Thursday, March 12, 2015

மாங்கல்யம் தந்துனானே.. - எபிஸோட் - 8

"வாவ்.... ஷாட்...!!!!!!!!!"

வாயெல்லாம் பல்லாக வந்தவளை பார்த்து நான் மெலிதாக புன்னகைத்தேன். அவளும் புன்னகைத்தவாறு, கையில் இருந்த இரண்டு கப்களில் ஒன்றை என்னிடம் நீட்டிக்கொண்டே சொன்னாள்.

"பால் கொஞ்சம் மிச்சம் இருந்தது பவி.. ரெண்டு காபியா போட்டுட்டேன்.. இந்தா.."

"ஓ.. தேங்க்ஸ்க்கா..!!" நான் வாங்கிக் கொண்டேன். வாய் வைத்து கொஞ்சமாய் உறிஞ்சினேன்.

"கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கும் பரவாலையா..? அசோக்குக்கு காபி ஸ்ட்ராங்கா இருந்தாதான் புடிக்கும்.. அந்த நெனப்புலேயே போட்டுட்டேன்.. உன் டேஸ்ட் என்னன்னு தெரியலை..!! ஓகேவா..?"



அவள் சொல்ல.. எனக்கு பட்டென்று அவள் மீது எப்போதும் வரும் அந்த எரிச்சல் பற்றிக் கொள்ள ஆரம்பித்தது. என் புருஷனுக்கு என்ன புடிக்கும்னு இவளுக்கு என்ன அக்கறை..??? ஆனால் அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல், மெல்லிய ஆனால் தீர்க்கமான குரலில் சொன்னேன்.

"அவருக்கு என்ன புடிக்குமோ.. அதுதான் எனக்கும் புடிக்கும்..!!"

"தேட்ஸ் நைஸ்.." என்று இளித்தவள், மைதானத்தில் பார்வையை வீசி கொஞ்ச நேரம் கிரிக்கெட் பார்த்தாள். அப்புறம் மீண்டும் ஆரம்பித்தாள்.

"ஹேய்.. பவி.. அசோக் போட்டிருக்குற அந்த டி-ஷர்ட் பாத்தியா..?"

"ம்ம்.."

"நல்லாருக்கா..?"

"ம்ம்.. நல்லாருக்கு.. ஏன்க்கா கேக்குறீங்க..?"

"அது என்னோட சாய்ஸ் தெரியுமா..? நானும் அவனும் போய்தான் அந்த டி-ஷர்ட் எடுத்தோம்.."

அவள் பெருமையாக சொல்ல, அவர் அந்த டி-ஷர்ட்டை கழட்டிப் போட்டதும் முதல் வேலையாக அதை எங்காவது தூரமாக தூக்கிப் போட வேண்டும் என்று நான் மனதுக்குள் முடிவு கட்டினேன். அவளோ என் மனநிலையை உணர்ந்தவளாக தெரியவில்லை. மேலும் எரிச்சல் மூட்டினாள்.

"என் வீட்டுக்காரருக்கு டி-ஷர்ட் போடுறதே புடிக்காது.. 'போட்டுக்குங்க.. உங்களுக்கு நல்லாருக்கும்'னு.. எவ்ளோ கெஞ்சு.. ம்ஹூம்... முடியாதுன்னா முடியாது..!!"

அவள் சொன்னதைக்கேட்டு நான் புகைந்து கொண்டிருக்கும்போதே, கழுத்து வரை எழும்பி வந்த பந்தை அசோக் மட்டையால் ஓங்கி அறைய.. இவள் கிடந்தது இங்கு துள்ளினாள்.

"வாவ்... சூப்பர் ஷாட்.. இல்ல பவி..?"

"ம்ம்ம்.." என்றேன் நான் பற்களை கடித்துக்கொண்டு.

"அசோக்குக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும்ல..? நல்ல இன்ட்ரஸ்ட் இல்ல..?"

"ம்ம்ம்.."

"நான் கூட என்னவோ நெனச்சேன்.. நல்லாவும் ஆடுறான்..!!"

"ம்ம்ம்.."

"அசோக்குக்கு கிரிக்கெட் மட்டும் இல்ல.. எல்லா ஸ்போர்ட்சுமே ரொம்ப இன்ட்ரஸ்ட்.. ஸ்போர்ட் பத்தி பேசுனா.. ரெண்டு பேரும் நேரம் போறது தெரியாம பேசிட்டு இருப்போம்..!!"

"ஓஹோ..?"

"ஹ்ஹாஹ்ஹா.. என் ஹஸ்பண்டுக்குத்தான் இதுலலாம் சுத்தமா இன்ட்ரஸ்டே கெடயாது.. 'வெளையாட்டுலாம் சும்மா வெட்டி வேலை'ன்னு சொல்லுவார்.. நான் தலையில அடிச்சுக்குவேன்..!! அசோக் அந்த வகைல பெஸ்ட்பா..!!"

அவ்வளவுதான்..!! அதற்கு மேலும் என்னால் பொங்கி வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு இருக்க முடியவில்லை. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் இவள்..???  கேட்டு விட வேண்டியதுதான்.. ஆனால் நேரிடையாக, அவள் முகத்தில் அடிப்பது மாதிரி வேண்டாம் என்று தோன்றியது. எரிச்சலை மனதுக்குள் போட்டு அடைத்துக்கொண்டு, முகத்தில் எந்தவித சலனமும் காட்டாமல் கேட்டேன். 

"உங்ககிட்ட ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..?"

"எ..என்ன பவி.. சொல்லு.." அவள் இப்போது முகத்தில் குழப்ப ரேகை ஓட கேட்டாள்.

"புருஷன்றவன் ஒரு பொண்ணுக்கு எவ்வளவு முக்கியமானவன்.."

"ஆ..ஆமாம்.."

"புருஷன்ற அந்த உறவு.. எவ்வளவு புனிதமான உறவு.."

"ம்..ம்ம்ம்.."

"எங்கயோ பிறந்து.. எங்கயோ வளர்ந்து.. நம்மள அவங்க வாழ்க்கைல சேர்த்துக்கிட்டு.. அவங்க சுகதுக்கம்.. கஷ்ட நஷ்டம்லாம் ஷேர் பண்ணிக்கிட்டு.. நமக்கு புடிச்சதெல்லாம் தேடித்தேடி செஞ்சுக்கிட்டு.. நமக்காகவே ஓடிஓடி ஒழைச்சு.. ஓடா தேயுறாங்களே..?? பொண்டாட்டிக்கு புருஷன்றவன்தான் மொதல் புள்ளை.. புருஷனுக்கு கடவுள் கொடுத்த இன்னொரு அம்மாதான் பொண்டாட்டி.. அப்டின்லாம் சொல்றாங்களே..?? எவ்வளவு புனிதமான உறவுல அது..?"

"ம்ம்..!! ஆ..ஆனா.. நீ என்ன சொல்ல வர்றேன்னு..."

"அப்படிப்பட்ட புனிதமான உறவை கொச்சைப் படுத்துற மாதிரி.. உங்க ஹஸ்பண்டை யாராரோடவோ கம்பேர் பண்றீங்களே..? அது தப்பு இல்லையா..?"

நான் சொல்ல சொல்ல.. அவளுடைய முகம் பக்கென அதிர்ச்சியில் சுருங்கி சிறுத்துப் போனது. பேயிடம் அறை வாங்கியவள் மாதிரி திகைப்பாக என் முகத்தையே பார்த்தாள். நான் அதே அமைதியான குரலில் தொடர்ந்தேன்.

"எப்படி இருந்தாலும்.. என்ன கொறை இருந்தாலும்.. அவன் என் புருஷன்.. அவனை விட்டுக்கொடுக்க கூடாதுன்னு.. உங்களுக்கு தோணலையா..?"

நான் சொல்லிவிட்டு அவள் முகத்தையே கூர்மையாகப் பார்த்தேன். அவள் ஒருமாதிரி ஸ்தம்பித்துப் போயிருந்தாள். முகம் முழுதும் அதிர்ச்சியில் வெளிற ஆரம்பிக்க, அவளுடைய உதடுகள் படபடவென துடித்தன. கண்கள் கூட லேசாக கலங்கிய மாதிரி தோன்றியது. ஒன்றுமே சொல்லத் தோன்றாமல் உறைந்து போய் நின்றிருந்தாள்.

அவள் அந்தமாதிரி சிலையாக நின்று கொண்டிருந்தபோதே, ஒரு பையன் அடித்த பந்து பால்கனி நோக்கி பறந்து வந்தது. அவளுக்கு நேராக..!! அவள் அதை கவனிக்கவில்லை..!! பந்து அவளுடைய தலையில் அடித்துவிடக் கூடாது என்று பதறிய நான், பட்டென என் வலக்கையை நீட்டி அவளுடைய கன்னத்துக்கு சில அங்குல இடைவெளியில் அந்தப் பந்தை பிடித்தேன். அவளோ.. நான் அவளை அறையத்தான் கையை ஓங்கினேன் என்று நினைத்தாளோ என்னவோ.. படக்கென முகத்தை திருப்பியவள், அறை விழாமலே.. விழுந்த மாதிரி தன் கன்னத்தில் கை வைத்து மூடிக் கொண்டாள்.

அவளை இவ்வாறு காயப் படுத்தும் அளவிற்கு அவள் மீது எனக்கென்ன கோபம் என்று கேட்கிறீர்களா..? அவள் மீது எனக்கு பெரிதாக கோபமெல்லாம் எதுவும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால்.. இரண்டு வாரங்கள் முன்பு நடந்த அந்த சம்பவத்தினால், அவள் மீது நான் மனதில் மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தேன். இந்தமாதிரி அவள் பேசும்போதெல்லாம் வழக்கமாக எனக்குள் எழும் எரிச்சல்தான்.. இன்று சற்று எல்லை கடந்துவிட்டது..!! இரண்டு வாரங்கள் முன்பு அசோக் ஆபீசில் எதையோ சாப்பிடப் போக, அது ஃபுட் பாய்சன் ஆகி, வயிறு கோளாறு சீரியசாகி, இரண்டு நாட்கள் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்குமாறு ஆயிற்று.

அந்த இரண்டு நாட்கள் நான் மிகவும் கலங்கிப் போனேன். முதன்முறையாக தாயாகிப் போன மாதிரியான உணர்வு. உடல் மெலிந்து, சோர்ந்து போய், ஹாஸ்பிட்டல் படுக்கையில் சுருண்டு படுத்துக்கொண்டு, என் உள்ளங்கையை தேடிப்பிடிக்கும் என் கணவரை காணும்போது, என் குழந்தையாகத்தான் தோன்றினார் அவர்..!! அவர் தூங்கும் நேரம் எல்லாம் அழுதுகொண்டே இருப்பேன். அவர் கண்விழிக்கும்போது, என் கண்துடைத்து சகஜ நிலைக்கு திரும்ப, மிகவும் சிரமப் படுவேன். 

அந்த மாதிரி நான் கலங்கிப் போயிருந்த நிலையில் இந்த ரேணுகாதான் எனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தாள். ஆபீசுக்கு ஒருநாள் லீவ் சொல்லிவிட்டு, முதல் நாள் முழுவதும் என்னுடனே இருந்தாள். அவருடைய உடல்நிலை பற்றி நான் கவலை கொள்ளும் வேளையில், பணம் ஒரு பிரச்னையாக இல்லாதவாறு பார்த்துக் கொண்டாள். மருந்து வாங்குவதற்கெல்லாம் அவளே அலைந்தாள். என் அருகில் இருந்து என்னை தேற்றியவள், அடுத்தநாள் காலை அத்தையும், மாமாவும் வந்து சேர்ந்த பிறகுதுதான் ஆபீஸ் கிளம்பினாள்.

அந்த சம்பவம் அவளைப் பற்றி நல்ல அபிப்ராயத்தை என் மனதுக்குள் உருவாக்கி இருந்தது. ஆனால்.. மீண்டும் அவர் திரும்பி வந்த ஓரிரு நாட்களிலேயே அவள் பழைய மாதிரி ஒப்பீட்டு பேச்சை ஆரம்பிக்கவும், மறுபடியும் என் மனதை எரிச்சல் அரிக்க ஆரம்பித்திருந்தது. அந்த மாதிரியான பேச்சு கடுமையாக என் மனதைப் பாதித்தது. அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணியே, அவ்வாறு முகத்தில் அறைந்த மாதிரி கேட்டுவிட்டேன்.

ஆனால், கேட்டுவிட்ட பிறகு அவள் முகத்தைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அவசரப் பட்டு விட்டோமோ என்று கூட தோன்றியது. நான் நினைத்ததை விட மிகவும் காயப்பட்டுப் போனாள் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவள் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள், 'ஸாரி பவி..' என்று உலர்ந்து போன குரலில் சொல்லிவிட்டு, விடுவிடுவென நடந்து அவள் ஃப்ளாட்டுக்கு சென்றுவிட்டாள்.

அப்புறம் இரண்டு மூன்று நாட்கள் அவள் என் கண்ணிலேயே படவில்லை. எங்கள் வீட்டுக்கும் வரவில்லை. ஆபீசில் இருந்து வந்ததும் அவளுடைய ஃப்ளாட்டிலேயே அடைந்து கிடந்தாள். கோவம் இருக்கும் என்று எனக்கும் புரிந்தது. 'பாவம்..' என்று ஒருமனம் நினைத்தாலும், 'பரவாயில்லை..' என்று இன்னொரு மனம் சொல்லியது. நான் சொல்லிய விதந்தான் எனக்கு வருத்தத்தை அளித்ததே ஒழிய, சொன்ன விஷயத்தில் எந்த வித தவறும் இல்லை என்றே தோன்றியது. அந்த மாதிரி சமயத்தில்தான் அவள் மீது உச்சபட்ச வெறுப்பை உமிழ்ந்த அந்த சம்பவம் நடந்தது.

அன்று நியூ இயருக்கு முந்தய தினம்..!! காலையில் அவர் ஆபீசுக்கு கிளம்பிய போதே, இரவு சீக்கிரம் வர சொன்னேன். வெளியில் எங்காவது செல்லலாம் என என் விருப்பத்தை சொல்லியிருந்தேன். அவரும் சரி என்றுவிட்டே கிளம்பினார்.

மாலையில் நான் சற்று பரபரப்பாகவே காணப்பட்டேன். அவருடன் ஊர் சுற்றுவது என்பது எப்போதுமே எனக்கு உற்சாகம் தரும் விஷயம். பைக்கில் அவர் பின்னால் அமர்ந்துகொண்டு அவருடைய இடுப்பை வளைத்துக் கொள்வது பிடிக்கும். செல்லுமிடங்களில் அவர் என்னுடைய கணவராக்கும் என்று உரிமையுடன் அவருடைய கையை கோர்த்துக் கொண்டு நடப்பது பிடிக்கும். சீக்கிரமே கிளம்பி ரெடியானேன். அவருக்கு மிகவும் பிடித்த ஒரு காட்டன் புடவையை அணிந்து கொண்டு.. கொஞ்சமாய், திருத்தமாய் அலங்காரம் செய்துகொண்டு.. கூந்தலில் மல்லிகை அள்ளி வைத்து.. வாங்கி வைத்திருந்த கண்ணாடி வளையல்களை அணிந்து கொண்டு.. காத்திருந்தேன் அவருக்காக..!!

அவரிடம் இருந்து கால் வந்தது. ஓடிச்சென்று எடுத்தேன். உற்சாகமும் சந்தோஷமும் பொங்கும் குரலில் கேட்டேன்.

"என்னங்க.. கெளம்பிட்டீங்களா.. எப்போ வருவீங்க..?"

ஆனால் மறுமுனையில் இருந்து அவருடைய குரலுக்கு பதிலாக அந்த ரேணுகாவின் குரல் தயங்கி தயங்கி ஒலிக்க, நான் பட்டென முகம் சுருங்கினேன்.

"ப..பவி.. நான் ரே..ரேணு.."

"ஓ... நீ..நீங்களா..? அ..அவரு.." நான் தடுமாற்றமாய் கேட்டேன்.

 

"அ..அசோக் கார் ஓட்டிட்டு இருக்கான்.. அதான் என்னைப் பேச சொன்னான்.."

"ம்ம்ம்.. சொல்லுங்க.."

"ஆபீஸ்ல திடீர்னு ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணிட்டாங்க பவி.. ரெண்டு பேரும் அங்கதான் போயிட்டு இருக்கோம்.. நைட்டு வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆயிடும்.. அதான்.. உ..உன்கிட்ட சொல்லலாம்னு.."

"ஓ.. பா..பார்ட்டியா..? போ..போறீங்களா..? ஓகே.. போ..போயிட்டு வாங்க..!! வேற..?"

"வே..வேற ஒன்னும் இல்ல.."

அவள் சொல்லி முடிக்கும் முன்பே நான் பட்டென காலை கட் செய்தேன். செல்போனை தூக்கி வீசினேன். நெஞ்சில் அடைத்த துக்கத்தை அடக்க முடியாதவளாய், கண்ணில் நீர் வார்க்க ஆரம்பித்தேன். அவருடன் வெளியே செல்கிற என் ஆசை கலைந்தது ஒருபுறம் வதைக்க, அவளும் அவரும் சேர்ந்து பார்ட்டி சென்று கூத்தடிக்கப் போகிறார்கள் என்ற எண்ணம் இன்னொரு புறம் என்னை வாட்டியது. கண்ணீர் மட்டும் வடிக்கவில்லை என்றால்.. உயிரற்ற ஜடம் என்று என்னை முடிவு கட்டிவிடலாம். அந்த மாதிரிதான் அவர்கள் வரும்வரை அசையாமல் சோபாவில் அமர்ந்திருந்தேன்.

கீழே காரின் ஹார்ன் கேட்டதும், தலை திருப்பி மணி பார்த்தேன். பதினோரு மணிக்கு மேலாகி இருந்தது. எழுந்து ஜன்னல் திரையை விலக்கிப் பார்த்தபோது, அவர்கள்தான் என்று புரிந்தது. இருவரும் முகமெல்லாம் சிரிப்பாக காரில் இருந்து இறங்கினார்கள். அசோக் நன்றாக குடித்திருப்பார் என்று தோன்றியது. தள்ளாடினார்..!! நானே சென்று அவரை மேலே அழைத்து வரலாம் என்று நினைத்தேன். படியிறங்கி கீழே சென்றேன்.

நான் அவரை நெருங்கவும்.. அவர் கோணலான வாயுடன் என்னை பார்த்து புன்னகைத்தவாறு, கால் இடறி தடுமாறவும் சரியாக இருந்தது..!! நான் 'பாத்துங்க..' என்றவாறு அவருடைய இடுப்புக்கு கை கொடுத்து தாங்கிப் பிடிக்க, அதே நேரம் அந்த ரேணுகாவும் 'டேய்..' என்றவாறு அவருடைய தோளைப் பற்றினாள். அவ்வளவுதான்..!! எங்கிருந்துதான் எனக்கு அப்படி ஒரு ஆத்திரம் வந்தது என்று தெரியவில்லை. பட்டென அவளுடைய கையை அவருடைய தோளில் இருந்து தட்டிவிட்டேன். உக்கிரமாக அவளை பார்த்து முறைத்தவாறு, வெறுப்பில் நனைந்த வார்த்தைகளை உதிர்த்தேன்.

"எல்லாம் எனக்கு பாத்துக்க தெரியும்..!!!!"

அவள் வாயடைத்துப் போனாள். கடுமையான காயம்பட்டவள் மாதிரி, பரிதாபமாக என் முகத்தை பார்த்தாள். 'ஸாரி பவி..' என்கிறாள் என அவளுடைய உதட்டசைவில் இருந்தே உணர்ந்து கொண்டேன். வார்த்தை வெளியே வரவில்லை. மேலும் உக்கிரமாய் ஒரு முறைப்பை அவள் மீது வீசிவிட்டு, என் கணவரின் ஒரு கையை எடுத்து என் தோளில் போட்டுக் கொண்டேன். ஒரு கையால் அவருடைய இடுப்பை பற்றி, அவர் படியேறி மேலே செல்ல உதவினேன்.

"ஸா..ஸாரி பவி.. நி..நியூ இயர்னு... கொ..கொஞ்சம் ஓவரா.. இனிமே இப்டிலாம்.. இன்னும் ரெ..ரெண்டு மாசம் நான் குடிக்கவே மாட்டேன்... சரியா..?"

அவர் வாய் குழற சொன்னபடியே, ஹாலில் கிடந்த சோபாவில் தொப்பென அமர்ந்தார். நான் கதவை அடைக்க மீண்டும் வாசலுக்கு வந்தேன். வெளியே அடிபட்ட பறவை மாதிரி பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்த ரேணுகாவை, வெறுப்புடன் பார்த்தவாறே கதவை ஓங்கி அறைந்து சாத்தினேன். திரும்ப நடந்து வந்து, என் கணவருக்கு எதிரே கிடந்த சோபாவில் அமர்ந்து கொண்டேன். போதையில் அவருடைய தலையும், கண்களும் நிலை கொள்ளாமல் சுழன்றதை சில வினாடிகள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் இறுக்கமான குரலில் அவரிடம் சொன்னேன்.

 

"கூடிய சீக்கிரம் வேற வீடு மாறிடலாங்க.."

அவர் அதை எதிர்பார்த்திருக்க மாட்டார் போலும். படாரென ஒரு அதிர்ச்சி ரேகை அவருடைய முகத்தில் ஓடுவதை என்னால் உணர முடிந்தது. ஏற்றிய போதையும் அந்த கேள்வியால் அவருக்கு வெகுவாக குறைந்திருக்க வேண்டும். சற்றே தெளிவான குரலில் கேட்டார்.

"எ..என்னடி சொல்ற..?"

"புரியலையா..? இந்த வீட்டை காலி பண்ணிட்டு வேற வீடு போயிறலாம்னு சொல்றேன்..!!"

"ஏன்..?"

"ஏன்னா.? எனக்கு இந்த வீடு புடிக்கலை..!!"

"அதான்.. ஏன் புடிக்கலைன்னு கேக்குறேன்..? சின்னதா இருந்தாலும் அழகான வீடு.. என்ன தேவைன்னாலும் எல்லாமே பக்கத்துலயே கெடைக்குது.. தண்ணி பிரச்னை இல்லை.. கம்மி ரெண்ட்.. ஆபீசுக்கும் ரொம்ப க்ளோஸ்.. எல்லாத்துக்கு மேல என்ன ஹெல்ப் வேணுன்னாலும் கேக்குறதுக்கு பக்கத்துலயே ரேணுகா.." அவர் சொல்லிக்கொண்டே போக,

"அவ பக்கத்துல இருக்குறதாலதான் புடிக்கலை..!!" நான் பட்டென இடைமறித்தேன்.

"எ..என்ன சொல்ற நீ..?" அவர் இன்னும் என் எண்ணம் புரியாமல் கேட்டார்.

"புரியலையா இன்னும்..? எனக்கு அந்த ரேணுகாவை புடிக்கலை.. அதான் வேற வீடு மாத்தலாம்னு சொல்றேன்.. முடிஞ்சா வேற வேலை கூட மாத்திடுங்க..!!" நான் படபடவென சொல்ல, அவர் சில வினாடிகள் என் முகத்தையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம்,

"ரேணுகாவை ஏன் உனக்கு புடிக்கலை..?" என்றார்.

"ஏன்லாம் காரணம் சொல்லிட்டு இருக்க முடியாது.. புடிக்கலை..!! அவ்ளோதான்..!! வீட்டைத்தான உங்களை மாத்த சொல்றேன்.. மாத்துங்களேன்..!!"

"இந்த மாதிரி வசதியான இன்னொரு வீடு கெடைக்கிறது கஷ்டம் பவி.. இந்த வீட்டை புடிக்கவே நான் எவ்ளோ கஷ்டப் பட்டேன் தெரியுமா.?"

"என்ன கஷ்டப்பட்டிருக்க போறீங்க..? 'உன் பக்கத்துலயே எனக்கு ஒரு வீடு பாரு ரேணு..'ன்னு அவகிட்ட வழிஞ்சுருப்பீங்க.. அவளும் உங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லாம எல்லாம் பண்ணிக் கொடுத்திருப்பா..!!"

"ஓஹோ..?? சரி.. அப்டியே இருந்துட்டு போகட்டும்.. உனக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்..!! பேச்சை விடு..!!"

"விடுறேன்.. வேற வீடு எப்போ போறோம்னு சொல்லுங்க.. விடுறேன்..!!" 

"இங்க பாரு.. இந்த வீடும், வேலையும் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.. கம்ஃபர்ட்டபிளா இருக்குது..!! நீ காரணம் இல்லாம கத்துறதுக்காகலாம் நான் கஷ்டப்பட்டுட்டு இருக்க முடியாது..!!" அவர் சற்றே கடுமையாக சொல்ல, எனக்கு சுரீர் என கோபம் வந்தது.

"யாரு..??? நான் கத்துறனா..??? நான் இங்க பைத்தியக்காரி மாதிரி கெளம்பி உக்காந்திருப்பேன்.. நீங்க அவகூட குடிச்சு கூத்தடிச்சுட்டு வருவீங்க..? நான் எதுவும் சொல்ல கூடாது..?? அப்டித்தான..? சொன்னா.. கத்துறேன்னு சொல்வீங்க..!!" இப்போது நான் நிஜமாகவே கத்தினேன்.

"ஹேய்.. ஆபீஸ்ல திடீர்னு அரேஞ்ச் பண்ணிட்டாங்கம்மா.. க்ளையன்ட்லாம் வந்திருந்தாங்க.. நீ வரலைன்னா நல்லாருக்காதுன்னு.." அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே,

"அந்த ரேணுகா சொன்னாளா..?" நான் பட்டென கேட்டேன்.

"ம்ம்.. அவதான என் பாஸ்..?"

"அப்போ.. என்னை விட உங்களுக்கு அவதான் முக்கியம் இல்ல..??"

"ப்ச்..!! அறிவில்லாம பேசாத பவி.. ரேணுகா மேல அப்டி என்ன கோவம் உனக்கு..?"

"ஹ்ஹா.. யாரு..? நான் அறிவில்லாம பேசுறனா..? அவதான் அப்டிலாம் பேசுவா..?"

"அவ பேசுவாளா..? என்ன பேசுவா..?"

"ம்ம்ம்ம்.. கட்டுன புருஷனை கண்டவங்க கூடவும்  கம்பேர் பண்ணிப் பேசுவா.. என் புருஷன் சரியில்லைன்னு எல்லார்கிட்டயும் போய் சொல்வா.. வேற யாராவது நல்ல புருஷன் கெடைக்க மாட்டாங்களான்னு ஏங்குவா.." நான் ஓரக்கண்ணால் அவரை பார்த்தபடி சொல்லவும், அவருக்கு மொத்தமும் சட்டென புரிந்து போனது. உடனே சீறினார்.

"வாயை மூடு பவி.. ரேணுகாவைப் பத்தி என்ன தெரியும் உனக்கு..?"

"ஓஹோ.. அவளைப் பத்தி சொன்னா.. உங்களுக்கு கோவம் பொறுக்கலையோ..? நல்லாத்தான் மயக்கி வச்சிருக்கா..!!"

அவ்வளவுதான்..!! அவருடைய ஆத்திரம் எல்லை மீறியது..!! என் கன்னத்தில் அறைய கையை ஓங்கியவாறு கத்தினார்.

"வாயை மூடுன்னு சொல்றேன்லடி..?? பல்லை உடைச்சிடுவேன்..!!"

விழிகளை அகலமாய் திறந்து, ரவுத்திரமாய் ஒரு பார்வை பார்த்தபடி என்னை அறைய கையை ஓங்கிய என் கணவரை பார்த்ததும், என்னால் எழுந்த துக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கண்களில் இன்ஸ்டண்டாய் ஒரு அருவி உற்பத்தியாகி, பொலபொலவென கொட்ட ஆரம்பித்தது. ஆத்திரம் மொத்தமும் அடங்கி, இப்போது பரிதாபமான குரலில் சொன்னேன்.

"அறைங்க.. ஏன் நிறுத்திட்டீங்க..? அவளுக்காக என்னை அடிக்கிற அளவுக்கு வந்துட்டீங்கல்ல..?"

இப்போது அவருடைய முகம் பட்டென மாறியது. ரவுத்திரம் இருந்த இடம் முழுக்க, இப்போது என் மீதான காதல் வந்து ஒட்டிக் கொண்டது. ஓங்கிய கையை படக்கென கீழே இறக்கினார். அவரும் கண்கள் கலங்க என்னை பார்த்தவாறு, அதே கையால் என் கன்னத்தை தாங்கிப் பிடித்தபடி.. அன்பும், வருத்தமும் கலந்த குரலில் சொன்னார்.



"ஐ..ஐயோ.. ஸாரி பவிம்மா.. ஸாரிடா..!!"

"பேசாதீங்க.. போங்க.. அவதான உங்களுக்கு முக்கியம்.. அவகிட்டயே போங்க..!!"

அழுகையும், ஆத்திரமுமாய் சொல்லிவிட்டு நான் எழுந்து உள்ளே ஓடினேன். படுக்கையறைக்குள் நுழைந்து பொத்தென மெத்தையில் விழுந்தேன். குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தேன். மனதெல்லாம் தாங்க முடியா வேதனை..!! அவருடைய அழகு முகத்தில் இப்படி ஒரு ரவுத்திரம் தாண்டவமாடியதையும் இன்றுதான் முதன்முதலாய் காண நேரந்தது..!! எவளோ ஒருத்திக்காக என்னை அறைய கையோங்கி விட்டாரே..? என்னைவிட அவள்தானா முக்கியம் அவருக்கு..??

"பவி.. என்னம்மா நீ..??" அவர் கேட்டுக்கொண்டே என் தோள் மீது கை வைத்தார்.

"என்னை கொஞ்ச நேரம் நிம்மதியா அழவாவது விடுங்க.. போயிடுங்க.." நான் சீறினேன்.

"ஸாரி பவிம்மா.. நான் உன்னை அடிக்க வந்தது தப்புதான்.. மன்னிச்சுடுடா.. ப்ளீஸ்...!!"

"ஒன்னும் வேணாம்.. போங்க..!!"

"ஹேய்.."

"போங்கன்னு சொல்றேன்ல..?"

நான் காட்டுத்தனமாய் கத்தியதும் அவர் அமைதியானார். எதுவுமே பேசவில்லை. ஆனால் எழுந்தும் செல்லவில்லை. என் அருகிலேயே அமர்ந்திருந்தார். நான் குப்புறப் படுத்து.. முதுகு குலுங்க.. தலையணை நனைக்க.. அவர் எனக்கருகே தலையைப் பிடித்தவாறு அமர்ந்திருந்தார். கொஞ்ச நேரம்..!! அப்புறம்.. 

"பவிம்மா.." 

என்று அவர் மீண்டும் என் தோள் தொட்டார். இப்போது எனக்கு எரிச்சல் எல்லை மீறிப் போனது. நான் அவ்வளவு சொல்லியும் ஏன் தொந்தரவு செய்கிறார்..? நிம்மதியாக அழக் கூட விட மாட்டாரா..? பட்டென படுக்கையிலிருந்து எழுந்தேன். முகம் முழுதும் கண்ணீரும், ஆத்திரமுமாய் சீறினேன்.

"சொன்னாப் புரியாதா உங்களுக்கு..? ஏன் சும்மா சும்மா.." நான் கத்திக்கொண்டு இருக்கும்போதே,

"பசிக்குதும்மா..!!" என்றார் அவர் பரிதாபமாக.

அவ்வளவுதான்..!!!! சத்தியமாக சொல்கிறேன்.. துடித்துப் போனேன்..!! அத்தனை நேரம் அவர் மீது கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த கோபம், போன இடம் தெரியாமல் பறந்திருந்தது. பாலுக்கழும் குழந்தையை பார்த்த தாயின் மனநிலை, படக்கென என் மனதை வந்து கவ்வியது. எரிமலையாய் குமுறிக்கொண்டிருந்த இதயம், அழகு கொஞ்சும் அன்பு நீரோடையாய் மாறிப் போயிருந்தது. இப்போது என் கண்களில் கண்ணீர் அருவி இன்னும் அதிகமாகியிருந்தது. இது வேறு மாதிரியான கண்ணீர்...!! அவர் மீதான காதலும் கனிவும் கலந்து கொட்டிய கண்ணீர்..!! அதிகமாகத்தான் கொட்டும்..!! பதறிப் போனவளாய் சொன்னேன்.

"ஐயோ.. என்னப்பா நீங்க..? பசிக்குதுனா அப்போவே சொல்ல வேண்டியதுதான..? நீங்க பார்ட்டிலயே சாப்பிட்டு வந்திருப்பீங்கன்னு.."

"நீ வெயிட் பண்ணிட்டு இருப்பேன்னு தெரியும் பவி.. அதான் சாப்பிடாம வந்துட்டேன்.."

"சரி சரி.. வாங்க.. எடுத்து வைக்கிறேன்.. சாப்பிடலாம்..!!"

நான் அவசர அவசரமாய் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தேன். பரபரப்பாய் கிச்சனுக்கு ஓடினேன். சாதம் ஆறிப் போயிருந்தது. சாம்பாரும், பொரியலும் கொஞ்சமாய் சூடு செய்தேன். ஐந்தே நிமிடத்தில் எல்லாம் ரெடி செய்து டைனிங் டேபிளில் எடுத்து வைத்தேன்.

"ம்ம்.. சாப்பிடுங்க.."

நான் சாதம் பரிமாற, அவர் அவசர அவசரமாய் அள்ளி வாய்க்குள் போட்டார். ரொம்பவும் பசித்து விட்டது போலிருக்கிறது..!!!!! அழுகை வந்தது எனக்கு..!!

"ஸாரிப்பா..!!" என்றேன் அவர் தலையை கோதியவாறு.

"பரவால்ல பவி.. வா.. நீயும் உக்காந்து சாப்பிடு.."

"இல்ல.. நீங்க மொதல்ல சாப்பிடுங்க.."

"ப்ச்.. வான்னு சொல்றேன்ல.. உக்காரு..!!" நானும் அமர, அவரே ஒரு ப்ளேட்டில் சாதம் பரிமாறி சாம்பார் ஊற்றினார்.

"சாப்பிடு..!!" என்றார் கனிவான குரலில்.

நான் சாதத்தை பிசைந்தேன். இருவரும் ஒருவாய் அள்ளி வைத்தபோது.. சுவர்க்கடிகார குருவி புதுவருடம் பிறந்ததை கூச்சலிட்டு அறிவிக்க ஆரம்பித்தது. நானும் அவரும் திரும்பி, வெளியே வந்து கூவிய அந்த குருவியையே சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்புறம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, தெளிந்த மனதுடன் காதலாக புன்னகைத்துக் கொண்டோம். அவ்வளவுதான்.. சாப்பிட ஆரம்பித்தோம்..!!
 

"நான் சொல்றதை கொஞ்சம் கோவம் இல்லாம கேக்குறியா பவி..?" அவர் மெல்ல ஆரம்பித்தார்.

"சொல்லுங்கப்பா.. எனக்கு இப்போ கோவம்லாம் இல்லை..!!"

"ரேணுகா.. ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணுடி.. பெரிய பணக்கார ஃபேமில பிறந்தவ..!!"

"ம்ம்.."

"அவ ஹஸ்பன்ட் யாருன்னு சொன்னா நீ ஆச்சரியப் படுவ.."

"யா..யாரு..?"

"அவ வீட்டுல ட்ரைவரா வேலை பாத்தவரோட பையன்.. ஏழு எட்டு வருஷமா லவ் பண்ணி.. அவங்க வீட்டுல எல்லாரும் எதிர்த்ததை மீறி.. எல்லா சொத்தையும் உதறிட்டு ஓடிவந்து.. அவரை கட்டிக்கிட்டவ..!! சும்மா பேச்சுக்கு அவரை கொறை சொல்லுவா.. ஆனா அவர் மேல அவ உயிரையே வச்சிருக்கா..!! அவளைப்போய்.. வேற புருஷனுக்காக ஏங்குறான்னு தயவு செஞ்சு தப்பா சொல்லாத பவி.." 

அவர் சொல்ல சொல்ல, என்னை யாரோ சாட்டையால் 'சுளீர்.. சுளீர்..' என அடிப்பது மாதிரி இருந்தது. தவறு செய்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வு உள்ளுக்குள் குபுகுபுவென கொப்பளிக்க ஆரம்பித்தது.

"ம்ம்.." என்றேன் தெம்பே இல்லாத குரலில்.

"எத்தனை தடவை 'நீ என் தம்பி மாதிரிடான்'னு எங்கிட்ட சொல்லிருப்பா தெரியுமா..? நானும் அவளை என்னோட இன்னொரு அக்காவாத்தான் நெனைக்கிறேன் பவி.. அப்டித்தான் நான் அவகூட பழகுறேன்..!! தயவு செஞ்சு எங்க அக்கா தம்பி உறவை சந்தேகப்படாத.. ப்ளீஸ்..!!" அவர் கெஞ்சும் குரலில் கேட்க, எனக்கு அழுகை வரும்போல் ஆனது.

"சேச்சே.. அ..அதெல்லாம் இல்லைப்பா..!!" என்றேன் பதற்றமாக.

"அவ ஏற்கனவே.. கொழந்தை இல்லைன்ற கொறையை நெனச்சு நெனச்சு.. தெனம் தெனம் தனியா அழறா..!! பாவம்டி அவ..!! உன் மனசுல இப்டிலாம் சந்தேகம் இருக்குன்னு தெரிஞ்சா.. சத்தியமா அவளால தாங்க முடியாது.. துடிச்சுப் போயிடுவா..!!"

என்னால் அதற்கு மேலும் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. கண்ணீர் முத்துகள் கண்களில் இருந்து வெளிப்பட்டு கன்னத்தில் உருண்டோடின. தவறு செய்துவிட்டேன் என்று தெளிவாக தெரிந்தது. 'என் புருஷன் எனக்குத்தான்' என்ற என்னுடைய பொசஸிவ் உணர்வினால், 'என் தம்பி மாதிரி இவன்..' என்று சகஜமாக பழகிய ஒருத்தியின் களங்கமற்ற உணர்வை நசுக்கி சிதைத்திருக்கேன். என் மனதில் சந்தேகம் இருப்பதை இனிமேல் அறியப்  போகிறாளா..? என்னுடைய செய்கைகள் ஏற்கனவே அவளுக்கு உணர்த்தியிருக்கும். அப்படியானால்.. இவர் சொன்னமாதிரி அவள் எப்படி துடித்துப் போயிருப்பாள்..?

அப்புறம் நானும் அவரும் ரேணுகாவைப் பற்றி பேசவில்லை. ஆனால் அன்று இரவும் அடுத்த நாளும், அவளே என் மனம் எங்கும் நிறைந்திருந்தாள். கையில் வீட்டு சாவி வைத்து நீட்டினாள்.. கள்ளம் கபடம் இல்லாமல் கலகலவென சிரித்தாள்.. கன்னத்தில் கை வைத்து படக்கென பயந்தாள்.. கண்ணீர் சிந்தியவாறு என் வாசலில் பரிதாபமாக நின்றாள்..!! அவள் முகத்தில் அறைந்து சாத்திய கதவு.. இப்போது என் முகத்தை அறைவது மாதிரி இருந்தது..!!

அடுத்த நாள் மாலை அவள் சீக்கிரமே ஆபீசில் இருந்து திரும்பிவிட்டாள். அவள் காரில் வந்து இறங்கியதை, நான் என் வீட்டு ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் ஒருகணம் நிமிர்ந்து ஜன்னலை பார்த்தாள். நான் அங்கே நின்றிருப்பதை அறிந்ததும், பட்டென தலையை குனிந்து கொண்டாள். விடுவிடுவென படியேறினாள். நான் ஓரிரு நிமிடங்கள் அங்கேயே நின்றவாறு யோசித்திருப்பேன். பின்பு ஒரு முடிவுக்கு வந்தவளாய் எங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தேன். அவளுடைய ஃப்ளாட்டை நோக்கி நடந்தேன்.

அவளுடைய வீட்டு வாசலில் வந்து நின்றேன். கதவு திறந்திருந்தது. அவள் கண்களை மூடியவாறு சோபாவில் தலை சாய்த்திருந்தாள். நான் மேலும் சிறிது நேரம் யோசித்துவிட்டு என் தொண்டையை செருமினேன். இப்போது அவள் கண்களை திறந்து வாசலை பார்த்தாள். வாசலில் நின்றிருந்த என்னை சற்றே வித்தியாசமாக பார்த்தாள். இப்போது நான் பரிதாபமான குரலில் அவளிடம் கேட்டேன்.

"உள்ள வரலாமாக்கா..?" 

அவ்வளவுதான்.. அவள் பட்டென உருகிப் போனாள். அவசரமாய் எழுந்து என்னை நோக்கி ஓடி வந்தாள்.

"ஹேய் பவி.. என்ன நீ..? உள்ள வா.. பர்மிஷன்லாம் கேட்டுக்கிட்டு இருக்குற.. வா.."

என்று அவளே என் தோளைப் பற்றி உள்ளே அழைத்து சென்றாள். சோபாவில் என்னை அமர செய்து, அவளும் எனக்கருகே அமர்ந்து கொண்டாள். அன்பாக என் முகத்தை பார்த்தாள். கனிவான குரலில் கேட்டாள்.

"சொல்லு பவி.. என்ன விஷயம்..?"

"என்னை மன்னிச்சிடுங்கக்கா..!!" நான் கண்கள் கலங்க சொல்ல, அவள் பதறிப் போனாள்.

"ஏய்.. பவி.. என்னாச்சு உனக்கு.. மன்னிப்பு அது இதுன்னு..?"

"இல்லக்கா.. நான் நேத்து உங்ககிட்ட அப்டி நடந்துக்கிட்டு இருந்திருக்க கூடாது.. வேற எதோ கோவத்தை உங்ககிட்ட காட்டிட்டேன்.. தப்பு பண்ணிட்டேன்.. ப்ளீஸ்க்கா.. மன்னிச்சுடுங்க என்னை..!!"

"ஹையோ.. என்ன நீ..? ச்சீய்.. அழாத பவி.. கண்ணைத் தொடைச்சுக்கோ..!! இங்க பாரு.. நீ பண்ணினதுல எந்த தப்புமே இல்ல.. எனக்கு உன்மேல எந்த கோவமும் இல்ல..!!"

"நெஜமா..?"

"சத்தியமா..!!! ஸாரிலாம் கேக்காத ப்ளீஸ்..!!" 

அவள் சொல்லிவிட்டு என்னை தன்னுடைய தோளில் சாய்த்துக் கொண்டாள். இதமாய் என் தலையை தடவிக் கொடுத்தவாறு சொன்னாள்.

"அழாத பவி.. கண்ணைத் தொடைச்சுக்கோ..!!"

"ம்ம்.. சரி.. அழலை..!! ஆனா.. இனிமே நீங்க எப்போவும் போல எங்க வீட்டுக்கு வரணும்.. எப்போவும் போல சிரிச்சு பேசணும்..!! சரியா..?" நான் எழுந்து கண்களை துடைத்துக்கொண்டே சொல்ல, அவள் அழகாக புன்னகைத்தாள்.

"ஹ்ஹ்ஹாஹ்ஹா.. வீட்டுக்குத்தான..? வந்துட்டா போச்சு..!!"

"சத்தியமா என் மேல கோவம்லாம் இல்லைலக்கா..?" மறுபடியும் நான் நம்பிக்கை இல்லாமல் கேட்க,

"ப்ச்..!! அதான் கோவம்லாம் எதுவும் இல்லைன்னு சொல்றேன்ல..? எனக்கு பாடம் கத்துக் கொடுத்த டீச்சரம்மாவைப் பார்த்து நான் ஏன் கோவப்படப் போறேன்..?"

"டீச்சரம்மாவா..? நானா..?"

"ஆமாம்..!!"

"நான் என்ன கத்துக் கொடுத்தேன்..?" நான் சற்றே இலகுவான குரலில் கேட்க,

"ஒரு பொண்டாட்டின்றவ எப்படி இருக்கணும்னு..!!" அவள் திருத்தமான குரலில் சொன்னாள்.

"அக்கா..!!"

"நெஜமாத்தான் பவி.. உன்னை பாத்ததுக்கப்புறம்.. எனக்கு என் புருஷனை பக்கத்துலையே வச்சுப் பாத்துக்கனும்னு ஆசை வந்துடுச்சு..!! சம்பாதிச்ச வரை போதும்.. காண்ட்ராக்ட் கேன்சல் பண்ணிட்டு வாங்கன்னு அவர்கிட்ட சொல்லிட்டேன்.. அடுத்த வாரம் அவர் இன்டியா வந்துடுவாரு..!! இனிமே அவரை விட்டு நான் பிரியவே மாட்டேன்..!!"

"நெஜமாவா..?"

"ம்ம்.. அப்புறம் உன்கிட்ட இன்னொன்னும் சொல்லணும்..!!"

"என்னக்கா..?"

"இந்த நியூ இயர்ல நான் எடுத்திருக்குற ரெஸல்யூஷன் என்ன தெரியுமா..?"

"எ..என்ன..?"

"என் புருஷனை இனிமே யார் கூடவும் கம்பேர் பண்ணிப் பேசக் கூடாதுன்னு..!!" 

அவள் சொன்னதும், நான் அன்று அவளுடைய முகத்தில் அறைந்த மாதிரி கேட்டது ஞாபகம் வந்து, என் மனதை வருத்தியது.

"ஸாரிக்கா..!!" என்றேன்.

"ச்சீய்.. நீ எதுக்கு ஸாரி சொல்ற..? அந்த மாதிரி ஒரு பாடம் எனக்கு சொல்லிக் கொடுத்ததுக்கு.. நான்தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்..!! இனிமே என் புருஷனை எதுக்காகவும் யார்கிட்டவும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்..!!"

அவள் மிகவும் உறுதியான குரலில் சொல்ல, எனக்கு இப்போது கண்கள் மீண்டும் கலங்க ஆரம்பித்தன. அவள் முகத்தை கொஞ்ச நேரம் பரிதாபமாக பார்த்தவள், அவளுடைய மடியில் முகம் புதைத்துக் கொண்டேன். அவள் என்னை தடுக்கவில்லை. என் முதுகையும் கூந்தலையும் அன்பாக வருடிக் கொடுத்தாள். அப்புறம் என் முகத்தை அவளுடைய உள்ளங்கைகளுக்குள் வைத்து தாங்கி, நிமிர்த்தினாள். அவளுடைய முகம் முழுவதும் புன்னகையும் அன்பும் பொங்கி வழிய, மென்மையாக சொன்னாள்.

"உன்னை நான் மொதநாள் பார்த்தப்போ தப்பா சொல்லிட்டேன் பவி.. உண்மையை சொன்னா.. உன்னை மாதிரி சூப்பரான பொண்டாட்டி கெடைக்க.. அசோக்தான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்..!!"

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உள்ளத்தில் விதவிதமான உணர்சிகள்.. கலந்துகட்டி கடலலை மாதிரி மோதின. என்னையே அன்பாக பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய முகத்தையே நானும் கொஞ்ச நேரம் அமைதியாக பார்த்தேன். அப்புறம் மீண்டும் அவளுடைய மடியில் தலை சாய்த்துக் கொண்டேன்.



அப்புறம் வந்த நான்கைந்து நாட்கள் மிகவும் சந்தோஷமாய் இருந்தேன் நான்..!! எதோ இனம்புரியாத மகிழ்ச்சியும், மலர்ச்சியும் என் முகம் முழுவதும்..!! வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் என் கணவரை முத்தமிட்டேன்.. நேரம் கிடைக்கும்போதெல்லாம் ரேணுகாவை கட்டிக் கொண்டேன்..!! 'எல்லாமே சரியாகிவிட்டது.. இனி இன்பம் தவிர எதுவுமில்லை..' என்று என் மனம் எக்காளமிட்டபோதுதான்.. ஒருநாள் நண்பகல் எங்கள் வீட்டு காலிங் பெல் ஒலித்தது..!! உற்சாகத்துடனே சென்று கதவு திறந்தவள், வெளியே நின்றிருந்தவளைப் பார்த்து, எதிர்பாராத அதிர்ச்சியில் அப்படியே திகைத்துப் போனேன்..!!


அன்பரசி..!!!!!!!!!



No comments:

Post a Comment