. அதுக்கும் இந்த இத்துப்போன ஆல்பத்துக்கும் என்ன சம்பந்தம்..??" "என்னது..???? இத்துப்போன ஆல்பமா..????" அவன் உபயோகப்படுத்திய வார்த்தைகள் நந்தினிக்கு ஆத்திரத்தை கிளப்பிவிட, கடுப்புடன் கேட்டாள். "ஹேய்.. ஆல்பத்தை சொன்னதுக்கு நீ ஏன் டென்ஷன் ஆகுற..??" "ம்ம்ம்.. இத்துப்போன ஆல்பம்னா.. அப்புறம் எதுக்கு இதை அடிக்கடி எடுத்து பாக்குறீங்களாம்..?? பிடிக்கலைன்னா தூக்கி குப்பைல போட்டுட வேண்டியதுதான..??" நந்தினி சூடாக கேட்க, அசோக் இப்போது நிதானித்தான். மடியில் இருந்த கணிணியை மூடி ஓரமாக வைத்தான். கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, தன் மனைவியை ஏறிட்டான். உதட்டில் ஒரு புன்னகையுடனே, "நீதிக்கதைகள்-னு கேள்விப் பட்டிருக்கியா டியர்..?? மாரல் ஸ்டோரிஸ்..??" அசோக் கேட்க, "ம்ம்.." என்றாள் நந்தினி 'இதை எதுக்கு இப்போ கேக்குறான்..?' என்ற குழப்பத்துடனே. "உலகத்துல இரண்டு டைப்பான நீதிக்கதைகள் இருக்கு.. என்னன்னு உனக்கு தெரியுமா..?" "தெ..தெரியாது.. நீங்களே சொல்லுங்க.." "ம்ம்.. எப்படி வாழணும்னு சொல்ற ஸ்டோரிஸ் ஒரு டைப்.. எப்படி வாழகூடாதுன்னு சொல்ற ஸ்டோரிஸ் இன்னொரு டைப்.. நாம ரெண்டு டைப் ஸ்டோரிஸ்மே படிச்சு தெரிஞ்சுக்கணும்.. வாழ்க்கைக்கு ரொம்ப நல்லது..!! அதே மாதிரி.. நான் இந்த காலேஜ் ஆல்பத்தை அடிக்கடி பாக்குறேன்னா.. இந்த ஆல்பம் அதுல ஒரு டைப்..!! அதாவது.. எப்படி வாழ கூடாதுன்னு அடிக்கடி நான் எடுத்து பாத்துக்குறது..!! நான் உனக்கு இன்னொரு டைப்பான ஆல்பம் காட்டுறேன்.. ஃபர்ஸ்ட் டைப்..!! ம்ம்ம்ம்.. அந்த லாஸ்ட் கப்போர்ட்ல நெறைய புக்ஸ் இருக்கும்.. எல்லா புக்சுக்கும் அடில ஒரு ஆல்பம் இருக்கும் பாரு.. அதை எடு..!!" நந்தினி தலையை பிராண்டிக் கொண்டாள். எதுவுமே புரியாமலே சென்று, அசோக் விரல் நீட்டிய திசையில் தெரிந்த அந்த கப்போர்டை திறந்தாள். அதற்குள் இருந்த அந்த ஆல்பத்தையும் எடுத்தாள். 'என்ன ஆல்பம் இது..?' என்பது போல தன் கணவனை பார்க்க, "பிரிச்சு பாரு.." என்று அவன் அனுமதி கொடுத்தான். நந்தினி அந்த ஆல்பத்தை புரட்டினாள். உள்ளே விதவிதமாக பெண்களின் படங்கள்.. பக்கத்திற்கு ஒரு ஃபோட்டோவாக.. எண் வாரியாக.. தேதி வாரியாக..!! அது என்ன ஆல்பம் என்பது புரியவே நந்தினிக்கு சில வினாடிகள் பிடித்தன. அப்புறந்தான் அது அசோக் படுக்கையை பகிர்ந்துகொண்ட பெண்களின் ஆல்பம் என்று, அவளுடைய மூளையில் சுரீர் என்று உறைத்தது. உடனே உச்சபட்ச எரிச்சலுக்கு உள்ளானவள், அசோக்கின் முகத்தை ஏறிட்டு முறைத்தாள். அதே எரிச்சலுடன் கொஞ்சம் ஏளனத்தையும் கலந்து கொண்டு கேட்டாள். "ஓஹோ..?? இப்படித்தான் வாழணுமோ..??" "பின்ன..?? இப்படியா வாழணும்.. அம்மாஞ்சியா..??" என்று தன் பழைய பழமூஞ்சி போட்டோவை அவன் கையிலெடுத்து சுட்டி காட்டினான். உதட்டில் ஒரு கேலிப்புன்னகையுடனே அவன் பார்த்துக்கொண்டிருக்க, நந்தினிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. "ச்ச்ச்சை..!!" என்று வெறுப்பாக சொன்னவள், கையிலிருந்த ஆல்பத்தை கட்டிலில் தூக்கி வீசினாள். விழுந்த வேகத்தில் ஆல்பத்தின் கடைசி பக்கம் விரிந்து கொண்டது. எதேச்சையாக அதன் மீது பார்வையை வீசிய நந்தினி, சற்றே அதிர்ந்து போனாள். கடைசியாக பல்லிளித்துக் கொண்டிருந்த பெண்ணின் எண், தொண்ணூற்று ஒன்று..!! உடனே முகத்தை சுளித்தவாறே அசோக்கிடம் கேட்டாள். "என்ன இது..?? எயிட்டி செவன்னு சொன்னீங்க.. இதுல நைன்ட்டி ஒன் போட்டிருக்கு..??" "அது சொல்லி ரெண்டு மாசத்துக்கு மேல ஆகுதுல.. புதுசா நாலு ஆட் ஆயிடுச்சு..!!" "இது எப்போ.. எங்கிட்ட சொல்லவே இல்ல..??" "எல்லாம் உன்கிட்ட சொல்லிட்டுத்தான் செய்யணுமா..??" அசோக் சொல்லிவிட்டு குறும்பாக புன்னகைக்க, நந்தினி இப்போது நொந்து போனாள். அசோக்கின் முகத்தையே ஏக்கமாக பார்த்தாள். அப்புறம் அதே ஏக்கமும், ஏமாற்றமும் கலந்த குரலில் கேட்டாள். "என்னங்க நீங்க.. நான் என்னன்னவோ நெனச்சிருந்தேன்.. கடைசில ஒண்ணுமே இல்லையா..?? அவ்ளோதானா..??" "யார் சொன்னா அவ்ளோதான்னு..?? இந்த நைன்ட்டி ஒன்னை ஹண்ரட் ஆகி.. ஹன்ரடை தவுசண்ட் ஆக்குற வரை நான் விடப் போறது இல்ல.." அசோக் கிண்டலாக சொல்ல, நந்தினி உச்சபட்ச கடுப்புக்கு சென்றாள். "அடச்சீய்ய்ய்..!!!" என்று வெறுப்பாக சொன்னவள், தான் விரித்துப் போட்டிருந்த படுக்கையில் பொத்தென்று வீழ்ந்தாள். போர்வையை இழுத்து தன் முகம் வரை முழுவதுமாய் மூடிக்கொண்டாள். எரிச்சலும், ஏமாற்றமுமாய் தன் வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டாள். 'சச்சை.. இதுலாம்.. திருந்தாத ஜென்மம்.. திருந்தவே திருந்தாத ஜென்மம்.. இதைப்போய் திருத்த நெனச்ச பாரு.. நீ சரியான அறிவு கெட்ட ஜென்மம்..!! மனசுதான் வெக்கமில்லாம ஆசைப்பட்டுச்சுனா.. புத்தி எங்க போச்சு உனக்கு..?? ச்சே.. நல்லா வேணும் உனக்கு.. நல்லா வேணும்..!!' "ஹேய்.. என்ன முனங்குற..?" அசோக் கேட்க, "ஆங்.. ஒண்ணுல்ல.. பல்லு வலி..!!" என்று மூடிய போர்வைக்குள் இருந்து கடுப்புடன் சொன்னாள் நந்தினி. "சரி.. இந்த ஆல்பத்தை எடுத்து அங்க வச்சுடு..". "நீங்களே எடுத்து வச்சுக்கோங்க.. உங்க காலேஜ் ஆல்பத்தையும்.. அந்த கருமம் புடிச்ச ஆல்பத்தையும்..!!" அவளுடைய கோபத்தை பார்க்க அசோக்கிற்கு சிரிப்பு வந்தது. உதட்டில் புன்னகையுடனே பெட்டில் இருந்து எழுந்தான். இரண்டு ஆல்பத்தையும் கையில் எடுத்துக் கொண்டான். நடந்து சென்று கப்போர்டில் அந்த ஆல்பங்களை திணித்தான். விளக்கை அணைப்பதற்காக திரும்பியவன் சற்றே ஆச்சரியமானான். நந்தினி இப்போது படுக்கையில் இருந்து எழுந்து விறைப்பாக அமர்ந்திருந்தாள். ஓரக்கண்ணால் அசோக்கையே முறைத்துக் கொண்டிருந்தாள். "ஏய்.. என்னாச்சு..??" அசோக் கேலியாக கேட்க, "அ..அப்புறம் ஏன் அன்னைக்கு அப்படி பண்ணுனீங்க..?" என்றாள் அவள் கோபம் கொப்பளிக்கும் குரலில். "என்னைக்கு பண்ணுனேன்.. எப்படி பண்ணுனேன்..??"
"அன்னைக்கு நைட்டு.. நீங்க லேட்டா வீட்டுக்கு வந்தப்போ.. நான் சாப்பிடமாட்டேன்னு சொன்னேன்..!! என்னை அவ்வளவு கம்பெல் பண்ணி சாப்பிட வச்சீங்களே..? ஏன் அப்படி பண்ணுனீங்க.. எப்படியாவது போகட்டும்னு விட்டிருக்க வேண்டியதுதான..?" நந்தினி கேட்டுவிட்டு குறுகுறுவென பார்க்க, அசோக் இப்போது நின்றவாக்கிலேயே சற்று குனிந்தான். தரையில் அமர்ந்திருந்த தன் மனைவியின் முகத்துக்கு எதிராக தனது முகத்தை கொண்டு சென்று, அவளது கண்களை இவனது கண்களால் அருகருகே சந்தித்து, சற்றே கிண்டலான குரலில் சொன்னான். "நீ மட்டும் உன் ஃப்ரண்டு உடம்பு கெட்டு போயிட கூடாதுன்னு.. ஆபீசுக்கு சாப்பாடு கட்டி கொண்டு வரலாம்..!! நான் என் ஃப்ரண்டு உடம்பு கெட்டு போயிட கூடாதுன்னு.. சாப்பிட சொல்லி கம்பெல் பண்ண கூடாதா..??" அவ்வளவுதான்..!! எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்த நந்தினியின் முகம் இப்போது அப்படியே சோர்ந்து போனது. அசோக்கின் முகத்தையே 'பே..' என்று பரிதாபமாக பார்த்தாள். அப்புறம் 'சுத்தம்...!!!' என்று சலிப்பாக சொன்னவள், மீண்டும் பொத்தென்று படுக்கையில் விழுந்து, போர்வையை இழுத்து மூடிக்கொண்டாள். மீண்டும் வாய்க்குள்ளேயே ஏதேதோ முணுமுணுக்க ஆரம்பித்தாள். அசோக் விளக்குகளை அணைத்தான். கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான். ஒரு சில வினாடிகள் மெளனமாக இருந்தவன், அப்புறம் மெல்லிய குரலில் சொன்னான். "கல்யாணத்துக்கு முன்னாடி போட்ட கண்டிஷன்லாம் ஞாபகம் வச்சுக்கோ நந்தினி..!!" "ஞாபகம் இருக்கு சாமி.. நல்லா ஞாபகம் இருக்கு.. இனிமே சத்தியமா மறக்காது..!!" நந்தினி போர்வைக்குள் இருந்து கத்தினாள்.

No comments:

Post a Comment