Friday, December 19, 2014

கண்ணாமூச்சி ரே ரே - தமிழில் ஒரு திரில் தொடர் - பாகம் - 18


அடுத்தநாள் காலை ஆரவாரமாக விடிந்தது.. அகழி கிராமம் விழாக்கோலம் பூண்டிருந்தது..!! கோயிலை சுற்றிலும் மாக்கோலமும், மாவிலை தோரணங்களும்.. கோபுரத்தில் கட்டப்பட்டிருந்த ஒலிப்பெருக்கியில் கோவிந்தராஜனின் கணீர் குரல்..!!

 "சின்னஞ்சிறு பெண் போலே.. சிற்றாடை இடை உடுத்தி.. சிவகங்கை குளத்தருகே.. ஸ்ரீதுர்க்கை சிரித்திருப்பாள்..!!" வெள்ளையும் காவியுமாய் புதுவர்ணப் பூச்சோடு கோயில் சுவர்கள் பளபளத்தன.. பக்கத்திற்கு ஒன்றாய் பச்சை வாழையுடன் கோயிலின் வாயில்..!! வாயிலில் இருந்து நீண்ட சாலையில் புதிது புதிதாய் நிறைய கடைகள் முளைத்திருந்தன.. பலூன் கடை, பாப்கார்ன் கடை, வளையல் கடை, வாழைப்பழ கடை.. எல்லா கடைகளின் முன்பாகவும் மக்கள் கூட்டம்..!!

குழந்தைகளை ஏற்றிக்கொண்டு குடை ராட்டினம் ஒன்று சுழன்று கொண்டிருந்தது.. கன்னியரை சைட்அடிக்கிற காளையர் கூட்டம் ஒன்றும், ராட்டினத்துக்கு போட்டியாய் கோயிலை சுற்றிக் கொண்டிருந்தது..!! ஆண்டு முழுதையும் ஒருவித அழுத்தத்திலேயே கழிக்கிற அகழி ஜனங்கள்.. இறுக்கம் தளர்ந்து சற்று சிரிக்க நினைக்கிற இரண்டு தினங்கள் இவை..!! வஜ்ரேஸ்வரி அம்மனுக்கு பங்குனிப் பொங்கல்.. வருடத்திற்கு ஒருமுறை நடக்கின்ற உற்சவம்.. வேறூருக்கு பிழைக்க சென்றிருப்பவர்கள்கூட சொந்தஊருக்கு வந்தடைகிற சமயம்..!!

போன வாரமே காப்பு கட்டியாயிற்று.. இந்த இரண்டு தினங்கள் இன்னும் விசேஷமானவை..!!
ஊர்மக்களில் கணிசமான விழுக்காட்டினர் புத்தாடை அணிந்து வலம்வந்தனர்.. எல்லோர் முகத்திலும் ஒரு இயல்பான மலர்ச்சியை காணமுடிந்தது..!! பெரியவர்களை காட்டிலும் சிறுசுகளிடம் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.. கோயிலுக்கு முன்பு கொட்டிவைத்திருந்த மணலில், கும்மாளமாக குதித்து விளையாடின குழந்தைகள்..!!

 அந்த குழந்தைகளிடம் இருந்த உற்சாகத்தின் ஓரளவு.. தனது வீட்டில் குளித்துக்கொண்டிருந்த ஆதிராவிடமும் காணப்பட்டது என்றுதான் சொல்லவேண்டும்..!! நேற்றுமுழுதும் மனதை சூழ்ந்திருந்த குழப்பமேகம், இன்று சற்றே கலைந்து விலகியிருந்தது.. ஷவரில் கொட்டிய வெதுவெதுப்பான நீரை அண்ணாந்து வாங்கிக்கொண்ட அவளது முகத்திலும் ஒருவித தெளிவை உணரமுடிந்தது..!!

ஊரில் திருவிழா என்ற உள்ளுணர்வுதான் அவளது அந்த உற்சாகத்தின் ஊற்றுக்கண்..!! சிறுவயது முதலான திருவிழா தொடர்பான நினைவுகள் எல்லாம்.. அவளையும் அறியாமல் அவளது மனதுக்குள் முண்டியடித்து கிளம்பின..!! குளித்துமுடித்த ஆதிரா, உள்பாவாடையை மார்புகளுக்கு மேலாக உயர்த்திக்கட்டி முடிச்சிட்டாள்.. கூந்தலை ஒரு டவல் சுருட்டியிருக்க, இன்னொரு டவலால் தோள்களை மறைத்துக் கொண்டாள்..!!

கசக்கிப் பிழிந்த உள்ளாடைகளை கையில் எடுத்துக்கொண்டு பாத்ரூம் கதவை திறந்தாள்.. திறந்ததுமே பக்கென ஒரு திகைப்புக்கு உள்ளானாள்..!! வெளியே.. வாசலை அடைத்துக்கொண்டு சிபி நின்றிருந்தான்.. அவனது உதட்டில் ஒரு குறும்புப் புன்னகை..!!

அவனை எதிர்பார்த்திராத ஆதிரா அவ்வாறு திகைப்பாக பார்த்துக்கொண்டிருக்கும்போதே.. சிபி படக்கென கதவைத்தள்ளி உள்ளே நுழைந்தான்.. மனைவியின் புஜத்தினை பற்றியிழுத்து முரட்டுத்தனமாக அவளை அணைத்துக் கொண்டான்..!!

 "ஐயோ.. என்னத்தான் இது..??" ஆதிரா சிணுங்கியவாறே நெளிந்தாள். அவன் அணைப்பில் இருந்து விடுபட முயன்றாள். "தூங்குறப்போலாம் அப்படியே வந்து ஒண்டிக்கிற.. குளிக்கிறப்போ மட்டும் தனியா விட்டுட்டு வந்துடுற..??" பிடித்தபிடியை விடாமல் சிபி குறும்பாக சொன்னான். "ஓ.. வேற என்ன பண்ணனுமாம்..??" "ம்ம்..?? என்னை கூப்பிட்ருக்கலாம்ல..?? குட்டிப்புள்ளயை குளிப்பாட்டி விட்ருப்பேன்ல..??" "ம்க்கும்.. ஆசைதான்..!! ஏன்.. நைட்டு போட்ட ஆட்டம் பத்தலையாக்கும்..??"

 "யானைப்பசிக்கு சோளப்பொரியை விட்டெறிஞ்சுட்டு.. பத்தலையான்னு வேற கேக்குறியா..?? இங்க கொழுப்பு இருந்தா இப்படிலாம் பேச சொல்லுமோ..??" கேட்டுக்கொண்டே சிபி ஆதிராவின் பின்புறத்தை அழுத்தி ஒரு பிடி பிடிக்க, அவள் விழுக்கென்று கிடந்து துள்ளினாள். "ஐயோ.. விடுங்கத்தான்.. காலங்காத்தாலேயே..??"

 "ஏன்.. காலங்காத்தால ரொமான்ஸ் பண்ணக்கூடாதா..?? ஏதாவது சட்டம் போட்ருக்காங்களா..??" "ம்ம்..?? நைட்தான எல்லாம் ஆச்சு.. அப்புறம் என்ன.. காலைலேயே..??" "நைட் நல்லா சாப்பிட்டுட்டுத்தான் தூங்குறோம்.. காலைல எழுந்ததும் பசிக்கிறது இல்லையா..?? அந்த மாதிரித்தான்..!!" "ஓஹோ.. லாஜிக்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனா.. இதுக்குலாம் இப்போ டைம் இல்ல.. கோயிலுக்கு கெளம்பனும்..!!"

 "கெளம்பலாம் கெளம்பலாம்..!! அதுக்கு முன்னாடி.. வீட்லயே ஒரு ஸ்பெஷல் தரிசனம் பார்த்து, அர்ச்சனைலாம் முடிச்சுட்டு அப்புறமா கெளம்பலாம்..!!" சிபி போதையாக சொல்லிக்கொண்டே, ஆதிராவின் உள்பாவாடையை உயர்த்த முயல, "ச்சீய்ய்ய்ய்..!!!" அவனுடைய கையை பட்டென தட்டிவிட்டாள் ஆதிரா. "விடுங்கத்தான்.. நான் போகணும்..!!" என்று கெஞ்சினாள்.

 "ம்ஹூம்..!! அதுக்குலாம் நீ சரிப்பட்டு வருவியான்னு பாக்காம.. இன்னைக்கு உன்னை வெளில அனுப்புறதா இல்ல..!!" "எதுக்குலாம் சரிப்பட்டு வருவனா..??" சிபி இப்போது ஆதிராவின் காதருகே ஏதோ கிசுகிசுக்க, அவள் அப்படியே முகத்தை சுளித்தாள். "ஐய்ய்ய்ய்யோ.. கருமம்..!!!!!" "வா.. ட்ரை பண்ணிப் பாக்கலாம்..!!" "இப்போ விடப் போறீங்களா இல்லையா..??" ஆதிரா சற்று கடுமையாக கேட்டாள். "சான்ஸே இல்ல..!!" சிபி பிடிவாதமாக இருந்தான்.

 கணவனின் செய்கையில் கடுப்பாகிப்போன ஆதிரா.. இப்போது தனது கைகளில் ஒன்றை நீட்டி.. சுவற்றோடு பொருந்தியிருந்த அந்த குமிழை பிடித்து சரக்கென திருகினாள்.. உடனே ஷவரில் இருந்து சர்ர்ர்ரென நீர் பீய்ச்சியடித்தது..!!

ஆதிராவை கதகதப்பாக அணைத்துக்கொண்டிருந்த சிபியின் முதுகில்.. சடசடசடவென குளிர்ந்தநீர் கொட்டவும்.. 'ஹேய்ய்ய்ய்..!!' என்று கத்தியவாறு உடலை முறுக்கி உதறினான்.. அவனது உடும்புப்பிடியை சற்றே தளர்த்தினான்..!!

ஆதிராவுக்கு அதுவே போதுமானதாக இருந்தது.. கணவனின் அணைப்பில் இருந்து அவசரமாய் நழுவி, கதவு திறந்து வெளியே ஓடினாள்..!! வெளியில் சென்று திரும்பி பார்த்து.. "யார்கிட்ட..??" என்று நாக்கை நீட்டி பழிப்பு காட்டினாள். தொடர்ந்து.. "ஹாஹாஹாஹாஹாஹா..!!!!" என்று எளிறுகள் தெரிய சிரித்தாள்.

 முகத்தில் வழிந்த நீரை இருகையாலும் துடைத்தெடுத்த சிபி.. கனைக்கிற மனைவியையே கடுப்புடன் பார்த்தான்..!! அசையாமல் நின்று, கொட்டுகிற ஷவரில் நனைந்தவாறே.. ஆதிராவை போலியாக எச்சரித்தான்..!! "இளிக்கவா செய்ற..?? இன்னைக்கு நைட்டு எல்லாத்துக்கும் சேர்த்து இருக்குது..!!" "ஹாஹா.. பாக்கலாம் பாக்கலாம்..!!" சிரிப்புடனே சவால் விட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் ஆதிரா.. மாடிப்படியேறி தங்களது அறைக்கு விரைந்தாள்..!!

கணவனின் குறும்பை நினைத்து.. அவளது மனதுக்குள் ஒரு பூரிப்பு.. உதடுகளில் ஒரு வெட்கம் கலந்த புன்னகை..!! அறையை அடைந்ததும் கதவை சாத்தி தாழிட்டாள்.. உடுத்தியிருந்ததை களைந்துவிட்டு வேறு உடை அணிந்துகொள்ள ஆரம்பித்தாள்..!! சந்தன நிறத்து ப்ராவால் தனது மார்பழகை மறைத்து மூடியவள்.. இரண்டு கைகளையும் பின்பக்கம் செலுத்தி ஹூக் மாட்ட முயன்றாள்..!!

ப்ரா மிகவும் இறுக்கமாக இருந்தது.. கொக்கியை கோர்க்க கஷ்டப்பட வேண்டியிருந்தது.. 'அடுத்த சைஸ் மாத்தணும்' என்று வாய்க்குள்ளே முனுமுனுத்தாள்..!! உதட்டை அழுத்தி கடித்துக்கொண்டு.. உடம்பை சற்றே முன்னுக்கு தள்ளி.. முகத்தை நிமிர்த்தி மேலே பார்த்தவாறு.. ஹூக்கை மாட்டிக்கொள்ள முயன்றவள்.. ஒருகணம் அப்படியே உறைந்துபோய் நின்றாள்..!!

 எதேச்சையாகத்தான் அவளுடைய பார்வையில் அது பட்டது.. அலமாரியில் நீட்டிக்கொண்டிருந்த அந்த புத்தகம்.. அன்று தாமிராவின் அறையில் இருந்து எடுத்துவந்திருந்த புத்தகம்.. கருப்பு அட்டையுடனும், 'கண்ணாமூச்சி ரே ரே' என்கிற தலைப்புடன்..!!

அன்று அந்த புத்தகத்தின்மீது சிந்திய சிவப்பு மை.. அதன் அட்டையில் விரவி, இப்போது காய்ந்துபோய் காட்சியளித்தது..!! அன்று ஏனோ ஆதிராவின் கவனத்தை அது கவரவில்லை.. இன்று கவர்ந்தது.. அந்த சிவப்புமையின் பரவல், சீரான ஒரு ஓவியமாக அவளுக்கு தோன்றியது..!! ஹூக்கை மாட்ட மறந்துபோய், கையை நீட்டி அந்த புத்தகத்தை எடுத்தாள்.. அட்டையின் மீது கூர்மையாக பார்வையை வீசினாள்..!!

ஏதோ ஒரு மலருடைய இதழ்களைப்போல.. மை அந்த அட்டையில் படர்ந்திருந்தது.. சற்றே வித்தியாசமான இதழமைப்பு கொண்ட ஒரு மலர் எனலாம்..!! அதைப் பார்த்ததுமே ஆதிராவின் மூளைக்குள் சுருக்கென்று ஒரு மின்னல் வெட்டு..!! 'இந்த மாதிரியான இதழமைப்பு கொண்ட மலரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே..?? எங்கே..??' என்கிற ரீதியில் மனதுக்குள்ளேயே பேசியவள்.. தனது நெற்றியைப் பற்றி பிசைந்து கொண்டாள்.. நினைவுக்கு கொண்டுவர முயன்றாள்..!!

'எங்கே.. எங்கே.. எங்கே..' என்று திரும்ப திரும்ப கேள்விகேட்டு.. தனது மூளையை தட்டியெழுப்பி சுறுசுறுப்பாக்கி.. மறந்துபோனதை மனதுக்குள் எடுத்துவர முயன்றாள்..!! "டக்.. டக்.. டக்.. டக்..!!" - அறைக்கதவு அவ்வாறு தட்டப்பட்டதும் ஆதிராவுக்கு கவனம் கலைந்து போயிற்று.

 "யாரு..??" என சற்று எரிச்சலாகவே கேட்டாள். "நாந்தான்க்கா..!!" - அறைக்கு வெளியிருந்து தென்றலின் குரல்.
"ம்ம்.. சொல்லு..!!" "ரூம் கிளீன் பண்ணனும்க்கா..!!" "ஓ.. ஒருநிமிஷம் இரு..!!" "சரிக்கா..!!" ஆதிரா அந்த புத்தகத்தை மீண்டும் அலமாரியிலேயே வைத்தாள்.. அவசர அவசரமாய் ஹூக் மாட்டிக் கொண்டாள்..

ஆரஞ்சு நிறத்திலான அந்த பட்டுப்புடவையும், அதற்கு பொருத்தமானதாய் ஒரு ரவிக்கையும் அணிந்துகொண்டாள்..!! அவளது கூந்தலை இன்னும் பூந்துவாலை சுருட்டியிருக்க.. அப்படியே நடந்து சென்று கதவை திறந்தாள்..!! கதவு திறந்து வெளியே பார்வையை வீசியவளின் முகத்தில்.. உடனே ஒருவித ஆச்சர்யம் கலந்த பூரிப்பு..!! வெளியே தென்றல் நின்றிருந்தாள்.. என்றுமில்லாத ஒரு புதுவித அழகுடன் இன்று ஜொலிஜொலித்தாள்..!!

இளமஞ்சள் நிறத்தில் புடவை.. நேர்த்தியாக பின்னப்பட்ட கூந்தல்.. பவுடர் போட்டு பளிச்சென்றிருந்த முகம்.. லிப்ஸ்டிக் தீட்டி பளபளத்த உதடுகள்.. கை, கழுத்து, காதில் எல்லாம் புதிதாய் அணிகலன்கள்..!! இப்போதுதான் மொட்டிலிருந்து அவிழ்ந்துகொண்ட மலர்போல.. புத்துணர்வோடும், புதுப்பொலிவோடும் தோற்றமளித்தாள்..!!

 "வாவ்...!!!!!" வாய்விட்டே ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினாள் ஆதிரா. "என்னக்கா..??" தென்றல் புரியாதவளாய் கேட்டாள்.

 "சூப்ப்ப்ப்பரா இருக்குற தென்றல்..!!!"

 "ஹையோ.. போங்கக்கா..!!" - தென்றலிடம் இப்போது ஒரு வெக்கம்.

 "ஹேய் நெஜமாத்தான்.. அப்படியே ஜொலிக்கிற போ..!! ம்ம்ம்ம்ம்ம்... ஸேரி ரொம்ப அழகா இருக்கு..!! புதுசா..??"

 "ஆமாம்க்கா..!! அண்ணன் இப்போ ஊர்ல இருந்து வர்றப்போ வாங்கிட்டு வந்தான்..!!" 
"ஓ..!! நல்லாருக்கு.. உனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு..!!"

 "தேங்க்ஸ்க்கா..!!"

 "ஹ்ம்ம்..!! கதிருக்கும் தங்கச்சி மேல ரொம்ப பாசம்தான் போல..??"

 "ஹஹா.. ஆமாம்க்கா.. ஸேரி மட்டும் இல்ல.. இந்த ஜிமிக்கி, கொலுசு கூட அண்ணன் வாங்கிட்டு வந்ததுதான்..!!" தென்றல் காலை உயர்த்தி கொலுசை காட்டினாள்.

 "ஹ்ம்ம்.. எல்லாமே நல்லாருக்குது தென்றல்..!!"

 "ம்ம்ம்ம்ம்ம்...!! சரிக்கா.. நான் கோயிலுக்கு கெளம்பனும்.. வேலையை சீக்கிரம் முடிச்சுட்டு கெளம்புறேன்..!!" பணிவுடன் சொன்ன தென்றல் புடவையை உயர்த்தி இடுப்பில் செருகிக் கொண்டாள்.. பக்கவாட்டில் இருந்த நீருள்ள பக்கெட்டை ஒரு கையில் தூக்கிக் கொண்டாள்.. இன்னொரு கையில் துடைப்பமும், அழுக்கு துணியும்.. ஆதிராவை கடந்து அறைக்குள் நுழைந்தாள்..!! இன்று அவளிடம் காணப்பட்ட அழகுத்தோற்றத்துக்கும், அவள் கைகளில் இருந்த அழுக்கு சமாச்சாரங்களுக்கும் சுத்தமாக ஒத்துப் போகவில்லை..!!

ஆதிரா என்ன நினைத்தாளோ.. "தென்றல்..!!" என்று திடீரென அழைத்தாள்.

 "என்னக்கா..??" உள்ளே சென்றிருந்த தென்றல் திரும்பி பார்த்தாள்.

 "ரூம் அப்புறம் கிளீன் பண்ணிக்கலாம்.. நீ கோயிலுக்கு கெளம்பு..!!"

 "பரவால்லக்கா.. கிளீன் பண்ணிட்டே.."

 "சொல்றேன்ல.. இன்னும் ரெண்டு நாளைக்கு எந்த வேலையும் பாக்க வேணாம்..!! திருவிழாவை நல்லா என்ஜாய் பண்ணு.. போ..!!"

 "இல்லக்கா.. சிபி அண்ணனுக்கு ரூம் க்ளீனா இருந்தாத்தான்.."

 "ப்ச்.. அவர்ட்ட நான் சொல்லிக்கிறேன்.. நீ கெளம்பு..!!"

 "ம்ம்.. சரிக்கா..!!" ஆதிரா சொன்னதைக்கேட்டு மனதுக்குள் சந்தோஷப்பட்டாலும்.. அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமலே தென்றல் அங்கிருந்து கிளம்பினாள்..!! ஆதிராவை கடந்து செல்லும்போது மட்டும்.. 'தேங்க்ஸ்க்கா' என்று மெலிதாக முனுமுனுத்தாள்..!!

 அவள் சென்ற அரைமணி நேரத்திற்கெல்லாம் ஆதிராவும் சிபியும் வீட்டிலிருந்து கிளம்பினார்கள்.. அதன்மேலும் ஒரு பத்து நிமிடங்களில், ஊரின் இன்னொரு மூலையில் இருக்கிற கோயிலை அடைந்தார்கள்..!! அவர்கள் சென்ற நேரத்தில் அம்மனை நீராட்டுவதற்காக ஆற்றிற்கு எடுத்து சென்றிருந்தனர்.. அதனால் கோயிலில் மக்கள் நெருக்கடி சற்று குறைவாகவே இருந்தது..!!

எனினும்.. கோயிலுக்கு முன்புறமாக கணிசமான அளவு பெண்கள் கூட்டத்தினை காணமுடிந்தது.. அம்மனுக்கு பொங்கல் வைக்கிற வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அகழி கிராமத்து பெண்கள்..!!

அக்னிச்சட்டி தூக்குதல், ஆயிரங்கண்பானை எடுத்தல், கரும்புத் தொட்டில், தலைமுடி காணிக்கை போன்று நேர்த்திக்கடன் செலுத்துபவர்களின் கூட்டம் இன்னொரு பக்கம்..!! ஆதிராவும் சிபியும் காரில் இருந்து இறங்கி கோயிலின் முகப்புக்கு நடந்தனர்..!!

நடந்து செல்கிற வழியில்.. கொட்டி வைத்த மணலில்.. எதிரெதிர் அமர்ந்து விளையாடுகிற இரண்டு சிறுமிகளை ஆதிரா பார்க்க நேர்ந்தது.. உடனே பட்டென ஒரு பழைய நினைவில் மூழ்கிப்போனாள்..!! தானும், தாமிராவும் சிறுமிகளாக இருந்தபோது.. இதே இடத்தில் இருவரும் ஆடிய இதே விளையாட்டு..!!

 ஆற்றுமணலை நீள்வாக்கில் குவித்து கரை அமைத்துக்கொண்டு.. ஆதிராவும், தாமிராவும் எதிரெதிரே அமர்ந்து கொள்வார்கள்.. தாமிராவின் கையில் ஒரு சிறிய துணித்திரி இருக்கும்..!! "திரித்திரித்திரி பொம்முத்திரி.. திரிக்காலடி பொம்முத்திரி.. காசுகொண்டு பொம்முத்திரி.. கடையிலகொண்டு பொம்முத்திரி..!!" என்று தாமிரா மழலைக்குரலில் பாடிக்கொண்டே.. வெண்முத்துப் பற்கள் தெரிய அழகாக சிரித்தவாறே.. கையிலிருக்கிற திரியை அந்த மணற்கரைக்குள் நுழைத்து.. நெட்டுவாக்கில் முன்னும் பின்னுமாக அலைந்து..

 "நாலுகரண்டி நல்லெண்ணை.. நாப்பத்தொரு தீவட்டி.. கள்ளன் வாறான் கதவடை.. வெள்ளச்சி வாறாள் விளக்கேத்து.. வாறாரய்யா சுப்பையா.. வழிவிடம்மா மீனாட்சி..!!" பாடல் முடிகிற சமயத்தில்.. மணற்கரையின் ஏதோ ஒரு இடத்தில் அந்தத்திரியை மறைத்து வைப்பாள்..!!

கைகளை அகலமாக விரித்து, விரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக்கொள்ளும் ஆதிரா.. அந்த நீளமான மணற்கரையில் எவ்விடத்தில் திரி ஒளிந்திருக்கலாம் என்பதை உத்தேசமாக முடிவு செய்து.. அந்த இடத்தை விரித்த கைகளால் பொத்துவாள்..!!

 "ஹாஹாஹாஹா..!! திரி அங்க இருக்குன்னு நெனச்சுட்டியா..?? அது.. இங்க இருக்கு..!! ஹாஹாஹாஹா..!!" இவளைப்பார்த்து குட்டித்தாமிரா கைகொட்டி சிரித்தது.. இன்னுமே ஆதிராவுக்கு நன்றாக நினைவிருக்கிறது..!! அது ஒருவகையான தேடுதல் விளையாட்டு..!! தங்கை ஒளித்துவைத்த துணித்திரியை தேடியவள்.. இப்போது தங்கையையே தேடுகிற மாதிரியான சூழ்நிலை.. விதியை நினைத்து நொந்துகொண்டாள் ஆதிரா..!!

 ஆதிராவின் குடும்பத்தினருக்கு அகழியில் மிகுந்த மரியாதை உண்டு..!! அவளும், சிபியும் கோயிலை நோக்கி நடக்கும்போதே.. வழியில் எதிர்ப்பட்ட நிறையபேர் இவர்களை கையெடுத்து கும்பிட்டு வணங்கினர்.. இவர்களும் ஒரு புன்னகையுடனே எல்லோருக்கும் பதில் வணக்கம் வைத்தவாறு, கோயில் வாசலுக்கு நடந்தனர்..!! கோயில் வாசலை அடைந்ததும்.. பொங்கல் வைத்துக் கொண்டிருந்த பெண்கள் ஆதிராவை சூழ்ந்து கொண்டனர்.. ஆளாளுக்கு அவளிடம் மரியாதையாகவும், ப்ரியத்துடனும் பேசினர்..!!

 "ஆதிராம்மா.. நல்லா இருக்கியாம்மா..?? அப்பா அம்மாலாம் வரலையா..??" "எப்ப வந்த ஊர்ல இருந்து..?? எங்களைலாம் ஞாபகம் வச்சிருக்கியா..??" "மைசூர் மகாராணிக்கு இந்த மலைக்கிராமம் மறந்து போச்சாக்கும்..?? அங்கேயே கெடந்தா எப்படி.. அடிக்கடி இங்கிட்டு வந்துட்டுப் போனாத்தான நல்லாருக்கும்..??" "அடையாளம் தெரியுதா என்னய..?? சிட்டு இருக்காள்ல.. அவளுக்கு சின்னம்மா நானு..!!" அன்புடன் அவர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம்.. அடக்கமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் ஆதிரா..!!

மனைவிக்கு கிடைக்கிற மரியாதையை.. ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் சிபி..!!
ஆதிரா அங்கேயே சிறிதுநேரம் செலவழித்தாள்.. அம்மனுக்கு பொங்கல் வைக்கிற அந்தப் பெண்களுடன் கலந்து கொண்டாள்..!! கருங்கல் அடுப்பில்.. வெண்கலப் பானையில்.. பச்சரிசிப் பொங்கல் பொங்க.. அதை குலவையிட்டு கிளறும் பெண்கள்..!!

சென்ற வருடம், தானும் தனது தங்கையும் ஒன்றாக சேர்ந்து பொங்கல் வைத்தது.. ஆதிராவின் நினைவுக்கு வந்தது..!! அவர்கள் சென்ற கொஞ்ச நேரத்திலேயே.. முகிலன் தனது குடும்பத்தாருடன் காரில் வந்து இறங்கினான்..!! அவனுடைய தலைமையில்தான் இந்த பொங்கல் திருவிழாவே நடைபெறுகிறது.. திருவிழாவுக்கான செலவில் பெரும்பங்கு அவனுடையது..!!

இவர்களுக்கு கிடைத்ததை விட இரண்டு மடங்கு மரியாதையும், வரவேற்பும்.. முகிலனுக்கும், அவனது குடும்பத்தினருக்கும் கிடைத்தது..!! கோயில் தர்மகர்த்தாவும், இன்னபிற ஊர்த்தலைவர்களும்.. கார் நிறுத்தின இடத்திற்கே ஓடிச்சென்று அவர்களை வணங்கி வரவேற்றனர்..!! அங்கையற்கண்ணியும், யாழினியும் ஆதிராவை அணுகி அன்புடன் பேசினர்.. நிலவன் ஒரு புன்னகையுடன் வணக்கம் சொன்னதோடு சரி.. முகிலன் மட்டும் இவளை முறைப்பாக பார்த்தவாறே சென்றான்..

ஆதிராவிடமும், சிபியிடமும் ஒருவார்த்தை கூட பேசவில்லை..!! சிறிது நேரத்தில்.. தூரத்தில் அம்மன் ஊர்வலம் வருவது தெரிந்தது..!! ஆற்றில் நீராடியிருந்த அம்மன்.. அழகுற அலங்காரம் செய்துகொண்டு.. பல்லக்கு மீதேறி அமர்ந்து.. பவனி வந்து கொண்டிருந்தாள்.. கோயில் நோக்கி..!! நீண்ட அந்த சாலையில் நிதானமாக நகர்ந்து வந்த ஊர்வலத்தின் முன்பாக.. சில இளம்பெண்கள் நடனமாடி வந்தனர்..!!

அகழி கிராமத்தின் வழக்கங்களில் ஒன்று அந்த நடனம்.. கும்மியாட்டத்தையும் ஒயிலாட்டத்தையும் கலந்த மாதிரியான ஒரு நடனம்..!! "வாங்கம்மா.. நீங்களும் எங்ககூட வந்து ஆடுங்க..!! ம்ம்.. வாங்க..!!" ஆடிவந்த கன்னிப்பெண்களில் சிலர் ஆதிராவை வற்புறுத்தினர்.

 "இ..இல்ல.. வேணாம்.. பரவால..!!" ஆதிரா லேசாக தயங்கினாள். "ப்ச்.. ஆடு.. போ..!!" சிபியும் மற்றவர்களுடன் சேர்ந்து வற்புறுத்த, ஆதிரா தயக்கத்துடனே அவர்களுடன் சேர்ந்துகொண்டாள்..!!

ஆரம்பத்தில் சற்று தடுமாறியவள்.. சீக்கிரமே.. இடுப்பையும், கைகளையும் அசைத்து நளினமாக நடனமாட ஆரம்பித்தாள்..!! அவளுக்கு மிகவும் பழக்கப்பட்ட நடனம்தான்.. அதனால் இயல்பாக அவர்களுடன் சேர்ந்து ஆடமுடிந்தது..!!

ஆனால்.. அவளது காலில் ஏற்பட்டிருந்த காயத்தில்தான் அவ்வப்போது சுருக் சுருக்கென்று வலி..!! அந்த வலியை பொறுத்துக்கொண்டு.. வேதனையின் சாயலை கொஞ்சம் கூட முகத்தில் காட்டாமல்.. ஒரு பூரிப்புடனும் ஆர்வத்துடனுமே ஆடினாள் ஆதிரா..!!




கோயிலில் இப்போது கூட்டம் அதிகமாயிருந்தது.. மக்கள் நெருக்கியடித்து அம்மனின் அழகையும், ஆட்டத்தின் அழகையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தனர்..!! ஆடிமுடித்த ஆதிரா கணவனை தேடினாள்.. அவன் சற்று தொலைவில் கும்பலுக்குள் நின்றிருந்தான்..!! கூட்டத்திற்குள் நுழைந்து கணவன் இருந்த திசை நோக்கி நகர்ந்தாள்..

அவ்வாறு நகர்ந்தவள் படாரென யார் மீதோ மோதிக்கொண்டாள்..!! "ஸா..ஸாரி..!!" என்றவாறு நிமிர்ந்தாள்.. முகிலன்..!! தான் இடித்துக்கொண்டது முகிலனை என்று அறிந்ததும்.. அவன் தன்னை முறைத்துப் பார்க்கிறான் என்பதை உணர்ந்ததும்.. "ஸா..ஸாரி.. ஸாரித்தான்..!!" என சற்றே தடுமாறினாள்.

முகிலனோ இறுக்கமான குரலில் பதிலுக்கு பேசினான். "ஹ்ம்ம்.. ஆட்டம்லாம் ரொம்ப பலமா இருக்கு..?? கொஞ்சம் கொறைச்சுக்கிட்டா நல்லா இருக்கும்..!!" என்று குதர்க்கமாக சொன்னான்.

 "எ..என்ன சொல்றீங்க..??"

 "ஹ்ஹ.. புரியாதமாதிரி நடிக்காத..!!"

 "இ..இல்ல.. நெஜமாவே எனக்கு எதுவும் புரியல..!!"

 " ஹ்ம்ம்ம்.. அந்த ப்ரொஃபஸரையும், ஸ்டேஷன் மாஸ்டரையும் போய் பார்த்ததா கேள்விப்பட்டேன்..??"

 "ஆ..ஆமாம்.. அதுக்கு என்ன..??"

 "அதுக்கு என்னவா..?? தங்கச்சி விட்டதை அக்காக்காரி ஆரம்பிக்கிறியா..??

பாத்து.. அவளுக்கு ஆன மாதிரி உனக்கும் ஏதாவது ஆகிடப் போகுது..!!" முகிலனின் அந்தப்பேச்சில் ஆதிரா இப்போது சற்றே எரிச்சலானாள்.

 "என்ன.. மெரட்றிங்களா..??" என்றவாறு அவனுடைய கண்களை கூர்மையாக பார்த்தாள்.
 "மெரட்டலாம் இல்ல.. மனசுல பட்டதை சொன்னேன்..!!" 

"................................"

 "நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு மதிப்பும் கௌரவமும் இருக்கு ஆதிரா..!! பாக்குற எல்லாரும் உன்னை கையெடுத்து கும்பிட்ருப்பாங்களே.. அவங்கல்லாம் காறி துப்பினா பரவாலயா உனக்கு..??"
 "................................" - ஆதிரா பதிலேதும் சொல்லாமல் முகிலனை முறைத்து பார்த்தவாறே நின்றிருந்தாள்.

 "போதும்..!! அந்த ஆராய்ச்சியை பத்தி ஆராய்ச்சி பண்றதை இத்தோட நிறுத்திக்க..!! மூடி கெடக்குறதை தோண்ட நெனச்சா.. அது அவ்வளவு நல்லா இருக்காது பாத்துக்கோ.. நான் சொல்லவேண்டியதை சொல்லிட்டேன்.. அப்புறம் உன் இஷ்டம்..!!"

 "................................"

 "என்ன.. ஒன்னுமே சொல்ல மாட்டேன்ற..??" முகிலன் அவ்வாறு கேட்டதும், ஆதிரா இப்போது வாய் திறந்தாள்.. உடம்பை விரைத்துக்கொண்டு முறைப்பாக சொன்னாள்..!!

 "இங்க பாருங்க.. அந்த ஆராய்ச்சி பத்திலாம் எனக்கு எந்த கவலையும் இல்ல.. ஆனா என் தங்கச்சியைப் பத்தின அக்கறை இருக்கு..!! அவளுக்கு என்னாச்சுன்னு தெரியாம நான் ஓயமாட்டேன்.. அவ காணாமப் போனதுக்கு அந்த ஆராய்ச்சிதான் காரணம்னா, அதையும் வெட்டவெளிச்சமாக்க தயங்க மாட்டேன்..!!" சொல்லிவிட்டு முகிலனின் பதிலை கூட எதிர்பாராமல் விடுவிடுவென நடந்தாள்..

'ஏய்' என்று முதுகுப்புறமாக அவன் கத்தியதைக் கூட அவள் பொருட்படுத்தவில்லை..!! அதற்குள்ளாகவே.. இவர்களது வாக்குவாதத்தை தூரத்தில் இருந்து பார்க்க நேர்ந்த சிபி.. நகர்ந்து இவளை நெருங்கியிருந்தான்..!!

"என்ன ஆதிரா.. என்னாச்சு..??" என்று குழப்பமாக கேட்டான். "ஒ..ஒன்னுல்லத்தான்.. விடுங்க..!!" அமர்த்தலாக சொன்ன ஆதிரா, அவனது கையை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்..

பல்லக்கில் வீற்றிருக்கிற அம்மனையே கூர்மையாக வெறிக்க ஆரம்பித்தாள்.. காரிய சித்தி வேண்டுமென கண்மூடி வேண்டிக்கொண்டாள்..!!




No comments:

Post a Comment