Thursday, July 2, 2015

ஐ ஹேட் யூ, பட்.. - அத்தியாயம் - 25

அன்று இரவு.. அசோக் நீண்ட நேரம் தூக்கம் வராமல்.. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்..!! ப்ரியாவின் நினைவுகளே அவனுடைய நெஞ்சில் அலை அலையாய் வந்து மோதிக் கொண்டிருந்தன. அவளுடய கனிவான பேச்சு.. காதலான பார்வை.. கவின்மிகு புன்னகை..!! 'என் மீது எவ்வளவு காதல் வைத்திருக்கிறாள்.. எனக்காக எப்படியெல்லாம் உருகுகிறாள்.. நானுந்தான் அவளை எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கிறேன்.. ச்சே.. பாவம் அவள்..!!'

கோவிந்தும், நேத்ராவும் கூட அடிக்கடி அவன் மனதில் வந்து போனார்கள். 'அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் எவ்வளவு காதல் வைத்திருக்கிறார்கள்.. என்ன அழகாக ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்துக் கொள்கிறார்கள்.. அடுத்தவரின் வளர்ச்சியிலும், சந்தோஷத்திலும் எவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறார்கள்..?? காதலிப்பவர்களின் நிலையை உயர்த்திப் பார்ப்பதுதானே உண்மையான காதலாக இருக்க முடியும்..?? ப்ரியாவின் நிலை உயர்ந்தபோது, அதற்காக நான் ஏன் மகிழ்ந்து போயிருக்க கூடாது..?? அந்த மகிழ்ச்சி எனக்கு இல்லாமல் போனதால்தானே எல்லா பிரச்சினையும்..??'

தீவிர சிந்தனை அவனுடைய உறக்கத்தை திருடியிருந்தது. பிறகு அவனையும் அறியாமல் தூக்கத்தின் பிடியில் சிக்கிக்கொள்ள, பின்னிரவு இரண்டு மணி ஆயிற்று. எரிச்சலெடுக்கும் விழிகளுடன், காலையில் சற்று தாமதமாகவே எழுந்தான். எழுந்ததுமே குளித்துவிட்டு, ஆபீசுக்கு கிளம்பி தனது அறையை விட்டு வெளியே வந்தான்.

"என்ன.. இன்னைக்கு தொரை ஒன்பது மணி வரை தூங்கிட்டாரு..??" செல்வி காபியை நீட்டிக்கொண்டே கேட்டாள்.

"நைட்டு சரியா தூக்கம் இல்ல அண்ணி..!! ப்ரியா இன்னும் வரலையா..??"

"இன்னும் வரலைடா.. ஆளைக்காணோம்.!!"

அசோக் காபியை எடுத்துக்கொண்டு அடுத்த அறைக்கு சென்றான். ப்ரியாவின் முகத்தை உடனே பார்க்கவேண்டும் போலிருந்தது. டேபிள் முன்பாக அமர்ந்துகொண்டான். ஓரமாக மூடி வைக்கப்பட்டிருந்த அவனது லேப்டாப்பை தன் பக்கமாக இழுக்க, டேபிள் மீதிருந்த ஒரு புத்தகம் தவறி கீழே விழுந்தது. அந்த புத்தகத்துக்குள் வைக்கப்பட்டிருந்த புகைப்படம் ஒன்றும் வெளியே நழுவி விழுந்தது. குனிந்து அதை எடுத்தான். ப்ரியாவின் புகைப்படம்..!! முன்பொரு நாள் ராஜேஷ் அவனிடம் காட்ட நினைக்க, அதை பார்க்காமலே விசிறி எறிந்தானே.. அதே புகைப்படம்..!! மஞ்சள் நிற புடவையுடன் மந்தகாசமாக புன்னகைக்கிற ப்ரியாவின் புகைப்படம்..!!

அசோக் ப்ரியாவை கையில் அள்ளிக்கொண்டான். காபியை உறிஞ்சிக்கொண்டே அவளுடைய அழகு கொஞ்சும் முகத்தை சிறிது நேரம் ஆசையாக பார்த்தான். அவனுடைய மூளை தனியாக ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தது. அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவனாய், அந்த புகைப்படத்தை எடுத்துக்கொண்டு எழுந்தான். நடந்து ஹாலுக்கு வந்தான். சோபாவில் அமர்ந்து ந்யூஸ் பேப்பர் புரட்டிக்கொண்டிருந்த ராஜேஷின் முன்பாக வந்து நின்றான். தனக்கு முன் நிழலாட ராஜேஷ் நிமிர்ந்து பார்த்தான். தம்பி என்று தெரிந்ததும், சற்றே குழப்பமாக நெற்றியை சுருக்கி..

"என்னடா..??" என்றான்.



"எனக்கு உடனே கல்யாணம் பண்ணிக்கணும் போல இருக்கு..!!"

"என்னது..???"

"நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணை.. ஒரு வருஷத்துக்குள்ள செலக்ட் பண்ணி.. உனக்கு சொல்றேன்னு சொன்னேன்ல..??"

"ம்ம்.."

"இவதான் அந்தப்பொண்ணு..!!" அசோக் கையிலிருந்த ஃபோட்டோவை அண்ணனிடம் நீட்ட, அதை பார்க்காமலே ராஜேஷ் டென்ஷனாக சீறினான்.

"இங்க பாருடா.. நீ இழுத்த இழுப்புக்குலாம் இனி எங்களால ஆட முடியாது..!! ப்ரியாதான் பொண்ணுன்னு நாங்க எல்லாம் முடிவு பண்ணிட்டோம்.. அந்தப்பொண்ணும் உன் மேல உயிரையே வச்சிருக்குறா.. அவளை விட வேற நல்ல பொண்ணு யாருடா உனக்கு கெடைப்பா..?? நல்லா சொல்றேன் கேட்டுக்கோ.. அவளை கல்யாணம் செய்துக்குறதா இருந்தா.. எங்கிட்ட சொல்லு.. இல்ல.. உன் இஷ்டந்தான் உனக்கு முக்கியம்னா.. நீ என்ன வேணா பண்ணிக்கோ.. எவளை வேணா கட்டிக்கோ.. எப்படியோ போ.. எங்ககிட்ட சொல்லிட்டு இருக்காத..!!"

"ஹாஹா.. மொதல்ல ஃபோட்டோவை பாத்துட்டு அப்புறம் கத்துடா.. லூஸு..!!" அசோக் சிரிப்பாக சொல்ல, அப்புறந்தான் ராஜேஷ் ஃபோட்டோவையே பார்த்தான். உடனே அவன் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு.

"டேய்.. அசோக்கு..!!" என்று கத்தியே விட்டான்.

"ஆமாண்டா.. ப்ரியாவை மேரேஜ் பண்ணிக்க எனக்கு சம்மதம்..!! அப்பாட்ட பேசு.. நீயே கஷ்டப்பட்டு தேடி கண்டுபுடிச்ச பொண்ணுன்னு சொல்லி.. அவர்ட்ட நல்ல பேர் வாங்கிக்கோ..!!" அசோக் கண்சிமிட்டினான்.

"ஹாஹா..!! ஹேய் செல்வி.. இங்க வாடி.. என் தம்பி என்ன சொல்றான்னு கேளு..!!" ராஜேஷ் கிச்சன் பக்கம் திரும்பி கத்த,

"என்னங்க.. என்னாச்சு..??" என்று கேட்டவாறே செல்வி ஓடிவந்தாள்.

ராஜேஷே அவளிடம் விஷயத்தை சொல்ல, அவளுக்கும் இப்போது தாங்க முடியாத சந்தோஷம். 'அடடடா.. இப்பத்தாண்டா உனக்கு புத்தியே வந்திருக்கு.. குடும்பத்து மேல அக்கறை உள்ள புள்ள மாதிரி இப்பத்தான் நீ நடந்துக்கிட்டிருக்குற..!!' என்று அசோக்கை பார்த்து பெருமிதமாக சொன்னாள். அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு கல்யாணப் பேச்சுதான் அங்கு ஓடிக்கொண்டிருந்தது. 'அப்பா, அம்மாவிடம் எப்போது சொல்வது.. வரதராஜனிடம் எப்படி பேசுவது.. எத்தனை நாட்களுக்குள் கல்யாணத்தை முடிப்பது.. ரிஷப்ஷன் எங்கே வைத்துக்கொவது..' என்பது மாதிரியாக பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்போதுதான் அசோக்கின் செல்போன் உள்ளறைக்குள் இருந்து அலறியது. செல்வியே உள்ளே சென்று அதை எடுத்து வந்து அசோக்கிடம் நீட்டினாள். அசோக் செல்போனை வாங்கி பார்த்தான். செண்பகம் கால் செய்திருந்தாள். 'இவள் எதற்கு இந்த நேரத்தில்..??' என்று சற்றே குழப்பமான அசோக், கால் பிக்கப் செய்து பேசினான்.

"சொல்லு செம்பு..!!"

"மா..மாமா.. எங்க இருக்கீங்க..??" செண்பகத்தின் குரலில் ஒரு பதட்டம்.

"நான் இன்னும் கெளம்பல செம்பு.. வீட்லதான் இருக்கேன்.. சொல்லு..!!"

"இங்க ஆபீஸ்ல கொஞ்சம் பிரச்னை மாமா..!!" செண்பகம் சொன்ன விதத்திலேயே, இப்போது அசோக்கையும் மெலிதான ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டது

"பிரச்னையா..?? என்ன பிரச்னை..??"

"யு.ஏ.டி போஸ்ட்போன் ஆயிடுச்சு.. ஏதோ பெரிய பிரச்னை போல.. ப்ரியாக்காதான் எல்லாத்துக்கும் காரணம்னு சொல்றாங்க.. பாலா ரூமுக்குள்ள அவருக்கும், அக்காவுக்கும் பயங்கர ஆர்க்யுமன்ட் நடந்துட்டு இருக்கு.. ப்ராப்ளம் ரொம்ப சீரியஸ் போல இருக்கு மாமா.. எனக்கு முழுசா தெரியல..!! நீங்க உடனே கெளம்பி வர்றீங்களா.. ப்ளீஸ்..!!"

அசோக்கிற்கு கொஞ்ச நேரம் எதுவுமே புரியவில்லை. 'யு.ஏ.டி எதற்காக போஸ்ட்போன் செய்தார்கள்..?? நேற்று இரவு வரை எந்தப்பிரச்சனையும் இல்லையே..?? திடீரென என்ன ஆயிற்று..?? அதுவும் ப்ரியாதான் காரணம் என்றால்..??' யோசிக்க யோசிக்க அவனுக்கு குழப்பமே மிஞ்சியது. ப்ரியாவின் நம்பருக்கு இரண்டு மூன்று முறை கால் செய்து பார்த்தான். ரிங் சென்றது, கால் பிக்கப் செய்யப்படவில்லை.

இப்போது அசோக்கை ஒருவித அவசரம் தொற்றிக் கொண்டது. படக்கென எழுந்தான். தன் அறைக்குள் நுழைந்தவன் பைக் சாவியுடன் வெளியே வந்தான். 'என்னடா.. என்னாச்சு..?' கேட்டவாறே எதிர்ப்பட்ட செல்விக்கு பதிலே சொல்லாமல், பரபரப்பாய் வீட்டை விட்டு வெளியேறினான்.

பைக்கை ஸ்டார்ட் செய்து பறந்தவன், ஆபீஸை சென்றடைய அரைமணி நேரம் ஆனது. லிஃப்ட் ஏறி அவர்களுடைய தளத்திற்கு சென்றான். டீமில் இருப்பவர்கள் ஆங்காங்கே நின்று, ஏதோ கூடிக்கூடி பேசிக்கொண்டிருந்தார்கள். உள்ளே நுழைந்ததுமே செண்பகம் பதற்றம் அப்பிய முகத்துடன் எதிரே வந்தாள்.

"என்ன பிரச்னை செம்பு.. ஏதாவது தெரிஞ்சுச்சா..??"

"நேத்து யு.ஏ.டி ஸ்டார்ட் பண்றதுக்காக.. பில்ட் எடுத்து டெப்லாய் பண்ணிருக்காங்க.. ஆனா.. ப்ரொஸீட் பண்ண முடியாம மாதிரி ஷோ ஸ்டாப்பர்..!! வேற வழி இல்லாம.. யு.ஏ.டி போஸ்ட்போன் பண்ணிருக்காங்க.. க்ளையன்ட் ரொம்ப கடுப்பாயிட்டாங்க போல.. நம்ம கம்பனியை கன்னாபின்னான்னு திட்டிருக்காங்க..!! நேத்து நைட்டு ப்ரியாக்கா லாஸ்ட் மினிட்ல ஒரு கோட் செக்கின் பண்ணிருக்காங்க மாமா.. அதனாலதான் எல்லா ப்ராப்ளமும்..!!"

"அதுல என்ன ப்ராப்ளம்..??"

"அப்ளிகேஷனே வொர்க் ஆகல மாமா.. எந்த லிங்க் க்ளிக் பண்ணினாலும்.. 'ப்ரியா இஸ் எ ஸ்டுபிட்.. ப்ரியா இஸ் எ ஸ்டுபிட்..' னு கொட்டை எழுத்துல வந்திருக்கு..!! ஏதோ.. கேர்லஸா செக்கின் பண்ணிட்டாங்கபோல.. அக்கா பாவம் மாமா.. காலைல இருந்து.. "

செண்பகம் சொல்லிக்கொண்டிருக்க, அசோக்கிற்கு இப்போது சுருக்கென்று இருந்தது. அதிர்ச்சியில் அவனது விழிகள் அகலமாய் விரிந்து கொண்டன. ப்ரியாவை சீண்டுவதற்காக நேற்று இரவு அவளுடைய லேப்டாப்பில் அவன் செய்த வேலைதான் எல்லாவற்றிற்கும் காரணம் என்பது உடனே அவனுக்கு புரிந்து போனது. அவள் மட்டும் பார்ப்பாள் என்று எண்ணி, அப்ளிகேஷனை செயலிழக்க செய்து, 'ப்ரியா இஸ் எ ஸ்டுபிட்..' என்று திரும்ப திரும்ப வருமாறு.. ப்ரோக்ராம் சில்மிஷம் செய்து வைத்திருந்தான். அதை கவனிக்காமல் அவள் செக்கின் செய்து விட்டாள் போலிருக்கிறது. அதனால்தான் எல்லா பிரச்சினையும்..!!

தான் விளையாட்டாய் செய்த காரியம் எவ்வளவு பெரிய விபரீதத்தை உண்டு பண்ணியிருக்கிறது என்பதை உணர்ந்து, அசோக் அப்படியே தளர்ந்து போனான். உள்ளுக்குள் பொடிப்பொடியாக நொறுங்கினான். தான் செய்த தவறுக்காக இப்போது ப்ரியா மாட்டிக்கொண்டாள் என்பதை எண்ணும்போது, அவனுடைய இதயத்தில் ஒரு இனம்புரியாத வலி. 'ச்சே..' என்று நொந்துபோனவனாய் தலையை பிடித்துக் கொண்டான். தடுமாற்றமான குரலில் செண்பகத்திடம் கேட்டான்.

"ப்..ப்ரியா இப்போ எங்க செம்பு..??"

"மீட்டிங் முடிஞ்சு அக்கா இப்போதான் அவங்க ரூமுக்கு போனாங்க.. ரொம்ப அப்சட்டா இருக்காங்க மாமா..!!"

செண்பகத்தை ஒரு கையால் விலக்கிவிட்டு, அசோக் ப்ரியாவின் அறைக்கு விரைந்தான். 'ச்சே.. என்ன காரியம் செய்துவிட்டேன்..??' என்று தன்னைத்தானே மனதுக்குள் திட்டியவாறு, அறைக்கதவை தள்ளி உள்ளே நுழைந்தான். ப்ரியா அழுது கொண்டு இருந்திருப்பாள் போலிருக்கிறது. யாரோ அறைக்குள் நுழைகிறார்கள் என்று உணர்ந்ததும், அவசரமாய் தன் விழிகளை துடைத்துக் கொண்டாள். அப்புறம் அது அசோக் என்று தெரிந்ததும்,

"அசோக்..!!" என்று ததழத்த குரலில் கத்தினாள். உடைந்து போய் மீண்டும் அழுதவாறே, அவளுடைய இருக்கையை விட்டு எழுந்து, இவனை நோக்கி ஓடி வந்தாள்.

"எ..என்னாச்சு ப்ரியா..??" என்ன பேசுவதென்று புரியாமல் அவ்வாறு கேட்டான் அசோக்.

"என்னாச்சுன்னே எனக்கு ஒன்னும் புரியல அசோக்.. எல்லாம் போச்சு.. நான் இத்தனை நாளா சம்பாத்திச்ச பேர், மதிப்பு எல்லாம் போச்சு..!! யாரோ என் மெஷின் அக்ஸஸ் பண்ணி தப்பான கோட் சேர்த்திருக்காங்க.. அதை கவனிக்காம நானும் செக்கின் பண்ணிட்டேன்..!! நைட்டு வீட்டுக்கு போய் தூங்குறதுக்கே ஒரு மணி ஆயிடுச்சுடா.. காலைல மூணு மணிக்கு எனக்கு கால் வந்தது.. அப்போலருந்து நான் தூங்கவே இல்ல..!! ஒரே டென்ஷன் அசோக்..!! இவங்கலாம் நான்தான் எல்லாத்துக்கும் காரணம்னு சொல்றாங்க.. நான் சொல்றதை யாருமே நம்ப மாட்டேன்றாங்கடா..!! யாரு இந்த வேலையை செஞ்சான்னே எனக்கு ஒன்னும் புரியல அசோக்..!!" ப்ரியா படபடவென பரிதாபமாக சொல்ல, அசோக்கால் அதற்கு பிறகும் பொறுக்க முடியவில்லை.

"நா..நான்தான் ப்ரியா.. நான்தான் செஞ்சேன்..!!" என்று உண்மையை உடனே உடைத்துவிட்டான்.

அவன் சொன்னதுமே ப்ரியாவின் முகம் பட்டென மாறிப்போனது. அவளுடைய அழுகை சட்டென நின்று போனது. அப்படியே அதிர்ந்து போனவளாய் அசோக்கின் முகத்தையே திகைப்பாய் பார்த்தாள். இன்னுமே அவன் சொன்ன வார்த்தைகளை நம்ப முடியாத மாதிரியான ஒரு பார்வை. அப்புறம் அசோக்..

"நா..நான்தான் ப்ரியா..!!"

என மீண்டும் தாழ்ந்த குரலில் சொல்ல, ப்ரியா இப்போது தளர்ந்து போனாள். பொத்தென்று அவளுடய சேரில் அமர்ந்தாள். அசோக்கை ஏறிட்டு பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தாள். 



"ஏன் அசோக்..??" என்று ஏக்கமாக கேட்டாள். அசோக் இப்போது அப்படியே உருகிப் போனான். பட்டென அவளை நெருங்கி அவளுடைய கையை பற்றிக்கொண்டான்.

"ஸாரி ப்ரியா.. நா..நான்.. நான் வேணுன்னு பண்ணல.. சும்மா வெளையாட்டுக்கு பண்ணேன்.. உன்னை சீண்டுறதுக்காக..!! நீ மட்டும் பார்ப்பேன்னு நெனச்சேன்.. அது இவ்வளவு பெரிய பிரச்னை ஆகும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..!!"

அசோக் உண்மையான வருத்தத்துடன் சொன்னான். ப்ரியா எதுவும் பேசவில்லை. சில வினாடிகள் எங்கேயோ வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். என்ன செய்வதென்றே எதுவும் புரியாதவளாய், உணர்ச்சியற்ற ஜடம் போல அமர்ந்திருந்தாள். ஒரு அரை நிமிடம் இருக்கும்..!! அப்புறம் ஏதோ முடிக்கு வந்தவளாய் நிமிர்ந்தாள். அசோக் அவளையே இரக்கமாக பார்த்துக் கொண்டிருக்க, அவள் தனது விழிகளில் வழிந்த நீரை அவசரமாய் துடைத்துக் கொண்டாள்.

"ஸாரி ப்ரியா..!!" என்றான் அசோக் மீண்டும்.

"பரவால அசோக்.. விடு..!!" இறுக்கமாக சொன்ன ப்ரியா, தனது லேப்டாப்பை தன் பக்கமாக இழுத்தாள். படபடவென்று ஏதோ டைப் அடிக்க ஆரம்பித்தாள்.

"பா..பாலா என்ன சொன்னாரு..??" அசோக் தயங்கி தயங்கி கேட்டான்.

"அவர் என்ன சொல்வாரு..?? நம்ம கம்பனி மானத்தை நான் வாங்கிட்டதா சொன்னாரு.. எல்லா ப்ளானும் என்னால ஸ்பாயில் ஆயிடுச்சுன்னு சொன்னாரு.. கேவலமா திட்டினாரு..!! மதியம் இன்னொரு எக்ஸ்ப்ளனேஷன் மீட்டிங் அரேஞ்ச் பண்ணிருக்காரு..!! ஆனா.. அந்த மீட்டிங் அட்டன்ட் பண்ண நான் இருக்க மாட்டேன்..!!"

"இ..இருக்க மாட்டியா..?? எ..என்ன சொல்ற..??" அசோக் குழப்பமாய் கேட்டான்.

"வேலையை ரிஸைன் பண்ணப்போறேன்.. லெட்டர் டைப் பண்ணிட்டு இருக்குறேன்..!!" ப்ரியா சொல்ல, அசோக் டென்ஷனாகிப் போனான்.

"ஹேய்.. இப்போ என்னாயிடுச்சுன்னு ரிஸைன் பண்ற நீ..??"

"இன்னும் என்ன ஆகணும் அசோக்..?? இத்தனை நாளா நீ மட்டும் சொல்லிட்டு இருந்த.. இன்னைக்கு எல்லாரும் என்னை ஸ்டுபிட்னு சொல்றாங்க.. நான் ஸ்டுபிட்ன்ற விஷயம் யு.எஸ் வரை போயிடுச்சு..!! புரிஞ்சுக்கோ அசோக்.. என்னால முடியாது.. ஆளாளுக்கு வந்து கேள்வி கேட்பாங்க.. இத்தனை நாளா என்னை ஆஹா ஓஹோன்னு பாராட்டினவங்களே, இப்போ வந்து என்னால எல்லாம் நாசமா போச்சுன்னு சொல்வாங்க.. கேவலமா பார்ப்பாங்க..!! அந்த அவமானத்தை என்னால தாங்கிக்க முடியாது அசோக்.. அதைவிட ரிஸைன் பண்ணிடுறது பெட்டர்..!!"

"அறிவில்லாம பேசாத ப்ரியா.. நீ என்ன தப்பு பண்ணின.. ரிஸைன் பண்றதுக்கு..?? நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு..!! பாலாட்ட போய் நான் பேசுறேன்.. எல்லா பிரச்சினைக்கும் நாந்தான் காரணம்னு உண்மையை ஒத்துக்குறேன்.. அவங்க என் மேல என்ன ஆக்ஷன் எடுக்குறாங்களோ எடுக்கட்டும்.. உனக்கு எந்தப் பிரச்சினையும் வராம நான் பாத்துக்குறேன் ப்ரியா.. சரியா..??" அசோக் தவிப்பாக கேட்க, ப்ரியா வேண்டாம் என்பது போல தலையை அசைத்தாள்.

"வேணாம் அசோக்.. ஆளாளுக்கு கேள்வி கேட்டு உன்னை டார்ச்சர் பண்ணுவாங்க.. உன் பெர்ஃபார்மன்ஸ் ரெகார்ட்ல இது ஒரு ப்ளாக் மார்க் மாதிரி ஆயிடும்.. அந்த அவார்ட் உனக்கு கெடைக்காது.. அடுத்த வருஷம் ப்ரோமோஷன் உனக்கு இருக்காது..!!"

"ஸோ வாட்..??"

"தேவை இல்லாம இந்த பிரச்னைல நீ சிக்கிக்காத.. உனக்கு இந்த கஷ்டம்லாம் வேணாம்.. நானே இதை ஹேண்டில பண்ணிக்குறேன்.. தப்புலாம் என் மேலதான்னு நான் ஒத்துக்கிட்டு ரிஸைன் பண்ணிடுறேன்.. இந்த பிரச்சினை ஈசியா முடிஞ்சிடும்..!! நீ உன் இடத்துக்கு போ.. இதெல்லாம் கண்டுக்காம உன் வேலையை பாரு.. போ..!!" சொல்லிக்கொண்டே ப்ரியா டைப் அடிப்பதை தொடர்ந்தாள்.

"நோ.. உன்னை ரிஸைன் பண்றதுக்கு நான் அல்லோ பண்ண மாட்டேன்..!!"

"புரியாம பேசாத அசோக்.. நான் ரிஸைன் பண்றதுதான் இதுக்கு ஒரே வழி..!!"

"நான் செஞ்சதுக்கு நீ ஏன் தண்டனை அனுபவிக்கனும்..??"

"இதை நான் தண்டனையாவே நெனைக்கல அசோக்..!! நீ செஞ்சதால கெடைச்சதுதான் இது எல்லாமே..!!!! இந்த பேர்.. இந்த பாராட்டு.. இந்த மதிப்பு.. இந்த டி.எல் போஸ்ட்.. எல்லாமே உன்னால எனக்கு கெடைச்சதுதான்..!! இப்போ அதெல்லாம் உனக்காவே இழக்குறது.. எனக்கு ஒன்னும் பெரிய விஷயமா தோணலை.. சந்தோஷமா நான் ரிஸைன் பண்றேன்.. போதுமா..??" ப்ரியா அசோக்கை ஏறிட்டு நிதானமாக சொல்ல, அவன் சற்றே ஆடிப்போனான்.

"ப்..ப்ரியா ப்ளீஸ்..!!" என்றான் திணறலாக.

"டைப் அடிச்சு முடிச்சுட்டேன் அசோக்.. அனுப்ப போறேன்..!!"

"வே..வேணாம் ப்ரியா.. நான் சொல்றதை கேளு..!!"

இப்போது அசோக்கின் கண்களிலும் நீர் துளிர்க்க ஆரம்பித்திருந்தது. 'உன்னை கம்பனியை விட்டே தூக்குறேன் பாரு..' என்று ஒருகாலத்தில் அவளிடம் சவால் விட்டது இப்போது நினைவுக்கு வந்தது. அவனே அறியாமல்.. அவன் செய்த ஒரு காரியம்.. இப்போது அவள் கம்பனியை விட்டு வெளியேற காரணம் ஆகிவிடுமோ என்று பயந்தான்..!! அது நடந்துவிடக்கூடாது என்று தவித்தான். 'ப்ளீஸ் ப்ரியா.. ப்ளீஸ் ப்ரியா..' என்று கெஞ்சினான்.

ப்ரியாவும் கண்களில் நீர் அரும்ப இவன் முகத்தையே காதலாக பார்த்தாள். உதடுகள் பிரித்து மெலிதாக புன்னகைத்தாள். அவனைப் பார்த்து அவ்வாறு புன்னகைத்துக்கொண்டே, தனது வலது கையை லேப்டாக்கு நகர்த்தி, பட்டென்று என்டர் தட்டினாள்.

"அனுப்பியாச்சு..!! ஐ க்விட்..!!" என்றாள் புன்னகை சற்றும் மாறாதவளாய்.

அசோக் இப்போது அவளையே பிரமிப்பாக பார்த்தான். மனதுக்குள் பொங்கிய அவள் மீதான காதல் வெள்ளம், எல்லா அணைகளையும் உடைத்து எறிந்துவிட்டு, காட்டாறாக ஓடியது. ப்ரியா லேப்டாப்பை மூடி வைத்தாள். எழுந்து கொண்டாள். தன்னுடைய பேகை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டாள். மிக இயல்பான குரலிலேயே அசோக்கிடம் சொன்னாள்.

"காலைல இருந்து என்னால முடியலை அசோக்.. ஒரே தலைவலி .. டார்ச்சரா இருந்தது..!! இப்போத்தான் ரொம்ப நிம்மதியா இருக்கு..!! நான் வீட்டுக்கு கெளம்புறேன்.. போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன்..!!"

அசோக் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தான். ப்ரியாவின் முகத்தையே காதலும் ஏக்கமுமாய் பார்த்துக் கொண்டிருந்தான். ப்ரியா இப்போது அவளுடைய கையால் அசோக்கின் கையை பற்றிக்கொண்டாள். கண்களில் ஒரு தெளிவும், உதட்டில் ஒரு மெலிதான புன்முறுவலுமாக சொன்னாள்.

"இத்தனை நாளா உன்கூட எதுக்கெதுக்கோ போட்டி போட்டிருக்கேன் அசோக்.. சின்னப்புள்ள மாதிரி..!! வேணுன்னே உன்னை.. லேட் நைட் வொர்க் பண்ண வச்சிருக்கேன்.. அப்ரூவ் பண்ணின லீவை கேன்சல் பண்ணிருக்கேன்.. உனக்கு புடிக்காத வேலையா குடுத்து டென்ஷன் பண்ணிருக்கேன்.. ஸ்குவாஷ் கோர்ட்ல அடிச்சு போட்டிருக்கேன்.. ஹாஹா..!!"



"ஹ்ம்ம்..!!"

"எல்லாமே ஒரு கொழந்தையோட கோவம் மாதிரிதான் அசோக்.. உடனே வரும்.. உடனே போயிடும்.. உள்ளலாம் வச்சிருக்க மாட்டேன்..!! அந்த கோவத்துல நான் என்ன செஞ்சிருந்தாலும்.. உன் மேல இருந்த லவ் மட்டும்.. ஒரு பர்சன்ட் கூட எப்போவும் குறைஞ்சது இல்ல..!! வெளையாட்டுல வேணா உன்னை ஜெயிக்க நெனச்சிருப்பேன்.. காதல்ல உன்கிட்ட தோக்கனும்னுதான் எப்போவும் நெனச்சேன் அசோக்..!! என்னை நம்புறல..?? ம்ம்..??"

ப்ரியா பரிதாபமாக கேட்க, அசோக்கிற்கு உள்ளுக்குள் கொப்பளித்த உணர்ச்சியை அடக்கிக்கொள்ள மிகவும் கடினமாக இருந்தது. பற்களால் உதடுகளை அழுத்தி கடித்துக் கொண்டான். ப்ரியாவின் முகத்தையே ஏக்கமாக பார்த்தான்.

"ம்ம்ம்..!!" என்று மெல்ல தலையை அசைத்தான்.

"கெளம்புறேன் அசோக்.. பை..!!"

ப்ரியா சொல்லிவிட்டு, திரும்பி விடுவிடுவென நடந்தாள். கதவை திறந்து வேகமாய் வெளியேறினாள். அசோக் அப்படியே செயலற்றுப்போய் நின்றிருந்தான்.

அவள் சென்றபிறகு சில வினாடிகள் கழித்து, மெல்ல தலையை சுழற்றி அந்த அறையை ஒருமுறை பார்த்தான். எங்குமே ஒரு வெறுமை நிறைந்திருப்பதாய் அவனுக்கு தோன்றியது. ப்ரியாவுடைய டேபிள் மீது பார்வையை வீசினான். அலங்காரத்திற்காக அவள் வைத்திருந்த பொருட்களை எல்லாம் அவள் இப்போது எடுத்து சென்றிருக்க, இரண்டே இரண்டு பொருட்கள் மட்டும் அங்கே மிச்சம் இருந்தன. ஒன்று.. அவன் உருவாக்கிய காம்பொனன்ட்டுக்காக ப்ரியாவுக்கு கிடைத்த நினைவுப்பரிசு.. இன்னொன்று அவள் அமெரிக்காவில் இருந்து அவனுக்காக வாங்கி வந்திருந்த கைக்கடிகாரம்..!!

அசோக் கொஞ்ச நேரம் அந்த இரண்டு பொருட்களையுமே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய மூளை எதையோ சுறுசுறுப்பாக யோசித்துக் கொண்டிருந்தது. அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவனாய், கண்களில் துளிர்த்திருந்த நீரை அவசமாய் துடைத்துக் கொண்டான். ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டவாறே, கை நீட்டி அந்த கைக்கடிகாரத்தை எடுத்துக் கொண்டான். இடது கையில் அணிந்து கொண்டான். அறையை விட்டு அவசரமாய் வெளியேறினான். பாலாவின் அறைக்கு நடந்தான். இவன் உள்ளே நுழைந்ததுமே இவனைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர் மாதிரி அவர் சொன்னார்.

"வா அசோக்.. நானே உன்னை வர சொல்ல நெனச்சேன்..!! வா.. உன்கூட கொஞ்சம் பேசணும்.. உக்காரு..!!"

"எ..என்ன பேசணும்..??" அசோக் அவருக்கு எதிரே அமர்ந்தவாறே கேட்டான்.

"இந்த ப்ரியா என்ன வேலை பண்ணி வச்சிருக்குறா பாத்தியா அசோக்..?? க்ளயண்ட்ஸ் கோடிக்கணக்குல பணத்தை கொட்டி கொடுத்துட்டு.. ஃபர்ஸ்ட் டைம் நம்ம ப்ராடக்ட் பாக்குறதுக்காக ஆசையா வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க.. கடைசில அவங்க பாத்ததுலாம்.. 'ப்ரியா இஸ் எ ஸ்டுபிட்..ப்ரியா இஸ் எ ஸ்டுபிட்..' தான்..!! ச்சே.. நேத்து நைட்டுல இருந்து எவ்வளவு மெண்டல் டார்ச்சர் தெரியுமா..?? க்ளையன்ட்ட இருந்து எவ்வளவு ப்ரெஷர் தெரியுமா..?? எல்லாம் இந்த ப்ரியாவாலதான்.. அவளோட ஸ்டுபிடிட்டியாலதான்..!! ப்ரியா தரப்போற தலைவலியை தாங்கிக்க ரெடியா இருங்கன்னு நீ ஒருநாள் சொன்ன.. அதோட அர்த்தம் இப்போதான் எனக்கு முழுசா புரியுது..!! தேங்க் காட்.. அவளே இப்போ ரிஸைன் பண்ணிட்டு போயிட்டா..!! இனி.. ஆகவேண்டியதை பாக்கனும்.. அதுக்குத்தான் உன்னை வர சொல்ல நெனச்சேன்..!! இவ பண்ணின மெஸ்ஸப்ல இருந்து ப்ராஜக்டை மீட்டு கொண்டு வர நீதான் சரியான ஆளு..!!"

"எ..என்ன சொல்றீங்க..?? பு..புரியல..!!"

"நீதான் இனி டீமை லீட் பண்ணனும் அசோக்.. மிட் இயர் அப்ரைசல்ல உனக்கு ஸ்பெஷல் ப்ரோமோஷன் கொடுக்க சொல்றேன்.. ஓகே..?? ஈவ்னிங் க்ளயண்டோட ஒரு மீட்டிங் செட்டப் பண்றேன்.. நீதான் டீமை இனி லீட் பண்ணப் போறேன்னு உன்னை இன்ரோட்யூஸ் பண்றேன்..!! அவங்களை கன்வின்ஸ் பண்ணனும் அசோக்.. திரும்ப இந்தமாதிரி ஒரு இன்சிடன்ட் நடக்காம பாத்துக்கணும்..!! இட்ஸ் வெரி வெரி க்ரிட்டிக்கல்.. நீதான் இந்தவேலைக்கு பொருத்தமானவன்னு நம்புறேன்..!!"

நம்பிக்கையாய் சொல்லிவிட்டு பாலா பார்க்க, அசோக்கிற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. பாலாவின் முகத்தையே சில வினாடிகள் அமைதியாக பார்த்தான். அப்புறம் விரக்தியாக ஒரு புன்னகையை வீசினான். அந்தப் புன்னகையின் அர்த்தம் பாலாவுக்கு புரியவில்லை. அவனுடைய மௌனத்தை பார்த்து குழம்பியவராய் கேட்டார்.

"என்ன அசோக்.. எதுவும் பேச மாட்டேன்ற..??"

"நானும் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னுதான் வந்தேன் பாலா..!!"

"எ..என்ன..??"

"ப்ரியா மேல எந்த தப்பும் இல்ல.. எல்லா பிரச்சினைக்கு காரணம் நான்தான்.. அவ இல்ல..!!" அசோக் உறுதியான குரலில் சொன்னதை கேட்டு, பாலா சற்றே திகைத்து போனார்.

"வாட்..??" என்றார் நெற்றியை சுருக்கியவாறே.

"ஆமாம் பாலா.. நான்தான் அவ சிஸ்டம் அக்சஸ் பண்ணி.. தப்பான கோட் ஆட் பண்ணேன்..!!

"எ..என்ன சொல்ற நீ..?? ஏ..ஏன் அப்படி பண்ணின..??"

"நான் சும்மா.. அவளை சீண்டுறதுக்காக பண்ணேன்.. இவ்ளோ சீரியசாகும்னு எதிர்பார்க்கல..!!"

"ஓ..!!"

"ப்ளீஸ் பாலா.. நான் செஞ்ச தப்புக்கு என் மேல ஆக்ஷன் எடுங்க..!! ப்ரியாவை விட்டுடுங்க.. அவ இன்னொசன்ட்.. அவ ரெசிக்னஷேஷனை அக்சப்ட் பண்ணிக்காதிங்க.. அவளை கூப்பிட்டு பேசுங்க.. ப்ளீஸ்..!!"



அசோக் கெஞ்சலாக சொன்னான். பாலா இப்போது அதிர்ச்சியில் அமைதியாகிப்போனார். கண்ணாடியை கழற்றி டேபிளில் வைத்துவிட்டு, 'உஷ்ஷ்ஷ்..' என்று சலிப்பு மூச்சு விட்டார். 'இது என்ன புது குழப்பம்..?' என்று தலையை சொறிந்தார். இந்த குழப்பத்தை எப்படி தீர்ப்பது என்று நெற்றியை சொறிந்தவாறு சில வினாடிகள் யோசித்தார்.

அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவராய், மீண்டும் கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டார். அசோக்கை ஏறிட்டு தெளிவான குரலில் சொன்னார்.

"ஸீ அசோக்.. நீ செஞ்சது தப்புதான்.. ஆனா பிரச்னைக்கு நீதான் காரணம்னு என்னால அக்சப்ட் பண்ணிக்க முடியாது..!! கோட் செக்கின் பண்றதுக்கு முன்னாடி டெஸ்ட் பண்ணனும்ன்றது பேசிக்கான விஷயம்.. டெஸ்ட் பண்ணாம அவ செக்கின் பண்ணதாலதான் இவ்வளவு பிரச்னையும்..!! ஸோ.. அவதான் எல்லாத்துக்கும் காரணம்..!!"

"நான் கோட் மாடிஃபை பண்ணிருக்குறது அவளுக்கு எப்படி தெரியும் பாலா..?? ஏற்கனவே டெஸ்ட் பண்ணி ரெடியா வச்சிருந்திருப்பாளா இருக்கும்.. திரும்ப டெஸ்ட் பண்ணுவான்னு எப்படி எதிர்பார்க்க முடியும்..??"

"நோ அசோக்.. நோ.. ஐ கான்ட் அக்சப்ட் திஸ் எக்ஸ்க்யூஸ்..!! ஸீ.. இட்ஸ் வெரி சிம்பிள்.. மேனேஜ்மன்ட்டை பொறுத்தவரை அக்கவுண்டபிலிட்டிதான் முக்கியம்.. இந்த வொர்க்கு அவதான் அக்கவுண்டபில்.. கோட் டெஸ்ட் பண்ணி செக்கின் பண்ண வேண்டியது அவளோட ரெஸ்பான்ஸிபிலிட்டி.. அவ அதை பண்ணல.. அதுதான் எல்லாத்துக்கும் ரூட்காஸ்..!! ஸோ.. நடந்த தப்புக்கு அவ பொறுப்பு ஏத்துக்குறதுதான் சரி.. அதைத்தான் அவளும் இப்போ பண்ணிருக்குறா..!! நீ தேவை இல்லாம உன்னை இன்வால்வ் பண்ணி.. இதைப்போட்டு குழப்பிக்காத.. சரியா..?? அடுத்து என்ன செய்யலாம்னு பேசலாம்.. அதுதான் இப்போ இம்பார்டன்ட்..!!"

"எனக்கு இதுதான் இம்பார்டன்ட் பாலா..!!" அசோக் பிடிவாதமாக சொல்ல, பாலா எரிச்சலானார்.

"இப்போ என்னை என்ன பண்ண சொல்ற..?? அவளை ரிஸைன் பண்ண நான் ஃபோர்ஸ் பண்ணல.. அவளா பண்ணிட்டு போறா.. அதுக்கு நான் என்ன பண்றது..??"

"அவளை கூப்பிட்டு பேசுங்க பாலா.. நடந்த தப்புக்கும் அவளுக்கும் சம்பந்தம் இல்லன்னு மேனேஜ்மன்ட்டை கன்வின்ஸ் பண்ணுங்க.. அவளுக்கு சப்போர்ட்டிவா இருங்க.. ப்ளீஸ்..!!"

"என்னால அது முடியாது அசோக்.. தப்பு பண்ணிட்டு போனவளை திரும்ப கூட்டிட்டு வந்து.. என்னால கெஞ்சிட்டு இருக்க முடியாது..!!"

"ப்ளீஸ் பாலா..!!"

"முடியாது அசோக்.. வேற எதாவது இருந்தா பேசு.. இல்லனா வெளில போ..!!"

பாலா உறுதியான குரலில் மறுத்தார். அவருடைய முகத்தில் ஒரு அதீத எரிச்சல். அசோக் இப்போது கண்களை இடுக்கி அவரை முறைத்தான். ஒரு சில வினாடிகள்..!! அப்புறம் அவசரமாய் தனது செல்போனை பாக்கெட்டில் இருந்து எடுத்தான். படபடவென ஏதோ டைப் செய்தான். பாலா எதுவும் புரியாமல் அவனையே பார்த்தார். 'என்ன பண்ற அசோக்..?' என்று கேட்டார். அசோக் அவருக்கு பதில் சொல்லாமல், டைப் செய்வதிலேயே கவனமாய் இருந்தான். அரை நிமிடத்திற்குள்ளாகவே டைப் செய்து முடித்தான். முடித்ததும் பாலாவை நிமிர்ந்து பார்த்து சொன்னான்.

"உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பிருக்கேன் பாலா.. பாருங்க..!!"

"எ..என்ன மெயில்..??"

பாலா குழப்பத்தில் திளைத்தவராகவே தனக்கு முன்பிருந்த லேப்டாப்பில், தனது மெயில் பாக்ஸ் செக் செய்தார். அசோக் அனுப்பிய மெயிலை திறந்து பார்த்தார். பார்த்ததுமே அவருக்கு விஷயம் புரிந்து போனது. அசோக்கும் தனது வேலையை ராஜினாமா செய்வதாக மெயில் அனுப்பியிருந்தான். பாலா இப்போது உச்சபட்சமாய் ஒரு எரிச்சலுக்கு உள்ளானார்.

"வாட் இஸ் திஸ் அசோக்..??" என்று கோவமாக கேட்டார்.

"ஸாரி பாலா.. எனக்கு வேற வழி தெரியலை..!!"

"அவ செஞ்ச தப்புக்கு அவ ரிஸைன் பண்றா.. நீ எதுக்கு தேவை இல்லாம ரிஸைன் பண்ற..??"

"தப்பு செஞ்சது நான்னு சொல்றேன்.. அதையே நீங்க புரிஞ்சுக்க மாட்டேன்றீங்க..!!"

"அசோக் ப்ளீஸ்.. திஸ் இஸ் நாட் கிட்ஸ் ப்ளே.. வீ ஆர் இன் சீரியஸ் பிசினஸ் ஹியர்..!! ப்ராஜக்ட் க்ரிட்டிக்கலான ஸ்டேஜ்ல இருக்கு.. இந்த ப்ராஜக்ட் பத்தி எல்லாம் தெரிஞ்சவங்க நீங்க ரெண்டு பேருந்தான்.. ஒரே நேரத்துல நீங்க ரெண்டு பேருமே இப்படி ரிஸைன் பண்ணினா..என்ன அர்த்தம்..?? கம்பனிக்கு இதனால பெரிய ப்ராப்ளம் ஆகும் அசோக்.. உன் மேல ஸ்ட்ரிக்ட் ஆக்ஷன் எடுக்க வேண்டி இருக்கும்..!!"

"என்னவேணா செஞ்சுக்கங்க பாலா.. எனக்கு கவலை இல்லை..!!" அலட்சியமாக சொன்னவாறே அசோக் எழுந்து கொண்டான். கதவை திறந்து ஆத்திரமாக அந்த அறையை விட்டு வெளியேறினான்.

அதன்பிறகு ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து..

எலக்ட்ரானிக் சிட்டியிலிருந்து சில்க்போர்ட் செல்லும் சாலையில் ப்ரியா தனது வண்டியில் சென்றுகொண்டிருந்தாள். காலையில் இருந்து கொந்தளித்துக் கொண்டிருந்த அவளது மனம் இப்போது அமைதியடைந்திருந்தது. வேலையை இழந்ததற்காக ஒரு சிறு கவலை கூட அவளிடம் இல்லை. அசோக்கின் நினைவைத்தவிர, மற்றபடி சலனமற்ற மனதுடன் நிதானமாக தனது ஸ்கூட்டியை செலுத்திக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு பின்னால் இருந்து 'கீங்.. கீங்..' என திரும்ப திரும்ப அலறும் ஹார்ன் சத்தத்தை ஆரம்பத்தில் அவள் கவனிக்கவில்லை. அப்புறம் கவனித்ததும், தனது ரியர்வ்யூ மிரரை பார்த்தாள். ஏதோ மின்னல் வெட்டுவது மாதிரி பளிச் பளிச்சென்று ஒளியை சிதறியது கண்ணாடி. ப்ரியாவிற்கு சிலவினாடிகள் எதுவும் புரியவில்லை. அப்புறம் அந்த மின்னல் தீர்ந்து, அவளுக்கு பின்னால் பைக்கில் வருகிற அசோக் தெரிந்தான். தனது இடது கையை உயர்த்திக் காட்டியபடி, ஒரு கையால் பைக்கை செலுத்திக் கொண்டு வந்தான். அவன் உயர்த்தி காட்டிய கையில் அந்த கடிகாரம்.

அவ்வளவுதான்..!! அதைப்பார்த்ததுமே ப்ரியா அப்படியே பூரித்துப் போனாள். வாழ்வில் அதுமாதிரி ஒரு சந்தோஷம் எப்போதும் அவளுடைய மனதை நிறைத்ததில்லை. நெஞ்செல்லாம் பூந்தோட்டமாய் பூத்துக் குலுங்குவது மாதிரி ஒரு உணர்வு அவளுக்கு. படக்கென்று தலையை திருப்பி பார்த்தாள். இப்போது அசோக் ஹெல்மட் கண்ணாடியை உயர்த்திவிட்டு, இவளை பார்த்து புன்னகைத்தான்.

ப்ரியா வண்டியின் வேகத்தை குறைத்து, இடது புறமாய் ஒதுங்கி, சாலையோரமாய் நின்றிருந்த ஒரு மரநிழலில் சரக்கென்று ப்ரேக் அடித்து நின்றாள். அவள் நின்ற அடுத்த நொடியே அவளுக்கு பக்கவாட்டில் அசோக் தனது பைக்குடன் வந்து நின்றான். இருவரும் ஹெல்மட் கழற்றி பைக் விட்டு இறங்கினார்கள். இறங்கியவர்கள் சிறிது நேரம் எதுவும் பேச தோன்றாதவர்களாய், ஒருவர் முகத்தை ஒருவர் ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். இருவர் உதட்டிலுமே மெலிதான ஒரு புன்னகை. அசோக்கின் புன்னகையில் மட்டும் ஒருவித குறும்பு கலந்திருந்தது.

"ஐ லவ் யூ..!!" என்றான் அசோக் திடீரென.

"ஹ்ஹ.. நீ ஒன்னும் சொல்லத்தேவை இல்ல.. எனக்கு தெரியும்..!!" ப்ரியா குறும்புடன் சொன்னாள்.

"ஓ.. அப்புறம் எதுக்கு அன்னைக்கு கழுத்துல கத்தி வச்சு மிரட்டுனியாம்..??" அசோக் அவளை மடக்க,

"அ..அது.. அது.. சும்மா.." ப்ரியா வழிந்தாள்.

"ஹாஹாஹாஹா..!!"

அசோக் அழகாக, வசீகரமாக சிரித்தான். இப்போது ப்ரியா தயங்கி தயங்கி தனது வலது கையை உயர்த்தி, அசோக்கின் கன்னத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டாள். இதமாக வருடினாள். அப்புறம் அவனது இடது கையை பற்றினாள். அந்தக்கையை சுற்றியிருக்கும், கடிகாரத்தை பூரிப்புடன் பார்த்தாள். அவனுடய கைவிரல்களுடன் தனது கைவிரல்களை கோர்த்துக் கொண்டாள். அசோக்கின் முகத்தை ஏறிட்டு பார்த்தாள். அவன் இன்னும் இவளுடைய முகத்தையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

ப்ரியா இப்போது சற்றே தைரியமுற்றவளாய் அவனுடைய கையை மெல்ல உயர்த்தினாள். தனது முகத்துக்கருகே எடுத்து சென்றாள். அசோக்கின் முகத்தை பார்த்துக்கொண்டே.. சிறிது தயக்கத்துடனே.. தன் உதடுகளை குவித்து.. 'இச்ச்...!!' என்று கடிகாரம் அணிந்த அவனுடைய கைக்கு முத்தமிட்டாள். அவளுடைய செய்கைகளை எல்லாம் அமைதியாக ரசித்துக் கொண்டிருந்த அசோக், இப்போது குறும்பாக சொன்னான்.

"இந்த வாட்சை நீ வாங்கிட்டு வந்த அன்னைக்கே இது தெரியாம போச்சு.. இல்லனா அன்னைக்கே வாங்கி கைல கட்டிருந்திருப்பேன்..!!"

"எது தெரியாமப் போச்சு..??"

"வாட்ச்சை கைல கட்டிக்கிட்டா.. அந்த ஹனி லிப்ஸால ஒரு ஸ்வீட் கிஸ் கெடைக்கும்னு..!!" அசோக் சொல்ல, ப்ரியா வெட்கத்தில் முகம் சிவந்து போனாள்.

"ச்சீய்.. போடா..!!"

என்று சிணுங்கியவாறே, மெல்ல அவனுடைய தோளில் சாய்ந்து கொண்டாள். ப்ரியாவின் ஸ்பரிசம் அசோக்கிற்கு இதமாக இருந்தது. அவளுடய தளிர் மேனி பட்டும் படாமல் அவன் மீது உரசியதற்கே, அவனுடைய இதயம் படபடக்க ஆரம்பித்திருந்தது. மனதுக்குள் ஒரு ஆசை எழ, தலையை திருப்பி சுற்றும் முற்றும் பார்த்தான். அவ்வப்போது சீறிப்பறக்கும் வாகனங்களை தவிர வேறு ஆள்நடமாட்டம் ஏதும் இல்லை. தைரியம் பெற்றவனாய், மெல்ல குனிந்து அவளுடைய நெற்றியில் 'இச்..!!' என்று இதழ்கள் பதித்தான்.

ப்ரியா அதை எதிர்பார்த்திருக்கவில்லை. ஷாக் அடித்தது மாதிரி பட்டென அவனிடம் இருந்து விலகிக் கொண்டாள். அவசரப்பட்டு முத்தமிட்டு நெருக்கத்தை இழந்துவிட்டோமே என அசோக் தன்னைத்தானே திட்டிக் கொண்டான். முத்தமிட்டதன் அதிர்ச்சி ஓரிரு வினாடிகள்தான் ப்ரியாவின் முகத்தில் தங்கியிருந்தது. அப்புறம் சிவப்பாய் ஒரு வெட்கம் வந்து அப்பிக்கொண்டது. அசோக்கின் குறும்பு கொப்பளிக்கும் கண்களை நேருக்கு நேர் பார்க்க தடுமாறினாள். அப்புறம் திடீரென ஞாபகம் வந்தவளாய், பேச்சை மாற்றும் விதமாக கேட்டாள்.

"அது சரி.. என்ன.. நீயும் பின்னாடியே கெளம்பி வந்துட்ட..??" ப்ரியா கேட்க, அசோக் குரலில் ஒருவித குறும்பு தொனிக்க சொன்னான்.

"எனக்கும் காலைல இருந்து ஒரே தலைவலி.. அதான் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கலாம்னு.."

"லீவ் போட்டுட்டியா..??"

"இல்ல.. ரிசைன் பண்ணிட்டேன்..!!" அசோக் கூலாக சொல்ல, ப்ரியா அதிர்ந்து போனாள்.

"ஹேய்.. ரிசைன் பண்ணிட்டியா..?? என்னடா சொல்ற..??"

"ஆமாம் ப்ரியா.. பாலாட்ட போய் பேசுனேன்.. 'தப்புலாம் என் மேலதான்.. என் மேல ஆக்ஷன் எடுங்க.. ப்ரியாவோட ரெசிக்னசேஷனை அக்சப்ட் பண்ணாதீங்க..'ன்னு கெஞ்சினேன்..!!"

"ஓ..!! அவர் என்ன சொன்னாரு..??"

"முடியாதுன்னாரு..!! சரி.. ஒன்னுக்கு ரெண்டா வச்சுக்கங்கன்னு.. நானும் பேப்பர் போட்டுட்டு வந்துட்டேன்..!!"

"ஐயோ.. அறிவு இருக்கா உனக்கு..?? ஏன் அப்படி பண்ணின..??"

"வேற என்ன பண்ண சொல்ற..?? சொல்ல சொல்ல கேட்காம நீயும் ரிஸைன் பண்ணிட்டு வந்துட்ட..?? எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை..!!"

"ப்ச்.. அதுக்காக..?? நீ எதுக்கு.."

"நீ இல்லாத இடத்துல நானும் இருக்க மாட்டேன் ப்ரியா..!!"

அசோக் மிக இயல்பாகவே அப்படி சொன்னான். ஆனால் அந்த வார்த்தைகள் ப்ரியாவின் மனதில் அசோக் மீதான காதலை பீறிட்டு கிளம்ப செய்தது. நேற்று இந்த வார்த்தைகளை கோவிந்த் சொன்னபோது, நேத்ராவின் மீது அவளுக்கு ஒரு பொறாமை வந்தது. இன்று தனது காதலனும் அதே வார்த்தைகளை சொல்ல.. சொன்னது மட்டுமில்லாமல் அதை செய்துவிட்டு வேறு வந்து நிற்க.. ப்ரியாவுக்கு அப்போதே அவனை அப்படியே இறுக்கி அணைத்து.. அவனுடைய முகமெல்லாம் முத்தமிட்டு நனைக்கவேண்டும் போலிருந்தது..!! நடுச்சாலையாய் போயிற்றே என்று அந்த உணர்வை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

"இல்ல.. என்னதான் இருந்தாலும்.. நீ செஞ்சது தப்பு..!!" என்று நேற்று நேத்ரா சொன்ன மாதிரியே ப்ரியாவும் சொன்னாள்.

"ஒரு தப்பும் இல்ல..!! இந்த கம்பனி இல்லனா வேற கம்பனி..!! ஆனா.. எந்த கம்பனியா இருந்தாலும்.. நாம ரெண்டு பேரும் ஒண்ணாதான் இன்டர்வ்யூ போறோம்.. ஒண்ணாதான் ஜாயின் பண்றோம்..!! ஓகேவா..??"

"ஹாஹா.. ஓகே..!! ஒரே கம்பனில அவ்வளவு ஈசியா வேலை கெடைக்குமா..??"

"கெடைக்கலைன்னா ஜாயின் பண்ண வேணாம்..!! வேணுன்னா அவங்களுக்கு ஒரு ஆஃபர் கொடுக்கலாம்..!!"

"என்ன ஆஃபர்..??"

"எங்க ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல செலக்ட் பண்ணினா.. சம்பளம் கம்மியா கொடுத்தா போதும்னு..!!

"ஹ்ம்ம்.. நல்லாத்தான் இருக்கு ஆஃபர்..!! ஹாஹா..!!"

ப்ரியா அவ்வாறு சிரித்துக் கொண்டிருக்கும்போதுதான், அசோக்கின் செல்போன் சிணுங்கியது. எடுத்து பார்த்தான். பாலா கால் செய்தார். இவன் கால் பிக்கப் செய்து,

"ஹாய் பாலா..!!" என்றதுமே,

"எங்க இருக்குற..??" அவர் இறுக்கமான குரலில் கேட்டார்.

"இங்க பக்கத்துலதான்..!!" என்றான் அசோக் சன்னமான குரலில்.

"அவ..??"

"அவளும் பக்கத்துலதான்..!!"

"ஹ்ம்ம்..!! சரி.. ரெண்டு பேரும் கெளம்பி வாங்க.. பேசணும்..!!"

"என்ன பேச.." அசோக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே,

"கெளம்பி வாங்கன்னு சொல்றேன்ல..??" பாலா எரிச்சலாக சொல்லிவிட்டு காலை கட் செய்தார்.

"என்ன சொல்றார் பாலா..??" ப்ரியா அசோக்கிடம் கேட்டாள்.



"கெளம்பி வாங்க.. பிரச்னையை பேசி தீர்த்துக்கலாம்னு சொல்றார்..!!"

"என்ன பண்ணலாம்..??"

"இது என்ன கேள்வி.. போய் பேசிப்பாக்கலாம்..!! என்ன சொல்ற..??" அசோக் கேட்க, ப்ரியா ஒரு சில வினாடிகள் யோசித்தாள். பிறகு

"ம்ம்.. ஓகே..!!" என்று சம்மதித்தாள்.

அசோக்கும் ப்ரியாவும் பாலாவை சந்தித்து பேசினார்கள். பாலாவுக்கு இந்த ப்ராஜக்ட்டை நல்லபடியாக முடிக்கவேண்டும் என்று கவலை. அசோக்கும் ப்ரியாவும் இல்லாமல் அது சாத்தியம் இல்லை என்பது அவருக்கு மட்டுமே புரிகிற விஷயம். இருவருடைய ராஜினாமாவையும் திரும்ப பெற்றுக்கொள்ள சொன்னார். க்ளயன்ட்டையும், மேனேஜ்மன்ட்டையும் தானே பேசி சமாளித்துக் கொள்வதாக சொன்னார். அசோக்கையும், ப்ரியாவையும் ஒரு அப்பாலஜி மெயில் அனுப்ப சொன்னார். 'இனிமேயாவது சின்னப்புள்ளைத்தனமா நடந்துக்காம... கொஞ்சம் சீரியஸா நடந்துக்கங்க..' என்று அறிவுரை சொன்னார். 'போய் வேலையை பாருங்க.. போங்க..!!' என்று விரட்டினார்.

"தேங்க்ஸ் பாலா..!!" அசோக் புன்னகையுடன் சொன்னான்.

"சிரிக்காத நீ.. உனக்கு அடுத்த வருஷமும் ப்ரமோஷன் கெடயாது..!!" பாலா வெறுப்பாக சொன்னார்.

"ப்ளீஸ் பாலா.. அப்படி மட்டும் சொலலதீங்க..!!" ப்ரியா இடையில் புகுந்து கெஞ்சலாக சொல்ல,

"அவனுக்கு நீ சிபாரிசா..?? உனக்கு இந்த வருஷ போனஸ் கட்..!!"

"பரவால பாலா.. இட்ஸ் ஓகே ஃபார் அஸ்..!! தேங்க்யூ.. தேங்க்யூ வெரி மச்..!!"

அசோக்கும் ப்ரியாவும் கோரசாக சொல்லிவிட்டு, சந்தோசம் அப்பிய முகத்துடன் அந்த அறையை விட்டு வெளியே வந்தார்கள்.






No comments:

Post a Comment