Tuesday, August 18, 2015

மனசுக்குள் மான்சி - அத்தியாயம் - 11

ஆனால் ரஞ்சனா அமைதியாக வந்தாள்,, வசந்தி அவள் கையை பற்றி “ என்னாச்சு ரஞ்சனா,, அவனோட துரோகத்தை நினைச்சு கலங்காதே,, அடுத்து என்ன செய்றதுன்னு தைரியமா முடிவு பண்ணு,, உன்கூட நாங்க இருக்கோம் ” என்று தைரியம் கூறினாள் வசந்தி

ரஞ்சனாவிடம் எந்த பதிலும் இல்லாது போக “ ரஞ்சனா அதையே நெனைக்காதே,, நான்கூட இவரு மொதல்ல சொன்னப்ப ரொம்ப கோபப்பட்டேன்,, ஆனா இப்போ வேற வழியில்லை,, உன்னோட பிற்கால வாழ்க்கை பாதிக்காமல் இருக்கனும்னா இந்த குழந்தை உனக்கு வேண்டாம்,, என்கூட வா டாக்டரை பார்க்கலாம்” என்றாள் வசந்தி


அதுவரை அமைதியாக இருந்த ரஞ்சனா பட்டென்று நிமிர்ந்து வசந்தியை பார்த்தாள் “ வேண்டாம் மேடம் இந்த அனாதைக்கு ஒரு துணையா இருக்கட்டும்,, இனிமேல் எனக்கு பிற்காலம் என் வயிற்றில் இருக்கும் குழந்தைதான்,, உங்ககிட்ட நான் கேட்கும் கடைசி உதவி என்னன்னா,, இந்த வீட்டிலேயே எனக்கு தங்க அனுமதி வேனும்,, அன்னம்மா கூட விவசாயத்துக்கு என்னால முடிஞ்ச உதவியை செய்துகிட்டு இப்படியே இருந்துடுறேன்” என்று கண்ணீருடன் கிருபா வசந்தி இருவரையும் பார்த்து கேட்டாள்

வசந்தி,, ரஞ்சனாவை இழுத்து தன் தோளில் சாய்த்துக்கொண்டு “ உனக்கு எவ்வளவு நாள் இருக்கனும்னு தோனுதோ அவ்வளவு நாள் இரு ரஞ்சனா,, உன்னை யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க” என்று ஆறுதல் கூறினாள்
மூவரும் வீட்டுக்கு திரும்பி வரும்போது வசந்தி கர்ப்பிணி எப்படியிருக்க வேண்டும் என்று தனக்கு தெரிந்த அறிவுரைகளை வழங்கினாள்,, எல்லாவற்றுக்கும் மனதில் குற்றவுணர்வோடு தலையசைத்தபடி வந்தாள் ரஞ்சனா

அங்கிருந்து கிளம்பும்போது கிருபா ரஞ்சனாவை பார்த்து தலையசைத்து விடைபெற,, வசந்தி நெடுநாள் பழகிய ஒரு தோழியை பிரிவது போல முகம் வாடினாள்

நாட்கள் செல்லச்செல்ல ரஞ்சனாவின் கர்ப்பம் அன்னம்மாவுக்கு தெரிய வந்தது,, ஆனாலும் சின்னய்யா சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு அதைப்பற்றி ரஞ்சனாவிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை, ஒரு தாயைப்போல ரஞ்சனாவை பார்த்துக்கொண்டார்

அதன்பிறகு எப்போதாவது நேரம் கிடைக்கும் போது கிருபா மட்டும் பார்த்துவிட்டு போவான்,, திடீரென்று வசந்தியின் உடல் மெலிவும் சோர்வும் கிருபாவிற் கவலையை தர,, மனைவியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு போவதும், நேரம் கிடைக்கும் போது ரஞ்சனாவை வந்து பார்பதுமாக இருந்தான் கிருபா

ஒருமுறை வரும்போது அவசரத்துக்கு தேவைப்படும் என்று ஒரு செல்போனை எடுத்துவந்து ரஞ்சனாவிடம் கொடுத்தான்,, வசந்தி சத்யனை வயிற்றில் சுமந்தபோது என்னென்ன கேட்டாள் என்று ஞாபகப்படுத்தி அதையெல்லாம் வாங்கிக்கொண்டு போய் ரஞ்சனாவுக்கு கொடுத்தான்,,

ஆனால் ரஞ்சனா ஒன்றைக்கூட தொடாமல் வாந்தி மயக்கம் என்று படுத்தே கிடந்தாள்,, அன்னம்மாவுடன் இரண்டு முறை மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டு வந்தவள், அடுத்த முறை வரும்போது புருஷனை கூட்டிக்கொண்டு வாம்மா என்று டாக்டர் சொன்னதும் மருத்துவமனைக்கு போவதை அடியோடு நிறுத்திக்கொண்டாள்

ஆறாவது மாதம் தடுப்பூசி போடவேண்டும் என்று அன்னம்மா மருத்துவமனைக்கு கூப்பிட்டபோது ரஞ்சனா வரமறுத்துவிட,, அன்று மாலை வந்த கிருபாவிடம் அன்னம்மா நடந்தவற்றை கூறினார்

அதை கேட்டதும் கிருபாவுக்கு கோபம் வந்தது,, வேகமாய் படுக்கையறைக்குள் நுழைந்தான்,, கிழிந்த நாராய் கட்டிலில் கிடந்தவளை பார்த்ததும் வந்த கோபம் பறந்துவிட “ என்ன பண்ணுது ரஞ்சனா? ஏன் ஆஸ்பிட்டல் போகாம இருக்க?” என்று அன்பாக கேட்டான்

அவனை பார்த்ததும் மெதுவாக படுக்கையில் கையூன்றி எழுந்த ரஞ்சனா “ விடுங்க சார் எனக்கு ஆஸ்பிட்டல் போற அளவுக்கு ஒன்னும் இல்லை” என்றாள்

“ உனக்கு ஒன்னுமில்லை தான் ஆனா வயித்துல இருக்குற குழந்தைக்கு தேவையான சக்தியை கொடுக்க தடுப்பூசி போட்டே ஆகனும் ரஞ்சனா,, எழுந்து டிரஸ் மாத்திகிட்டு வா என் கார்லயே கூட்டிட்டு போய் வந்துர்றேன்” என்றான் கிருபா

“ வேண்டாம் சார்,, நான் இன்னொரு நாளைக்கு போய்க்கிறேன்” என்று அவன் பார்வையை தவிர்த்து சுவற்றை பார்த்தபடி பேசினாள்

“ நீ எதுக்காக ஆஸ்பிட்டல் போகலைன்னு எனக்கு தெரியும்,, அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் வா ரஞ்சனா” என்று பிடிவாதமாக கூறினான் கிருபா

அவள் அமைதியாக இருந்தாலும் உடல் குலுங்குவதை வைத்து அவள் அழுகிறாள் என்று யூகித்த கிருபா “ இப்போ எதுக்காக அழற ரஞ்சனா,, மொதல்ல ஆஸ்பிட்டல் கிளம்பு,, நான் வெளியே வெயிட் பண்றேன்” என்று கூறிவிட்டு அறையிலிருந்து வெளியேறினான்


கிருபா போனதும் வெகுநேரம் அழுத ரஞ்சனா வெளியே கிருபா காத்திருக்கும் ஞாபகம் வர எழுந்து புடவையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தாள்
அவளை பார்த்ததும் முகம் மலர “ ரெடியாயிட்டியா,, பழைய மருந்து சீட்டு எல்லாம் எடுத்துக்கிட்டயா ரஞ்சனா” என்றான்

எடுத்துக்கொண்டேன் என்று ரஞ்சனா தலையசைக்க,, “ அப்போ வா போகலாம்” என்று முன்னே போய் காரின் முன்புற கதவை திறந்து விட ரஞ்சனா ஏறியமர்ந்து கொண்டாள்

அந்த மகப்பேறு மருத்துவமனையில் நிறைய பெண்கள் தங்களின் பெரிய வயிற்றை சுமந்தபடி பக்கத்தில் இருந்த கணவனிடம் பேசிக்கொண்டும் தோளில் சாய்ந்துகொண்டும் இருக்க,, இவர்கள் இருவர் மட்டும் அடுத்தடுத்த சேரில் அமர்ந்திருந்தாலும் எதுவும் பேசிக்கொள்ளாமல் இருந்தனர்

நர்ஸ் ரஞ்சனாவின் பெயரைச்சொல்லி அழைக்க “ வா ரஞ்சனா” என்று கூறி கிருபா எழுந்துகொண்டான்,,

இருவரும் உள்ளே போனதும் ரஞ்சனாவை புன்னகையுடன் பார்த்த அந்த பெண் மருத்துவர் கிருபாவிடம் “ நீங்கதான் ரஞ்சனாவோட ஹஸ்பண்ட்டா?’ என்று கேட்க

அவர் அப்படி கேட்டதும் ரஞ்சனா உடல் கூனிக்குறுக,, கிருபா எந்த தயக்கமின்றி “ ஆமாம் டாக்டர்” என்றான்

அவன் அப்படி கூறியதும் விதிர்த்துப் போய் திகைப்புடன் ரஞ்சனா அவனை நிமிர்ந்து பார்க்க,, கிருபா அவளைப்பார்த்து புன்னகைத்து ‘அமைதியாக இரு,, என்பதுபோல் கையைப் பற்றிக்கொண்டான்

அதன்பிறகு ரஞ்சனாவிற்க்கு மருத்துவ பரிசோதனைகள் முடிந்து,, சில பாரங்களில் கிருபாவிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டனர் அவள் மிகுந்த பலவீனமாக இருப்பதால் கவனமுடன் பார்த்துக்கொள்ளுமாறு கிருபாவிடம் சொல்லி அனுப்பி வைத்தார்கள்

இருவரும் திரும்பி காரில் வரும்போது ரஞ்சனா மறந்தும் கூட கிருபாவின் பக்கம் திரும்பாமல் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டு வந்தாள்,, ஆனால் அடிக்கடி கண்களை துடைத்துக்கொண்டே வர அவள் அழுகிறாள் என்று கிருபாவுக்கு புரிந்தது


“ என்ன ரஞ்சனா நான் உன்னோட புருஷன் சொன்னதை நினைச்சு அழுகிறாயா?” என்று கேட்டான்

அவள் எதுவும் பேசாமல் இருக்க,, கடந்து சென்ற ஒரு வாகனத்துக்கு வழிவிட்ட படி “ இதோ பார் ரஞ்சனா நான் தப்பான எண்ணத்தில் அப்படி சொல்லலை இதுவும் ஒரு உதவிதான்,, விபத்து நடந்து ஆபத்தில் இருக்கும் ஒருத்தருக்கு நாம எந்த உறவும் இல்லேன்னா கூட ரத்தம் கொடுத்து உதவுறோமே அதுபோல தான் இதுவும்,, அதனால மனசைப் போட்டு குழப்பிக்காமல் நிம்மதியா இரும்மா” என்றான் அன்பான குரலில்

அவன் குரலில் இருந்த அன்பா,, அல்லது அவன் பேச்சில் இருந்த யதார்த்தமோ,, ரஞ்சனாவின் மனதுக்கு உண்மையாகவே நிம்மதியை தந்தது,, முகத்தை புறங்கையால் துடைத்துக்கொண்டு “ நன்றி சார்” என்றாள்

ஆனால் அந்த நன்றியை ஏற்றுக்கொண்ட பாவனை கிருபாவின் முகத்தில் இல்லை,, முகம் கடுமையாக இருக்க, அந்த கடுமையை காரின் ஓட்டத்தில் கான்பித்தான்

‘ இப்போ என்ன சொன்னோம்னு இவர் முகம் இப்படியிருக்கு என்று எண்ணி குழம்பியபடி “ என்னாச்சு சார்” என்றாள் லேசான உதறலோடு

வெடுக்கென்று திரும்பி அவளைப்பார்த்து “ ம் இனிமேல் என்னை சார்னு கூப்பிடாதே,, அங்க உன் புருஷன்னு கையெழுத்து போட்டுட்டு வந்திருக்கேன்,, இப்போ நீ என்னை சார்னு கூப்பிட்டா வெளங்கும்” என்று குரலில் கடுமையை கலந்து பேசினான்

‘ஓ இதுதான் கோபமா’ என்று நினைத்து “ சரி இனிமேல் கூப்பிடலை” என்றவளுக்கு ‘ ஆனா ஏன் கூப்பிடக்கூடாது’ என்று தோன்றினாலும் அவனிடம் கேட்கவில்லை

இப்போது கிருபாவின் முகம் இயல்புக்கு மாற “ ரஞ்சனா நீ ரொம்ப வீக்கா இருக்கியாம் டாக்டர் கொடுத்த மருந்தை ஒழுங்கா சாப்பிடு,, ஏற்கனவே அங்க வசந்திக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போயிடுது,, இதுல நீவேற எதையாவது இழுத்து வச்சிக்காத,, என்னால அடிக்கடி ஓடியார முடியாது,, அன்னம்மாவை கூட்டிக்கிட்டு அப்பப்போ ஆஸ்பிட்டல் போய்ப்பார்” என்று உரிமையோடு கிருபா சொல்லிகொண்டு வர..

ஏனோ ரஞ்சனாவுக்கு அந்த உரிமை வரண்ட மனதுக்கு இதமாக இருந்தாலும்,, வசந்திக்கு உடம்பு சரியில்லை என்றதும் “ ஏன் மேடத்துக்கு என்னாச்சு,, டாக்டரை பார்த்தீங்களா?” என்று பதட்டமாக விசாரித்தாள்

உதட்டைப் பிதுக்கிய கிருபா “ என்னாச்சுன்னு தெரியலை,, அடிக்கடி வாந்தி எடுக்குற,, சாப்பாடே எடுத்துக்கலை,, எல்லா டெஸ்ட்டும் எடுத்திருக்காங்க,, நாளை காலையில ரிசல்ட் சொல்லுவாங்க” என்று கிருபா வருத்தமாக கூறினான்

“ ரிசல்ட் வந்ததும் மேடத்துக்கு என்ன ப்ராப்ளம்னு எனக்கு சொல்லுங்க,, ஆனா அவங்களோட நல்ல மனசுக்கு எதுவுமே வராது” என்று அவனுக்கு ஆறுதல் கூறினாள்

அதன்பிறகு இருவரும் எதுவும் பேசிக்கொள்ள வில்லை,, வீடு வந்ததும் ரஞ்சனா இறங்கிக்கொள்ள ,, “ மருந்துகளை மறக்காமல் சாப்பிடு ரஞ்சனா” என்று மறுபடியும் ஒருமுறை ஞாபகப்படுத்திவிட்டு கிளம்பினான் கிருபா
மறுநாள் காலை கிருபாவின் போனுக்காக காத்திருந்தாள் ரஞ்சனா,, மதியம் ஒரு மணியாகியும் அவன் போன் செய்யவில்லை என்றதும் இவளே அவனுக்கு போன் செய்தாள்

ஆனால் கிருபா எடுக்கவில்லை,, ரஞ்சனாவை பதட்டம் வந்து தொற்றிக்கொள்ள,, கடவுளே வசந்தி மேடத்துக்கு எந்த நோயும் இருக்ககூடாது,, அவங்க நூறு வருஷம் கிருபா சார்கூட நல்லபடியா வாழனும் என்று மனதுக்குள் பிராத்தனை செய்தபடி மறுபடியும் கிருபாவுக்கு கால் செய்தாள் 



இந்த முறை கிருபா இரண்டாவது ரிங்கிலேயே எடுத்துவிட்டான் “ ம் சொல்லு ரஞ்சனா” என்ற அவன் குரலிலேயே ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என்று உறுதியாகிவிட,, பயத்துடன் “ மேடத்துக்கு என்ன சார் ஆச்சு,, நல்லாருக்காங்க தானே” என்று கவலையுடன் கேட்டாள்

“ மேடம் நம்மளை விட்டுட்டு சீக்கிரமா போய்ச்சேரப்போறா,, அவ்வளவுதான் என் வசந்தியோட வாழ்க்கை முடிஞ்சுபோச்சு ரஞ்சனா” என்று சொல்லிவிட்டு கிருபா ஓவென்று அலறி கலங்கி அழுதான்

ரஞ்சனாவுக்கு ஒன்றுமே புரியவில்லை,, கையில் இருந்த போன் நடுக்கத்தால் விழுந்துவிடும் போலிருக்க, அழுத்தமாக பற்றிக்கொண்டு “ என்ன சார் சொல்றீங்க,, எனக்கு ரொம்ப பயமா இருக்கே,, நான் அங்கே வரவா?” என்று ரஞ்சனா கேட்டாள்

“ வேண்டாம் ரஞ்சனா நீ இருக்கும் நிலையில வரவேண்டாம்.. நான் ரெண்டுநாள் கழிச்சு வர்றேன்,, வந்து என்னன்னு சொல்றேன்” என்று கூறிவிட்டு போன் காலை கட் செய்தான் கிருபா

ரஞ்சனா அந்த இரண்டு நாட்களும் கிருபா வசந்திக்காக கண்ணீரில் கறைந்தாள்,, வசந்திக்கு எதுவும் ஆகக்கூடாது கடவுளே என்று ஜெபம் போல அவள் மனது சொல்லிகொண்டு இருந்தது

அன்று மாலை தனது ஆறுமாத வயிற்றை தூக்கிக்கொண்டு அன்னம்மாவுக்கு வயலில் உதவி செய்துகொண்டு இருந்தாள்,, தூரத்தில் கிருபாவின் கார் வருவது தெரியாமல் அன்னம்மாவின் சிறுவயது கதையை கேட்டபடி வரப்பில் அமர்ந்து உளுந்தங்காய்களை பறித்துக்கொண்டு இருந்தால் ரஞ்சனா

காரை நிறுத்திய கிருபா வீடு பூட்டியிருப்பதை பார்த்துவிட்டு வயலுக்கு வந்தான்,, கொளுத்தும் வெயிலில் தலையில் துணியால் முக்காடிட்டுக் கொண்டு வரப்பில் அமர்ந்து வேலை செய்த ரஞ்சனாவை பார்த்ததும் வேகமாக அருகில் வந்தான்

கிருபா வரும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்த ரஞ்சனா “ வாங்க சார்” என்றாள்

“ நான் வர்றது இருக்கட்டும், நீ ஏன் இப்படி வெயில்ல உட்கார்ந்து வேலை செய்ற,, உன்னை யாரு இதெல்லாம் பார்க்கச் சொன்னது” என்று கோபமாய் கத்தியவன் குனிந்து அவள் அக்குளில் கைவிட்டு பலமாக பற்றி ஒரே கையால் அவளை தூக்கி நிறுத்தினான்

அவனின் கோபம் ரஞ்சனா இதுவரை பார்த்தறியாதது,, அதிர்ச்சியுடன் அவனையே பார்த்தாள்,, அப்போதுதான் அவளுக்கு புரிந்தது கிருபா ரொம்பவே மாறியிருந்தான்,, எப்போதும் மழமழவென்று இருக்கும் தாடையில் மூன்றுநாள் ரோம வளர்ச்சி,, பளிச்சென்று சிரிக்கும் கண்கள் ஜீவனற்று சுற்றிலும் கருவளையத்துடன் இருந்தது,, நிறைய சிகரெட் பிடித்ததற்கான அடையாளமாக உதடுகள் கறுத்துப் போயிருந்தது,, அவனுடைய மடிப்பு கலையாத உடை கசங்கி கலைந்து போயிருந்தது,, அவனை அந்த கோலத்தில் பார்க்க பார்க்க ரஞ்சனாவுக்கு அழுகை பீறிட்டது

அவள் அழுவதை பார்த்ததும் கிருபாவிற்கும் கண்கலங்க பற்றியிருந்த அவளை விட்டுவிட்டு வீட்டை நோக்கி நடந்தான்

அவன் பின்னாலேயே போன ரஞ்சனா வீட்டுக்குள் நுழைந்ததும் “ என்னங்க ஆச்சு மேடத்துக்கு” என்று கண்ணீர் குரலில் கேட்க

அவளுக்கு முதுகுகாட்டி நின்ற கிருபா எதுவுமே சொல்லாமல் குலுங்கி அழ,, ரஞ்சனாவால் அவன் அழுகையை தாங்கமுடியாமல் அவன் தோளை பற்றி தன்பக்கம் திருப்பினாள்

இவ்வளவு நாட்களாக கம்பீரம் குறையாமல் ஒரு சமஸ்தானத்து ராஜாவாக பார்த்த கிருபாவை இந்த கோலத்தில் கண்டதும் அவளுக்கு மனமெல்லாம் கசிந்து உருகியது,

அவனை இழுத்து தன் மார்போடு சேர்த்தணைத்து “ வேண்டாம் நீங்க அழாதீங்க,, நீங்க எப்பவுமே அழக்கூடாது,, ஒரு ராஜா அழுதால் அது நாட்டுக்குத்தான் கேடு,, வேணாம் அழாதீங்க” என்று அவனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு இவள் குலுங்கி அழ...

அவளை மேலும் இறுக அணைத்து அவள் தோளில் தன் தாடையை வைத்துக்கொண்டு “ எல்லாமே முடிஞ்சு போச்சு ரஞ்சனா,, என் வசந்தி என்னைவிட்டு போகப்போறா” என்று ரஞ்சனாவை அணைத்துக்கொண்டு கதறினான் கிருபா



" அனாதைகளை நாம் உருவாக்கிவிட்டு..

" அவர்களின் முன்னோடியே நாம்தான்...

" என்பதை மறந்துவிடும் நம்மை...

" மூத்த அனாதைகள் என்று சொன்னால்...

" பொருத்தமாக இருக்கும்! 



No comments:

Post a Comment