Monday, December 22, 2014

கண்ணாமூச்சி ரே ரே - தமிழில் ஒரு திரில் தொடர் - பாகம் - 21


அடுத்தநாள் காலை அகழி கிராமம் அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது.. 'விர்ர்ர்ர்.. விர்ர்ர்ர்..' என காவல்துறை வாகனங்கள் ஊருக்குள் புழுதி கிளப்பி பறந்து கொண்டிருந்தன..!! நடந்த விஷயத்தை கேள்விப்பட்டு ஊர்ஜனங்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர்.. ஆங்காங்கே கூட்டம்கூட்டமாய் சேர்ந்து ரகசியக்குரலில் பேசிக்கொண்டனர்..!!

 "பச்சைப்புள்ள மாதிரி இருந்துக்கிட்டு.. இப்பிடியொரு பாதகத்தை பண்ணிருக்கானே இந்தப் பாவிப்பய..!! இவனுக்குலாம் இப்பிடித்தான் வேணும்..!!" "எனக்கு ஆரம்பத்துலயே அந்தப்பய மேல ஒரு டவுட்டப்பா.. அவன் முழியுஞ்சரியில்ல.. பேச்சுஞ்சரியில்ல..!! இப்ப இல்ல.. ரொம்பநாளுக்கு முன்னாடியே என் பொஞ்சாதிட்டகூட சொல்லிட்டு இருந்தனப்பா..!!" "ஐயயே அந்தப்படத்தை சொல்லல..!! செவப்பு ரோஸான்னு பழைய படம்.. கமலும் சிரிதேவியும்..!!"

 "மாட்டுக்கு இருக்குற மாதிரி.. பேய்க்கும் பெருசா கொம்பு இருக்குமா தாத்தா..??"
"குறிஞ்சி பேரைச்சொல்லி ஆட்டம் போட்டுட்டு இருந்திருக்கான்.. ஆடுனது போதும்னு அவளே வந்து தூக்கிட்டு போய்ட்டா..!! கொள்ளைல போக..!!" பங்குனிப் பொங்கலின் இறுதிநாளன்று.. ஊர்மக்களின் தலையில் இடியாக வந்து இறங்கியிருந்தது அந்த சம்பவம்..!! திருவிழாவை தொடர்ந்து நடத்துவதா, வேண்டாமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது..!!

ஊர் முக்கியஸ்தர்களின் கூட்டம், உடனடியாக அதிகாலையிலேயே கோயிலில் கூடியது.. ஆளாளுக்கு ஏதேதோ சொல்லி பெரும் சலசலப்புக்கு பிறகு.. "என்ன ஆனாலும் சரி.. திருவிழாவை நல்லபடியா நடத்தியே ஆகணும்.. இல்லனா சாமிக்குத்தம் ஆய்ரும்..!! அப்புறம் ஏதாவது ஒண்ணுன்னா எங்கிட்ட ஓடியாரக்கூடாது சொல்லிட்டேன்..!!" என்று முகிலன் கோவத்தை உதிர்த்த பின்னர்.. "ஐயா சொல்றதுதான் சரி.. என்னதான் இருந்தாலும் ஆத்தா கோவத்துக்கு ஆளாவக்கூடாதுல..!!" என்று ஊர்மக்கள் ஒப்புக்கொண்டனர்.

ஆனபோதிலும், மனதுக்குள் சந்தோஷம் என்பது துளியும் இல்லாமலே, கடைசிநாள் விழாவுக்கு தயாராயினர். விஷயம் காட்டுத்தீயாக எல்லா ஊருக்கும் பரவியிருந்தது.. அன்றைய மாலை செய்தித்தாள்களில், முதல்பக்க ஒதுக்கீடுக்கு சென்னையில் விவாதம் நடந்துகொண்டிருந்தது..!! ஆதிராவின் வீட்டுக்கு முன்பாக ஐந்தாறு பத்திரிக்கையாளர்கள் குழுமியிருந்தனர்.. கதவு எப்போது திறக்கும் என்று ஆவலுடன் காத்திருந்தனர்.. கணவனுடன் ஆதிரா வெளிப்படவும், ஓடிச்சென்று அவர்களை சூழ்ந்துகொண்டனர்..

 இனிப்புப்பண்டத்தை ஈ மொய்ப்பது மாதிரி..!! கேள்விக்கணைகளால் அவளை துளைத்தெடுத்தனர்..!! "மிஸ் ஆதிரா.. அந்த சைக்கோட்ட நீங்க எப்படி மாட்டுனிங்கன்னு கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா..??"

 "அவனோட டெட்பாடி இன்னும் கெடைக்கலை.. அதைப்பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்க..??" "உயிர் போகப்போகுதுன்ற நெலமைல உங்க உணர்வுகள் எப்படி இருந்துச்சுன்னு தெரிஞ்சுக்கலாமா..??" "அவர் உங்களை பாலியல் பலாத்காரம் செஞ்சிட்டதா சொல்றாங்களே.. அது உண்மையா..??"

 பத்திரிக்கையாளர்களின் கேள்விகள் சிபிக்கு எரிச்சல் மூட்டின..!!

 "ஹலோ.. அவ இப்போ யார்ட்டயும் பேசுற நெலமைல இல்ல.. பயங்கர ஷாக்ல இருக்கா.. அவளை கொஞ்சம் நிம்மதியா இருக்கவிடுங்க.. ப்ளீஸ்..!! புரிஞ்சுக்கங்க.. உங்களுக்கு ரிப்போர்ட் வேணும்னா போலீஸை காண்டாக்ட் பண்ணுங்க..!! வழிவிடுங்க.. ப்ளீஸ்ஸ்ஸ்..!!" சூழ்ந்திருந்தவர்களை சமாளித்து.. ஆதிராவை அணைத்தவாறு பாதுகாப்பாக கூட்டிச்சென்று காரில் ஏற்றினான் சிபி.. அவசரமாய் காரை ஸ்டார்ட் செய்து, சர்ரென வேகமெடுத்து கிளப்பினான்..!!

 "மேடம்.. ஒரே ஒரு கேள்வி மேடம்.. ஒரே ஒரு கேள்வி.. ஜஸ்ட் ஆன்சர் திஸ்..!!" லஜ்ஜையில்லாமல் காரின் பின்னால் ஓடினார்கள் பத்திரிக்கையாளர்கள். "ஹ்ம்ம்ம்.. எங்கிட்ட கேட்டா எல்லாக்கதையும் புட்டுப்புட்டு வைப்பேன்.. எந்தப்பய கேக்குறான்..!!" சலிப்பாக சொன்னது, வீட்டுக்கு வெளியே தனியே அமர்ந்து பல்குத்திக் கொண்டிருந்த பெருசு ஒன்று. கார் மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருந்தது..

கவனத்தை சாலையில் செலுத்தி காரோட்டிக்கொண்டிருந்தான் சிபி.. கண்களை மூடி சீட்டில் தலை சாய்த்திருந்தாள் ஆதிரா.. நேற்றிரவு நடந்த சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து இன்னுமே அவள் மீண்டிருக்கவில்லை.. இருதயத்தில் இப்போதும் அந்த பதைபதைப்பு மிச்சமிருந்தது..!!

 "அப்பா என்ன சொன்னாரு..??" கண்களை திறக்காமலே கணவனிடம் கேட்டாள் ஆதிரா. "என்ன சொல்வாரு.. உடனே கெளம்பி மைசூர் வர சொன்னாரு..!! என்னைத்தான் ரொம்ப திட்டினாரு..!!" சாலையில் இருந்த கவனம் சிதறாமலே சொன்னான் சிபி.

 "ம்ம்ம்..!!" "இந்த போலீஸ், ப்ரஸ்லாம் பெரிய டார்ச்சர்தான் ஆதிரா.. கொஞ்சம் பொறுத்துக்கோ.. சரியா..??" சிபியின் குரலில் ஒரு கனிவு. "ம்ம்.. சரித்தான்..!!" மேலும் பத்துநிமிட பயணத்திற்கு பிறகு.. கார் மணிமாறனின் வீட்டை வந்தடைந்தது..!! வீட்டுக்கு வெளியே.. காம்பவுண்ட் கேட்டை சுற்றி கணிசமான அளவு ஊர்மக்கள் கூடியிருந்தனர்..

மணிமாறனின் குரூரபுத்திக்கு தங்களது குடும்பப்பெண்களை காவு கொடுத்திருந்த சொந்தபந்தங்கள், அவரை கரித்துக் கொட்டினர்.. காறி உமிழ்ந்தனர்..!!




ஆதிராவும், சிபியும் கூட்டத்தை விலக்கி வீட்டுக்குள் நுழைந்தனர்.. உள்ளே நிறைய காக்கி சட்டைகளை காணமுடிந்தது..!! காக்கிசட்டை அணியாத மற்றொரு குழு.. நேற்று மணிமாறன் கடித்துக்குதறப்பட்ட புல்வெளியை ஆய்வு செய்துகொண்டிருந்தது..!! ஊர்மக்களை உள்ளேவிடாமல் தடுத்துக் கொண்டிருந்த காவலர்.. ஆதிராவை மட்டும் அடையாளம் கண்டுகொண்டு உள்ளே அனுமதித்தார்..!!

 "இன்ஸ்பெக்டர் தோட்டத்துல இருக்காரு மேடம்..!!" என்றார். ஆதிராவும் சிபியும் கோரைப் புற்களில் கால்பதித்து நடந்து.. வீட்டுக்கு பின்புறமாக சென்றனர்..!! தோட்டத்தில் இரைச்சல் இன்னும் அதிகமாக இருந்தது.. மணல் அள்ளுகிற பொக்லைன் இயந்திரம் பிரதானமாக காட்சியளித்தது..!! காற்றில் ஒரு துர்நாற்றம்.. தோட்டத்து பூஞ்செடிகள் எல்லாம் பிடுங்கி எறியப்பட்டிருந்தன.. கூர்மையான தனது கரத்தால் தோட்டத்து மண்ணை, தோண்டி தோண்டி அள்ளிக்கொண்டிருந்தது பொக்லைன்..!! ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட ஏழெட்டு பிணங்கள் ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன..

அழுகி, சிதைந்துபோன உயிரற்ற உடல்கள்..!! "இனிமே இதுதான் உன் இடம்.. வேற எங்கயும் போகணும்னு நெனைக்க கூடாது..!! சமத்தா இங்கயே இருக்கணும்.. என்கூடவே இருக்கணும்.. எப்போவும்.." ஆதிரா மணிமாறனை முதன்முதலாக சந்தித்தபோது.. அவர் தோட்டத்து செடிகளுடன் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது..!! அதெல்லாம் செடிகளிடம் பேசினாரா.. அல்லது.. செடிகளுக்கு அடியில் உறங்கிய பிரேதங்களிடம் பேசினாரா என்று ஆதிராவுக்குள் இப்போது ஒரு கேள்வி..!!

 சுற்றிநின்ற காவலர்களுக்கு மையமாக, மஃப்டி உடையில் காட்சியளித்தார் இன்ஸ்பெக்டர் வில்லாளன்.. முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு, மும்முரமாக வேலையில் ஈடுபட்டிருந்தார்.. எல்லோருக்கும் ஏதேதோ ஆணையிட்டுக் கொண்டிருந்தார்..!! அவரிடம் ஆதிராவின் வருகையை ஒரு காவலர் உரைக்கவும்.. உடனே இவர்கள் பக்கமாக திரும்பிப் பார்த்தார்..!! "ஒருநிமிஷம் இருங்க.. வந்துடுறேன்..!!" என்றுவிட்டு மீண்டும் அந்தப்பக்கம் திரும்பிக்கொண்டார்..

தனக்கு கீழ் வேலை பார்க்கும் காவலர்களுக்கும், பொக்லைன் இயந்திரத்தை இயக்க வந்திருப்பவர்களுக்கும், மேலும் சில கட்டளைகளை பிறப்பித்தார்..!! அவர் சொன்ன ஒருநிமிடம் முடிவதற்கு முன்பாகவே.. ஆதிராவையும், சிபியையும் வந்து அணுகினார்..!! "வாங்க.. உள்ள போய் பேசலாம்..!!" வில்லாளன் இருவரையும் வீட்டுக்குள் அழைத்து சென்றார்.. மூவரும் ஹாலுக்குள் பிரவேசித்து உள்ளே நடந்தனர்..!!

இடப்புறமாக தெரிந்த அந்த அறைவாசலை அடைந்ததும்.. "நீங்க இங்கயே இருங்க.. அவங்கட்ட தனியா பேசணும்..!!" என்று சிபியை அறை வாசலிலேயே தடுத்து நிறுத்தினார் வில்லாளன்.. ஆதிராவை மட்டும் அழைத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தார்..!! அறைக்குள் வேறு யாரும் இல்லை.. வாசலில் மட்டும் சிபியோடு சேர்த்து இன்னும் இரண்டு காவலர்கள்..!! உள்ளே சென்றவர்கள் எதிரெதிர் நாற்காலியில் அமர்ந்துகொண்டனர்.. வில்லாளன் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக விஷயத்திற்கு வந்தார்..

விசாரணையை ஆரம்பித்தார்..!! "ஆர் யூ ஆல்ரைட் நவ்..??" ஆரம்பத்தில் ஒரு சம்பிரதாய கேள்வி. "ம்ம்.. ஐ'ம் ஓகே நவ்..!!" ஆதிரா உலர்ந்துபோன குரலில் சொன்னாள். "ஹ்ம்ம்.. காலைல நீங்க போன்ல சொன்னதுல, நெறைய விஷயம் எனக்கு சுத்தமா புரியலைங்க.. சரி ஏதோ கொழப்பத்துல இருக்கிங்க போலன்னு விட்டுட்டேன்..!! எனக்கு இன்னும் நெறைய டவுட்டு இருக்கு.. அதான் இப்போ நேர்லயே பாத்து பேசிறலாம்னு ஆள்விட்டு வரச்சொன்னேன்..!! இப்போ கேக்கலாமா..??"

 "ம்ம்.. கேளுங்க..!!"

 "மொதல்ல.. அந்தாளு எப்படி உங்களை மயக்கமாக்குனான்..??"
 "கைல ஏதோ ஸ்ப்ரே வச்சிருந்தாரு..!!"
 "ஹ்ம்ம்.. மயக்கமாக்கியாச்சு.. வீட்டுக்கு தூக்கிட்டு வந்தாச்சு.. கட்டிப்போட்டாச்சு.. அந்த சீக்ரட் ரூமுக்கு கூட்டுப்போயாச்சு.. கைல கத்தியை எடுத்துக்கிட்டு உங்களை.."
 "கத்தி இல்ல.. உளி..!!"
 "ஓகே.. கைல உளியை எடுத்துக்கிட்டு உங்களை ஹர்ட் பண்ணவந்திருக்கான்.. கரெக்டா..??"
 "ம்ம்.. கரெக்ட்..!!"
 "அந்தமாதிரி அவ்வளவு வசமா அவன்கிட்ட மாட்டிக்கிட்டிங்க சரி.. அப்புறம் எப்படி தப்பிச்சிங்க..?? யார் ஹெல்ப் பண்ணா..??"
 "அதான் காலைலயே சொன்னனே.. கு..குறிஞ்சிதான் வந்து என்னை காப்பாத்தினா..!!"
 "ப்ச்..!!!!" ஆதிராவின் பதிலைக்கேட்டு உடனடியாக ஒரு சலிப்பை உதிர்த்த வில்லாளன்.. குரலில் ஒரு கடுமையை கூட்டிக்கொண்டு தொடர்ந்து பேசினார்..!!

 "இங்க பாருங்க ஆதிரா.. இந்த ஊர்க்காரய்ங்களுக்கு இனிமேயாவது நல்லபுத்தி வரப்போகுதுன்னு, நான்லாம் சந்தோஷமா நெனச்சிக்கிட்டு இருக்கேன்.. நீங்க கூடக்கொஞ்சம் அவய்ங்களை கிறுக்கய்ங்களாக்கிறாதிங்க..!! குறிஞ்சின்லாம் யாருங்கெடையாது.. எல்லாத்தையும் பண்ணிட்டு இருந்தது இந்த சைக்கோப்பயதான்..!! சொல்லுங்க.. என்ன நடந்துச்சுன்னு எதையும் மறைக்காம சொல்லுங்க..!!"

 "நடந்ததைத்தான் சொல்லிட்டு இருக்கேன் ஸார்..!!"




"என்ன.. இதா நடந்துச்சு.. அந்தாளு உங்களை டார்ச்சர் பண்ண வந்தப்போ, அந்த குறிஞ்சி வந்து, அந்தாளை அடிச்சுப்போட்டு உங்களை காப்பாத்துனாளா..?? படத்துலலாம் வர்ற மாதிரி..??" வில்லாளனின் குரலில் ஒருவித ஏளனம் தொணித்தது.

 "ம்ம்.. ஆமாம்..!! ஆனா அந்தாளை அடிச்சுப்போட்டது குறிஞ்சி இல்ல.." ஆதிரா இயல்பாகவே பேசிக்கொண்டிருந்தாள்.

 "அப்புறம்..??"

 "ஒரு புலி..!! குறிஞ்சி கூடவே வந்த ஒரு புலி..!!"

 "புலியா..??" வில்லாளனின் முகத்தில் அப்பட்டமாய் ஒரு நம்பிக்கையின்மை தெரிந்தது.. ஆதிராவை அவர் பார்த்த பார்வையில் ஒருவித எரிச்சல் கலந்திருந்தது..!! அவரது ஏளனப்பார்வையை கண்டுகொள்ளாமல்.. இரவு நடந்த விஷயங்களை இன்னொருமுறை அவருக்கு விளக்கி சொன்னாள் ஆதிரா..!! அவள் சொன்னதையெல்லாம் நம்பிக்கையில்லாமலே கேட்டுமுடித்த வில்லாளன்.. அதன்பிறகும் சில வினாடிகள் அவளது முகத்தையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தார்..!!

பிறகு சலிப்பாக தலையசைத்தவாறே.. இல்லாத தலைமயிரை பரபரவென சொறிந்துகொண்டார்..!!

 "ப்ச்.. என்னங்க பேசுறீங்க நீங்க..?? நீங்க சொல்றதுல எதாவது லாஜிக் இருக்கா..??"

 "கண்ணால பாத்ததை சொல்லிட்டு இருக்கேன் ஸார்.. இதுல லாஜிக் இருக்கா இல்லையான்லாம் எனக்கு தெரியல..!!"

 "புதுசு புதுசா என்னத்தயோ சொல்றிங்க.. அகழி காட்டுக்குள்ள புலிலாம் எதுவும் கெடையாது.. இதுவரை எவனும் கண்ணால பாத்தது இல்ல..!!" "நான் பார்த்தேன் ஸார்..!! அந்த புலி அந்தாளை கடிச்சு குதர்றதை என் ரெண்டு கண்ணாலயும் பார்த்தேன்..!! அந்தாளு சாகாம துடிச்சுட்டு இருக்குறப்போவே.. குறிஞ்சி அவரை.."

 "போதும் ஆதிரா.. நிறுத்துங்க.. ப்ளீஸ்..!!" வில்லாளன் சற்றே குரலை உயர்த்தி கத்தவும்.. ஆதிரா பட்டென அமைதியானாள்..!! வெளியில் நின்றிருந்த சிபி.. உள்ளே நடந்த விசாரணையை எரிச்சல் மிகுந்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்..!! வில்லாளன் இப்போது அருகிலிருந்த வாட்டர்பாட்டில் திறந்து.. தண்ணீரை கடகடகவென தொண்டைக்குள் சரித்துக்கொண்டார்..!! உதடுகளை கைக்குட்டையால் ஒற்றி எடுத்துவிட்டு.. ஆதிராவையே சிலவினாடிகள் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார்..!!

பிறகு சற்றே இலகுவான குரலில் பேச ஆரம்பித்தார்..

 "சரி ஆதிரா.. நீங்க ஏன் இப்படிலாம் பேசுறீங்கன்னு எனக்கு புரியுது..!!" "ஏ..ஏன்..??" ஆதிரா நெற்றியை சுருக்கினாள்.

 "ஆனா.. நீங்க பயப்படுறதுக்குலாம் ஒன்னும் தேவையே இல்ல.. உங்களுக்கு ஒரு பிரச்சினையும் வராது.. நான் கேரண்டி..!! தைரியமா உண்மையை சொல்லுங்க..!!"

 "எ..என்ன சொல்றீங்க நீங்க..?? எ..எனக்கு புரியல..!!"

 "கமான்.. ஒரு சைக்கோபாத்தை நீங்க கொலை பண்ணதுல எந்த தப்புமே இல்ல.. உங்க உயிரை காப்பாத்திக்கிறதுக்காக அவனை கொன்னுருக்கிங்க.. அவ்வளவுதான..??"
 "வாட்..????"
 "சட்டப்படி உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது ஆதிரா.. அதுக்கு நான் கேரண்டி..!! அதேநேரம்.. அந்தாளோட டெட்பாடி கெடைக்காம நாங்க ஒன்னுஞ் செய்யமுடியாது.. அதை நல்லா புரிஞ்சுக்கங்க.. ப்ளீஸ்..!!"

 "ஸார்.. மொதல்ல நான் சொல்றதை நீங்க புரிஞ்சுக்கங்க.. பொய் சொல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்ல.. நான் சொன்னதெல்லாம் உண்மை..!! குறிஞ்சிதான் அந்தாளை.."

 "ப்ளீஸ் ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் ஆதிரா..!! கேட்டு கேட்டு காதுலாம் வலிக்குது.. போதும்..!! உண்மையை சொல்லுங்க.. எப்படி அந்த ஆள்ட்ட இருந்து தப்பிச்சிங்க.. எப்படி அவரை கொலை பண்ணுனிங்க.. என்ன வெப்பன் யூஸ் பண்ணுனிங்க.. டெட்பாடியை எங்க டிஸ்போஸ் பண்ணுனிங்க.. நீங்க மட்டுந்தானா இல்ல உங்க ஹஸ்பன்டும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணாரா..??" "ஸார்.. ப்ளீஸ்ஸ்ஸ்..!!!" ஆதிரா கெஞ்சலாக கத்திக்கொண்டிருக்கும்போதே.. அதற்குமேலும் பொறுமை இல்லாத சிபி அவசரமாக அறைக்குள் நுழைந்தான்..!! மனைவியின் புஜத்தை இறுகப்பற்றி.. நாற்காலியில் இருந்து அவளை மேலே தூக்கினான்..!!

 "என்கொய்ரிலாம் முடிஞ்சு போச்சு ஆதிரா.. எழுந்து வா போகலாம்..!!" என்று எரிச்சலாக சொன்னான். "ஹலோ.. என்கொய்ரி முடிஞ்சதா இல்லையான்னு நான் சொல்லணும்..!!" இடையில் புகுந்து சூடாக சொன்னார் வில்லாளன். "உங்களுக்கு கோவாப்ரெட் பண்றதா வேணாமான்னு நாங்க முடிவு பண்ணனும்..!! இனிமே என் வொய்ஃப்ட்ட விசாரணை பண்ணனும்னா கோர்ட் ஆர்டரோட வாங்க.. குட்பை..!!" பதிலுக்கு சீறினான் சிபி. ஆதிராவை இழுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான். "ஹலோ..!!!!!" முதுகுக்கு பின்னாலிருந்து வில்லாளன் கத்துவதை பொருட்படுத்தாமல்.. மனைவியை அணைத்தவாறே அழைத்துச்சென்று, அந்த அறையை விட்டு வெளியேறினான்..!!

 காரில் கிளம்பி இருவரும் வீட்டுக்கு வந்தார்கள்..!! வீட்டில்.. திரவியம், வனக்கொடி, கதிர், தென்றல் ஒருபக்கம்.. பகையை மறந்து வீட்டுக்குள் அடியெடுத்து வைத்திருந்த அங்கையற்கண்ணி, யாழினி, நிலவன் இன்னொருபக்கம்..!! அனைவருமே பதட்டத்தின் பிடியில் இருந்து இன்னும் மீண்டிருக்கவில்லை.. ஆனால்.. ‘ஏதோ இதுவரையில் சேதாரம் இல்லாமல் இருபெண்களும் தப்பித்தனரே’ என்பதுமாதிரியான ஒரு நிம்மதியுணர்வும் அவர்களிடம் இல்லாமல் இல்லை..!!

 ஆதிராவை எல்லோருமே அன்புடன் அணுகி.. அவரவரால் இயன்ற அளவிற்கு அவளை ஆறுதல்படுத்த முயன்றனர்..!! இன்ஸ்பெக்டரின் விசாரணையை பற்றி விசாரித்து தெரிந்து கொண்டனர்.. எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவளை ஓய்வெடுத்துக்கொள்ள அறிவுறுத்தினர்..!! "எனக்கு தெரிஞ்ச பையன்தான்மா.. ஏன் இப்படிலாம் பண்றான்னு தெரியல..!! கொஞ்சம் மொரடன்.. ஆனா ரொம்ப நல்லவன்..!!" வில்லாளனுக்கு சர்டிஃபிகேட் கொடுத்த திரவியம், "நீ ஒன்னும் கவலைப்படாதம்மா.. நான் அவன்ட்ட சொல்லி வைக்கிறேன்..!!" என்று தனது அதிகாரத்தை உபயோகப்படுத்தி, வில்லாளனை அடக்கிவாசிக்க செய்தவதாக நம்பிக்கை தெரிவித்தார்.

 ஆதிரா பெரும்பாலான நேரம் தனது அறையில் ஓய்வுதான் எடுத்தாள்.. சிபிதான் அன்றுமுழுதும் செல்ஃபோனும் கையுமாகவே இருந்தான்..!! மைசூரிலிருக்கிற மாமனார், மாமியார்.. தனது பத்திரிகை நண்பர்கள்.. தனது முதலாளி நாவரசு என.. யாருக்காவது கால் செய்து பேசிக்கொண்டே இருந்தான்.. இல்லாவிட்டால் அந்தப்பக்கம் இருந்து யாராவது அழைப்பு விடுக்க, இவனது செல்ஃபோன் இங்கே கிணுகிணுக்கும்..!! தாங்கள் இருக்கிற இக்கட்டான நிலையை விளக்கி சொன்னான்.. இந்த நிலையில் இருந்து உடனே மீள்வதற்கு ஆலோசனை கேட்டான்..!!

 
விசாரணை முடியும்வரை அகழியை விட்டு செல்லக்கூடாது என்று வில்லாளன் அறிவுத்தியிருந்தார்.. ஆனால் சிபிக்கோ, உடனே அகழியை விட்டு சென்றுவிடவேண்டும் என்கிற எண்ணம்..!! அதற்காகத்தான் நாவரசுவின் உதவியை நாடினான்.. அவரது செல்வாக்கை காவல்த்துறையிடம் உபயோகிக்குமாறு கேட்டுக்கொண்டான்.. அடிக்கடி அவரைத்தான் தனது செல்ஃபோனில் அழைத்து பேசினான்.. ஆதிராவும் அவரிடம் சிறிது நேரம் பேசினாள்.. தான் இப்போது தைரியமாக இருப்பதாக அவரிடம் தெரிவித்தாள்..!!

 அன்று மாலை செய்தித்தாள்களில் அகழி கிராமத்து பயங்கரம் முதல் பக்கத்தை பிடித்திருந்தது.. 'தோட்டத்தை தோண்ட தோண்ட பிணங்கள்' என்று செய்தித்தலைப்பு கிடந்து அலறியது..!! ஆதிரா மணிமாறனிடம் இருந்து தப்பித்த செய்தி வெளியாகி இருந்தது.. ஆனால் அவளது வாக்குமூலம் எதுவும் வெளியிடப்படவில்லை..!! 'சைக்கோ கொலைகாரனின் உடல் கிடைக்காமல் போலீஸ் திண்டாட்டம்' என்கிற ரீதியில் கிண்டல் இருந்தது.. புலி அடித்து கொன்றிருக்கலாம் என்று யூகம் தெரிவிக்கப்பட்டிருந்தது..!!

 அன்று இரவு.. ஆறுதல் சொல்ல வந்திருந்தவர்கள் எல்லாம், ஆதிராவையும் சிபியையும் தனியாக விட்டுச்சென்ற பிறகு.. வில்லாளனிடம் இருந்து சிபியின் செல்ஃபோனுக்கு அழைப்பு வந்தது..!! காலையில் தான் நடந்துகொண்ட விதத்திற்காக.. முதலில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் வில்லாளன்..!! "ஸாரி.. மார்னிங் நான் ரொம்ப டென்ஷன்ல இருந்தேன்.. கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்னு நெனைக்கிறேன்..!! அவங்க அல்ரெடியே ரொம்ப ஷாக்ல இருக்காங்கன்னுகூட நான் யோசிக்கல..!!" "ம்ம்.. பரவால ஸார்.. இட்ஸ் ஓகே..!!" "இப்போ எப்படி இருக்காங்க..??" "ஷீ இஸ் ஆல்ரைட் நவ்..!!" "குட்..!! அப்புறம்.. அவங்க தங்கச்சி தாமிரா பத்தி எனக்கு கொஞ்சம் டீடைல்ஸ் வேணும்..!!"

 "என்ன..??" "அந்தாள் வீட்டு தோட்டத்துல.. இதுவரைக்கும் எங்களுக்கு ஒரு பதினஞ்சு டெட்பாடிஸ் கெடைச்சிருக்கு.. எல்லாத்தையும் ஐடண்ட்டிஃபை பண்ற வேலை போயிட்டு இருக்கு..!! அதுல தாமிராவோட டெட்பாடியும் இருக்கான்னு கன்ஃபார்ம் பண்ணனும்..!!" "ஓ..!! என்ன டீடைல் வேணும்னு சொல்லுங்க..!!" "காணமப்போனப்போ அவங்க லாஸ்டா போட்ருந்த ட்ரஸ்.. கை கால்ல போட்ருந்த ஜ்வல்ஸ்.. அப்புறம் அவங்களோட பழைய மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் எதாவது இருந்தா வேணும்..!!"

 "தாமிரா காணாமப்போனப்போ குடுத்த கம்ப்ளயின்ட்லயே இதெல்லாம் குடுத்திருக்கோமே..??" "ஓ.. ஆமால்ல..!! அப்போ சரி.. அந்த கேஸ் ஃபைலையே நான் ரெஃபர் பண்ணிக்கிறேன்..!!" "ஓகே..!!" "அப்புறம்.. இன்னொரு விஷயம்.." "சொல்லுங்க..!!" "அகழில இருக்குறது உங்களுக்கு ஸேஃப் இல்லைன்னு தோணுச்சுனா.. நீங்க தாராளமா மைசூர் கெளம்பலாம்..!! ஆனா.. எங்க இன்வெஸ்டிகேஷன்க்கு தேவைப்படுறப்போலாம்.. அவங்க கோவாப்ரெட் பண்ணனும்..!! எய்தர்.. ஃபோன்லயா இருக்கலாம்.. சிலநேரம் நேர்லயும் வர்ற மாதிரி இருக்கலாம்..!!"

 "ஓகே ஸார்.. அது ஒன்னும் ப்ராப்ளம் இல்ல..!!" "தேங்க்ஸ்..!!" பதிலுக்கு ஒரு நன்றியை உதிர்த்துவிட்டு காலை கட் செய்தான் சிபி.. படுக்கையில் கிடந்த மனைவியுடன் தானும் சேர்ந்து கொண்டான்.. வெகுஇயல்பாக மிகமிருதுவாக அவளை அணைத்துக் கொண்டான்..!! கணவனின் கதகதப்புக்குள் அடங்கியவாறே கேட்டாள் ஆதிரா..!!

 "என்ன சொல்றார்..??" "மேலருந்து டோஸ் விட்ருப்பாங்க போல.. காலைல அவ்வளவு பேசுனவரு, இப்போ பம்முறாரு..!!" "ஓ..!!" "மைசூர் போறதா இருந்தா, போங்கன்னு சொல்றாரு.. தேவைப்படுறப்போ மட்டும் வந்தா போதுமாம்..!!" "ம்ம்..!!" "கெடைச்ச டெட்பாடிஸ்ல தாமிராவோட டெட்பாடி இருக்கான்னு கன்ஃபார்ம் பண்ணனுமாம்.. தாமிரா பத்தின டீடயில்ஸ் கேட்டாரு..!! நான், பழைய கேஸ்ஃபைலை பாத்து தெரிஞ்சுக்கங்கன்னு சொல்லிட்டேன்..!!" அவ்வளவுநேரம் ஓரிரு வார்த்தைகளாவது உதிர்த்துக் கொண்டிருந்த ஆதிரா..

இப்போது அதுவுமில்லாமல் அமைதியாகிப் போனாள்..!! ஒருநாள் முழுவதும் வற்றிப்போயிருந்த தங்கையின் நினைவுகள்.. இப்போது மீண்டும் வந்து அவளது நெஞ்சை அடைத்துக்கொண்டன..!! "என்னாச்சு ஆதிரா.. சைலண்ட் ஆயிட்ட..??" "அ..அந்த ஆளு.." "அந்த ஆளு..??" "அ..அந்த ஆளு.. தாமிராவைப் பத்தி எதோ சொல்ல வந்தான் அத்தான்..!!" "ஓ...!!" "தாமிராவை எப்படிலாம் டார்ச்சர் பண்ணினான்னு சொல்ல வந்திருப்பான் நெனைக்கிறேன்..!!" "ம்ம்..!!" "அந்தாளுக்கு எப்படிப்பட்ட வல்கர் புத்தி தெரியுமா..??

எவ்வளவு கூலா.. க்ரூயலான வேலைலாம் பண்ணினான் தெரியுமா..?? நெனச்சுப் பாக்கவே திக்குன்னு இருக்குது..!! தாமிராவை அந்தாளுதான் கொன்னுட்டானா அத்தான்..??" "ம்ம்.. அப்படித்தான் இருக்கனும்..!!" "என் தங்கச்சி பாவம் அத்தான்.. கள்ளங்கபடம் இல்லாதவ.. யாருக்கும் எந்த கெடுதலும் நெனைக்காதவ..!! அ..அவ.. அவ ஒரு பூ மாதிரி அத்தான்.. அந்தாளுட்ட சிக்கி எப்படியெப்படிலாம் சித்திரவதை அனுபவிச்சாளோ..??" சொல்லும்போதே ஆதிராவின் கண்களில் பொலபொலவென கண்ணீர் கொட்ட, சிபி பதறிப்போனான்.

 "ஹேய்.. ஆதிரா.. என்ன இது.. கண்ணை தொடைச்சுக்கோ.. ஃபீல் பண்ணாத ப்ளீஸ்..!!" "ம்ம்..!!" "நடந்து முடிஞ்சதை நெனைச்சு கவலைப்படாத ஆதிரா.. நடக்கப் போறதை பத்தி நெனை..!!" "ம்ம்..!!" "இந்தக் கஷ்டத்துல இருந்து எப்படி நார்மலுக்கு திரும்பலாம்னு யோசி..!!" "ம்ம்..!!" "தாமிராவோட டெட்பாடியை உனக்கு பாக்கணுமா..??" "இல்லத்தான்.. என் தங்கச்சியை அந்தமாதிரி கோலத்துல என்னால சத்தியமா பாக்கமுடியாது.. என் மனசுல அந்த தெம்பு இல்ல..!! போலீஸா பார்த்து கன்ஃபார்ம் பண்ணட்டும்.. நான் பாக்க வரமாட்டேன்..!!"

 "அப்போ.. நாளைக்கு காலைலயே மைசூர் கெளம்பிறலாமா..??" "ம்ம்.. கெளம்பிறலாம்..!!" "உனக்கு ஒன்னும் வருத்தம் இல்லையே.. அகழில இருக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்ட..??" "இல்லத்தான்.. அந்த ஆசைலாம் எப்போவோ போய்டுச்சு..!! இந்த அஞ்சாறு நாள் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன் அத்தான்.. இங்க வந்ததுல இருந்தே எதுவும் சரியில்ல.. நாம மைசூருக்கே போயிறலாம்..!! உண்மையிலேயே தாமிராவுக்கு என்னாச்சுனு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன்.. அதுவும் இப்போ தெரிஞ்சு போச்சு.. போதும்.. கெளம்பிறலாம்..!!" பரிதாபமாக சொன்ன ஆதிராவை ஏக்கமாக ஏறிட்டான் சிபி.

"நானும் நேத்து நைட்டு முழுக்க ரொம்ப துடிச்சுப் போயிட்டேன் ஆதிரா.. உனக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு..!!" "ம்ம்..!!" "நீ அங்க இருந்து ஃபோன் பண்ணதும்தான் எனக்கு உசுரே வந்தது..!!" "ம்ம்..!!" "குறிஞ்சியை பத்தி இத்தனை நாளா எனக்கு ரொம்பலாம் நம்பிக்கை இல்ல.. இப்போ நம்புறேன்..!!" "ம்ம்..!!" "தாமிரா சொன்னது உண்மைதான் ஆதிரா..!!" "எ..என்ன..??" "குறிஞ்சி நல்லவதான்.. என் கண்மணியை எனக்கு காப்பாத்தி குடுத்திருக்குறாளே..?? நீ இல்லாம நான் என்ன செஞ்சிருப்பேன்னு எனக்கு தெரியலடி..!!" உணர்ச்சி பெருக்கெடுத்தவனாய் சிபி சொல்ல, "அத்தான்..!!" அவனது அன்பில் கசிந்துருகிப் போனாள் ஆதிரா.

 "இனி நமக்கு எந்தக்கஷ்டமும் இல்ல ஆதிரா.. நிம்மதியா தூங்கு.. காலைல இந்த ஊரை விட்டு கெளம்பிறலாம்..!!" "ம்ம்.. சரித்தான்..!!" மனைவியை இறுக்கி அணைத்துக் கொண்டான் சிபி.. கணவனின் அணைப்புக்குள் சுகமாக அடங்கிப் போனாள் ஆதிரா..!! இமைகளால் விழிகளைப் போர்த்திவிட்டு.. இருவரும் நித்திரைக்காக காத்திருந்தனர்..!! அடுத்தநாள் காலை.. எப்போதையும்விட சற்று தாமதமாகவே கண்விழித்தாள் ஆதிரா..!!

ஜன்னலின் வழியே பாய்ந்த சூரியக்கதிர்களின் வெப்பம்.. முகத்தில் பரவவுமே இமைகளை மெல்ல மெல்ல பிரித்தாள்..!! உடம்பை முறுக்கி புரண்டு படுத்தாள்.. சிபி படுத்திருந்த இடம் இப்போது காலியாக இருக்க, நெற்றியை சற்றே சுருக்கினாள்.. அடுத்த நொடியே வாயை அகலமாக திறந்து, ஒரு பெரிய கொட்டாவியை வெளிப்படுத்தினாள்..!!
சோம்பலுடனே எழுந்து முகம் கழுவிக்கொண்டாள்.. ப்ரஷில் பேஸ்ட் பிதுக்கி பல்தேய்த்துக் கொண்டாள்..!! கலைந்திருந்த கூந்தலைச் சுருட்டி கொண்டையிட்டவாறே.. படியிறங்கி கீழே வந்தாள்..!! 

"என்னங்க..!!" கணவனை ஒருமுறை அழைத்துப் பார்த்தாள். கீழ்த்தளத்திலும் சிபியை எங்குமே காணவில்லை..!! சமையலறையில் இருந்து ஏதோ சப்தம் வந்தது.. எட்டிப் பார்த்தாள்.. உள்ளே.. வனக்கொடி பாத்திரங்கள் தேய்த்துக் கொண்டிருந்தாள்..!! எட்டிப்பார்த்த ஆதிராவை அவள் காண நேரிட்டதும்.. "ஆதிராம்மா.. எந்திரிச்சாச்சா..?? காப்பி போட்டு கொண்டாரவா..??" என்று கனிவாக கேட்டாள். "ம்ம்.. கொண்டாங்கம்மா..!!" "இரும்மா.. ரெண்டே நிமிஷம்..!!" வனக்கொடி சொன்னதும் அங்கிருந்து நகர நினைத்த ஆதிரா.. சற்றே தயங்கி நின்று.. பிறகு மீண்டும் சமையலறைக்குள் பார்த்து கேட்டாள்..!!

 "அவர் எங்கயும் வெளில போனாராம்மா.. பாத்திங்களா நீங்க..??" "இல்லையம்மா.. பாக்கலையே..?? நான் இப்பத்தான வந்தேன்..!!" "ஓ.. சரி சரி..!!" ஆதிரா கிச்சனை விட்டு கிளம்பினாள்..!! ஹாலின் இன்னொரு மூலைக்கு சென்று.. ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தாள்.. பனியில் நனைந்துபோய் நின்றிருந்தது அவர்களது கார்..!! தொலைவாக எங்கும் செல்லவில்லை என்று தோன்றியது.. அருகில் எங்காவது உலாவ சென்றிருப்பார் என்று நினைத்துக் கொண்டாள்..!!

 மீண்டும் மாடிப்படியேறி தங்கள் அறைக்கு வந்தாள்.. வந்ததுமே தனது செல்ஃபோனை கையில் எடுத்தாள்.. சிபியின் நம்பருக்கு கால் செய்தாள்..!! அடுத்த முனையில் ரிங் சென்றது.. அதே நேரம்.. "க்க்க்க்ர்ர்ர்ர்ர்.. க்க்க்க்ர்ர்ர்ர்ர்..!!" என்று அறைக்குள் ஒரு சப்தம்.. தலையணைக்கு அருகில் கிடந்து துடித்துக் கொண்டிருந்தது சிபியின் செல்ஃபோன்..!!

 'ப்ச்.. ஃபோனைக்கூட இங்கய போட்டுட்டு எங்க போனாரு..??' ஆதிரா மனதுக்குள்ளேயே அவ்வாறு சலித்துக்கொண்டபோதுதான்.. "டப்.. டப்டப்.. டப்.. டப்டப்..!!!" அவளுக்கு மிக நெருக்கமாக அந்த சப்தம் கேட்டது. அது என்ன சப்தம் என்று ஆதிராவுக்கு புரியவில்லை..!! முகத்தில் ஒருவித குழப்பரேகைகள் பரவ.. எங்கிருந்து அந்த சப்தம் வருகிறதென்று அந்த அறையை சுற்றி சுற்றி பார்த்தாள்..!! ஒரு சிலவினாடிகள்.. ஆதிராவால் அறைக்குள் எந்த வித்தியாசத்தையும் உணரமுடியவில்லை..!!

 "டப்.. டப்டப்.. டப்.. டப்டப்..!!!" எதுவும் புரியாமல் அப்படியும் இப்படியுமாய் தலையை அசைத்துக்கொண்டிருந்தவளின் கவனத்தை.. எதேச்சையாகத்தான் அந்தப்பொருள் கவர்ந்தது..!! நேற்றிரவு சிபி மூடிப்படுத்த போர்வை இப்போது நீள்வாக்கில் சுருண்டிருக்க.. அதற்குள்ளிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருந்தது அந்தப்புத்தக்கம்..!! புத்தகத்தின் அட்டையில் அதன் தலைப்பு பளிச்சென்று மின்னியது..!!

 "கண்ணாமூச்சி ரே ரே..!!" 'இதை அலமாரிலதான வச்சேன்.. இங்க எப்படி வந்துச்சு..??' - குழப்பமாக நெற்றியை பிசைந்தாள் ஆதிரா. "டப்.. டப்டப்.. டப்.. டப்டப்..!!!" அந்த சப்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்க.. அப்படியும் இப்படியுமாய் திரும்பிய ஆதிராவின் பார்வை, இப்போது சட்டென ஓரிடத்தில் நிலைத்தது.. அப்படியே கவனத்தை குவித்து அந்தஇடத்தை உற்றுப் பார்த்தாள்..!!

சுருண்டிருந்த சிபியின் போர்வைக்குள் ஒரு சிறியஅசைவு தெரிந்தது.. உள்ளிருந்து ஏதோ ஒன்று துடிப்பது போல..!! அதனுள் இருந்துதான் சப்தம் வருகிறதென்று தெளிவாக புரிந்தது..!!

 "டப்.. டப்டப்.. டப்.. டப்டப்..!!!"

 
உடலுக்குள் ஏதோ ஒருவித சிலிர்ப்பு பரவ ஆரம்பிக்க.. ஆதிரா தனது கையை மெதுவாக நீட்டினாள்.. அந்தப் போர்வையை மெல்ல நெகிழ்த்தினாள்..!! உள்ளிருந்து படக்கென வெளிப்பட்டது அந்த பட்டாம்பூச்சி.. அழகான தனது சிவப்பு சிறகுகளை பட்பட்டென அசைத்து, அந்த அறைக்குள்ளேயே சுற்றிச்சுற்றி பறக்க ஆரம்பித்தது..!!

பறக்கிற அந்த பட்டாம்பூச்சியை பார்க்க பார்க்க.. ஆதிராவின் மனதுக்குள் ஒரு இனம்புரியாத பதற்றம் கிளம்பியது..!!

 "அப்படியே அந்த பட்டாம்பூச்சியாவே நானும் மாறிடலாம் போல இருக்கு..!!" முன்பொருமுறை கன்னத்தில் குழிவிழ கணவன் சொன்னது இப்போது நினைவுக்கு வரவும்.. கண்களில் திகில் கொப்பளிக்க அந்த பட்டாம்பூச்சியையே வெறித்துப் பார்த்தாள் ஆதிரா..!!



No comments:

Post a Comment