Saturday, March 14, 2015

மாங்கல்யம் தந்துனானே.. - எபிஸோட் - 12

"சந்தோஷமா போயிட்டு வாங்க.." நானும் நிறைந்த மனதுடன் சொன்னேன்.

"ம்ம்.. அப்புறம் இன்னொரு மேட்டர் பவி.." அவர் சொல்ல,

"எ..என்ன..?" நான் ஆர்வமாக கேட்டேன்.

"அந்த பேக் ஃபுல்லா என்ன இருக்கு தெரியுமா..?" சற்றுமுன் ரேணுகா தூக்கி வந்த பையை சுட்டிக்காட்டி அவர் கேட்டார்.

"அதுக்குள்ளே என்ன இருக்குன்னு எனக்கு எப்படி தெரியும்..?" நான் ஒரு இலகுவான புன்னகையுடனே கேட்டேன்.

"ஹ்ஹ்ஹா.. அதுக்குள்ளே இருக்குறதுலாம் நான் ஃபாரீன்ல இருந்து வாங்கிட்டு வந்த திங்க்ஸ்னு சொல்லலாம்.. வேற மாதிரியும் சொல்லலாம்.."

"வேற மாதிரின்னா..?"

"உன் புருஷன் உன் மேல வச்சிருக்குற லவ்..!!" அவர் சொன்னதைக்கேட்டு நான் திகைத்துக் கொண்டிருக்க, அவரே தொடர்ந்தார்.



"அசோக் ரெண்டு நாள் முன்னாடி கால் பண்ணி.. நெறைய திங்க்ஸ் வாங்கிட்டு வர சொன்னான்..!! ஆனா.. அதுல ஒண்ணுகூட அவனுக்காக வாங்கிட்டு வர சொன்னது இல்லை.. எல்லாமே உனக்காகத்தான்..!! 'இந்த மாதிரி இருந்தாத்தான் பவிக்கு புடிக்கும்.. அந்த மாதிரி இருந்தாத்தான் பவிக்கு புடிக்கும்.. பாத்து வாங்குங்க பாலமுரளி..' அப்டின்னு ஒரு அரை மணி நேரம் என்னை டார்ச்சர் பண்ணிட்டான்..!! ஹ்ஹ்ஹாஹ்ஹா...!!"

அவர் முகமெல்லாம் சிரிப்பாக சொல்ல, எனக்கு கண்களில் நீர் துளிர்க்க ஆரம்பித்தது. அழுதுவிடாமல் இருக்க பெரிதும் முயல வேண்டியிருந்தது. பற்களை அழுத்திக் கடித்து, வந்த அழுகையை கட்டுபடுத்தினேன். அவர் அப்புறமும் அசோக்கைப் பற்றி நிறைய பேசினார். அசோக்குடைய இரக்க குணம், நகைச்சுவை உணர்வு, தொழில் நுட்ப அறிவு, வேலை மீது பக்தி, நண்பர்களுக்கு தரும் முக்கியத்துவம், எல்லாவற்றையும் விட அசோக் என் மீது வைத்திருந்த எக்கச்சக்க காதல்..!!

அவர் சொல்ல சொல்ல, என் மனசாட்சி எல்லாவற்றையும் தலையாட்டி ஆமோதித்தது. உள்ளத்துக்குள் என் கணவர் மீதான காதல் ஊற்று ஒன்று உடனடியாய் உற்பத்தியாகி பொங்க ஆரம்பித்தது. அவர் என்னை புரிந்து கொள்ளவில்லை என்று நேற்று எண்ணினேன். ஆனால் அவருடைய அன்பை நான்தான் புரிந்துகொள்ளவில்லையோ என என்னை நானே திட்டிக் கொண்டேன்.

கொஞ்ச நேரம் சென்று அவர்கள் கிளம்பியதும், நான் அந்தப் பையை பிரித்துப் பார்த்தேன். அவர் சொன்னது உண்மைதான்..!! அத்தனையும் எனக்கான பொருட்கள்..!! மலிவான விலை பொருட்களிலிருந்து.. காஸ்ட்லி சமாச்சாரங்கள் வரை.!!  அத்தனையும் அசோக் என் மீது வைத்திருந்த அக்கறையும் அன்பும்..!!

'மார்னிங்லாம் ரொம்ப குளிரா இருக்குதுப்பா.. எந்திரிக்க கஷ்டமா இருக்கு..' - ஸ்வெட்டர் இருந்தது..!!

'ஹாஹா.. பிடிக்காதுன்னு யாராவது சொல்வாங்களா..? எவ்ளோ கொடுத்தாலும் சாப்பிடுவேன்..' - பெட்டி பெட்டியாய் சாக்லேட்கள்..!!

'இது பேட்டரி போயிடுச்சு போலங்க.. ஓடவே மாட்டேன்னுது..' - வெண்ணிற கற்கள் ஜொலிக்கும் அந்த ரிஸ்ட் வாட்ச்..!!

'எனக்கு பாட்டை பாக்குறதை விட.. கேக்குறதுதான் ரொம்ப பிடிக்கும்..' - கையகலத்தில் ஒரு ஐபாட்..!!

இன்னும் நிறைய பொருட்கள்..!! எப்போதோ நான் கேட்ட அல்லது கேட்க நினைத்த பொருட்கள்..!! எல்லாமே எனக்கு பிடித்த மாதிரி.. எனது ரசனை தெரிந்து பொறுக்கியெடுத்த மாதிரி..!! எல்லாப் பொருட்களையும் நான் தொட்டுப் பார்த்தேன்.. எனது கை விரல்களை மெல்ல அந்த பொருட்கள் மீது ஓடவிட்டேன்..!! என் மீது எவ்வளவு காதலும், கவனமும் கொண்டிருந்தால்.. என் கணவர் இவையெல்லாம் வீட்டுக்கு கொண்டுவந்திருப்பார்..? 

மனதுக்குள் என்னவர் மீதான காதல் பீறிட்டு கிளம்பியது..!! உடனே அவரிடம் பேச வேண்டும் போலிருந்தது..!! மன்னிப்பு கேட்டு அழலாமா..??? இல்லை இல்லை.. வேண்டாம்..!!! அப்புறம் அதையே லைசென்சாக எடுத்துக்கொண்டு எல்லா பெண்களிடமும் பேச ஆரம்பித்து விட்டால்..?? ரொம்பவும் இறங்கிப் போகவேண்டாம்..!! கோவம் போய்விட்டது என்று மட்டும் காட்டிக் கொள்ளலாம்..!! நான் பேசிய விதம் தவறு என்று மட்டும் ஒத்துக் கொள்ளலாம்..!!

செல்போன் எடுத்து அவருக்கு கால் செய்தேன். அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக செய்தி வந்தது. மணி பார்த்தேன். ஒன்பதை தாண்டியிருந்தது. ப்ரசன்டேஷன் ஆரம்பித்திருக்கும் போலிருக்கிறது..!! சரி.. அப்புறம் பேசிக் கொள்ளலாம்..!!

பொருட்களை எல்லாம் உள்ளே எடுத்து வைத்துவிட்டு, வேறு வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன். வீட்டை கொஞ்சம் சுத்தம் செய்தேன். இரவு ஆக்கி வைத்திருந்த உணவை கீழே கொட்டிவிட்டு, பாத்திரங்கள் எல்லாம் கழுவி வைத்தேன். பதினொரு மணி வாக்கில் ரேணுகாவும், அவள் கணவரும் வந்து ஊருக்கு கிளம்புவதாக சொல்லிவிட்டு சென்றார்கள். காரில் சென்றவர்களுக்கு ஜன்னல் வழியாக கைகாட்டி வழியனுப்பினேன்.

பசி வயிற்றை கிள்ளியது. கொஞ்சமாய் பருப்பு வேகவைத்து நெய் ஊற்றி சாப்பிட்டேன். டிவி ஆன் செய்து சோபாவில் அமர்ந்தேன். அமர்ந்த கொஞ்ச நேரத்திலேயே குமட்டிக்கொண்டு வந்தது. பாத்ரூம் சென்று வாந்தியெடுத்தேன். உள்ளே சென்ற அத்தனையும் வெளியே வந்துவிட்டன. அதோடு சேர்ந்து சிறுகுடலும், பெருங்குடலுமே வெளியே வந்து விழுகிற மாதிரி அப்படி ஒரு வாந்தி...!! கண்களும் சிவந்து போய் பொலபொலவென நீரைக் கொட்டின. முகத்தை கழுவிக்கொண்டு வெளியே வந்தபோது, கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. அப்படியே மெத்தையில் விழுந்தேன். மயங்கிப் போனேன்..!!

எவ்வளவு நேரம் அப்படியே கிடந்தேன் என்று தெரியவில்லை. கண்விழித்தபோது மிகவும் களைப்பாக உணர்ந்தேன். உடம்பின் ஒவ்வொரு அணுவும் விண்விண்னென வலித்தன. தட்டுத்தடுமாறி எழுந்து கிச்சன் சென்றேன். ஃப்ரிட்ஜ் திறந்து ஆரஞ்ச் ஜூஸ் எடுத்து ஒரு டம்ளர் அருந்தினேன். பழச்சாறு பாய்ந்ததும், உடல் சற்றே தெம்பாக இருந்தது..!!

இதயத்தில் எழுந்த படபடப்பு என்னவோ இன்னும் குறையவில்லை. மனதில் இப்போது ஒரு இனம் புரியாத பயம் படருவதை உணர முடிந்தது. இதே மாதிரி மயக்கம் வந்து, வேறெங்காவது விழுந்து கிடந்தால்..? அவர் வேறு ஊரில் இல்லை.. ரேணுகாவும் அருகில் இல்லை..!! உதவி கேட்டு நான் எழுப்பும் குரல் கூட, யார் காதிலாவது விழுமா என சந்தேகம் வந்தது.

பேசாமல் நானும் கிளம்பி ஊருக்கு சென்று விடட்டுமா..? செங்கல்பட்டு போய் விட்டால் ஸேஃப் என்று தோன்றியது. அம்மாவையும் பார்த்து நிறைய நாட்கள் ஆகிவிட்டன. அவர் வரும் வரை இரண்டு நாட்கள் அங்கே இருக்கலாம்..!! அம்மாவின் சமையலை உண்டு.. உறங்கி.. நிம்மதியாய் ஓய்வெடுத்துவிட்டு வரலாம்..!!

யோசனை வந்த சில நிமிஷங்களிலேயே நான் செங்கல்பட்டு கிளம்பினேன். இரண்டு நாட்களுக்கு தேவையான உடைகளை மட்டும் ஒரு பெட்டியில் திணித்து எடுத்துக் கொண்டேன். வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே வந்தேன். மெயின்ரோட் சென்று ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டேன். தாம்பரம் வந்து, தயாராய் நின்றிருந்த ஒரு பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டேன். பயணச்சீட்டு வாங்கி பர்ஸில் வைத்துவிட்டு, கண்மூடி தலைசாய்த்துக் கொண்டேன். செவ்வானம் இருள ஆரம்பித்த சமயத்தில் செங்கல்பட்டு சென்றடைந்தேன்.

"என்னடி இது.. சொல்லாம கொள்ளாம கெளம்பி வந்து நிக்குற..?" குழப்பமாய் கேள்வி கேட்ட அம்மாவை,

"சும்மாதான்மா வந்தேன்..!! உன் மாப்ளை ஊர்ல இல்ல.. வேலை விஷயமா வெளியூர் போயிருக்காரு.. ரெண்டு நாள் கழிச்சுதான் வருவாரு..!! ரேணுக்காவும் இன்னைக்கு வெளியூர் கெளம்பிட்டாங்க..!! ரொம்ப போரடிச்சது.. அதான்.. உங்களாம் பாக்கலாம்னு கெளம்பி வந்துட்டேன்..!!" என்று சமாளித்தேன்.

"உடம்பு சரியில்லையாடி.. மூஞ்சிலாம் ஒருமாதிரி இருக்கு..?"

"அதுலாம் ஒண்ணுல்லம்மா.. பஸ்ல வந்தது.. டயர்டா இருக்கு.. வேறொன்னும் இல்ல..!!"

"ஓஹோ..? சரிடி.. அப்பா இன்னும் வரலை..!! நீ வேணா கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடு.. அம்மா சாப்பாட்டுக்கு எழுப்புறேன்..!!"

சொன்ன மாதிரியே இரவு அம்மா எழுப்பினாள். வயிறு சரியில்லை என்று சொன்னாலும் கேட்காமல், நான்கு இட்லிகளை என் வாயில் திணித்தாள். சாப்பிட்டுவிட்டு அவள் மடியிலேயே படுத்து உறங்கிப்போனேன். காலையில் எழுந்தபோது அந்த நான்கு இட்லிகள், உடலுக்கு புது சக்தியை கொடுத்திருந்ததை உணர முடிந்தது. நேற்று இருந்த களைப்பு இன்று காணாமல் போயிருந்தது.

காலையில்தான் அப்பாவுடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருக்க முடிந்தது. அசோக்குடைய வேலை பற்றி விசாரித்தார். அவரை நன்றாக கவனித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். விடுமுறை நாட்களில் நாங்கள் என்ன செய்வோம் என்று கேட்டு அறிந்துகொண்டார். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பழகும் விதம் பற்றி அக்கறையுடன் கேட்டார். இறுதியாக..

"சந்தோஷமா இருக்கேல பவித்ரா..?" என கவலையுடன் கேட்டார்.

"எனக்கென்னப்பா கொறை..? நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குறேன்.." என்று நான் சொல்ல, நிம்மதியாய் புன்னகைத்துவிட்டு, நியூஸ் பேப்பரில் மூழ்கினார்.

லக்ஷ்மிப்ரியா என்று எனக்கொரு சினேகிதி இருக்கிறாள். எங்கள் ஊர்தான். பள்ளிப்பருவ சினேகிதி. ஒரு வருடம் முன்னர்தான் அவளுக்கு திருமணமானது. மூன்று மாதத்தில் ஒரு பெண்குழந்தை இருக்கிறது. நிறைமாத கர்ப்பிணியாய் தாய் வீட்டுக்கு வந்தபோது அவளை பார்த்தது. குழந்தை பிறந்த பின் சென்று பார்க்கவில்லை. அவளை போய் பார்த்துவிட்டு வரலாம் என்று, காலை சாப்பாடு சாப்பிட்டுவிட்டு வீட்டிலிருந்து கிளம்பினேன்.

பொக்கை வாயும்.. வழுக்கைத்தலையும்.. பிஞ்சுக் கரங்களும், கால்களும்.. தலை நிற்காத கழுத்துமாய்.. கொள்ளை அழகாய் இருந்தது குழந்தை..!! தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை என் மடியில் சிறிது நேரம் வைத்திருந்தேன். அருகில் வைத்து அந்த பிஞ்சின் அழகை ரசித்துக் கொண்டிருந்தேன். என்னிடம் வந்த ஓரிரு நிமிடங்களிலேயே அழ ஆரம்பித்தது. உடனே லக்ஷ்மி குழந்தையை வாங்கிக்கொண்டாள். மீண்டும் அவள் அம்மாவிடம் சென்றதும், குழந்தை பட்டென அழுகையை நிறுத்தியது. ப்ளவுசுகுள் இருந்து மார்பு வந்து விழுந்ததும், தானே சென்று கவ்விக்கொண்டது. 

இன்னும் ஒன்பது மாதங்களில் இதேமாதிரி எனக்கென ஒரு குட்டி வரப்போகிறது. அதுவும் இப்படித்தானே செய்யும்.? யார் கைகளுக்குள் சென்றாலும், எனது அணைப்பிற்குள் வரத்தானே துடிக்கும்..? எனது கதகதப்பைத்தானே எப்போதும் நாடும்..? எனது மடியிலேயே தன் கழிவுகள் வெளியேற்றும்..? முட்டி முட்டி என் முலையில் பாலருந்தும்..? முதன்முதலாய் வாய்திறந்து 'அம்மா..!!' என எனை அழைக்கும்..? தாயாக ஆவதில்தான் எவ்வளவு கர்வம் இருக்கிறது..?

"அப்புறம்டி பவி.. உன் சைடுல இருந்து ஏதும் விசேஷம்..?" லக்ஷ்மி கேட்ட கேள்விக்கு,

"ஹ்ஹ்ஹா.. இல்லடி.. இன்னும் இல்ல.."

என நான் புன்னகையுடன் பதில் சொன்னேன். குழந்தை உருவாகியிருக்கும் சேதியை, அவரிடம்தான் முதலில் சொல்லவேண்டும் என்பது என் நெஞ்சில் ஊறிப் போயிருந்தது. நான் மேலும் கொஞ்ச நேரம் அவளுடன் பழைய பள்ளிக்கால கதை, இப்போதைய குடும்பக் கதையென பேசிக்கொண்டிருந்தேன். நண்பகல் நேரத்தில் மீண்டும் என் வீட்டுக்கு திரும்பினேன். வீட்டுக்குள் நுழைந்ததுமே அம்மா,

"மாப்பிள்ளை போன் பண்ணிருந்தாருடி.. உனக்கு போன் பண்ணினாராம்.. எடுக்கவே இல்லையாம்..?" என்றாள்.

"நேத்து கெளம்புற அவசரத்துல.. செல்போனை சென்னைலயே விட்டுட்டு வந்துட்டேன்மா..!! என்ன சொன்னாரு..?"

"அங்க வந்திருக்காளான்னு கேட்டார்.. ஆமான்னு சொன்னேன்.. அவ்வளவுதான்.. வச்சுட்டாரு..!!"

"சரி விடு.. நான் பேசிக்கிறேன்.."

"உங்களுக்குள்ள ஏதும் சண்டையாடி..?" அம்மா கவலையாக கேட்டாள்.

"ச்சே.. அதுலாம் ஒன்னும் இல்லம்மா..!!" நான் அவளுடைய வாயை அடைத்தேன்.

என் வீட்டு டெலிபோனில் இருந்து அவருக்கு கால் செய்தேன். தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக ஒரு பெண் சொன்னாள். நாம் மேலும் இரண்டு முறை முயன்று விட்டு முயற்சியை கைவிட்டேன்.

"வெளில போயிட்டு வந்தது.. மேலுலாம் ஒரே கசகசன்னு இருக்குதும்மா.. நான் இன்னொருதடவை குளிச்சுர்றேன்.."

"சரிடி.. இன்னைக்கு மோர்க்குழம்பும் வத்தலுந்தான்.. வேற ஏதாவது வைக்கவா..?"

"வேணாம்மா.. அது போதும்..!!"

நான் சொல்லிவிட்டு மாடியில் இருந்த என் ரூமுக்கு வந்தேன். உடைகளை அவிழ்த்துப் போட்டுவிட்டு, நெடுநேரம் ஷவரில் நனைந்தேன். உடம்பில் வெயில் ஏற்படுத்தியிருந்த திகுதிகு எரிச்சலை, குளிர் நீர் குறைத்தது. உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வை மீட்டுத் தந்தது.

வெளியில் வந்து வேறு புடவையை அணிந்தபோது, என் கணவரின் ஞாபகம் வந்தது. எதற்காக கால் செய்திருப்பார்..? ஒருவேளை கைநீட்டி அறைந்ததற்கு மன்னிப்பு கேட்கவா..? இல்லை.. கோபம் குறைந்திருக்கிறதா என சோதனை செய்து பார்க்கவா..? எதுவோ.. பேசவேண்டும் என்று தோன்றியிருக்கிறதே.. என் கோவக்கார புருஷனுக்கு..??

அந்தமாதிரி அவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும்போதே, என் அறைக்கதவு மெல்ல திறந்தது. எதேச்சையாக கதவுப்பக்கம் பார்வையை திருப்பியவள், என் கணவர் அங்கே நின்றிருப்பதை பார்த்து சுத்தமாய் அதிர்ந்து போனேன். 'இவர்.. எப்படி இங்கே..???' ஒருகணம் என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. கனவா நனவா என திகைக்க வேண்டி இருந்தது.

அதைவிட அவர் வந்து நின்ற கோலம்.. என் கண்களை பட்டென கலங்க செய்தது. கலைந்த தலைமுடியும்.. கசங்கிய சட்டையுமாய்..!! வெயிலில் அலைந்து திரிந்த மாதிரி முகமெல்லாம் கருத்துப் போய்..!! பரிதாபமாக நின்றிருந்தார்..!! அந்த மாதிரி ஒரு கோலத்தில் அவரை நான் அதுவரை பார்த்ததே இல்லை. இப்போது பார்க்கையில் இதயத்தில் ஊசி செருகிய மாதிரி சுருக்கென ஒரு வலி..!!

அவருடைய திடீர் வருகை தந்த அதிர்ச்சியாலும், அவர் வந்திருந்த கோலம் ஏற்படுத்திய வலியாலும், நான் பேச்சிழந்து திகைப்பாய் அவரை பார்த்துக் கொண்டிருக்க, அவர் தனது உலர்ந்து போன உதடுகளை மெல்ல பிரித்து, பரிதாபமான குரலில் கேட்டார்.

"நான் உனக்கு வேணாமா பவிம்மா..?" 

சொல்லும்போதே அவருடைய கண்கள் கலங்க, அந்தக் கேள்வி என் இதயத்தை வந்து அறைந்ததில், எனக்கும் முணுக்கென கண்ணீர் வெளிப்பட்டு ஓடியது.

"ஐயோ.. என்னப்பா நீங்க..?" 

விசும்பலாக சொல்லிக்கொண்டே நான் வேகமாய் நகர்ந்து அவருடைய மார்பில் சாயப் போக, அவரோ பட்டென தரையில் மண்டியிட்டு என் கால்களை இறுக்கி கட்டிக் கொண்டார். கண்களில் நீர் ததும்ப, குரல் தழதழக்க சொன்னார்.

"நான் உன்னை கை நீட்டி அறைஞ்சது தப்புதான்.. என்னை மன்னிச்சுடு பவிம்மா..!! எனக்கு நீ மட்டும் போதுண்டா.. வேற யாரும் வேணாம்.. நான் இனிமே உன்கிட்ட பொய் சொல்ல மாட்டேன்.. எந்தப் பொண்ணோடவும் பேச மாட்டேன்.. உனக்கு பிடிக்காதது எதையும் செய்ய மாட்டேன்..!! என்னைவிட்டு மட்டும் விலகிடாத பவி.. ப்ளீஸ்..!!"

அவ்வளவுதான்..!! அவர் என் காலைக்கட்டிக்கொண்டு அந்த மாதிரி கெஞ்ச, என் நெஞ்சில் எந்த மாதிரி உணர்ச்சி அலைகள் மோதியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்..? 'இவரையா நான் சந்தேகப்பட்டேன்..? இவரா இன்னொருத்தி பின்னால் சென்றுவிடுவார் என்று நினைத்தேன்..? நான் அடித்து விரட்டினாலும் என்னை விட்டு அகலுவாரா இவர்..? நாய்க்குட்டி மாதிரி என் காலை சுற்றி வர மாட்டாரா..? தேவையற்ற பயத்தால் நான் செய்த தவறுக்கு இவர் என் கால்களில் விழுந்து கிடக்கிறாரே..?' என் மனதுக்குள் நான் எழுப்பி வைத்திருந்த சந்தேகக் கோட்டை படபடவென இடிந்து தரைமட்டமானது..!! அவர் மீதான காதல் மட்டுமே, மனமெங்கும் பொங்கி வழிய ஆரம்பித்தது.

"எ..என்னப்பா பேசுறீங்க..? உ..உங்களை விட்டு நான் எங்க போயிடுவேன்...?" நானும் இப்போது தழதழத்த குரலில் சொன்னேன்.

"சத்தியமா..?"

"சத்தியமா..!! மொ..மொதல்ல நீங்க மேல எந்திரிங்க.. ப்ளீஸ்..!!"

"என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லு.. அப்போத்தான் எந்திரிப்பேன்..!!" அவர் என் கால்களை மேலும் இறுக்கமாக கட்டிக்கொள்ள, எனக்கு அழுகை பீறிட்டது.

"மன்னிக்கிற அளவுக்கு நீங்க என்ன தப்பு பண்ணுனீங்க..? தப்புலாம் என் மேலதான்.. நான்தான் அறிவு இல்லாம எல்லா தப்பும் பண்ணினேன்..!! எனக்கு உங்க மேல எந்த கோவமும் இல்லைப்பா.. என் மேலதான் எனக்கு கோவம்..!!"

"அப்புறம் ஏன் நீ நம்ம வீட்டை விட்டு வந்த..?"

"அ..அது.. நான் சொல்றேன்.. மொதல்ல நீங்க எந்திரிங்க..!! உங்க மேல கோவிச்சுக்கிட்டுலாம் நான் வீட்டை விட்டு வரலை.." 

நான் சொன்னதும் அவர் உடனே எழுந்தார். அவருடைய கண்களில் வழிந்த நீரை வலது கையால் துடைத்துக் கொண்டார். பட்டென என் ஒரு கையைப் பற்றி இழுத்தவாறே சொன்னார்.

"கோவம் இல்லைல..? அப்போ வா.. நம்ம வீட்டுக்கு போகலாம்..!!"

"ஐயோ.. இருங்கப்பா.. போகலாம்.."

"இல்லை பவி.. இன்னும் ஒரு நிமிஷம் கூட நீ இங்க இருக்க கூடாது..!! வா..!! நாம நம்ம வீட்டுக்கு போயிடலான்டா பவிம்மா.. ப்ளீஸ்..!!"



அவர் குழந்தை மாதிரி கெஞ்ச, எனக்கு கண்களில் பொங்கிய நீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அருவி மாதிரி வழிந்து கொட்டியது..!! நான் ஒரே பாய்ச்சலாய் பாய்ந்து, அவரை இறுக்கி அணைத்துக் கொண்டேன். அவருடைய முகமெல்லாம் ஒரு இடம் பாக்கி இல்லாமல், 'இச்.. இச்.. இச்..' என படுவேகமாய் முத்தமிட்டேன். பின்பு அவசரகதியில் அவருடைய உதடுகளை கவ்விக் கொண்டேன். உறிஞ்சினேன்..!! ஆவேசமாக சுவைத்தேன்..!!

இத்தனை நாளாய் பெரும்பாலும் அவரே என் உதடுகள் கவ்வி முத்தமிடுவார். எப்போதாவது அவர் கெஞ்சிக் கேட்கும்போது, வெட்கத்துடன் தயங்கி தயங்கி என் இதழ்களை அவருடைய இதழ்களுடன் ஒற்றி எடுப்பேன். இந்த மாதிரி ஒரு ஆவேச முத்தத்தை நான் அவருக்கு அளித்ததே இல்லை. நான் பெண்ணென்ற நாணம், இப்போது எங்கு போனதென்றே எனக்கு தெரியவில்லை. அவர் மீது பொங்கிய அளவு கடந்த காதல் வெள்ளத்தில், எனது வெட்கஅணை உடைந்து மூழ்கிப் போயிருக்க வேண்டும்..!!

ஆனால் அந்த மாதிரி ஒரு ஆவேச முத்தம் அவருக்கு அவசியமாய் இருந்தது. எனது வேகத்தில் அவர் சற்று திணறினாலும், சுகமாகவே தன் உதடுகளை நான் சுவைக்க விட்டுக் கொடுத்திருந்தார். நெடுநேரம் நான் தந்த அந்த வெறித்தனமான முத்தத்தில், அவருடைய நடுக்கமும், படபடப்பும் குறைந்தது. அவருடைய மார்புத்துடிப்பு சீராவதை, எனது மார்புக்கோளங்கள் கொண்டு அறிய முடிந்தது.

அப்புறம் நான் என் உதடுகளை அவருடைய உதடுகளிடம் இருந்து மெல்ல பிரித்தபோது, அவர் என்னுடைய செயலுக்கு அடங்கிப் போனவராய் நின்றிருந்தார். உள்ளத்தில் அமைதியும், கண்களில் காதலும் பொங்க என்னை பார்த்தார். நான் அவருடைய கையை வாஞ்சையாக பற்றி, இழுத்து சென்றேன்.

"உக்காருங்கப்பா.."

அவரை கட்டிலில் அமரவைத்தேன். நானும் அவருக்கு அருகில் அமர்ந்து கொண்டு,  அவருடைய முகத்தை, ஆசையும் காதலும் பொங்க பார்த்தேன். அவருடைய இரண்டு கைகளையும், ஒன்றாக சேர்த்து எடுத்து, மொத்தமாய் அந்த கைகளுக்கு இதமாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டு சொன்னேன்.

"என்னை மன்னிச்சுடுங்கப்பா.. தேவையில்லாம உங்க மேல சந்தேகப்பட்டு.. உங்களுக்கு கஷ்டம் கொடுத்திட்டேன்..!!"

"ச்சேச்சே.. உன் மேல எந்த தப்பும் இல்ல பவி..!! பொய் சொன்னா எந்த பொண்டாட்டிக்கும் கோவம் வரத்தான் செய்யும்.. சந்தேகப்படத்தான் செய்வா..!! நான்தான் அறிவில்லாம.. என் பட்டுக்குட்டியை அறைஞ்சுட்டேன்..!!"

 

கனிவான குரலில் சொன்னார். இப்போது அவர் நான் செய்த மாதிரி, என் கைகளை தனது கைகளுக்குள் வைத்து முத்தமிட்டார். நான் என் முகத்தை நிமிர்த்தி, என் கணவரை பெருமிதமாக பார்த்தேன். 'எவளுக்கு கிடைப்பான் இவன் போல் ஒரு துணைவன்..?' என் உதடுகள் குவித்து அவருடைய நெற்றியில் ஈரமாக முத்தமிட்டேன். அப்புறம் திடீரென ஞாபகம் வந்தவளாய், இதமான குரலில் கேட்டேன்.

"ஆ..ஆமாம்.. நீங்க புனேல இருந்து நாளான்னிக்குத்தான வர்றேன்னு சொல்லிருந்தீங்க.. இன்னைக்கே வந்துட்டீங்க..?"

"அந்த ஆபீஸ்ல கொஞ்சம் ப்ராப்ளம் பவி.. ப்ரசன்டேஷன் ஒரே நாளோட கேன்சல் ஆயிடுச்சு.. அதான் இன்னைக்கே வந்துட்டேன்..!! ஆக்சுவலா நேத்து நைட்டே வந்திருக்கணும்.. ஆனா மார்னிங் ஃப்ளைட்டுக்குத்தான் டிக்கெட் கெடச்சது..!!"

"ம்ம்ம்..."

"நேத்து நைட்டே உனக்கு ஒருதடவை கால் பண்ணினேன்.. நீ எடுக்கலை.. சரி தூங்கிருப்பேன்னு விட்டுட்டேன்..!!"

"ம்ம்ம்..."

"அப்புறம் காலைல ஏர்போர்ட்ல இருந்து ஒருதடவை கால் பண்ணினேன்.. அப்போவும் நீ எடுக்கலைன்னதும்.. ரொம்ப கன்ஃப்யூஸ் ஆயிட்டேன்..!!"

"மொபைலை நேத்து வீட்டுலையே மறந்து விட்டுட்டு வந்துட்டேன்பா.. ஸாரி..!!"

"ம்ம்..!! அப்புறம் வீட்டுக்கு வந்து பாத்தா.. உன்னை காணோம்..!! சத்தியமா சொல்றேன் பவி.. பதறிப் போயிட்டேன்..!! எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை.. என்ன பண்றதுன்னே தெரியாம கொஞ்ச நேரம் அப்டியே ஆடிப் போயிட்டேன்.. ரேணு வேற பக்கத்துல இல்லை..!!"

"ம்ம்ம்..."

"அப்புறந்தான் உங்க வீட்டு நம்பருக்கு கால் பண்ணினேன்.. நீ இங்கே இருக்குறது தெரிஞ்சதும்.. கொஞ்சம் நிம்மதியா இருந்தது..!!"

"ம்ம்ம்..."

"போன்ல பேசுனா நீ வருவியா என்னன்னு கூட எனக்கு தெரியலை.. அதான் நேர்ல பாத்து உன் கைல கால்ல விழுந்தாவது உன்னை திரும்ப கூட்டிட்டு வரணும்னு நெனச்சு ஓடி வந்தேன்.."

"ச்சே.. என்னப்பா பேசுறீங்க..? அப்டிலாம் நான் உங்களை விட்டு போயிடுவேனா..? அப்டியே போனாலும் உங்க குரலை கேட்டா.. ஓடி வந்து நிக்க மாட்டனா..?"

"இல்லம்மா.. நீ இதுவரை இந்த மாதிரி தனியா உன் வீட்டுக்கு வந்ததில்ல..!! எங்கிட்ட சொல்லாம வேற வந்திருக்க.. நான் கோவத்துல உன்னை அறைஞ்சதுக்கு அடுத்த நாளே கெளம்பி வந்திருக்க..!! அதான் நான் அப்படி நெனச்சுட்டேன்..!!"

"ச்சீய்.. என்னை அடிக்கிறதுக்கு உங்களுக்கு உரிமை இல்லையா..? அதுக்காகலாம் கோவிச்சுக்கிட்டு.. பொறந்த வீட்டுக்கு பொட்டியை தூக்கிட்டு போயிடுவேன்னு நெனச்சீங்களா..?"

"அப்புறம் ஏன் வந்த..?"

"ஆக்சுவலா.. நேத்து மதியம் எனக்கு ஒரு மயக்கமா இருந்தது.. ரேணுகாக்கா வேற இல்ல.. நீங்க வர்ற வரை ரெண்டு நாள் வீட்டுல தனியா இருக்க வேணாமேன்னுதான் கெளம்பி வந்தேன்..!!"

"ஓ..!! நான் என்னென்னவோ நெனச்சு பயந்து போயிட்டேன் பவி.. எங்கே நீ என்ன விட்டு விலகிப் போயிடுவியோன்னு.. ரொம்ப பயந்துட்டேன்மா.."

அவர் பரிதாபமாக அப்படி சொல்ல, எனக்கு அவர் மீதான கனிவும், காதலும் மேலும் பொங்கியது. அவருடைய கன்னங்களை என் உள்ளங்கைகளுக்குள் தாங்கிப் பிடித்து, அவருடைய நெற்றியில் முத்தமிட்டேன். அப்புறம் இரண்டு கன்னங்களிலும்..!! இறுதியாக அவரது இதழ்களில் என் இதழ்களை இதமாக ஒற்றி எடுத்தேன். கெஞ்சிக் கேட்காமலேயே, இன்று தன் மனைவி முத்தமழை பொழிந்ததில், என் கணவரும் மகிழ்ந்து போனார். அழகாக புன்னகைத்தார். இரண்டு நாட்களாக சொல்லத் துடித்துக் கொண்டிருந்த சேதியை சொல்ல, இது நல்ல தருணமாக எனக்குப் பட்டது. மெல்ல ஆரம்பித்தேன்.

"நேத்து எனக்கு மயக்கம் மட்டும் இல்ல.. வாந்தியும் எடுத்தேன்..!!"

"வாந்தியா..? என்னாச்சு பவிம்மா..?" அவர் பதறிப்போனவராய் கேட்டார்.

"ச்சே.. பயப்படுறதுக்குலாம் ஒன்னும் இல்லப்பா.. சந்தோஷமான விஷயந்தான்.. என்னன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்..!!"

நான் கண்களிலும், குரலிலும் குறும்பு கொப்பளிக்க கேட்கவும், அவருடைய முகம் மெல்ல மெல்ல மாறியது. பதட்டமாய் இருந்த முகம் இப்போது ஆச்சரியத்தையும், சந்தோஷத்தையும் கொப்பளிக்க ஆரம்பித்தது. ஒரு மாதிரி நம்பமுடியாதவராய் என்னை பார்த்தார். ஆனந்த அதிர்ச்சி மிகுந்து போனதில், பேசவே நாவெழாதவராய்..

"ப..பவி.." என்றார்.

"ம்ம்.."

"நெ..நெஜமாவா சொல்ற..?"

"ஆமாம்..!! நீங்க புனே கெளம்புன அன்னைக்கு மதியந்தான்.. ஹாஸ்பிடல் போய் டெஸ்ட் எடுத்து கன்ஃபார்ம் பண்ணினேன்.. அன்னைக்கு ஈவினிங் உங்ககிட்ட சொல்லனும்னு ஆசையா வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.."

"அச்சோ.. அது தெரியாம.. என் அம்முக்குட்டியை அறைஞ்சுட்டேனே..? அறிவே இல்ல பவிம்மா எனக்கு..?" 

"ஐயோ..!! விடமாட்டீங்களா..?? அதையே சொல்லிட்டு இருக்கீங்க..??"

"ஹ்ஹா.. நமக்கு.. குழந்தை..!! நெனைக்கவே எவ்ளோ சந்தோஷமா இருக்குது தெரியுமா..?" அவர் சொல்ல, நான் இப்போது அவருடைய மார்பில் சாய்ந்து கொண்டேன்.

"ஆமாம்..!! நம்ம வீட்டுக்கு.. ஒரு குட்டி அசோக்கோ.. குட்டி பவித்ராவோ வரப்போகுது.."

"ம்ம்.."

"நடுராத்திரில நல்லா தூங்குற நம்மளை.. கத்தி எழுப்பி விட போகுது.."

"ம்ம்.."

"நமக்கு மட்டுமே புரியுற பாஷைல.. தத்தபித்தான்னு பேசப் போகுது.."

"ம்ம்.."

"நமக்கு நடுவுல படுத்துக்கிட்டு.. உங்களுக்கு சொந்தமான பொருளை.. உங்களையே தொடாதேன்னு சொல்லப் போகுது.."

"ஹ்ஹா.. ம்ம்.."

"செய்யாத சேட்டைலாம் செய்யப் போகுது.."

"ம்ம்.."

"நல்லா படிக்கப் போகுது.. அறிவாளியா வரப் போகுது.. நம்மலாம் விட நல்ல நெலமைக்கு போகப் போகுது.."

"ம்ம்.."

"பேரன், பேத்திலாம் பெத்து தரப் போகுது.."

"ம்ம்.."

"நாம தள்ளாடி நடக்குறப்போ.. நம்மளை தாங்கிப் புடிக்கப் போகுது.."

அதுவரை எல்லாவற்றிற்கும் 'ம்ம்..' கொட்டிக்கொண்டிருந்த அசோக், இப்போது என் முகத்தை நிமிர்த்தினார். ஆனந்தக் கண்ணீர் வழிந்த என் முகத்தை ஆசையும், காதலுமாய் பார்த்தார். என் கூந்தலை இதமாய் தடவியபடி சொன்னார்.

"என் பவித்ரா பட்டுக்குட்டிதான்.. அத்தனை சந்தோஷத்தையும்.. பத்திரமா கொண்டுவந்து சேர்க்கப் போகுது..!!" 

சொன்னவர், அவருடய தலையை மெல்ல குனிந்து, என் புடவையை விலக்கி, எனது வெளுத்த வயிறில் 'இச்ச்ச்..!!' என இதழ்கள் பதித்தார். நிமிர்ந்தார். அணைத்துக் கொண்டார். அப்புறம் கொஞ்ச நேரம் நாங்கள் எதுவுமே பேசவில்லை. ஒருவரை ஒருவர் இறுக்கி அணைத்தபடி கிடந்தோம். பிரிய மனமில்லாதவர்களாய்.. பிரியவே கூடாது என முடிவெடுத்தவர்களாய்.. பின்னிப்பிணைந்து கிடந்தோம். அப்புறம் மதிய உணவிற்காக அம்மா வந்து கதவு தட்டிய போதுதான் எழுந்தோம்.

அன்று மாலையே சென்னைக்கு கிளம்பினோம். இரவு எட்டுமணி வாக்கில் எங்கள் வீட்டை அடைந்தோம். உள்ளே சென்றதுமே அசோக், என்னை அவரது கைகளில் அள்ளிக் கொண்டார். நேராக படுக்கையறைதான் கொண்டு சென்றார். மெத்தையில் கிடத்தினார். மேலே பரவினார். ஆடை விலக்கினார். அங்கம் உரசினார். உள்ளம் முழுதும் காதலோடு, உடல்களை அசைத்து, உன்னதமான காம இன்பம் கண்டோம்..!! திகட்ட திகட்ட..!!

உச்சமடைந்தாலும்.. உடலில் இன்னும் காமசுகம் மிச்சமிருந்த நிலையில்.. ஒரே போர்வைக்குள் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு கிடந்தபோது, செல்போன் ஒலித்தது..!! அசோக்குடைய செல்போன்தான். நான்தான் எட்டி எடுத்தேன்.

"யாருன்னு பாரு பவி.." என்றார் அவர்.

"யாரோ.. நந்தா.." நான் அவரிடம் செல்போனை நீட்டிக்கொண்டே சொன்னேன்.

"ஓ..!! நீயே பிக்கப் பண்ணி பேசு.." குறும்புப் புன்னகையுடன் சொன்னார் அவர்.

"நானா..?" குழப்பமாக கேட்டேன் நான்.

"ம்ம்..!! பிக்கப் பண்ணி.. நான் வெளில போயிருக்குறேன்னு சொல்லி கட் பண்ணிடு..!!"

"ம்ம்.."

எதுவும் புரியாமலேயே நான் கால் பிக்கப் செய்து என் காதில் வைத்தேன். நான் ஹலோ சொல்லும் முன்பே, எதிர் முனையில் அந்த பெண்குரல்..!!

"ஹாய் அசோக்.. நான் நந்தினி பேசுறேன்.."

என்னை எதற்காக பேச சொன்னார் என்பது இப்போது எனக்கு தெளிவாக விளங்கியது. எனது முகத்தை திருப்பி, அவரை பார்த்து புன்னகைத்தேன். அவரும் சிரிப்பை அடக்க முடியாதவராய் சிரித்துக் கொண்டிருந்தார். காலை கட் செய்யுமாறு சைகை செய்தார்.



"ஹாய் நந்தினி.. நான் அவரோட வொய்ஃப் பேசுறேன்.. அவர் வெளில போயிருக்காரு.. வந்ததும் கால் பண்ண சொல்றேன்.."

சொல்லிவிட்டு காலை கட் செய்தேன். என் கணவர் பக்கமாக திரும்பி, அவரை முறைப்பது மாதிரி நடித்தேன். அவர் முகத்தில் புன்முறுவலுடன், போலி கோவத்துடன் கேட்டார்.

"ஒய்.. என்ன முறைக்கிற..? அதான் பொய் சொல்லாம.. உண்மையை சொல்றம்ல..?" என மதுரை ஸ்லாங்கில் கேட்டார்.
 

"ம்ம்.. ஷர்மா = ஷர்மிலி.. நந்தா = நந்தினி.. இன்னும் எத்தனை காண்டாக்ட்ஸ் வச்சிருக்கீங்க இந்த மாதிரி..?"

"ஹ்ஹ்ஹா.. சொல்றேன்.. சொல்றேன்.. நீயே எல்லா காண்டாக்ட்சும் எடிட் பண்ணிடு.."

"சொல்லுங்க.."

அவர் ஒவ்வொரு காண்டாக்டாக சொல்ல சொல்ல, நான் எடிட் செய்து ஸேவ் செய்தேன்.

"வினோத் = வினோதினி.."

"ம்ம்.."

"சுமந்த் = சுமதி.."

"ம்ம்.."

"வாசு = வாசுகி.."

"ம்ம்.. அப்புறம்..?"

"ஹரி = ஹரிணி.."

"ம்ம்.. அவ்வளவுதானா..?

"இல்ல.. இன்னும் ஒன்னே ஒன்னு எடிட் பண்ணனும்.."

"என்னது அது..?"

"பவித்ரா = மை ஸ்வீட் ஹார்ட்.."

இதழில் குறும்புப்புன்னகையுடன் சொன்னவர், என்னை இறுக்கி அணைத்துக் கொண்டார்.

(முற்றும்)



No comments:

Post a Comment