Thursday, August 20, 2015

மனசுக்குள் மான்சி - அத்தியாயம் - 15

வசந்தி கைநீட்டி ரஞ்சனாவின் கையை ஆதரவாக பற்றிக்கொண்டாள்,, ரஞ்சனா கழுத்தில் இருந்த புது மஞ்சள் கயிற்றை கண்கலங்க பார்த்தாள்,, ஆனால் அதைப் பற்றி எதுவுமே கேட்கவில்லை,, கிருபாவும் அதைப்பற்றி எதுவுமே சொல்லவில்லை,, இத்தனை நாளாக இருந்த ஒதுக்கம் போய் வசந்தியிடம் இயல்பாக பேசினான்,,

சிறிதுநேரங்கழித்து மில்லுக்கு கிளம்புவாதாக கூறினான்,, சாயங்காலம் வந்து ரஞ்சனாவை அழைத்துச்செல்வதாக கூறிவிட்டு வசந்தியின் நெற்றியில் முத்தமிட்டு கிளம்பினான்,, ஆமாம் சிலநாட்களாக கிருபா மறந்துபோய்விட்ட முத்தத்தை வசந்திக்கு கொடுத்தான்

அவன் போனதும் அனிதாவை மருத்துவமனை ஆயாவிடம் பார்த்துக்கொள்ள சொல்லி விட்டுவிட்டு ரஞ்சனா வசந்தியின் அருகிலேயே இருந்தாள்,, நர்ஸ் செய்யவேண்டிய அத்தனை பணிவிடைகளையும் இவளே செய்தாள்,, வசந்தி தூங்கும் நேரத்தில் மருத்துவமனை தோட்டத்தில் குழந்தையுடன் பொழுதை போக்கினாள்,, வசந்தி விழித்ததும் இருவரும் நிறைய பேசினார்கள்,,


வசந்தி சத்யனைப் பற்றி நிறைய சொன்னாள்,, அவனுடைய பிடிவாதம் விருப்பு வெறுப்புகள், என எல்லாவற்றையும் சொன்னாள்,, குடும்பத்தை எப்படி நிர்வகிக்க வேண்டும்,, யார் யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப்பற்றி சொன்னாள்,, அப்போது வந்த நர்ஸிடம் தனது தங்கை என்று ரஞ்சனாவை அறிமுகம் செய்துவைத்தாள்

ஆனால் இவ்வளவு பேசியும் இரவு கிருபா ரஞ்சனாவுக்குள் என்ன நடந்தது என்று வசந்தி கேட்கவில்லை,, தாலியை எப்போது எப்படி கட்டினான் என்று கேட்கவில்லை,, அவள் பேச்சில் இருந்ததெல்லாம் இன்னும் சற்று நேரத்தில் ஊருக்குப் போகும் எஜமானி தனது விசுவாசமுள்ள ஊழியையிடம் குடும்ப நிர்வாகத்தை ஒப்படைக்கும் விதமாகவே இருந்தது,,

அன்று மாலை வந்த கிருபாவின் முகம் குழப்பமில்லாது தெளிவாக இருந்தது,, வந்ததும் அனிதாவை தூக்கிக்கொண்டு வசந்தியின் அருகில் போய் அமர்ந்துகொண்டான்,, சிறிதுநேரம் மில் விவகாரங்களை பற்றி வசந்தியிடம் பேசினான்,,

நேரம் போனதே தெரியாமல் பேசிக்கொண்டு இருந்த கிருபாவை வசந்திதான் “ ரொம்ப நேரமாச்சு கிளம்புங்க” என்றாள்

கட்டிலில் இருந்து எழுந்த கிருபா தயங்கி நின்று “ வசந்தி இன்னும் ரெண்டுநாள்ல சத்யனும் உன் அம்மாவும் வர்றாங்களாம்,, போன் பண்ணாங்க,, அவங்களுக்கு இங்கே நடந்தது எதுவுமே தெரியவேண்டாம்,, வீனான பிரச்சனைகள் வரும், நீ இருக்கும் நிலையில் பிரச்சனைகளை என்னால் சமாளிக்க முடியாது,, அதனால யாருக்குமே தெரியவேண்டாம்,, எப்ப தெரியுமோ அப்ப தெரியட்டும் ” என்று மெல்லிய குரலில் கிருபா கூற,,

எந்த மறுப்பும் இன்றி தலையசைத்த வசந்தி,, “ ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி டெல்லிக்கு போனப்ப எனக்கு ஒரு செயின் வாங்கிட்டு வந்தீங்களே,, அது என் பீரோவில இருக்கும் அதை எடுத்துட்டு வந்து நம்ம முறைப்படி மாங்கல்யம் செய்து அதில் கோர்த்து அதை ரஞ்சனா கழுத்துல போடுங்க, இந்த மஞ்சளோட இருக்கவேண்டாம்’ என்றாள்

கிருபா எதுவும் சொல்லாமல் சரியென்று தலையசைத்தான்,, ரஞ்சனா தலைகுனிந்து கண்களில் வழிந்த கண்ணீரை விரலால் சுண்டினாள்

இருவரும் காரில் தோட்டத்து வீட்டுக்கு வந்தபோது எதுவும் பேசிக்கொள்ளவில்லை,, வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு படுக்கையறைக்கு வந்தபோது குழந்தையை நெஞ்சில் போட்டு தட்டியவாறு கிருபா கட்டிலில் படுத்திருக்க,, ரஞ்சனா குழந்தையை தூக்கி தரையில் துணி விரித்து படுக்கவைத்தாள்


குழந்தை தூங்கியதும் எழுந்து வந்து கிருபாவின் அருகே கட்டிலில் படுக்க “ ரஞ்சனா” என்று தாபத்துடன் அழைத்து வேட்கையுடன் அவளை அணைத்துக்கொண்டான் கிருபா,,

அதன்பிறகு இரண்டு இரவுகள் ரஞ்சனாவுடன் இருந்தான் கிருபா,, அந்த இரு இரவுகளும் அவள் அவனை எப்போதும் சுமந்தபடியே தான் இருந்தாள்,,

அடுத்தநாள் சத்யன் தனது பாட்டியுடன் வந்துவிட வீட்டுக்கு போய்விட்டான்,, மில், மருத்துவமனை வீடு என்று வட்டமடித்த கிருபா, சமயம் கிடைக்கும் போதெல்லாம் ரஞ்சனாவையும் குழந்தையையும் பார்க்க ஓடி வந்தான்,, அனிதாவுக்கும் ஒருநாள் அப்பாவை பார்க்கவில்லை என்றால் மறுநாள் அழுதழுது காய்ச்சல் வந்தது

கிருபா அனிதாவே உலகம் என்று ஆனான்,, போன் செய்தால் கூட முதலில் அனிதாவை பற்றித்தான், சாப்பிட்டாளா, தூங்கினாளா, என்று விசாரிப்பான்,, வசந்தி கூறியதைப்போல ரஞ்சனாவுக்கு தங்கத்தில் தாலி செய்து கழுத்தில் போட்டான்,, வசந்தி அவர்களை பார்க்கவேண்டும் என்று சொன்னால் அவர்களை ரகசியமாக அழைத்து வந்து காட்டிவிட்டு போவான்,,

கிட்டத்தட்ட இரண்டு மாதம் மருத்துவமனையில் இருந்த வசந்தியின் உடல்நிலையில், எந்த முன்னேற்றமும் இல்லை, மாறாக மேலும் மோசமடைந்தது, மருத்துவர்கள் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது வீட்டுக்கு அழைத்துபோய் விடுங்கள் என்று கூற கிருபா உடைந்துபோனான்,
வசந்தியின் முன்பு தனது கண்ணீரை காட்டாமல் கலங்கியனிடம், வீட்டுக்குப் போவதற்குள் ஒருமுறை ரஞ்சனாவையும் குழந்தையையும் பார்க்கவேண்டும் என்றாள் வசந்தி

கிருபா உடனேபோய் அவர்களை அழைத்து வந்தான்,, ரஞ்சனா வசந்தியின் நிலையைப் பார்த்து கண்ணீர்விட்டாள்,, ரஞ்சனாவின் கையைப்பிடித்த வசந்தி அவளின் உடல் மெலிவை யூகித்து ரஞ்சனா வயிற்றில் கைவைத்து “ எவ்வளவு நாளாச்சும்மா” என்று அக்கரையோடு கேட்க

கண்ணீரையும் மீறிய வெட்கத்துடன் “ இது ரெண்டாவது மாசம், அம்பத்தஞ்சு நாள் ஆகுது” என்றாள் கவிழ்ந்த தலையை நிமிராமல்

இதை கவனித்த கிருபாவுக்கு வியப்பாக இருந்தது,, இந்த செய்தி அவனுக்கு புதிது,, அப்போதுதான் ரஞ்சனாவின் உடல் மெலிவை கவனித்தான், “ ச்சே இதைக்கூட இத்தனை நாளா கவனிக்களையே” என்று எண்ணி வருந்தினான்

யாரும் வருவதற்கு முன்பு அவர்களை மருத்துவமனையில் இருந்து அனுப்ப எண்ணிய வசந்தி “ ரஞ்சனா என்னோட நாட்கள் எண்ணப்படுகிறது,, எனக்கு பிறகு அவருக்கு எல்லாமே நீதான்,, நான் போனவுடன் அந்த வீட்டுக்கு நீ வந்துடனும், ஆனா எந்தக்காரணத்தைக் கொண்டும் அனிதாவின் பிறப்பு ரகசியத்தை நீங்க ரெண்டு பேரும் வெளியே சொல்லக்கூடாது,, என்றைக்குமே அனிதாவுக்கு இவர்தான் அப்பா, நீ என் வீட்டில் யாருக்காகவும் எதற்க்காகவும் பயப்படக்கூடாது, எந்த சுகத் துக்கங்களிலும் அவரைவிட்டு விலகக்கூடாது ” என்று திக்கித் திணறி இரண்டொரு வார்த்தைகள் பேசிய வசந்தி அதற்க்கே களைத்துப்போய் கண்களை மூடிக்கொண்டாள்

கண்ணீரும் கதறலுமாக நின்ற ரஞ்சனாவை கையைப்பிடித்து இழுத்துக்கொண்டே காருக்கு வந்தான் கிருபா,, காரில் ஏறியதும் மடியில் இருந்த குழந்தையை மறந்து கிருபாவை தாவி அணைத்த ரஞ்சனா, ஓவென்று கத்தி தீர்த்தாள், அவள் வசந்தியை அவ்வளவு மோசமான நிலையில் பார்த்ததை தாங்கமுடியவில்லை, உலகத்தில் உள்ள அத்தனை தெய்வங்களையும் திட்டித் தீர்த்தாள்

கிருபாவுக்கு அவளை சமாதானம் செய்வதற்குள் போதும் போதுமென்றானது,, அவனுக்கும் அழுகையை அடக்க முடியவில்லை தான், ஆனால் இருவரையும் பார்த்து மிரண்ட அனிதாவை தூக்கிகொண்டு, ரஞ்சனாவை இழுத்து மடியில் சாய்த்து “ ரஞ்சனா இது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது,, நாம வைத்தியங்கள் மூலம் நாட்களை தள்ளிப்போட்டோம், இதுக்கு மேல முடியாதுன்னு இன்னிக்கு தேதி குறிச்சிட்டாங்க,, எனக்கும் இது பலத்த அடிதான்,, முன்னாடி வசந்தியோட நோய் தெரிஞ்சதும் நானும் அவகூடவே சாகனும்னு முடிவு பண்ணியிருந்தேன்,, ஆனா நீயும் அனிதாவும் தான் எனக்கு வாழனும்னு ஆசையை ஏற்படுத்தினது, நீ இல்லேன்னா நானும் போயிடுவேன்” என்று கூறிவிட்டு குமுறலை உதட்டை கடித்து அடக்கியவனை பார்த்து தனது அழுகையை அடக்கிக்கொண்டாள் ரஞ்சனா


அதன்பின் வீட்டுக்கு வந்த வசந்தியின் உடல்நிலை ரொம்ப மோசமாக கிருபா மனைவியை விட்டுவிட்டு இப்படி அப்படி நகராமல் அவளைத் தொட்டுக்கொண்டு தனது துக்கத்தை அடக்க முயன்றான்,,

" அய்யோ ரஞ்சனா இப்போ இருக்கும் நிலையில் நீங்க அவகூட இருக்கனும், ப்ளீஸ் போய்ட்டு வாங்க,, அனிதாவையே ஒரு அனாதை மாதிரி பெத்துக்கிட்டா,, இந்த குழந்தைகளுக்கும் அந்த நிலை வேண்டாம், அடிக்கடி போய் பார்த்துட்டு வாங்க” என்று வசந்திதான் வற்புறுத்தி அவனை அனுப்பி வைப்பாள்

ஆனால் அங்கே ரஞ்சனாவுக்கு இவன் நிலையை பார்த்ததும் கண்ணீர்தான் வரும்,, கொஞ்சம் கொஞ்சமாக வசந்தியின் நினைவுகள் தப்பி அவள் மரணத்தின் வாசலில் போய் நின்றாள்,, ஒரு நீண்ட மூச்சை இழுத்துவிட்டு அடுத்த மூச்சை இழுக்கமுடியாமல் அந்த வீட்டின் ஜோதி அனைந்து போனது,,

பிறகு வந்த நாட்களில் பல இரவுகளில் மனைவியை நினைத்து அழுதவன் ரஞ்சனாவை மறந்து அனிதாவை மறந்து வசந்தியோடு தானும் போய்விட எண்ணினான் கிருபா,, ஆனால் சிறுவயதில் தாயை பிரிந்து மிரண்ட பார்வையுடன் தன் கைகளை விடாமல் பற்றிக்கொண்டு படுத்திருந்த சத்யனை நினைத்து தனது முடிவை மாற்றினான்,,

நாட்கள் வரங்களாக தன்னை நம்பி வந்தவளை மறந்து இப்படி இருக்கிறோமே என்ற குற்றவுணர்வு உந்தி தள்ள தனது கர்ப்பிணி மனைவியையும் மகள் அனிதாவையும் வசந்தியின் வாக்குப்படி வீட்டுக்கு அழைத்து வந்தான்

எல்லோரிடமும் எனது இரண்டாவது மனைவி இவள்,, இது என் மகள் அனிதா என்று மட்டுமே சொன்னான், மற்றவைகளை சொன்னால் எங்கே அனிதாவை பற்றி சொல்ல நேரிடுமோ என்ற கவலையால் எல்லாவற்றையும் மறைத்தான்,

ஆனால் சிறு குழந்தை என்று நினைத்த சத்யனின் நடத்தையில் தெரிந்த மாற்றங்கள் கிருபாவை அதிர்ச்சியடைய செய்தது., போகப்போக சரியாகிவிடுவான் என்று எண்ணியது தவறாகப் போனது, சத்யன் தன் பாட்டியுடன் வீட்டைவிட்டு போனான் , இதோ நாலு தெரு தள்ளியிருக்கும் பங்களா தானே சரி இருக்கட்டும்,, பிறகு அழைத்துக்கொள்ளலாம் என்று எண்ணியதும் தவறானது

சத்யனோ பிடிவாதத்தின் உச்சத்தில் இருந்தான்,, யாருடைய சமாதானத்தையும் ஏற்க்க மறுத்தான்,, இரண்டொரு முறை வசந்திக்கு எல்லாம் தெரியும் என்று கிருபா சொன்னதை சத்யன் நம்ப மறுத்தான்,, சிறுவயது மகனிடம் அதற்க்குமேல் தன் நிலையை விளக்கிச் சொல்லமுடியாமல் சத்யனை அமிர்தமாளின் பாதுக்காப்பிலேயே விட்டுவிட்டான் கிருபா

நாளாக நாளாக சத்யனது வெறுப்புதான் அதிகமானதே தவிர குடும்பத்துடன் ஒன்றாக சேரவேண்டும் என்ற எண்ணம் வரவேயில்லை,, படித்து முடித்துவிட்டு தனது அம்மாவின் மில் பொறுப்பை தனக்கு தருமாறு கேட்டபோதும் மறுக்காமல் மகனுக்கு கொடுத்து விட்டார் கிருபா,,

கிருபாவுக்கு முதல் அட்டாக் ஐம்பத்தியொரு வயதில் வந்தபோது மகனை காண அவர் தவித்த தவிப்பை கண்டு குமுறிய ரஞ்சனா சத்யன் வீட்டுக்கு வந்து அப்பாவை வந்து பார்க்குமாறு கெஞ்சியும் சத்யன் அசையவில்லை,, ரஞ்சனாவை ஏறெடுத்தும் பார்க்காமல் கல்மரமாய் நின்றான்

ஆனால் ஒரு மகன் தோள்கொடுக்க வேண்டிய அந்த நேரத்தில் அவர்பெற்ற மூன்று மகள்களும் அவருக்கு துணையாய் நின்றனர்,,




அதிலும் இளையவள் அபிநயா ஆண்பிள்ளையாய் பிறக்கவேண்டியவள்,, கொஞ்சம் மீசையும் இன்னும் உயரமும் இருந்தால் பார்ப்பவர்கள் சத்யனா இது என்று குழம்பி போவார்கள்,, எப்போதும் பேன்ட் சர்ட் அணிந்து ஆணைப்போல நிமிர்ந்து தான் நடப்பாள், எந்த விஷயத்தையும் ரொம்ப தைரியமாக பேசுவாள்,, சத்யனின் செயலில் இருக்கும் நியாயத்தை கிருபாவின் முகத்துக்கு நேராக பேசுவாள்,, ஆனால் தாயையும் விட்டுக்கொடுக்க மாட்டாள்,, இப்போது பெங்களூரில் தங்கி ஏரோனாட்டிக்ஸ் படித்து வருகிறாள்

சத்யன் வரவிட்டாலும் எதாவதொரு இடத்தில் மகனை பார்த்துவிடுவாள் ரஞ்சனா,, அவனது கம்பீரத்தையும் தொழில் நடத்தும் பாங்கையும் ஒரு தாயாய் எண்ணி பூரிப்பாள்,, ஒருவேளை தனது கணவனை பார்த்துக்கொள்ளும்படி கையேந்திய வசந்தி மகனை பார்த்துக்கொள்ள சொல்லாமல் போனதால் தான் இப்படியெல்லாம் நடக்கிறதோ என்று ரஞ்சனா பலமுறை எண்ணியதுண்டு,, மகன் தங்களிடம் வரவேண்டும் என்று வேண்டாத தெய்வமில்லை, போகாத கோயிலில்லை,,

இவ்வளவு பெரிய பணக்காரனின் மனைவியா இருந்தாலும்,, அன்று கிருபா அவள் கழுத்தில் போட்ட தாலிச் செயினை தவிர வேறு எந்த நகையும் அணிவதில்லை,, உடைகள் கூட சாதரண கைத்தறி புடவைகள்தான் உடுத்துவாள்,, கிருபா எவ்வளவோ எடுத்துச்செல்லியும் அவள் தன்னை மாற்றிக்கொள்ள வில்லை,,

இவளுடைய இந்த நடத்தையே அமிர்தம்மாளிடம் நன்மதிப்பை பெற்றுதந்தது,, பாதியில் போகவேண்டியது தன் மகளின் விதி என்று புரிந்து கொண்டவள், ரஞ்சனாவை தன் இளைய மகளாகவே எண்ணினார்,, ரஞ்சனாவை பற்றி சத்யனிடம் அடிக்கடி சொல்லுவார் ஆனால் அவனோ கேட்காதது மாதிரி எழுந்து போய்விடுவான்,, எங்காவது ரஞ்சனாவை சந்திக்கும் போது சத்யனை பற்றிக் கூறி வருத்தப்படுவார்,, அதைக்கேட்டு கண்ணீர் விடுவதை தவிர ரஞ்சனாவுக்கு வேறு வழியிருக்காது

இவ்வளவு கதைகளையும் தனது வருங்கால மருமகளிடம் கூறிய ரஞ்சனா அவள் மூலமாவது தங்கள் குடும்பத்துக்கு ஒரு விடிவுகாலம் பிறக்காதா, என்ற ஏக்கத்தோடு மான்சியின் முகத்தை பார்த்தாள்

மான்சி விக்கித்துப்போய் அமர்ந்திருந்தாள், கடவுள் மனித உருவில் எங்காவது இருப்பார்கள் என்று அவள் அம்மா கேள்விப்பட்டு இருக்கிறாள், இதோ இந்த வீட்டில் ஒரு மனித தெய்வம் வாழ்ந்து மறைந்துவிட்டாலும் இன்னும் இரண்டு தெய்வங்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்,,

கண்ணில் கண்ணீர் குளம்கட்ட மெல்ல சோபாவை விட்டு எழுந்தவள் அப்போதுதான் கட்டிலில் தலைகவிழ்ந்து அமர்ந்திருந்த கிருபாவை கண்டாள்,, அடுத்த நிமிடம் “ அங்கிள்” என்ற மெல்லிய கதறலுடன் ஓடிச்சென்று கிருபாவின் காலில் விழுந்தாள்

“ அய்யோ என்னடாம்மா இதெல்லாம்” என்று பதறிய கிருபா மான்சியின் தோள் பற்றி தூக்கி தன் தோளில் சாய்த்துக்கொண்டார்

மான்சியின் குமுறல் ஓரளவு ஓய்ந்ததும் “ அங்கிள் நானும் உங்க மகளா இருக்கேன்,, இனிமேல் அனிதா மாதிரி நானும் உங்களை அப்பான்னு கூப்பிடுறேன்” என்று சிறு குழந்தையைப்போல் விசும்பியவளை தட்டி சமாதானம் செய்த கிருபா....

“ எப்பவுமே நீயும் என் மகள்தானம்மா,, ஆனால் எனக்கு விருப்பம் நீ என் மருமகளாகனும் என்பதுதான்,, அதனால நீ என்னை மாமான்னும் ரஞ்சனாவை அத்தைன்னு தான் கூப்பிடனும்” என்று செல்லமாய் கண்டித்தவர் அவளை அப்படியே நடத்திச்சென்று ரஞ்சனாவிடம் ஒப்படைத்துவிட்டு சோபாவில் அமர்ந்தார்




No comments:

Post a Comment