Tuesday, December 16, 2014

கண்ணாமூச்சி ரே ரே - தமிழில் ஒரு திரில் தொடர் - பாகம் - 14


அடுத்தநாள் காலை எட்டு மணிக்கே கதிர் ஆதிராவின் வீட்டுக்கு வந்தான்.. ஹாலில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த சிபி, அவனை புன்னகையுடன் வரவேற்றான்..!!

 "ஹாய் கதிர்.. எப்படி இருக்க..??" "நல்லா இருக்கேங்க.. நீங்க எப்படி இருக்கீங்க..??" "எனக்கென்னப்பா.. நல்லா இருக்கேன்..!! என்ன.. காலாங்காத்தாலேயே வீட்டுக்கு வந்திருக்குற..??" சிபி கேட்டுவிட்டு கதிரை கேள்வியாக பார்க்க, அவன் இப்போது சற்று தடுமாற்றமாகவே பதில் சொன்னான்.

 "ஆ..ஆதிரா.. ஆதிராதான் வர சொல்லிருந்தாங்க..!!" கதிர் அவ்வாறு சொன்னதுமே சிபியின் முகம் சட்டென சுருங்கிப் போனது.. அதே நேரத்தில்.. வெளியே கிளம்ப தயாராகி, படியிறங்கி வந்த ஆதிராவை காண நேர்ந்ததும்.. அவனுடைய எரிச்சல் அதிகமாகவே செய்தது.. மனைவியின் முகத்தை ஏறிட்டு முறைத்தான்..!!




"சொன்னா கேக்க மாட்டேல..??" என்று சன்னமான குரலில் முணுமுணுத்தான்.. ஆதிரா அவனுக்கு பதில் சொல்லவில்லை.. 'ப்ளீஸ்த்தான்' என்று பார்வையாலேயே கெஞ்சினாள்..!! "ஹ்ம்.. என்னவோ பண்ணிட்டு போ..!!" என்று சலிப்பாக சொல்லிவிட்டு சிபி செய்தித்தாளுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டான்..!!

ஆதிராவுக்கு அதுவே போதுமானதாக இருந்தது.. கதிரை ஏறிட்டு 'வாங்க.. போலாம் போலாம்..' என்று சைகையால் சொன்னவாறே வாசலை நோக்கி நடந்தாள்..!! "அ..அப்போ நான் வர்றேன்..!!" என்று கதிர் சொன்னதற்கு சிபியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. தான் செய்கிற காரியங்களில் தனது கணவனுக்கு உடன்பாடு இல்லை என்பது ஆதிராவுக்கு தெளிவாக புரிந்தது.. நேற்று இரவு விஷயத்தை சொன்னபோதே 'ஏன் இந்த தேவையில்லாத வேலைலாம்..??' என்று எரிச்சல் பட்டுக்கொண்டான்..!!

ஆனால்.. அதையும் மீறி.. தங்கை மீது அவளுக்கிருந்த அன்பும், அவளுக்கு என்னவானது என்று உறுதிப் படுத்திக்கொள்கிற ஆர்வமும்.. அவளை அந்த காரியங்களை செய்ய சொல்லி உந்தித்தள்ளின..!! அதுவுமில்லாமல்.. சும்மாவே அவள் இன்று செல்லவிருக்கிற இடத்துக்கு வர சிபி பிரியப்படமாட்டான் என்பது அவளுக்கு முன்கூட்டியே தெரியும்.. அதனால்தான் கார் ஓட்ட கதிரை துணைக்கு அழைத்திருந்தாள்..!!

 மலைப்பாதையில் பயணம் புரிவதற்கு ஏற்றது என.. பல வருடங்களுக்கு முன்பு தணிகைநம்பி வாங்கிய ஜீப் அது..!! ஆதிராவின் குடும்பம் அகழியில் இருந்து சென்றபிறகு.. அதிகமாக உபயோகிக்கப்படாமல் கொட்டாரத்திலேயே நின்றிருக்கும்..!! அதில்தான் இப்போது ஆதிராவும் கதிரும் கிளம்பினார்கள்.. ஆரம்பத்தில் சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் அமைதியாகவே இருந்தனர்..!!

 ஆதிரா குறிப்பிட்ட அந்த தடுப்பூசி மருந்து தொழிற்சாலை.. அகழியின் இன்னொரு மூலையில் இருக்கிறது.. அந்த தொழிற்சாலையை அடைய அகழியின் முக்கிய வீதிகளை கடந்துதான் செல்லவேண்டும்..!! அந்த பாதையிலேயே.. ஊருக்குள் நுழைவதற்கு முன்பாகவே.. ஒரு மலைச்சரிவின் உச்சியில் தனியாக நின்றிருந்த, அந்த சிதலமடைந்த வீட்டின் வழியே ஜீப் சென்றது.. நூறு வருடங்களுக்கு முன்பாக குறிஞ்சி வாழ்ந்த வீடு.. இப்போதெல்லாம் அருகில் செல்வதற்கே பலரும் அஞ்சி நடுங்குகிற வீடு..!!


 அந்த வீடு பார்வைக்கு வந்ததுமே.. ஆதிராவுக்கு பழைய ஞாபகங்களும் மனதுக்குள் வந்து, பளிச் பளிச்சென்று மின்னலாய் வெட்டின..!! ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தின் நினைவுகள்..!! "Game or Shame..??" - கைவிரல்களுக்கு நடுவே கண்சிமிட்டி கேட்டாள் தாமிரா. எந்தப் பொருளுக்காக அந்தப் போட்டி என்பது கூட ஆதிராவுக்கு இப்போது ஞாபகம் இல்லை.

 "குறிஞ்சி வீட்டுக்குள்ள நொழைஞ்சு.. சுவத்துல பேர் எழுதி வச்சுட்டு வரணும்.. நீ உன் பேரை.. நான் என் பேரை..!! "Game or Shame..??" - தாமிரா கூலாக சொல்ல, ஆதிராவோ பதறினாள். இருட்ட ஆரம்பிக்கிற சமயத்தில் குறிஞ்சி வீட்டுக்கு முன்பாக வந்து நின்றனர்.. இளங்குமரிகள் இருவரும்..!! ஆளுக்கொரு கையில் நீளமான, தடியான ஆணி ஒன்றை பற்றியிருந்தனர்.. ஆதிராவின் கையிலிருந்த ஆணி மட்டும் நடுக்கத்தில் கிடுகிடுவென ஆடியது..!! "வேணாண்டி.. போயிறலாம் வா..!!" - விதிர்விதிர்த்துப்போய் ஆதிரா சொல்லிக் கொண்டிருக்கையிலேயே.. வில்லிலிருந்து கிளம்பிய அம்பாக புறப்பட்டாள் தாமிரா..

வீட்டை நோக்கி விடுவிடுவென ஓடினாள்..!! "ஏய்.. நில்லுடி..!!" "ஒன்னும் ஆகாது வாடி..!!!" - தங்கையின் குரலில் சற்று தைரியம் பெற்று ஆதிராவும் அவள் பின்னால் மூச்சிரைக்க ஓடினாள். வீட்டை முற்றிலும் மூடுமாறு சுற்றிலும் அடித்து வைக்கப்பட்ட மரத்தகடுகளில் ஒன்றை பெயர்த்தெடுத்தாள் தாமிரா.. உருவான சிறு இடைவெளியில் உடலை திணித்து உள்ளே விழுந்தனர் உடன்பிறப்புகள் இருவரும்..!! மரத்தகடு திறப்பின் வழியாக உள்ளே சிந்திய சிறு ஒளிக்கற்றை தவிர.. வீடு மொத்தத்தையும் அடர் இருள் கவ்வியிருந்தது..!!

உள்ளே விழுந்த வேகத்தில் இருவரும் எழுந்து இருட்டுக்குள் ஓடினர்..!! மூன்றடி உயரத்திற்கு குட்டையாக இருந்த, மங்கலான வெளிச்சம் படர்ந்த மண்சுவற்றில்.. ஆதிராவும், தாமிராவும் அவரவர் பெயர்களை ஆணி கொண்டு எழுத முனைந்தனர்..!! தாமிராவின் ஆணி மட்டும் 'தா' எழுதுவதற்குள் கையிலிருந்து நழுவி இருட்டுக்குள் விழுந்தது.. அவளது விருப்பப்படியே.. அவளுடைய திட்டப்படியே..!! தங்கை இருட்டுக்குள் ஆணியை தேடி முடிப்பதற்குள்.. தனது பெயரை சுவற்றில் பொறித்து முடித்தாள் ஆதிரா.. அந்த போட்டியில் வென்றாள்..!!

 சிறிது நேரத்தில் குறிஞ்சி வீட்டை விட்டு வெளியே வந்தபிறகு.. "என்னடி இது..??" குழப்பமாக கேட்ட ஆதிராவிற்கு, "கீழ ஆணி தேடினேன்ல.. அப்போ இது கைல மாட்டுச்சு.. மண்ணுல புதைச்சு வச்சிருந்தாங்க.. என்னன்னு பாக்கலாம்னு எடுத்துட்டு வந்துட்டேன்..!!" கைகள் விரித்து காட்டினாள் தாமிரா. அந்த கைகளில்..

சில மாந்திரீக சமாச்சாரங்கள்.. யந்திரம் எனப்படுகிற துத்தநாகத்தாலான தகடு.. சிதைந்து பிரிந்திருந்த சிவப்புநிற பை.. அந்தப்பைக்குள் ஒரு சிறிய மண்சட்டி.. அந்த மண்சட்டிக்குள் வெண்துணி சுற்றிக்கொண்ட ஒரு மரப்பாவை.. ஆற்றுமணல்.. எரிகாட்டு சாம்பல்.. இன்னும்.. அழுகிப்போன ஏதோ உணவுப்பொருட்கள்.. காய்ந்துபோன சில மூலிகை செடிகள்..!! குமட்டிக்கொண்டு வந்தது ஆதிராவுக்கு.. வாந்தியே எடுத்துவிட்டாள்..!! அதன்பிறகும் சில நினைவுகள் அவசர அவசரமாய் ஆதிராவின் மூளையில் பளிச்சிட்டன..!!

 "உன் பொண்ணு என்ன வேலை பண்ணிருக்கான்னு கேளு மாப்ளை.. அந்த தகடு புதைச்சு குறிஞ்சியை அடக்கிவைக்க நாங்க எவ்வளவு கஷ்டப்பட்ருப்போம் தெரியுமா..??" வீட்டுக்குள் நுழையாமல் வாசலில் நின்று கத்தினார் ஆதிராவின் மாமா மருதகிரி.. பூவள்ளியின் அண்ணன்..!! "செய்வியா.. இனிமே செய்வியா..??" தணிகைநம்பி பெல்ட்டால் விளாச.. "ஆஆஆ.. ஆஆஆ..!!" என்று தரையில் புரண்டு அலறி துடித்தாள் தாமிரா..!!

 "வேணாம்பா.. விட்ருங்கப்பா.. ப்ளீஸ்ப்பா.. பாவம்பா அவ..!!" பழி முழுதையும் தான் ஏற்றுக்கொண்டு அடிவாங்கிய தங்கைக்காக கண்ணீர் சிந்தினாள் ஆதிரா. அன்றுஇரவே.. அவர்களுடைய வீட்டுக்கு அடித்தளத்தில் இருக்கிற அந்த சுரங்க அறையில்.. அப்பாவிடம் அடிவாங்கிவிட்டு தாமிரா எப்போதும் அடைந்துகொள்கிற அந்த ரகசிய அறையில்.. அத்தனை அடிகளை வாங்கிய வேதனையை கொஞ்சம் கூட முகத்தில் காட்டாமல்.. அக்கா திருட்டுத்தனமாக எடுத்து வந்திருந்த சாப்பாட்டை அவசர அவசரமாக விழுங்கியவாறே.. "அம்மா இன்னைக்கு எனக்கு புதுப்பேர் வச்சிருக்காங்கக்கா.. கால் மொளைச்ச குட்டிச்சாத்தான்.. நல்லாருக்குல..??" என்று கண்சிமிட்டி சிரித்தாள் தாமிரா.

 பழைய நினைவுகளில் மூழ்கியவாறே ஆதிரா பயணித்துக் கொண்டிருக்கையில்.. "என்கூட வர்றது அவருக்கு பிடிக்கலையா..??" கதிர் திடீரென கேட்டதும், சட்டென நிகழ்காலத்துக்கு வந்தாள். "சேச்சே.. அப்படிலாம் இல்ல..!!" "அப்புறம்.. எதுக்கு அப்படி முறைச்சுட்டு இருந்தாரு..??" "அது வேற..!! ஆக்சுவலா.. இந்தமாதிரி ஸ்ட்ரெயின் பண்ணிக்க கூடாதுன்னு டாக்டர்ஸ் என்னை அட்வைஸ் பண்ணிருக்காங்க.. அதான்..!!"

 "ஓ..!!" "அதுமில்லாம.. சும்மாவே இவருக்கு முகில் அத்தானை பிடிக்காது.. இந்த விஷயத்தை பத்தி பேசப்போறேன்னதும் டென்ஷன் ஆய்ட்டாரு.. 'எதுக்கு தேவையில்லாத பிரச்சனை, அதுலாம் ஒன்னும் வேணாம்'னு சொன்னாரு..!! அதையும் மீறி உங்ககூட கெளம்பினதும் கொஞ்சம் கோவம்.. வேற ஒன்னுல்ல..!!

நீங்க ஒன்னும் ஃபீல் பண்ணாதிங்க.. நான் அவரை சமாளிச்சுக்குறேன்..!!" "ஹ்ம்ம்.. நான் ஒன்னு சொல்லட்டுமா..??" "சொல்லுங்க..!!" "எனக்குமே இது தேவை இல்லாததுன்னுதான் தோணுதுங்க ஆதிரா.. இப்போ போய் அவர்ட்ட பேசுறதால எந்த பிரயோஜனமும் இல்ல..!! அந்த முகிலன் ரொம்ப முரட்டுத்தனமான ஆளா இருக்காரு.. மூக்குக்கு மேல சுள்ளுன்னு கோவம் வருது..!! தாமிரா காணாமப்போன டைம்ல, இதைப்பத்தி நான் அவர்ட்ட பேசப்போய்.. எனக்கும் அவருக்கும் பெரிய சண்டை ஆய்டுச்சு..!!" "ஓ..!!" "உங்க அப்பாட்ட இதுபத்தி சொல்லலாம்னு நெனச்சேன்.. என் அம்மாதான் வேணாம்னு தடுத்துட்டாங்க..!!

அதுமில்லாம.. என்னதான் பேசிக்காம இருந்தாலும்.. நீங்கள்லாம் ஒரே குடும்பம்.. எப்படி இதை உங்கட்டயே வந்து சொல்றதுன்னு எனக்கு ஒரு தயக்கம்..!!" "ம்ம்.. புரியுது கதிர்..!!" ஜீப் இப்போது ஊருக்குள் நுழைந்து பயணித்தது.. காய்கறி மார்க்கெட்டுக்குள் மிதமான வேகத்தில் ஊர்ந்து சென்றது..!! சாலையோரமாக இருந்த அந்த பூக்கடையை பார்த்ததும் ஆதிராவுக்குல் மீண்டும் பழைய நினைவுகள்..!!

ஒருவருடத்திற்கு முன்பாக நடந்த அந்த சம்பவம்.. விபத்தின்போது தொலைந்துபோய் நேற்று கல்மண்டபத்தில் ஆதிராவுக்கு மீண்டும் ஞாபகத்துக்கு வந்த நினைவுகள்..!! இதோ.. இதே சாலையில்தான்.. ஆதிராவும் தாமிராவும் நடந்து சென்று கொண்டிருக்கையில்.. அதோ.. அதே பூக்கடையின் முன்பாகத்தான்.. காரில் வந்து வழிமறித்தான் முகிலன்..!!

அவசரமாக காரில் இருந்து இறங்கியவன்.. ஆத்திரமாக வந்து தாமிராவின் புஜத்தை பற்றினான்..!! "என்னடி நெனச்சுட்டு இருக்குற உன் மனசுல..??" என்று சீறினான். "ச்சீ.. கையை விடுங்க.. ஏன் இப்படி ரவுடி மாதிரி பிஹேவ் பண்றீங்க..??" அவனிடமிருந்து கையை உதறி விலகிய தாமிரா பதிலுக்கு சீறினாள்.





"யாருடி ரவுடி..?? அப்படியே அறைஞ்சு பல்லை உடைச்சுடுவேன்..!!" தாமிராவை அறைய கையை உயர்த்தினான் முகிலன். "ஐயோ.. என்னத்தான் இது.. விடுங்க..!!" எதுவும் புரியாத ஆதிரா இடையில் புகுந்து தடுத்தாள். "ஏய்.. நீ வெலகு.. உனக்கு எதுவும் தெரியாது..!!" முகிலன் ஆதிராவையும் முறைத்தான் "என்னாச்சுனு சொல்லுங்க.. எதுக்கு அவ மேல கோவப்படுறீங்க.. அப்படி என்ன பண்ணுனா அவ..??" "என்ன பண்ணுனா என்ன பண்ணிட்டு இருக்கான்னு உன் தங்கச்சியையே கேளு..!!

ஏற்கனவே இவ பண்ணின காரியத்தால அந்த குறிஞ்சி அஞ்சு வருஷமா இந்த ஊரை ஆட்டி படைச்சுட்டு இருக்குறா..!! அது பத்தாதுன்னு இப்போ.. குடும்பமானத்தை மொத்தமா குழி தோண்டி புதைக்க கெளம்பிட்டா இந்த குட்டிக்கழுதை..!!" சீறிய முகிலனுக்கு, இப்போது தாமிரா சூடாக பதில் சொன்னாள். "ம்க்கும்.. பொல்லாத குடும்பமானம்..!!! ஒரு அப்பாவிப் பொண்ணை கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம உயிரோட கொளுத்துனதுக்கு காரணமே அந்த குடும்பமானம்தான..??

அப்படி ஒரு கொடூரமான, கேவலமான குடும்பமானத்தை பத்தி எனக்கு எந்த அக்கறையும் இல்ல..!! 'குடும்பமானம் குடும்பமானம்'ன்னு சொல்லி.. குறிஞ்சி பத்தின உண்மையை மூடி மறைச்சது போதும்..!! உண்மை என்னன்னு உலகத்துக்கு சொல்லாம நான் விடமாட்டேன்..!!" - தாமிராவின் பதிலில் முகிலன் மூர்க்கமானான். "எதுத்தாடி பேசுற.. எதுத்தா பேசுற.. கொழுப்பெடுத்த சிறுக்கி..!! என்ன பண்றேன் பாரு உன்னை..??" என்று அவளை அடிக்க பாய்ந்தான்.

 "ஐயோ.. விடுங்கத்தான் ப்ளீஸ்..!!" அவனை சமாளிக்க ஆதிரா திணறினாள்..!! ஒருவழியாக.. விஷயம் முழுதாக புரியாமலே.. 'நான் அவகிட்ட பேசி புரிய வைக்கிறேன்.. நீங்க கெளம்புங்க.. உங்களை கையெடுத்து கும்பிடுறேன்.. ப்ளீஸ்த்தான்.. ' என்று சொல்லி.. முகிலனை சமாதானம் செய்து அனுப்பி வைப்பதற்குள் பெரும்பாடு பட்டுவிட்டாள்..!!

 "இந்த உருட்டல் மெரட்டல்லாம் உங்கவீட்டு வேலைக்காரங்கட்ட வச்சுக்கங்க.. இதுக்குலாம் பயப்படுற ஆள் நான் இல்ல.. நான் நெனச்சத முடிக்காம விட மாட்டேன்.. என்ன பண்றீங்கன்னு பாக்கலாம்..!!" அவன் செல்லும்வரை பதிலுக்கு பதில் பேசிக்கொண்டேதான் இருந்தாள் தாமிரா. "அந்தக்கட்டுரை எப்படி வெளில வருதுன்னு பாக்குறேன்..!! சொல்லி வை அவகிட்ட..!! பொம்பளையா அடக்கஒடுக்கமா பொத்திக்கிட்டு இருக்க சொல்லு.. அப்படியே கோழிக்குஞ்சை திருகுற மாதிரி கழுத்தை திருகிப் போட்ருவேன்..!!" தீவிரமான குரலில் ஆதிராவிடம் எச்சரிக்கை செய்துவிட்டே காரில் கிளம்பினான் முகிலன்.

 அன்று வீட்டிற்கு சென்றதும், அக்காவிற்கு விஷயத்தை விளக்கி சொன்னாள் தாமிரா..!! "குறிஞ்சியை பத்தி இந்த ஊர்க்காரங்க சொல்றதுலாம் பொய்க்கா.. அவ ஒரு பாவப்பட்ட ஜீவன்..!! அந்தஸ்து, குடும்ப கௌரவம்ன்ற பேர்ல.. நூறு வருஷம் முன்னாடி.. நம்ம குடும்பத்தை சேர்ந்தவங்க அந்தப்பொண்ணுக்கு ஒரு பெரிய கொடுமையை பண்ணிருக்காங்க..!!" தனது மேஜை ட்ராவில் இருந்து ஒரு பழுப்பேறிய காகிதைக் கற்றையை எடுத்து தூக்கிப் போட்டாள்..!!

 "இதை படிச்சு பாரு.. நான் சொல்றது உண்மைன்னு புரியும்..!!" "என்ன இது..??" "நம்ம தாத்தாவோட அப்பா அந்தக்காலத்துல எழுதின டைரி இது.. குறிஞ்சியோட உண்மைக்கதை அவருக்கு எப்படியோ தெரிஞ்சிருக்கு.. டைரில அங்கங்க அந்தக்கதையை கிறுக்கி வச்சிருக்காரு..!! இத்தனை நாளா.. தாத்தா வீட்ல.. யாருக்கும் தெரியாம பழைய பெட்டிக்குள்ள கெடந்திருக்கு.. போன வாரந்தான் என் கைல மாட்டுச்சு..!!" முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருந்த தாமிரா.. அடுத்ததாக ஆராய்ச்சி பட்டப்படிப்பை மேற்கொள்ள நினைத்திருந்த சமயம் அது..!!

தனது ஆராய்ச்சிக்கு தகுந்த கருப்பொருளை தீர்மானிக்க.. அவள் தடுமாறிக் கொண்டிருந்த வேளையில்தான்.. அவளது கையில் இந்த குறிப்பேடு சிக்கியது..!! தனது ஆராய்ச்சியின் கருவாக குறிஞ்சியை முடிவு செய்தாள்.. அதற்கான வேலைகளில் முழுமூச்சாக இறங்கியிருந்தாள்..!! தங்கை தந்த காகிதக் கற்றைகளை படித்து முடிக்க.. ஆதிராவுக்கு இரண்டு மணி நேரம் ஆனது..!! அதன் பிறகுமே.. தாமிரா சொன்ன விஷயங்களில் அவளுக்கு அவ்வளவு நம்பிக்கை பிறக்கவில்லை..!!

 "ஹேய்.. இது ஏதோ சும்மா கதை மாதிரி இருக்குடி.. நெஜம் மாதிரி தோணல.. நம்ம பாட்டனாரோட கற்பனையா கூட இருக்கலாம்..!!" "ப்ச்.. இல்லக்கா.. உனக்கு புரியல..!! இந்தக்கதையையும் நெஜத்தையும் மேட்ச் பண்ணிப்பாரு.. உனக்கு க்ளியரா புரியும்..!! பேர்லாம் பாரு.. அகழியை முதலைப்பள்ளம்னு மாத்திருக்காரு.. குறிஞ்சியை குறவஞ்சின்னு மாத்திருக்காரு..!!" "ம்ம்.. அது புரியுது..!!" "இன்னொன்னு கவனி.. அந்த வில்லனோட பேரு புவனபதி.. அவர் பையன் பேரு தீர்த்தகிரி..!!"

 "அதுல என்ன மேட்டர் இருக்கு..??" "பேரை பாதி பாதியா கட் பண்ணி மிக்ஸ் பண்ணிருக்காருக்கா.. அவங்களோட உண்மையான பேரு புவனகிரி, தீர்த்தபதி..!! புவனகிரி யார்னு தெரியும்ல.. நம்ம பாட்டனாரோட தாத்தா.. சூழ்ச்சியோட முக்கியப்பங்கு அவருக்குத்தான்.. மீதிப்பங்கு அவரோட பையனுக்கு..!! அந்த ரெண்டு பேரோட முடிவு பத்தி கதைல என்ன எழுதிருக்குன்னு பாரு.. அந்த வில்லன் ஒரு பாழடைஞ்ச மண்டபத்துல ரத்தம் கக்கி செத்துப்போறான்.. பத்து பதினஞ்சு நாள் கழிச்சு அழுகிப்போய் அவர் உடலை கண்டு பிடிக்கிறாங்க..!!

அவரோட பையன் எங்க போனான்னே தெரியாம.. ஒருநாள் திடீர்னு காணாம போயிர்றான்..!! நம்ம கொள்ளுப்பாட்டி.. நம்ம பரம்பரை பத்தி சொன்ன கதைல.. இதெல்லாம் சொல்லிருக்காங்க.. ஞாபகம் இருக்கா உனக்கு..??" "ம்ம்ம்..!!"
"இப்போ புரியுதா..?? ஏதோ மனசாட்சி கேக்காமத்தான் அவர் இந்தக்கதையை எழுதிருக்காருக்கா.. ஆனா பயந்து பயந்து எழுதிருக்காரு.. யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதுன்னு கவனமா எழுதிருக்காரு.. யார் கண்ணுலயும் இதை அவர் காட்டிருக்க மாட்டார்னு நெனைக்கிறேன்..!!"

 "ம்ம்ம்..!!"

 "இது மட்டும் இல்லக்கா.. இன்னும் நெறைய விஷயம் கலக்ட் பண்ணிட்டு இருக்குறேன்.. பண்ணப்போறேன்.. என்ன நடந்ததுன்னு தெள்ளத்தெளிவா ஆதாரத்தோட ஆராய்ச்சி கட்டுரையா ரிலீஸ் பண்ணப் போறேன்..!! குறிஞ்சியோட உண்மைக்கதை என்னன்னு.. நூறுவருஷம் கழிச்சு எல்லாருக்கும் தெரிய வைக்கப் போறேன்..!!" தாமிரா ஆவேசமாக பேசினாள். 

"ஆ..ஆனா.. இதுல நம்ம குடும்ப கௌரவம் அடங்கி இருக்கே தாமிரா..?? இந்தக்கட்டுரை வெளில வந்தா.. நம்ம குடும்பத்தை பத்தி எல்லாரும் தப்பா பேச மாட்டாங்களா..??" ஆதிரா தயங்கி தயங்கித்தான் கேட்டாள். தாமிரா கொஞ்சநேரம் அவளுக்கு பதில் ஏதும் சொல்லவில்லை.. அமைதியாக இருந்தாள்.. பிறகு எங்கேயோ வெறித்து பார்த்துக்கொண்டு.. கூர்மையாக அந்தக் கேள்வியை கேட்டாள்..!!

 "படிக்கிறப்போவே நெஞ்சு பதர்ற ஒரு கொடுமையை.. பணத்திமிர்ல சூழ்ச்சியா செஞ்சுமுடிச்ச ஒரு அக்கிரமத்தை.. ஒரு அப்பாவிப் பொண்ணை, ஒரு ஊரே சேர்ந்து கொளுத்தின கொடூரத்தை.. அந்த உண்மையை இத்தனை நாளா மூடிமறைச்ச அநியாயத்தை.. குடும்ப கௌரவம் பாத்துக்கிட்டு இன்னும் மூடிமறைக்க சொல்றியாக்கா..?? சொல்லுக்கா.. சொல்லு..!!" தாமிராவின் கேள்வியில் ஆதிரா வாயடைத்துப் போனாள்.. பதில் பேச வார்த்தையற்றவளாய் தலையை குனிந்து கொண்டாள்..!!

 பழைய நினைவுகளில் மூழ்கி திளைத்தவாறே.. தடுப்பூசி மருந்து தொழிற்சாலைக்கு வந்து சேர்ந்தாள் ஆதிரா.. உள்ளே வர மறுத்த கதிரை கட்டயாப்படுத்தி அழைத்து சென்றாள்..!! ஆதிராவை அடையாளம் கண்டுகொண்ட தொழிலாளர்கள் அவளுக்கு வணக்கம் செய்தனர்.. எல்லோருக்கும் பதில் வணக்கம் செய்தவாறே உற்பத்திக் கூடத்திற்குள் நுழைந்தாள்..!! பணிவாக வணங்கிய சூபர்வைசரிடம் முகிலனை பார்க்கவேண்டும் என்றாள்..

அவர் உடனே இவர்களுக்கு முன்பாக விடுவிடுவென நடந்து, முகிலனின் அறைக்கு அழைத்து சென்றார்..!! குளிரூட்டப்பட்ட அகலமான அறை அது.. மரத்தடுப்பால் இரண்டாக பிரித்திருந்தனர்..!! இவர்கள் இருவரையும் வெளியே அமரவைத்துவிட்டு.. சூபர்வைசர் மட்டும் உள்ளே சென்று முகிலனிடம் ஆதிராவின் வருகையை தெரிவித்தார்..!! சில வினாடிகளிலேயே முகிலன் அவனது பிரத்தியேக அறையில் இருந்து வெளிப்பட்டான்..

முகத்தில் ஒரு புன்னகையுடன்.. "வீட்டுக்கு வந்திருக்கலாம்ல ஆதிரா.. ஆபீசுக்கு வந்திருக்குற..??" என்று இயல்பாகத்தான் வரவேற்றான்..!! பிறகு கதிரை கவனித்ததும்.. சட்டென சற்று முகம் சுருங்கியவன்.. "என்ன சாப்பிடுற..??" என்றபோது குரலில் ஒரு இறுக்கம். "இ..இல்ல.. ஒன்னும் வேணாம்..!!" ஆதிரா அவ்வாறு சொல்கையிலே ஏதோ முக்கியமான விஷயம் என்று புரிந்துகொண்டான். 

"என்ன மேட்டரு..??" என்று முறைப்பாக கேட்டான். வந்திருந்த விஷயத்தை தயங்கி தயங்கி ஆதிரா சொல்லிமுடிக்க.. முகத்தை உர்ரென வைத்தவாறே முகிலன் அதை கவனமாக கேட்டுக்கொண்டான்..!! அவ்வப்போது கதிரின் பக்கமாக திரும்பி அவனை எரித்து விடுவதுபோல பார்த்தான்..!! ஆதிரா பேசி முடித்தபிறகும்.. சிலவினாடிகள் எதுவும் பேசாமல் அவளுடைய முகத்தையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான்..!!

பிறகு.. கூலாக கேட்டான்.. "இப்போ என்ன தெரிஞ்சுக்கணும் உனக்கு..??" "தாமிராவுக்கு உங்களால எதும் ஆபத்து வந்ததான்னு தெரிஞ்சுக்கணும்..!!" "ஹாஹா.. என்ன சொன்ன.. அவளுக்கு என்னால ஆபத்தா.. செம காமடி..!! அவளால இந்த ஊருக்கு வந்த ஆபத்தை சரி பண்றதுக்கு நான் இங்க தெனந்தெனம் முட்டி மோதிக்கிட்டு இருக்கேன்.. நீ என்னடான்னா.. ஹாஹா..!!"

 "என்ன சொல்றீங்க.. அவளால இந்த ஊருக்கு என்ன ஆபத்து வந்துச்சு..??" "என்ன.. அதுவும் உனக்கு மறந்துடுச்சா..?? அஞ்சு வருஷம் முன்னாடி குறிஞ்சி வீட்டுக்குள்ள போய்.. தாமிரா அந்த தகட்டை வெளில எடுத்தது உனக்கு ஞாபகம் இல்ல..?? அம்பது வருஷத்துக்கு மேல குறிஞ்சி இந்த ஊர்ல அட்டகாசம் பண்ணிட்டு இருந்தா.. அதுக்கப்புறம் எங்கப்பா எடுத்துக்கிட்ட முயற்சியால அவ ஆவியை இருவது வருஷமா அடைச்சு வச்சிருந்தோம்.. இந்த ஊரும் நிம்மதியா இருந்துச்சு..!! இருவது வருஷமா இருந்த அந்த அமைதியை.. அஞ்சு வருஷம் முன்னாடி அஞ்சே நிமிஷத்துல உன் தங்கச்சி காலி பண்ணிட்டா..!!

இப்போ.. திரும்பவும் குறிஞ்சி அவ ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டா.. அஞ்சு வருஷத்துல எத்தனை பேர் காணாம போயிருக்காங்க தெரியுமா..?? அதுக்கெல்லாம் காரணம் யாரு..?? தாமிராதான்..!! மூடி வச்ச ஆவியை தெறந்து விட்டா.. அது அவளையே காவு வாங்கிடுச்சு..!!" முகிலனின் பேச்சு ஆதிராவுக்கு எரிச்சலை தந்தது. "சும்மா இருங்கத்தான்.. தானா நடக்குறதுக்குலாம் தாமிரா மேல பழியை போடாதீங்க..!!

அந்த இத்துப்போன தகட்டை வெளில எடுத்ததுக்கு.. இவ்வளவு பெரிய பேச்சுலாம் பேசாதிங்க..!! நீங்கவேணா இந்த மாந்திரிகம், பில்லி சூனியக் கருமாந்திரத்தலாம் நம்பலாம்.. கண்டகண்ட மந்திரவாதி பேச்சை கேட்டுக்கிட்டு கண்ணுமண்ணு தெரியாம ஆடலாம்.. இதெல்லாம் நான் நம்பமாட்டேன்..!!

அந்த மந்திரவாதிக பேச்சை கேட்டு தாமிராவை ஏதாவது பண்ணிருப்பிங்களோன்னு கூட எனக்கு சந்தேகமா இருக்கு..!!" ஆத்திரத்தில் ஆதிரா அவ்வாறு ஆவேசமாக சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, "கொழந்தை..!!" என்று ஒருகுரல் அவளை இடையூறு செய்தது.. ஆதிரா உடனே தலையை திருப்பி குரல் வந்த திசையை பார்த்தாள்..!! முகிலனின் பிரத்தியேக அறை வாசலில் தாடி நீண்டிருந்த அந்த ஆள் நின்றுகொண்டிருந்தார்.. அகழி வந்த முதல்நாளன்று முகிலனின் வீட்டில் பூஜை நடத்திக் கொண்டிருந்த அதே ஆள்.. மாந்திரிகவாதி..!!

அத்தனை நேரம் முகிலனின் அறைக்குள் அமர்ந்து வெளிப்பக்க பேச்சை கேட்டுக்கொண்டிருந்தவர்.. இப்போது வெளியே எழுந்து வந்திருந்தார்..!! அறைவாசலில் நின்று தலையை ஒருபக்கமாக சாய்த்து ஆதிராவையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தார்.. பிறகு மெல்ல நடந்து அவளை நெருங்கினார்..!! "உன் பேர் என்னம்மா கொழந்தை..??" என்று கேட்டார். "....................." ஆதிரா சற்றே திகைத்துப்போய் பேச்சு வராமல் நின்றிருந்தாள்.

 "கேக்குறேன்ல.. சொல்லும்மா.. உன் பேர் என்ன..??" "ஆ..ஆதிரா..!!" தடுமாற்றமாக சொன்னாள் ஆதிரா. "ஹ்ம்ம்.. ஆதிரா.. நல்ல பேர்.. கண்ணகிக்கு நிகரான கற்புக்கரசி.. புருஷன் உசுரை காப்பாத்த தீயில பாஞ்சவ.. சரியா..??" "....................." "ஆதிராக்கண்ணு தப்பா எடுத்துக்கலைனா நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா..??" "சொ..சொல்லுங்க..!!" "நமக்கு புரியலைன்றதுக்காக ஒரு விஷயத்தை பத்தி தப்பா சொல்றது..

ரொம்ப ரொம்ப தப்பு..!!" "....................." "மனுஷங்கள்ல நல்லவங்க கெட்டவங்க இருக்குற மாதிரிதான்.. மாந்திரிகத்துலயும் நல்லது கெட்டது இருக்குது..!! அதுக்காக மாந்திரிகமே வேணான்னு சொல்லிடுறதா..?? மனுஷங்களே வேணாம்னு உலகத்தை அழிச்சுடலாமா..?? ம்ம்..??" கேட்டுவிட்டு அவர் புன்னகைக்க, "....................." ஆதிராவால் பதில் பேச முடியவில்லை. "மாந்திரிகம்னாலே கெட்டதுன்னு இல்ல.. என்னை பாத்தா கெட்டவன் மாதிரியா இருக்கு உனக்கு..??

நாப்பது வருஷமா மாந்திரிகம் பண்ணிக்கிட்டு இருக்கேன்.. இதுவரை கெட்ட சக்திக்குத்தான் என்னால கெடுதல் வந்திருக்கே ஒழிய.. நல்லவங்க யாருக்கும் எந்த கெடுதலும் வந்தது இல்ல..!!" "....................." "ரிக், யஜூர், சாமம், அதர்வணம்னு.. நாலு வகையான வேதம் கேள்விப் பட்ருக்கியா..?? அதுல அதர்வணம் என்னன்னு தெரியுமா..?? முழுக்க முழுக்க மாந்திரிகம்..!!

நம்ம முன்னோர்ங்க நாலு வேதத்துல ஒண்ணா வச்சு மரியாதை செஞ்ச மாந்திரிகத்தை.. இந்த காலத்து புள்ளைங்க இவ்வளவு கேவலமா நெனைச்சுட்டு இருக்கீங்க.. என்னத்த சொல்றது..??"

 "....................."

 "மாந்திரிகம்னா.. எலுமிச்சைல குங்குமத்தை கரைச்சு.. ஏதோ 'ஓம் க்ரீம்'ன்னு மந்திரம் சொல்றது இல்ல..!! மாந்திரிகம் ஒரு சயின்ஸ்.. யந்திரம் எழுதுறது ஒரு எஞ்சினியரிங்..!! அம்பது வருஷமா இந்த ஊர்ல மர்மமான சம்பவங்கள் நடக்குது.. இருபத்தஞ்சு வருஷம் முன்னாடி என் அப்பாவும், முகிலன் அப்பாவும் சேர்ந்து அந்த யந்திரம் வைக்கிறாங்க..

அதுக்கப்புறம் இருவது வருஷமா எந்த பிரச்சினையும் இல்ல.. உன் தங்கச்சி அந்த தகட்டை எடுத்தப்புறம் திரும்ப அந்த மாதிரி மர்மமான சம்பவங்கள் நடக்குது.. இதுக்கு என்ன விளக்கம் சொல்லப் போற..??"

 "....................."

 "சில அமானுஷ்ய சக்திகளை புரிஞ்சுக்குறதுக்கும், அடக்கி வைக்கிறதுக்கும் அதுக்கு நிகரான இன்னொரு அமானுஷ்ய சக்தியாலதான் முடியும்.. அதைத்தான் நாங்க மாந்திரிகம்னு சொல்றோம்..!! அதுக்கும் நேரம், காலம், சமயோசிதம் எல்லாம் இருக்கு.. பல்லு விளக்குறது, பாக்கு போடுறது மாதிரி ஈசியான காரியம் இல்ல..!!

என் அப்பாவும், முகிலன் அப்பாவும் முன்னாடி செஞ்சுட்டு இருந்ததை.. இப்போ நானும் முகிலனும் செஞ்சுட்டு இருக்கோம்.. அந்த குறிஞ்சியோட ஆவியை அடக்கி வைக்க முயற்சி செய்றோம்..!! இதுக்காக முகிலன் எவ்வளவு செலவு செய்றார் தெரியுமா..?? இதையெல்லாம் அவர் அவரோட குடும்பத்துக்காக மட்டும் செய்யல.. இந்த ஊரோட நல்லதுக்காக செய்றார்..!!

இப்படிப்பட்ட நல்லவர் மேல.. இப்படி ஒரு பழியை போடலாமா கொழந்தை..??" அந்த மாந்திரிகவாதி சாந்தமாக கேட்டுவிட்டு புன்னகைக்க.. ஆதிராவுக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை..!! அதற்குள்ளாகவே முகிலன் இடையில் புகுந்து பேசினான்..!! "விடுங்க சாமி.. இவளுக்கு இதெல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது..!!

யார் சொல்லி இவ இதெல்லாம் பண்றான்னு எனக்கு தெரியும்..!!" என்றவன், பக்கவாட்டில் திரும்பி கதிரை ஒரு முறை முறைத்துவிட்டு தொடர்ந்தான்..!! "இங்கபாரு.. தாமிராவை கொன்னுருவேன்னு நான் மிரட்டுனது உண்மைதான்.. எப்படியாவது அந்த ஆராய்ச்சி கட்டுரை வெளில வராம தடுக்கணும்னு நான் நெனச்சதும் உண்மைதான்..!!

குறிஞ்சிக்கு நியாயம் கெடைக்கிறதுலாம் எனக்கு முக்கியம் இல்ல.. குடும்பமானம்தான் எனக்கு முக்கியம்.. அதுக்காக என்னவேனாலும் செய்வேன்..!! அந்த ஆராய்ச்சி விவகாரம் இப்போ அமுங்கி போயிருக்குறதுல எனக்கு சந்தோஷம்தான்.. தாமிரா போனப்புறம் அந்த பழைய டைரியை தீ வச்சு கொளுத்தினதும் நான்தான்..!!

ஆனா.. தாமிரா காணாமப் போனதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல..!! இதுக்கு மேலயும் உனக்கு நம்பிக்கை இல்லன்னா.. போலீஸ்ல கம்ளயின்ட் பண்ணு.. கேஸ் போடு.. நான் பாத்துக்குறேன்.. சரியா..?? இப்போ எடத்தை காலி பண்ணு..!!" என்று வெறுப்பாக சொன்னான். அதற்குமேலும் வாக்குவாதத்தை வளர்க்க விரும்பாதவளாய் ஆதிரா அங்கிருந்து கிளம்பினாள்.. அவளுடன் கதிரும்..!! உற்பத்திக் கூடத்திற்குள் நுழைந்து.. தொழிற்சாலையின் வாயிற்கதவை நோக்கி நடந்தனர்..!!

 "நான்தான் சொன்னேன்ல.. இவங்கட்ட பேசிலாம் எந்த பிரயோஜனமும் இல்லங்க ஆதிரா..!! நம்ம கைல ஸ்ட்ராங் பாயின்ட் இல்லாதவரை.. எல்லாமே வேஸ்ட்..!!" கதிர் முணுமுணுப்பாக சொன்னதை, "ம்ம்..!!" ஆதிரா அமைதியாக ஆமோதித்தாள். தொழிற்சாலையை விட்டு வெளியேறி.. இருவரும் மீண்டும் ஜீப்பில் பயணித்தார்கள்..!!

கதிர் கவனமாக காரோட்ட.. ஆதிரா ஏதோ தீவிர சிந்தனையில் மூழ்கியிருந்தாள்.. முகிலன் மற்றும் மாந்திரிகவாதியின் பேச்சில் அவள் சற்றே ஆடிப் போயிருந்தாலும்.. முழு சமாதானம் ஆகவில்லை.. முகிலன் மீது அவளுக்கிருந்த சந்தேகத்தை முற்றிலுமாக விலக்கிக்கொள்ள முடியவில்லை..!! திடீரெனத்தான் அவளுக்கு அந்த மெமரி சிப் பற்றிய ஞாபகம் வந்தது.. அதை அவ்வளவு பத்திரமாக தாமிரா பதுக்கியிருக்கிறாள் என்றால்.. அவளுடைய ஆராய்ச்சி பற்றிய தகவல்கள் நிச்சயம் அந்த மெமரி சிப்புக்குள் அடங்கியிருக்கவேண்டும் என்று தோன்றியது..!!

உடனே.. அந்த மெமரி சிப் பற்றி கதிரிடம் தெரிவித்தாள்.. எந்த மாதிரி சூழ்நிலையில் அது தனது கைக்கு கிட்டியது என்று விளக்கினாள்.. அதைக்கேட்டு அவன் ஆச்சரியப்பட்டுக் கொண்டிக்கையிலேயே.. "அது என்ன பாஸ்வேர்ட்ன்னு உங்களுக்கு தெரியுமா கதிர்..??" என்று கேட்டாள். "இ..இல்லைங்க.. எனக்கு தெரியாது.. ஏன் கேக்குறீங்க..??" "தாமிரா ஒருவேளை உங்கட்ட சொல்லிருக்கலாமோன்னு நெனைச்சேன்..!!"

 "இ..இல்ல.. சொன்னது இல்ல..!!" "ஹ்ம்ம்.. எனக்கு என்னவோ.. தாமிரா காணாமப் போனதுக்கும், அந்த மெமரி சிப்புக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குற மாதிரி தோணுது கதிர்..!! அந்த பாஸ்வேர்ட் என்னன்னு தெரிஞ்சா ஈஸியா இருக்கும்.. அட்லீஸ்ட்.. அவளோட ஆராய்ச்சி கட்டுரையோட காப்பி எதாவது கெடைச்சா கூட நல்லது..!!" "ம்ம்ம்ம்ம்ம்... எனக்கு ஒரு ஐடியா தோணுது.. சொல்லவா..??" "சொல்லுங்க..!!"

 "தாமிராவும் அவ ஃப்ரண்ட் இன்னொரு பொண்ணு.. பேர் என்னவோ.. கயல்விழியோ மலர்விழியோ.." "அகல்விழி..??" "யெஸ்ஸ்.. அகல்விழி..!! அவங்க ரெண்டு பேருந்தான் அந்த ஆராய்ச்சியை சேர்ந்து செஞ்சாங்க..!!" "ஓ.. அப்படியா..??" ஆதிரா ஆச்சர்யமாக கேட்டாள். "ஆமாம்..!! அந்த பொண்ணை பார்த்து பேசினா.." "குட்.. நல்ல ஐடியாதான்..!!"

 "பட்.. அந்தப் பொண்ணோட காண்டாக்ட் டீடயில்ஸ் எதுவும் எனக்கு தெரியாது..!!" "ஹஹ.. பரவால.. எனக்கு தெரியும்..!! தாமிராவோட சேர்ந்து ஒன்னு ரெண்டு தடவை அவ வீட்டுக்கு போயிருக்கேன்..!!" "ஓ.. ஓகே ஓகே..!!" "ஹ்ம்ம்ம்ம்.. நாம ஏன் இப்போவே அந்த அகல்விழியை பார்த்து பேசிட்டு.. அப்புறமா வீட்டுக்கு போகக்கூடாது..??" "போலாமே..!! எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல..!!" "அப்போ.. அந்த ஜங்க்ஷன்ல லெஃப்ட் எடுத்துக்கங்க..!!" ஆதிரா சொன்ன அந்த சந்திப்பில் இடதுபுறம் திரும்பி.. அடுத்த ஊருக்கு செல்கிற வழியில் தனித்திருந்த அகல்விழியின் வீட்டை அடைவதற்கு.. அதன்மேலும் பதினைந்து நிமிடங்கள் ஆயின..!!

சின்னஞ்சிறிய மூங்கில் குடிசைதான்.. இவர்கள் சென்ற நேரத்தில், அந்த பத்து வயது சிறுமிதான் வீட்டில் தனியாக இருந்தாள்.. அகல்விழியின் தங்கை..!! வாசலை பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தவள்.. இவர்கள் ஜீப்பில் சென்று வீட்டு வாசலில் இறங்கியதும்.. ஆதிராவை அடையாளம் கண்டுகொண்டு புன்னகைத்தாள்..!! "அக்காஆஆ.. நல்லாருக்கிங்களா..??" "ஹேய் பாப்பா.. ஞாபகம் வச்சிருக்கியா என்னை..?? வேல்விழிதான உன் பேரு..??" "ஆமாக்கா.. நீங்களும் என்பேரை கரக்டா ஞாபகம் வச்சிருக்கிங்க..?? வாங்கக்கா.. வீட்டுக்குள்ள வாங்க..!!" ஆதிராவையும் கதிரையும் அன்பாக உபசரித்து.. வீட்டுக்குள் அழைத்து சென்றாள் அந்த வேல்விழி..


பாயெடுத்து விரித்து போட்டவள்.. "உக்காருங்கக்கா.. அம்மா இப்போ வந்திருவாங்க..!! டீ சாப்பிடுறீங்களா..??" என்று கேட்டாள்.
"இல்லம்மா.. அதுலாம் வேணாம்.. வா.. நீ வந்து உக்காரு..!!" அவளை அருகில் அழைத்து அமரவைத்துக் கொண்ட ஆதிரா, "வீட்ல யாரும் இல்லையா.. நீ மட்டும் தனியா இருக்க.. எல்லாரும் எங்க போயிருக்காங்க..??" என்று கேட்டாள்.

 "அம்மா கடைக்கு போயிருக்காங்க.. அப்பா டாஸ்மாக் போயிருக்காரு.. அண்ணணுக ரெண்டு பேரும் டீ எஸ்டேட்க்கு வேலைக்கு போயிருக்காங்க..!!" கடகடவென புன்னகையுடன் ஒப்பித்தாள் வேல்விழி. "அகல்விழி..??" ஆதிரா அவ்வாறு இயல்பாக கேட்க.. அத்தனை நேரம் வேல்விழியின் உதட்டில் இருந்த அந்த சிரிப்பு இப்போது பட்டென காணாமல் போனது..

அந்த குட்டிப் பெண்ணின் முகத்தில் குப்பென ஒரு இருள் வந்து அப்பிக்கொண்டது..!! கண்களை அகலமாய் விரித்து மிரட்சியாக ஆதிராவை பார்த்தவள்.. பிசிறடிக்கிற குரலில் தட்டு தடுமாறி சொன்னாள்..!!

 "அ..அக்காவை.. அக்காவை குறிஞ்சி தூக்கிட்டு போயிட்டா..!!"



No comments:

Post a Comment