Saturday, August 30, 2014

ஆண்மை தவறேல் - பாகம் 6


தொழிற்சாலைகளில் பைப்லைன்கள் என்பவை ஒரு அங்கம்..!! எண்ணெய்யோ, நீரோ, ஏதோ ஒரு திரவமோ.. காற்றோ, புகையோ, ஏதோ ஒரு வாயுவோ.. அவற்றை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கடத்த பைப்லைன்கள் மிக அவசியம்..!! எல்லா பைப்லைன்களிலும் ஏதோ ஒரு திரவமோ, வாயுவோ ஓடிக்கொண்டிருக்கும்..!! அந்த ஓட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க.. வால்வுகள், மீட்டர்கள், ஃபில்ட்டர்கள் என.. ஏகப்பட்ட உபகரணங்கள் தேவை..!! அத்தகைய உபகரணங்களை உற்பத்தி செய்து விற்பதுதான், A-ONE Flow Controls (P) Ltd-ன் தொழில்..!! A-ONE இல் இருக்கும் 'A' அசோக்கை குறிக்கும்..!! அசோக் பிறந்த ஒரு வருடத்தில், கிண்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் மஹாதேவன் சிறிய அளவில் அந்த தொழிற்சாலையை ஆரம்பித்தார். அவருடைய தொழில் அறிவும், கடுமையான உழைப்பும் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உதவின. ஆயிரம் சதுர அடியில் ஆரம்பமான தொழிற்சாலை.. இன்று பதினைந்தாயிரம் சதுர அடிக்கும் மேலாக பரந்து விரிந்திருக்கிறது..!! நான்கு வேலையாட்களுடன் ஆரம்பித்த கம்பெனியில், இன்று ஊழியர்களின் எண்ணிக்கை நூறை நெருங்கியிருக்கிறது..!! ஹார்ட் அட்டாக் வந்த பிறகு, மஹாதேவன் தொழில் ஈடுபாட்டை குறைத்துக்கொண்டார். பொறுப்புகளை கொஞ்சம் கொஞ்சமாய் இப்போது அசோக்கின் தலைக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார். தொழிற்சாலை கிண்டியில் என்றால், அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபீஸ் அடையாறில் உள்ளது..!! அசோக்கிற்கு தினமும் அலுவல் அடையாறில்தான்.. கிண்டிக்கு எப்போதாவதுதான் செல்வான்..!! வசிக்கும் வீடு ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கிறது.. விருந்தினர் மாளிகை பெசன்ட் நகரில்.. விருந்தினர் மாளிகையில் இருந்துதான் இப்போது அடையாறுக்கு காரில் சென்று கொண்டிருக்கிறான்..!! விருந்தினர் மாளிகை என்று பேர்தானே ஒழிய, விருந்தினர் அதிகமாக அங்கே புழங்குவதில்லை. அசோக்தான் தனது வாலிப விருந்துக்கு அந்த வீட்டை வசதியாக்கிக் கொண்டிருக்கிறான். ஆபீசுக்கு அருகே இருப்பதால், அவன் கெஸ்ட் ஹவுஸில் தங்குவதை மஹாதேவனும் சந்தேகிப்பதில்லை. வாட்ச்மேனைஅவ்வப்போது பணத்தால் கவனித்துக் கொள்வதால், அவனும் வாயை திறப்பது இல்லை..!!
நாயரை பாம்பு பார்க் அருகே இறக்கிவிட்டு, அசோக் ஆபீசை அடைந்தபோது மணி பத்தை நெருங்கியிருந்தது. வந்ததுமே பரபரப்பாக அலுவல்களை கவனிக்க துவங்கினான். மஹாதேவன் சொன்ன மெயில்களை முதலில் செக் செய்தான். அவர் கேட்ட சில டீட்டேயில்களுக்கு ரிப்ளை செய்தான். அவர் இட்ட சில உத்தரவுகளை குறித்துக் கொண்டான். பிறகு அன்று என்னென்ன வேலைகள் என்று ஒரு அட்டவணை போட்டுக் கொண்டான். ஆபீசில் வேலை செய்யும் சில ஊழியர்களுக்கு 'இந்த மாதிரி வேலை.. இந்த நேரத்துக்குள் முடிக்கவேண்டும்' என்று உத்தரவு போட்டான். அதில் ஒரு வேலை.. மஞ்சுநாத் இண்டஸ்ட்ரீஸ்க்கு எஸ்டிமேஷன் தயார் செய்யும் வேலை..!! அவனுடைய ஆபீசில் வேலை பார்ப்பவர்களிலேயே மிகவும் வயதானவர் சதானந்தம். அவரிடம்தான் அசோக் அந்த வேலையை ஒப்படைத்திருந்தான். ஒரு அரை மணி நேரம் கழித்து எஸ்டிமேஷன் டாகுமண்டுடன், சதானந்தம் அசோக்கின் அறைக்குள் நுழைந்தார். வேறு ஒரு ஃபைலை புரட்டிக் கொண்டிருந்த அசோக்கிடம் டாகுமன்ட்டை நீட்டினார். "எஸ்டிமேஷன் ரெடி அசோக்.. இதுல ஒரு ஸைன் பண்ணிட்டா ஃபேக்ஸ் பண்ணிடலாம்..!!" அசோக்கும் மேலோட்டமாக அந்த டாகுமன்ட்டை ஒருமுறை பார்வையிட்டான். கீழே அவனுடைய கையொப்பத்திற்காக காலியாக விடப்பட்டிருந்த இடத்திற்கு, பேனாவை கொண்டு செல்லும்போதுதான் அதை கவனித்தான். உடனே பார்வையை சற்று கூர்மையாக்கி, டாகுமன்ட்டை திரும்ப கவனமாக வாசித்தான். வாசித்தவன் எரிச்சலுடன் சதானந்தத்தின் பக்கம் திரும்பினான். "ப்ச்.. ஒரு கோடி ரூபாய்க்கு எத்தனை ஸைஃபர் ஸார்..?" "ஏ..ஏழு.." அவர் திணறலாக சொன்னார். "அப்புறம் ஏன் ஆறுதான் போட்டிருக்கீங்க..?" "ஓ..!! ஸாரி அசோக்.. ஏதோ கவனத்துல.. ஸாரி.." "ஸாரியா..? உங்க ஸாரியை வச்சு நான் எதுவும் பண்ணப்போறதில்ல ஸார்..!! வேலைல கவனமா இருங்க.. அதுதான் எனக்கு வேணும்..!! இதை இப்படியே ஃபேக்ஸ் பண்ணிருந்தா என்னாயிருக்கும்.. நாளைக்கு ஒருமணி நேரம் நான் உக்காந்து, அவனுகளுக்கு கன்னடத்துல விளக்கம் கொடுத்துட்டு இருக்கணும்.. தேவையில்லாத தலைவலி எனக்கு..!! என் வேலையை ஈஸியாக்கத்தான் ஸார் உங்களை எல்லாம் வேலைக்கு வச்சிருக்குறோம்.. கூடக்கொஞ்சம் கஷ்டம் உண்டாக்குறதுக்கு இல்ல..!!" அசோக் கடுமையாக பேச, "ஸா..ஸாரி அசோக்.. இ..இனிமே இப்படி நடக்காது.. நான் இப்போவே போய் கரெக்ட் பண்ணி கொண்டு வர்றேன்.." அவர் நடுக்கமும், பதற்றமுமாக சொன்னார். "ம்ம்.. ம்ம்.. அதுலாம் ஒன்னும் வேணாம்.. நான் பாத்துக்குறேன்..!! கற்பகத்தை வர சொல்லுங்க.. நீங்க வேற ஏதாவது வேலை இருந்தா போய் பாருங்க.. போங்க..!!" "ஓகே.. அ..அசோக்.." சதானந்தம் சுருங்கிப்போன முகத்துடன் அறையை விட்டு வெளியேறினார். அசோக்கின் மூளைக்குள் இப்போது சின்னதாய் ஒரு டென்ஷன் முளைத்திருந்தது. 'ப்ச்..' என்று எரிச்சலை உதிர்த்தவன், பார்த்துக் கொண்டிருந்த ஃபைலை மூடி வைத்தான். ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டான். ஆழமாய் புகையை இழுத்து, நுரையீரலுக்கு அனுப்பினான். ஓரிரு நிமிடங்களிலேயே கற்பகம் அந்த அறைக்குள் நுழைந்தாள். பழுப்பு நிற காட்டன் புடவையில் பாந்தமாக காட்சியளித்தாள். அவள் உள்ளே நுழைந்ததுமே அசோக், "ஹாய் கற்பு.." என்று சற்றே இறுக்கம் தளர்ந்து புன்னகைத்தான். ஆனால் அவளோ "சேச்சேச்சே.. எத்தனை தடவை உனக்கு சொல்றது..? ஆபீஸ்ல தம்மடிக்காதன்னு..!! சொல்ற பேச்சை கேக்கவே மாட்டியா நீ..?" என்று சிடுசிடுத்தாள்.
"ஐயோ.. விடு கற்பு.. எனக்கு கொஞ்சம் டென்ஷன்..!!" "ஓஹோ.. அதான் அவரை புடிச்சு கடிச்சு விட்டியாக்கும்..? வந்து பொலம்புறாரு பாவம்..!!" "ப்ச்.. டென்ஷனே அவராலதான்.. வயசான காலத்துல வேலைக்கு வந்து.. நம்ம உசுரை வாங்குறாரு..!!" "ஐயோ பாவண்டா அவரு.. அப்படிலாம் சொல்லாத.. நல்ல மனுஷன்..!!" "இங்க பாரு கற்பு.. எனக்கும் பர்சனலா அவரை புடிக்கும்.. நல்லவர்தான்.. இல்லைன்னு சொல்லலை.. ஆனா வேலைன்னு வர்றப்போ நான் இந்த சென்டிமன்ட்லாம் பார்க்க மாட்டேன்.. புரியுதா..?" "இப்போ ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற..? அப்படி என்ன அவரு பெருசா தப்பு பண்ணிட்டாரு.. ஒரே ஒரு ஸைஃபர் விட்டுட்டாரு.. அவ்வளவுதான..?" "ஓஹோ..?? ம்ம்ம்... நீ சொல்றதும் சரிதான்..!! ஆமாம்.. என்ன சம்பளம் வாங்குற நீ..??" "பதினஞ்சாயிரம்..!! ஏன் கேக்குற..??" "அடுத்த மாசத்துல இருந்து அதுல ஒரு ஸைஃபரை கட் பண்ணிடலாமேன்னுதான்..!!" "அடப்பாவி..!! ஏதோ அவர் மேல ஒரு பரிதாபத்துல சொன்னா.. நீ என் தலைலேயே கை வைக்கிறியா..? சரி விடு.. அவருக்கு சப்போர்ட் பண்ணலை..!! உனக்கு எஸ்டிமேஷன் பிரிப்பேர் பண்ணனும்னா என்கிட்டே சொல்ல வேண்டியதுதான..? எதுக்கு அந்த வேலைலாம் அவர்ட்ட கொடுக்குற..?" "சும்மாதான இருக்கார்னு குடுத்தேன்..!! தப்பா..?" "ம்ம்ம்.. சரி.. நானே திரும்ப ப்ரிப்பேர் பண்ணி தர்றேன்.. இனிமே இந்த வேலைக்குலாம் என்னை கூப்பிடு.. சரியா..?" சொன்னவள் ஒரு சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு, அசோக்கின் டேபிள் மீதிருந்த கம்ப்யூட்டர் முன்பே, அவனுக்கு பக்கவாட்டில் அமர்ந்து கொண்டாள். அமர்ந்ததுமே, அசோக்கிடம் திரும்பி, "அந்த கருமத்தை கொஞ்சம் வெளில தூக்கி போடு.. நாத்தம் தாங்க முடியலை..!!" என்றாள் முகத்தை சுளித்தவாறே. அசோக்கும் ஒரு புன்னகையுடன் சிகரெட்டை அணைத்து வெளியில் தூக்கி எறிந்தான். கற்பகம் சதானந்தத்திடம் இருந்து காப்பி செய்து வாங்கிக்கொண்டு வந்திருந்த டாகுமன்ட்டை ஆரம்பத்தில் இருந்து சரி பார்த்து திருத்த ஆரம்பித்தாள். அசோக் கைகளை கட்டிக்கொண்டு அமைதியாக அவளையே நோட்டமிட்டுக் கொண்டிருந்தான். கற்பகத்துக்கு வயது முப்பதுகளின் ஆரம்பம். திருமணமானவள். இன்னும் குழந்தை இல்லை. நான்கு வருடங்கள் முன்பு மஹாதேவனுக்கு செக்ரட்டரியாக இந்த கம்பெனியில் சேர்ந்தவள், இப்போது அசோக்கிற்கு செகரட்டரியாக இருக்கிறாள். அழகான, களையான முகவெட்டு.. சற்றே புஷ்டியான தேகக்கட்டு..!! அவளுக்கும், அசோக்கிற்கும் இருக்கும் ஒருவித நட்பும், புரிதலும் சற்று வித்தியாசமானது..!! 'நெறைய பொண்ணுககிட்ட அறை வாங்கிருக்கேன்..' என்று, சற்று முன் அசோக் நான்ஸியிடம் பெருமையாக சொன்னான் அல்லவா..? அவனுக்கு அறை கொடுத்த பெண்களில் இந்த கற்பகமும் ஒருத்தி..!! அமெரிக்காவில் இருந்து திரும்பிய அசோக்கிற்கு அப்பாவின் செகரட்டரி மீது ஒரு கண்..!! அவளுடைய அசத்தும் அழகைப் பார்த்து ஒரு அடங்காத மோகம்..!! அடுத்தவன் மனைவி என்பதையும் பொருட்படுத்தாது தன் ஆசையை அவளிடம் ஒருநாள் வெளிப்படுத்திவிட்டான்..!! அவளும் பளார் என ஒரு அறைவிட்டு 'அக்கா தங்கச்சி இல்லையா உனக்கு..?' என்று வெறுப்பாக கேட்டாள்..!! அசோக்கும் 'எனக்கு அக்கா தங்கச்சி இல்ல.. உங்களுக்கு இருக்காங்களா.. அட்லீஸ்ட் அவங்களாவது இதுக்கு ஒத்துக்குவாங்களா..?' என்று கூலாக கேட்டான். அடுத்த நாள் அந்த வெறுப்புடனே கற்பகம் ஆபீசுக்கு வந்தாள். ஆனால், அசோக்கோ முதல் நாள் அப்படி ஒரு விஷயம் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் இயல்பாக நடந்து கொள்ள, அவள் சற்றே குழம்பி போனாள். அதன் பிறகு வரும் நாட்களில் அசோக்கிடம் இருந்து செக்ஸ் டார்ச்சர் வரப்போகிறது என்று எதிர்பார்த்து ஏமாந்தாள். அவளிடம் அறை வாங்கிய பிறகும், அவன் மிக இயல்பாகவும் டீசண்டாகவும் நடந்து கொள்ள.. அவனுடைய குணம் ஏனோ அவளுக்கு பிடித்து போனது. அவளும் மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் அவனுடன் இயல்பாக பேச ஆரம்பித்தாள். இப்படித்தான் ஆரம்பித்தது அவர்களது நட்பு..!! இந்த இரண்டு வருடங்களில் அவர்களுடைய நட்பும், புரிதலும் நிறைய வளர்ந்திருக்கின்றன. இன்று அசோக் தன் பர்சனல் விஷயங்களை பகிர்ந்துகொள்வதில், இந்த கற்பகம் மிக முக்கியமான ஆள்..!! கற்பகம் என்ற பேரை சுருக்கி கற்பு என்றுதான் கூப்பிடுவான். 'பேர் உனக்கு கரெக்டாத்தான் வச்சிருக்காங்க உன்னை பெத்தவங்க..' என்பான் கிண்டலாக. இப்போதும்.. கற்பகத்திற்கு நூல் விட்டுப் பார்த்து அவளை சீண்டுவது அசோக்கிற்கு மிகவும் பிடிக்கும். அவளும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், 'ஈஈஈஈ' என்று இளித்தவாறு முகத்தை வைத்துக்கொண்டே, அவனை கேவலமாக திட்டுவாள். "என்னடா.. சைட் அடிக்கிறியா என்னைய..?" கற்பகம் மானிட்டர் மீதிருந்து பார்வையை விலக்காமலே கேட்டாள். "ஆமாம்.. இவங்க பெரிய அழகுரதி அம்சவேணி.. சைட் அடிக்கிறாங்க..!! ஒழுங்கா வேலையை பாரும்மா மங்கம்மா மஹாராணி..!!" அசோக் கிண்டலாக சொன்னான். அவனுடைய கிண்டலுக்கு கற்பகம் எளிறுகள் தெரிய அழகாக சிரித்தாள். "ஹாஹாஹாஹா.. ம்ம்ம்ம்.. அப்புறம்..?? இன்னைக்கு பேங்ளூர் போற போல..?" "ஆமாம் கற்பு.. அந்த மஞ்சுநாதா டீல் விஷயமாத்தான்..!! திரும்ப வர நாலஞ்சு நாள் ஆகும்.. இனி நெக்ஸ்ட் வீக்தான் ஆபீஸ் வருவேன்.." "ம்ம்.. டிக்கெட்லாம் புக் பண்ணியாச்சா..?" "ப்ளைட்ல போகலை.. கார்லதான் போறேன்..!!" "அதான் எனக்கு தெரியுமே..?" "அப்புறம் டிக்கெட் புக் பண்ணியாச்சான்னு கேக்குற..?" "நான் ப்ளைட் டிக்கெட்டை பத்தி கேக்கலை.. நீ கார்ல கூட்டிட்டு போகப்போற டிக்கெட்டை பத்தி கேட்டேன்.." சொல்லிவிட்டு கற்பகம், அசோக்கை ஏறிட்டு குறும்பாக புன்னகைக்க, அசோக்கின் முகத்திலும் இப்போது புன்னகை. "ஹாஹா.. பயங்கரமான ஆளு கற்பு நீ.. என்னை பத்தி நல்லா புரிஞ்சு வச்சிருக்குறவ நீதான்..!!" "அதான் ரெண்டு வருஷமா உன்னை பாத்துட்டு இருக்கேனே.. எனக்கு தெரியாதா..? சரி.. கேட்ட கேள்விக்கு பதிலை காணோமே.. டிக்கெட் புக் பண்ணியாச்சா இல்லையா..??" "ம்ம்.. பண்ணியாச்சு.. பண்ணியாச்சு..!!" "டிக்கெட்டு பேர்..?" "ப்ச்.. அதை தெரிஞ்சு இப்போ என்ன பண்ணப்போற..?" "சும்மாதான்.. ஒரு ஜெனரல் நாலேட்ஜுக்கு..!!" "ஒன்னும் தேவையில்ல.." "ஏய்.. சொல்லுடா..!!" "ப்ச்.. சொல்லமாட்டேன் போ..!!" "ம்ம்ஹ்ஹ்ம்ம்.. ஏண்டா இப்படி குட்டி, புட்டின்னு சீரழிஞ்சு போற..? ஒழுக்கமா இருக்குறதுல அப்படி என்னதான் பிரச்னை உனக்கு..?" "ஒழுக்கத்துக்கு ஒவ்வொருத்தனும் ஒரு டெஃபனிஷன் வச்சிருக்கானுக.. நீ எந்த ஒழுக்கத்தை ஃபால்லோ சொல்ற..?" "ம்ம்ம்.. நான் சொல்ற ஒழுக்கத்தை ஃபால்லோ பண்ணு..!!" "என்ன பண்ணனும்..?" "புக் பண்ண டிக்கெட்டை கேன்சல் பண்ணு..!! பேங்ளூர் போய் எந்த சேட்டையும் பண்ணாம.. போன வேலையை மட்டும் பாத்துட்டு வா..!!" "முடியாது.. வேணுன்னா ஒன்னு பண்ணு..!!"
"என்ன..?" "அந்த டிக்கெட்டை வேணா நான் கேன்ஸல் பண்ணிடுறேன்.. நீ வர்றியா..??" அசோக் கேட்டுவிட்டு கண்சிமிட்ட, "செருப்படி விழும் ராஸ்கல்..!!" கற்பகம் டென்ஷனானாள். "ஹாஹா.. ஏன்மா டென்ஷன் ஆகுற..? நல்ல அமவுண்ட் தர்றேன்..!!" அசோக் சிரித்தபடி சொல்ல, "ஓஹோ.. எவ்வளவு தருவ..?" கற்பகம் எள்ளலாக கேட்டாள். "எவ்வளவு வேணும்..? உனக்காக எவ்வளவு வேணா தர நான் ரெடியா இருக்கேன்..!! உன்னோட ஒரு வருஷ சம்பளம்..!! டீல் ஓகேவா உனக்கு..??" "போடா பொறுக்கி..!! நீ உன் சொத்து மொத்தத்தையும் எழுதி வச்சாலும் நான் வர மாட்டேன்..!!" "தெரியுமே.. அதான் உன்னை கற்பு கற்புன்னு சொல்றது..!!" "அப்புறமும் ஏன் அப்பப்போ நூல் விட்டு பாக்குற..?" "நீ சிக்கமாட்டேன்னு தெரிஞ்சாலும்.. உன் மேல இருக்குற ஆசை அடங்க மாட்டேன்னுதே.. என்ன பண்ண சொல்ற..? அவ்வளவு அழகா இருக்குற நீ..!!" "ம்ம்.. இந்த 'பிறன்மனை நோக்காத பேராண்மை பேராண்மை'ன்னு வள்ளுவர் ஏதோ சொல்லிருக்காரு.. கேள்விப் பட்டிருக்கியா..?" "சொல்லிட்டாரா..? சும்மா இருக்க மாட்டாரே அவரு..!! பிறன்மனையை நோக்க கூட கூடாதா..?? அவர் சொன்னதுக்காகலாம் நான் உன்னை நோக்காம இருக்க முடியாதுமா.. நான் நோக்கிட்டேதான் இருப்பேன்.. வேணுன்னா ஒன்னு பண்ணு..!!" "என்ன..?" "உன் புருஷனை டைவர்ஸ் பண்ணிடு.. வள்ளுவருக்கும் எனக்கும் வாய்க்கா தகராறு தீந்துரும்..!!" "ஹாஹா.. என் புருஷன் மட்டும் கேக்கணும் இதை.. உன்னை கொன்னே போட்டுருவாரு..!!" கற்பகம் சிரிப்புடன் சொல்ல, அசோக்கும் சிரித்தான். அப்புறம் அவள் வேலையில் கவனமாக இருக்க, இவன் அவளுடைய அழகு முகத்தையே ரசித்துக் கொண்டிருந்தான். 'இவளை முதன்முதலில் பார்த்தபோது.. இவளிடம் அறை வாங்கி கன்னம் சிவந்தபோது.. இவளுடன் இத்தனை தூரம் நெருங்குவோம் என்று எதிர்பார்க்கவே இல்லையே..?' என்று தோன்றியது. கொஞ்ச நேரம் அந்த மாதிரி அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவன், அப்புறம் தொண்டையை செருமிக்கொண்டு ஆரம்பித்தான். "உ..உன்கிட்ட ரொம்ப நாளா ஒன்னு கேக்கனும்னு நெனச்சேன் கற்பு.." "என்னது..??" "நீ ஒரு கலியுக கண்ணகி.. நான் ஒரு கலியுக கண்ணன்..!! நான் இப்படிலாம் பிஹேவ் பண்ணியும்.. நீ இன்னும் இந்த கம்பெனியை விட்டு போகாம இருக்குறியே.. ஏன்..?" "வெளில போனா வேற வேலை கெடைக்குமோன்ற பயந்தான்..!!" "வெளையாடாத கற்பு..!! உனக்கு இருக்குற திறமைக்கு ரொம்ப ஈசியா வேலை கெடைக்கும்..!! இருந்தும்.. நான் மோசமான ஆள்னு தெரிஞ்சும்.. இன்னும் ஏன் இங்க வேலை பாக்குற..? உன் கற்புக்கு இது ரிஸ்க் இல்லையா..??" அசோக்குடைய கேள்விக்கு இப்போது கற்பகம் சற்று யோசித்துவிட்டு பதில் சொன்னாள். "ம்ம்ம்ம்.. நான் இன்னும் இங்க வேலை பாக்குறதுக்கு காரணம் ரெண்டு பேர் மேல நான் வச்சிருக்குற நம்பிக்கை அசோக்..!!" "ஓஹோ..?? யாரு அந்த ரெண்டு ஹமாம் சோப்புக..??" "ஹாஹா..!! ஒன்னு நான்.. எந்த நிலமைலையும் நான் தப்பான வழிக்கு போகமாட்டேன்னு என் மேல எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு.. என் புருஷனை நான் அந்த அளவுக்கு லவ் பண்றேன்.. யாரும் என்னை சலனப்படுத்தவே முடியாது..!!" "ம்ம்ம்.. குட்..!! அப்புறம்.. யாரு அந்த ரெண்டாவது ஆளு..? உன் ஹஸ்பண்டா..? இல்ல என் அப்பாவா..?" அசோக் புன்னகையுடன் கேட்க, கற்பகம் இப்போது சற்றே நிதானித்தாள். ஒரு சில வினாடிகள் அசோக்கின் முகத்தையே அமைதியாக பார்த்தவள், அப்புறம் அழுத்தம் திருத்தமாய் சொன்னாள். "நீதான் அந்த இன்னொரு ஆள்..!!" அவளுடைய பதில் அசோக்கிற்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. "நா..நானா..?? எ..என்ன சொல்ற கற்பு..?? எனக்கு புரியலை..!!" "ஆமாம் அசோக்.. உன் மேலயும் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு..!!" "ஹாஹா.. என் மேல நம்பிக்கையா.. அப்படி என்ன நம்பிக்கை என் மேல..?" "விருப்பம் இல்லாத பொண்ணை.. எந்த சூழ்நிலையும் நீ தொட மாட்டேன்ற நம்பிக்கை..!! அவங்களை கட்டாயப் படுத்தி உன் காரியத்தை சாதிச்சுக்க மாட்டேன்ற நம்பிக்கை..!!" கற்பகம் சொல்ல, அசோக்கிற்குள் ஒருவித உணர்ச்சி சிலிர்ப்பு..!! "க..கற்பு.." "இன்னும் சொல்லப்போனா.. உன்கூட ஒரே கட்டில்ல படுத்து தூங்க கூட நான் ரெடி அசோக்..!! என்னைப் பொறுத்தவரை.. என் மனசுல எந்த தப்பான எண்ணமும் இல்லாத வரை.. உன்னால என் கற்புக்கு எந்த ஆபத்தும் வராது..!!" "ம்ம்ம்.. என் மேல அவ்வளவு நம்பிக்கையா ..?" அசோக்கின் குரலில் இப்போது ஒரு புதுவித பெருமிதம் ஏறியிருந்தது. "ம்ம்ம்.. ரொம்ப ரொம்ப..!!" கற்பகம் சொல்லிவிட்டு அசோக்கை பார்த்து அன்பாக புன்னகைத்தாள். "அதான் என்னோட செக்ஸ் டார்ச்சர்லாம் தாங்கிட்டு இருக்குறியா..?" அசோக் சற்றே வாஞ்சையாக கேட்க, கற்பகம் ஏதோ பெரிய ஜோக்கை கேட்டவள் மாதிரி கலகலவென சிரித்தாள். "ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!" "ஏ..ஏன் சிரிக்கிற கற்பு..?" அசோக் புரியாமல் கேட்டான். "பின்ன என்ன..? நீ பண்றதுலாம் செக்ஸ் டார்ச்சரா..? ஹாஹா..!! போங்க பாஸ்.. காமடி பண்ணாதீங்க.. உங்களுக்கு ஒழுங்காவே செக்ஸ் டார்ச்சர் குடுக்க தெரியலை.. யார்கிட்டயாவது போய் நல்லா கத்துக்கிட்டு வாங்க..!!" அவளுடைய கிண்டலுக்கு இப்போது அசோக்கிற்கும் சிரிப்பு வந்தது. "ஹாஹா.. யார்கிட்ட போய் கத்துக்குறதாம்..?"
"ம்ம்ம்.. உனக்கு ஒருநாள் பொம்பளை வேஷம் போட்டு, டவுன் பஸ்ல ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வர சொல்லணும்.. க்யூல நின்னு டிக்கெட் வாங்க சொல்லணும்.. ரங்கநாதன் தெருவுல போய் பர்ச்சேஸ் பண்ண விடணும்.. அப்போ தெரியும் உனக்கு.. செக்ஸ் டார்ச்சர்னா என்னன்னு..!! நான் தெனமும் அதை அனுபவிச்சுட்டுதான் இருக்கேன் அசோக்.. பள்ளிக்கூடம் போற பொடுசுகள்ல இருந்து.. பல்லு போன பெருசுக வரை..!! அதுக்கெல்லாம் பயந்தா எந்தப் பொம்பளையும் வீட்டை விட்டு வெளிய வரவே முடியாது..!! கற்புன்றது உடம்புல இல்லை அசோக்.. மனசுல இருக்குது.. ஏதோ ஒரு வக்கிர புத்தி புடிச்ச மிருகம் என் உடம்பை உரசுறதால என் கற்பு ஒன்னும் கெட்டுப்போகப் போறது இல்ல..!! அந்த மிருகங்களை எல்லாம் கம்பேர் பண்றப்போ.. நீ எவ்வளவோ தேவலாம்..!! தெய்வம் நீ..!!" கற்பகம் சொல்ல சொல்ல அசோக்கிற்கு மனதுக்குள் ஒரு பெருமித உணர்ச்சி கொப்பளித்தது. "தேங்க்ஸ் கற்பு.." என்றான் உணர்ச்சிமயமான குரலில். இப்போது கற்பகம் கிண்டலாக சொன்னாள். "ஒய் ஒய்.. என்ன.. அப்படியே மேல பறக்க ஆரம்பிச்சுட்டியா..? வா வா.. பறந்தது போதும்.. கீழ வந்து தொலை..!!" "ஹாஹா.. சரி நான் கீழ வந்து தொலைக்கிறேன்.. நீ எஸ்டிமேஷன் ரெடி பண்ணி தொலைச்சுட்டியா..?" "ஓ எஸ்..!! எஸ்டிமேஷன் ரெடி பண்ணி தொலைச்சாச்சு.. இப்போ பிரிண்ட் அவுட் எடுத்து தொலைக்கிறேன்.. நீங்க ஸைன் பண்ணி தொலைங்க.. அப்புறம் அதை ஃபேக்ஸ் பண்ணி தொலைப்போம்.. இதை பாத்துட்டு அவனுக காண்ட்ராக்டை குடுத்து தொலைக்குறானுகளான்னு பாக்கலாம்..!!" கற்பகம் அவ்வாறு படபடவென சொல்ல, "ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!" அசோக் மனம் விட்டு சிரித்தான்.

No comments:

Post a Comment