Monday, December 15, 2014

கண்ணாமூச்சி ரே ரே - தமிழில் ஒரு திரில் தொடர் - பாகம் - 12


அகழி செல்லும் மலைப்பாதையில் கார் மிதமான வேகத்தில் ஊர்ந்துகொண்டிருந்தது.. நீர் சொட்டுகிற தலைமயிருடன் சிபி காரை செலுத்திக் கொண்டிருந்தான்.. அவனுக்கருகே தெப்பலாக நனைந்த தேகத்துடன் ஆதிரா அமர்ந்திருந்தாள்..!! திறந்திருந்த ஜன்னலின் வழியே காருக்குள் வீசிய குளிர்காற்று ஆதிராவின் மேனியை வருட.. அவளுக்குள் ஜிவ்வென்று ஒரு சிலிர்ப்பு.. மார்புப்பந்துகளுக்கு இடையே ஆழமாய் ஒரு இறுக்கத்தை அவளால் உணர முடிந்தது..!!

 "விண்டோ வேணா க்ளோஸ் பண்ணிக்க ஆதிரா..!!" எதேச்சையாக மனைவியை ஏறிட்ட சிபி கனிவுடன் சொல்ல.. ஆதிரா கார்க் கண்ணாடியை ஏற்றி விட்டுக் கொண்டாள்.. அந்தக் கண்ணாடியிலேயே தலையையும் சாய்த்துக் கொண்டாள்.. சாலைக்கு பக்கவாட்டில் சலசலப்புடன் ஓடிய குழலாற்றையே வெறித்து பார்த்தாள்..!! காருக்குள் இப்போது ஒரு கதகதப்பு பரவினாலும்.. அதையும் மீறி ஆதிராவுக்கு குளிரெடுத்தது..!! உடல் வெடவெடக்க, உதடுகள் படபடத்து துடித்தன.. கீழ்வரிசைப் பற்கள் கிடுகிடுத்து மேல்வரிசைப் பற்களுடன் அடித்துக் கொண்டன..!!

உதட்டோடும் உடலோடும் சேர்ந்து அவளது உள்ளமும் மெலிதாக நடுங்கிக் கொண்டிருந்தது..!!
ஆதிரா மனதளவில் சற்றே தடுமாறிப் போயிருந்தாள்.. அவளுடைய புத்தியில் ஒரு குழப்ப விரிசல் விழுந்திருந்தது..!! தன்னைச் சுற்றி ஏதோ அசாதாரண சம்பவங்கள் நடப்பதுபோல் அவளுக்குள் ஒரு உணர்வு.. அவளது மனத் தடுமாற்றத்திற்கு அந்த உணர்வே காரணம்..!!

அப்படி உணர்வதெல்லாம் உண்மைதானா அல்லது அத்தனையும் மனம் உருவாக்கிக்கொண்ட மாய பிம்பங்களா என்றொரு கேள்வியும் அவளுக்குள் அழுத்தமாக எழுந்தது.. அந்தக் கேள்விக்கு சரியான பதில் சொல்லமுடியாமல்தான் அவளது புத்தியில் ஏற்பட்ட அந்த குழப்ப விரிசல்..!! தனது உணர்வையும் அறிவையும் தானே நம்பமுடியாத நிலையில்தான் ஆதிரா இருந்தாள்..!!

 'ஒரு மோசமான விபத்தால் ஒருவருட நினைவுகளை தொலைத்த மூளைதானே..?? திருட்டுப்போன ஞாபகங்களை திரும்ப கொணர்வதற்கும் திராணியற்ற மூளைதானே..?? தளர்ந்து போயிருக்கிற நிலையில் தவறாக என்னை வழி நடத்துகிறதோ..?? இயல்பை துறந்துவிட்டு இல்லாததை எல்லாம் கற்பனை செய்கிறதோ..?? அருவத்திற்கு உருவம் கொடுக்கிறதோ..?? நீருக்கடியில் பார்த்த உருவம் நிஜமா போலியா..?? நள்ளிரவில் கண்ட காட்சி நனவா கற்பனையா..??' ஆதிரா மிகவும் குழம்பித்தான் போயிருந்தாள்..!!

அவளது குழப்பத்தை கணவனிடம் சொல்லவும் அவளுக்கு விருப்பம் இல்லை.. அவளே தெளிவற்றுப் போயிருக்கையில் அவனிடம் என்னவென்று சொல்வாள்..?? அதுவுமில்லாமல்.. அப்படி சொல்வதனால் அகழியில் ஐந்தாறு நாட்கள் கழிக்கிற அவளது ஆசைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற அவஸ்தையான எண்ணம் வேறு ஒருபக்கம்..!!

அதனால்தான்.. "என்னாச்சு ஆதிரா.. ஏதோ சீரியஸா யோசிச்சுட்டு வர்ற..??" என்று சிபி கேட்டபோது, "ஒ..ஒன்னுல்லத்தான்.. இன்ஸ்பெக்டர் சொன்னதைத்தான் யோசிச்சுட்டு இருந்தேன்..!!" என குழப்பத்தை புதைத்து இயல்புக்கு திரும்ப முயன்றாள். மேலும் சிறிது நேரத்தில் இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்..!! காருக்குள் இருந்து ஆதிரா இறங்கிய கோலத்தை கண்டதுமே.. "என்னக்கா.. என்னாச்சு..??" என்று பதற்றமாக கேட்டாள்

எதிரே வந்த தென்றல். "ஒ..ஒன்னுல்ல தென்றல்.. தண்ணிக்குள்ள தவறி விழுந்துட்டேன்..!!" "அச்சச்சோ.. எப்படிக்கா..??" "ப்ச்.. அதை விடு.. அம்மா எங்க..??" "அம்மா எங்க வீட்ல இருக்காங்கக்கா.. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க..!! அண்ணன் ஊர்லருந்து வந்திருக்கான்.. அதான்.. என்னை மொதல்ல அனுப்பி வச்சாங்க..!!" "ஓ..!!" "சமையல் வேலைலாம் முடிச்சுட்டேன்க்கா.. சாப்பிடுறீங்களா..??"

 "இல்ல தென்றல்.. பசிக்கல.. கொஞ்ச நேரம் ஆகட்டும்.. அம்மா வந்துரட்டும்..!!" "ம்ம்.. சரிக்கா..!!" தென்றலின் பதிலைக் கூட எதிர்பாராமல் ஆதிரா வீட்டுக்குள் நுழைந்து விடுவிடுவென நடந்தாள்.. காரை நிறுத்திவிட்டு சற்று தாமதமாக வந்த சிபியும் மனைவியை பின்தொடர்ந்தான்..!! அவர்களது அறைக்கு சென்று மாற்று உடை அள்ளிக்கொண்டாள் ஆதிரா.. திரும்ப தரைத்தளத்துக்கு வந்து குளியலறைக்குள் புகுந்துகொண்டாள்..!!

சுவற்றோடு பொருந்தியிருந்த குமிழைப் பற்றி திருக.. மேலிருந்து ஜிவ்வென நீர்த்திவலைகள் கொட்டின..!! சரி செய்யப்பட்டிருந்த கீஸரின் உட்சென்று வெப்பமேற்றிக்கொண்ட நீர்க்கற்றைகள்.. எஃகு வட்டின் சிறுசிறு துவாரங்களின் வழியே வெதுவெதுப்பாக வெளிக்கொட்டின..!! ஏதோ ஒரு சிந்தனையில் எங்கேயோ வெறித்த பார்வையுடனே ஷவரில் நனைந்துகொண்டிருந்தாள் ஆதிரா..!! குளித்து முடித்து வேறு உடை அணிந்துகொண்டாள்.. குளியலறையில் இருந்து வெளிப்பட்டபோது வனக்கொடி எதிர்ப்பட்டாள்..!!

ஆற்றுக்குள் விழுந்த சம்பவத்தை பற்றி வனக்கொடி பதைபதைப்புடன் கேட்க.. ஆதிராவோ அதுபற்றிய ஆர்வமில்லாமல் அசுவாரசியமாகவே பதில் அளித்தாள்..!! பிறகு.. பேச்சை மாற்றும் விதமாக.. வனக்கொடி மகனின் வருகை பற்றி விசாரித்தாள்..!! "கதிர் வந்துட்டார் போல..??" "ஆ..ஆமாம்மா..!! காலைலயே வந்துட்டான்.. கார்ல நீங்க அந்தப்பக்கம் போறீங்க.. இவன் இந்தப்பக்கம் வந்துட்டான்..!!" 

"ம்ம்.. எப்படி இருக்காரு..??" "அவனுக்கென்னம்மா.. நல்லாருக்கான்..!! வஞ்சிரமீனு கொழம்பு வச்சா வக்கனையா திம்பான்.. சாப்புட வச்சுட்டு வர செத்த நேரமாயிருச்சு..!! களமேழி போனீகளே வந்துட்டிகளா.. பசியா இருப்பிகளே சாப்புட்டிகளான்னு.. எனக்கு நெனைப்பு பூரா இங்கயேதான் இருந்துச்சு..!! அதான்.. ஆக்கிப்போட்டுட்டு அவசர அவசரமா ஓடியாறேன்..!!" "அதனால என்னம்மா.. பரவால..!! அதான் தென்றல் இங்க இருக்காளே..?? அதுமில்லாம எனக்கு பசியே இல்லம்மா.. வர்ற வழிலதான் நல்லா சாப்பிட்டு வந்தேன்..!!

அவர்தான் ஒன்னும் சாப்பிடல.. பசியா இருப்பார்னு நெனைக்கிறேன்.. அவரை வர சொல்றேன்.. அவருக்கு மட்டும் கொஞ்சம் சாப்பாடு எடுத்து வைங்க..!!" வனக்கொடியிடம் சொல்லிவிட்டு மாடிக்கு படியேறினாள் ஆதிரா.. அறையை அடைந்தவள் சிபியை கீழே அனுப்பினாள்..!! ஈரக்கூந்தலை உலர்த்தலாம் என்று பால்கனிக்கு வந்தவள்.. வீட்டுக்கு முன்புறம் ஓடிய குழலாற்றை காண நேரிட்டதுமே.. வந்தவேலையை மறந்துவிட்டு வேறு சிந்தனைகளில் மூழ்கிவிட்டாள்..!!

அதே குழப்ப சிந்தனைகள்தான்.. குழலாற்றுக்குள் சற்றுமுன்பு வீழ்ந்தெழுந்த வினாடிகள்.. குறிஞ்சியைப்பற்றி சிறுவயதுமுதல் கேள்விப்பட்ட புனைவுகள்.. அகழி வந்ததுமுதல் அடுக்கடுக்காக நடந்த சம்பவங்கள்.. 'அக்காஆஆ' என்று காதுக்குள் ஒலிக்கிற தாமிராவின் ஏக்கக்குரல்..!!




ஆதிரா உணர்ச்சிக் கொந்தளிப்புடன் உடல் சிலிர்க்க நின்றிருந்தாள்..!! அவளும் தாமிராவும் சிறுமிகளாக இருந்தபோது.. ஆற்றங்கரை புல்வெளியில் இருவரும் ஆடிய கண்கட்டி விளையாட்டு.. இப்போது அவளுடைய ஞாபகத்துக்கு வந்தது..!! அதோ.. ஆற்றோரத்தில் கிளைகள் விரித்து அகலமாக நின்றிருக்கும் அந்த மரத்தின் அடிவாரத்தில்தான்..!!

கண்களில் கருப்புத் துணியை கட்டிக்கொண்டு.. காற்றில் கைகள் அசைத்து தங்கையை தேடியவாறே.. குயிலின் குரலில் பாடினாள் சிறுமி ஆதிரா..!! "கட்டிலும் கட்டிலும் சேர்ந்துச்சா..??" "சேர்ந்துச்சு.. சேர்ந்துச்சு..!!" - அக்காவின் பிடியில் சிக்கிக்கொள்ளாமல்.. அவர்களை சுற்றி வரையப்பட்டிருந்த சிறுவட்டத்துக்குள் அங்குமிங்கும் ஓடியவாறே.. வாய்கொள்ளா சிரிப்புடன் பதில்ப்பாட்டு பாடினாள் குட்டி தாமிரா..!!

 "காராமணி பூத்துச்சா..??" "பூத்துச்சு.. பூத்துச்சு..!!" "வெட்டின கட்டை தழைச்சுச்சா..??" "தழைச்சுச்சு.. தழைச்சுச்சு..!!" "வேரில்லா கத்திரி காய்ச்சுச்சா..??" "காய்ச்சுச்சு.. காய்ச்சுச்சு..!!" தங்கை பற்றிய சிந்தனையில் மூழ்கி சிலை போலவே உறைந்திருந்தாள் ஆதிரா.. எவ்வளவு நேரம் அவ்வாறு நின்றிருந்தாள் என்பது அவளுக்கே நினைவில்லாத மாதிரி..!! திடீரென இரண்டு வலுவான கரங்கள் அவளை பின்பக்கமாக இருந்து அணைத்துக் கொள்ள.. ஆரம்பத்தில் சற்று பதறிப்போய்தான் சுயநினைவுக்கு வந்தாள்.. உடலை ஒருமாதிரி முறுக்கி விழுக்கென்று துள்ளினாள்..!!

அப்புறம்.. அணைத்துக் கொண்டவன் தனது கணவன்தான் என்பது புரிந்ததும்.. அப்படியே அடங்கிப் போனாள்..!! உதட்டில் ஒரு மெலிதான முறுவலுடன்.. அவனுடைய அணைப்புக்குள் சுகமாய் புதைந்து போனாள்..!! சாப்பிடுவதற்கு முன்பு சிபியும் சிறு குளியல் போட்டிருந்தான்.. அவன் மேனியில் இருந்து கிளம்பிய சோப்பு வாசனை ஆதிராவின் நாசிக்குள் புகுந்தது..!! மனைவியின் காதுமடலை மூக்கால் உரசிய சிபி.. பிறகு அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்து முகர்ந்து முத்தமிட்டவாறே.. இதமான குரலில் கேட்டான்..!!

 "என்னடா ஆச்சு..?? தண்ணிக்குள்ள விழுந்த ஷாக் இன்னும் போகலையா..??" "அ..அதுலாம் ஒன்னுல்லத்தான்..!!" "அப்புறம் ஏன் ஆத்தையே வெறிச்சு பாத்துட்டு இருக்க..??"
"இ..இல்ல.. சு..சும்மாதான்..!!" "ஹ்ம்ம்ம்ம்.. நடந்ததையே நெனச்சுட்டு இருக்காத ஆதிரா.. Try to be relaxed..!! கொஞ்சம் ரெஸ்ட் எடு.. எல்லாம் சரியா போகும்..!!" "ரெஸ்டா..??" "ம்ம்.. ரெண்டு நாளா நைட்டு சரியாவே தூங்கலை நீ.. காலைல வேற சீக்கிரமே எழுந்துடுற.. கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்கி எந்திரி..!!

மைண்ட்க்கு ஃப்ரெஷா இருக்கும்..!!" "நல்ல ஐடியாதான்.. ஆனா எனக்கு தூக்கம் வரலையே..??" "தூக்கம் வரலையா..?? என்ன பண்ணலாம்..?? ம்ம்ம்ம்..." சிலவினாடிகள் யோசனையாக தாடையை சொறிந்த சிபி, பிறகு உதட்டில் ஒரு புன்னகையுடன் சொன்னான். "ஓகே.. நான் உன்னை தூங்க வைக்கட்டுமா..??" "நீங்களா..?? எப்படி..??" ஆதிராவின் கண்களில் ஒரு ஆர்வ மின்னல். "வா.. சொல்றேன்..!!" ஆதிராவின் கரங்களைப் பற்றி கட்டிலுக்கு அழைத்து சென்றான் சிபி.. அவளை அமரவைத்து தானும் அமர்ந்துகொண்டான்..!!

மெத்தையில் சாய்வாக படுத்துக் கொண்டவன்.. மனைவியை இழுத்து தன் மார்பில் போட்டுக் கொண்டான்..!! வெட்கமும் புன்முறுவலுமாய் அவள் இவனை ஏறிட.. "குட்டிப்பொண்ணுக்கு நான் தலைகோதிவிட்டு தட்டிக் குடுப்பேனாம்.. எந்தக்கவலையும் இல்லாம செல்லக்குட்டி என் நெஞ்சுல படுத்து தூங்குவாளாம்..!!" காதலுடன் குறும்பை கலந்து சொன்னான்..!! ஆதிரா சிபியின் மார்பில் தலைசாய்த்து படுத்துக் கொண்டாள்.. இமைகளை மெலிதாக மூடிக்கொண்டாள்..!! சிபி அவளது கூந்தலுக்குள் கைவிரல்களை கோர்த்து.. அங்குமிங்கும் அலைபாயவிட்டு.. இதமாக வருடிக் கொடுத்தான்..!!

இன்னொரு கையால் அவளுடைய முதுகு சதைகளை மிருதுவாக மசாஜ் செய்து தட்டிக்கொடுத்தான்..!! அவ்வப்போது அவளது நெற்றியில் 'இச்.. இச்.. இச்..' என்று இதமான முத்தம் வேறு..!! சிபியின் செய்கைகள் நிஜமாகவே ஆதிராவுக்கு மிகவும் சுகமாக இருந்தது.. அவனுடைய கைவிரல்களின் தடவல், அவளது மனதுக்குள் ஒரு அமைதி பரப்புவதை உணர்ந்தாள்.. அவனுடைய இதயத்துடிப்பின் ஓசை இவளது காதுக்குள் விழ, இவளது இதயத்துடிப்பு படபடப்பு நீங்கி சீரானது.. அவனுடைய மூச்சுக்காற்றின் வெப்பத்தில், அவளுக்கு அவசியமாயிருந்த ஒருவித பாதுகாப்பு கதகதப்பு கிடைத்தது..!!

 சிறிது நேரம்..!! தூக்கம் வராவிட்டாலும், கணவனின் அணைப்பில் கட்டுண்டு சொக்கிக்கிடந்த ஆதிரா.. சற்று தாமதமாகத்தான் சிபியிடம் அந்த மாற்றத்தை உணர்ந்தாள்.. உடனே முகத்தை சற்று நிமிர்த்தி பார்த்தவளுக்கு, 'களுக்' என்று சிரிப்பு வந்துவிட்டது.. அந்த சிரிப்பின் சப்தம் வெளியே வராமல் இருக்க, அவசரமாய் தன் வாயை பொத்திக் கொண்டாள்..!! ஆதிராவுக்கு சிரிப்பு எழுந்ததன் காரணம்.. சிபி இப்போது அசந்து தூங்கிப் போயிருந்தான்..!! கண்கள் செருகிப்போய்.. வாயை 'ஓ'வென்று திறந்து வைத்தவாறு.. மெலிதான குறட்டை ஒலியுடன்..!!

ஆதிராவை தூங்க வைக்கிற முயற்சியில் அவனே அவ்வாறு அசந்து தூங்கிப் போயிருக்க.. அவளோ முகத்தில் ஒரு புன்னகையுடன்.. 'ஹையோ, ஹையோ' என தலையில் தட்டிக் கொண்டாள்..!! அவனுடைய உறக்கத்தை கலைக்காமல் அவனது மார்பில் இருந்து விலகினாள்.. முன்வந்து புரண்டிருந்த கேசத்தை விலக்கி அவனது நெற்றியில் ஒரு முத்தம் வைத்தாள்..!! என்ன செய்யலாம் என்று ஒருகணம் யோசித்தவள்.. பிறகு, கீழே செல்லலாம் என்ற முடிவுடன் கட்டிலில் இருந்து எழுந்தாள்..!!

 படியிறங்கி ஹாலுக்கு வர.. சமையலறைக்குள் வனக்கொடி பாத்திரத்தை உருட்டுகிற சப்தம் கேட்டது.. !! நடந்து வந்து சோபாவில் அமர்ந்தாள்.. ஏதோ ஒரு சிந்தனையுடனே ரிமோட் எடுத்து டிவியை ஆன் செய்தாள்.. டிவி ஓட ஆரம்பித்த பிறகும் அந்த சிந்தனையிலே மூழ்கியிருந்தவள், சிறிது நேரம் கழித்துத்தான் டிவி திரையை பார்த்தாள்..!! விலங்குகளின் வாழ்க்கைமுறை பற்றிய ஆவணப்படங்களை ஒளிபரப்பு செய்கிற அலைவரிசை அது.. முதுகில் மூன்று கோடுகளோடு ஒரு அணில், மரக்கிளைகளில் அங்குமிங்கும் துள்ளியோடிக்கொண்டிருக்க, பின்னணியில் ஒரு ஆணின் குரல் ஆங்கிலத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது..!!

 "ப்ச்..!!" சலிப்பை உதிர்த்த ஆதிரா, கையிலிருந்த ரிமோட்டில் வேறு சேனல் மாற்றுகிற பட்டனை அழுத்தினாள்.. அகழி வந்த முதல்நாள் நடந்தது போலத்தான்.. சேனல் மாறவில்லை.. அதே சேனலே தடையில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது..!! ஆதிரா நான்கைந்துமுறை கட்டைவிரல் நோக அந்த பட்டனை அழுத்தமாக அமுக்கிப் பார்த்தாள்.. சேனல் மாறவில்லை..!!

ரிமோட்டை பிடித்து உள்ளங்கையில் 'பட்.. பட்.. பட்..' என்று தட்டினாள்.. மீண்டும் டிவி முன்பு ரிமோட்டை நீட்டி முயன்று பார்த்தாள்.. அலைவரிசையில் எந்த மாற்றமும் இல்லை.. அணில் இப்போது கொட்டை கொறித்துக் கொண்டிருந்தது..!! எரிச்சலான ஆதிரா சோபாவில் இருந்து விருட்டென எழுந்தாள்.. டிவியை நெருங்கி அதன் அடிபாகத்தில் இருந்த பட்டனை அழுத்தி வேறு சேனல் மாற்ற முயன்றாள்.. ம்ஹூம்.. பலன் இல்லை.. அதே சேனல்..!! 

"ப்ச்.. என்னாச்சு இந்த டிவி சனியனுக்கு..??" வாய்விட்டே எரிச்சலை வெளிப்படுத்திய ஆதிரா.. சில வினாடிகள் டிவி திரையையே வெறுப்பாக பார்த்தாள்..!! பிறகு, அந்த வெறுப்பு சற்றும் குறையாமல்.. 'ஆணியே புடுங்க வேணாம்' என்று முனுமுனுத்தவாறே.. டிவியின் கேபிள் கனெக்ட் ஆகியிருக்கிற மெயின் ஸ்விட்சை பட்டென ஆஃப் செய்தாள்.. அடுத்த நொடியே அவளுடைய மனதுக்குள் மெலிதான ஒரு திகில் உணர்வு.. ஸ்விட்ச் ஆஃப் செய்தபிறகும், அணைந்துபோகாமல் டிவி ஓடிக்கொண்டிருந்தது.. தெளிவில்லாமல்.. அலை அலையாக.. ஒருமாதிரி வெடுக் வெடுக்கென வெட்டிக்கொண்டு..!!

 "ஸ்ஸர்ர்ர்ரக்.. ஸ்ஸர்ர்ர்ரக்.. ஸ்ஸர்ர்ர்ரக்..!!" என்று வினோத சப்தம் வேறு. அணைந்துபோகாத டிவியையே ஆதிரா விரிந்த விழிகளுடன் மிரட்சியாக பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான்.. படக்கென திரையில் அந்த பிம்பம் தோன்றியது.. சிவப்பு அங்கி போர்த்திய உருவம்.. முகத்தில் வழிகிற கூந்தல் கற்றைகள்.. அந்த கூந்தலின் வழியாக இவளையே உற்றுப்பார்க்கிற ஒற்றை விழி..!!




மிரண்டு போனாள் ஆதிரா.. பயத்தில் பதறித்துடித்த இருதயத்துடன்.. 'ஆ'வென்று கத்துவதற்கு அவள் வாயெடுக்கும்போதே.. டிவி திரை படாரென அணைந்துபோய் ஒற்றைப் புள்ளியாக மறைந்தது..!! அதே நொடி.. "தட்ட்.. ட்ட்டடட்ட்டட்ட்ட... டமார்.. தட்ட்.. தட்.. தட்..!!!!!" என்று பக்கத்து அறைக்குள் இருந்து பலத்த சப்தம். மிரட்சி அப்பிய விழிகளுடனே ஆதிரா பக்கத்து அறையை திரும்பி பார்த்தாள்..

பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த வனக்கொடியும் பதறிப்போய் வெளியே ஓடிவந்தாள்..!! "எ..என்னம்மா சத்தம்..??" "எ..என்னன்னு தெரியலையே..!!" ஆதிராவும் வனக்கொடியும் குழப்பமும் திகைப்புமாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.. பிறகு, சப்தம் வந்த அறையை நோக்கி மெல்ல நகர்ந்தார்கள்.. முன்பு ஆதிராவும் தாமிராவும் தங்கிக்கொள்கிற அறைதான் அது..!! அறைக்கதவை தள்ளி இருவரும் உள்ளே நுழைந்தார்கள்..

அறைக்குள் சில பொருட்கள் ஆங்காங்கே கலைந்து கிடந்தன.. பீங்கான் கோப்பை தரையில் உருண்டிருந்தது.. மேஜை விளக்கு தலைகுப்புற கிடந்தது.. கம்ப்யூட்டர் மவுஸ் அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருந்தது..!! இவர்கள் உள்ளே நுழைந்ததுமே.. திறந்திருந்த ஜன்னல் கம்பிகளின் வழியாக அணில் ஒன்று வெளியே ஓடுவது தெரிந்தது..!!

 "ச்சே.. இந்த அணிலு பண்ற அட்டகாசம் தாங்க முடியல.. எப்பப்பாரு.. வீட்டுக்குள்ள பூந்து எதையாவது உருட்ட வேண்டியது.. எல்லாத்தையும் வெஷத்தை வச்சு கொல்லப்போறேன் ஒருநாளு..!! ஹ்ம்ம்.. இந்த ஜன்னலை யாரு இப்படி தெறந்து வச்சான்னு தெரியலையே.. மூடித்தான கெடந்துச்சு..??" சலிப்பாக சொல்லிக்கொண்டே வனக்கொடி ஜன்னலை நோக்கி நகர்ந்தாள்.. ஜன்னல் கதவுகளை இழுத்து தாழ் போட்டாள்..!! அதேநேரம் ஆதிராவின் பார்வை எதேச்சையாக வேறெங்கோ சென்றது.. தரையில் விரிந்து கிடந்த ஒரு புத்தகத்தின் மேல் சென்று படிந்தது..!!

அறையை ஒட்டி நின்றிருக்கும் மரஅலமாரியில் அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்களில் இருந்து.. ஒன்று மட்டும் கீழே நழுவி விழுந்திருந்தது..!! அந்த புத்தகத்தின்மீது 'சத்.. சத்.. சத்..' என சப்தம் எழுகிற மாதிரி.. சிவப்பு நிறத்தில் ஏதோ திரவம் மேலிருந்து துளித்துளியாய் சொட்டிக்கொண்டிருந்தது..!! தாமிராவுக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் உண்டு..!!

அதற்கென அவள் உபயோகிக்கிற பலவகை வண்ண மைகள்.. கண்ணாடி சீசாக்களில் அடைக்கப்பட்டு.. அலமாரியின் மேலே வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும்..!! அந்த சீசாக்களில் ஒன்றுதான் இப்போது மேலேயே கவிழ்ந்து.. சிவப்பு மையை மட்டும் சொட்டு சொட்டாய் கீழே சிந்திக் கொண்டிருந்தது..!! ஆதிரா பார்வையை கூர்மையாக்கி அந்த புத்தகத்தின் மீது வீசினாள்..!! பிரபல எழுத்தாளர் ஒருவரால் எழுதப்பட்ட நாவல் அது.. அதன் அட்டையில்.. கருப்புநிற பின்னணியில் சிவப்புநிற எழுத்துக்களாக கதையின் தலைப்பு மின்னியது..!!

 "கண்ணாமூச்சி ரே ரே..!!"







No comments:

Post a Comment