Saturday, December 6, 2014

கண்ணாமூச்சி ரே ரே - தமிழில் ஒரு திரில் தொடர் - பாகம் - 6


பார்க்கும் இடங்களில் எல்லாம் பச்சை நிறமே பரவிப் படர்ந்திருந்தது.. மலைகளில் முளைத்திருந்த மர, செடி, கொடிகளின் பச்சை..!! சிகரங்கள் அனைத்தும் குளிருக்கு இதமாய் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தன.. முகடுகளை சுற்றிலும் அடர்த்தியாய் வெண்பனி மூட்டங்கள்..!! உடலை ஊசியாய் துளைக்கிற ஈரப்பதம் மிக்க குளிர்காற்று.. நாசிக்குள் நுழைந்திட்ட அந்த குளிர்காற்றில் யூகலிப்டஸின் வாசனை..!!

பச்சைமலையை பொத்துக்கொண்டு வெள்ளையாய் வெளிக்கொட்டுகிற தூரத்து அருவி.. அந்த அருவியின் சீற்றத்தை இங்குவரை கேட்ட அதன் சப்தத்திலேயே புரிந்துகொள்ள முடிந்தது..!! பாறையை செதுக்கி அமைக்கப்பட்டிருந்த தண்டவாளத்தில்.. பாம்பென ஊர்ந்து கொண்டிருந்தது ஒரு தொடர்வண்டி..!! பக்கவாட்டில் குறுகலாய் கிடந்த அந்த தார்ச்சாலையில்.. பனிசூழ பயணித்துக் கொண்டிருந்தது வெண்ணிற ஸ்கார்ப்பியோ..!!

கொண்டையூசி வளைவுகள் நிரம்பிய சிக்கலான மலைப்பாதை அது.. கவனத்துடன் நிதானத்தையும் கலந்து காரோட்டிக் கொண்டிருந்தான் சிபி..!! மார்புக்கு குறுக்காக கைகளை கட்டியவாறு.. மலைச்சரிவு மரங்களில் மனதை செலுத்தியிருந்தாள் ஆதிரா..!!


குளிருக்கு வெடவெடத்த அவளது தளிர் உதடுகளை எதேச்சையாக பார்த்த சிபி.. "ஸ்வெட்டர் வேணா எடுத்து போட்டுக்கடா..!!" என்றான் கனிவாக. "இல்லத்தான்.. பரவால.. இன்னும் கொஞ்ச நேரந்தான..??" அமர்த்தலாக சொன்னாள் ஆதிரா. பத்துநிமிட பயணத்திற்கு பிறகு.. குழலாறு குறுக்கிட்ட அந்த இடத்தில்.. பாதை இரண்டாக பிரிந்து கொண்டது..!! இடது புறம் செல்கிற பாதை அகழிக்கு இட்டுச்செல்லும்.. வலது புறம் திரும்பினோமானால் களமேழி வந்துசேரும்..!! சிபி காரை இடதுபுறம் செல்கிற சாலையில் செலுத்தினான்..!! ஆதிரா ஜன்னலுக்காக சற்றே தலைசாய்த்து தூரமாக பார்வையை வீசினாள்.. மலையுச்சியை செதுக்கி வடிக்கப்பட்ட சிங்கமுக சிலையொன்று.. இங்கிருந்தே தெளிவாகவும், பிரம்மாண்டமாகவும் காட்சியளித்தது..!!

குபுகுபுவென மேனியெங்கும் பற்றிக்கொண்ட நெருப்புடன்.. குறிஞ்சி குதித்து கீழுருண்ட அதே மலையுச்சி..!! ஐம்பது வருடங்களுக்கு முன்பாக.. குறிஞ்சியின் அட்டகாசத்தை தாங்கமாட்டாத அகழி மக்கள்.. மலையுச்சியில் நரசிம்மருக்கு சிலைவடித்து வணங்க ஆரம்பித்தனர்..!! அப்போது உச்சிமலை என்று அழைக்கப்பட்ட அந்த இடம்.. அதன் பிறகிலிருந்து சிங்கமலை என்று வழங்கப்படுகிறது..!! அந்த சிங்கமலையின் அடிவாரத்தில் சலசலப்புடன் ஓடிக்கொண்டிருந்தது.. குறிஞ்சியை உள்வாங்கிக்கொண்ட குழலாறு..!!

 "ஆத்துல தண்ணி ரொம்ப அதிகமா போற மாதிரி இருக்கு.. இல்லத்தான்..??" கேட்ட மனைவிக்கு, "ம்ம்.. ஆமாம் ஆதிரா.. அப்படித்தான் தெரியுது..!!" பாதையில் இருந்து பார்வையை எடுக்காமலே பதில் சொன்னான் சிபி..!! சற்று தூரம் சென்றதும்.. குழலாறை கடக்கும் குறுகலான ஆற்றுப்பாலம் வலதுபுறமாக வந்தது..!! சிபி காரின் வேகத்தை வெகுவாகவே குறைத்து.. அந்தப்பாலத்தை நிதானமாக கடந்தான்..!! அதன்மேலும் இரண்டு மைல் தூரம்.. மலைப்பாதையில் மெல்ல மெல்ல மேலேற.. அழகும் அமானுஷ்யமும் கொஞ்சும் அகழி வந்து சேர்ந்தது..!!




நூறு வருடங்களில் அகழி மிகவும் மாறியிருந்தது.. அறிவியல் வளர்ச்சியும், பொருளாதார முன்னேற்றமும் அகழியை மட்டும் விட்டுவைக்குமா என்ன..?? மலைமரங்களுக்கு நடுவே கால் அகற்றி கம்பீரமாக நிற்கும் மூன்று செல்ஃபோன் டவர்கள்.. வீடுகளின் மேற்கூரைகளில் சேட்டிலைட்டுக்கு சமிக்ஞை அனுப்புகிற டிஷ் ஆன்டனாக்கள்.. காய்கறி மார்க்கெட்டுக்கு பக்கத்து சந்தில் ஒரு கணினி மையம் கூட உண்டு..!! அகழியின் மக்கள்தொகை இப்போது ஆயிரத்தை நெருங்கியிருந்தது..!!

புதிய தலைமுறையினர் புகலிடம் தேடி வேலைக்காக வெளியூர் சென்றிருக்க.. அதற்கு முந்தைய தலைமுறையினரே அந்த ஆயிரத்தில் பெரும்பங்கினர்..!! குடிசைகள் வெகுவாக குறைந்து போயிருந்தன.. ஓட்டு வீடுகள் அதிகமாக முளைத்திருந்தன..!! ஊரைச் சுற்றி ஆங்காங்கே தேயிலை தோட்டங்கள்.. ஊருக்கு வெளியே ஒரு தேயிலை தொழிற்சாலையும், ஒரு தடுப்பூசி மருந்து தொழிற்சாலையும்..!!

அதுமட்டுமில்லாமல் காளான் வளர்த்தல், கம்பளி நெய்தல் என்று சுயதொழில் செய்வோரும் இருக்க.. அகழி மக்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் எப்போதும் வந்ததில்லை..!! கார் ஊருக்குள் நுழைந்து மெல்ல பயணிக்க ஆரம்பித்த நேரம்.. கார்மேகம் திரண்டிருந்த வானமும் தூறல் போட ஆரம்பித்திருந்தது..!! மதிய நேரத்திலும் மங்கலான வெளிச்சத்திலேயே காணக்கிடைத்தது அகழி..!! நூறு வருடத்துக்கு முந்தைய கரடுமுரடான சாலைகள் எல்லாம்.. இப்போது தரமான தார்ச்சாலைகளாய் மாறிப்போயிருந்தன..!!

சாலைக்கு பக்கவாட்டில் அடுக்கடுக்காய் வீடுகள்..!! ஒவ்வொரு வீட்டுக்கு முன்பாகவும்.. வெள்ளெருக்கம் வேரில் செய்யப்பட்ட ஒருவகை பொம்மைகள் தொங்கவிடப் பட்டிருந்தன.. பேய், பிசாசு, காத்து, கருப்பு என எல்லாவற்றையும் அண்டவிடாமல் செய்கிற சக்தி.. அந்த பொம்மைகளுக்கு உண்டென்பது அகழி மக்களின் நம்பிக்கை..!! உடலுக்கு ஸ்வெட்டரும், தலைக்கு மப்ளருமாக காட்சியளித்தனர் ஊர்ஜனங்கள்.. எல்லோருடைய முகங்களிலும் இயல்பாகவே ஒரு இறுக்கம் குடியிருந்தது.. ஆண்களின் உதடுகளில் சுருட்டு.. பெண்களின் கண்களில் மிரட்சி..!! எதிர்ப்பட்டவர்களில் ஒருசிலர் காருக்குள்ளிருப்பவர்களை அடையாளம் கண்டுகொண்டு வணக்கம் செய்தனர்.. இவர்களும் காருக்குள் இருந்தவாறே அவர்களுக்கு பதில் வணக்கம் வைத்தனர்..!!

ஊரைப்பற்றி ஏதேதோ பேசிக்கொண்டே வீட்டை நோக்கி பயணித்தனர்..!! "புதுசா ஏதோ ஹோட்டல் வந்திருக்கு அத்தான்..!!" "புதுசுலாம் இல்ல ஆதிரா.. அது ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆச்சு..!!" அகழியை விட்டு சற்றே ஒதுங்கி.. தன்னந்தனியாக நின்றிருக்கும் தணிகை நம்பியின் மாளிகை வீடு..!! அகலமாகவும், நீளமாகவும் வேயப்பட்ட ஓட்டுக்கூரை.. கடுக்காய், முட்டையின் வெள்ளைக்கருவெல்லாம் கலந்த கலவையை பூசிக்கொண்டு பளபளக்கும் பக்கவாட்டு சுவர்கள்..!! வீட்டை சுற்றி விரவியிருக்கும் பச்சைப் பசேலென்ற புல்வெளி.. அந்த புல்வெளியினூடே வளைந்தோடி வீட்டு முகப்பில் சென்றுமுடியும் சிமெண்ட் சாலை..!!

வீட்டுக்கு ஒருபுறம் அமைதியான குழலாறு.. மறுபுறம் ஆளரவமற்ற அடர்ந்த காடு..!! அந்த காட்டுக்குள் மேலேறும் ஒற்றையடிப் பாதையில் நடந்து சென்றால்.. சிங்கமலையின் உச்சியை சென்றடையலாம்..!! கார் வீட்டை அடைவதற்குள் மழை வலுத்துக் கொண்டது.. காற்றும் பலமாக வீசியடித்தது..!! காம்பவுண்டுக்குள் நுழைந்து, சிமெண்ட் சாலையில் சீறிய காரின் மேற்கூரையில் மழைத்துளிகளின் சடசட சப்தம்..!! கார் வீட்டுக்குள் வந்து நின்றதுமே.. கையில் விரித்து வைத்த குடையும், காற்றில் படபடக்கிற புடவை தலைப்புமாக.. காரை நோக்கி ஓடிவந்தாள் வனக்கொடி.. அவளுக்கு பின்னாலேயே அவளுடைய பதினெட்டு வயது மகள் தென்றலும்..!!

காரில் இருந்து ஆதிரா முதலில் கீழிறங்க.. அவள் நனைந்துவிடாமல் சென்று குடைபிடித்தாள் வனக்கொடி..!! "ஆதிராம்மாஆஆ..!! இப்போ பரவாலயாம்மா உனக்கு.. இந்த பாதகத்தியால உன்னை வந்து பாக்க கூட முடியல..!! எப்படிமா இருக்குற..??" என்று அன்பாக கேட்டாள். "நான் நல்லா இருக்கேன்மா.. நீங்க எப்படி இருக்கீங்க..??" "எனக்கு என்னம்மா.. இருக்கேன்..!!" வனக்கொடி சலித்துக் கொண்டிருக்கையிலேயே, அந்தப்பக்கமாக சிபியும் காரைவிட்டு வெளிப்பட, "அய்யா.. சிபிக்கண்ணு.. நல்லாருக்கியாய்யா..??" அவனை ஏறிட்டு கேட்டாள் வனக்கொடி. "ம்ம்.. நல்லாருக்கேன்மா..!!" "கல்யாணத்தோட கடைசியா பாத்தது.. ஹ்ஹ்ம்ம்ம்..!!! சரி சரி.. சீக்கிரம் உள்ள வாங்க.. நனைஞ்சுற போறீங்க..!!

ஹ்ம்.. இந்த மழை சனியன் ஏன்தான் இப்படி பண்ணுதுன்னு தெரியல.. நைட்டு பூரா பெஞ்சுச்சு.. இப்ப மதியமே மறுபடியும் ஆரம்பிச்சிடுச்சு..!!" எரிச்சலாக சொன்ன வனக்கொடி மகளிடம் திரும்பி, "ஏய் தென்றலு.. டிக்கியை தெறந்து பெட்டிலாம் ரூம்ல கொண்டு போய் வைடி..!!" என்று உத்தரவிட்டாள். அம்மாவின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு.. காரின் பின்பக்கமாக ஓடினாள் தென்றல்..!! சிபியும், ஆதிராவும் வராண்டாவை அடைந்து நிதானமாக நடைபோட.. அவர்களிடம் புலம்பலாக பேசிக்கொண்டே அவர்களுக்கு முன்னால் பரபரப்பாக நடந்தாள் வனக்கொடி..!!

 "திடுதிப்புன்னு ஃபோன் பண்ணி வரேன்னு சொன்னதும் எனக்கு கையும் ஓடல காலும் ஓடல.. வீட்ல எல்லாம் அப்படியே போட்டது போட்டபடி கெடந்துச்சு.. நானும் தென்றலும் சேந்து இப்போத்தான் எல்லாத்தையும் ஒதுக்கி சுத்தம் பண்ணுனோம்..!! சமையல் இனிமேத்தான் ஆரம்பிக்கனும்.. நீங்க குளிச்சுட்டு வர்றதுக்குள்ள எப்பிடியாவது ரெடி பண்ணிடுறேன்.. சரியா..?? ரெண்டு புள்ளைகளும் ரெம்ப நாள் கழிச்சு வர்றீக.. ஏதாவது கவுச்சி எடுத்துட்டு வந்து ஆக்கி வைக்கலாம்னா.. வெளியிலயே போமுடியாத மாதிரி இந்த மழை வேற.. ச்சை..!!" "அதுலாம் ஒன்னும் வேணாம்மா.. சிம்பிளா ஏதாவது பண்ணுங்க போதும்..!!" என்றாள் ஆதிரா. "ம்ம்.. சாம்பாரும், ரசமும் வச்சுரட்டுமா..??

அப்பளமும், உருளைக்கெழங்கும் பொரிச்சுடுறேன்..!! நாளைக்கு வேணா எதாவது கவுச்சி ஆக்கிக்கலாம்..!!" "ம்ம்..!!" "சரி.. நீங்க ரூம்ல போய் குளிச்சு ரெடியாகுங்க.. நான் சமையக்கட்டுக்கு போய் வேலையை பாக்குறேன்..!!" சொல்லிவிட்டு வேறுபக்கமாக நடந்தாள் வனக்கொடி..!! இரண்டு மூன்று அடி எடுத்து வைத்தவள்.. திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாய் மீண்டும் இவர்கள் பக்கமாக திரும்பி, "ஆங் ஆதிராம்மா.. கீசரு ரிப்பேரா போச்சும்மா.. வெண்ணி போட்டு பாத்ரூம்ல எடுத்து வச்சிருக்கேன்.. பகுந்து குளிச்சுக்கங்க..!!" என்றாள்.

 "ச..சரிம்மா.. நாங்க பாத்துக்குறோம்..!!" வனக்கொடி சமையல்கட்டிற்கு திரும்ப.. ஆதிராவும், சிபியும் அவர்களது தங்கும் அறைக்கு நடந்தனர்..!! ஆதிராவுக்கு காலில் ஏற்பட்ட வெட்டுக்காயம் இன்னும் முழுமையாக ஆறியிருக்கவில்லை.. அதனால் ஒருவித அவஸ்தையுடனே மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்தாள்.. சிபியும் அவசரத்தை விடுத்து மனைவிக்கு இணையாகவே நடந்து சென்றான்..!! காருக்குள் இருந்து அவர்களுடைய பெட்டியை கைப்பற்றியிருந்த தென்றல்.. அவர்களுக்கு முன்பாகவே அவர்களது அறைக்கு ஓடினாள்..!! வீட்டின் உட்புறம் விஸ்தாரமாக விரிந்திருந்தது.. அபரிமிதமான வேலைப்பாடு மிக்க அலங்கார வளைவுகளுடன் அழகுற காட்சியளித்தது..!!

இரண்டு அடுக்குகளை கொண்ட உட்கட்டமைப்பு.. இத்தாலியன் மார்பிள் பதிக்கப்பட்ட தரைத்தளம்..!! நான்கு திசை மேற்கூரையும் உட்புறமாக இறங்குகிற இடத்தில்.. நீள்சதுர வடிவில் அகலமான நடுமுற்றம்..!! நீண்ட வராண்டா.. நிறைய அறைகள்.. அந்த அறைகளை மூடியிருக்கும் பெரிய பெரிய கதவுகள்.. அத்தனை கதவுகளுக்குமான சாவிகளை மொத்தமாக எடை போட்டாலே ஒரு கிலோவுக்கு மேல் தேறும்..!! யானையின் கால்களென ஆங்காங்கே நின்று, அந்த வீட்டை தாங்கிப் பிடிக்கும் மரத்தூண்கள்.. வெளவால்களை அண்டவிடாமல் செய்ய, அந்த தூண்களில் செருகி வைக்கப்பட்டிருந்த ஈச்சங்கீற்றுகள்..!!

'எல்லாம் பர்மா தேக்கு' என்று தணிகை நம்பி எப்போதும் பெருமைப் பட்டுக்கொள்கிற ஊஞ்சல், நாற்காலிகள், மேஜைகள், அலமாரிகள், அணிகலன் பெட்டகங்கள்..!! தமிழர் பண்பாட்டின் தனிச்சிறப்பை உணர்த்துகிற மாதிரியான.. சுவற்றோடு பொருந்தியிருந்த எழில்மிகு ஓவியங்கள்..!! ஆதிராவும், சிபியும் மாடிப்படியேறி அவர்களது அறையை அடையவும்.. அறைக்குள் பெட்டியை வைத்துவிட்டு தென்றல் வெளியே வரவும் சரியாக இருந்தது..!! தென்றலை கண்டுகொள்ளாமல் சிபி அறைக்குள் நுழைய.. ஆதிராவோ அவளைப்பார்த்து ஒரு அன்புப் புன்னகையுடன் கேட்டாள்..!!

 "எப்படி இருக்குற தென்றல்..??" "ந..நல்லா இருக்கேன்கா..!!" "ஹ்ம்ம்.. பொடவைலாம் கட்டிக்கிட்டு பெரிய மனுஷி மாதிரி ஆயிட்ட..??" "இ..இல்லக்கா.. சும்மாத்தான்.. இ..இன்னைக்குத்தான் பொடவைலாம்.." தென்றல் வெட்கத்தில் நெளிந்தாள். "ஆமாம் கதிர் எங்க போயிருக்காரு.. ஆளை காணோம்..??" ஆதிரா திடீரென அவ்வாறு கேட்கவும்.. தென்றல் சற்றே திகைத்துப் போனாள்.. தடுமாற்றமாக ஆதிராவை ஏறிட்டு பார்த்தாள்..!! அவளுடைய தடுமாற்றத்தைக் கண்டு நெற்றி சுருக்கிய ஆதிரா, "எ..என்னாச்சு..??" என்று குழப்பமாக கேட்டுக் கொண்டிருக்கும்போதே, "அ..அண்ணன் இப்போ அகழில இல்லக்கா..!!" தென்றல் அவளுக்கு பதில் சொன்னாள்.

 "அப்புறம்..??" "கோயம்புத்தூர்ல இருக்கான்..!! உங்களுக்கு ஞாபகம் இல்லையா..??" "இ..இல்ல தென்றல்..!!" "போய் ஒருவருஷம் ஆச்சுக்கா..!!" "ஓ..!! கோயம்புத்தூர்ல என்ன பண்றார்..??" "அ..அங்க ஒரு காட்டன் மில்லுல சூப்பர்வைசரா ஜாயின் பண்ணிருக்கான்..!!" "வெரிகுட்..!!!! நல்ல வேலையா..??" "ம்ம்.. நல்ல வேலைக்கா.. நல்ல சம்பளம்..!!" "ஹ்ம்ம்ம்..!! அப்போ.. கதிருக்கும் வேலை கெடைச்சாச்சு.. அடுத்து.. கூடிய சீக்கிரமே உனக்கு கல்யாணம்தான்னு சொல்லு..!!" ஆதிரா அவ்வாறு கேலியாக கேட்டுவிட்டு கண்சிமிட்டவும், தென்றலுடைய முகம் வெட்கத்தில் குப்பென சிவந்து போனது.
"ஹையோ.. போங்கக்கா..!!" என்று சிணுங்கியவாறே அந்த இடத்தை விட்டு புள்ளிமானாய் துள்ளி குதித்து ஓடினாள்.

 "ஹாஹாஹாஹாஹாஹா..!!" அவள் ஓடுவதையே மலர்ந்த முகத்துடன் சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்த ஆதிரா.. பிறகு அறைக்குள் நுழைந்தாள்..!! சிறுவயதில் இருந்தே சிபிக்கென அந்த வீட்டில் ஒதுக்கப்பட்ட அறைதான் அது..!! ஆதிராவும், தாமிராவும் தூங்குகிற அறை கீழ்த்தளத்தில் இருக்கிறது..!! மைசூரிலிருந்து அகழிவரை மலைப்பாதையில் காரோட்டி வந்தது சிபிக்கு களைப்பாக இருந்திருக்க வேண்டும்.. அதனால்தான் அறைக்குள் நுழைந்ததுமே.. 'ஷ்ஷ்ஷ்ஷப்பாஆஆ' என்றொரு சலிப்பு மூச்சுடன் மெத்தையில் பொத்தென்று விழுந்திருந்தான்..!! கண்ணிமைகளை மூடி கைகால்களை நீட்டி படுத்திருக்க.. அவனுடைய மார்பு மட்டும் சீராக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது..!!

 சிபியை தொடர்ந்து அறைக்குள் நுழைந்த ஆதிரா ஒருகணம் அப்படியே நின்றாள்.. கட்டிலில் கணவன் கண்மூடி கிடப்பதை, நின்றபடியே சிறிது நேரம் ரசித்தாள்..!! அந்த அறை.. சிபி படுத்திருக்கிற கோலம்.. இடி மின்னலுடன் வெளியே பெய்யும் மழை.. வீசிய காற்றுக்கு படபடக்கும் ஜன்னல் திரைச்சீலை.. மழைக்கு கிளம்பிய மண்வாசனை.. எல்லாமுமாக சேர்ந்து இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த சம்பவத்தின் நினைவுகளை.. ஆதிராவுக்கு மீட்டுக் கொணர்ந்தன..!!

 இதே மாதிரிதான் அன்றும் வெளியே அடைமழை.. சிபியும் அறைக்குள் இதே போஸில் தூங்கிக்கொண்டிருந்தான்..!! அறைவாசலில் பட்டென தோன்றினாள் அவளுடைய தங்கை தாமிரா.. கைகள் இரண்டையும் பக்கவாட்டில் விரித்து வைத்துக்கொண்டு.. பறவையின் சிறகு மாதிரி அந்த கைகளை அசைத்துக்கொண்டு.. முகத்தில் ஒரு உற்சாகம் கொப்பளிக்க.. குரலில் ஒரு குறும்பு பொங்க.. சத்தமாக ஒரு பாடலை பாடிக்கொண்டே அறைக்குள் ஓடிவந்தாள்.. அவளுக்கு பின்னாலேயே ஆதிராவும்..!!

தாமிராவுக்கு எங்கிருந்துதான் இந்த மாதிரி பாடல்கள் கிடைக்குமோ தெரியாது..!! "மழை வருது மழை வருது நெல்லு அள்ளுங்க..!! முக்காப்படி அரிசி போட்டு முறுக்கு சுடுங்க..!!" பாடிக்கொண்டே வந்தவள் கட்டிலை நெருங்கியதும், தனது வலது காலை உயர்த்தி.. "ஏர் ஓட்டுற மாமனுக்கு எண்ணி வையிங்க..!! சும்மா கெடக்குற மாமனுக்கு சூடு வையிங்க..!!" என்று கத்தியவாறே, சிபியின் புட்டத்தில் ஓங்கி ஒரு உதை விட்டாள்..!! உடனே சிபி விருட்டென்று விழித்தெழுந்தான்..

 எழுந்த வேகத்திலேயே.. "ஏய்ய்ய்ய்.. முட்டக்கோஸு.. என்ன பண்றேன் பாரு உன்னை..!!" என்று சீறியவாறு, உக்கிரமாகிப்போன முகத்துடன்.. தாமிராவின் தலையில் குட்டு வைப்பதெற்கென.. வீராவேசமாக அவளை விரட்டினான்..!! "ஹாஹாஹாஹாஹாஹா..!!!!" கலகலவென சிரித்த தாமிரா சிபியின் பிடியில் சிக்காமல் சிட்டாக பறந்தோடினாள்..!! அப்போது ஏனோ தங்கையின் குறும்பை ஆதிராவால் ரசிக்க முடியவில்லை.. வேறொரு தருணத்தில் அதற்காக அவளை கடிந்தும் கொண்டாள்..!!

 "அதென்ன பழக்கம்.. எட்டி உதைக்கிறது..?? ரொம்பத்தான் கொழுப்பு வச்சுப் போச்சு உனக்கு..!!" "சரிஈஈ.. சரிஈஈ.. விடு..!! இனிமே ஒன்னும் பண்ணல உன் புருஷனை.. போதுமா..??" சிறுவயதில் இருந்தே சிபியின் மீது ஆதிராவுக்கு இருந்த ரகசிய காதல், தாமிராவும் அறிந்த ஒன்றுதான்.. அதனால்தான் 'உன் புருஷனை' என்ற அவளது அந்த கிண்டல்..!! தங்கையின் பதிலில் ஆதிராவுக்கு திருப்தி இல்லை.. ஒருவித எரிச்சல் உணர்வுடன் அவளையே முறைத்துப் பார்த்தாள்..!! ஆனால்.. இப்போது ஏனோ.. அந்த நிகழ்வின் நினைவு ஆதிராவுக்கு சிரிப்பை வரவழைத்தது..!! எழுந்த சிரிப்பை அடக்க முடியாமல் வாயை பொத்திக்கொண்டு சிரித்தும் விட்டாள்..!!

 "ஹாஹாஹாஹாஹாஹா..!!!!" "என்ன.. என்ன சிரிப்பு..??" இமைகள் திறந்த சிபி, ஆதிராவை பார்த்து கேட்டான். "ஒ..ஒன்னும்.. ஒன்னும் இல்ல..!!" ஆதிரா சமாளிக்க முயன்றாள். அப்படியும் முடியாமல் மீண்டும் சிரிப்பை சிந்திவிட்டாள். "ஹாஹாஹாஹாஹாஹா..!!" "ப்ச்.. கேக்குறேன்ல..??" சற்றே சலிப்பான சிபி இப்போது கட்டிலை விட்டே எழுந்துவிட்டான்.. நடந்து ஆதிராவை நெருங்கினான்..!! "ஹையோ.. ஒன்னும் இல்லத்தான்..!!" "இல்ல.. ஏதோ இருக்கு.. சொல்லு..!! சொல்லு ஆதிரா..!!" சிபி வற்புறுத்தவும் ஆதிரா ஒரு பெருமூச்சை உதிர்த்தாள்.. தனக்கு நினைவு வந்த நிகழ்வை அவனுக்கு உரைத்தாள்.. அடக்கமுடியாத ஒரு சிரிப்பை அவ்வப்போது சிந்தியவாறு..!!

 "........... தூக்க கலக்கத்தோட.. மூஞ்சிலாம் அப்படியே செவந்துபோய்.. பின்னாடி கைவச்சு தேச்சுக்கிட்டே.. அவளை நீங்க அடிக்க வெரட்டினது ஞாபகம் வந்துச்சு.. என்னால சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியல..!! ஹாஹாஹாஹாஹாஹா..!!!!" சொல்லிவிட்டு ஆதிரா மறுபடியும் சிரிக்க ஆரம்பிக்க, இப்போது சிபி அவளையே உர்ரென்று முறைத்தான். "ம்க்கும்.. இந்த மாதிரி தேவையில்லாத மேட்டர்லாம் நல்லா உனக்கு ஞாபகத்துக்கு வருது.. தேவையான மேட்டர் ஒன்னுகூட ஞாபகத்துக்கு வராதே..??" என்று சலிப்பாகவே கேட்டான்.

 "தேவையான மேட்டரா.. அது என்ன தேவையான மேட்டர்..??" ஆதிரா ஒருவித குழப்பத்துடன் திருப்பி கேட்டாள். "ஹ்ம்ம்.. நம்ம ஃபர்ஸ்ட்நைட் அன்னைக்கு எவ்வளவு மேட்டர் நடந்துச்சு.. ஐ மீன்.. நம்ம மேரேஜ்கப்புறம் ஒருமாசம் கழிச்சு வந்துச்சே.. அந்த ஃபர்ஸ்ட்நைட்..!! நான் படுத்திருக்குற போஸை பார்த்து அந்த மேட்டர்ல ஏதாவது உனக்கு ஞாபகம் வந்திருக்கலாம்ல..??" சிபி அவ்வாறு குறும்பாக கேட்கவும், இப்போது ஆதிராவின் முகம் அப்படியே நாணத்தில் சிவந்து போனது. "ஹையோ.. போங்கத்தான்..!! அதுலாம் எதுவும் எனக்கு ஞாபகத்துக்கு வரல..!!" என்று சிணுங்கினாள்.

 "எப்படி ஞாபகத்துக்கு வரும்.. அதைப்பத்தி கொஞ்சமாவது நீ யோசிச்சாத்தான..?? ஞாபகம் வரலை சரி.. அட்லீஸ்ட் நான் சொல்றதையாவது நம்பலாம்ல..??" "நீங்க சொல்றதுலாம் நம்புற மாதிரியே இல்ல.. எல்லாம் பொய் பொய்யா சொல்றிங்க..!!" "என்னது.. பொய்யா..?? அப்புறம் எப்படி எனக்கு அந்த மச்சத்தைப்பத்தி தெரிஞ்சதாம்..??" "நீங்க ஏதாவது திருட்டுத்தனமா பாத்திருப்பிங்க..!!" "நான் ஏன் திருட்டுத்தனமா பாக்கணும்..?? 'பாருங்கத்தான்.. எவ்வளவு அழகா இருக்கு'ன்னு நீயேதான் பெருமையா காட்டின..!!"

 "ச்சீய்ய்ய்..!! போங்கத்தான்.. அப்படிலாம் நான் பண்ணிருக்க மாட்டேன்..!!" சொல்லும்போதே ஆதிராவுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.. உடல் குறுகிப்போய் தலையை குனிந்துகொண்டாள்..!! சிபியின் கண்களிலோ ஒரு குறும்பு மின்னியது.. உதட்டில் ஒரு கேலிப்புன்னகை..!! நடந்ததெல்லாம் ஆதிராவுக்கு மறந்து போயிருந்ததை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு அவளை சீண்டிப்பார்த்தான் சிபி..!! இப்போது அவளுடைய இடுப்பில் கைபோட்டு வளைத்து.. தனக்கு நெருக்கமாக அவளை இழுத்து.. ஹஸ்கி வாய்ஸில் கொஞ்சலாக பேசினான்..!!




"நெஜ்ஜ்ஜ்ஜமாடா.. நான் என்ன பொய்யா சொல்றேன்..?? அந்த மச்சத்துல முத்தம் வேணும்னு கேட்டுக்கூட நீ கெஞ்சின.. முத்தம் தந்தப்புறம் என்ன பண்ணின தெரியுமா..?? என் தலையை பிடிச்சு.."

 "ஐயோ...!!! போதும்.. நிறுத்துங்க..!! பொய் பொய் எல்லாம் பொய்..!!" "உண்மை உண்மை 100% உண்மை..!!" "நான் நம்பமாட்டேன்பா..!!" "நம்பாட்டி போ.. நீ நம்பலைன்றதுக்காக நடந்ததுலாம் பொய்ன்னு ஆய்டாது செல்லம்..!! நீ என்னென்ன சேட்டை பண்ணுனன்னு எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு..!!" "நானா..?? நான் என்ன சேட்டை பண்ணுனேன்..??"

 "அதிகாலைல.. நாலு மணிக்கு..!!" "நாலு மணிக்கு..??" "அல்ரெடி ரெண்டு தடவை.. நான் அப்படியே டயர்டா தூங்கிட்டு இருந்தேன்..!! உனக்கு முழிப்பு வந்துடுச்சு.. முழிப்பு மட்டும் இல்ல.. மேடத்துக்கு மூடும் வந்துடுச்சு..!!" சிபி சொல்லிவிட்டு கண்ணடிக்க, "நோ நோ.. பொய்..!!" ஆதிரா பதறினாள்.

 "யெஸ்.. யெஸ்..!! மூணாவது தடவை நீயாதான் ஆரம்பிச்ச.. என்னை தூங்கவே விடல.. உன் காலை என் தொடை மேல போட்டு.. உன் கையை வச்சு.." "ச்சீய்ய்ய்..!!!! சத்தியமா அப்படிலாம் நான் பண்ணிருக்கவே மாட்டேன்.. நீங்க பொய் சொல்றீங்க..!!" "ப்ச்.. நான் ஏன்டா பொய் சொல்லப் போறேன்..?? ஹ்ம்ம்.. வேணுன்னா ஒன்னு பண்ணலாமா..??" "என்ன..??" "இன்னைக்கும் அதேமாதிரி ட்ரை பண்ணலாம்.. ரெண்டு தடவை பண்ணலாம்.. மூணாவது தடவை யார் கூப்பிடுறாங்கன்னு பாக்கலாமா..??" சிபி கேட்டுவிட்டு இளிக்க, ஆதிரா அவனை செல்லமாக முறைத்தாள்.

 "ம்க்கும்.. உங்க ஐடியா இப்போ எனக்கு நல்லா புரியுது..!! ரொம்பத்தான் ஆசை உங்களுக்கு..!!" என்றவாறே தனது இடுப்பை வளைத்திருந்த கணவனின் கைகளை பட்டென தட்டிவிட்டாள்..!! அவ்வளவு நேரம் பிரகாசமாக இருந்த சிபியின் முகம் இப்போது பொசுக்கென வாடிப்போனது.. ஆதிராவையே ஆசையும் ஏக்கமுமாக பார்த்தான்..!! அந்தப்பார்வையில்.. விளக்கமுடியாத ஒரு விரகதாபம் விஞ்சிப் போயிருந்தது..!!

திருமணமாகி இரண்டு மாதங்கள் கழிந்தும்.. ஒரே ஒரு நாள்தான் கட்டிலில் கலந்திருக்கிறார்கள்.. சிபியின் ஏக்கம் மிக இயல்பான ஒன்றுதான்..!! தளர்ந்துபோன குரலில் சலிப்பாக பேசினான்..!! "ஆமாம்.. ஆசைதான் எனக்கு.. அடக்க முடியல.. என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு..!! ரெண்டு மாசத்துல ஒரே ஒரு தடவை.. எனக்கு ஆசையா இருக்கு ஆதிரா.. திரும்ப வேணும்னு தோணுது..!!

சரி.. பிரச்சினைலாம் ஒருவழியா ஓய்ஞ்சு.. ஊட்டிக்கு ஹனிமூன் போறோம்னு சந்தோஷமா வந்தேன்.. நீ என்னடான்னா இங்க இழுத்துட்டு வந்துட்ட..!! என்னென்ன கற்பனைலாம் வச்சிருந்தேன் தெரியுமா.. இப்போ எல்லாம் கேன்ஸல்..!!" பரிதாபமாக சொன்ன கணவனை பார்க்க ஆதிராவுக்கு பாவமாக இருந்தது.. அவனுடைய ஏக்கம் புரிந்ததும் இவளுக்குள் அவன் மீது ஒரு இரக்கம் பிறந்தது..!! சிபியின் முகத்தையே ஓரக்கண்ணால் குறுகுறுவென பார்த்தாள்.. பிறகு குரலை குழைவாக மாற்றிக்கொண்டு சிணுங்கலாக சொன்னாள்..!!

 "எடம் மட்டுந்தான மாறிருக்கு.. எல்லாம் கேன்ஸல்னு யார் சொன்னது..??" ஆதிரா சொன்னதன் அர்த்தம் உடனடியாக சிபிக்கு விளங்கவில்லை.. ஒரு சில வினாடிகள் கழித்துதான் புரிந்து கொண்டான்.. உடனே அவனுடைய முகத்தில் மீண்டும் அந்த பிரகாசம்..!!


 "ஹேய்ய்ய்.. ஆதிராஆஆ..!!" என்று கத்தியவாறே மனைவியை ஆசையாக அணைத்துக் கொண்டான்.. ஆதிராவும் இப்போது அவனிடமிருந்து விலகவில்லை.. அவனுடைய அணைப்புக்குள் சுகமாக அடங்கிப் போனாள்..!! "நைட்டு..!!" என்றாள் கிசுகிசுப்பாக.

 "ஏன் அவ்ளோ நேரம் வெயிட் பண்ணனும்..??" சிபி அவளுடைய கழுத்தை முகர்ந்தான். "நைட்டு..!!" ஆதிரா நெளிந்தாள். "இப்போ லைட்டா பாஸ்ட்ஃபுட்.. நைட் ஹெவியா ஃபுல்மீல்ஸ்.. ஓகேவா..??" சிபி தனது அணைப்பை இறுக்கமாக்க, "நைட்டூடூடூ..!!!" ஆதிரா கத்தினாள். கைகளுக்குள் அடங்கியிருந்த மனைவியையே சிபி ஏக்கமாக பார்த்தான்.. பொங்கி வரும் ஆசை வெள்ளத்தை அணைபோட்டு தடுக்கிற நிலை அவனுக்கு..!! ஈரம் மினுக்கிற ஆதிராவின் இதழ்கள்.. தேனில் ஊறிய ஆப்பிள் துண்டங்களாய் அவனுக்கு காட்சியளித்தன..!!

அவளுடைய முகத்தை நோக்கி குனிந்தான்.. அந்த ஆப்பிள் துண்டங்களுக்கு தனது அதரங்களை எடுத்து சென்றான்..!! கணவனின் உதடுகளை கைகொண்டு தடுத்த ஆதிரா, "நைட்டு.. நைட்டு.. நைட்டு..!!" என்று கறாராக சொன்னாள். "சரி.. சரி.. சரி..!!!" நொந்துபோனவனாய் சிபி கத்தினான்.. நீளமாக ஒரு சலிப்பு மூச்சை வெளியிட்டான்.. ஆதிராவை தனது அணைப்பில் இருந்து விடுவித்தான்..!! "நைட்டே வச்சுக்கலாம்.. பாஸ்ட்ஃபுட் வேணாம்.. ஃபுல்மீல்ஸே சாப்பிட்டுக்குறேன்..!!" செல்லக்கோபத்துடன் சொன்னவன், மெத்தையில் போய் மீண்டும் விழுந்தான். 

"ஹாஹாஹாஹா..!!" ஆதிரா சிரித்தாள். "சிரிக்காத.. சீக்கிரம் குளிச்சுட்டு வா..!! அந்தப்பசிக்கு நைட்டுத்தான் சாப்பாடுன்னு சொல்லிட்ட.. வயித்துப் பசிக்காவது கொஞ்சம் குயிக்கா சாப்பிடலாம்..!!" சற்றே எரிச்சலுடன் சொல்லிவிட்டு இமைகளை மூடிக்கொண்டான்..!! அந்த அறையில் அட்டாச்ட் பாத்ரூம் இல்லை.. கீழ்த்தளத்தில் உள்ள பொது குளியலைறையைத்தான் உபயோகித்துக் கொள்ள வேண்டும்..!!

ஜிப் இழுத்து பெட்டியை திறந்த ஆதிரா.. உள்ளிருந்த பூந்துவாலையை எடுத்து தோளில் போட்டுக் கொண்டாள்.. மாற்று உடை, சோப்பு, ஷாம்பெல்லாம் அள்ளிக்கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்..!! படியிறங்கி கீழே வந்து.. விசாலமான அந்த ஹாலை கடந்து.. அடுத்த முனையில் இருந்த குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்..!! வெளியாடைகளை களைந்தாள்.. உள்ளாடைகளுடன் நின்றாள்.. கூந்தலை கட்டி வைத்திருந்த ஹேர்பேண்டை உருவி கையிலெடுத்தாள்..

விரல்கள் கோர்த்து முடியை பிரித்து விட்டுக் கொண்டாள்..!! வனக்கொடி பிடித்து வைத்திருந்த வெந்நீருடன் குளிர்நீர் கொஞ்சம் கலந்து.. மிதமான வெப்பத்துக்கு குளிநீரை மாற்றினாள்.. சற்றே உயரமான அந்த முக்காலியில் அமர்ந்து, நிதானமாக நீராட ஆரம்பித்தாள்..!! உடலுக்கு சோப்பு போட்டு முடித்தவள்.. முகத்துக்கும் நுரை சேர்க்க நினைக்கையில்தான்.. "க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்..!!!" அறைக்கு வெளியில் இருந்து ஏதோ சப்தம் கேட்டது..!!

புருவத்தை நெரித்த ஆதிரா சோப்பு போடுவதை நிறுத்தி வைத்துவிட்டு.. தனது காதுகளை சற்றே கூர்மையாக்கி கவனமாக கேட்டாள்..!! "க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்..!!!" அந்த சப்தம் சன்னமான டெசிபலில் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது..!! அது என்ன சப்தம் என்று அவளால் இனம்காண முடியவில்லை.. ஒரு சில வினாடிகள் யோசித்தாள்.. பிறகு புத்தியில் எதுவும் உறைக்காமல் போகவும், அந்த சப்தத்தை அலட்சியம் செய்துவிட்டு குளியலை தொடர்ந்தாள்..!! குளித்து முடித்து வேறு உடை அணிந்துகொண்டாள்.. தலையில் சுற்றிய டவலுடன் பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள்..!!

இப்போது அந்த சப்தம் இன்னும் தெளிவாகவே கேட்டது..!! "க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்..!!!" ஹாலில் இருந்த ஊஞ்சல் ஆளில்லாமல் அசைந்து கொண்டிருந்தது..!! உத்தரத்தில் இருந்து தொங்கும் இரட்டை ஊஞ்சல்கள் அவை.. தாங்குவதற்கு தடிமனான இரும்புச்சங்கிலி.. அமர்வதற்கு உராய்வற்ற மரப்பலகை.. இரண்டு பேர் ஒரே நேரத்தில் தனித்தனியாக அமர்ந்து ஆடலாம்.. அதில் ஒன்று மட்டுந்தான் இப்போது.. "க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்..!!!" என்ற சப்தத்துடன் அசைந்துகொண்டிருந்தது..

யாரோ இத்தனை நேரம் அதில் அமர்ந்து ஆடிவிட்டு, இப்போதுதான் இறங்கிச் சென்ற மாதிரி..!! ஆதிரா அந்த ஊஞ்சலையே சற்று குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்தபோதுதான்.. அவளுடைய நாசியை குப்பென்று அந்த வாசனை தாக்கியது.. மனதை மயக்குகிற மாதிரி ஒருவித சுகந்த நறுமணம்.. அவளுடைய நாசியில் புகுந்து, மூளைவரை பாய்ந்து, கண்கள் லேசாக செருகுமாறு, மெலிதான ஒரு கிறக்கத்தை அவளுக்கு ஏற்படுத்தியது அந்த வாசனை..!!

 ஆதிராவுக்கு மிகவும் பழக்கப்பட்ட வாசனைதான் அது.. ஆனால் சட்டென்று அவளால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை..!! எங்கிருந்து அந்த வாசனை வருகிறது என்று அப்படியும் இப்படியுமாய் தலையை திருப்பி திருப்பி பார்த்தாள்.. ஊஞ்சல் எப்படி தானாக அசைந்து கொண்டிருக்கிறது என்று வேறு உள்ளுக்குள் ஒரு கேள்வி.. எந்த முடிவுக்கும் வர முடியவில்லை அவளால்..!!


 ஒருசில வினாடிகள்.. பிறகு.. 'தென்றல் வந்து கொஞ்ச நேரம் ஊஞ்சல் ஆடியிருப்பாளாக இருக்கும்.. அவள் ஏதாவது வாசனை திரவியம் பூசியிருப்பாளாக இருக்கும்..' என்று அவளாகவே ஒரு முடிவுக்கு வந்து.. மெல்ல மாடிப்படியேற ஆரம்பித்தாள்..!!




No comments:

Post a Comment