Tuesday, August 18, 2015

மனசுக்குள் மான்சி - அத்தியாயம் - 9

“ நிச்சயமாக ட்ரீட் வைக்கிறேன் ஷீலா,, ஆனா என் கையை கடிக்காத சிம்பிள் ட்ரீட்” என்று பதிலுக்கு சொல்லி சிரித்தாள் ரஞ்சனா

“ ம்ம் ஓகேப்பா ஒத்துக்குறேன்,, இப்போ அதோ மேனேஜர் ரூம் அங்கே போய் அப்பாயின்மென்ட் ஆர்டரை வாங்கிகிட்டு ப்யூன் கூட போனீங்கன்னா உங்க சீட்டை காண்பிப்பார்,, இரண்டாயிரம் ரூபாய் அட்வான்ஸ் குடுப்பாங்க வாங்கிக்கங்க,, அப்புறம் ஈவினிங் இங்கே வாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே ஹாஸ்டல்க்கு போகலாம்,, நிறைய ரூம் வேகன்ட் இருக்கு” என்று ஷீலா கூறினாள்

ரஞ்சனாவுக்கு இனிமேல் தன்னுடைய வாழ்வில் நிம்மதியை வேறெதுவும் இல்லைஎன்று சந்தோஷப்பட்ட படியே “ நன்றி ஷீலா” என்று கூறிவிட்டு மேனேஜர் அறைக்கு போனாள்


அன்று மாலை ஷீலாவுடன் ஹாஸ்டல் சென்ற போது அங்கே ஏகப்பட்ட ரூல்ஸ் போட்டார்கள்,, அத்தனைக்கும் ரஞ்சனா சம்மதித்து கையெழுத்திட்டதும் ஷீலா அறைக்கு கீழ் தளத்தில் இவளுக்கு அறை கிடைத்தது

அறை ரொம்ப சிறியதாக இருந்தாலும் சுத்தமாக இருந்தது,, அன்று இரவு நிம்மதியாக உறங்கிய ரஞ்சனா,, காலையில் புத்துணர்ச்சியுடன் எழுந்து ஆபிஸ்க்கு கிளம்பினாள்,, அங்கேயே உணவும் கிடைத்ததால் பிரச்சனையின்றி போனது

தினமும் ஷீலாவுடன் சேர்ந்தே மில்லுக்கு போய் வந்தாள்,, வேலையில் சேர்ந்த நான்கு நாட்களில் கிருபாவை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டாள்,, அந்த மில்லின் கடைநிலை ஊழியர்கள் வரை கிருபாவின் மேல் அலாதியான அன்பு வைத்திருந்தார்கள்,, கிருபாவும் பணம் மற்றும் அந்தஸ்து வயது இப்படி எந்த வித்தியாசமும் இல்லாமல் ஊழியர்களுடன் தோளில் கைப்போட்டு தோழமையுடன் பழகினான்

சனிக்கிழமை மட்டும் வரும் ஒன்பது வயது சின்ன முதலாளி சத்யனிடம் ஊழியர்கள் தங்களின் உயிரையே வைத்திருந்தனர்,, ஒரு குடும்பம் போல் வாழ்ந்த அந்த மில்லைவிட்டு மாலை வேளைகளில் கூட வெளியே போக மனமில்லை ரஞ்சனாவுக்கு,,

எப்போதாவது எதிரே பார்க்கும் சமயங்களில் சினேகமாய் புன்னகைக்கும் கிருபாவை பார்த்தாள் அன்று முழுவதும் இவளுக்கு சந்தோஷமாகிவிடும்,, அவனது புன்னகைக்கு அவ்வளவு சக்தி இருந்தது,, அவ்வளவு பெரிய மில்லை தனது ஒரு புன்னகையால் நிர்வகிக்கும் திறமை கிருபாவிடம் இருந்ததை உணர்ந்தாள் ரஞ்சனா

அதற்க்கிடையே அடிக்கடி தனது தோழிக்கு போன் செய்து குருமூர்த்தி வந்தானா,, ஏதாவது தகவல் தெரிந்ததா என்று விசாரித்தாள்,, இல்லை என்றே வார்த்தையே பதிலாக கிடைத்தது

நிச்சயமா வந்துடுவான் ஊருக்கு போன இடத்தில் என்ன ஆனதோ என்று மனதை தேற்றிக்கொண்டு வேலையில் கவணம் செலுத்தினாள்

முதல்மாத சம்பளத்தை கையில் வாங்கிய ரஞ்சனாவின் கண்கள் அவளையும் அறியாமல் கலங்கி கண்ணீர் வடிக்க,, பக்கத்தில் இருந்த ஷீலா அவளை அணைத்து ஆறுதல் படுத்தினாள்

தனது அறைக்கு வந்து முதல் சம்பளத்தை தனது தாயின் படத்துக்கு கீழே வைத்து கும்பிட்ட ரஞ்சனா அன்று மாலை ஷீலாவுடன் தனக்கு தேவையான பொருட்கள் வாங்க ஷாப்பிங் போனாள்

எல்லாம் வாங்கி முடித்து இருவரும் அரட்டையும் சிரிப்புமாக ஒரு சர்தார்ஜி ஹோட்டல் வந்து, சப்பாத்தியும் டாலும் ஆர்டர் செய்தனர்,, இருவருக்கும் சப்பாத்தி வந்ததும், பேசிக்கொண்டே சாப்பிட்டனர்

ஷீலா ஏதேதோ கதைகள் பேசிக்கொண்டே சாப்பிட்டாலும், ரஞ்சனாவுக்கு சப்பாத்தி இறங்கவில்லை,, குமட்டுவது போல் இருக்க, ஷீலாவிடம் பாத்ரூம் போய் வருவதாக சொல்லிவிட்டு ஹோட்டல் ஊழியரிடம் பாத்ரூம் இருக்குமிடம் கேட்டு போனாள்

உள்ளே போய் கதைவை மூடியவள், சிறதளவு சாப்பிட்ட சப்பாத்தியுடன் அன்று காலையில் சாப்பிட்ட உணவுவரை மொத்தமும் வாந்தியாக எடுத்தாள் மறுபடியும் மறுபடியும் ஓங்கரித்து துப்பினாள்

இவ்வளவு நேரம் நல்லாத்தானே இருந்தோம், அப்புறம் இந்த திடீர் வாந்தி எதனால் வந்தது என்று குழம்பியபடி திரும்பியவளின் கண்ணில் குப்பைக்கூடையும் அதில் சுருட்டி எரியப்பட்ட சானிட்டரி நாப்கினும் தென்பட மூளையில் பொரித்தட்டியது

“ அய்யோ” என்று வாய்விட்டலறி நெற்றியில் அறைந்துகொண்டாள்,, கண்களில் கண்ணீர் கட்டுப்பாடில்லாமல் வந்தது

மில்லுக்கு போகும் சந்தோஷத்தில் இத்தனை நாட்களாக இதை கவனிக்காமல் இருந்துவிட்டோமே என்று முகத்தை மூடிக்கொண்டு குமுறினாள்,, இப்போ என்னப் பண்றது என்று யோசித்தவளுக்கு எதுவுமே தோன்றாமல் மறுபடியும் அழுகைதான் வந்தது

வெகுநேரமாகியும் இவளை கானாமல் ஷீலா இவளை தேடி வந்து பாத்ரூம் கதவை தட்டி “ ரஞ்சனா என்னப் பண்ற” என்று குரல் கொடுக்க

“ இதோ வர்றேன்” என்று பதில் குரல் கொடுத்துவிட்டு தண்ணீரை வாறியடித்து முகத்தை கழுவிக்கொண்டு கர்சீப்பால் துடைத்தபடி வெளியே வந்தாள்

அவள் முகத்தை பார்த்ததும் திகைத்துப்போய் “ என்னாச்சு ரஞ்சனா” என்ற ஷீலாவிடம் “ ம்ஹூம் ஒன்னுமில்ல தலைவலிக்குது வாங்க ரூமுக்கு போகலாம்” என்று கூறிவிட்டு ரஞ்சனா முன்னால் நடக்க,, பொருட்கள் அடங்கிய பைகளை எடுத்துக்கொண்டு ஷீலா அவள் பின்னே போனாள்

தான் சற்றுநேரம் தூங்கப்போவதாக கூறிவிட்டு தனது அறைக்குள் போய் கதவை சாத்திக்கொண்ட ரஞ்சனா கட்டிலில் விழுந்து கதறியழுதாள்,, அன்று யோசிக்காமல் செய்த தவறு இப்படி விஸ்வரூபம் எடுத்துவிட்டதே என்று அழுதாள்

நேற்று அவள் தோழிக்கு போன் செய்து குருமூர்த்தியின் சொந்த கிராமத்துக்கு போய் பார்த்து வரும்படி கூறியிருந்தாள்,, தோழியின் வீடுக்கும் அவன் கிராமத்திற்கும் என்பது கிலோமீட்டர் தூரம் என்றாலும் ரஞ்சனாவிற்காக போய் வருவதாக கூறியிருந்தாள்

காலையில் போயிருந்தால் கூட இன்னேரத்துக்கு வந்திருப்பாள் என்று தோன்ற படுக்கையில் இருந்து வேகமாக எழுந்த கதவை திறந்துகொண்டு வெளியே வந்தாள்


ஹாஸ்டலுக்குள் இருந்த டெலிபோன் பூத்தில் நுழைந்த தோழியின் வீட்டு நம்பரை டயல் செய்தாள்,, நான்கைந்து ரிங் போனபிறகு எடுத்தாள் அவளின் தோழி “ மங்கை நான் ரஞ்சனா குரு வீட்டுக்கு போனியா? அவரை பார்த்தியா?” என்று கேட்க

எந்த பதிலும் இல்லாமல் எதிர்முனையில் அமைதி நிலவியது,,
ரஞ்சனாவுக்குள் ஒரு பதட்டம் நிலவ “ என்னாச்சு மங்கை,, எதுவாயிருந்தாலும் என்கிட்ட சொல்லு” என்றாள் ரஞ்சனா

ஊப்ஸ் என்ற பெருமூச்சுடன் “ ரஞ்சனா அவன் நல்லவன் இல்லை,, நீ நல்லா ஏமாந்துட்ட” என்றாள் மங்கை

“ என்னடி சொல்ற” என்று அதிர்ந்தாள் ரஞ்சனா

“ ஆமாம் ரஞ்சனா நான் அவன் ஊருக்குப் போனேன்,, அவனுக்கு மும்பைல நல்ல வேலை கிடைச்சு யாரோ ஒரு பணக்கார பொண்ணை மேரேஜ் பண்ணிகிட்டு மும்பைல செட்டில் ஆகிட்டானாம்” என்று மங்கை அடுத்த குண்டை வீசினாள்

“மங்கை? குரு என்கிட்ட சொல்லிட்டு போய் ரெண்டு மாசம் தானடி ஆச்சு,, அதுக்குள்ள எப்படி இவ்வளவு நடந்தது ” என்று ரஞ்சனா அதிர்ச்சியில் கூவ

“ இல்லை ரஞ்சனா அவன் மேரேஜ் அதுக்கு முன்னடியே ஏற்பாடு பண்ணினது,, அதாவது அவன் படிச்சு முடிச்சதுமே வேலைக்கும் திருமணத்திற்கும் அந்த பொண்ணோட வீட்டுல ஏற்பாடு பண்ணிருக்காங்க ரஞ்சனா,, அவங்க பிளான் படி எல்லாமே நடந்து முடிஞ்சிருச்சு,, நீ அவனை மறந்து தலைமுழுகிட்டு உன்னோட பிற்காலத்தில் கவனம் செலுத்து ரஞ்சனா அவ்வளவுதான் என்னால சொல்லமுடியும்” என்று மங்கை விரக்த்தியாக பேசினாள்

அடுத்து அவள் பேசியது எதுவுமே ரஞ்சனாவின் காதில் விழவில்லை,, அவளின் நினைவுகள் தப்ப,, கண்கள் இருள, அப்படியே மயங்கி சரிந்தாள், அவள் கையில் இருந்த ரிசீவர் அனாதையாக தொங்கியது

தூரத்தில் கேட்டருகே இருந்த ஹாஸ்டல் வாட்ச்மேன், இவள் கீழே விழுவதை கவனித்துவிட்டு பதட்டத்துடன் ஓடிவர,, இரவுநேர வாக்கிங் போய்கொண்டிருந்த சில பெண்களும் ஓடிவந்தனர்

சிறிதுநேரத்தில் தண்ணீர் தெளித்து ரஞ்சனாவின் மயக்கம் தெளிவிக்கப்பட்டது,, ஆஸ்பிட்டல் போகலாம் என்ற வார்டனிடம் , தனக்கு ஒன்றுமில்லை உடல் பலகீனம்தான் என்று கூறி சமாளித்துவிட்டு ஷீலாவின் உதவியுடன் தனது அறையில் வந்து படுத்துவிட்டாள்

அடுத்த இரண்டுநாட்கள் அறையைவிட்டு வெளியே வராமல் வேலைக்கும் போகாமல் கண்ணீரிலேயே கரைந்தாள் ரஞ்சனா,, ஷீலா வந்து என்னாச்சு என்று விசாரித்தபோது,, தனத அம்மாவின் ஞாபகம் வந்ததாக பொய் கூறினாள் ரஞ்சனா

இரண்டு நாள் கழித்து ஒரு முடிவுக்கு வந்தவளாய்,, மாலை நான்குமணிக்கு தனது உடைமைகளை பெட்டியில் எடுத்து வைத்துக்கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தாள்,,

தங்கியிருக்கும் எல்லாப் பெண்களும் வேலைக்கு சென்றிருக்க,, வார்டன் அறைக்கு போய் தனது பாட்டிக்கு உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டு இருப்பதால் தான் பாட்டியுடன் தங்கப்போவதாகவும், அறையை காலி செய்வதாகவும் கூறினாள்,, முன்னறிவிப்பு இன்றி அறையை காலி செய்வதால் அட்வான்ஸாக கொடுத்த தொகையை திருப்பி தரமுடியாது என்று வார்டன் ரூல்ஸ் பேச....

“ நான் போற ஊருக்கு பணம் தேவைப்படாது மேடம், அதனால நீங்களே வச்சுக்கங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்

அன்று மாலை வேலையில் இருந்து சீக்கிரமாகவே வந்தாள் ஷீலா,, ரஞ்சனாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம் என்று நினைத்துக்கொண்டு பர்மிஷன் போட்டுவிட்டு நாலுமணிக்கே வந்துவிட்டாள்,,

ரஞ்சனாவைத் தேடி அவள் அறைக்கு போனாள், அறைக்கதவு பூட்டியிருந்ததை பார்த்து திகைப்புடன் வார்டனை தேடிவந்து கேட்டபோது , ரஞ்சனா அறையை காலிசெய்து விட்டு போய்விட்டதாக கூறினார்கள்,,

தன்னிடம் கூட சொல்லாமல் எங்கே போனாள் என்று எண்ணி திகைத்துப்போன ஷீலா அவசரமாக மில்லுக்கு கிருபாவின் போனுக்கு கால் செய்து ரஞ்சனா ஊருக்கு போவதாக சொல்லி அறையை காலி செய்துகொண்டு போய்விட்டதாக தகவல் சொன்னாள்

கிருபாவுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது,, அவள் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள் ஆயிற்றே,, அவளுக்கு ஏது பாட்டி என்று நினைத்தபடி மேலும் அவளைப்பற்றி ஷீலாவிடம் விசாரித்தான்

டெலிபோன் பூத்தில் மயங்கி விழுந்தது,, இரண்டு நாட்களாக ரஞ்சனாவின் சோர்வு,, அழுதது அழுதபடியே இருந்தது, இறுதியாக அறையை காலிசெய்யும் போது வார்டனிடம் ரஞ்சனா கூறிய வார்த்தைகள் என எல்லாவற்றையும் தெளிவாக ஷீலா கூறினாள்



ஒன்றோடு ஒன்று முடிச்சிட்டு பார்க்கும் போது ஏதோ விபரீதமாக நடக்க போவதை உணர்ந்த கிருபா பரபரப்புடன் “ ஷீலா ரஞ்சனா போய் கொஞ்ச நேரம் தானே ஆச்சு,, பக்கத்தில் இருக்குற ஆட்டோ ஸ்டான்ட்ல போய் விசாரிச்சு பாருங்க,, ஏதாவது தகவல் தெரிஞ்சா உடனே எனக்கு கால் பண்ணுங்க,, நிச்சயமா அவங்க ஏதாவது ஆட்டிவில்தான் போயிருக்கனும்,, எங்க போனாங்கன்னு கண்டு பிடிச்சுடலாம்” என்று கிருபா கூறியதும்..

“ ஓகே சார் இதோ உடனே போய் விசாரிக்கிறேன்” என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தாள் ஷீலா

பக்கத்தில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் ரஞ்சனாவின் அடையாளத்தை சொல்லி விசாரித்த போது ஒரு டிரைவர் முன்வந்து இப்போதுதான் பஸ்ஸ்டாண்டில் இறக்கிவிட்டு வருவதாகக் கூறினான்

ஒரு நிம்மதி பெருமூச்சுடன் மறுபடியும் ஓடிவந்து கிருபாவுக்கு போன் செய்து கிடைத்த தகவலை சொன்னாள்

“ ஓகே ஷீலா நான் போய் பார்க்கிறேன்,, நீங்க கவலைப்படாதீங்க” என்று சொல்லிவிட்டு போனை வைத்த கிருபா அடுத்து ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் தனது காரை எடுத்துக்கொண்டு பஸ்ஸ்டாண்ட் நோக்கி விரைந்தான்,, அவளுக்கு ஏதும் நடப்பதற்கு முன்பு தடுத்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே கிருபாவின் மனதில் மேலோங்கி இருந்தது

கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு பஸ்ஸ்டாண்டுக்குள் நுழைந்தவன் அங்கே நின்றிருந்த நூற்றுக்கணக்கான பஸ்ஸில் அவளை எப்படி தேடுவது என்று குழம்பி போனான்,, பல ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் தாறுமாறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது

அப்போதுதான் அவனுக்கு சட்டென்று அந்த யோசனை வந்தது,, பஸ்கள் அனைத்தும் ஸ்டாண்டில் இருந்து மெயின்ரோட்டுக்கு திரும்பும் இடத்தில் பெரிய பள்ளம் இருந்ததால் அந்த இடத்தில் மட்டும் பஸ்கள் அனைத்தும் மிக நிதானமாக சென்றன,, அது மட்டுமில்லாமல் அந்த திருப்பத்தில் நிறுத்திவிட்டு காலியான சீட்டுக்கு டிக்கெட்டை ஏத்துவதற்காக சிறிதுநேரம் கத்திக்கொண்டு இருந்தனர்

பஸ்ஸ்டாண்ட் உள்ளேபோய் தேடுவதைவிட இங்கேயே நின்றால் வெளியே போகும் பஸ்ஸில் எளிதாக ரஞ்சனாவை கண்டுபிடித்துவிடலாம் என்று நினைத்து அவனை கடந்து செல்லும் பஸ்கள் ஒவ்வொன்றாக பார்த்தான்
சரியாக ஏழாவது பஸ்ஸில் ரஞ்சனா ஜன்னலோர சீட்டில் கண்மூடி சாய்ந்திருந்தாள்,, அந்த பஸ் ஊட்டிக்கு போவதாக போர்டில் எழுதியிருந்தது,, கிருபா தாமதிக்காமல் பஸ்ஸில் தாவி ஏறினான்

நேராக ரஞ்சனாவின் பக்கத்து இருக்கையில் தொப்பென்று அமர்ந்தவனை கண்திறந்து பார்த்தாள் ரஞ்சனா,, அவள் முகத்தில் தெரிந்த அளவிடமுடியாத அதிர்ச்சியை பார்த்தபடி “ என்ன ரஞ்சனா உங்க பாட்டி ஊட்டியிலயா இருக்காங்க? நீங்க இதை என்கிட்ட சொல்லவே இல்லை” என்று நக்கலாக கேட்டான்

கிருபாவுக்கு பதில்சொல்ல முடியாமல் தவித்து வந்த அழுகையை உதட்டை கடித்து அடக்க பார்த்தாள்,, ஆனாலும் கண்ணீர் அவள் கன்னத்தில் வழிந்தது
அவளது கண்ணீர் கிருபாவின் மனதை வருத்த “ ஸ் இது பஸ் கண்ணை துடைங்க ரஞ்சனா,, எப்படி இறங்கி காரில் போய் பேசுவோமா?,, அல்லது நானும் இதே பஸ்ஸில் உங்ககூடவே ஊட்டிக்கு வரனுமா?” என்று கேட்டான்

கன்னத்தில் வழிந்த கண்ணீரை கையால் வழித்து துடைத்தபடி “ என்னை விடுங்க சார் நான் போயிர்றேன்” என்றாள் ரஞ்சனா

“ உங்களை இப்படியே விட்டுட்டு போறதுக்கா நான் இவ்வளவு தூரம் ரேஸில் வர்ற மாதிரி வந்தேன்,, ஆனாலும் இந்த பஸ்ஸை நிறுத்திட்டு என்னால உங்களை கூட்டிட்டு போகமுடியாதுன்னா நெனைக்கிறீங்க?” என்று கேட்டுவிட்டு அவளை கேள்வியாகப் பார்த்தான் கிருபா

அதற்க்குள் பேருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம்வரை பயனித்து இருந்தது,, ரஞ்சனா கிருபாவை சிலவினாடிகள் பார்த்துவிட்டு மெதுவாக எழுந்து தலைக்கு மேலே இருந்த தனது பெட்டியை எடுக்க முயன்றாள்

கூடவே எழுந்த கிருபா “ அடுத்த ஸ்டாப்பில் பஸ் நிக்கும்,, நீங்க இறங்குங்க நான் பெட்டியை எடுத்துகிட்டு வர்றேன்” என்று கூறி அவளுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றான்

கிருபா பெட்டியை எடுத்துக்கொள்ள,, இருவரும் பஸ்ஸிலிருந்து இறங்கி ஒரு ஆட்டோவில் ஏறி மறுபடியும் பஸ்ஸ்டாண்ட் வந்தனர்,, கிருபா ரஞ்சனாவை அழைத்துக்கொண்டு காரில் ஏறி கிளம்பினான்

போக்குவரத்து நெரிசலைவிட்டு சற்று தள்ளி வந்ததும் காரை ஒரு ஒதுக்குப்புறமாக வந்து ஒரு கடையறுகே காரை ஓரங்கட்டி நிறுத்தினான்,, காரில் இருந்தபடியே கடையில் இருந்த பையனை அழைத்து இருபது ரூபாயை கொடுத்து ஒரு மாம்பழச்சாறு வாங்கிவரச் சொன்னான்

பையன் கொண்டு வந்து கொடுத்ததும் வாங்கி உள்ளே வைத்துவிட்டு மறுபடியும் காரை கிளப்பிக்கொண்டு போய் சற்றுத்தள்ளி ஒரு மரநிழலில் நிறுத்தினான்,, பழச்சாறு புட்டியை எடுத்து மூடியை கழட்டிவிட்டு ரஞ்சனாவிடம் கொடுத்தான்
அவளும் மறுக்காமல் வாங்கி மடமடவென்று குடித்தாள்,, அவளுக்கு அந்த பழச்சாறில் இரண்டு பசி அடங்காதுதான், ஆனால் சற்று தெளிவு உண்டானது போல் இருந்தது

அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்த கிருபா “ இப்போ பரவாயில்லையா? சரி சொல்லுங்க எதுக்காக ஊட்டிக்கு கிளம்பினீங்க? தொட்டபெட்டாவுல இருந்து குதிச்சு உயிரை விடவா?” என்று நேரடியாக அவன் விஷயத்துக்கு வந்தான் 







" கொட்டிக்கிடந்த கடற்கரை மணலில்...

" உன் காலடிச் சுவடைத் தேடினேன்,,

" வெகுநேரம் தேடியும் கிடைக்கவில்லை,,

" தூரத்தில் ஒரு ஜோடி சுவடுகள்....

" உன் பாதங்களை ஒத்து இருக்க...

" உன்னையே கண்ட சந்தோஷத்தில்,,

" அந்த சுவடை நோக்கி ஓடினேன்...

" எனக்கு முன்னால் அலை வந்து தொட்டு..

" அழித்துவிட்டது உன் சுவடுகளை!!

No comments:

Post a Comment