Tuesday, December 16, 2014

கண்ணாமூச்சி ரே ரே - தமிழில் ஒரு திரில் தொடர் - பாகம் - 13


ஆதிரா குனிந்து அந்த புத்தகத்தை கையில் எடுத்தாள்.. அந்த புத்தகத்துக்குள் இருந்த இன்னொரு சிறிய புத்தகம் இப்போது வெளியே நழுவி விழுந்தது..!! அது.. அவளுடைய தங்கை தாமிராவின் கல்லூரி ஆட்டோக்ராஃப் புத்தகம்..!!

 அந்த ஆட்டோக்ராஃப் புத்தகத்தை பார்த்ததுமே ஆதிராவுடைய மூளையில் பளீரென்று ஒரு மின்னல்.. தொலைந்துபோன ஒரு சம்பவத்தின் நினைவுகளை அவளது மூளை இப்போது சட்டென மீட்டெடுத்தது.. ஒரு வருடத்திற்கு முன்பாக நடந்த அந்த சம்பவம்..!! இதோ.. இதே அறையில்தான்.. அதோ.. அந்த கம்ப்யூட்டர் மேஜை முன்பாகத்தான்.. தாமிரா அமர்ந்து அவளது கம்ப்யூட்டரில் ஏதோ கட்டுரை டைப் செய்து கொண்டிருந்தாள்..!!

இதே ஆட்டோக்ராஃப் புத்தகத்தைத்தான் ஆதிரா அந்த மேஜை மீது விசிறியடித்தாள்.. திகைத்துப்போய் நிமிர்ந்து பார்த்த தங்கையிடம், ஆதங்கம் நிறைந்த குரலில் கேட்டாள்..!! "என்னடி இது..??"
"எ..எது..??" - தாமிராவிடம் ஒருவித குழப்பம். "ம்ம்ம்ம்..??? இது..!!!" கடுப்பாக சொன்ன ஆதிரா.. அந்த ஆட்டோக்ராஃப் புத்தகத்தை திறந்து.. ஒரு குறிப்பிட்ட பக்கத்தை தங்கையிடம் விரித்து காட்டினாள்..!! அவ்வாறு விரித்து காட்டப்பட்ட பக்கத்தில்.. தாமிராவின் கல்லூரி தோழியால் கிறுக்கப்பட்ட அந்த வழியனுப்பு வாழ்த்து செய்தி..!!

 "தெளிவாக யோசி பெண்ணே.. துணிச்சலாக ஒரு முடிவெடு.. உனது காதல் கைகூட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..!! - அன்புத்தோழி அகல்விழி" ஆதிரா அந்தப்பக்கத்தை திறந்து காட்டியதுமே.. தாமிராவின் முகத்தில் பட்டென ஒரு சோர்வு.. 'பாத்துட்டாளா' என்பது போல ஒரு சலிப்பு..!!

அவஸ்தையாக இமைகளை மூடிக்கொண்டவள், எதுவும் பேசாமல் தலையை குனிந்துகொண்டாள்.. ஆதிரா அவளை விடவில்லை..!! "கேக்குறேன்ல..?? சொல்லுடி..!!" - ஆதிராவின் குரலில் ஒரு எரிச்சல். "என்ன சொல்ல சொல்ற..??" - அதே எரிச்சல் தாமிராவின் குரலிலும். "அப்டியே அறையப் போறேன் பாரு உன்ன..!! இத்தனை நாளா யாரையோ லவ் பண்ணிக்கிட்டு.. எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லனும்னு கூட உனக்கு தோணலைல..?? எல்லாம் நானே தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு..!!"

 "ப்ச்.. புரியாம பேசாதக்கா..!!"

 "யார்டி புரியாமப் பேசுறா..?? அமுக்குணி கழுதை..!!" 

".............................."

 "அத்தானை நான் லவ் பண்ற விஷயத்தை உன்கிட்ட சொன்னப்போ எனக்கு எத்தனை வயசுடி இருக்கும்..??"

 ".............................."

 "சொல்லுடி..!!"

 "என்ன.. ப..பன்னெண்டு பதினாலு வயசு இருக்கும்..!!"

 "ஹ்ம்ம்.. அப்போ நான் ஏஜ் அட்டண்ட் பண்ணக்கூட இல்ல.... என் மனசுல அந்த மாதிரி ஒரு நெனைப்பு வந்ததுமே, உடனே உன்கிட்ட வந்து சொன்னேன்..!! அப்போவே என் மனசுல இருக்குறதெல்லாம் எவ்வளவு ஃப்ராங்க்கா உன்கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டேன்..?? பண்ணிக்கிட்டேனா இல்லையா..??"

 "ம்ம்.. பண்ணிக்கிட்ட..!!" 

"அப்புறம்.. நீ மட்டும் ஏண்டி இப்படி இருக்குற..??"

 "எப்படி..??"

 "ம்ம்..?? சரியான அழுத்தக்காரியா..!!"




"ஹையோ.. உனக்கு புரியலக்கா..!!" "என்ன புரியல..?? நீ சொல்லு.. நான் புரிஞ்சுக்குறேன்..!!" "என்ன சொல்றது.. உன் லவ் மாதிரி என் லவ் அவ்வளவு ஈஸி கெடையாது.. நீ அத்தானை லவ் பண்ணின.. அத்தானுக்குத்தான் உன்னை முடிக்கணும்னு அப்பாவுக்கும் அப்போ இருந்தே அபிப்ராயம்.. It's all so easy for you..!!

என் லவ் அந்த மாதிரி இல்லக்கா.. It's really complicated.. நெறைய பிரச்சினை இருக்கு இதுல.. இந்த லவ் சக்சஸ் ஆகும்னே எனக்கு நம்பிக்கை இல்ல..!! அப்படி இருக்கும்போது அதை எப்படி உன்கிட்ட வந்து பட்டுன்னு சொல்ல சொல்ற..??" தாமிரா அந்தமாதிரி வருத்தம் தோய்ந்த குரலில் பரிதாபமாக சொல்லவும்.. அத்தனை நேரம் அவள்மீது ஆதிராவுக்கு இருந்த கோவம், இப்போது சட்டென காணாமல் போனது.. உள்ளத்துக்குள் உடனடியாய் தங்கைமீது ஒரு அன்பு ஊற்று பீறிட்டு கிளம்பியது..!!

தாமிராவின் கையை தனது கையால் ஆதரவாக பற்றிய ஆதிரா.. இப்போது கனிவான குரலில் கேட்டாள்..!! "ப்ச்.. ஏண்டி இப்படிலாம் பேசுற..?? அப்படி என்ன உன் லவ்ல பிரச்சினை..?? சரி அதை விடு.. அந்தப் பையன் யார்னு சொல்லு மொதல்ல..!!" ஆதிரா கேட்க, "........................." தாமிரா சில வினாடிகள் அமைதியாக இருந்தாள்.

 "சொல்லுடி.. ப்ளீஸ்..!!" ஆதிரா திரும்ப கெஞ்சலாக கேட்கவும், தாமிரா இப்போது வாய் திறந்தாள். "க..கதிர்..!!" தாமிரா சொன்னதும் ஆதிராவின் முகத்தில் ஒரு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். "யா..யாரு..?? நம்ம கதிரா..?? ந..நம்ம வனக்கொடிம்மா பையனா..??" "ம்ம்..!!" "எ..எப்படிடி ..??" "எ..எப்படின்லாம் எனக்கு சொல்லத் தெரியலைக்கா.. அப்படித்தான்..!!" "எத்தனை நாளா..??" "இ..இப்போத்தான்.. கொஞ்ச நாளா..!! ஃபர்ஸ்ட் அவன் ப்ரொபோஸ் பண்ணினான்.. எனக்கு பிடிக்கல வேணான்னு சொல்லிட்டேன்.. அவனை அவாய்ட் பண்ணேன்.. அப்புறமும் அவன் ஸ்ட்ராங்கா இருந்தான்.. கொஞ்சம் கொஞ்சமா என்னையும் கரைச்சுட்டான்..!!"

 "ஹ்ம்ம்..!!" ஆதிரா இப்போது பட்டென ஒரு யோசனையில் ஆழ்ந்தாள்..!! கதிர் நல்ல பையன்தான்.. கெட்ட பழக்கம் என்றெல்லாம் எதுவும் கிடையாது.. ஆதிரா, தாமிரா, சிபி என மூவரோடும் நான்காவது ஆளாக சிறுவயது முதலே நட்புடன் சுற்றி திரிபவன்தான்..!!

பட்டப்படிப்பு முடித்திருக்கிறான்.. இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னும் தகுந்த வேலை கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கிறான்..!! அவனுக்கு தாமிரா மீது எப்போதும் ஒரு சாஃப்ட் கார்னர் உண்டு என்பதை ஆதிரா முன்பே அறிவாள்.. ஆனால்.. இருவரும் இப்படி காதலில் சிக்கிக் கொள்வார்கள் என்பதைத்தான் அவள் எதிர்பார்த்திரவில்லை..!!

 இளையவர்களுக்கு கதிர் மீது எந்த பாரபட்சமும் இல்லை.. தங்களில் ஒருவனாகத்தான் அவனை பார்த்தார்கள்..!! ஆனால் பெரியவர்களுக்கும் அப்படி என்று சொல்லமுடியாது.. முக்கியமாக தணிகைநம்பிக்கு..!! ஒரு சிறு விஷயத்திற்காக கௌரவம் பார்த்துக்கொண்டு.. பூவள்ளியின் சொந்தங்களை இன்று வரை தள்ளி வைத்திருப்பவர்..

தனது வீட்டில் வேலைபார்க்கும் பெண்ணின் மகனுக்கு, தன் மகளை மணமுடித்துக் கொடுக்க சம்மதிப்பார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்..?? தாமிராவின் பயமும் கவலையும் ஆதிராவுக்கு இப்போது தெளிவாக புரிந்தது..!! "அப்பா சம்மதிக்க மாட்டார்னு நெனைக்கிறியா..??" "ஏன்.. நீ சம்மதிப்பார்னு நெனைக்கிறியா..??" "இல்ல.. சம்மதிக்க மாட்டார்னுதான் தோணுது..!!" "எனக்கும் அப்படித்தான்..!!"

 "ஹ்ம்ம்.. இதைத்தான் காம்ப்ளிகேட்டட்னு சொன்னியா..??" "ஆமாம்..!! அதுமில்லாம அவன் இப்போ ஜாப்ல வேற இல்ல.. அவன் மொதல்ல நல்ல வேலைல செட்டில் ஆகணும்..!!" "ஏதோ இண்டர்வியூன்னு சொல்லிட்டு இருந்தாரு..??" "ம்ம்.. கோயம்புத்தூர்ல.. ஒரு காட்டன் மில்லுல சூப்பர்வைசர் வேலையாம்.. இன்னைக்கு ஈவினிங் கெளம்புறான்..!! அப்படியே சென்னை வேற போறதா சொன்னான்.. ஒருவாரம் கழிச்சுதான் வருவான்னு நெனைக்கிறேன்..!!"

 "ஹ்ம்ம்ம்.. கவலைப்படாத தாமிரா.. அவருக்கு கண்டிப்பா இந்த வேலை கெடைச்சிடும்.. பாதி ப்ராப்ளம் சால்வ் ஆய்டும்..!! அப்பாவை சம்மதிக்க வச்சுட்டா மீதி ப்ராப்ளமும் சால்வ்ட்..!!" "ம்ம்..!!" "நான் வேணா அப்பாட்ட பேசிப் பாக்கட்டுமாடி..??" "எதைப்பத்தி..??" "உன் லவ் மேட்டர் பத்தித்தான்..!!" "எப்போ..??" "ஏன்.. இப்போவேதான்..!!"

 "ஹையோ.. சும்மா இருக்கா நீ வேற.. காரியத்தையே கெடுத்துடாத..!!" "என்னடி சொல்ற..??" "பின்ன என்ன.. இப்போத்தான் உனக்கும் அத்தானுக்கும் கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சிருக்காங்க.. இந்த நேரத்துல இதைப்போய் சொல்லி அவங்களை டென்ஷனாக்க வேணாம்..!! நீ மொதல்ல கல்யாணம் ஆகி இந்த வீட்டை விட்டு கெளம்பு.. என் பிரச்சினையை நான் பாத்துக்குறேன்..!!"

 "ஏண்டி இப்படி பேசுற.. உனக்கு ஒரு கஷ்டம்னா அது எனக்கும் இல்லையா..??" "ஹையோ.. நான் அப்படி சொல்லலக்கா.. வீடே சந்தோஷமா இருக்குறப்போ.. இந்த விஷயத்தை சொல்லி அந்த சந்தோஷத்தை கெடுக்க வேணாம்..!! மொதல்ல உன் கல்யாணம் நல்லபடியா நடந்து முடியட்டும்.. இதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்..!! புரியுதா..??"

 "ம்ம்..!!" "கொஞ்ச நாளைக்கு இந்த விஷயத்தை உனக்குள்ளேயே வச்சுக்கோக்கா.. யார்ட்டயும் சொல்லாத.. ப்ளீஸ்..!!" குறிப்பிட்ட தேதியில் அந்த கல்யாணம் நடப்பதற்குள்ளாகத்தான் தாமிரா மறைந்து போன சம்பவம்.. அந்த அதிர்ச்சியில் இருந்து அந்த குடும்பம் மீண்டு, சிபிக்கும் ஆதிராவுக்கும் கல்யாணம் நடக்க மேலும் ஒருவருடம் ஆகிப்போனது..!! "ஆதிராம்மா.. என்னாச்சுமா..??" வனக்கொடி வந்து தோளைப் பற்றவும்தான் ஆதிரா பழைய நினைவுகளில் இருந்து மீண்டாள். "ஒ..ஒன்னுல்லம்மா..!!" என்றாள்

தடுமாற்றமாக. "ஐயையே.. மைப்பாட்டிலை வேற தட்டி விட்டுடுச்சா..??" வெறுப்புடன் முனுமுனுத்தவாறே, அருகில் கிடந்த ஸ்டூலை இழுத்துப்போட்டு ஏறி.. சாய்ந்திருந்த கண்ணாடி சீஸாவை சரியாக நிமிர்த்தி வைத்தாள் வனக்கொடி..!! மனதில் ஒருவித குழப்ப சிந்தனையுடன் எங்கேயோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த ஆதிரா.. வனக்கொடியின் பக்கமாக திரும்பாமலே அவளிடம் கேட்டாள்..!!
"இன்னைக்கு சாயந்திரம் கதிர் எங்கயும் வெளில போவாராம்மா..??"

 "இல்லம்மா.. வீட்லதான் இருப்பான்.. ஏன் கேக்குற..??" "எனக்கு அவர் கூட கொஞ்சம் பேசணும்மா..!!" இறுக்கமான குரலில் சொல்லிவிட்டு.. சிவப்புமை படர்ந்த புத்தகத்தையும், தங்கையின் ஆட்டோக்ராஃப் புத்தகத்தையும் ஒரு கையில் பிடித்தவாறே.. அந்த அறையின் வாசலை நோக்கி நடந்தாள் ஆதிரா..!! ஆதிராவுக்கு வியப்பாக இருந்தது.. தொலைந்துபோன ஒருவருட நினைவுகளில், தங்கையின் காதல் பற்றிய நினைவும் அடங்கியிருந்ததை எண்ணி ஒருவித அலுப்பு.. 'அதையும் கூடவா மறந்து தொலைப்பாய் அறிவுகெட்ட மூளையே..?' என்று தனது நிலையை தானே கடிந்துகொண்டாள்..!! அன்று மாலை சிபி கண் விழித்ததுமே, ஆதிரா அவனிடம் அந்த விஷயம் பற்றி பேசினாள்..

தனக்கு ஞாபகம் வந்த தாமிராவின் காதல் பற்றிய நினைவை தெளிவாக விளக்கி கூறினாள்..!! தாமிரா கதிரை காதலித்த செய்தி சிபிக்கு புதிதாக இருந்தது.. 'என்ன சொல்ற ஆதிரா..?? அப்படியா..?? கதிரையா..??' என்று திரும்ப திரும்ப கேட்டான்..!! 'ஆமாம் அத்தான், எனக்கு இப்போத்தான் ஞாபகம் வந்தது' என்று அவனை நம்ப வைக்க முயன்றாள்.. அந்த ஆட்டோக்ராஃப் புத்தகத்தையும் ஆதாரமாக திறந்து காட்டினாள்..!!

அவனும் சிறிதுநேர சிந்தனைக்கு பிறகு.. 'சரிதான்' என்று சமாதானம் ஆனதும்.. ஆதிரா அவனிடம் கேட்டாள்..!! "அவ லவ் பண்ற விஷயத்தை அப்போதைக்கு யார்ட்டயும் சொல்லவேணாம்னு தாமிரா சொல்லிருந்தா.. அவ போனப்புறமும்கூட அதைப்பத்தி நான் உங்கட்ட சொல்லலையா அத்தான்..??" ஆதிரா அவ்வாறு கேட்டதும் சிபி அவளுடைய கையை பற்றிக்கொண்டான். அவளது விரல்களை வாஞ்சையாக வருடிக் கொடுத்தவாறே சொன்னான். "இல்ல ஆதிரா.. சொல்லல..!!

தாமிரா போனதுக்கப்புறம் நீ ரொம்பவே உடைஞ்சு போய்ட்ட.. யார்ட்டயும் சரியா பேசுறது கூட கெடையாது.. எந்த நேரமும் எங்கயாவது வெறிச்சு பாத்துட்டுதான் உக்காந்திருப்ப.. நீ கொஞ்சம் நார்மலுக்கு வர்றதுக்கே ஆறு ஏழு மாசம் ஆய்டுச்சுடா..!! அவளே நம்மள விட்டு போனப்புறம் அவ லவ் மேட்டரை வெளில சொல்லி என்ன ஆகப்போகுது.. ம்ம்..?? அது உனக்கு அவ்வளவு முக்கியமா பட்டிருக்காது..!!"

 "ம்ம்.. ஆமாம்.. அப்படித்தான் இருக்கணும்..!! ஹ்ம்ம்.. அப்புறம்.. இன்னொரு விஷயம்..!!" "என்ன..??" "இன்னைக்கு அவரை நேர்ல போய் பார்த்து பேசலாம்னு இருக்கேன் அத்தான்..!!" "யாரை.. கதிரையா..??" "ம்ம்..!!" "இந்த விஷயத்தை பத்தி பேசப் போறியா..??" "ஆமாம்..!!" "எதுக்கு ஆதிரா..?? அதெல்லாம் தேவையில்லாததுன்னு தோணுது..!!" "இல்லத்தான்.. அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணிருக்காங்க.. தாமிராவை பத்தி நமக்கு தெரியாத ஏதாவது விஷயம் அவருக்கு தெரிஞ்சிருக்க சான்ஸ் இருக்கு..!! அவர்ட்ட பேசினா ஏதாவது மேட்டர் கெடைக்கும்னு நெனைக்கிறேன்..!!" ஆதிரா அவ்வாறு சொல்ல, சிபி அவளையே முறைப்பாக பார்த்தான்.. அவனது பார்வையின் அர்த்தம் புரியாதவளாய் ஆதிரா குழப்பமாக கேட்டாள்..!!

 "என்னத்தான்.. அப்படி பாக்குறீங்க..??" "ம்ம்..?? அகழி வந்து அஞ்சுநாள் இருந்தா போதும், மறந்து போனதுலாம் தானா ஞாபகம் வரும்னு சொல்லி, என்னை இங்க கூட்டி வந்த.. இப்போ என்னடான்னா.. நீயாவே அதெல்லாம் வம்படியா வரவச்சுக்குறியோன்னு தோணுது..!!" "ச்சேச்சே.. அப்படிலாம் இல்லத்தான்..!!" "இந்த மாதிரிலாம் ஸ்ட்ரெயின் பண்ணிக்க கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காங்கடா..!!" "ப்ளீஸ்த்தான்.. இது மட்டும்..!! ப்ளீஸ்..!!"

ஆதிராவின் கெஞ்சலுக்கு இறங்கிய சிபி, "ஹ்ம்ம்.. என்னவோ பண்ணிட்டு போ.. ஆனா.. இந்த இன்வெஸ்டிகேஷன்லாம் இன்னும் ரெண்டு நாளைக்குத்தான்.. நல்லா ஞாபகம் வச்சுக்கோ..!! மூணாவது நாள் பொட்டியை கட்டிக்கிட்டு ஊட்டிக்கு என்கூட ஹனிமூன் கொண்டாட வர்ற.. சரியா..??" என்று குறும்பான குரலில் சொல்ல, "ம்க்கும்.. அதான் ஹனிமூன் அல்ரெடி அகழிலயே ஸ்டார்ட் ஆய்டுச்சே..??" என ஆதிரா நாணத்துடன் தலைகுனிந்தவாறே சொன்னாள். "ஓ.. இதுக்குப் பேரு ஹனிமூனா..?? மண்டு..!! ஹனிமூன்னா செக்ஸ் மட்டும் இல்ல.. அதில்லாம நெறைய இருக்கு.. முக்கியமா.. நம்ம ரெண்டு பேர் மனசுலயும் எந்த தேவையில்லாத நெனைப்புமே இருக்கக்கூடாது.. புரியுதா..??"

 "ம்ம்.. புரியுது..!!" ஆதிரா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, "ஹேய்.. எங்க.. உன் கைல போட்ருந்த ரிங்க காணோம்..??" என்று சிபி குழப்பமாக கேட்டான்.. உடனே ஆதிராவும் பட்டென தனது விரல்களை உயர்த்தி பார்த்தாள்..!! அவர்கள் கார் விபத்தில் சிக்கிக்கொண்ட காதலர் தினத்தன்று.. சிபி அவளுக்கு அன்புடன் அணிவித்த அந்த மோதிரம் இப்போது அவளது விரல்களில் இல்லை..!!

அதை அறிந்ததுமே ஆதிராவிடம் உடனடியாய் ஒரு பதற்றம்..!! "ஐயையோ.. எங்க போச்சு.. கைலதான போட்ருந்தேன்.. காலைல கூட பாத்தனே..??" "குளிக்கிறப்போ பாத்ரூம்ல ஏதும் கழட்டி வச்சியா..??" "இ..இல்லத்தான்.. கழட்டல.. கழட்டுன மாதிரி ஞாபகமே இல்ல..!! எங்க விழுந்துச்சுனு தெரியலையே..?? ஐயோ.. கடவுளே..!!" புலம்பலாக சொன்ன ஆதிரா நெற்றியை பிசைந்துகொண்டாள்.. மோதிரம் எங்கே சென்றிருக்கும் என்று தீவிரமாக யோசித்தாள்..!!

ஆதிராவின் கவனக்குறைவு சிபிக்கு ஒருவித எரிச்சலையே தந்தது.. அவன் ஆசையாக அவளுக்கு அணிவித்த மோதிரம் அல்லவா..?? ஆனால்.. ஆதிராவிடம் காணப்பட்ட ஒரு அதீத பதற்றம் சிபியின் எரிச்சலுணர்வை கட்டுக்குள் கொண்டுவந்தது.. மனைவியின் மீது அன்பு பெருக்கெடுத்தவனாய் இதமாக சொன்னான்..!!

 "சரி விடு.. டென்ஷன் ஆகாத.. இங்கதான் எங்கயாவது இருக்கும்.. அப்புறம் பொறுமையா தேடிப்பாரு..!!" "ம்ம்.. பாக்குறேன்..!! ஸாரித்தான்.. கொஞ்சம் கேர்லஸா இருந்துட்டேன்.. காலைல இருந்து என் மைண்டும் ரிலாக்ஸ்டா இல்ல..!! ஸாரி..!!" "ப்ச்.. இதுக்குலாமா ஸாரி கேட்ப..?? விடு ஆதிரா..!! வா.. சாஞ்சுக்கோ வா..!!" கைகள் இரண்டையும் விரித்து சிபி காதலுடன் அழைக்க, "ம்ம்ம்.. சாஞ்சுக்கிட்டேன்..!!" என்று சிணுங்கலாக சொன்னவாறே அவனுடைய நெஞ்சில் சாய்ந்துகொண்டாள் ஆதிரா.

 ஆதிராவின் வீட்டில் இருந்து ஐந்து நிமிட நடையில் வனக்கொடியின் வீட்டை அடைந்துவிடலாம்.. பால்கனியில் இருந்து பார்த்தால் தனியாக நின்றிருக்கும் வனக்கொடியின் வீடு தெளிவாகவே தெரியும்..!! சிபியிடம் பேசிமுடித்த சிறிது நேரத்துக்கெல்லாம் ஆதிரா வீட்டிலிருந்து கிளம்பிவிட்டாள்..!! கதிரை சென்று பார்த்து.. ஆரம்ப நல விசாரிப்புகள் முடிந்த பிறகு.. அவனிடம் தனியாக பேசவேண்டும் என்று கூறி.. அருகில் இருந்த கல்மண்டபத்துக்கு அழைத்து சென்றாள்..!!




கல் மண்டபத்தை அடைந்து சிறிது நேரம் ஆகியும்.. இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.. ஆளுக்கொரு திசையை வெறித்து பார்த்தவாறு நின்றிருந்தனர்..!! எப்படி ஆரம்பிப்பது என்று ஆதிராவுக்குள் ஒரு தயக்கம்.. எதற்காக அழைத்திருப்பாள் என்று கதிருக்குள் ஒரு குழப்பம்..!! கொஞ்ச நேரத்தில் பொறுமை இல்லாமல் கதிரே கேட்டுவிட்டான்..!!

 "ஏதோ தனியா பேசணும்னு சொல்லி கூட்டி வந்துட்டு.. ஒண்ணுமே சொல்லாம இருக்கீங்க..??" "ஹஹா.. அப்டிலாம் ஒன்னுல்ல.. ம்ம்ம்ம்.. உங்க வேலைலாம் எப்படி போய்ட்ருக்கு கதிர்..??" "ம்ம்.. பரவால.. நல்லா போய்ட்ருக்கு..!! போன மாசம் ப்ரமோஷன் தந்தாங்க.. சேலரி கொஞ்சம் இன்க்ரீஸ் பண்ணிருக்காங்க.. தங்கிக்க குவாட்டர்ஸ் குடுத்திருக்காங்க..!!" "ஓ.. வெரி குட்..!! அப்போ.. ஜாப்ல நல்லா செட்டில் ஆகிட்டிங்க.. அப்டித்தான..??" "ம்ம்.. ஆமாம்..!!"

 "அப்படியே காலாகாலத்துல ஒரு கல்யாணமும் பண்ணிக்கலாம்ல..??" "ஹ்ஹ.. கல்யாணமா.. அதுக்கென்ன இப்போ அவசரம்..??" "என்ன இப்படி சொல்றீங்க..?? உங்களுக்கும் வயசாகிட்டே போகுதுல..?? வனக்கொடி அம்மாக்கும் ஆசை இருக்கும்ல..??" "ம்ம்.. பாக்கலாங்க ஆதிரா..!!" "பண்ணிக்கிற மாதிரி ஐடியா இருக்குதான..??" ஆதிரா திடீரென அவ்வாறு கேட்கவும், கதிர் சற்றே நெற்றியை சுருக்கினான்.

 "பு..புரியல.. ஏன் கேக்குறீங்க..??" "இ..இல்ல.. இன்னும் நீங்க தாமிராவ நெனச்சுட்டு இருக்கலைல..??" கேட்டுவிட்டு ஆதிரா கதிரின் கண்களை கூர்மையாக பார்த்தாள்.. அவனோ இவளையே அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தான்.. அவனுடைய முகத்தில் குழப்பமும், திகைப்பும் கலந்துகட்டி வழிந்தது..!! "ஆ..ஆதிரா.. உங்களுக்கு..??" என்று தடுமாற்றமாக கேட்டான். "ம்ம்.. தெரியும்..!!"

 "எப்படி..??" "தாமிரா முன்னாடி சொல்லிருக்கா..!!" "ஓ..!!! நா..நான்.. நான் எக்ஸ்பெக்ட் பண்ணலைங்க.. அந்த விஷயம் யாருக்கும் தெரியாதுன்னு நெனச்சுட்டு இருக்கேன்..!!" "பரவால கதிர்.. இப்போ தெரிஞ்சதுனால என்ன..??" "ம்ம்.. ஒன்னுல்லதான்..!!" "சரி.. இப்போ சொல்லுங்க..!! இன்னும் நீங்க தாமிராவையே நெனச்சுட்டு இருக்கிங்களா..??" "ஹ்ஹ.. என்ன சொல்றது.. ஒரு வருஷத்துல எல்லாத்தையும் மறக்குற அளவுக்கு என் லவ் அவ்ளோ வீக் இல்லைங்க ஆதிரா..!!

அவளை ரொம்ப ரொம்ப லவ் பண்ணினேன்.. அவ்வளவு சீக்கிரமாலாம் என்னால அவளை மறக்க முடியாது..!! பட்.. நார்மலுக்கு வர ட்ரை பண்ணிட்டுத்தான் இருக்கேன்..!!" கதிரின் குரலில் ஒருவித விரக்தி கலந்திருந்தது. "ஹ்ம்ம்.. தாமிரா போனது உங்களுக்குமே ரொம்ப கஷ்டந்தான்.. இல்ல..??" "ரொம்ப கொடுமைங்க..!! என் கஷ்டத்தை யார்கிட்டயும் சொல்லக்கூட என்னால முடியல.. வாய்விட்டு அழணும்னா கூட தனியா உக்காந்துதான் அழனும்.. மனசுக்குள்ள இன்னும் அந்த வலி இருக்குது..!!" "ஹ்ம்ம்.. புரியுது..!!

எல்லாத்தையும் மறந்துட்டு.. உங்க லைஃப் பத்தியும் கொஞ்சம் யோசிங்க கதிர்..!!" "ம்ம்.. ட்ரை பண்றேன்..!!" "அப்புறம்.. உங்ககிட்ட ஒன்னு கேக்கணும்.. கேக்கட்டுமா..??" "கேளுங்க..!!" "தாமிரா காணாம போனதை நீங்க எப்படி எடுத்துக்குறீங்க..??" "எப்படினா..?? எனக்கு புரியல..!!" "எப்படி சொல்றதுனா.. அவ காணாம போனதுல எனக்கு நெறைய கொழப்பம் இருக்கு.. நெஜமாவே குறிஞ்சிதான்.." ஆதிரா சொல்லிக்கொண்டிருக்கையிலேயே, "இல்லைங்க.. குறிஞ்சிதான் காரணம்னு எனக்கு தோணல..!!" என கதிர் இடையில் புகுந்து பட்டென்று சொன்னான்..!!

அதைக் கேட்டதும் ஆதிராவிடம் மெலிதாக ஒரு ஆச்சர்யம்.. முகத்திலும் குரலிலும் அந்த ஆச்சரியத்தின் பிரதிபலிப்போடு திரும்ப கேட்டாள்..!! "ஏ..ஏன் அப்படி சொல்றீங்க..?? அ..அதான்.. உங்க அம்மாவே.. அதை கண்ணால.." "இல்லைங்க ஆதிரா.. அம்மா ரொம்ப பயந்தவங்க.. சும்மாவே எதை பாத்தாலும் குறிஞ்சி குறிஞ்சின்னு சொல்லிட்டு இருப்பாங்க.. எந்த மாதிரி சூழ்நிலைல எதை பாத்து அவங்க அந்த மாதிரி சொல்றாங்கன்னு எனக்கு தெரியல..!!

அவங்க சொல்றதை எல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு நாம நம்ப வேணாம்..!!" "ஓ..!! அப்படினா.. குறிஞ்சின்ற விஷயம் மேலயே உங்களுக்கு நம்பிக்கை இல்லையா..??" "அப்படி இல்ல.. குறிஞ்சின்ற விஷயம் மேல எனக்கு எந்த அபிப்ராயமும் இல்ல.. உங்களை மாதிரிதான்.. நம்பலாமா வேணாமான்னு கன்ஃப்யூஷன்ல இருக்குற சராசரி ஆள்தான் நான்..!! ஆனா குறிஞ்சியோட ஆவி தாமிராவை தூக்கிட்டு போய்டுச்சுன்னு சொல்றதைத்தான் என்னால நம்ப முடியல..!!" "அதான் ஏன்னு கேக்குறேன்..??" "எப்படி சொல்றது.. இந்த ஊரே குறிஞ்சியை பத்தி தப்பா பேசுறப்போ.. ராட்சசி, சூனியக்காரின்னுலாம் கேவலமா திட்டுறப்போ.. குறிஞ்சியை நல்லவன்னு சொன்ன ஒரே ஆள் தாமிராதான்..!!

அப்படிப்பட்ட தாமிரா மேல குறிஞ்சிக்கு என்ன கோவம்..?? குறிஞ்சி பத்தி தாமிரா சொன்னதெல்லாம் இன்னும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.. அதெல்லாம் கேட்டப்புறம் அந்த குறிஞ்சியோட ஆவிதான் தாமிராவை தூக்கிட்டு போயிருக்கும்னு.. என்னால நம்ப முடியலங்க ஆதிரா..!!" கதிர் மிக இயல்பாகத்தான் பேசினான்.. ஆனால் அவன் பேச பேச ஆதிராவிடம் ஒரு மாற்றம்.. அவளுடைய மூளையில் பளீர் பளீரென ஒரு மின்னல் தாக்குதல்.. முகத்தில் ஒருவித திகைப்பு கலந்த இறுக்கம்..!!

தொலைந்து போன சில நினைவுகள் அவளது மனதுக்குள் இப்போது ஊற்றெடுக்க.. அவளிடம் மெலிதாக ஒரு தடுமாற்றம்..!! "எ..என்ன சொல்றீங்க கதிர்..??" "குறிஞ்சியை பத்தி இந்த ஊர்க்காரங்க சொல்றதெல்லாம் தப்புன்னு நிரூபிக்க.. தனியா நின்னு போராடுனவ தாமிரா..!! அவளுக்கு அந்த குறிஞ்சியாலேயே ஆபத்துனா.. நம்புறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..!!" "எ..எனக்கு புரியல.. அவ என்ன போராடுனா..??" "ஓ..!! உ..உங்களுக்கு அதுலாம் ஞாபகம் இல்லையா..?? குறிஞ்சியோட உண்மைக்கதை என்னன்னு தாமிரா ஒரு ஆராய்ச்சி செஞ்சாளே.. ஞாபகம் இல்ல..??" இப்போது கதிர் குழப்பமாக கேட்க, ஆதிராவுக்கு தலை வலிப்பது மாதிரி இருந்தது.. முகத்தை அவஸ்தையாக சுருக்கியவள், நெற்றியை பற்றி பிசைந்து கொண்டாள்..

காலில் ஏற்பட்டிருந்த வெட்டுக்காயத்தின் வலி இப்போது இன்னும் அதிகரிப்பது போல ஒரு உணர்வு.. கால்கள் மெலிதாக தடுமாற, அருகிலிருந்த கல்த்தூணை ஆதரவாக பற்றிக் கொண்டாள்..!!

தாமிராவின் ஆராய்ச்சி பற்றிய நினைவுகள் ஒவ்வொன்றாக அவளுக்கு ஞாபகம் வர.. சற்று மூச்சிரைத்தவாறே அமைதியாக அந்த ஞாபகங்களை சேகரித்துக் கொண்டாள்..!! "ம்ம்.. ஞாபகம் இருக்கு..!!" என்றாள் சில வினாடிகளுக்கு பிறகு. "அதான் சொல்றேன்.. குறிஞ்சிதான் காரணம்னு என்னால நம்ப முடியல..!!" "கு..குறிஞ்சி இல்லன்னா.. அப்புறம்..??" கேட்க வந்தததை முழுதாக முடிக்காமலே நிறுத்தினாள் ஆதிரா..!! அவளுடைய முகத்தையே கதிர் ஓரிரு வினாடிகள் சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.. பிறகு தயங்கி தயங்கி தடுமாற்றமாக அவளிடம் கேட்டான்..!!

 "எ..எனக்கு.. எனக்கு ஒரு சந்தேகம் இருக்குங்க ஆதிரா.. சொ..சொல்லட்டுமா..??" ஆதிரா வேறெங்கோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.. கதிரின் முகத்தை ஏறிடாமலே 'வேண்டாம்' என்பது போல தலையசைத்தாள்.. மெலிதான, வறண்டுபோன குரலில் சொன்னாள்..!! "வே..வேணாம் கதிர்.. நீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு எனக்கு தெரியும்..!!" அவ்வளவுதான்.. அதன்பிறகு இருவரும் சிறிது நேரம் பேசிக்கொள்ளவில்லை.. ஆளுக்கொரு சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர்.. அசைவேதுமின்றி உறைந்து போயிருந்தனர்..!!

சூரியனின் வெளிச்சம் இப்போது சுத்தமாக வற்றியிருக்க.. சூழ்நிலையில் இருளின் அடர்த்தி அகிகமாகிக்கொண்டே சென்றது..!! "நேரமாயிடுச்சுங்க ஆதிரா.. கெளம்பலாமா..??"
"ம்ம்.. கெ..கெளம்பலாம்..!!" மண்டபத்தின் வாயிலை நோக்கி இருவரும் மெல்ல நடந்தனர்.. நடக்கும்போதே ஆதிரா கதிரிடம் கேட்டாள்..!!

 "எ..எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா..??"

 "சொல்லுங்க..!!" 

"நாளைக்கு ஒருநாள் எனக்கு கார் ட்ரைவ் பண்ணனும்..!!"

 "கண்டிப்பா..!!"

 "தேங்க்ஸ்..!!"

 "எ..எங்க போகணும்..??"

 "வேக்ஸின் ஃபேக்டரி..!!"




No comments:

Post a Comment