Thursday, January 21, 2016

யமுனா தாகம் - அத்தியாயம் - 1

"விளையாண்டது போதும் ராகுல்.. வா.. கெளம்பலாம்..." நான் சொன்னதும் ராகுலின் முகம் சற்று சுருங்கியது.

"ஏன் அங்கிள்..?"

"போதுண்டா.. டைமாச்சு.. மம்மி தேடுவாங்க.. வீட்டுக்கு போ..."

ராகுல் பேட்டை தன் தோளில் தூக்கி வைத்துக் கொண்டான். என் கையில் இருந்த பந்தை வாங்கிக்கொண்டான்.

"நீங்களும் வீட்டுக்கு வாங்க அங்கிள்...!! ஒரு காபி சாப்பிட்டு போங்க..!!"

ஐந்து வயது பையன், அந்த மாதிரி பெரிய மனிதன் தோரணையில் சொல்ல, எனக்கு லேசாக சிரிப்பு வந்தது.

"இல்லை.. நான் வரலை.. நீ போ..!!"

"ப்ளீஸ் அங்கிள்.. வாங்க..!! மம்மி எனக்கு புதுசா ஒரு டால் வாங்கி தந்திருக்கா.. அதை உங்ககிட்ட காட்டுறேன்.."



"இல்லைடா.. நான் வரலை... நான் வந்தா உன் மம்மி நைநைன்னு ஏதாவது சொல்லிட்டு இருக்கும்..!! திட்டும்..!!"

"திட்டுமா..? உங்களுக்கும் மம்மிக்கும் பைட்டா..?"

"ஆமாம்..!! பைட்டுதான்..!! நீ போ.. நான் வரலை..!!"

"ப்ளீஸ் அங்கிள்.. எனக்காக வாங்க அங்கிள்.. மம்மிட்ட நீங்க பேசவே வேணாம்..!! நாம நேரா என் ரூமுக்கு போயிடலாம்..!! ப்ளீஸ் அங்கிள்...!! வாங்க.. ப்ளீஸ்....!!"

அவன் பிடிவாதமாய் கெஞ்ச, வேறு வழியில்லாமல் அவனுடன் நடக்க ஆரம்பித்தேன். கிரவுண்டை விட்டு வெளியே வந்து அவன் வீட்டை நோக்கி நடந்தோம். ராகுல் பெரிய மனிதன் போல முன்னால் செல்ல, நான் அவனை பின் தொடர்ந்தேன். அவனுடைய வீட்டை அடைவதற்கு ஒரு ஐந்து நிமிடங்கள் ஆகும். அதற்குள் என்னை பற்றி சொல்லி விடுகிறேன்.

என் பெயர் அசோக். எம்.காம் படித்திருக்கிறேன். தனியார் வங்கியில் உத்தியோகம். கை நிறைய இல்லாவிட்டாலும், டீசன்டான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும் சம்பளம். அப்பா கிடையாது. அம்மா இருக்கிறாள். அக்காவுக்கு இரண்டு வருடங்கள் முன்னால் திருமணம் ஆனது. அம்மா இப்போது எனது திருமணத்துக்காக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறாள். நான்.. இதோ எனக்கு முன்னால் செல்கிறானே ராகுல்.. இவன் அம்மா யமுனாவை காதலித்துக் கொண்டிருக்கிறேன்.

ராகுலுக்கும் அப்பா கிடையாது. இவன் வயிற்றில் இருக்கும்போதே ஆக்சிடண்டில் இறந்துவிட்டார். மண வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே யமுனா விதவையாகிப் போனாள். புகுந்த வீடு கைவிட்டு விட, இப்போது மகனுடன் தனியாக வசிக்கிறாள். ஒரு தனியார் நிறுவனத்தில் கணினி பிரிவில் வேலை பார்க்கிறாள்.

யமுனாவை எனக்கு சின்ன வயதில் இருந்தே தெரியும். எங்கள் வீட்டுக்கு நான்கு வீடுகள் தள்ளிதான் அவள் வீடு. என்னை விட ஐந்து வயது மூத்தவள். சிறுவனாய் இருந்த போது 'அக்கா.. அக்கா..' என்றுதான் அழைப்பேன். இப்போது காதலிக்க ஆரம்பித்த பிறகு பேர் சொல்லித்தான் அழைப்பது.

இளம் வயதில் யமுனாக்கா விதவையாகி விட்டாள் என்று தெரிந்ததும் எனக்கு அவள் மீது ஒரு பரிதாம் வந்தது. புகுந்த வீட்டை விட்டு, மீண்டும் எங்கள் தெருவில் வந்து குடியேறியதும், அவள் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். சோகத்தில் இருக்கும் அவளை சிரிக்க வைக்க, நிறைய முயற்சிகள் செய்வேன். ஏதாவது பொது விஷயங்களை பேசி அவளுடைய மனதை திசை திருப்ப முயல்வேன். யமுனா கொஞ்ச நாட்களிலேயே எல்லாவற்றையும் மறந்து சகஜ நிலைக்கு மாறி விட்டாள். நான்தான் இப்போது சகஜமாக இருக்க முடியாமல் திணறுகிறேன்.

யமுனாவை ஐந்து வயது பையனுக்கு அம்மா என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். மிக இளமையாக இருப்பாள். சந்தன நிறத்தில், கோயில் சிலை மாதிரியான தேகம். கொஞ்சம் பூசினாற்போன்ற உடலமைப்பு. களங்கமில்லாத சந்திரன் போன்ற வட்ட முகம். சற்றே பெரிய, கரிய, கதை பேசும் கண்கள். கூர்மையான மூக்கு, ஆப்பிள் துண்டங்கள் போல சிவந்த இதழ்கள். பெண்மைக்கு இலக்கணமாய் இன்ன பிற அங்கங்கள்.. தேவதை மாதிரி இருப்பாள்.

இந்த நான்கு வருடங்களில்.. எங்கே.. எப்போது ஆரம்பித்தது என்று தெரியவில்லை.. யமுனா மீதான என் காதல்..!! ஆனால் இப்போது என் மனம் எங்கும் அவள்தான் நிறைந்து இருக்கிறாள். வாழ்ந்தால் அவளுடன்தான் வாழ வேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறேன். நான் இன்னும் அவளிடம் உடைத்து சொல்லாவிட்டாலும், என்னுடைய காதல், என் மனதில் இருக்கும் ஆசை, அவளுக்கும் ஜாடைமாடையாக தெரியும்.

நான் சொன்ன மாதிரி ஐந்தே நிமிடத்தில் வீடு வந்தது. காலிங் பெல்லை அழுத்தினேன். யமுனாதான் வந்து கதவு திறந்தாள். என்னை நிமிர்ந்து பார்க்காமல், தன் மகனை முறைத்து பார்த்து கோபமாக சொன்னாள்.

"எங்கடா போய் சுத்திட்டு வர்ற..? காபி போடுறதுக்குள்ள ஆளை காணோம்...?"

"அசோக் அங்கிளோட கிரிக்கெட் ஆட போனேன் மம்மி...!!" அவன் பரிதாபமான குரலில் சொல்ல, அவள் இப்போது என்னை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள்.

"ஓஹோ...!! நீதான் இவனை கூட்டிட்டு போய் கெடுக்குறதா..?"

"கிரிக்கெட் விளையாடுறது.. கெடுக்குறதா..? என்ன பேசுற நீ..?" என்றேன் நானும் சற்று கோபமாய்.

"ஆமாம்.. கெடுக்குறதுதான்..!! ஹோம் வொர்க் பண்ற பையனை.. கூட்டிட்டு போய் கிரிக்கெட் ஆடுறது கெடுக்குறதுதான்...!!"

"சரி விடு..!! உன்கிட்ட வாதாட என்னால முடியாது..!!" நான் அடங்கிப் பேசவும், அவள் தன் மகனிடம் திரும்பி சொன்னாள்.

"போடா..!! போய் ஹோம் வொர்க் பண்ணு..!! போ..!!"

"மம்மி.. அந்த டாலை அசோக் அங்கிள்ட்ட காட்டிட்டு.. அப்புறமா..."

"அதெல்லாம் ஒன்னும் வேணாம்..!! போ..!! போன்னு சொல்றேன்ல..?" 

அவள் கொஞ்சம் கடுமையான குரலில் கண்டிப்பாக சொல்ல, ராகுலுக்கு முகம் சுருங்கிவிட்டது. என்னை திரும்பி பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தான். அப்புறம் திரும்பி வீட்டுக்குள் நடந்தான். நான் யமுனாவை ஒரு முறை எரிச்சலாக பார்த்தேன். அப்புறம் அந்த எரிச்சலுடனே சொன்னேன்.

"சரி யமுனா..!! நானும் கெளம்புறேன்..!!" சொல்லிவிட்டு நான் திரும்பி நடக்க, அவள் என்னை அழைத்தாள்.

"எங்க போற..? இரு..!! காபி போடுறேன்.. சாப்பிட்டு போ...!!"

"அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. நான் வர்றேன்..."

"ப்ச்...!! சொல்றேன்ல...? வா.. ஒரு காபி சாப்பிட்டு போகலாம்..."

அவள் இப்போது சற்றே கோபத்துடன் சொன்னாள். நான் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுவிட்டு வீட்டுக்குள் நுழைந்தேன். சோபாவில் அமர்ந்து கொண்டேன். ஓரிரு வினாடிகள் என்னையே கூர்மையாக பார்த்த யமுனா, பின்பு கிச்சனுக்கு போனாள். ஒரு இரண்டு நிமிடத்தில் காபி கப்புடன் வந்தாள்.

நான் காபியை வாங்கி உறிஞ்ச, அவள் எனக்கு எதிரே கிடந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டாள். கண்களை இடுக்கி என் முகத்தையே ஒரு அர்த்தமுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன். யமுனாவே மெல்ல ஆரம்பித்தாள்.

"நேத்து உன் அம்மாவை பாத்தேன்.."

"ம்ம்..!! என்ன சொன்னா..?"

"உனக்கு.. திமிர்த்தனம் ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சுன்னு சொன்னா.."

"அப்படி என்ன திமிர்த்தனம் பண்றேனாம்...?"

"அந்த கும்பகோணம் பொண்ணை வேணாம்னு சொல்லிட்டியாம்..?"

"ஆமாம்..!!"

"ஏன்..?"

"என்ன கேள்வி இது..? புடிக்கலை..!! வேணாம்னு சொல்லிட்டேன்.."

"ஏன் புடிக்கலை..? என்ன கொறைச்சல் அந்த பொண்ணுக்கு...? நான் போட்டோ பாத்தேன்.. மகாலட்சுமி மாதிரி அம்சமா இருக்கா...!!"

"அழகா இருந்தா போதுமா யமுனா..? மனசுக்கு புடிக்க வேணாமா...?"

"சும்மா.. பேசாம பழகாம எப்படி புடிக்கும்..? அந்த பொண்ணுட்ட பேசி பாத்துருக்கலாம்ல..? நாலு வார்த்தை பேசுனாத்தான.. அவ மனசுல இருக்குறது உனக்கு புரியும்.. உன் மனசுல இருக்குறது அவளுக்கு புரியும்..?"

அவள் அப்படி சொன்னதும் நான் ஓரிரு வினாடிகள் அமைதியானேன். பின்பு கம்மலான குரலில் சொன்னேன்.

"ஆமாமாம்..!! ஏற்கனவே பேசி பழகுனவங்களுக்கே ஒன்னும் புரியலையாம்..!! இதுல புதுசா வர்றவளுக்கு என்ன புரியப் போகுது...?"

நான் அப்படி சொன்னதும், யமுனா சூடானாள். சீறினாள்.

"என்ன புரியலை..? எல்லாம் புரியுது எனக்கு..!!"

"புரிஞ்சு என்ன பிரோயஜனம்..? உருப்படியா ஒன்னும் நடக்கலையே..?"

"ஆமாமாம்..!! நீ நடக்கவே நடக்காததுக்குலாம் ஆசைப்படுவே..? உடனே அது நடந்துடனும்..!!"

"எது நடக்காதது...? சொல்லு யமுனா...!! எது நடக்காதது...? எல்லாம் நடக்கும்.. மனசு இருந்தா போதும்..!!"

நான் அப்படி சொன்னதும், யமுனா அமைதியாக என்னையே முறைத்து பார்த்தாள். கோபத்தில் அனல் மூச்சு விட்டாள். பின்பு பற்களை கடித்துக் கொண்டு ஆவேசமான குரலில் சொன்னாள்.

"உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்காடா..? உனக்கென்ன வேற பொண்ணா கிடைக்காது..? உன் வயசென்ன.. என் வயசென்ன..?"



"வயசுக்கும் லவ்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை யமுனா...!! அப்படி என்ன நீ என்னை விட பெரிய வயசானவ..? சும்மா அஞ்சு வயசு அதிகம்..!! டெண்டுல்கர் தெரியுமா..? அவருக்கும், அவர் வொய்ப்புக்கும்.."

"நிறுத்து அசோக்..!! அந்த ஆளு ஒருத்தரு.. வயசுல மூத்த பொண்ணை கல்யாணம் பண்ணாலும் பண்ணினாரு.. ஆளாளுக்கு அவரையே சொல்வீங்க..!!"

"ஏன்..? சொன்னா என்ன தப்பு..? அவங்க கல்யாணம் பண்ணிக்கலையா..? கொழந்தை பெத்துக்கலையா..? சந்தோஷமா வாழலையா..?"

"புரியாம பேசாத அசோக்..!! அவரு ஒன்னும் அஞ்சு வயசு பையனோட, ஒரு விதவை பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலை.."

"யமுனா..!! இதுக்கும் என்னால ஒரு கிரிக்கெட் ப்ளேயரையே உதாரணம் காட்ட முடியும்..!! சும்மா ஏதாவது சொல்லாத..!! இதுலாம் ஊர்ல உலகத்துல நடக்காதது இல்லை யமுனா..!! உனக்குத்தான் ஒத்துக்க மனசு இல்லை.."

"ஆமாம்..!! எனக்குத்தான் மனசு இல்லை..!! போதுமா..?”

சொல்லிவிட்டு யமுனா பட்டென்று அமைதியானாள். ஓரிரு வினாடிகள்.. பின்பு லேசாக தலையை அசைத்தவாறு தொடர்ந்தாள்.

"நீ... நீ... பொறந்ததும் உன்னை இந்தக்கைல தூக்கி கொஞ்சிருக்கேண்டா..!! எத்தனையோ நாளு உன்னை தொட்டில்ல போட்டு ஆட்டி.. தூங்க வச்சிருக்கேன்..!! இப்போ உன்னோட ஜோடி போட்டுக்கிட்டு கல்யாண மேடைல வந்து நிக்க சொல்றியா..? அதுவும் அஞ்சு வயசு புள்ளையோட.."

"நின்னா என்ன தப்பு..? காலம் புல்லா நீ இப்படியே இருக்கப் போறியா..? எதோ உன் கெட்ட நேரம், சின்ன வயசிலேயே புருஷன் உன்னை விட்டு போயிட்டாரு.. அதுக்காக இப்படியே காலத்தை கழிச்சுடலாம்னு பாக்குறியா..? ராகுலை கொஞ்சம் நெனச்சு பாத்தியா..? இங்க பாரு யமுனா..!! நான் உனக்கு நல்ல புருஷனா இருப்பேன்.. உன்னை ராணி மாதிரி பாத்துக்குறேன்.. ராகுலுக்கு அப்பா இல்லைன்ற குறை இருக்காது..!! என்ன சொல்ற..? கொஞ்சம் நிதானமா யோசி யமுனா..!!"

யமுனா கண்களாலேயே எரித்து விடுவது போல, என்னையே சிறிது நேரம் பார்த்தாள். பின்பு தீர்க்கமாக சொன்னாள்.

"இங்க பாரு அசோக்..!! நீ நெனைக்கிறது இந்த ஜென்மத்துல நடக்காது..!! பேசாம இதெல்லாம் மறந்துட்டு அந்த கும்பகோணம் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ..!! அதான் உனக்கு நல்லது..!! அவளை விட நல்ல பொண்ணு உனக்கு கெடைக்க மாட்டா..!!"

அவள் சொன்னதும், நான் அவள் கண்களையே கொஞ்ச நேரம் அமைதியாக பார்த்தேன். பின்பு லேசாக தலையை அசைத்து, ஒரு பெருமூச்சு விட்டபடி சோபாவில் இருந்து எழுந்து கொண்டேன். காபி கப்பை டேபிளில் வைத்து விட்டு சொன்னேன்.

"நான் கெளம்புறேன் யமுனா..!!"

அவளும் எழுந்து கொண்டாள்.

"இரு..!! பேசிட்டு இருக்குறப்போ.. இப்படி பாதியில எழுந்து போனா என்ன அர்த்தம்..?" என்றாள்.

"ம்ம்ம்...? உனக்கு பேசி புரிய வைக்க முடியாதுன்னு அர்த்தம்...!!" என்று நான் கோபமாக சொன்னேன்.

"என்ன புரியலை எனக்கு..? சொல்லு அசோக்.. என்ன புரியலை..?" அவளும் கோபமாகவே கேட்டாள்.

"உனக்கு ஒரு மண்ணும் புரியலை..!! நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன்னு புரியலை..!! ராகுல் மேல எவ்வளவு ப்ரியம் வச்சிருக்கேன்னு புரியலை..!! நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டா.. நாம எவ்வளவு சந்தோஷமா இருப்போம்னு புரியலை..!!"

"ஓஹோ...!! அப்படி என்ன பொல்லா…த லவ்வு என் மேல..? அப்படி என்ன பெருசா எங்கிட்ட புடிச்சிருக்கு...? கொஞ்சம் வெளக்கமா சொல்றியா..? நானும் தெரிஞ்சுக்குறேன்..!!" 

அவள் இப்போது எனது காதலையே கேலி செய்வது போல சொன்னாள். அவளுடைய கிண்டல் வார்த்தைகள் என்னை உஷ்ணமாக்கின. கோபத்தை அடக்கிக்கொண்டு சொன்னேன்.

"வேணாம் யமுனா..!! அப்படிலாம் பேசாத..!!"

"என்ன வேணாம்..? கேக்குறன்ல..? சொல்லு..!!"

"போதும் யமுனா..!! ப்ளீஸ்... வேணாம்..!!" 

"லவ் பண்றேன்னு சொல்றேல..? அப்படி என்ன பெருசா என்னை லவ் பண்றேன்னு எனக்கு தெரியனும்.. சொல்லு...!!"

எனக்குள் கோபம் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டு இருப்பதை அறியாமல் அவள் என்னை சீண்டினாள். நான் அவள் முகத்தை உற்றுப் பார்த்தபடி சொன்னேன்.

"உனக்கு புரியாது..!!"

"சொல்லு..!! புரிஞ்சிக்கிறேன்..!!" அவள் பிடிவாதமாக பட்டென்று சொன்னாள்.

நான் ஒரு இரண்டு வினாடிகள்தான் யோசித்திருப்பேன். பின்பு யமுனாவை பட்டென்று இழுத்து, அவளுடைய உதடுகளில் என் உதடுகளை பொருத்திக் கொண்டேன். வெறித்தனமாக முத்தமிட்டேன். அவளுடைய கன்னம் இரண்டும் என் கைகளுக்குள். அவளுடைய மாதுளை இதழ்கள் இரண்டும் என் உதடுகளுக்குள். 

யமுனா திணறிப் போனாள். திமிறினாள். என் மார்பில் கைவைத்து, என்னை தள்ளிவிட முயன்றாள். நான் பிடிவாதமாக இருந்தேன். கவ்விய உதடுகளை விடவே இல்லை. சுவைத்துக் கொண்டே இருந்தேன். திமிறிய யமுனாவும் பின் கொஞ்சம் கொஞ்சமாக தன் முயற்சியை கைவிட்டாள். என் சட்டையை இறுகப் பற்றிக் கொண்டு, நான் முத்தமிட்டு முடிக்கும் வரை அமைதியாக நின்றாள்.

யமுனாவின் திமிறல் நின்ற சில நொடிகளிலேயே நான் அவளுடைய உதடுகளை விடுவித்தேன். இத்தனை நேரம் மூடியிருந்த கண்களை திறந்து அவளை பார்த்தேன். நான் கண்களை திறந்த பிறகுதான், அவளும் இமைகளை பிரித்தாள். அதிர்ச்சியாய், நம்பமுடியாமல் என்னை பார்த்தாள். நான் மெல்லிய குரலில் சொன்னேன்.

"இப்போ புரியுதா...? நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன்னு...?"

அவ்வளவுதான்...!! யமுனாவுக்கு உதடுகள் படபடவென துடிக்க ஆரம்பித்தன. துடித்த உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டாள். அவளுடைய மூக்கு லேசாக விசும்பியது. அவளுடைய கண்களில் இருந்து பொல பொலவென கண்ணீர் வழிந்து ஓட ஆரம்பித்தது. கண்களில் நீர் தளும்ப கொஞ்ச நேரம் என்னையே பார்த்தவள், பின்பு பளாரென்று என் கன்னத்தில் ஒரு அறை விட்டாள். வலியில் சுர்ரென்று எரிந்த கன்னத்தை, நான் ஒரு கையால் பிடித்துக் கொண்டேன். ஓரிரு வினாடிகள் என்னை மேலும், கீழும் பார்த்த யமுனா, பின்னர் அழுதுகொண்டே வீட்டுக்குள் ஓடினாள். 

அவள் உள்ளே செல்லவும், ராகுல் ஹாலுக்குள் நுழையவும் சரியாக இருந்தது. அழுதுகொண்டு ஓடும் அம்மாவையே திரும்பி திரும்பி பார்த்தவாறு என்னிடம் வந்தான். என்னை நிமிர்ந்து பார்த்து குழப்பமான குரலில் கேட்டான்.

"ஏன் அங்கிள் மம்மி அழுதுட்டு போறா..?"



நான் பட்டென்று மண்டியிட்டு அவனை என் மார்போடு அணைத்துக் கொண்டேன்.


"ஒன்னும் இல்லைடா..!! ஒன்னும் இல்லை..!!"

"மம்மிட்ட பைட் பண்ணாதீங்க அங்கிள்.!! எனக்கு உங்களையும் புடிக்கும்.. மம்மியையும் புடிக்கும்.."

"இல்லைடா..!! பைட் பண்ணலை..!! பைட் பண்ணலை..!!"

சொல்லிவிட்டு நான் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டேன்.



No comments:

Post a Comment