Tuesday, September 2, 2014

ஆண்மை தவறேல் - பாகம் 9


அடுத்த நாள்..

அடையாறில் இருந்து திருவான்மியூர் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது அந்த ரெஸ்டாரன்ட். கருப்பு கண்ணாடி போர்த்தப்பட்ட உட்பகுதி முழுதும் ஏஸி செய்யப்பட்டிருக்க, வெளியில் இருந்த சிறிய பகுதியில் பச்சை நிறத்தில் பெயர் தெரியாத செடி கொடிகளை வளர்த்து, அந்த செடி கொடிகளுக்கு இடையில் ஆங்காங்கே பிரம்பு நாற்காலிகளையும் மேஜைகளையும் சீராக போட்டு வைத்து, கார்டன் ரெஸ்டாரன்ட் என்று பெயரிட்டிருந்தார்கள். அந்த நண்பகல் நேரத்தில் ரெஸ்டாரண்டில் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.

ஒரு மூலையில் கிடந்த பிரம்பு நாற்காலியில் நந்தினி அமர்ந்திருந்தாள். மேஜை மீதிருந்த அந்த சிறிய கண்ணாடி உப்பு டப்பாவை கையில் எடுத்து, அதை கவிழ்ப்பதும், நிமிர்த்துவதும், கண்ணாடி சுவர்களில் உப்பு நகர்வதை வேடிக்கை பார்ப்பதுமாக இருந்தாள். ஒருமுறை மணிக்கட்டை திருப்பி மணி பார்த்தாள். அசோக் வருவதாக சொன்ன நேரம் சென்று அரை மணி நேரம் ஆகியிருந்தது. வேண்டுமென்றே தன்னை காக்க வைக்கிறானோ என்று அவளுடைய மனதுக்குள் ஒரு எண்ணம் ஓடியது. அப்புறம் மீண்டும் டப்பாவை கையில் எடுத்து விளையாட்டை ஆரம்பித்தாள். இந்தமுறை மிளகுப்பொடி டப்பா.


அதன்பிறகு ஒரு ஐந்து நிமிடங்கள் கழித்தே அசோக் அங்கே வந்தான். வெளிர்நீல நிற மேல்சட்டையும், அடர்நீல நிற காட்டன் பேண்ட்டும், கண்ணுக்கு கொடுக்கப்பட்ட குளிர் கண்ணாடியும், காதுக்கு கொடுக்கப்பட்ட செல்போனுமாக ஒரு புயல் வேகத்தில் அந்த கார்டனுக்குள் நுழைந்தான். அவனை பார்த்ததுமே நந்தினியின் உடலில் ஒரு உதறல் வந்து ஒட்டிக் கொண்டது. விளையாடிக்கொண்டிருந்த டப்பாவை அவசரமாய் கீழே வைத்துவிட்டு, நிமிர்ந்து அமர்ந்தாள். லேசாக மிடறு விழுங்கிக் கொண்டாள்.

அசோக் நந்தினியை ஏறிட்டு பார்க்கவே இல்லை. யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டே ஸ்டைலாக நடந்து வந்தவன், நேராக வந்து நந்தினிக்கு எதிரே கிடந்த சேரில் அமர்ந்து கொண்டான். நந்தினியை கண்டுகொள்ளாமலே, தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்தான். அவன் நடந்து வரும்போது அவனையே மிரட்சியாக பார்த்துக்கொண்டிருந்த நந்தினி, இப்போது தலையை கவிழ்த்துக் கொண்டாள். தலை கவிழ்ந்திருந்தாலும், அவளது கருவிழிகளை மட்டும் மேலே உயத்தி, 'பர்சேஸ் ஆர்டர், பேமன்ட், இன்வாய்ஸ்' என்று யாருடனோ சூடாக பேசிக் கொண்டிருந்த அசோக்கையே ஓரக்கண்ணால் நோட்டமிட்டாள். 
அவனை பார்க்க பார்க்க அவளுடைய மனதுக்குள் ஒரு ஆச்சரிய ஊற்று பீறிட்டு கிளம்பி, வெள்ளமென பொங்கி பெருகியது. ஆறு வருடங்களில் எவ்வளவு மாறி விட்டான் இவன்..? கல்லூரி படிக்கையில் அவன் முகத்தில் எப்போதும் மிளிரும் அந்த பெண்மையையும், மென்மையையும் இப்போது மைக்ராஸ்கோப் வைத்துதான் தேடவேண்டும் என்று தோன்றியது. ஸ்பெக்ஸ் அணியாத அவனது பார்வையில் இருந்த அந்த கூர்மையில்தான் எவ்வளவு வெப்பம்..? மூன்று நாட்களாய் மழிக்கப்படாமல் முள்முள்ளாய் இருந்த தாடியிலும், மூக்குக்கு கீழே அழகாய் ஓரம் நறுக்கப்பட்டு அவனது பாதி மேலுதட்டை கவ்வியிருந்த மீசையிலும்தான் எவ்வளவு கவர்ச்சி..?

தோற்றம் மட்டுமில்லை. அவனது நடை, பேச்சு, பாவனையுமே ஏகத்துக்கு மாறியிருக்கிறது. சற்றுமுன் நடந்து வந்தானே ஒரு நடை.. என்னவோ இவன்தான் இந்த உலகத்துக்கே அதிபதி என்பது மாதிரி.. அந்த நடையில்தான் என்ன ஒரு கம்பீரம்..?? இப்போது யாருடனோ பேசிக்கொண்டிருக்கிறானே.. கோபத்துடன்.. ஆனால் கட்டுப்பாடான கோபத்துடன்.. அந்தப் பேச்சில்தான் என்ன ஒரு ஆளுமை..?? பேசுகையில் அசையும் அவனது கைவிரல்கள்.. மூடித்திறக்கும் அந்த இதழ்கள்.. சுருங்கி விரியும் அந்த புருவங்கள்.. எல்லாவற்றிலும் என்ன ஒரு வசீகரம்..??

நந்தினி அந்தமாதிரி அசோக்கை ஓரவிழிப் பார்வையாலேயே விழுங்கிக்கொண்டிருக்க, அசோக் பேசி முடித்தான். காலை கட் செய்து செல்போனை மேஜையில் வைத்தவன், நந்தினியை நிமிர்ந்து பார்க்காமலே பட்டென்று சொன்னான்.

"காலேஜ்ல பாத்ததை விட இப்போ இன்னும் கும்முன்னு இருக்குற நந்தினி..!!"

அசோக் சொல்லிவிட்டு அவளை நிமிர்ந்து பார்த்து அழகாக புன்னகைத்தான். நந்தினியின் முகத்திலோ பக்கென ஒரு அதிர்ச்சி. இத்தனை வருடங்கள் கழித்து பார்ப்பவனிடம் இருந்து இந்த மாதிரியான ஆரம்ப வார்த்தைகளை அவள் சுத்தமாக எதிர்பார்த்திரவில்லை. அவனது கமென்ட்டிற்கு எந்த மாதிரி ரியாக்ட் செய்யவேண்டும் என்று கூட அவளுக்கு பிடிபடவில்லை. 'தேங்க்ஸ்..' என்று ஈயென இளிக்க வேண்டுமா..? இல்லை.. 'இப்டிலாம் எங்கிட்ட பேசாதிங்க..?' என்று கோபம் கொப்பளிக்க வேண்டுமா..?

நந்தினி அந்த மாதிரி குழப்பத்தில் திகைக்க, அசோக்கோ கூலாக அவளது அழகு முகத்தை ரசித்துக் கொண்டிருந்தான். சில வினாடிகள் அவளுடைய முகத்தில் நிலைத்திருந்த அவனது பார்வை.. அப்புறம் மெல்ல மெல்ல கீழிறங்கி அவளது கழுத்து, புஜம், மார்பு, இடுப்பு என இறங்க.. ஒவ்வொரு பாகத்திலும் ஓரிரு வினாடிகள் தாராளமாய் தங்கியிருந்து மோகமாய் வெறிக்க.. நந்தினிக்கு உடல் கூசுவது மாதிரி ஒரு உணர்வு..!! அவஸ்தையாய் நெளிந்தாள்.

"ம்ம்ம்... அப்புறம்.. எப்படி இருக்குற..?" அசோக்கின் குரலில் ஒரு மிதமிஞ்சிய எள்ளல்.

"ந..நல்லாருக்கேன்.." நந்தினிக்கோ வார்த்தைகள் தடுமாறின.

"உன்னை என் லைஃப்ல திரும்ப மீட் பண்ணவே கூடாதுன்னு நெனச்சிருந்தேன்.. இப்படி என் அப்பா உன்னை தேடிக் கண்டுபுடிச்சு என் முன்னாடி வந்து நிறுத்துவாருன்னு நான் கொஞ்சம் கூட நெனைக்கலை.."

"உ..உங்களுக்கு என் மேல கோவம் இருக்கும்னு நெனைக்கிறேன்.. அ..அது நியாயந்தான்..!! ஆனா நான்.."

"ப்ச்.. கோவம்லாம் ஒன்னும் இல்லைப்பா.. அதுலாம் நான் எப்போவோ மறந்துட்டேன்..!! ம்ம்.. சரிசரி.. மேல சொல்லு.. ஏதோ சொல்ல வந்தியே..?"

"நா..நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்.."

"என்ன..?"

"அ..அன்னைக்கு.."

"இரு இரு.. ஒரு நிமிஷம்..!! மொதல்ல சாப்பிட ஏதாவது ஆர்டர் பண்ணிக்கலாம்..!!" என்று அவளை இடை மறித்தவன்,

"ஹலோ பாஸ்.." என்று திரும்பி பேரரை அழைத்தான்.

"ஜூஸ் சாப்பிடலாமா..?" என்று நந்தினியிடம் கேட்க, அவள்

"ம்ம்.. சாப்பிடலாம்.." என்று தலையசைத்தாள்.

"ரெண்டு குக்கு மில்க் ஷேக்..!!"

என்று பேரரிடம் சொன்ன அசோக், நந்தினியை ஏறிட்டு விஷமமாக புன்னகைத்தான். நந்தினிக்கு சுருக்கென்றது. அவளுடைய நெஞ்சில் ஏனோ இப்போது ஒரு திடீர் படபடப்பு. அசோக்கோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கேஷுவலான குரலில் சொன்னான்.

"ஆறு வருஷம் ஆகிப் போச்சு நந்தினி.."

"ம்ம்.. லாஸ்ட் எக்ஸாம் அன்னைக்கு பாத்ததுல..?"

"ஹாஹா.. நான் அதை சொல்லலை.."

"அ..அப்புறம்..?"

"குக்கு மில்க் ஷேக் சாப்பிட்டு ஆறு வருஷம் ஆகிப்போச்சுன்னு சொன்னேன்..!! இன்னைக்கு உன்னைப்பாத்ததும் திடீர்னு ஞாபகம் வந்துடுச்சு..!!"

"ஓ..!!" நந்தினிக்கு மூக்குடைபட்ட மாதிரியான ஒரு உணர்வு.

"ம்ம்.. கமான்.. நீ என்னவோ சொல்ல வந்தியே.. சொல்லு.."

"ஆங்.. அன்னைக்கு.." நந்தினி மீண்டும் ஆரம்பிக்க,

"ஒரு நிமிஷம் இரு.. ஒரு சிகரெட் பத்த வச்சுக்குறேன்.."

அசோக் மீண்டும் அவளை இடைமறித்து, அவள் சொல்ல வந்ததை சொல்ல விடாமல் தடுக்க, நந்தினி காய்ந்து போனாள். 'ப்ச்..' என்று மெலிதாக சலிப்பாக சொல்லிக் கொண்டாள். அசோக் கூலாக ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான். உள்ளே இழுத்த மொத்த புகையையும், உதடுகள் குவித்து மெல்ல மெல்ல வெளியே ஊதியவன், மீண்டும் கேட்டான்.

"ம்ம்.. இப்போ சொல்லு.. என்ன சொல்லணும் எங்கிட்ட..?"






"அன்னைக்கு.."

"ப்ச்.. என்ன நந்தினி.. அப்போ இருந்து அன்னைக்கு அன்னைக்குன்னு சொல்லிட்டு இருக்குற..? என்னைக்குன்னு சொன்னாத்தான எனக்கு புரியும்..?" அசோக் சற்றே எரிச்சலாக,

"அ..அதான்.. அந்த.. லாஸ்ட் எக்ஸாம் எழுதின அன்னைக்கு.." நந்தினி திணறினாள்.

"ஓ.. அன்னைக்கு..!! ஓகே ஓகே..!! ம்ம்.. மேல சொல்லு.. அன்னைக்கு..?" அசோக் கேட்க, நந்தினி கண்களை மூடி 'ஹ்ஹ' என்று மூச்சுக்காற்றை சலிப்பாக வெளிப்படுத்திவிட்டு ஆரம்பித்தாள்.

"அன்னைக்கு நான் உங்ககிட்ட அந்த மாதிரி பேசிருக்க கூடாது..!! என்னதான் எனக்கு உங்களை புடிக்கலைன்னாலும்.. அதை நாகரிகமா சொல்லிருந்திருக்கலாம்.. அந்தமாதிரி பேசி உங்களை ஹர்ட் பண்ணிருந்திருக்க கூடாது..!! ஐ'ஆம் ரியல்லி ஸாரி.. எ..என்னை மன்னிச்சுடுங்க..!!"

"ஓஹோ.. அன்னைக்கு பண்ணினதுக்கு இன்னைக்கு மன்னிப்பா..?? ஹா.. பரவால விடு.. நீ ஒன்னும் அதுக்காகலாம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை..!! அன்னைக்கு நடந்ததை நான் அன்னைக்கே மறந்துட்டேன்.." வேண்டுமென்றே அந்த 'அன்னைக்கு'க்கு அதிக அழுத்தம் கொடுத்தான்.

"இ..இல்லை.. நான் பண்ணினது பெரிய தப்பு.. நான் உங்களை அந்த மாதிரி.."

"ப்ச்.. விடுன்னு சொல்றேன்ல..? ஆக்சுவலா நீ அந்த மாதிரி பேசினதுக்காக.. நான்தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்..!!"


"தே..தேங்க்ஸா..? எ..எதுக்கு..?"

"ஆமாம்.. அன்னைக்கு மட்டும் நீ அப்படி பேசாம இருந்திருந்தா.. நான் இன்னும் அதே மாதிரி அம்மாஞ்சியாத்தான் இருந்திருப்பேன்..!! உலகம்னா என்ன.. நம்மை சுத்தி என்ன நடக்குது.. யார்கிட்ட எப்படி நடந்துக்கணும்.. இது எதுவுமே தெரியாம இன்னும் அதே மாதிரி அப்பாவி முட்டாளா இருந்திருப்பேன்..!! உன்னோட அந்த பேச்சுதான் இன்னைக்கு என்னோட மாற்றத்துக்கு காரணம்.. இந்த மாற்றம் எனக்கு புடிச்சிருக்கு.. ஐ'ஆம் ரியல்லி ஹேப்பி நவ்..!! ஸோ.. தேங்க்யூ.. தேங்க்யூ வெரி மச் நந்தினி.. அந்த மாதிரி என்னை ஹர்ட் பண்ணினதுக்கு..!!"

நந்தினி மலைத்து போனாள். அவளுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. ஒரு சில வினாடிகள் அசோக்குடைய முகத்தையே திகைப்பாக பார்த்தவள், அப்புறம் அமைதியாக தலையை குனிந்து கொண்டாள்.

ஆர்டர் செய்த ஜூஸ் கண்ணாடி டம்ளர்களில் வந்தது. நந்தினி ஒரு டம்ளரை எடுத்து ஜூஸ் பருக ஆரம்பித்தாள். அசோக்கும் சிகரெட்டை நசுக்கி அணைத்தது விட்டு, ஒரு டம்ளரை கையில் எடுத்துக் கொண்டான். மெலிதாக உறிஞ்சிக்கொண்டே கேட்டான்.

"ஓகே சொல்லிட்ட போல இருக்கு..?"

"எதுக்கு..?"

"என்னை கட்டிக்கிறதுக்கு..!!" சொல்லிவிட்டு அசோக் குறும்பாக புன்னகைத்தான்.

"ம்ம்.. ஆ..ஆமாம்..!!" நந்தினி தயக்கமாக சொன்னாள்.

"குட்..!! ஆனா.. என்னைப் பத்தி உனக்கு என்ன தெரியும்னு ஓகே சொன்ன..? ஆறு வருஷம் முன்னாடி இருந்த அசோக்கும் இப்போ இருக்குற அசோக்கும் வேற வேற.. தெரியுமா..? இப்போலாம்.. ஒரு மணி நேரத்துக்கு ஒரு சிகரெட் எனக்கு தேவைப்படுது.. காலைல எந்திரிச்சதும் காபிலாம் குடிக்கிறது இல்லை.. ரெண்டு லார்ஜ் விஸ்கிதான்..!!"

"ம்ம்.. தெரியும்..!!" நந்தினி பட்டென சொல்ல, அசோக்கிற்கு சற்றே ஆச்சரியமாக இருந்தது.

"ஓ.. தெரியுமா இதெல்லாம்..? டாடி சொன்னாரா..?"

"ம்ம்ம்.."

"நெனச்சேன்.. வேற என்ன சொன்னாரு..?"

"வேற.. இ..இன்னொன்னும் சொன்னாரு.." அவள் இழுக்க,

"என்னது..?" அசோக் ஆர்வமானான்.

"உ..உங்களுக்கு பொண்ணுக ச..சகவாசம் கூட.." 

நந்தினி திக்கித்திணறி சொன்னாள். அசோக் இப்போது முன்பைவிட பெரிதாக ஆச்சரியப்பட்டான்.

"வாவ்...!!! தேட்ஸ் கூல்.. தேட்ஸ் ரியல்லி கூல்..!!!!!! டாட்.. தேட்ஸ் மை டாட்..!! ஹீ இஸ் அமேசிங் யு நோ..?? அவர் மாதிரி ஒரு ஆளை பாக்கவே முடியாது.. எனக்கு பிசினஸ் சொல்லி தந்தப்போ.. அவர் மொதல்ல சொன்ன மேட்டர் என்ன தெரியுமா..? பிசினஸ்ல நேர்மைதான் எல்லாமே.. நேர்மை இல்லாம பிசினஸ்ல ஜெயிக்க முடியாது.. ப்ளா ப்ளா.. புல்ஷிட்..!!! பிசினஸ்ல மட்டும் இல்ல.. நெஜ வாழ்க்கைலயும் இந்தளவுக்கு நேர்மையை கடைபிடிக்க அவராலதான் முடியும்..!! ம்ம்ம்ம்.. கூல்..!!!! ஆனா.. அவருக்கே தெரியாத சில விஷயங்கள்லாம் இருக்கு.. அதை பத்தி அவர் உனக்கு சொல்லிருக்க சான்ஸ் இல்லை..!!"

"அ..அவருக்கு தெரியாமன்னா..?" நந்தினியின் இதயத்துடிப்பு இப்போது மீண்டும் எகிறியது.

"எனக்கு பொண்ணுக சகவாசம் இருக்குன்னு சொன்னாரே.. எத்தனை பொண்ணுக கூட சகவாசம் இருக்குன்னு ஏதாவது சொன்னாரா..?"

"இ..இல்ல.."

"எப்படி சொல்வாரு..? அவருக்கு தெரிஞ்சாத்தான சொல்வாரு..? ம்ம்..?? சரி.. அவர் சொல்றது இருக்கட்டும்.. நீ என்ன நெனைக்கிற..? எனக்கு எத்தனை பொண்ணுக கூட சகவாசம் இருக்கும்..? ஐ மீன்.. நான் இதுவரை எத்தனை பொண்ணுக கூட செக்ஸ் வச்சிருப்பேன்னு நீ நெனைக்கிற..?"

"தெ..தெரியாது.."

"ஹாஹா.. உனக்கு தெரியாதுன்னு எனக்கும் தெரியும்மா.. உன்னை சும்மா கெஸ் பண்ணத்தான் சொன்னேன்.."

"இ..இல்ல.. நீங்களே சொல்லுங்க.." நந்தினி தப்பிக்க எண்ண, 

"ஹே.. கமான்.. சும்மா கெஸ் பண்ணு.. ஏதோ ஒரு நம்பர்.. கமான்.. டெல் மீ ஸம் நம்பர்.. ஸம் நம்பர்..!!" அசோக் அவளை விடுவதாயில்லை.

"ஏ..ஏழு.." நந்தினி தயங்கி தயங்கி சொன்னாள்.

"ஓகே.. குட்.. வெரி க்ளோஸ்..!! பட் நீ சொன்னதோட ஒரு எயிட் ஆட் பண்ணிக்கோ.. ஆட் பண்றதுன்னா.. செவன் ப்ளஸ் எயிட்.. அந்த ஆட் இல்ல..!! செவன் முன்னாடி எயிட்னு ஒரு டிஜிட் ஆட் பண்ணிக்கோ.. இட்ஸ் எயிட்டி செவன்..!!!! இன்னும் கொஞ்ச நாள்ல செஞ்சுரி போடப்போறேன்..!!"

சொல்லிவிட்டு அசோக் புன்னகைக்க நந்தினிக்கு லேசாக தலை சுற்றியது. மயக்கம் வரும்போல் இருந்தது. எண்பத்தேழா..??? நெற்றியை பற்றிக்கொண்டவள், அசோக்கையே ஒருமாதிரி திகைப்பாக பார்த்தாள். தான் நினைத்ததை விட இவன் மிக மோசமாய் கெட்டுப் போயிருக்கிறான் என்று பளிச்சென அவளுக்கு உறைத்தது. அவள் அமைதியாயிருக்க அசோக்கே தொடர்ந்தான்.

"இப்போ சொல்லு.. இந்தக் கல்யாணத்துல உனக்கு சம்மதமா..?"

அசோக் கேட்க, நந்தினிக்கு இப்போது ஒருமாதிரி ஆயாசமாக இருந்தது. கடந்த சில நாட்களாக இந்த 'சம்மதமா..?' என்ற ஒரே கேள்வியை, எத்தனை பேர் எத்தனை விதமாக கேட்பார்கள் என்னிடம்..?? நந்தினி இப்போது விழிகளை மெல்ல மூடிக்கொண்டாள். படபடக்கும் இதயத்தை சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். அப்புறம் விழிகளை திறந்தவள் தெளிவாக சொன்னாள்.

"சம்மதம்..!!"

"அப்படி போடு அருவாளை..!!" அசோக் ஒருமாதிரி கிண்டலாக சொன்னான்.

"ஏன்.. என்னாச்சு..?"

"இல்ல.. ஒன்னும் ஆகலை.. உன் மன உறுதியை பாத்து.. நான் அப்படியே மலைச்சு போயிட்டேன்..!! ஆமாம்.. என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா..?"

"எது என்ன காரணம்..?"

"இல்ல.. ஒரு காலத்துல நான் அப்பழுக்கில்லாத ஆளா இருந்தேன்.. உன்னை வேற சின்சியரா லவ் பண்ணுனேன்.. அப்போ நீ என்னடான்னா.. என்னை 'ஆம்பளையே இல்ல.. ஒருத்தியும் உன்னை லவ் பண்ணமாட்டா'ன்னு.. தூக்கி எறிஞ்சுட்டு போயிட்ட..!! இப்போ எனக்கு இவ்வளவு கெட்ட பழக்கம் இருக்கு.. எவளையும் லவ் பண்ற மாதிரி எந்த ஐடியாவும் எனக்கு இல்ல.. அப்படி இருந்தும் இப்போ.. என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு சொல்ற.. அதான் என்ன காரணம்னு கேட்டேன்..!!"

"அ..அது. அது வந்து.."

"ம்ம்.. சொல்லு..!! எ..எனக்கு தெரிஞ்சு ஒரே ஒரு காரணந்தான்.."

"என்ன..?"

"என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டா நீ இழந்து போன அந்த வசதியான வாழ்க்கை உனக்கு திரும்ப கிடைக்கும்.. கார், பங்களா, ஏசின்னு சொகுசா வாழலாம்..!! கரெக்டா..??"


முகத்தில் ஒரு இதமான புன்னகையுடனே, அசோக் அந்த மாதிரி இளக்காரமான குரலில் கேட்க நந்தினிக்கு சுரீரென்று இருந்தது. அவ்வளவு நேரம் அவர்கள் பேசியதில் முதன்முறையாக அவளுக்கு அசோக்கின் மீது கோபம் வந்தது. விழிகளை உருட்டி அசோக்கை முறைத்து அதன்பிறகு அவள் பேசிய வார்த்தைகளிலும் அந்த கோபம் தாராளமாகவே நிறைந்திருந்தது.

"இங்க பாருங்க மிஸ்டர் அசோக்.. வார்த்தையை கொஞ்சம் அளந்து பேசுங்க.. நான் ஒன்னும் அந்த மாதிரி பொண்ணு இல்ல..!! இந்த ஆறு வருஷத்துல நீங்க எவ்வளவு மாறிருக்கீங்களோ.. அதை விட நான் அதிகமா மாறிருக்கேன்..!! காலேஜ் படிக்கிறப்போ என்னை மாதிரி அழகும், பணமும் எவளுக்கும் இல்லைன்னு எனக்கு ஒரு திமிர் இருந்தது உண்மைதான்.. அந்த திமிர்னாலதான் நான் உங்களை ஹர்ட் பண்ணுனேன்..!! ஆனா.. இந்த ஆறு வருஷத்துல நெறைய மாறிப்போச்சு.. வாழ்க்கைல எதுவும் நிரந்தரம் இல்லைன்னு எனக்கு நல்லாவே புரிஞ்சு போச்சு..!! நாலு வருஷம் முன்னாடி என் அப்பாவுக்கு பிசினஸ் லாஸ் ஆகி.. நாங்க நடுத்தெருவுல நின்னோம்.. ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட பலநாள் கஷ்டப்பட்டோம்.. காஞ்ச வயிறோட வெறுந்தரையில படுத்தப்போதான்.. காலேஜ்ல என் திமிர்னால நான் பண்ணுன தப்பு எல்லாம் புத்தில உறைச்சுச்சு..!! நெறைய விஷயங்களை நெனச்சு நெனச்சு வருத்தப்பட்டிருக்கேன்.. உங்களை ஹர்ட் பண்ணுனதும் அதுல ஒன்னு..!! என்னைக்காவது ஒருநாள் உங்களை நேர்ல பாத்தா.. உங்ககிட்ட மனசார மன்னிப்பு கேக்கனும்னு நெனச்சேன்.. இன்னைக்கு அதை கேட்டுட்டேன்.. எனக்கு இப்போ ரொம்ப நிம்மதியா இருக்கு..!! உங்க அழகுல மயங்கியோ.. உங்க சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டோ.. நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கலை..!! என் குடும்ப சூழ்நிலை.. என் விருப்பம் என்னன்னு யார்கிட்டயும் சொல்ல முடியாத நெலமை.. இந்தக்கல்யாணம் நடந்தா நெறைய பேர் சந்தோஷமா இருப்பாங்கன்னு ஒரு நம்பிக்கை.. அதான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்..!! ஆனா நீங்க.. என்னை இவ்வளவு கீழ்த்தரமா நெனைப்பீங்கன்னு நான் யோசிச்சே பாக்கலை.. ச்சே..!!" நந்தினி படபடவென பொரிந்து தள்ள, அசோக் சிரித்த முகத்துடன் அவளை தடுத்தான்.

"ஹே ஹே.. ஹோல்ட் ஆன்.. ஹோல்ட் ஆன்..!! ஹாஹாஹாஹா.. இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு.. குலுக்கிட்டு ஓப்பன் பண்ணுன பீர் பாட்டில் மாதிரி அப்படியே பொங்குற..?? ம்ம்..?? நான் உன்னை சும்மா சீண்டிப் பாக்குறதுக்காக கேட்டேன்.. தேட்ஸ் ஆல்..!! ரிலாக்ஸ்..!!"

எதுவுமே நடக்காத மாதிரி அவன் மிகவும் கூலாக சிரிக்க, தான் கொஞ்சம் அவசரப்பட்டு அதிகமாக பேசிவிட்டோமோ என்று நந்தினிக்கே சந்தேகத்தை உண்டு பண்ணியது. தனது கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு, அமைதியான குரலில் சொன்னாள்.

"ஸா..ஸாரி.."

"ம்ம்ம்.. சரி.. காரணம் வேணாம்.. காரியத்துக்கு வருவோம்..!! அப்போ.. உனக்கு என்னை கல்யாணம் செய்துக்க இஷ்டம்.. அப்டித்தான..?"

"ஆமாம்..!!" நந்தினியின் குரலில் இப்போது மெல்லிய எரிச்சல்.

"ஆனா.. எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையே..? என்ன பண்ணலாம்..??" அசோக் ஏளனமாக கேட்க,

"ரொம்ப சந்தோஷம்..!!" 

என்று கடுமையாக சொன்ன நந்தினி சேரில் இருந்து எழுந்து கொண்டாள். ஹேன்ட் பேக் எடுத்து தோளில் மாட்டிக் கொண்டாள். நகர முற்பட்டவளை அசோக் தடுத்தான்.

"ஏய்.. ஏய்.. இரு.. எங்க கெளம்பிட்ட..?"

"அதான் இந்த கல்யாணம் நடக்காதுன்னு தெரிஞ்சு போச்சு.. அப்புறம் என்ன..?"

"ஹாஹா.. கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னுதான சொன்னேன்..? கல்யாணம் நடக்காதுன்னா சொன்னேன்..?? எதுக்கெடுத்தாலும் முறுக்கிக்குற..? உக்காரும்மா.. உக்காரு ப்ளீஸ்..!!"

அசோக் இளித்தவாறே சொல்ல, நந்தினி ஒருமுறை வெறுப்பாக தலையசைத்தாள். அப்புறம் மீண்டும் அந்த சேரில் பொத்தென்று அமர்ந்தாள். 'அப்படி என்ன இவனுக்கு என்னைக் கண்டால் இளக்காரம்..? வந்ததில் இருந்தே எப்படி காய விடுகிறான் என்னை..? இனியும் இவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் செல்லக்கூடாது..!!' மனதுக்குள் சொல்லிக்கொண்ட நந்தினி சற்றே பொறுமையில்லாதவளாய் சொன்னாள்.

"இங்க பாருங்க.. சொல்ல வந்த விஷயத்தை கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்க.. எனக்கு வேலை இருக்கு.. ஹாஸ்பிட்டல் போகணும்.. அம்மாவுக்கு இன்னைக்கு டிஸ்சார்ஜ்..!!"

"ஓ.!! உன் அம்மா ஹாஸ்பிட்டல்ல இருக்காங்களா..? என்னாச்சு..??"

"மயக்கம் போட்டு கீழ விழுந்துட்டாங்க.. உடம்புல கொஞ்சம் அடி.."

"ம்ம்.. அம்மாவை நான் கேட்டதா சொல்லு..!! உன் அப்பா இறந்ததுக்கு கூட என்னால வர முடியலை.."

"ஆங்.. சொன்னாங்க.. நீங்க பெங்களூர்ல ரொம்ப பிஸ்ஸ்ஸியா இருந்தீங்கன்னு.." அவ்வளவு நேரம் அசோக்கிடம் இருந்த கிண்டல் இப்போது நந்தினியிடம்.

"அப்டிலாம் ஒண்ணுல்ல.. அவர் இறந்த விஷயத்தையே யாரும் எங்கிட்ட சொல்லல.. உன் அப்பா தவறுனது நெஜமாவே எனக்கு ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருந்தது..!! குடும்பத்தலைவர் இந்த மாதிரி திடீர்னு போயிட்டா.. அந்த குடும்பத்தோட நெலமையும் ரொம்ப கஷ்டந்தான்..!! ஆமாம்.. நீதான் எஞ்சினியரிங் படிச்சிருக்கேல.. எங்கயாவது வேலைக்கு போகலாம்ல..?"

"போயிட்டுத்தான் இருக்கேன்.. போன வருஷத்துல இருந்து போறேன்.. ஆனா.. சம்பளம்தான் ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்ல.."

"ஓஹோ..?? மெக்கானிக்கல் இஞ்சினியர்தான நீ..? எங்கிட்ட வா.. எங்க பேக்டரில நல்ல வேலை போட்டு தர்றேன்..!!"

"பேக்டரிலயா..? என்ன.. ட்ரில் ஓட்டனுமா..??" நந்தினி எரிச்சலாக கேட்டவிதம், அசோக்குக்கு சிரிப்பை வரவழைத்தது. சிரித்தான்.

"ஹாஹாஹாஹா..!!"

"அதுலாம் என்னால முடியாது.. பொண்ணா பொறந்துட்டு.. ஏன்டா மெக்கானிக்கல் படிச்சோம்னு இப்போ ஃபீல் பண்றேன்..!! எதாவது சாஃப்ட்வேர் லைன்ல போயிருந்தாவது.. இந்நேரம் கை நெறைய சம்பாதிச்சுட்டு இருந்திருப்பேன்..!!"

"ஹாஹா.. பரவால விடு.. என்னை கல்யாணம் பண்ணிக்கோ.. உன் பணப்பிரச்னை எல்லாம் சால்வ் ஆயிடும்..!!" 

புன்னகையுடன் பட்டென சொன்ன அசோக், ஒருமாதிரி கண்களை இடுக்கி நந்தினியின் விழிகளையே கூர்மையாக பார்த்தான். நந்தினியால் இப்போது ஏனோ அவனுடைய பார்வையை நேரிடையாக சந்திக்க முடியவில்லை. அந்த பார்வையில் இருந்த வசீகரம்.. அவளுடைய மனதை ஏதோ செய்ய.. பார்வையை தாழ்த்தி.. தலையை கவிழ்த்துக் கொண்டாள். சற்றே கம்மலான குரலில் கேட்டாள்.

"உங்களுக்கு இஷ்டம் இல்லைன்னு சொன்னீங்க..?"

"ம்ம்.. ஆமாம்.. இஷ்டம் இல்லைதான்..!! கல்யாணமே பண்ணிக்க கூடாதுன்னுதான் இருந்தேன் நந்தினி..!! டாடிகிட்ட இருந்து ரொம்ப ப்ரெஷர்.. அதுவும் அந்த பொண்ணுக மேட்டர் தெரிஞ்சப்புறம்.. ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு..!! இப்போவும் இந்தக்கல்யாணம் வேணாம்னு என்னால அடம்புடிக்க முடியும்.. ஆனா, டாடி ரொம்ப மனசு உடைஞ்சு போயிடுவாரு..!! வேற எவளாவது இருந்திருந்தா.. அவர் மனசு உடைஞ்சாலும் பரவால்லைன்னு என் முடிவுல ஸ்ட்ராங்கா இருந்திருப்பேன்..!! ஆனா.. அவர் பாத்திருக்குற பொண்ணு நீன்னு தெரிஞ்சப்புறந்தான்.. சின்னதா ஒரு யோசனை..!! ஒரு டீல் பேசி பாக்கலாம்னு தோணுச்சு.. அதுக்கு நீ ஒத்துக்கிட்டா கல்யாணம்..!! இல்லைன்னா.. டாடியோட மனசை நோகடிக்கிறதை தவிர எனக்கு வேற வழி இல்லை..!!"

"டீலா..?? என்ன டீல்..??" நந்தினி குழப்பமாய் கேட்டாள். அசோக் சிலவினாடிகள் யோசித்துவிட்டு, பின் தெளிவாக சொன்னான்.

"ஒரு புருஷனா நான் உன்கிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்க மாட்டேன்..!! அதே மாதிரி.. ஒரு பொண்டாட்டியா நீ எந்த வகைலயும் என்னை கட்டுப்படுத்த கூடாது..!! தேட்ஸ் த டீல்..!!"

அசோக் சொல்லிவிட்டு அமைதியாக நந்தினியின் முகத்தையே பார்த்தான். அவன் சொன்ன வார்த்தைகளையும், அந்த வார்த்தைகளின் அர்த்தத்தையும், அந்த அர்த்தத்தின் முழு வீரியத்தையும் கிரஹித்துக் கொள்ள நந்தினிக்கு சிறிது அவகாசம் தேவைப்பட்டது. யோசித்தாள்.

"உ..உங்களை கட்டுப்படுத்த கூடாதுனா..?"

"என் விருப்பத்துக்கு குறுக்க நிக்க கூடாது.. என் சந்தோஷத்துக்கு தடையா இருக்க கூடாது.. என் நடவடிக்கைகளை பாத்து ஏன் எதுக்குன்னு கேள்வி கேக்க கூடாது..!! மொத்தத்துல.. நான் இப்ப எப்படி இருக்குறனோ.. கல்யாணத்துக்கு அப்புறமும் இதே மாதிரி என்னை இருக்க விடனும்..!!" அசோக் சொல்ல நந்தினி அதிசயித்து போனாள். 'என்ன மாதிரி ஒரு புத்திசாலித்தனமான, விவகாரமான திட்டம் இவனுக்குள்..?'


"ஓ..!! ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.. இல்ல..?? அப்பாவையும் சமாதானம் பண்ணுன மாதிரி ஆச்சு.. உங்களோட இந்த ப்ளேபாய் லைஃபையும் மாத்திக்க தேவையில்ல.. அப்டித்தான..?? சும்மா சொல்ல கூடாது.. என்னதான் இருந்தாலும் நீங்க பிசினஸ்மேன்ல.. அதான்..!!"

"பாராட்டுறது இருக்கட்டும்.. உனக்கு இந்த யோசனை பிடிச்சிருக்கா..?"

"ஒரு பொம்மை கல்யாணம் மாதிரி.. இல்ல..? ஊர் உலகம் முன்னாடி நான் உங்க பொண்டாட்டி.. ஆனா நெஜத்துல எனக்கு எந்த உரிமையும் இல்ல..!!"

"ஆ..ஆமாம்.."

"சும்மா பேருக்கு தாலியை கட்டி.. உப்புக்கு சப்பாணி மாதிரி.. உங்க வீட்ல ஒரு மூலைல என்னை உக்கார வைக்க போறீங்க..? அப்டித்தான..?"

"ச்சேச்சே.. என்ன பேசுற நீ..?? ஏன் அப்டிலாம் நெனைக்கிற..??"

"பின்ன.. எதுவும் சொல்றதுக்கு எனக்கு உரிமை இல்லைன்னா என்ன அர்த்தம்..?"

"பொண்டாட்டின்ற உரிமைதான் இல்லைன்னு சொன்னேன்.. ஒரு பிரண்டா உரிமை எடுத்துக்கலாம்..!!"

"ஹாஹா.. பிரண்டா..?? நீங்களும்.. நானுமா..??"

"ஏன்.. இருக்க கூடாதா..??"

"ம்ம்.. கேக்குறதுக்கு காமடியா இருக்கு..!!"

"காமடியா இருந்தா.. வீட்டுல போய் பொரண்டு பொரண்டு சிரி.. இப்போ என் டீல் உனக்கு ஓகேவா இல்லையான்னு சொல்லு..!!"

"இல்லைன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க..?"

"நேரா டாடிட்ட போய்.. அவர் என்ன வேணா பண்ணிக்கட்டும்னு.. இந்த கல்யாணத்துல எனக்கு இஷ்டம் இல்லைன்னு சொல்லிடுவேன்.. சிம்பிள்..!!"

அசோக் சொல்லிவிட்டு புன்னகைக்க, நந்தினி இப்போது சற்றே நிதானித்தாள். அவளுடைய மனதில் சில குழப்பமான எண்ணங்கள்..!! 'இவனுடைய வார்த்தைகளில் ஒரு உறுதி தெரிகிறது.. இதற்கு நான் சம்மதிக்காவிட்டால் இந்த கல்யாணம் நடக்காது..!! கல்யாணம் நடக்காவிட்டாலும் மஹாதேவன் எனது குடும்பத்திற்கு செய்யும் உதவிகளை செய்து கொண்டுதான் இருப்பார்.. ஆனால் மனதில் ஒரு மகிழ்ச்சி இல்லாமலே செய்வார்.. அதுவுமில்லாமல் அத்தகைய உதவியை பெறுவதில் எங்களுக்கும் ஒரு தயக்கமிருக்கும்..!! அம்மாவை பற்றி சொல்லவே தேவையில்லை.. இந்தக்கல்யாணம் நின்றால் நொந்து போய் விடுவாள்..!! தங்கைக்கு எந்த கவலையும் இருக்காது.. ஆனால் இன்னும் இரண்டு வருடங்கள் சென்று அவளுக்கு ஓரளவு முதிர்ச்சி ஏற்படும்போது.. அவளுக்கும் மனதில் அமைதி இருக்கப் போவது இல்லை..!! அதைவிட இந்த நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டால், நிறைய பேருக்கு நிம்மதி.. பிரச்சினை மொத்தமும் எனக்கு மட்டுமே இருக்கப் போகிறது.. கணவன் கண்ட பெண்களுடன் சகவாசம் வைத்துக் கொள்வதை கண்டுகொள்ளாமல் இருப்பது எந்த பெண்ணுக்குமே கொடுமையான விஷயம்தான்..!! ஆனால்.. இவன் என்னுடைய கணவன் என்று நினைத்ததால்தானே பிரச்சினை.. இவன் சொல்வது போல ஒரு நண்பனாக இவனை நினைத்து கொள்ளலாமே..? ஒரு தோழியாக இருந்து இவனது கெட்ட பழக்கங்களை மாற்ற முயலலாமே..?'

எல்லா யோசனைகளுமே மொத்தமாய் ஒரு சில வினாடிகள்தான். இதில் பல விஷயங்கள் அவள் ஏற்கனவே யோசித்திருந்ததுதான். யோசித்து முடித்த நந்தினி ஒரு முடிவுக்கு வந்தவளாய் லேசாக தொண்டையை செருமிக்கொண்டு சொன்னாள்.

"இங்க பாருங்க.. இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னு.. யார்கிட்டயும் போய் சொல்லக் கூடிய நெலமைல நான் இல்ல..!! எனக்கும், என் குடும்பத்துக்கும் இந்த கல்யாணம் நடக்குறது ரொம்ப ரொம்ப அவசியம்..!! இந்தக் கல்யாணம் நடக்குறதுக்கு நீங்க என்ன கண்டிஷன் போட்டாலும்.. எனக்கு சம்மதம்தான்..!!"

"அப்போ உனக்கு டீல் ஓகே..??"

"ம்ம்.. ஓகே..!!" நந்தினி அமைதியாக சொல்ல, அசோக்கின் முகத்தில் ஒருவித வெற்றிப் புன்னகை.

"தேங்க்ஸ் நந்தினி..!! தேட்ஸ் ஆல்.. இதை பேசுறதுக்காகத்தான் உன்னை இங்க வர சொன்னேன்..!! உனக்கு வேற ஏதாவது டவுட்டு இருக்கா.. எங்கிட்ட ஏதாவது கேக்கணுமா..??"

"இ..இல்ல.."

"அப்புறம் இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்.."


"என்ன..?"

"இந்த டீல் விஷயம்.. நமக்குள்ளதான் இருக்கணும்.. யார்கிட்டயும் நீ சொல்லக் கூடாது.."

"இல்ல.. சொல்லலை..!!" நந்தினி சொன்னதும் அசோக் சேரில் இருந்து எழுந்து கொண்டான்.

"கூல் தென்..!! எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நந்தினி.. நான் கெளம்புறேன்..!! வில் மீட் யு அட் மணமேடை..!!" 

இதழில் ஒரு குறும்பு சிரிப்புடன் சொன்னவன், பர்சில் இருந்து ஒரு நூறு ரூபாயை எடுத்து, பில் புக்குக்குள் செருகினான். பாக்கெட்டில் இருந்த குளிர்கண்ணாடியை எடுத்து மீண்டும் கண்களுக்கு கொடுத்தான். திரும்பி ஸ்டைலாக நடந்து சென்றான். சென்று அந்த ரெஸ்டாரண்டை விட்டு வெளியேறினான். அவன் போவதையே நந்தினி வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

No comments:

Post a Comment