Tuesday, September 2, 2014

ஆண்மை தவறேல் - பாகம் 8


அதன்பிறகு இரண்டு நாட்கள் கழித்து.. அந்த மருத்துவமனையின் வரவேற்பு பகுதியில் கிடந்த நாற்காலிகளில் ஒன்றில் நந்தினி அமர்ந்திருந்தாள். அவளுடைய கன்னத்தை கையொன்று தாங்கியிருக்க, அவளது கண்களில் கவலை தேங்கியிருந்தது. ஆறு வருடங்களுக்கு முன்பிருந்ததை விட இப்போது அவளது தேகத்தில் சதைப்பற்று கூடி சற்று மினுமினுப்பாக தோன்றினாலும், அவளது மனமோ எதைப்பற்றியோ எண்ணி மருகிக்கொண்டு, முகம் களையிழந்து காட்சியளித்தது.


கவலையில் இருந்தவள் அவ்வப்போது கண்களை சுழற்றி ஹாஸ்பிட்டல் வாசலையும் பார்த்துக் கொண்டாள். அப்போதுதான் வாசலில் அந்த ஆட்டோ வந்து அவசரமாய் நின்றது. பின் சீட்டில் அந்த ஆள்.. முரட்டு தேகமும், முள்முள்ளாய் தாடியும், முகமெங்கும் வழியும் கண்ணீருமாய்..!! அவருக்கருகில் அந்த பெண்மணி.. நிறைமாத வயிறும், தலையை சுற்றி துணிக்கட்டும், அந்த கட்டை மீறி நெற்றியில் வழியும் இரத்தமுமாய்..!! அந்தப்பெண்மணியும்.. வலியிலும், வேதனையிலும் 'ஆ.. ஆ.. ஆ.. ஆ..' என்று அரற்றிக் கொண்டு இருந்தாள்..!!




அவர்களைப் பார்த்ததுமே நந்தினியிடம் ஒரு பதற்றம் பரவ, நாற்காலியில் இருந்து எழுந்துகொண்டாள். ஆட்டோவை விட்டு கீழே இறங்கிய அந்த முரட்டு ஆள், இப்போது தன் லுங்கி மடிப்பை தடுமாற்றமாய் பிரிக்க, திரும்பி பார்த்த ஆட்டோ டிரைவர் கத்தினார். "துட்டுலாம் ஒன்னும் வேணாய்யா.. சீக்கிரம் உன் வூட்டம்மாவை உள்ள தூக்கினு போ..!!" ஒருகணம் திகைத்த அந்த ஆள் அப்புறம் தன் மனைவியை இரண்டு கைகளிலும் அள்ளிக்கொண்டார். அவருடைய கண்கள் இரண்டும் அங்குமிங்கும் அலைபாய, அவசரமாய் ஹாஸ்பிட்டலுக்குள் ஓடி வந்தார். எதிர்ப்பட்ட நந்தினியிடம், "எ..எமர்ஜன்சி வார்டு எங்கம்மா இருக்குது..?" என கேட்டார் பதட்டமான குரலில். "நே..நேரா போய்.." என்று முதலில் கையை நீட்டிய நந்தினி, அப்புறம் "என் பின்னால வாங்க.. நான் கூட்டிட்டு போறேன்.." என்றுவிட்டு அந்த ஆளுக்கு முன்னால் ஓடினாள். அவரும் தன் மனைவியை இரு கைகளிலும் ஏந்திக்கொண்டு, 'ஒன்னுல்லம்மா.. ஒன்னுல்லம்மா.. இதோ வந்துட்டோம்மா..' என்று வேதனையில் துடிக்கும் மனைவிக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே, நந்தினியை பின் தொடர்ந்தார். "என்னங்க ஆச்சு.. தலைலாம் ரத்தம்..?" நந்தினி ஓடிக்கொண்டே கேட்க, "புள்ளத்தாச்சி பொம்பளையை கார்ல இடிச்சுனு.. நிக்காம கூட போயிட்டான்மா.. ஒரு பொறம்போக்கு தே..புள்ள..!!" அவர் அவள் பின்னால் ஓடிக்கொண்டே சொன்னார். "பாரம் ஏதும் புல் பண்ணனுமாம்மா..?" அவர் கவலையாக கேட்க, "எமர்ஜென்சிக்கு அதெல்லாம் தேவையில்லங்க.. அப்புறமா ஃபில் பண்ணிக்கலாம்.." நந்தினி ஆறுதலாய் சொன்னாள்.

 அவசர சிகிச்சை பிரிவை அடைந்ததும் நாலைந்து மருத்துவமனை ஊழியர்கள் எதிர்ப்பட்டார்கள். ஓடிவரும் இவர்களை பார்த்ததும், உடனே அவர்களையும் ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டது. உடனடியாய் ஒரு ஸ்ட்ரெச்சர் இழுத்துவரப்பட்டது. "அப்படியே ஸ்ட்ரெச்சர்ல வைங்க..!! என்ன ஆச்சு..??" அந்த கேரளத்து நர்ஸ் கவலையாய் கேட்டதற்கு, "கார் மோதிடுச்சும்மா..!!" மனைவியை ஸ்ட்ரெச்சரில் கிடத்திக்கொண்டே அவர் சொன்னார். பணியாளர்களால் அந்த ஸ்ட்ரெச்சர் உள்ளே இழுத்து செல்லப்பட, கதவு மூடப்பட்டது. உள்ளே நுழைய முயன்ற அவரை, நர்ஸ் தடுத்தாள். "இருங்க இருங்க.. நீங்க உள்ள போககூடாது.. இங்கயே இருங்க..!!" அவ்வளவு நேரம் பரபரப்பாய் இருந்த அந்த முரட்டு ஆசாமி, இப்போது சட்டென சோர்ந்து போனார். அப்படியே மடிந்து போய் தரையில் பொத்தென்று அமர்ந்தார்.

குழந்தை மாதிரி கேவிக்கேவி அழ ஆரம்பித்தார். "எப்படியாவது என் பொண்டாட்டியும் புள்ளையும் காப்பாத்தி கொடுத்திடும்மா.. உன்னை என் தெய்வமா நெனச்சு கேக்குறேன்..!!" என்றார் அந்த நர்ஸை ஏறிட்டு..!! அவருடைய மனைவிக்கு சிகிச்சை உள்ளே மருத்துவர்கள் செய்ய, இங்கே இவர் சம்பந்தமே இல்லாமல் நர்ஸிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார். அந்த காட்சியைப் பார்த்த நந்தினியோ உடலெல்லாம் சிலிர்த்துப் போனாள். என்னவென்று சொல்லமுடியாத மாதிரி ஒரு உணர்ச்சி அவளுடைய மனதை பிசைந்தது. கண்களில் லேசாய் நீர் துளிர்த்தது.

ஒரு கணம் தன் பார்வையை மெல்ல சுழற்றி, அந்த மருத்துவமனையை நாலாபுறமும் பார்த்தாள். எங்கெங்கும்.. நோயாளிகள்.. அவர்களுடன் வந்தவர்கள்.. மருத்துவர்கள்.. அடுத்தவர் உயிரைக் காப்பாற்ற அங்குமிங்கும் கவலையாய் ஓடித்திரிந்த பணியாளர்கள்..!! எத்தனை விதமான நோய்கள்.. எத்தனை விதமான சிகிச்சைகள்..? எத்தனை விதமான வலிகள்.. அதற்கு எத்தனை விதமான மருந்துகள்..? எத்தனை விதமான கண்ணீர்கள்.. அந்த கண்ணீர் துடைக்க எத்தனை விதமான விரல்கள்..? இறந்த ஒருவருக்காக உறவினர்கள் அழுது அரற்றிக்கொண்டிருக்க.. பிறந்த குழந்தை ஒன்று அடுத்த அறையில் விடாமல் வீறிட்டுக் கொண்டிருக்கிறது..!!

வாழ்க்கையின் நிதர்சனத்தை உணர விரும்புவர்கள், முதலில் வந்து பார்க்க வேண்டிய இடம் மருத்துவமனை என்று தோன்றியது..!! "கொ..கொஞ்சம் எழுந்து இந்த சேர்ல உக்காந்துக்கங்க.." நந்தினி அந்த ஆளின் தோளைப்பற்றி எழுப்பி, அருகில் கிடந்த நாற்காலியில் அமர வைத்தாள். இன்னும் அழுது கொண்டே இருந்த அவர் முன் மண்டியிட்டு அமர்ந்து, மலர்ந்த முகத்துடனும், இதமான குரலுடனும் சொன்னாள். "இங்க பாருங்க.. உன் வொய்ஃபுக்கும், குழந்தைக்கும் ஒன்னும் ஆகாது.. அழாதீங்க.. கண்ணை தொடைச்சுக்காங்க..!!" அவள் அந்த மாதிரி ஆறுதலும், நம்பிக்கையுமாய் சொல்ல, இப்போது அவருடைய அழுகை பட்டென நின்றது.

கருணை கொஞ்சும் நந்தினியின் முகத்தையே கொஞ்ச நேரம் கண்ணிமைக்காமல் பார்த்தார். அப்புறம் தன் கண்களை அவர் துடைத்துக் கொண்டபோது, அவருடைய முகத்தில் ஒரு தெளிவு தெரிந்தது. மெலிதாக புன்னகைத்தார். "என் பேர் சூசை.. அது என் பொஞ்சாதி.. மரியம்..!! உன் பேர் என்ன பாப்பா..??" "எ..என் பேர் நந்தினி..!!"
"ம்ம்.. எட்டு வருஷம் கழிச்சு இப்போத்தான் உண்டாயிருக்கா.. உண்டான நாள்ல இருந்தே நானும் மரியமும் தெனமும் சண்டை போட்டுப்போம்..!! அவளுக்கு பொண்ணுதான் வேணுமாம்.. சிங்கக்குட்டி மாதிரி பையன்தான் பொறப்பான்னு நான் சொல்லுவேன்..!! ஹஹஹா.. ஹஹஹா..!!" சிரித்தவர் உடனே 'லொக்.. லொக்..' என இருமினார். "க..கவலைப்படாதீங்க.. உங்க விருப்பப்படியே பையன் பொறப்பான்.." "இல்ல இல்ல.. பொண்ணுதான் பொறக்கும் பாப்பா.. பொண்ணுதான் பொறக்கணும்.. அப்போதான் என் பொண்டாட்டி இன்னும் சந்தோஷப்படுவா..!!" அவசரமாக அவர் சொன்னதைக்கேட்டு நந்தினி திகைத்துக் கொண்டிருக்கும்போதே, அவர் திடீரென, "என் பொண்டாட்டிக்கும், பொண்ணுக்கும் ஒன்னும் ஆயிடாதுல பாப்பா..??" என்று ஏக்கமாய் கேட்டார்.


 "ஒன்னும் ஆகாதுங்க.. ரெண்டு பெரும் நல்லபடியா பொழைச்சு வருவாங்க..!!" நந்தினி ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவளுடைய செல்போன் பதறியது. எடுத்துப் பார்த்தவள், அவசரமாய் கால் பிக்கப் செய்து காதில் வைத்துக் கொண்டாள். "வ..வந்துட்டீங்களா அங்கிள்..? அங்க.. ரிசப்ஷன்லயே இருங்க.. நான் இதோ வந்துட்டேன்..!!" என்றவள் நாற்காலியில் அமர்ந்திருந்தவரிடம் திரும்பி, "எனக்கு கொஞ்சம் வேலை இருக்குதுங்க.. நான் போயிட்டு அப்புறமா வந்து உங்களை பாக்குறேன்..!!" என்று சொல்லிவிட்டு ரிசப்ஷன் நோக்கி ஓடினாள். மஹாதேவன் ரிசப்ஷனில் நின்றுகொண்டிருந்தார்.


அவள் அவரை நெருங்கியதும், "எந்த ஃப்ளோர்மா..?" என்றார். "ஃபர்ஸ்ட் ஃப்ளோர் அங்கிள்.. ஸ்டெப்ஸ்லயே போயிறலாமா..?" "ம்ம்.. போலாம்..!!" நந்தினி படிக்கட்டை நோக்கி நடக்க, அவளை நெருக்கமாக பின்தொடர்ந்தவாறே மஹாதேவன் கேட்டார். "என்னாச்சும்மா திடீர்னு.. நேத்து கூட அம்மாகிட்ட பேசினேனே.." "காலைல பாத்ரூம் போனவங்க.. திடீர்னு மயக்கம் வந்து அங்கேயே விழுந்தாட்டாங்க..!! கையிலயும் தலையிலையும் சின்னதா அடி.. காலு வேற பிசகிக்கிச்சு..!!" "ஓ..!!" "அப்பா போனதுல இருந்தே.. அம்மா ரொம்ப உடைஞ்சு போயிட்டாங்க அங்கிள்.. ஒழுங்கா சாப்பிடுறது இல்ல.. சரியா தூங்குறது இல்ல.. சொன்னாலும் கேக்குறது இல்ல..!! எந்த நேரமும் அழுது பொலம்பிட்டே இருக்காங்க..!!" "நீதான்மா அவங்களுக்கு கொஞ்சம் தைரியம் சொல்லணும்..!!" "புரிஞ்சுக்க மாட்டேன்றாங்க அங்கிள்..!! அம்மா ரொம்ப அப்பாவி.. அப்பா அம்மாவை ஒரு கொழந்தை மாதிரிதான் பாத்துப்பாரு.. எந்த வேலையா இருந்தாலும் அவரே பாத்து பாத்து பண்ணிடுவாரு.. இப்போ அவர் இல்லாம என்ன செய்யப் போறோமோன்னு.. ரொம்ப பயப்படுறாங்க..!!" "ம்ம்.. புரியுதும்மா..!!" முதல்மாடியை அடைந்தவர்கள், அந்த அறைக்குள் நுழைந்தார்கள். உள்ளே நந்தினியின் அம்மா அமுதா பெட்டில் படுத்திருந்தாள்.

நந்தினியின் தங்கை வந்தனா அம்மாவின் கால்மாட்டில் அமர்ந்திருந்தாள். மஹாதேவனை கண்டதும் வந்தனா விருட்டென்று பெட்டில் இருந்து எழுந்து நிற்க, அமுதா அவருக்கு வணக்கம் சொல்ல கஷ்டப்பட்டு எழ முயன்றாள். "வாங்கண்ணே.." "ஐயோ.. என்னம்மா இது.. படுத்துக்கோ.. படுத்துக்கோ.." ஆறுதலாக சொன்ன மஹாதேவன், ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அவள் முன் அமர்ந்து கொண்டார். 'என்ன ஆயிற்று.. எப்படி நடந்தது..?' என்கிற ரீதியில் நலம் விசாரிக்க ஆரம்பித்தார். நந்தினி தன் தங்கையை அனுப்பி காபி வாங்கி வர செய்தாள். காபி வந்ததும் அதை மஹாதேவனிடம் நீட்ட, அவர் அதை வாங்கி மெல்ல உறிஞ்சினார்.

அப்போதுதான் அமுதா மெல்ல விசும்ப ஆரம்பித்தாள். "இப்படி ரெண்டு பொட்டை புள்ளைகளோட என்னை தவிக்க விட்டுட்டு போயிட்டாரேண்ணே..?" "ஐயோ.. அதையே நெனச்சு கவலை பட்டுட்டு இருக்காதம்மா.. இனி ஆக வேண்டியதை பாரு..!! அதான் நான்லாம் இருக்கேன்ல..? சும்மா விட்ருவேனா..?" "ம்ம்ஹ்ஹ்ம்ம்.. அவர் செத்ததுக்கு கூட எந்த சொந்தக்காரனும் வந்து எட்டிப் பாக்கலை.. ஏதோ நீங்க இருக்குற நம்பிக்கைலதான் நாங்க இருக்கோம்ண்ணே..!! அவருக்கு பிசினஸ்ல நஷ்டம் வந்து நாங்க நடுத்தெருவுல நின்னப்போவும், அவருக்கு உங்க கம்பெனில வேலை போட்டு கொடுத்து.. எங்களை தலை நிமிந்து வாழ வச்சீங்க..!! இப்போ அவர் எங்களை தனியா தவிக்க விட்டு போனப்பவும்.. எங்களுக்கு ஆறுதலா இருக்கீங்க.. நாங்க உங்களுக்கு ரொம்ப கடன் பட்டிருக்கோம்ண்ணே..!!" "அதெல்லாம் ஒண்ணுல்லம்மா.. நான்தான் சதானந்தம்கிட்ட ரொம்ப கடன்பட்டிருக்கேன்.. நான் பிசினஸ் ஆரம்பிச்ச காலத்துல என் கம்பனி வளர்ச்சிக்கு அவர் எவ்வளவு உதவியா இருந்தாரு தெரியுமா..? எத்தனை எத்தனை பெரிய காண்ட்ராக்ட்லாம் அவர் மூலமா எங்க கம்பெனிக்கு வந்திருக்கு தெரியுமா..? ம்ம்ஹ்ஹ்ம்ம்.. ஏதோ அவருக்கு நேரம் சரியில்ல.. கடைசி காலத்துல பிசினஸ் நொடிச்சு போய்.. அந்த கஷ்டத்துலையே மனசும் நொந்து போய்.. போய் சேர்ந்துட்டாரு..!! அவரு எனக்கு செஞ்ச உதவிக்கு முன்னால.. நான் செய்ற உதவிலாம் ஒன்னுமே இல்ல..!!

என்னை உன் கூட பொறக்காத அண்ணனா நெனச்சுக்கோ.. நான் செய்ற உதவிலாம் ஒரு தங்கச்சிக்கு அண்ணன் செய்ற கடமையா நெனச்சுக்கோ..!!" "ஹ்ஹ.. என் கூடப்பொறந்த அண்ணனுகளே, எங்களுக்கு கஷ்டம் வந்தப்போ ஓடி ஒளிஞ்சுக்கிட்டானுக.. நீங்க எங்களுக்கு செய்ற உபகாரத்துக்கு நாங்க உங்களுக்கு எப்படி கைமாறு செய்யப் போறோம்னே தெரியலைண்ணே..!!" "ஐயோ... என்னம்மா நீ..? சும்மா சும்மா அதையே பேசிக்கிட்டு..!! நாமதான் இன்னும் கொஞ்ச நாள்ல ஒரே குடும்பமா ஆகப் போறோமே.. குடும்பத்துக்குள்ள இந்த மாதிரி கணக்கு வழக்கு பாக்கணுமா..??

சரி.. அந்தப் பேச்சை விடு..!! நீ இப்படி நடந்ததையே நெனச்சுக்கிட்டு இருக்காம.. தைரியமா இரு.. எல்லாம் நல்லபடியா நடக்கும்..!!" அமுதாவுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக சொன்ன மஹாதேவன், அந்த பேச்சை மற்றும் எண்ணத்துடன் வந்தனாவிடம் திரும்பி புன்னகையுடன் கேட்டார். "என்னம்மா வந்தனா.. உன் படிப்புலாம் எப்படி போயிட்டு இருக்கு..?" "ம்ம்.. நல்லா போயிட்டு இருக்கு அங்கிள்.." "எக்ஸாம்லாம் முடிஞ்சதுல..?" "ஆங்.. போன மாசமே எல்லாம் முடிஞ்சது அங்கிள்.." "எப்படி.. நல்லா பண்ணிருக்கியா..?" "ம்ம்.. நல்லா பண்ணிருக்கேன்.." "அடுத்து என்ன பண்ணலாம்னு ப்ளான் வச்சிருக்குற..?" மஹாதேவன் அப்படி கேட்டதும், வந்தனா மிகவும் உற்சாகமானாள்.

அவளுடைய கண்களில் புதிதாக ஒரு மின்னல் மின்ன, "எனக்கு MSc விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கணும்னு ரொம்ப ஆசை அங்கிள்.. மாஸ் மீடியால பெரிய ஆளா வரணும்னு.." அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, நந்தினி அவளை இடைமறித்து கோபமாக சொன்னாள். "ஏய்.. வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்ட..? லூசு மாதிரி ஏதாவது உளறிக்கிட்டு..!!" இப்போது மஹாதேவன் உடனே வந்தனாவுக்கு சப்போர்ட் செய்தார். "ஏன்மா அவளை திட்டுற..? அவ என்ன உளர்றா..? என்னவா வரப்போரோம்னு எவ்வளவு தெளிவா பேசுறா.. அவளை போய் உளர்றான்னு சொல்ற..?"
"இல்ல அங்கிள்.. அவ ஏதோ புரியாம பேசுறா.. அதுக்குலாம் ரொம்ப செலவாகும்.. நாங்க இப்போ இருக்குற நெலமைல.."

 "ப்ச்.. செலவை பத்திலாம் நீ ஏன் கவலைப்படுற..? அதுலாம் நான் பாத்துக்குறேன்.." என்றவர் வந்தனாவின் பக்கம் திரும்பி, "மீனாக்ஷி யுனிவர்சிட்டில நமக்கு தெரிஞ்சவங்க இருக்காங்கம்மா வந்தனா..

அங்க படிக்கிறதுக்கு உனக்கு சம்மதமா..?" என்று கேட்க, வந்தனாவின் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி. "அங்க படிக்கணும்னுதான் என் ஆசை அங்கிள்.. என் கனவுன்னு கூட சொல்லலாம்..!!" "ஹாஹா.. அப்போ அங்க உனக்கு சீட்டு கெடைச்சுட்டதாவே வச்சுக்கோ.. சரியா..??"

 "தேங்க்ஸ் அங்கிள்.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..!!" வந்தனா முகமெல்லாம் பூரிப்பும் புன்னகையுமாய் சொன்னாள். நந்தினியும், அமுதாவும் என்ன சொல்வது என்று தெரியாமல் அவஸ்தையில் மூழ்கியிருந்தார்கள். ஆனால் அதேநேரம் வந்தனாவின் குழந்தைத்தனமான பூரிப்பு, அவர்கள் இருவருக்கும் ஒருவித சந்தோஷத்தை கொடுக்கவே செய்தது. மஹாதேவன் கிளம்பியபோது அவரை வழி அனுப்பி வைப்பதற்காக நந்தினி உடன் சென்றாள். இருவரும் கீழ்த்தளம் செல்ல படிக்கட்டில் இறங்கிக்கொண்டிருக்கும்போது மஹாதேவன் கேட்டார்.

 "என்னைக்கு டிஸ்சார்ஜ் பண்றதா சொல்லிருக்காங்க..?" "நாளைக்கு அங்கிள்.." "ம்ம்.. இந்தா.. இதை செலவுக்கு வச்சுக்கோ..!!" மஹாதேவன் தன் பர்ஸ் திறந்து உள்ளே கத்தையாக இருந்த மொத்த பணத்தையும் எடுத்து நந்தினியின் கையில் திணிக்க, அவளோ பதறினாள். "ஐயையோ.. பணம்லாம் வேணாம் அங்கிள்.. எங்கிட்ட இருக்கு.. சமாளிச்சுக்குவேன்..!!" "ப்ச்.. பொய் சொல்லாத நந்தினி..!! ம்ம்.. வாங்கிக்கோ..!!" சற்றே கடுமையான குரலில் சொன்னவர், வலுக்கட்டாயமாக பணத்தை அவளுடைய கையில் திணிக்க, அவளும் வேறு வழியில்லாமல் வாங்கிக்கொண்டாள். "தேங்க்ஸ் அங்கிள்..!!" என்று கம்மலான குரலில் சொன்னவள், தலையை குனிந்து கொண்டாள். படிக்கட்டில் பாதி இறங்கிய நிலையில் இருவரும் நின்றுகொண்டிருந்தார்கள்.

ஒருமாதிரி குறுகிப்போய் நின்றிருந்த நந்தினியையே சில வினாடிகள் அமைதியாக பார்த்த மஹாதேவன், அப்புறம் திடீரென ஏதோ யோசனை வந்தவராய் கேட்டார். "ஆங்.. உன்கிட்ட ஒன்னு கேக்கனும்னு நெனச்சேன்மா.." "என்ன அங்கிள்..?" "நேத்து உன் அம்மாகிட்ட பேசிட்டு இருந்தப்போதான் தெரிஞ்சது.. நீயும் அசோக்கும் ஒரே காலேஜ்ல, ஒரே வருஷத்துல படிச்சவங்களாமே..??" "ம்ம்.. ஆ..ஆமாம் அங்கிள்..!!" சொல்லும்போதே நந்தினிக்கு லேசாய் உதறல் எடுத்தது. "அப்போ.. என் பையனை காலேஜ்லயே உனக்கு தெரியுமா..?" "பா..பாத்திருக்கேன்.. ஆ..ஆனா ரொம்பலாம் பழக்கம் இல்ல..!!" நந்தினி திணறி திணறி பொய் சொன்னாள். "ஓ..!! ம்ம்ம்ம்.. அப்போ வேற மாதிரி இருந்திருப்பான்..!! இப்போ எப்படி இருக்கான்னு பாத்தியா..? அம்மாட்ட அவன் ஃபோட்டோ கொடுத்திருந்தேன்..!!" "ம்ம்.. பார்த்தேன் அங்கிள்.." "பிடிச்சிருக்கா..?" "எ..எது..?"

 "என் பையனை உனக்கு பிடிச்சிருக்கான்னு கேட்டேன்..?" "ம்ம்.. பி..பிடிச்சிருக்கு.." நந்தினி சற்றே தயக்கமாய் சொன்னாள். "அவனை பத்தி சில விஷயங்கள் உன் அம்மாகிட்ட சொன்னேன்.. உன்கிட்ட அதுபத்தி சொன்னாங்களா..?" "ம்ம்.. சொன்னாங்க..!!" "அதுக்கப்புறமும் அவனை கல்யாணம் செய்துக்க உனக்கு சம்மதம்தானா..? உனக்கு சம்மதம்னு உன் அம்மா சொன்னாங்க.. ஆனா.. உன் வாயால அதை கேக்கனும்னு எனக்கு ஆசை..!! சொல்லும்மா.. என் பையனை கட்டிக்க உனக்கு சம்மதமா..?" மஹாதேவன் மிக கூர்மையாக அந்த கேள்வியை அவள் முன்வைக்க, நந்தினி இப்போது தடுமாறினாள். அவளுடைய உடலில் லேசாய் ஒரு பதற்றம் வந்து தொற்றிக்கொண்டது. விரல்கள் மெலிதாக நடுங்கின. அவள் அமைதியாக நிற்பதை பார்த்த மஹாதேவன், அவரே லேசான புன்முறுவலுடன் தொடர்ந்து பேசினார்.

 "ஹாஹா..!! என்னடா இவன்.. உதவியும் பண்ணிட்டு.. உதவாக்கரை புள்ளயையும் தலைல கட்டப் பாக்குறானேன்னு நெனைக்காத..!! நான் உங்களுக்கு பண்ற உதவி, சதானந்தத்துக்கு நான் பட்டிருக்குற நன்றிக்கடன்.. அதுக்கும் இந்தக்கல்யாணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல..!! அதேமாதிரி.. என் புள்ளையும் உதவாக்கரை புள்ளை இல்ல.. பொறுப்பானவன்.. ஹார்வர்ட் யுனிவர்சிட்டில பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படிச்சிருக்கான்.. நல்ல திறமையானவன்.. புத்திசாலி.. எங்கிட்ட இருந்து பிசினசை அவன் கவனிக்க ஆரம்பிச்சப்புறம்.. கம்பனி எந்த அளவுக்கு முன்னேறி இருக்கு தெரியுமா.. லாபம் எந்த அளவுக்கு அதிகமாயிருக்கு தெரியுமா..?? அதுமட்டும் இல்ல.. ரொம்ப அன்பானவன்.. என் மேலயும், எங்ககிட்ட வேலை பாக்குறவங்ககிட்டையும் ரொம்ப பிரியமா நடந்துப்பான்..!!" படபடவென பேசிய மஹாதேவன் சற்றே நிறுத்தினார்.

அவர் சொல்வதை எல்லாம் நந்தினி அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள். பதில் எதுவும் சொல்லவில்லை. மஹாதேவன் தொடர்ந்தார். "இப்போதான்மா அவன்கிட்ட இந்தமாதிரி தேவையில்லாத கெட்ட பழக்கம்லாம்..!! எஞ்சினியரிங் முடிக்கிற வரை என் பையன் ரொம்ப நல்லவனா இருந்தான்.. அப்புறந்தான் அவன் நடத்தைல நெறைய சேன்ஜ்.. என்ன காரணம்னு எனக்கு இதுவரை எதுவும் புரியலை.. " மஹாதேவன் வருத்தமாய் சொல்ல, நந்தினியின் மனதுக்குள் இப்போது ஏதோ ஒன்று குறுகுறுக்க ஆரம்பித்தது.

 "அவனுக்கு வேற பொண்ணுக கெடைக்காம நான் உன்னை ச்சூஸ் பண்ணலைம்மா நந்தினி.. அவனுக்கு பொண்ணு கொடுக்க எக்கச்சக்கமான பேர் காத்திருக்காங்க..!! ஆனா.. அவனை ஒரு நல்ல மனுஷனா மாத்த உன்னை மாதிரி ஒரு பொண்ணாலதான் முடியும்னு நான் நெனைக்கிறேன்.. அதான் உங்க பொண்ணை கொடுக்குறீங்களான்னு உன் அம்மாகிட்ட துணிஞ்சு கேட்டுட்டேன்..!! இதை நான் உங்ககிட்ட எதிர்பார்க்குற பிரதி உபகாரமா நெனைக்காத.. பையனோட வாழ்க்கை கெட்டுப்போக கூடாதேன்னு தவிக்கிற ஒரு அப்பனோட அக்கறையா எடுத்துக்கோ..!! இப்போ சொல்லு.. உனக்கு என் பையனை கட்டிக்க சம்மதமா..? உனக்கு விருப்பம் இல்லைன்னா.. தாராளமா சொல்லு.. உன் முடிவு என்னவா இருந்தாலும் அதை நான் சந்தோஷமா ஏத்துக்குறேன்..!!" சொல்லிவிட்டு மஹாதேவன் நந்தினியின் முகத்தை ஏறிட, அவள் இப்போது தயக்கமான குரலில் ஆரம்பித்தாள்.

 "எ..எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை அங்கிள்.. என் வி..விருப்பம்னுலாம் இதுல எதுவும் இல்ல.. நீங்க என் அப்பா மாதிரி.. நீங்க எனக்கு நல்லதுதான் செய்வீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.." "ஐயோ.. அதுக்காக இல்லம்மா.. நான் உனக்கு நல்லதுதான் செய்வேன்.. அசோக்கும், நீயும் சந்தோஷமா இருப்பீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..!! ஆனா.. இது உன் வாழ்க்கை இல்லையா.. அதான் உன் சம்மதத்தையும் கேக்குறேன்..!!" "எனக்கு ச..சம்மதம்தான் அங்.." அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, மஹாதேவன் இடைமறித்து சொன்னார்.
"இல்ல.. இப்போ நீ எதுவும் சொல்லவேணாம்..!! என் பையனுக்கு நான் இன்னும் ஒருவாரம் டயம் கொடுத்திருக்கேன்.. நீயும் ஒருவாரம் டைம் எடுத்துக்கோ.. நல்லா யோசிச்சு ஒரு முடிவு எடு..!! என் பையனுக்கு வேற வழி இல்ல.. எப்படியும் என்வழிக்கு வந்துடுவான்.. உன்னோட பரிபூரண சம்மதம்தான் எனக்கு இப்போ ரொம்ப முக்கியம்..!! சரியா..? நல்லா யோசி..!! நான் வர்றேன்..!!" புன்னகையுடன் சொன்ன மஹாதேவன், திரும்பி மிச்சப் படிகளில் இறங்க ஆரம்பித்தார். நந்தினியோ அசையாமல் அங்கேயே நின்றிருந்தாள்.

அவளுடைய மனம் இப்போது ஒரு உச்சபட்ச குழப்பத்தில் சிக்கி தவித்தது. கடந்த இரண்டு வருடங்களாகவே பலத்த காற்று வீ சிய அவளது இதயத்தீவில், இப்போது சூறாவளி ஒன்று கோர தாண்டவம் ஆடுவதாக அவளுக்கு தோன்றியது. சோர்ந்து போனவளாய் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தவள் அப்புறம் திரும்பி மாடிக்கு நடந்தாள். அறைக்குள் நுழைந்ததுமே, அதற்காகத்தான் காத்திருந்தது போல வந்தனா வந்து அவளை பிடித்துக் கொண்டாள். "அக்கா.. உன் மொபைலை கொடேன்.." "எதுக்கு..?" "நான் PG பண்ணப் போறேன்ல.. என் ஃப்ரண்ட்ஸ்கிட்டலாம் ஃபோன் பண்ணி சொல்லணும்..!!" "ப்ச்.. அப்புறம் சொல்லிக்கலாம் போ..!!" "ப்ளீஸ்க்கா.. நான் எவ்வளவு ஹேப்பியா இருக்கேன் தெரியுமா.. உடனே எல்லார்கிட்டயும் சொல்லணும் போல இருக்குக்கா..!! குடுக்கா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!" வந்தனா சிறுகுழந்தையாய் கெஞ்சவும், நந்தினி செல்போனை அவளுடைய கையில் திணித்துவிட்டு நகர்ந்தாள்.


கையில் இருந்த பணக்கற்றை ஹேன்ட் பேகுக்குள் திணித்தாள். வந்தனாவோ தன் அக்காவின் செல்போனிலேயே ஸேவ் செய்து வைத்திருந்த தனது நண்பர்களின் காண்டாக்டுகளை ஒவ்வொன்றாக தட்டி, தான் மேலே படிக்க போகிற விஷயத்தை உற்சாகமும், பூரிப்புமாக சொல்லிக்கொண்டிருந்தாள். தன் மூத்த மகளையே பார்த்துக் கொண்டிருந்த அமுதா, இப்போது அவளை அழைத்தாள். "நந்தினிம்மா.. காலுக்கு கொஞ்சம் தைலம் போட்டு விடுறியா..?" "ம்ம்.. இரும்மா.. வர்றேன்.." அடுத்த சில நிமிடங்களிலேயே அமுதாவின் வலது காலில் தைலம் தடவி, கவனமாக நந்தினி நீவி விட்டுக்கொண்டிருக்க, அமுதா மெல்லிய குரலில் தன் மகளிடம் சொன்னாள்.

 "நீ ரொம்ப கொடுத்து வச்சவடி நந்தினி.." "ஏ..ஏன்மா அப்படி சொல்ற..?" "நாம இப்போ இருக்குற இந்த நெலமைலயும்.. உனக்கு ஒரு நல்ல வசதியான வாழ்க்கை தேடி வந்திருக்கு.." அம்மா சொல்ல, நந்தினியின் முகம் சற்றே சுருங்கியது. "ம்ம்ம்.." என்றாள் சுரத்தற்ற குரலில். "உன் தங்கச்சிக்கும் உன்னாலதான் ஒரு விடிவு காலம் வரப்போகுது.. நீ போகப்போற வீடுதான் அவளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு குடுக்க போகுது.." "ம்ம்ம்.." "ஹாஹா.. அவளை பாரேன்.. எந்த கவலையும் இல்லாம எவ்வளவு சந்தோஷமா சிரிச்சுக்கிட்டு இருக்கா பாரு.. சின்னப்புள்ளை மாதிரி..!!" "ம்ம்ம்.." "ம்ம்ஹ்ஹ்ம்ம்..!!! அம்மாவுக்கு வேற எதுவும் வேணாம் நந்தினி.. உனக்கும் சின்னவளுக்கும் ஒரு கல்யாணத்தை பண்ணி பாத்துட்டா.. நானும் உன் அப்பாகிட்ட போய் சேர்ந்துடுவேன்..!!" "ப்ச்.. இப்படிலாம் பேசாதம்மா..!!" நந்தினி சற்றே கடுமையாக சொன்னாள்.

 "ம்ம்ம்.. எல்லாம் உன் கைலதான் இருக்கு நந்தினி..!! இந்த கல்யாணத்துல உனக்கெதும் வருத்தம் இல்லையே.. சம்மதம்தான..?? ம்ம்ம்..??" அமுதா ஏக்கமாக கேட்க, நந்தினிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தன் அம்மாவின் முகத்தை ஒரு சில வினாடிகள் பார்த்தவள், அப்புறம் தலையை திருப்பி.. யாரிடமோ செல்போனில் உற்சாகமாக அரட்டை அடித்துக் கொண்டிருந்த தங்கையை பார்த்தாள். ஒருபுறம்.. எதிர் வரும் காலம் பற்றி ஏராளமாய் கனவுகளுடன் தன் தங்கை..!! மறுபுறம்.. எமன் வரும் காலத்தில் தனது கடைசி கனவையும் கண்டுவிட துடிக்கிற தாய்..!! என்ன சொல்லிவிட முடியும் நந்தினியால்..?? "எ..எனக்கு சம்மதம்தான்மா..!!" நந்தினி அவ்வாறு மெல்லிய குரலில் சொல்லவும் அமுதாவின் முகம் ஒரு மலர்ச்சிக்கு சென்றது. அவளுடைய மனதில் ஒரு நிம்மதி பரவ, மகளைப் பார்த்து ஸ்னேகமாய் புன்னகைத்தாள். "அக்கா உனக்கு ஒரு கால் வருது.." வந்தனா செல்போனை நீட்டிக்கொண்டே சொன்னாள்.

 "யாரு..?" "யாருன்னு தெரியலை.. அன்னோன் நம்பர்..!!" நந்தினி செல்போனை வாங்கி கால் பிக்கப் செய்து காதில் வைத்தாள்.
"ஹலோ.." என்றாள். "ஹலோ.." என்று அடுத்த முனையில் ஒரு ஆண்குரல். "யாரு வேணும்..?" "நீங்கதான் வேணும் மிஸ் நந்தினி..!!" அந்த ஆண்குரலில் ஒரு எள்ளல் தொனித்தது. "நீ..நீங்க..?" "ஹாஹா.. யார் பேசுறேன்னு தெரியலையா நந்தினி..?? ஹஹாஹஹா..!!" அவன் பெரிதாக சிரிக்க, அது யாராக இருக்கும் என்று நந்தினிக்கு ஓரளவு பிடிபட்டது. இருந்தாலும், "தெ..தெரியலை.. யா..யாரு..?" என்றாள். "அசோக்க்க்க்...!! இப்போ யார்னு தெரியுதா.. இல்ல.. இன்னும் ஞாபகம் வரலையா..?? 'உன்னல்லாம் ஒருத்தியும் லவ் பண்ண மாட்டாடா'ன்னு செருப்பால அடிச்ச மாதிரி சொன்னியே..? அதே அசோக்..!! ஹஹாஹஹா..!!" அடுத்த முனையில் அசோக் சொல்லிவிட்டு, ஒருமாதிரி வித்தியாசமாக சிரித்துக்கொண்டே இருக்க, நந்தினியின் உடலை குப்பென்று ஒரு பதற்றம் வந்து பற்றிக்கொண்டது. அவளுடைய இதய துடிப்பின் வேகம் கிடுகிடுவென எகிற ஆரம்பித்தது.


No comments:

Post a Comment