Saturday, December 6, 2014

கண்ணாமூச்சி ரே ரே - தமிழில் ஒரு திரில் தொடர் - பாகம் - 5


மேலும் ஒரு வாரம் கழித்து.. மைசூரில் இருந்து ஊட்டி செல்கிற மலைப்பாதை..!! பாதையின் ஓரமாக அந்த புத்தம்புது வெண்ணிற ஸ்கார்ப்பியோ பார்க் செய்யப்பட்டிருந்தது..!! வண்டிக்குள் ஆதிரா அமர்ந்திருந்தாள்.. பழுப்பு நிறத்தில் ஒரு சால்வை போர்த்தியிருந்தாள்..!!

கையிலிருந்த காகித தம்ளரை அவ்வப்போது உயர்த்தி.. உதடுகள் பதித்து தேநீர் உறிஞ்சிக் கொண்டிருந்தாள்..!! அவளுடைய பார்வை முழுவதும்.. தூரத்தில் தெரிந்த ஒரு போர்டின் மேல் கூர்மையாக நிலைத்திருந்தது..!! அகலமான தார்ச்சாலையின் அந்தப்புறமாக ஜீன்ஸ் அணிந்திருந்த சிபி நின்றிருந்தான்..!! அவனுடைய கையில்.. எடை மிகுந்திருந்த, மூக்கு நீண்டிருந்த ஒரு கேமரா..!! சாலையோரமாய் வளர்ந்திருந்த பச்சை செடிகளில் வந்தமர்ந்திருந்த பட்டாம்பூச்சிகளை படம் பிடித்துக் கொண்டிருந்தான்..!!

அந்த பட்டாம்பூச்சிகளின் மேனியில் ஜொலித்த வர்ணஜாலமும்.. அதனை தனது கேமராவுக்குள் கேப்சர் செய்துவிட்ட சந்தோஷமும்.. சிபியின் முகத்தை பரவசத்தில் ஆழ்த்தியிருந்தன..!!
"ஆதிராஆஆ.. இங்க பாரேன்..!!" திரும்பி பார்த்து கத்தினான் சிபி.. ஆதிராவிடம் இருந்து பதில் வராமல் போகவும், காரை நோக்கி மெல்ல நடந்தான்..!! மனைவியை நெருங்கியவன் காரின் ஜன்னலுக்கு கொஞ்சமாய் குனிந்தவாறே.. உற்சாகம் மட்டும் சற்றும் குறையாமல் சொன்னான்..!!

 "அங்க வந்து அந்த பட்டாம்பூச்சிலாம் பாரு ஆதிரா.. எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா..?? நானும் அப்படியே பட்டாம்பூச்சியா மாறிடலாம் போல ஆசையா இருக்கு..!!" அவன் அவ்வளவு உற்சாகமாக சொல்லியும், அதன்பிறகு ஓரிரு வினாடிகள் கழித்தே ஆதிரா கவனம் கலைந்தாள்..!!

அதற்குள் சிபியும் ஆதிராவின் பார்வை சென்ற திசையை நோக்கி.. அவளுடைய எண்ண ஓட்டத்தை உடனடியாய் புரிந்து கொண்டிருந்தான்..!! இமைகளில் ஒருவித படபடப்புடன் கணவனை திரும்பி பார்த்த ஆதிரா.. தடுமாற்றமான குரலிலேயே கேட்டாள்..!! "எ..என்ன.. என்ன சொன்னிங்க..??" சிபி இப்போது சலிப்பாக ஒரு பெருமூச்சை உதிர்த்தான்.. ஆதிராவுக்கு பதில் ஏதும் சொல்லாமல், அமைதியாக காருக்குள் ஏறி அமர்ந்தான்.. கையில் இருந்த கேமராவை பின்சீட்டில் விட்டெறிந்தான்..!! மனைவியிடம் திரும்பி.. சற்றே எரிச்சலான குரலில் சொன்னான்..!!

 "நீ என்ன நெனைக்கிறேன்னு எனக்கு புரியுது ஆதிரா.. தயவு செஞ்சு அந்த நெனைப்பெல்லாம் உடனே கட் பண்ணிடு..!!" "ஏ..ஏன்த்தான் அப்படி சொல்றீங்க..??" "நாம ஊட்டி போறோம்னு வீட்ல சொல்லிட்டு வந்திருக்கோம் ஆதிரா..!!" "அதனால என்ன.. ஊட்டி போக வேணாம்னு நான் சொல்லவே இல்லையே..?? டூ வீக்ஸ் ட்ரிப்.. அஞ்சு நாள் அகழில இருப்போம்.. அப்புறம் பத்து நாள் ஊட்டி.. அதுக்கப்புறம் மைசூர்..!!" "புரிஞ்சுக்காம பேசாதடா..!! உன்னை அகழிக்கு கூட்டிப் போறதுல எனக்கு சுத்தமா இஷ்டம் இல்ல..!! ஊட்டிக்கு போகலாம்னு கெளம்பி வந்துட்டு.. இப்போ என்ன இது திடீர்னு நடுவுல..??" சிபி எரிச்சலாக கேட்கவும், ஆதிரா தலையை பிடித்துக் கொண்டாள். "என்னால முடியலத்தான்..!!

எனக்கு தாமிரா நெனைப்பாவே இருக்கு..!!" "ப்ளீஸ் ஆதிரா..!! ஏற்கனவே ஒருவருஷம் ஆச்சு.. அவ நெனைப்புலயே இந்தமாதிரி நீ இருந்துட்ட.. ஒரு வருஷம்.. எல்லாம் பண்ணி பாத்தாச்சு..!! இப்போ திரும்பவும் ஆரம்பிக்காத.. கஷ்டமா இருக்கு எனக்கு..!!" "எப்படி-த்தான் என்னால முடியும்..?? எப்படியோ போகட்டும்னு எப்படி என்னால இருக்க முடியும்..?? தாமிராக்கு என்னாச்சுன்னு எனக்கு தெரியணும்.. மறந்து போனதுலாம் எனக்கு திரும்ப ஞாபகத்துக்கு வரணும்..!! இதுலாம் அகழி போனாத்தான் நடக்கும்..!! ப்ளீஸ்த்தான்.. என்னை புரிஞ்சுக்கோங்க..!!" அழுகையுடன் கெஞ்சினாள் ஆதிரா. அவளுடைய கெஞ்சல் சிபியை சற்றே அசைத்து பார்த்தது. "அகழிக்கு போனாமட்டும் உனக்கு அதுலாம் ஞாபகம் வந்துடும்னு எந்த உத்திரவாதமும் இல்லடா..!!" "தெரியும்.. பரவால.. போய்த்தான் பாக்கலாமே..??"

 
"மாமாக்கு தெரிஞ்சா டென்ஷன் ஆயிடுவாரு..!! அகழிக்கு உன்னை கூட்டிப் போனது தெரிஞ்சா.. அவ்வளவுதான்..!!" "அப்பாவுக்கு தெரிய வேணாம்-த்தான்.. நாமளா போயிட்டு வரலாம்.. அங்க இருந்து ஃபோன் பண்றப்போ ஊட்டில இருக்குறதாவே சொல்லிடலாம்..!! அதையும் மீறி அப்பாக்கு தெரிஞ்சிடுச்சுனா.. அவரை நான் சமாளிச்சுக்குறேன்..!! ப்ளீஸ்த்தான்..!!" 

"எனக்கு பயமா இருக்கு ஆதிரா..!!" "என்ன பயம்..?? அந்த குறிஞ்சி என்னையும் தூக்கிட்டு போயிடுவான்னா..?? அப்படிலாம் எதுவும் நடக்காதுத்தான்..!! அஞ்சு நாள்ல என்ன ஆகிடப் போகுது..?? அதுவும்.. நீங்க என் கூடவே இருக்குறப்போ..?? ம்ம்..??” "வே..வேணாம் ஆதிரா..!!" பலவீனமாக ஒலித்தது சிபியின் குரல். “ப்ளீஸ்த்தான்.. ப்ளீஸ்..!! அஞ்சே அஞ்சு நாள்.. எனக்காக..!! அன்னைக்கு என்ன சொன்னிங்க.. எனக்கு புடிச்சதை சொன்னா.. எதுவா இருந்தாலும் வாங்கி தர்றேன்னு சொன்னிங்கள்ல..??

எனக்கு இதுதான் வேணும்.. ப்ளீஸ்த்தான்.. எனக்கு அகழிக்கு போகணும்..!! ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!" ஆதிரா குழந்தை மாதிரி கெஞ்சிக்கொண்டே இருக்கவும்.. சிபியின் பிடிவாதம் கொஞ்சம் கொஞ்சமாய் தகர்ந்து கொண்டே சென்றது..!! என்ன சொல்வதென்று புரியாமல் மனைவியின் முகத்தையே பரிதாபமாக பார்த்தான்.. ஒருவித அவஸ்தைக்குள் அவன் ஆட்பட்டுக் கொண்டது அப்பட்டமாக அவனுடைய முகத்தில் தெரிந்தது..!! ஒரு சில வினாடிகள்..!! அப்புறம் என்ன நினைத்தானோ.. சலிப்பாக தலையை அசைத்தவாறே முகத்தை திருப்பிக் கொண்டான்.. சாவியை திருகி வண்டியை கிளப்பிக்கொண்டே ஆதிராவிடம் சொன்னான்..!!

 "அஞ்சு நாள்தான் ஆதிரா.. அதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட அங்க நீ இருக்க, உன்னை நான் அலோ பண்ண மாட்டேன்..!!" "தேங்க்ஸ்-த்தான்..!!" ஆதிரா மகிழ்ந்து கொண்டிருக்கையிலேயே வண்டி சீற்றமாய் கிளம்பியது..!! அகலமாய் மேலேறிய ஊட்டிக்கு செல்லும் சாலையை விடுத்து.. அதிலிருந்து பிரிந்து சற்றே தாழ்வாக கீழிறங்குகிற அந்த குறுகலான பாதையில்.. குலுங்கி குலுங்கி பயணிக்க ஆரம்பித்தது அந்த ஸ்கார்ப்பியோ..!! அத்தனை நேரம் ஆதிரா வெறித்துக் கொண்டிருந்த அந்த மரபோர்டில்.. எழுத்துக்கள் சற்றே சிதிலமடைந்து போய் காட்சியளித்தன..!!
அகழி --> 13 கி.மீ



No comments:

Post a Comment