Thursday, September 18, 2014

ஆண்மை தவறேல் - பாகம் 12


இரவு நெடுநேரம் அழுதுகொண்டிருந்த நந்தினிக்கு, நள்ளிரவுக்கு மேல் கண்கள் செருக ஆரம்பித்தன. அவளையுமறியாமல் அசந்து உறங்கிப் போனாள். காலையில் இருந்தே நெடுநேரம் மணமேடையில் நின்றது.. வருகிறவர்களுக்கெல்லாம் வணக்கம் வைத்தது.. காரில் எங்கெங்கோ அலைந்தது.. களைப்பு..!! அடித்து போட்டது போல உறங்கிப் போனாள்..!! அடுத்த நாள் காலையில் அவளுக்கு விழிப்பு வந்த போது, ஏழு மணியை நெருங்கியிருந்தது. இமைகளை மெல்ல பிரித்தவளுக்கு, எங்கே இருக்கிறோம் என்பதை முழுவதுமாய் புரிந்து கொள்ளவே சில வினாடிகள் ஆயின. அப்புறந்தான் அவள் படுக்கையில் அசோக்கிற்கு மிக நெருக்கமாக படுத்திருப்பதை உணர்ந்தாள். அசோக்கின் பக்கமாக அவள் சாய்ந்து படுத்திருக்க, அவளது வலது கை அவனுடைய இடுப்பில் படர்ந்திருந்தது. அதை உணர்ந்த நந்தினி, உடனே பதறிப் போனவளாய் தன் கையை அவனது உடலில் இருந்து எடுத்துக் கொண்டாள். அவசரமாய் தலையை நிமிர்த்தி அசோக்கின் முகத்தை பார்த்தாள். அவன் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அதை பார்த்த பிறகுதான் அவளுக்கு நின்றுபோன மூச்சே திரும்ப வந்தது. கண்களை ஒருமுறை நிம்மதியாக மூடி திறந்தாள். கைவிரல்களை மடக்கி தன் தலையில் தானே ஒரு குட்டு வைத்துக் கொண்டாள். தன்னை தானே திட்டிக் கொண்டாள். 'ச்சே.. என்ன காரியம் செய்திருக்கிறேன் நான்..?? எனக்கு முந்திக்கொண்டு அவன் விழித்திருந்தால் என்ன ஆயிருக்கும்..?? அவனை நான் அணைத்துக் கொண்டு கிடப்பதை பார்த்திருந்தால் என்ன நினைத்திருப்பான்..?? வெட்கம் கெட்டவள் என்று எண்ணியிருக்க மாட்டானா..?? ம்ஹூம்.. இது சரிப்பட்டு வராது.. இனி இவனுடன் ஒரே கட்டிலில் படுக்க கூடாது.. ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிடும்.. அவன் மீது மட்டுமல்ல.. இப்போது என் மீதே எனக்கு நம்பிக்கை போயிற்று..!!'

 

 
அறையை விட்டு வெளியே வந்தாள். அமுதாவும், வந்தனாவும், கௌரம்மாவும் அதற்குள்ளாகவே எழுந்து சுறுசுறுப்பாக காணப்பட்டார்கள். மஹாதேவன் வாக்கிங் சென்றுள்ளதாக சொன்னார்கள். வீட்டில் தங்கியிருந்த உறவினர்களில் பலர், அதிகாலையிலேயே கிளம்பியிருக்க, சிலர் இப்போது கிளம்பிக் கொண்டிருந்தார்கள். நந்தினி மூவருடனும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தாள். இரவு தனக்கு நடந்த கொடுமையான அனுபவத்தை முகத்தில் காட்டிக்கொள்ளாமல், இயல்பாகவே பேசினாள். உதட்டில் புன்னகையும், புன்சிரிப்புமாய் நந்தினி காட்டிய போலி சந்தோஷத்தை கண்டு, அமுதாவும் கௌரம்மாவும் மனதுக்குள் நிஜமாகவே சந்தோஷப் பட்டனர். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தவள், 'குளிச்சுட்டு வர்றேன்..' என்று மீண்டும் தங்கள் அறைக்கு திரும்பினாள்.

இன்னும் வாய் பிளந்து உறங்கும் கணவனையே ஒருசில வினாடிகள் நின்று ரசித்தாள். 'பண்றதெல்லாம் பயங்கர கேடித்தனம்.. தூங்குறதை பாரு பச்சை புள்ளையாட்டம்..' என்று மனதுக்குள் அவனை செல்லமாக திட்டினாள். பிறகு மாற்று உடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள். நந்தினி குளித்து முடித்துவிட்டு வெளியே வந்தபோது, கட்டிலில் அசோக்கை காணவில்லை. எழுந்து எங்கோ சென்றிருந்தான். மீண்டும் அறையை விட்டு வெளியே வந்தவள், கிச்சனுக்கு சென்றாள். உள்ளே அமுதாவும், கௌரம்மாவும் காலை உணவு தயார் செய்வதில் பிஸியாக இருந்தார்கள். காய்கறி நறுக்கிக்கொண்டிருந்த கௌரம்மாவிடம் நந்தினி கேட்டாள்.

 "அ..அவரை எங்க.. ஆளை காணோம்..?" "அசோக் தம்பியா..? மாடிக்கு போயிருக்கும்.. எக்சைஸ் செய்ய..!!" "ஓ..!! ம்ம்ம்.. பா..பால் எங்க இருக்கு..?" "இரும்மா நான் போட்டு தர்றேன்..!! என்ன சாப்பிடுவ நீ.. காபியா டீயா..?" "இ..இல்லங்க.. நானே போட்டுக்குறேன்.. பா..பால் எங்க இருக்குன்னு மட்டும் சொல்லுங்க..!!" தடுமாற்றமாய் சொன்ன நந்தினியை பார்த்து கௌரம்மா புன்னகைத்தாள். அப்புறம் பால் காய்ச்சி வைத்திருந்த பாத்திரத்தை நந்தினியிடம் எடுத்து கொடுத்தாள். நந்தினி காபி தயார் செய்தாள். இரண்டு கப்புகளில் காபியை அவள் ஊற்றுவதை பார்த்ததும் கௌரம்மா சொன்னாள்.

 "யாருக்குமா இன்னொரு காபி..?" "அவருக்குத்தான்..!!" "ஐயோ.. அசோக் தம்பிக்கு காலைல காபி குடிக்கிற பழக்கம்லாம் இல்லம்மா..!!" "ம்ம்.. தெரியும்.." 'வேற என்ன குடிப்பாருன்னும் எனக்கு தெரியும்..' என்பதை மட்டும் மனதுக்குள் சொல்லிக்கொண்டவள், புன்னகையுடனே "குடுத்து பாக்குறேன்.. குடிச்சா குடிக்கட்டும்.. இல்லன்னா நானே குடிச்சுடுறேன்.." என்றாள். "சரிம்மா.." "மாடின்னா.. மொட்டை மாடியா..?" "இல்லம்மா.. மொத மாடில எடது பக்கம் ஒரு பெரிய ரூம் இருக்கும் பாரு.. எல்லா மெசினும் வாங்கி போட்ருக்கு.. அங்கதான் எக்சைஸ் பண்ணும்.." நந்தினி இரண்டு கைகளிலும் காபி கப்பை தாங்கியவாறு முதல் மாடிக்கு படியேறினாள். கௌரம்மா சொன்னதை வைத்து எளிதாக அந்த அறையை கண்டுபிடிக்க முடிந்தது.

அறைக்குள் நுழைந்தாள். உள்ளே 'விர்ர்ர்ர்ர்ர்..' என்ற சப்தத்துடன் அந்த ட்ரெட்மில் ஓடிக்கொண்டிருந்தது. ட்ரெட்மில்லின் பெல்ட் மிக வேகமாக நகர்ந்து கொண்டிருக்க, அதன் வேகத்திற்கு ஈடுகொடுத்தவாறு, அதன் மீது அசோக்கும் மிக வேகமாக ஒரே இடத்திலேயே ஓடிக்கொண்டிருந்தான். அதற்குள்ளாகவே வேறு உடைக்கு மாறியிருந்தான். மேலே ஒரு ஸ்லீவ்லஸ் டி-ஷர்ட்டும்.. கீழே ஒரு குட்டையான, இறுக்கமான ஷார்ட்சும்..!! அவனுடைய இடுப்பில் ஒரு ஐபாட் செருகப்பட்டிருந்தது. அதிலிருந்து கிளம்பிய வயர்கள் அவனுடைய இரண்டு பக்க காதுகளில் சென்று முடிந்தன. பாடல் கேட்டுக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தான். வால்யூம் சற்று அதிகமாக வைக்கப்பட்டிருக்க வேண்டும். நந்தினி உள்ளே நுழைந்ததை அவன் கவனிக்கவே இல்லை. நந்தினி அசோக்கை நெருங்கினாள்.

உடற்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் கணவனை.. அவன் ஓடும் அழகை.. வைத்த கண் வாங்காமல் சில வினாடிகள் பார்த்தாள். அசோக்குடைய உடல் மொத்தமும் இப்போது ஈரமாய் மினுமினுத்தது. அவனுடைய நெற்றியில் இருந்து வழிந்த வியர்வை, மூக்கில் இறங்கி, மூக்கு நுனியில் முத்து போல் திரண்டு, பின் சிதறியது. டி-ஷர்ட் மறைக்காத அவனது புஜங்களும்.. ஷார்ட்ஸ் மூடாத அவனது தொடைகளும்.. கீழ்க்காலின் பின்புற ஆடு சதைகளும்..!! அவ்விடங்களில் திரட்சியாய் இறுகிப் போயிருந்த சதைகள்.. இப்போது அவனுடைய வேகமான அசைவிற்கேற்ப.. விரிந்து விரிந்து சுருங்கி கொண்டிருந்தன..!! அந்த சதைகளில் பொதிந்திருந்த நரம்புகள் எல்லாம் இப்போது முறுக்கிக் கொண்டு காட்சியளித்தன..!! அந்தக்காட்சியை அருகில் இருந்து பார்த்த நந்தினிக்கு, உள்ளுக்குள் ஒரு கிளர்ச்சி கிளம்ப, அவளுடைய உடல் லேசாய் சிலிர்த்தது..!! "ஹேய்.. நீ என்ன பண்ணிட்டு இருக்குற இங்க..?" அதற்குள்ளாகவே நந்தினியை கவனித்து விட்டிருந்த அசோக், இயர்ஃபோனை காதில் இருந்து கழட்டிக்கொண்டே கேட்டான். ஏதோ ஒரு மயக்கத்தில் இருந்த நந்தினி உடனே சமாளித்துக் கொள்ள வேண்டியிருந்தது.

சற்றே தடுமாற்றமாய்.. "உ..உங்களுக்கு காபி கொண்டு வந்தேன்.." என்றாள். அசோக் இப்போது ட்ரெட்மில் மோட்டாரை ஆஃப் செய்தான். ட்ரெட்மில் விட்டு கீழே இறங்கினான். தொங்கிக்கொண்டிருந்த டவலை எடுத்து உடல் வியர்வையை துடைத்துக் கொண்டே, நந்தினியை நெருங்கினான். சற்றே குனிந்து அவளுடைய கண்களை கூர்மையாக பார்த்தவாறு சொன்னான். "நான் அன்னைக்கு சொன்னது ஞாபகம் இல்லையா..? காலைல நான் காபிலாம் குடிக்க மாட்டேன்..!!" "இனி உங்களுக்கு காலைல காபிதான்.. விஸ்கிலாம் கெடையாது.." நந்தினி முகத்தில் ஒரு குறும்புப் புன்னகையுடனே சொன்னாள். அசோக் சற்று எரிச்சலானான். "ஒய்.. என்ன.. வந்த அன்னைக்கே ஆரம்பிச்சுட்ட..? போட்ட கண்டிஷன்லாம் ஞாபகம் இருக்குல..?" "ஏன்.. நல்லா ஞாபகம் இருக்கே..?" "அப்புறம்..? மொத நாளே என் பழக்கத்தை மாத்த ட்ரை பண்ற..? கழுத்துல தாலி ஏறுனதும் உடம்புல கொழுப்பும் ஏறிடுச்சோ..?

நல்லா ஞாபகம் வச்சுக்கோ.. மத்தவங்களுக்காகத்தான் அந்த தாலி.. மத்தபடி பொண்டாட்டின்ற உரிமை உனக்கு எப்போவும் கெடையாது..!!" "ஆனா.. ஃப்ரண்டுன்ற உரிமை இருக்குல்ல..?" நந்தினி கேலியான குரலில் சொல்ல, அசோக் இப்போது புருவத்தை சுருக்கினான். "என்னது..???" என்று ஒரு மாதிரி முகத்தை சுளித்தான். "ஆமாம்.. அப்படித்தான அன்னைக்கு சொன்னீங்க..? நீங்கதான் போட்ட கண்டிஷனை மறந்துட்டீங்க..

எனக்கு எல்லாம் நல்லா ஞாபகம் இருக்குப்பா..!! நான் இப்போ சொன்னது பொண்டாட்டின்ற அதிகாரத்துல இல்ல.. ஃப்ரண்டுன்ற உரிமைல..!! என் ஃப்ரண்டோட உடம்பு கெட்டு போயிட கூடாதுன்ற.. ஒரு அக்கறைல சொன்னேன்..!!" நந்தினி அந்த மாதிரி சொல்ல, அசோக்கும் இப்போது இறுக்கம் தளர்ந்து புன்னகைத்தான். "ஓஹோ..?? அப்படின்னா.. இப்போ என் முன்னாடி நிக்கிறது என் பொண்டாட்டி இல்ல.. என் ஃப்ரண்ட்.. அப்படியா..??" "ஆ...மாம்.." நந்தினி உதட்டை ஒருமாதிரி சுளித்தவாறு சொன்னாள்.

 "ம்ம்.. என் ஃப்ரண்ட் யாராவது இந்த மாதிரி அட்வைஸ் பண்ணா.. நான் என்ன சொல்வேன் தெரியுமா..??" "என்ன சொல்வீங்க..??" "மூடிட்டு போடான்னு சொல்வேன்.." அசோக் கிண்டலாக சொல்ல, நந்தினி அதற்கு சற்றும் சளைக்காமல் "நானும் என் ஃப்ரண்ட் யாராவது என்னை மூடிட்டு போன்னு சொன்னா.. அவங்க மூஞ்சிலையே சப்பு சப்புன்னு ரெண்டு அறை விடுவேன்..!!" என்றாள். அவள் அந்த மாதிரி இன்ஸ்டண்டாய் சொல்ல, அசோக்கால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்து விட்டான். "ஹாஹாஹாஹா...!!!"




"எப்படி வசதி..?? கைல இருக்குற ரெண்டு கப்புல ஒன்னை வாங்கிக்கிறீங்களா.. இல்ல.. என் கையாலேயே ரெண்டு வாங்கிக்கிறீங்களா..?" "ஹாஹா.. ரெண்டும் வேணாம்.." அசோக் புன்னகையுடனே சொல்ல, நந்தினி இப்போது போலிக்கோபம் விடுத்து அவனிடம் கெஞ்ச ஆரம்பித்தாள். "ப்ளீஸ் அசோக்.. வாங்கிக்கோங்க..!! காலங்காத்தால விஸ்கி சாப்பிடுறது எவ்வளவு பெரிய கெட்ட பழக்கம்..? காலைலேயே குடலுக்குள்ள ஆல்கஹாலை ஊத்துனா.. அது என்னத்துக்கு ஆகும் பாவம்..?? அதான் தெனமும் நைட்டு குடிக்கிறீங்கல்ல.. அப்புறம் எதுக்கு காலைல வேற..? ப்ளீஸ் அசோக்.. இந்த பழக்கத்தை மட்டும் மாத்திக்கங்களேன்.. எனக்காக..!! ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!" நந்தினி அந்த மாதிரி பரிதாபமாக கெஞ்ச, அசோக்கிற்கு மனம் இளக ஆரம்பித்தது.


ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், "ஸாரி நந்தினி.. என் பழக்கத்தை என்னால மாத்திக்க முடியாது.." என்றான். "எல்லாம் முடியும்.. குடிக்கிறது மட்டும் பொறக்குறப்போவே பழகிட்டா வந்தீங்க..? ஒரு நாலஞ்சு நாள் பல்லை கடிச்சுட்டு.. என்னோட காபி சாப்பிடுங்க.. அப்புறம் உங்களுக்கு விஸ்கி ஞாபகமே வராது.. ப்ளீஸ் அசோக்.. உங்க நல்லதுக்காகத்தான சொல்றேன்..? நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க.. ப்ளீஸ்..!!"

 "ம்ஹூம்..!!" அவன் அப்புறமும் பிடிவாதமாக சொல்ல, நந்தினி இப்போது அவனை போலியாக முறைத்தாள். 

"நான் சொன்னா கேட்க மாட்டீங்களா..?" "மாட்டேன்.." "அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.." "ஹாஹா.. என்ன மெரட்டுற.. என்ன பண்ணுவ..?" "என்ன பண்ணுவேனா..?? இப்போ நீங்க இந்த காபியை வாங்கி குடிக்கலை.. அப்புறம்.. ஒரு உண்மையான ஃப்ரண்ட் என்ன பண்ணணுமோ.. அதைத்தான் நான் பண்ண வேண்டி இருக்கும்..!!" "ஓ.. அப்படி என்ன பண்ண போற..?" அசோக் ஆர்வமாக கேட்க, "நானும் உங்களோட சேர்ந்து காலைலேயே தண்ணியடிக்க போறேன்.." நந்தினி கூலாக சொன்னாள். அசோக் சற்றே அதிர்ந்து போனான். "ஹேய்.. என்ன பேசுற நீ..?" "ஆமாம்.. ஒரு ஃப்ரண்ட் தண்ணியடிக்கிறப்போ.. இன்னொரு ஃப்ரண்ட் கம்பெனி குடுக்குறது சகஜம்தான..??

நீங்களே முடிவு பண்ணுங்க..!! எனக்கு காபி சாப்பிட நீங்க கம்பெனி குடுக்குறீங்களா.. இல்ல.. உங்களுக்கு விஸ்கி சாப்பிட நான் கம்பெனி குடுக்கவா..??" சொல்லிவிட்டு நந்தினி கண்சிமிட்ட, அசோக் சிரித்தான். "ஹாஹா..!! நீ அந்த காபி கப்பை குடுத்துடும்மா புண்ணியவதி.." "ம்ம்ம்.. அப்படி வாங்க வழிக்கு..!! அந்த பயம் இருக்கணும்..!!" பெருமையாக சொன்ன நந்தினி காபி கப்பை நீட்ட, அசோக் வாங்கிக் கொண்டான். "ஆமாமாம்.. பயம்தான்..!! இந்தப்பொண்ணு இப்போவே இந்த மொக்கை போடுது.. தண்ணியடிச்சா இன்னும் என்னல்லாம் மொக்கை போடுமோன்னு நெனச்சு பாத்தேன்.. அப்படியே டெரராயிட்டேன்..!!!"
"ஹாஹாஹாஹாஹா..!!" அந்த அறையின் அடுத்த மூலையில் இருந்த கண்ணாடி கதவை திறந்து கொண்டு, அசோக்கும் நந்தினியும் காபி கப்புடன் பால்கனிக்குள் பிரவேசித்தார்கள். அசோக் சிகரெட் பாக்கெட்டை கையிலெடுக்க, நந்தினி ஓரக்கண்ணால் அதை பார்த்தாள்.


உடனே அசோக், "என்ன பாக்குற..?? இதுக்கும் ஏதாவது ஆரம்பிச்சுடாத.. தம்மடிக்காமலாம் இருக்க முடியாது..!!" என்றான். "ஹாஹா.. அடிச்சுக்கோங்க..அடிச்சுக்கோங்க.. பரவால..!!" அசோக் சிகரெட் ஒன்றை பற்ற வைத்துக் கொண்டான். இருவரும் காபி அருந்த ஆரம்பித்தார்கள். அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு கீழே, அதாவது அந்த வீட்டுக்கு முன்புறம் ஒரு கார்டன் இருக்கும். அந்த கார்டனில் வளர்ந்திருந்த பச்சை நிற செடிகளையும், மஞ்சள் நிற பூக்களையும், கார்டனுக்கு இடையில் வளைந்து செல்லும் சிமென்ட் சாலையையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே காபி உறிஞ்சினார்கள். அப்போதுதான் நந்தினி திடீரென கேட்டாள். 


"ஆமாம்.. அது யாரது மாலினி..??" நந்தினி கேஷுவலாக கேட்டதும், அசோக்கிற்கு குப்பென புரை ஏறியது. 'உஹ்.. உஹ்.. உஹ்..' என்று இருமினான். உள்ளிழுத்த புகை மூக்கு, வாய் என்று அவனுடைய கண்ட்ரோல் இல்லாமல் கண்ட இடங்களில் இருந்து வெளியேறியது. கண்களில் முணுக்கென்று கோர்த்துக்கொண்ட கண்ணீருடனே கேட்டான். "மா..மாலினியை உனக்கு எப்படி தெரியும்..?" "ம்ம்..?? நைட்டு மப்புல அந்த பேரை உளர்னீங்க.." "ஓஹோ..??" "ம்ம்.. சொல்லுங்க.. யாரது..?" "அ..அவ ஒரு பொண்ணு..!!" "ப்ச்.. என்ன நக்கலா..?? பேர்ல இருந்தே பொண்ணுன்னு எனக்கு தெரியுது.. அந்த பொண்ணு யார்னுதான் கேட்டேன்..??" நந்தினி அசோக்கின் கண்களை கூர்மையாக பார்த்து கேட்டாள்.


அசோக் இப்போது மீண்டும் எரிச்சலானான். "இங்க பாரு நந்தினி.. போட்ட கண்டிஷனை அடிக்கடி நீ மறந்துடுற..!!"
"ஐயோ... சாமீஈஈஈ..!! நான் ஒன்னும் உங்களை அந்த மாலினியை பாக்க கூடாது, பேச கூடாது, பழக கூடாதுன்னு சொல்லலை.. ஜஸ்ட் யார்னுதான் கேட்டேன்..!!" நந்தினி அந்த மாதிரி கூலாக சொல்லவும், இப்போது அசோக் அவஸ்தையில் நெளிந்தான். "அ..அவ ஒரு கால்கேர்ல்.. அப்பப்போ அவகிட்ட போவேன்..!! போதுமா..??" "ஓ..!! எவ்வளவு சார்ஜ் பண்ணுவா..??" நந்தினி பட்டென கேட்க, அசோக் விழித்தான். "எதுக்கு..??" "அவகிட்ட எதுக்காக போறீங்களோ.. அதுக்கு..!!" "அதை தெரிஞ்சு நீ என்ன பண்ண போற..?" "சும்மா.. பொது அறிவை கொஞ்சம் வளர்த்துக்கலாமே..னு..!!" "அ..அவ கொஞ்சம் காஸ்ட்லி.. இருபதாயிரம் சார்ஜ் பண்ணுவா..!!" "ஒரு நாளைக்கா..??" "இல்ல.. ஒரு நைட்டுக்கு..!!" "ஓஹோ.. அப்படி..!! ம்ம்ம்.. ஆவரேஜா ஒரு கால்கேர்ல்க்கு பதினஞ்சாயிரம் செலவு பண்ணுவீங்களா..??"

 "ம்ம்.. பண்ணுவேன்.. ஏன் கேக்குற..?" "ஸோ.. பிஃப்டீன் இன்ட்டு எய்ட்டி செவன்.. ம்ம்ம்.. தவுசண்ட் த்ரீ ஹண்ட்ரட் அண்ட் ஃபைவ்..!! இதுல திரும்ப திரும்ப போறது வேற..!! இன்ட்டு ஃபோர் போட்டா கூட.. ம்ம்ம்.. ஃபிஃப்டி .." நந்தினி ஆகாயத்தை வெறித்து, காற்றிலேயே கைவிரல்களால் கணக்கு போட்டுக்கொண்டிருக்க, அசோக் அவளையே பரிதாபமாக பார்த்தான். அப்புறம் அவளுடைய புஜத்தை நகத்தால் சுரண்டியவாறு கேட்டான்.


 "ஹலோ.. மிஸ் நந்தினி.. என்ன பண்ணிட்டு இருக்குறீங்க..?" "ஒரு நிமிஷம் இருங்க..!! ஃபிஃப்டி.. கூட்டுனா.. ஃபிஃப்டி டூ லாக்ஸ்.. ரவுண்ட் பண்ணினா கூட.. ஃபிஃப்டி லாக்ஸ்..!!!! ஓ... மை காட்..!!!!!" என்று கணக்கு தந்த ரிசல்ட்டில் ஷாக்காகி கத்தினாள். "ஹேய்.. என்னாச்சு உனக்கு..??" "இதுவரைக்கும் பொண்ணுகளுக்காக ஃபிஃப்டி லாக்ஸ் செலவு பண்ணிருக்கீங்க.. தேட்ஸ் ஹாஃப் க்ரோர்..!! மை காட்...!!!! அந்த ஃபிஃப்டி லாக்ஸ் வச்சு என்னல்லாம் பண்ணிருக்கலாம்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. இந்த மாதிரி ஒரு அற்ப சந்தோஷத்துக்காக இவ்வளவு பணம் செலவு பண்ணலாமா..?? நல்லா யோசிச்சு பாருங்க.. இதுலாம் உங்களுக்கு தேவையா அசோக்..??" நந்தினி அங்கே சுற்றி இங்கே சுற்றி தான் நினைத்த இடத்திற்கு வந்து நிற்க, அசோக் ஒரு நீண்ட பெருமூச்சை வெளிப்படுத்தினான். அப்புறம் நக்கலாக கேட்டான். "ஏய்.. நீ என்ன லூஸா..??" "ஏன்..??" நந்தினியின் முகம் இப்போது குரங்கு போலானது. "பின்ன என்ன.. அறிவில்லாம ஏதேதோ கணக்குலாம் போட்டுட்டு இருக்குற..?" "நீங்க பொண்ணுகளுக்காக எவ்வளவு செலவு பண்ணிருக்கீங்கன்னு கணக்கு போட்டு பார்த்தேன்.. தப்பா..??" "அது அவ்வளவு ஈஸி இல்ல.. ரொம்ப காம்ப்ளிகேட்டட்..!!

ஆனா.. சத்தியமா நீ சொன்னதுல கால்வாசி அமவுண்ட் கூட நான் செலவு பண்ணிருக்க மாட்டேன்..!!" "சும்மா சொல்லாதீங்க.. நான் நம்ப மாட்டேன்..!! இதுல என்ன காம்ப்ளிகேஷன் இருக்கு..?" "ப்ச்.. உனக்கு புரியலை..!! நான் சொன்ன அந்த எயிட்டி செவன்.. மொத்த பொண்ணுகளோட கவுன்ட்.. அவங்க எல்லாமே கால்கேர்ல்ஸ் கிடையாது..!!" அசோக் அப்படி சொல்ல, நந்தினிக்கு இப்போது தெளிவாக புரிந்தது. "ஓ..!!! இதுல நெறைய உட்பிரிவுகள் வேற இருக்குதோ..??" என்று இளக்காரமாக சொன்னாள். "ஆமாம்..!!" "ம்ம்ம்ம்... கார்ல்கேல்ஸ் சரி.. மத்தவங்கல்லாம் எப்படி..?"


 "எப்படின்னா..?" "ஐ மீன்.. எப்படி வருவாங்க..?? அப்படியே உங்க பேச்சுல உருகி.. உங்க அழகுல மயங்கி.. உங்க கட்டுமஸ்தான உடம்பை பாத்து கெறங்கி.. அப்டியா..?? ஜஸ்ட் ஃபார் ப்ளெஷர்.. நாட் ஃபார் மனி..!! ம்ம்..??" நந்தினியின் குரலில் ஒரு எள்ளல் தொனித்தது. "ஹேய்.. நீ என்னை கலாய்க்கிறேன்னு புரியுது.. பரவால..!! ஆனாலும் இதுலாம் கொஞ்சம் ஓவர் நந்தினி.. நான் ஏதோ போதைல கொஞ்சம் உளறிட்டேன்.. அதை வச்சு நீ இந்த பேச்சு பேச கூடாது..!!" "போதைல உளற மட்டுமா செஞ்சிங்க..?" அவசரத்தில் சொல்லிவிட்ட நந்தினி அப்புறம் நாக்கை கடித்துக் கொண்டாள்.


 "வேற என்ன செஞ்சேன்..?" அசோக் இப்போது நெற்றியை சுருக்கியவாறு கேட்டான். "வே..வேணாம்.. விடுங்க.." "ஹேய்.. சொல்லு நந்தினி.. வேற என்ன செஞ்சேன்..?" "வேணாம்னு சொல்றேன்ல..?" "ப்ச்.. இதுல என்ன இருக்கு..? கமான்.. சொல்லு.." அசோக் அவளை வற்புறுத்த, நந்தினி தயங்கி தயங்கி சொன்னாள். "எ..என் இ..இடுப்பு மேல கை போட்டீங்க.." "ஓஹோ..?? ஸாரி நந்தினி.." அசோக்கின் குரலில் நிஜமாகவே ஒரு வருத்தம் தெரிந்தது.


 "பரவால.. தெரியாமத்தான..?" நந்தினி சாந்தமாக சொல்ல, அசோக்கின் பார்வை இப்போது அவளது முகத்தில் இருந்து இடம் மாறியது. நந்தினியின் இடுப்பில் சென்று நிலைத்தது. புடவை மறைக்காத நந்தினியின் இடுப்பு.. அழகாக.. குழைவாக.. கவர்ச்சியாக.. பாலையும், சந்தனத்தையும், பட்டரில் கலந்து பூசி விட்டது மாதிரி..!! இப்போது காலைச்சூரியனின் மஞ்சள் வெயில் பட்டு, தகதகவென தங்கம் மாதிரி ஜொலித்தது..!!


 ஒரு சில வினாடிகள்தான் அசோக் நந்தினியின் இடை அழகை ரசித்திருப்பான். அதற்குள் அவன் பார்வை சென்ற இடத்தை கவனித்த நந்தினி, சரக்கென தன் புடவை தலைப்பை இழுத்து, திறந்திருந்த இடுப்பை மறைத்துக் கொண்டாள். ஏமாற்றமாய் நிமிர்ந்த அசோக்கை பார்த்து எள்ளலான குரலில் சொன்னாள். "இந்த ஃப்ரண்டை சைட் அடிக்கிற வேலைதான் வச்சுக்க கூடாது..!!" "ஹாஹா.. ஒரு பொண்டாட்டியா உன்கிட்ட எதையும் எதிர்பார்க்க மாட்டேன்னுதான சொன்னேன்.. ஒரு ஃப்ரண்டா உன்னை சைட் அடிக்க மாட்டேன்னு சொல்லவே இல்லையே..?" அசோக் குறும்பாக சொல்ல, "ம்ம்ம்..?? உதை விழும்..!!" நந்தினி முகம் சிவக்க சொன்னாள்.


 உதடுகள்தான் அவ்வாறு சொன்னதே ஒழிய, அவளுடைய உள்மனம் வேறு மாதிரி நினைத்தது. நந்தினி இப்போது ஓரக்கண்ணால் அசோக்கின் முகத்தை ஏறிட்டாள். அவனோ குறுகுறுவென இவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய பார்வையில் இருந்த வசீகரம், நந்தினியை இப்போது செயலிழக்க செய்திருந்தது. இவளுடைய முகத்தில் ஜொலித்த அழகு, அசோக்கையும் அசைவற்றவனாய் ஆகியிருந்தது. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் விழுங்கி விடுவது போல பார்த்துக் கொண்டிருந்தார்கள். சில வினாடிகள்..!! அப்புறம் அசோக்தான் முதலில் பேசினான்.


 "கீழ போலாமா நந்தினி..?" "ஏன்.. வேலை இருக்கா..??" "ஆபீசுக்கு கிளம்பனும்.." "ஓ.. இன்னைக்கே ஆபீசுக்கு போகனுமா..?" "ம்ம்.. கொஞ்சம் வேலை இருக்கு.." "சரி.. போலாம்.."
நந்தினி சொன்னதும், அசோக் ஒரு பெருமூச்சை உதிர்த்துவிட்டு திரும்பி நடந்தான். நந்தினி உடனே நகராமல் அவனுடைய முதுகையே வெறித்தாள். அவ்வளவு நேரம் இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சை, இப்போது சீராக வெளியிட்டாள்.

'இவனுடைய பார்வையில் ஏதோ வசீகரம் இருக்கிறது.. பேச்சில் ஒரு ஸ்னேக உணர்வு பொங்குகிறது..!! இவனுடன் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் போல ஏன் எனக்கு தோன்றுகிறது..?? இவன் என் அழகை பார்வையால் பருகுவதை, ஏன் என் உள்ளமும் வெட்கமில்லாமல் ரசிக்கிறது..?? இப்போது என்ன நடந்ததென்று என் மனம் மத்தாப்பு கொளுத்தி போட்டது போல பரவசமடைகிறது..??' நந்தினிக்கு புரியவில்லை..!!


அவ்வளவு நேரம் அவனுடன் பேசிக்கொண்டிருந்தது அவளுக்கு ஒரு இனம்புரியாத சந்தோஷத்தை கொடுத்திருந்தாலும், 'கட்டிய கணவனிடம்.. அவன் கட்டிலில் புரண்ட பெண்களை பற்றி.. சிரிப்புடன் பேசுகிற கொடுமையான நிலைமை.. உனக்கு வந்து விட்டதே..' என்று ஒரு கவலையும்.. அவளுடைய மனதின் ஒரு மூலையில்.. குதித்துக் கொண்டுதான் இருந்தது..!! "ஏய்... என்ன அங்கேயே நின்னுட்ட..?" அசோக் திரும்பி கேட்கவும், "ம்ம்.. வந்துட்டேன்.." நந்தினியும் அவனுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தாள்.




No comments:

Post a Comment