Monday, December 22, 2014

கண்ணாமூச்சி ரே ரே - தமிழில் ஒரு திரில் தொடர் - பாகம் - 22


சிபி காணாமல் போயிருந்தான்.. எங்கு சென்றான் என்கிற சுவடே தெரியாமல் எப்படியோ தொலைந்து போயிருந்தான்..!! அகழி வந்து ஆதிராவுக்கு கிடைத்த உச்சபட்ச அதிர்ச்சி இதுதான் எனலாம்.. தங்கையை தேடவந்து கணவனை தொலைப்போம் என்று கனவிலும் அவள் எண்ணியிருக்கவில்லை..!! கணவனின் அணைப்பு தந்த கதகதப்புச்சூடு, அவளைவிட்டு இன்னும் நீங்கியிருக்காத நிலையிலே.. காற்றில் சூடமாய் அவன் கரைந்து போயிருந்ததை, அவளால் எப்படி தாங்கிக்கொள்ள இயலும்..??

முதல்நாள் நேர்ந்த பயங்கரத்தின் பதைபதைப்பு, அவளைவிட்டு இன்னும் அகன்றிருக்காத நிலையிலே.. அடுத்தநாளே இன்னொரு பேரதிர்ச்சியை வாங்கிக்கொள்ள, அவளது இதயத்தில்தான் எத்தனை வலுவிருக்கும்..?? அதுவும்.. இன்றுகாலை அகழியைவிட்டு கிளம்பிவிட்டால்.. இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் இறுதிப்புள்ளி வைத்துவிடலாம் என்று அவள் நிம்மதியுற்றிருந்த வேளையில்.. இடியாக இப்படியொரு நிகழ்வு அவளது இதயத்தை இரக்கமில்லாமல் தாக்கினால்..?? அப்படியே உடைந்து.. அணுஅணுவாய் உதிர்ந்து.. சில்லுசில்லாய் சிதறிப்போனாள் என்றுதான் சொல்லவேண்டும்..!!

 முதல்நாள்தான் அந்த சிவப்பு அங்கி உருவம் மணிமாறனை தூக்கி சென்றதை கண்கூடாக பார்த்திருக்கிறாள்.. முன்பொருமுறை நீருக்கடியிலும், ஜன்னலுக்கு வெளியிலும் பார்த்த அந்த உருவத்தை, அப்போது மனபிரம்மை என்று ஒதுக்கியிருந்தாலும், இப்போது அவையெல்லாம் அப்பட்டமான நிஜம் என்கிற நம்பிக்கை அவளுக்கு வந்திருந்தது..!!
எல்லாவற்றையும் நினைக்க நினைக்க.. அவளது இருதயத்தை ஒரு இனம்புரியாத பயம் வந்து கவ்விக்கொண்டிருந்தது.. அந்த உருவம் தன்னிடம் எதையோ எதிர்பார்க்கிறது, தன்னை சீண்டிப்பார்க்கிறது என்று தோன்றியது..

அவளது புத்திக்கும், சக்திக்கும் அப்பாற்பட்ட ஒரு அமானுஷ்யத்தின் இரும்புப்பிடியை அவளால் தெளிவாக உணரமுடிந்தது..!! பட்டாம்பூச்சி பறப்பதை பார்த்து மிரண்டு போனவள், பதறியடித்து படிக்கட்டு இறங்கி கீழேவந்தாள்.. பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த வனக்கொடியிடம், பதைபதைப்புடன் அந்தச்செய்தியை சொன்னாள்..!! ஆரம்பத்தில் வனக்கொடிக்கு அந்த விஷயத்தின் தீவிரம் சட்டென்று உறைக்கவில்லை..!!

 "ஐயோ.. அழாத ஆதிராம்மா.. நீ பயப்படுற மாதிரி ஒன்னும் இருக்காது..!! தம்பி பக்கத்துலதான் எங்கயாது போயிருக்கும்.. இப்ப வந்துரும் பாரேன்..!!" என்று ஆதிராவை சமாதானப்படுத்தவே முயன்றாள். "இ..இல்லம்மா.. இல்ல.. அவர் வரமாட்டாரு.. அ..அவருக்கு ஏதோ ஆய்டுச்சு.. எ..என்னால நல்லா ஃபீல் பண்ணமுடியுது.. அவருக்கு என்னவோ ஆய்ருச்சும்மா..!!" ஆதிராவின் கண்களில் அதற்குள்ளாகவே தாரைதாரையாய் கண்ணீர்..!!

அந்த புத்தகமும் பட்டாம்பூச்சியும் அவளை வெகுவாக திகிலடையச் செய்திருந்தன.. அதனால்தான் அவளுடைய இந்த நம்பிக்கையில்லா பேச்சு..!! கணவனுக்கு ஏதோ ஆபத்து என்று அவளது காதல்மனது உணர்ந்துகொண்டது.. உள்ளத்தில் உறைந்திருந்த ஒருவித பதட்டம், அவளது உதடுகள் சிந்திய வார்த்தைகளிலும் நிறைந்திருந்தது..!! "சொ..சொல்றதை கேளு ஆதிராம்மா.. தம்பிக்கு ஒன்னும் ஆயிருக்காது.. நீயா எதையாவது நெனச்சு பொலம்பாத..!! இ..இரு.. நான் இந்த கதிர்ப்பயல உடனே வரசொல்றேன்..!!" வனக்கொடி சொல்லிவிட்டு டெலிஃபோன் நோக்கி ஓடினாள்.. ஆதிரா அப்படியே சோபாவில் சரிந்து அழ ஆரம்பித்தாள்..!!

 ஐந்தே நிமிடங்களில் ஆதிராவின் வீட்டுக்கு பரபரப்புடன் வந்து சேர்ந்தான் கதிர்..!! வீட்டை பார்த்துக்கொள்ள தென்றலை பணித்துவிட்டு.. மற்ற மூவரும் காரில்ஏறி சிபியைத்தேடி கிளம்பினார்கள்..!! எப்போதையும் விட அதிவேகத்திலேயே காரை விரட்டினான் கதிர்.. அழுதுகொண்டே வந்த ஆதிராவை நெஞ்சில் சாய்த்து ஆறுதல்படுத்த முயன்றாள் வனக்கொடி..!! ஒருமணிநேரம்.. ஒருஇடம் விடாமல் ஒட்டுமொத்த அகழியையையும் சலித்து முடித்திருந்தனர் மூவரும்.. சிபி சென்றிருக்க வாய்ப்புள்ள இடங்கள் அனைத்திலும் சல்லடை போட்டுத் தேடியிருந்தனர்..!!

எங்குசென்று தேடினாலும் அவர்களுக்கு திரும்பத்திரும்ப கிடைத்தது என்னவோ.. ஏமாற்றம் ஒன்றுதான்..!! கோயில் வளாகம்.. கல் மண்டபம்.. மார்க்கெட் வீதிகள்.. டெலிஃபோன் பூத்.. தேயிலை எஸ்டேட்.. ஆற்றங்கரை புல்வெளி.. அவனுக்கு பழக்கமான சில நண்பர்களின் இல்லங்கள்..!! சிபி காணாமல் போயிருந்தான்.. எங்கு சென்றான் என்கிற சுவடே தெரியாமல் எப்படியோ தொலைந்து போயிருந்தான்..!!

 ஒவ்வொரு இடத்திலும் கணவனின் முகம்தேடி ஏமாந்துபோகும் ஆதிரா.. "நா..நான்தான் சொன்னேன்ல.. அவரு இங்க இல்ல.. அவருக்கு ஏதோ ஆய்ருச்சு..!!" என்று கண்ணீருடன் புலம்ப ஆரம்பித்து.. அடுத்து என்ன செய்வது என்று கதிரும் வனக்கொடியும், குழப்பமும் திகைப்புமாய் தவிக்கும்போது.. "வந்திருக்கக்கூடாது.. இந்த ஊருக்கு நான் வந்திருக்கவே கூடாது..!!

தப்பு பண்ணிட்டேன்.. அவரு சொல்லச்சொல்ல கேட்காம பெரிய தப்பு பண்ணிட்டேன்..!! அவதான்.. அந்த குறிஞ்சிதான்.. எனக்கு தெரியும்..!!" என்கிற ரீதியில் பதைபதைப்புடன் பிதற்றி.. வேறுவழி எதுவும் தோன்றாமல், மூவரும் காரிலேறி வீட்டுக்கு திரும்புகையில்.. "ஐயோ.. கடவுளே.. என்னை ஏன் இப்படி சோதிக்கிற.. நான் என்ன பாவம் பண்ணினேன்..?? போச்சு.. எல்லாம் போச்சு..!!!!" என்று தலையில் பட்பட்டென அடித்துக்கொண்டு 'ஓ'வென பெருங்குரலில் அழுதாள். வீடு திரும்பியதுமே.. "அப்பாஆஆஆ..!!! அவரை காணோம்ப்பா..!!!"




என அலறியடித்துக்கொண்டு தனது தந்தைக்கு ஃபோன் செய்தாள்.. கண்ணீரும் கம்பலையுமாய் கணவன் காணாமல் போன செய்தியை அவருக்கு உரைத்தாள்..!! மகள் சொன்னதைக்கேட்டு, தணிகைநம்பியும் அப்படியே நிலைகுலைந்து போனார்.. 'என்ன நடக்கிறது அங்கே' என்பதுபோல, திகைத்துப்போய் சிறிதுநேரம் செயலற்று அமர்ந்துவிட்டார்..!!

முதல்நாள்தான் மகள் மீதான தாக்குதல்.. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்ளாகவே இன்று மருமகன் மர்மமாக தொலைந்து போயிருக்கிறான்.. ஒன்றும் புரியவில்லை அவருக்கு..!! ஒருவழியாய் புத்தியை இழுத்துப் பிடித்து.. "இ..இங்க பாரும்மா ஆதிரா.. அ..அப்பா சொல்றதை கேளும்மா... நீ.. நீ ஒன்னும் கவலைப்படாத.. சிபிக்கு எதுவும் ஆகிருக்காது.. அவன் கண்டிப்பா திரும்ப கெடைச்சுடுவான்.. சரியா..?? அப்பா உடனே கெளம்பி அங்க வர்றேன்மா ஆதிரா.. அதுவரை திரவியத்தை பக்கத்துல வச்சுக்க..!!

தைரியமா இரும்மா.. தைரியமா இரு.. சிபிக்கு ஒன்னும் ஆயிருக்காது.. அழாத..!!" என்று ஓரளவு அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார்..!! தொழில் விவகாரங்களில் என்னதான் மனக்கசப்பு இருந்தாலும்.. இந்த மாதிரி ஒரு இக்கட்டான சூழ்நிலையில், தோழனின் உதவியைத்தான் முதலில் நாடினார் தணிகை நம்பி..!! மகளிடம் பேசிமுடித்த அடுத்த நொடியே.. திரவியத்தைத்தான் தொலைபேசியில் அழைத்தார்..!! இன்று காலை நடந்த இந்த புது விவகாரத்தை நண்பனிடம் உரைத்து.. தான் அகழி வரும்வரைக்கும் மகளுக்கு துணையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்..!!

 அதன்பிறகு.. ஒரு அரைமணி நேரத்துக்குள்ளாகவே.. ஆதிராவின் வீட்டுக்கு போலீஸ் ஜீப்பில் வந்து இறங்கினார் திரவியம்.. அவருடன் கூடவே வந்திருந்தார் இன்ஸ்பெக்டர் வில்லாளன்..!! திரவியத்துக்கு குறிஞ்சி மீதான நம்பிக்கையும், பயமும் நிறையவே இருந்தாலும்.. கேள்விப்பட்ட சில தகவல்களை வைத்து, குறிஞ்சிதான் சிபியை கொண்டு சென்றிருக்கவேண்டும் என்று அவருக்கு தோன்றினாலும்.. முறைப்படியான காவல்த்துறை விசாரணையும் முக்கியம் என்று கருதியதாலேயே வில்லாளனை அழைத்து வந்திருந்தார்..!!

குறிஞ்சியைத் தாண்டி வேறேதும் சாத்தியக்கூறுகள் இருந்தால்.. அவற்றை தப்பவிட்டுவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வுதான் அதற்கு காரணம்..!! "அங்கிள்..!!!!" அழுதபடி ஓடிவந்த ஆதிராவை, "ஒன்னும் இல்லம்மா.. ஒன்னும் இல்ல.. அழாத.. சிபிக்கு ஒன்னும் ஆயிருக்காது.. சீக்கிரமே திரும்ப வந்துடுவான்..!!" என்று ஆறுதலாக அணைத்துக் கொண்டார் திரவியம். நடந்த விஷயங்களை வனக்கொடியிடமே விசாரித்து தெரிந்து கொண்டார்..!!

கண்களில் ஒருவித மருட்சியுடன் வனக்கொடி சொல்ல சொல்ல.. கவலையாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டார் திரவியம், கவனமாக அவற்றுக்கு காது கொடுத்திருந்தார் வில்லாளன்..!! விள்ளாளனிடம் நேற்றிருந்த முறைப்பும் விறைப்பும் இப்போது இல்லை.. இரவெல்லாம் தூக்கமில்லாமல் சோர்ந்து போயிருந்த அவரது கண்களோடு, அவருடைய முகத்திலும் பலவித குழப்பரேகைகளை காணமுடிந்தது..!!

மேலதிகாரிகளின் அழுத்தம் ஒருபுறம் இருக்க.. அவரைச்சுற்றி நடக்கிற சம்பவங்களை பார்த்து, குறிஞ்சி பற்றிய தனது நம்பிக்கையின்மையை மறுபரீசிலனை செய்கிற நிலைமையில்தான் அவர் இருந்தார்.. மனதளவிலும் சற்றே தளர்ந்து போயிருந்தார்..!! வனக்கொடியிடம் பேசிமுடித்தபிறகு.. அந்த வீட்டை ஒருமுறை கவனமாக சுற்றிப் பார்த்தார் வில்லாளன்.. அவருடன் உதவிக்கு சென்றிருந்தார் திரவியம்..!!

கீழ்த்தளத்தின் எல்லா அறைகளையும் அலசினார்.. மாடிப்படியேறி மேல்த்தளத்தை ஒருமுறை சுற்றிவந்தார்..!! வீட்டுக்குள் அடங்கியிருந்த ரகசிய அறை பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டு.. அதற்குள்ளும் சென்று தீவிரமாக பார்வையிட்டார்..!! பார்வையிட்டதன் பிறகு ஹாலுக்கு வந்த வில்லாளன்.. "கதவு, ஜன்னல்லாம் எதுவும் உடைஞ்சிருக்குற மாதிரி தெரியல.. வெளில இருந்து யாரும் உள்ள வந்திருக்க சான்ஸ் இல்லன்னுதான் தோணுது..!! போயிருந்தா இவராத்தான் போயிருக்கனும்..!!" என்று இயல்பான குரலில் சொன்னதை எல்லாம்,

 "........................." எங்கோ ஒரு வெறித்த பார்வையுடன் கேட்டுக்கொண்டாள் ஆதிரா.

 "நைட்டு தூங்குறப்போ கதவெல்லாம் லாக் பண்ணிட்டுத்தான தூங்குனீங்க..??" "ஆ..ஆமாம்..!!" "காலைல எந்திரிச்சு பாக்குறப்போ அவர் உங்க பக்கத்துல இல்ல..??" "ம்ம்..!!" "அப்புறம்.. வனக்கொடி வீட்டுக்கு வந்ததும் விஷயத்தை சொல்லிருக்கிங்க..!! அதுவரை என்ன பண்ணுனீங்க..??" "இல்ல.. நான் எந்திரிக்கிறப்போவே வனக்கொடிம்மா வந்திருந்தாங்க..!!"

 "ஓ..!! கதவெல்லாம் லாக் பண்ணிட்டு தூங்கினதா சொன்னீங்க.. அப்புறம் எப்படி அவங்க..??" "அவங்கட்ட ஒரு சாவி இருக்கு..!!"
ஆதிரா உலர்ந்துபோன குரலில் சொல்ல.. இப்போது வில்லாளன் நெற்றியை சற்றே சுருக்கினார்.. அப்படியே திரும்பி வனக்கொடியை ஒரு சந்தேகப்பார்வை பார்த்தார்..!!

அவருக்கு ஏற்கனவே வனக்கொடியின் மீது நல்ல அபிப்ராயம் கிடையாது.. இப்போது அவளை சந்தேகப்படும்படியான ஒரு சூழல் அமையவும், அவர் பார்த்த பார்வையில் ஒருவித கடுமையும், கூர்மையும் சரிவிகிதத்தில் கலந்திருந்தது..!!

 "இங்க வா..!! நீ எப்போ வீட்டுக்கு வந்த..??" வனக்கொடியை ஒருமையில் அழைத்து கேட்டார். "நா..நான்.. நான் வர்றப்போ.." பதற்றத்தில் வனக்கொடி தடுமாறிக் கொண்டிருக்கும்போதே, "இன்ஸ்பெக்டர்..!!" இறுக்கமான குரலில் வில்லாளனை அழைத்தாள் ஆதிரா. "ம்ம்.." ஆதிராவின் பக்கமாக திரும்பினார் வில்லாளன்.

 "தயவு செஞ்சு அவங்கமேல சந்தேகப்படாதிங்க ப்ளீஸ்..!! அவங்க பார்வைதான் அப்படி இருக்கும்.. மத்தபடி ரொம்ப நல்லவங்க..!! அவங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல..!! இதுக்குலாம் காரணம் வேற ஆளு.. அது யார்னு எனக்கு நல்லா தெரியும்..!!" "யா..யாரு..??" "குறிஞ்சி..!!!!" ஆதிரா தீர்க்கமாக சொல்ல, வில்லாளனின் முகத்தில் ஒருவித கேலிப்புன்னகை.

 "ஹஹா.. எப்படி சொல்றீங்க..??"

 "தெரியும்.. என்னால ஃபீல் பண்ண முடியுது..!! இதுக்குலாம் காரணம் மனுஷங்க இல்ல.. ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி..!!"

 "ஓ..!! எதனால அந்த முடிவுக்கு வந்தீங்கன்னு கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா..??"

 "நான் எவ்வளவு தெளிவா சொன்னாலும் அது உங்களுக்கு புரியாது.. உங்களால புரிஞ்சுக்க முடியாது..!!"

 "கமான் ஆதிரா.. சொல்லுங்க ப்ளீஸ்..!! நீங்க சொன்னாத்தான என்னாலயும் உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும்..??"

 "இல்ல இன்ஸ்பெக்டர்.. உங்களால எனக்கு ஹெல்ப் பண்ண முடியாது..!! உங்க அக்கறைக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.. நீங்க கெளம்பலாம்..!!" சொல்லிவிட்டு விருட்டென எழுந்து நடந்த ஆதிராவையே.. திகைப்பாக பார்த்துக் கொண்டிருந்தார் வில்லாளன்..!! அதன்பிறகும் அந்தவீட்டில் தனது வேலை என்னவென்று புரியாதவராய்.. திரவியத்திடம் சொல்லிவிட்டு சீக்கிரமே அங்கிருந்து வெளியேறினார்..!! ஆதிராவால் அழத்தான் முடிந்தது.. அதைத்தாண்டி எதையும் செய்கிற மனத்தெளிவு அவளுக்கு இல்லை..!!

அமானுஷ்யமான ஒரு சக்தியை வென்றுமுடிப்பதற்கு திட்டம் தீட்டுகிற அளவுக்கு.. தளர்ந்துபோன அவளது மூளைக்கோ கிஞ்சித்தும் வலுவென்பது இல்லை..!! கண்கள் மட்டும் தாரைதாரையாய் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தன.. அகழி வந்து இந்த ஐந்தாறு நாட்கள் நடந்த சம்பவங்களையே, அவளது மனது திரும்ப திரும்ப நினைத்து வெந்துகொண்டிருந்தது.. கணவனின் ஆசைமுகத்தை மீண்டும் காண இயலுமா என்கிற கேள்வி, நொடிக்கொருமுறை அவளது இற்றுப்போன இருதயத்தில் அமிலம் வார்த்துக்கொண்டிருந்தது..!!

 சிறிது நேரத்தில்.. முகிலனின் குடும்பத்தினர் விஷயத்தை கேள்விப்பட்டு ஆதிராவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.. முதன்முறையாக முகிலனும் அவர்களுடன் வருகை தந்திருந்தான்..!! ஊர்த்திருவிழாவை உற்சாகம் இல்லாமலே நடத்தி முடித்திருந்தவன்.. குடும்பத்து மனக்கசப்பை மனதில் கொள்ளாமல் அந்தவீட்டு வாசற்படி மிதித்தான்..!! அங்கையற்கண்ணியும், யாழினியும் ஆதிராவை ஆறுதல்படுத்த முயன்றனர்..

ஆதிராவோ, ஆறுதலுக்கு அணுவளவும் மாறுதல் கொள்கிற நிலையில் இல்லை..!! முகிலன் தயங்கி தயங்கி பேசியதை மட்டும்.. கொஞ்சமாய் காதுகொடுத்து கேட்டுக் கொண்டாள்..!! "எ..எனக்கு எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல ஆதிரா..!! இ..இந்த மாதிரி ஒரு நெலமைல நீ இருக்குறப்போ.. உன்னை வந்து பார்த்து பேசணும்னு தோணுச்சு.. அதான்.. நானாவே கெளம்பி அம்மாவோட வந்தேன்..!!" "ம்ம்..!!" "உ..உனக்கு என் மேல கோவம் இருக்கும்னு நெனைக்கிறேன்..!!" "இல்லத்தான்.. உங்கமேலலாம் எனக்கு எந்த கோவமும் இல்ல..!!"

 "ஹ்ம்ம்.. தாமிரா பண்ணின அந்த ஆராய்ச்சி எனக்கு பிடிக்கல.. அதை நீ திரும்ப தோண்டினதும் எனக்கு பிடிக்கல.. அவ்வளவுதான்..!! மத்தபடி உங்க ரெண்டு பேர் மேலயும் எனக்கு எந்த கோவமும் இல்ல..!! தாமிரா காணாமப் போனதுக்கு சத்தியமா நான் காரணம் இல்ல ஆதிரா..!!" "ம்ம்..!! இ..இப்போ தெரியுது..!!"

 "குறிஞ்சியைவிட.. குடும்பமும், குடும்ப மானமும் எனக்கு ரொம்ப முக்கியம் ஆதிரா.. அதான் அப்படிலாம் நடந்துக்கிட்டேன்..!! நான் குடும்பம்னு சொன்னது.. உன்னை, தாமிராவை, சிபியை.. எல்லாரையும் சேர்த்துதான்..!!" "பு..புரியுதுத்தான்..!!" " எ..எனக்கு வேற என்ன சொல்றதுன்னு தெரியல..!! உனக்கு நான் ஏதாவது செய்யணும்னா சொல்லு.. செய்றேன்..!!" ஆதிரா பதிலேதும் சொல்லவில்லை.. அமைதியாகவே இருந்தாள்..!!

எல்லாரையும் எடுத்தெறிந்து பேசுவதோ, கோபம்தோய்ந்த வார்த்தைகளை கொப்பளிப்பதோ.. எப்போதுமே முகிலனுக்கு எளிதான விஷயம்..!! இந்தமாதிரி ஒரு இக்கட்டான, இறுக்கமான சூழ்நிலையில்.. கனிவாக, கருத்தாக பேசுவதெல்லாம் அவனுக்கு கைவராத காரியம்..!! இப்போதும் அப்படித்தான்.. மனதில் தோன்றியதை வெளிப்படையாக கொட்டிவிட்டு, ஓரமாய் நகர்ந்துகொண்டான்..!!

 மைசூரில் இருந்து கிளம்பிய தணிகைநம்பி.. மேலும் சிறிது நேரத்தில் அகழிவீட்டை வந்தடைந்தார்..!! முகிலனின் குடும்பத்தினரை அவர் அங்கு எதிர்பார்த்திரவில்லை.. முதலில் சற்று திகைத்துப்போய்த்தான் நின்றார்.. பிறகு, எல்லோரையும் பார்த்து ஒரு வறண்ட புன்னகையை உதிர்த்தார்.. கரங்களை கூப்பி வணக்கம் செய்தார்..!!

பொங்கிவருகிற காட்டாற்று வெள்ளம், எதிர்ப்படுகிற பொடிப்பொடி தடைகளை எல்லாம், மூழ்கடித்து அழித்து செல்கிறது அல்லவா..?? அது மாதிரிதான்.. மகளுடைய வாழ்வில் நேர்ந்திருக்கிற பெருந்துயரம், உறவினர்களுடன் கொண்ட மனக்கசப்பை, தணிகைநம்பிக்கு மறந்துபோக வைத்திருந்தது..!! துக்கத்தில் பங்கெடுக்க வந்திருப்பவர்களை நன்றியுடன் பார்த்தவர்.. அழுதுகொண்டிருந்த மகளை நெருங்கி அன்பாக அணைத்துக் கொண்டார்..!!

 தணிகைநம்பி வேறொரு எண்ணத்துடன் அகழி வந்திருந்தார்.. மகளை உடனடியாக மைசூர் அழைத்து செல்வதுதான் அது..!! ஆதிராவிடம் அந்த எண்ணத்தை சொன்னபோது.. அவள் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை, முடியாதென மறுத்தாள்..!!




"இ..இல்லப்பா.. நான் அகழியை விட்டு வரமாட்டேன்..!!" "சொல்றதை கேளுமா.. இந்த ஊர் உனக்கு வேணாம்.. இங்க இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு சரியாப்படல..!! உனக்கும் ஏதாவது ஒன்னுன்னா.. என்னாலயும், உன் அம்மாவாலயும் தாங்கிக்கவே முடியாதுமா..!! அவளும் என்கூட கெளம்புறேன்னா.. உன்ன கையோட கூட்டிட்டு வந்துடுறேன்னு சொல்லித்தான் அவளை அங்கேயே விட்டுட்டு வந்தேன்..!! கெளம்புமா.. நாம போயிறலாம்..!!" 

"எப்படிப்பா..?? அவரை இப்படி இங்க தொலைச்சுட்டு.." "போலீஸ் இருக்காங்க.. திரவியம் இருக்கான்.. நம்ம மாப்ள இருக்காரு.. சிபியை அவங்க தேடிக்கண்டுபிடிப்பாங்க..!! இப்போதைக்கு உன்னோட பாதுகாப்புதான் எங்களுக்கு ரொம்ப முக்கியமா படுதுமா.. அது மைசூர்லதான் கெடைக்கும்.. வாம்மா.. போலாம்..!!" கனிவுடன் தணிகைநம்பி சொல்ல, முகிலனும் அவருடன் சேர்ந்துகொண்டு,

 "மாமா சொல்றது சரிதான்னு தோணுது ஆதிரா.. நீ இங்க இருக்குறது அவ்வளவு நல்லது இல்ல.. மாமாவோட மைசூர் கெளம்பு..!! சிபியை தேடுறதை நாங்க பாத்துக்குறோம்..!!" என்று ஆதிராவுக்கு அறிவுறுத்தினான். "இல்லத்தான்.. என் முடிவை நான் மாத்திக்கிறதா இல்ல..!!" உறுதியாக மறுத்தாள் ஆதிரா. "பிடிவாதம் பிடிக்காத ஆதிரா..!!" "இது பிடிவாதம் இல்லத்தான்.. வைராக்கியம்..!!

அகழி வர்றதுல அவருக்கு சுத்தமா இஷ்டம் இல்ல.. வேணாம் வேணாம்னு எவ்வளவோ சொன்னாரு..!! அதெல்லாம் கொஞ்சம்கூட காதுகுடுத்து கேட்காம.. அடம்புடிச்சு அவரை இங்க கூட்டிட்டு வந்தேன்..!! அப்படி கூட்டிட்டு வந்து.. இப்படி இந்த குறிஞ்சிட்ட அவரை பறிகுடுத்துட்டு.. நான் மட்டும் இங்க இருந்து கெளம்ப எனக்கு மனசு இல்ல..!! என்ன ஆனாலும் சரி.. அவர் இல்லாம அகழியை விட்டு ஒரு அடிகூட நான் எடுத்து வைக்க மாட்டேன்..!!" ஆதிரா தீர்க்கமாக சொல்ல, அவளையே திகைப்பாக பார்த்தனர் தணிகைநம்பியும், முகிலனும்..!!

அவளது வார்த்தைகளில் தெரிந்த உறுதி.. அவள் வரமாட்டாள் என்று உரக்க சொல்லின..!! அதை புரிந்துகொண்ட தணிகைநம்பியும், இப்போது சற்றே தளர்வான குரலில் சொன்னார்..!! "எ..என்னம்மா ஆதிரா.. இப்படி சொன்னா அப்பா என்ன செய்றது..?? ஒருவருஷம் முன்னாடி தாமிரா.. இப்போ சிபி..!! எங்களுக்குன்னு மிஞ்சி இருக்குறது நீ மட்டுந்தானம்மா..?? உன்னை பத்திரமா பாத்துக்கனும்னு இந்த அப்பா நெனைக்கக்கூடாதா..??"

 "என்னை புரிஞ்சுக்கங்கப்பா.. ப்ளீஸ்..!! அந்த குறிஞ்சி எங்கிட்ட விளையாடுறா.. எங்கிட்ட இருந்து என்னவோ எதிர்பாக்குறா.. அது என்னன்னு தெரிஞ்சுக்கணும்..!! எனக்கு இன்னும் நெறைய கேள்விகளுக்கு விடை தெரியலப்பா.. அதெல்லாம் தெரிஞ்சுக்குற வரைக்கும் இங்கிருந்து நான் நகர்றதா இல்ல..!!" "எ..என்னம்மா சொல்ற நீ..?? எனக்கு புரியல..!!"

 "தாமிராவுக்கு என்னாச்சுன்னு இன்னும் சரியா தெரியலப்பா.. மணிமாறன்தான் காரணமா இல்ல குறிஞ்சியான்னு இன்னும் தெளிவா புரியல..!! ஒருவேளை குறிஞ்சியா இருந்தா.. அவ மேல அவ்வளவு நல்ல அபிப்ராயம் வச்சிருந்தவ நம்ம தாமிரா.. குறிஞ்சிக்கு நடந்த கொடுமையை இந்த உலகத்துக்கு சொல்லனும்னு நெனச்சவ.. அப்படிப்பட்ட தாமிராவை ஏன் அந்தக்குறிஞ்சி தூக்கிட்டு போகணும்..?? தங்கச்சியை தூக்கிட்டு போனவ.. நான் ஒரு கஷ்டத்துல இருக்குறப்போ என்னை ஏன் வந்து காப்பாத்தணும்..??

என்னை காப்பாத்தினவ.. அடுத்தநாளே என் புருஷனை ஏன் தூக்கிட்டு போகணும்..??"
 "..............................."

 "எனக்கு எதுவும் புரியலப்பா.. எதுவும் புரியல..!! எவ்வளவோ யோசிச்சும் இந்த கேள்விக்குலாம்.." சொன்னதை முடிக்காமலே பட்டென பாதியில் நிறுத்தினாள் ஆதிரா.. அவளுடைய மூளை திடீரென எதையோ கூர்மையாக யோசிக்க ஆரம்பித்தது..!! இரண்டு நாட்களுக்கு முன்பாக, இதே மாதிரியான ஒருகேள்வியை அவள் கேட்டபோது, அதற்கு செம்பியன் சொன்ன பதில் இப்போது ஞாபகத்துக்கு வந்தது..!!

 
"இதுதான் பேய், இப்படித்தான் ஆவிகள்'னு.. நம்மால அவ்வளவு ஈசியா எந்த முடிவுக்கும் வந்துட முடியாது..!! மனுஷங்களோட மனநிலைமை, குணாதிசயம், நியாயதர்மம்லாம்.. ஆவிகளுக்கு பொருந்தாது ஆதிரா.. அதனாலத்தான் அதை அமானுஷ்ய சக்தின்னு சொல்றோம்..!!

பேய்ங்க எந்த நேரத்துல எதை நெனைக்கும், என்ன பண்ணும்னு.. எப்படி நம்மால உறுதியா சொல்ல முடியும்..?? ஆவிகளோட நியாயம் அதுகளுக்குத்தான் புரியும்.. நாம புரிஞ்சுக்கணும்னு நெனைச்சா.. அது ரொம்ப கஷ்டம்..!!"

 அது ஞாபகத்துக்கு வந்ததுமே ஆதிராவின் முகத்தில் ஒரு சின்ன மாற்றம்.. அத்தனை நேரம் என்ன செய்வது என்றே விளங்காமல் இருண்டு போயிருந்த அவளது முகத்தில், லேசான ஒரு வெளிச்சக் கீற்று..!!

மகளின் முகமாற்றத்தை கவனித்த தணிகைநம்பி, "என்னம்மா.. என்னாச்சு..??" என்று கேட்க, ஆதிரா என்ன நினைத்தாளோ, "நா..நான்.. நான் செம்பியன் அங்கிளை பாக்கணும்ப்பா..!!" என்றாள். அவளது குரலில் இப்போது ஒரு புதுவித நம்பிக்கை சிறிதளவு கலந்திருந்தது.



No comments:

Post a Comment